ஔவையார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மெரினா கடற்கரையில் இருக்கும் ஔவையார் சிலை

ஔவையார் எல்லாத் தமிழருக்கும் நன்கு அறிமுகமான ஒரு புலவராவர்.

தமிழ் தாயை திருத்தொண்டினால் போற்றியவர்கள் நாலு வகைப்படுவர். முதலில் பிறைசூடிக்கடவுளும் அவர் திருமகனாகிய முருகனும் தெய்வ வகையினராவர். தேவ வகையை சேர்ந்த இந்திரன் இரண்டாம் வகையினன். மூன்றாவதாக அகத்தியன், இவர் முனிவ வகையினராவர். நான்காவதாக மானிட வகையினர், இதில் பல்லாயிரக்கணக்கான பெண்களும் ஆண்களும் அடங்குவர். பிற இனங்களும் நாகரியங்களும் பண்டைய காலத்தில் பெண்களுக்கு அறிவு கூடாதென்று, பெண்களை அடக்கிய காலத்தில், தமிழரிடையே ஔவையார், வெள்ளி வீதியார், பூதபாண்டியன் தேவியார், ஆதிமந்தியார் போன்ற பல பெண் தமிழ்ப் புலவிகள் கடைச் சங்க காலத்தில் நிலவினர் என்பது தமிழர்களின் உயர்ந்த பண்பாடுக்கு ஒரு உதாரணமாகும். இவர்களுக்குள் ஔவையார் தலைசிறந்தவராவார்.

பொருளடக்கம்

[தொகு] மூவரும் ஒருவராகினர்

ஔவையாரின் வரலாற்றைப் பார்த்தல் மூன்று ஔவைகள் தமிழகத்தில் வேவ்வேறு காலத்தில் 12ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தனர் என்பது புலப்படும். இவர்களில் முதலானவர் வள்ளுவர், நக்கீரர் போன்ற புலவர்கள் வாழ்ந்த கடைச்சங்க காலத்திலும், இடையானவர் சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் போன்ற பக்தி இலக்கியப் புலவர்கள் காலத்திலும், கடையானவர் கம்பர்,செயங்கொண்டார், புகழேந்தி, ஒட்டக்கூத்தர்,சேக்கிழார் போன்ற புலவர்கள் காலத்திலும் வாழ்ந்தனர் என்பர். இம்மூவரும் ஒத்த பெயர் மற்றும் இயல்புகளை உடையவர்களாதலால் பிற்கால மக்களால் ஒருவராக கருதப்பட்டனர் போலும். மேலும் அதியமான் நெடுமான் அஞ்சி கொடுத்த, நீண்டகாலம் வாழ வைக்கும் சிறப்புப்பொருந்திய நெல்லிக்கனியை இவர் உண்டமை, இக்கருத்துக்கு வலுச் சேர்த்திற்று என்பர்.

இம்மூவரில் ஒருவர் பகவன் என்பவனுக்கும் ஆதி என்பவளுக்கும் எழாவது குழந்தையாக பாணரகத்தில் பிறந்ததாகவும், அங்கே பாணரோடு செய்த உடன்படிக்கையின்படி, குழந்தையை அங்கேயே விட்டுவருமாறு பகவன் கூற, பெற்ற குழந்தையை பிரிய விரும்பாத ஆதி அழுததாகவும், ஆதிக்கு ஆறுதல் சொல்லும் பொருட்டு ஔவைக் குழந்தை வெண்பா கூறியதாகவும் கூறுவர். அவ்வெண்பாவை கிழே காட்டுதும்:-

இட்டமுடன் என்தலையில் இன்னபடி என்றேழுதி
விட்டசிவ நும்செத்து விட்டனோ-முட்டமுட்டப் 
பஞ்சமே யானாலும் பாரம் அவ னுக்கன்னாய்
நெஞ்சமே யஞ்சாதே நீ.

[தொகு] பொதுச் சிறப்பியல்புகள்

இவர் தமிழறிவுடன் பிறந்தவர் என்பர். பெற்றாருண்டி மறந்தவர். பாணரகத்தில் வளர்ந்தவர்.சிவபரத்துவந் தெளிந்தவர். வரகவித்துவம் அமைந்தவர்.இலௌகிகம்,வைதிகம் இரண்டுந் தெரிந்தவர். உள்ளம்,உண்மை,மொழி எனும் மூன்றும் சிறந்தவர். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கும் அறிந்தவர். தமிழ்நாடெங்குந் திரிந்தவர்.கோவலூரிலும் புல்வேளுரிலும் பலநாள் இருந்தவர். பலர்மீதுங் கவிபாடிப் பரிசு பெற்றவர். பரிசு கொடுத்தவர் சிறியராயினும், வறியராயினும் அவரைப் பெரியராக மதித்துப் பாடினவர். பரிசு கொடுத்தாலும் பாட்டுக் கேட்டலிலும் பராமுகஞ் செய்தாரையும், பாடலருமை அறிய மூடரையும் வெறுத்துப் பாடினவர். மேல் கூறிய சிறப்பியல்புகள் மூன்று ஔவைகளிலும் பொதுவாக இருந்ததாகத் கூறுவர். [1].

