தமிழ்நாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தமிழ் நாடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ்நாடு

தமிழகம்

—  மாநிலம்  —

முத்திரை
இருப்பிடம்: தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 13.09°′″N 80.27°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.அமைவு: 13.09°′″N 80.27°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டங்கள் 32
நிர்மாணிக்கப்பட்ட நாள் நவம்பர் 1, 1956[1]
தலைநகரம் சென்னை
மிகப்பெரிய நகரம் சென்னை
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1]
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[2]
உயர்நீதிமன்ற நீதிபதி எம். யூசுப் இக்பால்
சட்டமன்றம் (தொகுதிகள்) ஓரவை (235)
மக்கள் தொகை

அடர்த்தி

72 (7வது) (2011)

511 /km2 (1 /sq mi)

கல்வியறிவு 80.3% (11வது)
மொழிகள் தமிழ்,ஆங்கிலம்
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு 130058 கிமீ2 (50216 சதுர மைல்)
ISO 3166-2 IN-TN
இணையதளம் tn.gov.in


தமிழ்நாடு (Tamil Nadu) இந்தியாவின் 28 மாநிலங்களில் ஒன்றாகும். தமிழ்நாடு, தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது. இதன் தலைநகராக சென்னை உள்ளது. தமிழ்நாடு இந்தியத் துணைக்கண்டத்தின் தென்முனையில் அமைந்துள்ளது. இதன் ஆட்சிப்பகுதி எல்லைகளாக மேற்கிலும் வடக்கிலும் கேரளா, கருநாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் உள்ளன. புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைச் சுற்றிலும் தமிழ்நாடு மாநிலம் எல்லைகளைக் கொண்டுள்ளது. புவியியல் எல்லைகளாக வடக்கே கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரும், மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் நீலமலை வீச்செல்லை, ஆனை மலை வீச்செல்லை, பாலக்காடு கணவாய் ஆகியவையும் கிழக்கில் வங்காள விரிகுடாக் கடலும், தென்கிழக்கில் மன்னார் வளைகுடா, பாக்கு நீரிணை ஆகியவையும் தெற்கில் இந்தியப் பெருங்கடலும் உள்ளன.

தமிழகம் ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் தமிழில் சென்னை மாகாணம் என்றும் அழைக்கப்பெற்றது. இதனை தமிழ்நாடு என்று மாற்றக்கோரி போராட்டங்கள் நடைபெற்றன. சங்கரலிங்கனார் என்பவர் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார்[4]. பின்னர் மதராசு ஸ்டேட் என்று இருந்த பெயர் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது.

தமிழ்நாடு இந்திய மாநிலங்களில் பரப்பளவில் 11வதாகவும் மக்கள்தொகையில் ஏழாவதாகவும் விளங்குகிறது. இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்திக்குப் பங்களிப்பதில் நான்காவதாக (2010இல்)[5] உள்ளது. 2006இல் மனித வளர்ச்சிச் சுட்டெண்ணில் பத்தாமிடத்தில் (ஒன்றிய ஆட்சிப்பகுதிகளையும் சேர்த்தால் பதினாறாவது இடத்தில்) இருந்தது.[6] மேலும் இந்தியாவிலேயே அதிக நகர்ப்புறமாக்கப்பட்ட மாநிலமாகத் திகழ்கிறது.[7] இந்தியாவின் 6% மக்கள்தொகையே கொண்டிருந்தும் மிகக் கூடுதலான வணிக நிறுவனங்கள் கொண்ட மாநிலமாகவும் (10.56%) மொத்த வேலை வாய்ப்புகள் கொண்ட மாநிலங்களுள் இரண்டாவதாகவும் (9.97%) விளங்குகிறது[8].

கி.மு. 500க்கும் முன்பிருந்தே இப்பகுதியில் தமிழர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். 2000 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த தமிழ் மொழி கல்வெட்டுக்களும் இலக்கியமும் காணக் கிடைக்கின்றன.[9] தமிழ்நாட்டில் பல இயற்கை வளங்கள், திராவிடக் கட்டிடக் கலை சாற்றும் கோவில்கள், மலைத்தலங்கள், கடலோர ஓய்விடங்கள், பல சமயத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் நிறைந்துள்ளன; எட்டு உலக பாரம்பரியக் களங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.[10][11]

பொருளடக்கம்

[தொகு] புவியமைப்பு

தமிழ்நாடு இந்திய தீபகற்பத்தின் தென் கோடியில் அமைந்துள்ளது. வடக்கில் கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களும், மேற்கில் கேரளாவும் உள்ளன. யூனியன் பிரதேசமாகிய புதுச்சேரி (முன்பு பாண்டிச்சேரி என்று அழைக்கப்பட்டது) தமிழ் நாட்டின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இம்மாநிலத்துக்குத் தென்கிழக்கில் இலங்கைத் தீவு உள்ளது.

நாட்டின் ஏனைய பல பகுதிகளைப் போலன்றி, தமிழ்நாடு, அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் "வடகிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று" மூலமே மழை பெறுகிறது. இக்கால கட்டத்தில் வங்காள விரிகுடாவில் உருவாகும் புயற்சின்னங்களின் மூலம் பெய்யும் மழையை உழவர்கள் பெரிதும் நம்பியுள்ளனர்.

இம்மாநிலத்தின் முதன்மையான ஆறான காவிரி ஆறு வடக்கே கர்நாடக மாநிலத்தில் குடகு மலையில் உருவாகித் தமிழ்நாட்டில் பாய்கிறது. வைகை, தாமிரபரணி, பாலாறு ஆகியவை பிற முதன்மையான ஆறுகளாகும்.

மதராஸ் என்று 1996 வரை அழைக்கப்பட்டு வந்த சென்னையே தமிழ்நாடு மாநிலத்தின் மிகப் பெரிய நகரமும் அதன் தலைநகரமுமாகும். உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான மெரீனா கடற்கரை சென்னையிலேயே உள்ளது. மதுரை,திருச்சிராப்பள்ளி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி , ஈரோடு,கோயம்புத்தூர்,திருப்பூர், தூத்துக்குடி மற்றும் வேலூர் தமிழ் நாட்டின் ஏனைய பெரிய நகரங்களாகும்.

[தொகு] வரலாறு

தமிழ்நாடு பண்டைக் காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் ஆளப்பெற்றது. மேலும், இம்மாநிலம் பல கோயில்களையும்,சிற்பங்களையும் பெற்ற கலை அம்சம் கொண்ட பகுதியாக விளங்குகிறது.

தமிழகத்தின் எல்லைகளை தொல்காப்பியப் பாடல்

வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்

என்று வரையறுக்கிறது (தொல்காப்பியம், சிறப்புப் பாயிரம், 1-3).

தொன்றுதொட்டே தமிழ் மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பு தமிழகம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. அதற்குச் சான்றாகக் கீழ்வரும் இலக்கியக் குறிப்புகளைக் காட்டலாம்:

வையக வரைப்பில் தமிழகம் கேட்ப (புறநானூறு, 168 :18)
இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்க (பதிற்றுப்பத்து, இரண்டாம் பத்து, பதிகம் : 5)
இமிழ் கடல் வரைப்பில் தமிழகம் அறிய (சிலப்பதிகாரம், அரங்கேற்றுகாதை : 38)
சம்புத் தீவினுள் தமிழக மருங்கில் (மணிமேகலை, 17: 62)


தமிழ்நாடு, ஏறத்தாழ 6000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. இங்கே வாழுகின்ற திராவிட இன மக்களின் தோற்றம் தொடர்பாகப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர், ஒரு காலத்தில் இந்தியா முழுதும் பரவி வாழ்ந்திருந்த திராவிடர், சிந்து வெளி நாகரீகத்துக்கு உரியவர்களுள் ஒரு பிரிவினராக இருந்தனர் என்று கருதுகிறார்கள். இவ்வினத்தவருடைய தெற்கு நோக்கிய பெயர்வு, ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கையுடன் தொடர்புபடுத்தப்படுகின்றது. இக் கொள்கைப்படி, வடக்கிலிருந்து வந்த ஆரிய ஆக்கிரமிப்பு திராவிடர்களை இன்றைய இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளா ஆகியவை அடங்கிய தென்னிந்தியாவுக்குள் ஒடுக்கியதாகக் கருதப்படுகின்றது. வரலாற்று உண்மைகள் எவ்வாறு இருப்பினும், தற்காலத் தமிழ் மக்களுடைய அடையாளம் மேற்கண்ட கொள்கைகளின் அடிப்படையிலேயே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது எனலாம்.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் (1600). 170 அடி உயரத்தில் எழுகின்ற தெற்குக் கோபுரம்

இன்றைய தமிழ்நாட்டையும் உள்ளடக்கிப் பரந்திருந்த பண்டைய திராவிட நாடு, பல்வேறு நாடுகளாகப் பிரிந்திருந்தது. இவற்றைக் காலத்துக்குக் காலம் பல அரச வம்சங்கள் ஆண்டுவந்தன. இவற்றுள் முதன்மையாகக் குறிப்பிடத்தக்கவர்கள், பாண்டியர், சேரர், சோழர், பல்லவர், சாளுக்கியர், விஜய நகரத்தார், நாயக்கர் என்போராவர்.

மேலே குறிப்பிடப்பட்ட மதுரை தற்கால மதுரைக்குத் தெற்கே அமைந்திருந்து பிற்காலத்தில் ஏற்பட்ட கடல்கோளினால் முற்றாக அழிந்து போனதாகப் பழந் தமிழ் இலக்கியங்கள் வாயிலாக அறியக்கிடைக்கின்றது. பாண்டிய நாடு கல்வியிலும், வணிகத்திலும் சிறந்து விளங்கியது. தமிழகத்தின் மக்கள் அக்காலத்தின் பேரரசுகளாகிய கிரேக்க, ரோமப் பேரரசுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். அவ்வப்போது பல்லவர்களாலும், சோழர்களாலும் அடக்கப்பட்டிருந்தாலும், தமிழ்நாட்டின் ஆற்றல் மிக்க அரச பரம்பரைகளில் ஒன்றாகப் பாண்டியர் விளங்கினர்.

[தொகு] கிபி 1 தொடக்கம் 4 ஆம் நூற்றாண்டு வரை

சங்ககால மூவேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டியர் கிபி முதலாம் நூற்றாண்டு தொடங்கி நான்காம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் ஆட்சி செலுத்தினர். இவர்களுள் சேரர்களில் செங்குட்டுவன் மன்னனும், சோழர்களில் கரிகால் சோழன் மன்னனும், பாண்டியர்களில் நெடுஞ்செழியன் மன்னனும் பெயர் பெற்ற ஆட்சியாளர்களாகத் திகழ்ந்து, மிகவும் புகழ்பெற்று விளங்கினர். சேரர்கள் தற்கால கேரள மற்றும் கொங்கு மாவட்டங்களிலும், சோழர்கள் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளிலும், பாண்டியர்கள் மதுரை, நெல்லை மற்றும் தென் கேரள மாவட்டங்களிலும் செல்வாக்கு செலுத்தினர். இவர்கள் போர் நடவடிக்கைகளில் சிறந்து விளங்கியதாக நம்பப்படுகிறது.

[தொகு] கிபி 4 தொடக்கம் 9 ஆம் நூற்றாண்டு வரை

கடற்கரைக் கோயில்; அமைத்தவர்: பல்லவர்; இடம்: மாமல்லபுரம்; காலம்: (கி.பி.8ம் நூற்றாண்டு.) – யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களம்.

கி.பி. நான்காம் நூற்றாண்டு முற்பகுதியில் களப்பிரர் என்னும் குலம் தெரியாத அரசர்கள் தமிழகத்தை ஆண்டனர். அவர்கள் மூவேந்தர்களையும் அடக்கி ஆண்டதால் அவர்களின் வரலாறு தெரியாமல் போயினும், பல்லவர் என்னும் அக்கால புதிய அரசர்கள் சுயாட்சி செலுத்தியதால் அவர்களை பற்றி மட்டும் குறிப்பிடத்தக்க ஆவணங்கள் கிடைத்துளன. இக்களப்பிர அரசர்கள் கிபி 4 தொடக்கம் 6 ஆம் நூற்றாண்டு வரை ஆண்ட காலத்தை தமிழகத்தின் இருண்ட காலம் என்று வரலாற்றாளர்கள் கூறுவதுண்டு. கி.பி. நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சிறந்த கோவில்களை அமைத்த பல்லவர்கள் முன்னணிக்கு வந்தனர். இவர்கள் தென்னிந்தியாவில் 400 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தினர். காஞ்சிபுரத்தைத் தலை நகரமாகக் கொண்டு தமிழ் நாட்டின் பெரும்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்கள் சோழரைத் தோற்கடித்தனர். இவர்கள் செல்வாக்கு இலங்கை வரை பரவியிருந்ததாகக் கருதப்படுகிறது. முதலாம் மகேந்திரவர்மனும், அவனுடைய மகனான நரசிம்மவர்மனும் பல்லவர்களுள் சிறந்து விளங்கிய அரசர்களாவர். திராவிடக் கட்டிடக்கலை பல்லவர் காலத்திலேயே வளர்ச்சியடைந்து உருப்பெற்றது. இறுதிப் பல்லவ மன்னன் அபராசிதன் ஆவான். இவன் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஆதித்த சோழனால் தோற்கடிக்கப்பட்டதுடன் பல்லவராட்சி தமிழ் நாட்டில் முடிவுக்கு வந்தது.

இக்காலக்கட்டத்தில் (கிபி 300 - கிபி 600) பெளத்தம் தமிழகத்தில் மிகவும் செல்வாக்கோடு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. [12]

[தொகு] 9 தொடக்கம் 13 ஆம் நூற்றாண்டு வரை

இராசேந்திர சோழன் ஆட்சியில் சோழப் பேரரசு கி.பி. 1030

கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். இராசராச சோழன் மற்றும் அவனது மகனான இராசேந்திர சோழன் ஆகியோரது காலத்தில் சோழர், தென்னிந்தியாவில் ஆற்றல் மிக்கவர்களாக உருவெடுத்தனர். இவர்களுடைய பேரரசு, மைய இந்தியா, ஒரிசா, மற்றும் வங்காளத்தின் சில பகுதிகள்வரைகூடப் பரவியிருந்தது.

இராசராச சோழன் கிழக்கிலிருந்த சாளுக்கிய அரசர்கள் மற்றும் சேர மன்னர்களை வீழ்த்தினான். அத்துடன் பாண்டிய அரசிடமிருந்து இலங்கையின் சில பகுதிகளையும் கைப்பற்றினான். இராசேந்திர சோழன் மேலும் முன்னேறி அந்தமான் நிக்கோபார் தீவுகள், இலட்சத்தீவுகள், சுமத்ரா, சாவா, மலேயா மற்றும் பெகு தீவுகளையும் தன் கப்பற்படையைக் கொண்டு கைப்பற்றினான். அத்துடன் தற்போதைய பீகார் மற்றும் வங்காளப் பகுதிகளை ஆண்டு வந்த மகிபாலனையும் வீழ்த்தினான். தன் வெற்றியைக் கொண்டாடும் வகையில் கங்கை கொண்ட சோழபுரம் எனும் தலைநகரை உருவாக்கினான். பதிமூன்றாம் நூற்றாண்டு வாக்கில் சோழர்களின் ஆதிக்கம் குறைந்தது.

[தொகு] 14ஆம் நூற்றாண்டு

14ஆம் நூற்றாண்டில் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு பாண்டியர்கள் மீண்டும் எழுச்சி பெற்றனர். ஆயினும் அந்த எழுச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1316 இல் வடக்கிலிருந்து படையெடுத்து வந்த கில்சி ஆட்சியாளர்கள், மதுரையை முற்றுகையிட்டு சூறையாடினர். இசுலாமியர்களின் படையெடுப்பு சோழர்களையும் பாண்டியர்களையும் ஆற்றலற்றவர்களாக்கி இசுலாமிய "பாமினி" ஆட்சிக்கு வித்திட்டது. இசுலாமியப் படையெடுப்புக்கு பதிலடி தரும் வண்ணம் பல்வேறு சிற்றரசுகள் சேர்ந்து விசயநகர பேரரசைத் தோற்றுவித்தன. இப்பேரரசின் பல்வேறு பகுதிகள் பிரிக்கப்பட்டு அவற்றை மேற்பார்வையிட நாயக்கர்கள் என்னும் ஆட்சியாளர்கள் நியமிக்கப் பட்டனர். அம்பியை தலை நகராகக் கொண்டிருந்த விசய நகரப் பேரரசு செல்வச் செழிப்போடும் அமைதியுடனும் திகழ்ந்தது.

ஆனால், 1564 ஆம் ஆண்டு வாக்கில் நடந்த தலிகோட்டா போரில் தக்காணப் பீடபூமியைச் சேர்ந்த சுல்தான்களால் விசயநகர ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு, அவர்கள் ஆட்சிக்கடங்கிய பகுதிகள் யாவும் நாயக்கர்களிடையே பிரித்தளிக்கப்பட்டன. நாயக்கர் ஆட்சிக் காலத்திலும் தமிழ்நாடு அமைதியுடனும் செழிப்புடனும் விளங்கியது. தஞ்சை மற்றும் மதுரையைச் சேர்ந்த நாயக்கர்கள் புகழ் பெற்று விளங்கியதோடு பழங்கால கோயில்களை புதுப்பிக்கவும் செய்தனர்.

இன்றைய கேரளாவும் மலபாரை ஒட்டிய பகுதிகளும் சேர நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. கடலை ஒட்டியிருந்த சேரர்களின் ஆட்சிப்பகுதி ரோமானியர்களுடனான வாணிபத்திற்கு ஏதுவாக இருந்தது. ஆங்கிலேய படையெடுப்பு நிகழும் வரை சேரர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த சிறிய நிலப்பகுதி பெரும்பாலும் வேறெவருடைய படையெடுப்பிற்கும் ஆளாகாமல் இருந்தது.

[தொகு] 17 ஆம் நூற்றாண்டு

1639 இல் ஆங்கிலேயர்கள் மதராசில் (தற்பொழுது சென்னை என்று அழைக்கப்படுகிறது) கிழக்கிந்தியக் கம்பெனியை நிறுவிய பிறகு தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய பகுதி தொடங்கியது. தமிழ் நாட்டு சிற்றரசர்களிடையே நிலவி வந்த சச்சரவுகளைப் பயன்படுத்தி அவர்களைப் பிரித்தாண்டு, அவர்களின் மேல் தங்கள் அதிகாரத்தை செலுத்தத் தொடங்கினர். தமிழ்நாடும் அதைத் தொடர்ந்து தென்னிந்தியாவும் மெல்ல மெல்ல ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. ஆங்கிலேயர் அதிகாரத்தை தம் வசப்படுத்திய இந்த காலக்கட்டத்தில் அவர்களை எதிர்த்துப் போராடிய தமிழ் ஆட்சியாளர்களும் கணிசமானோர் இருந்தனர். மருது பாண்டியர், புலித்தேவன், வாண்டாயத் தேவன், மாவீரன் அழகுமுத்துக்கோன், மருதநாயகம், வீரபாண்டிய கட்டபொம்மன், வேலு நாச்சியார், வீரன் சுந்தரலிங்கம், வெள்ளையன், கந்தன் பகடை, ஒண்டி வீரன், வெண்ணி காலாடி, பெரிய காலாடி, தீரன் சின்னமலை, கட்டன கருப்பணன் போன்ற ஆட்சியாளர்கள் வெள்ளையரை எதிர்த்து போரிட படைகளை தலைமையேற்று நடத்தினர்.

[தொகு] 20 ஆம் நூற்றாண்டு

Madras Prov South 1909.jpg

1947இல் இந்தியா விடுதலை அடைந்தபோது, மதராசு மாகாணம் (படம்)(The Madras Province) மதராசு மாநிலம் ஆனது. தமிழ்நாடு, கடலோர ஆந்திரப் பகுதிகள், மேற்கு கேரளம், தென் மேற்கு கர்நாடக கடற்கரைப் பகுதிகள் ஆகியவை மதராசு மாநிலத்தின் கீழ் வந்தன. 1953இல் மதராசு மாநிலத்தின் தெலுங்கு பேசும் மக்கள் உள்ள வட பகுதிகள் ஆந்திர மாநிலமாகவும் தமிழ் பேசும் தென் பகுதிகள் மதராசு மாநிலமாகவும் மேலும் பிரிக்கப்பட்டது. 1956இல் மாநில எல்லைகளை மறு வரையறை செய்யும் சட்ட திருத்தத்தின் மூலம் மதராசு மாநிலத்தின் மேற்கு கடற்கரை பகுதிகள் கேரளாவிற்கும் கர்நாடகத்திற்கும் இடையே பிரித்தளிக்கப்பட்டது. 1969இல், மதராசு மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கேரள மாநிலத்தின் தென்பகுதியில் தமிழ் பேசும் மக்கள் வாழிடம் கன்னியாகுமரி மாவட்டமாக உருவாக்கப்பட்டு, நவம்பர் 1, 1956இல் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது.

[தொகு] பாரம்பரியம்

தமிழ்நாடு அரசு குறியீடுகள்
மொழி தமிழ்
சின்னம் திருவில்லிபுத்தூர் கோபுரம்
பாட்டு தமிழ்த்தாய் வாழ்த்து
விலங்கு வரையாடு
பறவை மரகதப் புறா
மரம் பனை
பூ செங்காந்தள் கார்த்திகைப் பூ
விளையாட்டு கபடி
ஆடல் பரதநாட்டியம்

தமிழ்நாடு, இன்றும் செழிப்புடன் விளங்கும், வளமான இலக்கிய, இசை, நடனப் பாரம்பரியங்களுக்குப் பெயர் பெற்றது. இது இந்தியாவின் அதிக அளவு கைத்தொழில் மயமாக்கப்பட்ட மாநிலங்களுள் ஒன்று.

சுப்பிரமணிய பாரதி, வ. உ. சிதம்பரம்பிள்ளை, சி. வி. இராமன், பெருந்தலைவர் காமராசர், சுப்பிரமணியன் சந்திரசேகர், ஆர். கே. நாராயண், ஆர். வெங்கட்ராமன், சி. என். அண்ணாதுரை , ஈ.வெ.ராமசாமி (பெரியார்), சீனிவாச ராமானுசன், அப்துல் கலாம், பாரதிதாசன், திரு.வி.க., கண்ணதாசன், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் மாநிலத்தின் நன்கு அறியப்பட்டவர்களில் சிலராவர். இவர்களோடு, இளங்கோவடிகள், கண்ணகி, திருவள்ளுவர், தொல்காப்பியர், ஔவையார், கம்பர், கரிகால்சோழன், இராசராச சோழன், மருதநாயகம் போன்ற முற்காலத்தவரும் இன்றும் நினைவில் இருப்பவர்களாகும்.


[தொகு] அரசியல்

தமிழ் நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 234. நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39. 1986 வரை தமிழ் நாட்டில் இரண்டு அடுக்கு சட்ட மன்றங்கள் இருந்தன. தற்பொழுது ஒரு அவை மட்டுமே உள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றுக்கும் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்து எடுக்கப்படுகின்றனர்.

தமிழ் நாட்டின் முதன்மையான அரசியல் கட்சிகளாக திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை விளங்குகின்றன.காங்கிரசு கட்சி, மார்க்சிய கட்சிகள், பாட்டாளி மக்கள் கட்சி , மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் , பாரதிய ஜனதா கட்சி,மனிதநேய மக்கள் கட்சி,புதிய தமிழகம் கட்சி, மூவேந்தர் முன்னேற்ற கழகம், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி,மற்றும் முஸ்லீம் லீக் ஆகியவையும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளாக உள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர்கள் மூவர்: சி. என். அண்ணாதுரை (இடது); மு. கருணாநிதி (நடுவில்); ம. கோ. இராமச்சந்திரன் (வலது)

தந்தை பெரியார் என்று அறியப்படும் ஈ.வெ.ராமசாமி 1916இல் தோற்றுவித்த திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்து, 1949இல் திராவிட முன்னேற்றக் கழகத்தை சி. என். அண்ணாதுரை தோற்றுவித்தார். 1947 இல் இந்திய விடுதலைக்குப் பிறகு 1967 வரை தமிழ் நாட்டை இந்திய தேசிய காங்கிரசு ஆண்டது. 1967இல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்தது. 1972இல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ம. கோ. இராமச்சந்திரன் தோற்றுவித்தார். 1977இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முதலில் ஆட்சியைப் பிடித்தது.

1967 முதல் 2011இல் கடைசியாக நடந்த சட்ட மன்ற தேர்தல் வரை தி.மு.க. அல்லது அ.இ.அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளில் ஒன்று அல்லது அக்கட்சிகள் தலைமை வகிக்கும் கூட்டணிகள் பெரும்பான்மை தொகுதிகளை வென்று வருகின்றன. தமிழ் நாட்டு சட்டமன்றத் தேர்தல்களில் பல கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவது உண்டு என்றாலும், இது வரை தனிக் கட்சி ஆட்சியே நடைபெறுகிறது. முதன் முறையாக தி.மு.க. ஒரு அறுதிப் பெரும்பான்மையற்ற சிறுபான்மை அரசாகச் (2006-2011) செயல்பட்டது. இருப்பினும், தமிழக கட்சிகள் நடுவண் அரசில் செல்வாக்கோடு விளங்கி கூட்டணி ஆட்சி அமைக்க உதவவும்,பங்கேற்கவும் செய்கின்றன.

தி.மு.க.வின் 2006-2011 ஆட்சிக் காலத்தில் தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு, தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை சமூகத்தின் நலன், இலங்கைத் தமிழர் பிரச்சினை, இட ஒதுக்கீடு, காவிரி நதி நீர்ப் பங்கீடு பிரச்சினை, விவசாயிகள், பாமரர் மற்றும் நலிவடைந்த பிரிவினர் நலன், ஊழல், இலஞ்சம், நிதிமோசடி, சாதி அரசியல் ஆகியவை தமிழ் நாட்டு அரசியலில் முதன்மைத்துவம் கொண்டிருந்தன. பின்னர் குடும்ப அரசியலும் முக்கியத்துவம் பெற்றது.

2011இல் நடந்த சட்ட மன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெற்றது. ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. அமைச்சரவை 2011, மே மாதம் 16ஆம் நாள் ஆட்சிப்பொறுப்பேற்றது. இத்தேர்தல் முடிவுகள் தி.மு.க. ஆட்சிமீது மக்கள் அடைந்த அதிருப்தியை வெளிப்படுத்துவதாக பத்திரிகை விமர்சனங்கள் அமைந்துள்ளன.

தி.மு.க.வின் தோல்விக்குக் காரணங்களாகக் காட்டப்படுவை:

  • கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் எங்கும் நிலவிய மின்வெட்டு
  • விலைவாசி உயர்வு
  • அரசியலில் ஆட்சிக் குடும்பத்தினரின் ஆதிக்கம்
  • திரைத்துறையில் ஆட்சிக் குடும்பத்தினரின் தலையீடு
  • ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிரைக் காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்காதது
  • இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேட்டில் (2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்) தி.மு.க. மைத்திய அமைச்சர் ஆ. ராசா பங்கேற்றதாக எழுந்த குற்றச்சாட்டு
  • நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம் அ.இ.அ.தி.மு.க.வோடு கூட்டணி ஏற்படுத்தியது

பார்க்கவும்: தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்

[தொகு] மாவட்டங்கள்

தமிழ்நாடு வரைபடம் http://tnmaps.tn.nic.in/tamil/

தமிழ் நாட்டில் தற்போது 32 மாவட்டங்கள் உள்ளன. மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன. இவற்றுள் விதிவிலக்காக, கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில், நீலகிரி மாவட்டத்தின் தலைநகர் உதகமண்டலம் என்றுள்ளன. தற்போதுள்ள மாவட்டங்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமாக பெயர்மாற்றம் பெற்றுவந்துள்ளன. ஒரு சில காலகட்டங்களில் மாவட்டங்களின் பெயருடன் காலம் சென்ற தமிழக தலைவர்கள் பெயரும் இணைத்துப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வந்தன. தற்போது அப்பெயர்கள் நீக்கப்பட்டு, மாவட்டங்களின் பெயர்கள் மட்டும் நிலைத்து நிற்கின்றன.

  1. அரியலூர் மாவட்டம்
  2. இராமநாதபுரம் மாவட்டம்
  3. ஈரோடு மாவட்டம்
  4. கடலூர் மாவட்டம்
  5. கரூர் மாவட்டம்
  6. கன்னியாகுமரி மாவட்டம்
  7. காஞ்சிபுரம் மாவட்டம்
  8. கிருஷ்ணகிரி மாவட்டம்
  9. கோயம்புத்தூர் மாவட்டம்
  10. சிவகங்கை மாவட்டம்
  11. சென்னை மாவட்டம்
  12. சேலம் மாவட்டம்
  13. தஞ்சாவூர் மாவட்டம்
  14. தர்மபுரி மாவட்டம்
  15. திண்டுக்கல் மாவட்டம்
  16. திருச்சிராப்பள்ளி மாவட்டம்
  1. திருநெல்வேலி மாவட்டம்
  2. திருப்பூர் மாவட்டம்
  3. திருவண்ணாமலை மாவட்டம்
  4. திருவள்ளூர் மாவட்டம்
  5. திருவாரூர் மாவட்டம்
  6. தூத்துக்குடி மாவட்டம்
  7. தேனி மாவட்டம்
  8. நாகப்பட்டினம் மாவட்டம்
  9. நாமக்கல் மாவட்டம்
  10. நீலகிரி மாவட்டம்
  11. புதுக்கோட்டை மாவட்டம்
  12. பெரம்பலூர் மாவட்டம்
  13. மதுரை மாவட்டம்
  14. விருதுநகர் மாவட்டம்
  15. விழுப்புரம் மாவட்டம்
  16. வேலூர் மாவட்டம்

[தொகு] மக்கள்

தமிழ்நாடு இந்தியாவின் ஏழாவது மக்கட்தொகை மிகுந்த மாநிலமாகும். சூலை 1, 2008-இல் மக்கட்தொகை 66,396,000. இந்தியாவிலேயே அதிகப்படியாக 44% மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர். 89 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். தெலுங்கு (5.65%), கன்னடம் (1.68%), உருது (1.51%), மலையாளம் (0.89%) ஆகிய மொழிகளும் பேசப்படுகின்றன.

[தொகு] பழங்குடிகள்

தமிழகத்தின் மக்கட்தொகையில் 3.5% மக்கள் பழங்குடிகள் (2001 கணக்கெடுப்பு). மாநிலத்தில் 40-க்கும் மேற்பட்ட பழங்குடிகள் உள்ளனர். நீலகிரி, ஆனைமலை, கொல்லிமலை ஆகிய பகுதிகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தோடர், காடர், குறும்பர், காணிக்காரர், மலமலசர், பணியர், பழியர் முதலிய பழங்குடி இன மக்கள் வாழ்கின்றனர்.

[தொகு] சமயம்

சமயவாரியாக மக்கள் தொகை [13]
சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 62,405,679 100%
இந்துகள் 54,985,079 88.11%
இசுலாமியர் 3,470,647 5.56%
கிறித்தவர் 3,785,060 6.07%
சீக்கியர் 9,545 0.02%
பௌத்தர் 5,393 0.01%
சமணர் 83,359 0.13%
ஏனைய 7,252 0.01%
குறிப்பிடாதோர் 59,344 0.10%

[தொகு] பொருளாதாரம்

தமிழ்நாடு, நல்ல தொழில் வளர்ச்சி கண்டுள்ள ஒருசில இந்திய மாநிலங்களுள் ஒன்றாக விளங்குகிறது. தமிழக மக்கள் தொகையில் குறிப்பிடத் தகுந்த பகுதியினர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர் நெசவாலைகளுக்கும், ஈரோடு மஞ்சள் சாகுபடி மற்றும் ஆடை ஏற்றுமதிக்கும், கரூர் இல்ல உப-சவுளி ஏற்றுமதி மற்றும் கனரக வாகன கூடு கட்டும் தொழில்களுக்கும், திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கும், சேலம் இரும்பு உருக்கு ஆலைகளுக்காகவும், நாமக்கல் கோழிப் பண்ணைகள், சிவகாசி அச்சுத் தொழில், பட்டாசு உற்பத்திக்கும், காவிரி பாசன பகுதியில் அமைந்துள்ள திருச்சி,தஞ்சாவூர் போன்ற பகுதிகளும் கன்னியாகுமரி மாவட்ட நாஞ்சில் நாட்டுப் பகுதியும் விவசாயத்திற்கும், வேலூர் தோல் தொழிலுக்கும், சென்னை வாகன உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களுக்கும் பெயர் பெற்றுள்ளன.பாலிவுட் என அழைக்கப்படும் மும்பை திரைப்படத் துறைக்கு அடுத்ததாக, தமிழ்நாடு இந்தியாவின் இரண்டாவது பெரிய திரைப்படத் தொழில் மையமாக கோலிவுட் என்னும் பெயரோடு (கோடம்பாக்கம் + ஹாலிவுட் என்பதன் பெயர்த் தழுவல்) திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும், பெருமளவில் தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன.

[தொகு] தமிழ்நாட்டின் ஏழ்மை நிலை

தமிழ்நாடு பலமுனைகளில் வளர்ச்சியடைந்து வந்தாலும் கணிசமான மக்கள் ஏழ்மைக் கோட்டுக்கு கீழேயே வாழ்கின்றார்கள். 1999/00 கணிப்பீட்டின் படி 12-17 மில்லியன் மக்கள் அல்லது 21 விழுக்காடு மக்கள் ஏழ்மைக் கோட்டுக்கு கீழே வாழ்கின்றனர்.[2]

[தொகு] கல்வி அறிவு மற்றும் சமூக வளர்ச்சி

சென்னையில் அமைந்த இந்தியத் தொழில்நுட்பக் கழக (IIT) முதன்மை நுழைவாயில். இலச்சினையும் குறிக்கோளுரையும்
கிண்டி பொறியியல் கல்லூரி சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக முதன்மை வளாக பரப்பில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் பழமையான நுட்பவியல் கல்லூரி

சமூக முன்னேற்றத்தின் குறியீடுகளான (மனித வளர்ச்சிச் சுட்டெண்) பரவலான கல்வியறிவு, ஆண் - பெண் சமத்துவம், மேம்பட்ட பொது சுகாதாரம், நீண்ட சராசரி மனித ஆயுள், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, வேலை வாய்ப்புகள், தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் இந்தியாவின் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாக தமிழ்நாடு விளங்குகிறது.

தமிழ்நாட்டு மக்களின் கல்வியறிவு இந்தியாவின் சராசரியைவிட அதிகம். இங்கு 1991-2001 காலக் கட்டத்தில் 62.66%ல் இருந்து 73.47% என்று கல்வியறிவு அதிகரித்தது. இன்று தமிழ்நாட்டில் 82.33% ஆண்களும் 64.56% பெண்களும் கல்வியறிவுடையவர் ஆவர். தமிழ்நாட்டில் 37 பல்கலைக்கழகங்கள், 454 பொறியியல் கல்லூரிகள், 1150 கலைக் கல்லூரிகள், 2550 பள்ளிக்கூடங்கள் மற்றும் சுமார் 5000 மருத்துவமனைகள் உள்ளன. இங்கு இரண்டு நடுவண் அரசு கல்வி நிறுவனங்கள் உள்ளன. அவை சென்னையில் அமைந்த இந்திய தொழில்நுட்பக் கழகம், மற்றும் திருச்சியில் அமைந்த தேசிய தொழில்நுட்ப கழகம் ஆகும். மேலும் புகழ்மிக்க சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனம், வேலூர் கிருத்துவ மருத்துவ கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர், இலயோலாக் கல்லூரி, சென்னை ஆகியனவும் உள்ளன. தமிழகத்தில் வருடந்தோறும் 1,30,000 பேர் பொறியியல் படிப்பு முடித்து தேர்ச்சி பெறுகின்றனர்.

[தொகு] பண்பாடு

முதன்மைக் கட்டுரை: தமிழர் பண்பாடு

தமிழர் பண்பாடு நீண்ட கால வரலாறு கொண்டது. உயர்ந்த இலக்கியம், இசை, நாடகம் போன்ற கலைகள் தமிழ் நாட்டின் பாரம்பரியம் மிக்க கலைகள் ஆகும். பரத நாட்டியம் எனும் நடனமும், தஞ்சை பாணி ஓவியங்களும், தமிழகக் கட்டடக் கலைகளும் இன்றளவும் தமிழகத்தின் பெருமையைப் பறைசாற்றுகின்ற கலை வெளிப்பாடுகளாக உள்ளன.

[தொகு] மொழியும் இலக்கியமும்

தமிழ் நாட்டின் ஆட்சி மொழி தமிழ் ஆகும். ஆங்கிலமும் அலுவல் மொழியாகப் பயன்படுகிறது. இந்தியா செம்மொழியாக அங்கீகரித்துள்ள மொழிகளில் தமிழ் முதலிடத்தில் உள்ளது. தமிழரின் பண்பாட்டில் தமிழ் மொழி மிக இன்றியமையாத இடத்தை வகிக்கிறது. சங்க இலக்கியங்கள் எனப்படும் தமிழின் மிகப் பழமையான இலக்கியங்கள் யாவும் செய்யுள் வடிவில் இயற்றப்பட்டவையாகும். தொன்மைக் காலம் முதலே இலக்கியம் மட்டுமல்லாமல் மக்களின் வாழ்க்கைக்கும் இலக்கணம் கண்ட மொழி தமிழ் மொழியாகும்.

திருக்குறள் என்ற அறநூல் தமிழின் மிகச் சிறந்த நீதிநூல் ஆகும். இது உலகின் பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தன்னை இன்னாரென அடையாளம் காட்டாத ஒரு சிறந்த தமிழ்ப் புலவரால் இயற்றப்பட்டது இந்நூலாகும். நாடு, மொழி, இனம் கடந்து உலக மக்கள் யாவருக்கும் பொதுவான நீதியைக் கூறுவதால் திருக்குறள் உலகப் பொதுமறை எனப் போற்றப்படுகிறது. கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை -(திருக்குறள் - 400)

தமிழின் இலக்கியங்களிலிருந்து அக்கால தமிழ் மக்களின் தலைசிறந்த பண்பாடு, வாழ்க்கை முறை போன்ற கூறுகளை நாம் அறியமுடிகிறது. இந்தியாவின் முதல் நூல்கள் தமிழிலேயே அச்சாயின. தமிழகத்தின் முதல் அச்சுக்கூடம் புன்னைக்காயலில் 1578இல் போர்த்துகீசியரால் நிறுவப்பட்டது.[14] பின்னர் தரங்கம்பாடி அச்சுக்கூடத்திலும் சென்னையிலும் ஏராளமான தமிழ் இலக்கியங்கள் அச்சுவடிவம் பெற்றன. இந்திய விடுதலைப் போரில் மக்களின் விடுதலை உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கு தமிழ் கவிஞர்களான பாரதியார், பாரதிதாசன் போன்றோரின் கவிதைகள் உதவியாய் இருந்தன. தற்காலத்தில் வாலி, வைரமுத்து, தாமரை போன்ற தமிழ்க் கவிஞர்கள் கவிதை படைக்கின்றனர். தமிழ் எழுத்தாளர்களால் புதினங்கள், சிறுகதைகள், பெருங்கதைகள் எனத் தமிழ் நூல்கள் வெளிவருகின்றன.

[தொகு] விழாக்கள்

தமிழர்களின் வீரவிளையாட்டுக்களில் ஒன்றான ஏறுதழுவலில் காளையை அடக்கும் இளைஞன்

[தொகு] சுற்றுலாத்துறை

தமிழ்நாடு அழகிய நிலப் பகுதிகள், பாரம்பரியச் சின்னங்கள் நிறைந்த சுற்றுலா முதன்மைத்துவம் உள்ள மாநிலமாகும். தமிழ்நாடு, திராவிட கட்டிடக்கலை பாணியைப் பிரதிபலிக்கும் கோயில்களுக்குப் புகழ் பெற்றது. இக்கோயில்களுக்கு வியக்க வைக்கும் கோபுரங்களும் ரதங்களும் அழகு சேர்க்கின்றன.இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோவிலின் மூன்றாம் பிரகாரம், உலகின் மிகப் பெரியதாகும். சோழர் கால தஞ்சை பெரிய கோவிலும் பல்லவர் கால மாமல்லபுரம் சிற்பங்களும் கோவில்களும் உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இராமநாதபுரம், தஞ்சை, மதுரை, சுவாமிதோப்பு மற்றும் காஞ்சி ஆகியவை கோயில் நகரங்களாகத் திகழ்கின்றன. கன்னியாகுமரி கடல் முனையில் அமைந்துள்ள வள்ளுவர் சிலையும் காண வேண்டிய இடமாகும். எழில் கொஞ்சும் நீலகிரி மற்றும் கோடைக்கானல் மலைப் பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய அடர்ந்த வனப் பகுதிகள், கிழக்குக் கடற்கரை, ஏற்காடு போன்ற மனம் கவரும் தலங்களும் உண்டு.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

தமிழ்நாட்டு ஓவியக் கலை
தமிழ்நாட்டு ஊர்களும் உணவுகளும்
தமிழ்நாட்டு இந்துத்துவ அமைப்புகள்
தமிழ்நாட்டு தொழிற்துறைகள்
தமிழ்நாட்டு இடதுசாரி அமைப்புகள்
தமிழ்நாட்டு வேதிப்பொருள் தொழிற்துறை
தமிழ்நாட்டு அறிவொளி இயக்கம்
தமிழ்நாட்டு சீர்திருத்தங்கள்
தமிழ்நாட்டு ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டங்கள்
தமிழ்நாட்டு தலித் அமைப்புகள்
தமிழக வரலாறு
தமிழக ஏரிகள்

[தொகு] மேற்கோள்கள்

  1. http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
  2. http://www.tn.gov.in/gov_cm.html
  3. தமிழ்நாடு சட்டசபை.
  4. "தமிழ்நாடு" எனப் பெயர் மாற்றக் கோரிக்கை சங்கரலிங்கனார் உயிர்த்தியாகம்
  5. India's top 20 states by GDP. Rediff, Retrieved on October 06, 2011
  6. HDI and GDI Estimates for India and the States/UTs: Results and Analysis
  7. Tamil Nadu the most urbanised State: Minister.
  8. Enterprises in India.
  9. Anwar S. Dil "Language and Linguistic Area: Essays by Murray Barnson Emeneau", Stanford University Press: Stanford, California - Reprinted (1980).
  10. Press Information Bureau.
  11. UNESCO World Heritage List.
  12. ராசு கொளதமன். (2004). க. அயோத்திதாசர் ஆய்வுகள். சென்னை: காலச்சுவடு பதிப்பகம்.
  13. Census of india , 2001
  14. முதல் அச்சுக்கூடம்

[தொகு] வெளி இணைப்புகள்


"http://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்நாடு&oldid=1103219" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்