[தொகு] முதலாம் ஔவையார்

சேரசோழபாண்டியர், மழவர் கோமான் அதியமான் நெடுமான் அஞ்சி, முல்லைக்கு தேரீந்த பாரி வள்ளல், காஞ்சித் தொண்டைமான். மலையமான் திருமுடிக்காரி, நாஞ்சில் கோமான் வள்ளுவன் போன்ற தமிழகத்தை ஆண்ட கடைச் சங்க கால மன்னர்களை ஔவையார் தமிழால் ஆண்டார் என்றால் மிகையாகாது. இவரின் நண்பனும் பெரும் வீரனுமாகிய தகடூரை ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சி மீது படையெடுக்கும் பொருட்டு,சேரசோழபாண்டியரும் பிற குறுநில மன்னரும் மாநாடு கூட்டித் திட்டங்கள் வகுத்த போது, அங்கு வந்த ஔவையார் கூடியிருந்த மன்னர்களுக்கு பின்வரும் பாடல் மூலமாக, அறமற்ற இப்படையெடுப்பால் அழிவு அதியமானுக்கு அல்ல, கூடியிருக்கும் மன்னர்களுக்குத்தான் என்பதை கூறி இப்படையெடுப்பை கைவிடுமாறு கேட்டுக்கொள்ள, கூடியிருந்த மன்னர்களும் இவரின் சொல்லுக்கு மதிப்பளித்து இதற்கு இசைந்தனர். அப்பாடலைக் கீழே காட்டுதும்:-[2]

திணை:- தும்பை துறை:- தானைமறம்

 களம்புகல் ஓம்புமின் தெவ்விர்! போர்எதிர்ந்து
எம்முளும் உளனொரு பொருநன்; வைகல்
எண்தேர் செய்யும் தச்சன் 
திங்கள் வலித்த கால்அன் னோனே.  (புறநானூறு 87)  

இவரால் 59 செய்யுள்கள் பாடப்பட்டுள்ளன, அவை குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, புறநானூறு போன்ற நூல்களில் காணப்படுகின்றன.

[தொகு] இரண்டாம் ஔவையார்

இவர் பிள்ளையாரிடமும் மற்றும் முருகனிடமும் மிகுந்த அன்பு வைத்திருந்தார், மேலும் அவர்களிடம் பேசும் பெரும் பேறு உடையவராகயிருந்தார். இவர் காட்டு வழி செல்லும் போது இளைப்பாறும் பொருட்டு ஒரு நாவல் மரம் கீழ் அமர்ந்தார். அம்மரத்தே ஒரு சிறுவன் இருப்பதைக் கண்டு, உண்ண கனிகள் சில கேட்டார். அதற்கு அச்சிறுவன் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று வினாவினான். இவ்வினாவினால் குழப்பம் அடைந்த இவர் பழமும் சுடுமா? என்று எண்ணி, சுட்ட பழம் தருமாறு வேண்டினார். அச்சிறுவனும் நாவல் மரக் கிளையை உலுக்க சில பழங்கள் உதிர்ந்து தரையில் விழுந்தன, இவற்றை பொறுக்கி அவற்றில் உள்ள மண் போகும் வண்ணம் ஊதினார் ஔவையார். இதைப் பார்த்த சிறுவன் இவரிடம் பழம் சுடுகிறதா நன்கு ஊதி உண் எனக் கூறி நகைத்தான். குறும்பு தனமான மதி நுட்பத்தை கண்ட இவர் உன்னிடம் நான் தோற்றேன் என வருந்திப் பின்வரும் செய்யுளை பாடினார்.

 கருங்காலிக் கட்டைக்கு நாணாக்கோ டாலி 
இருங்கதலித் தண்டுக்கு நாணும்- பெருங்கானில் 
காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான் தோற்றேன்
ஈரிரவும் துஞ்சாதென் கண்

இதன்பின் சிறுவனும் முருகனாய் இவர்முன் தோன்றி கொடியது எது?, இனியது எது?, பெரியது எது?, அரியது எது? என இவரை சோதிக்கும் பொருட்டு வினாவி, செய்யுகளில் விடையும் பெற்று மகிழ்ந்தான் என்பர். சுந்தரமுர்த்தி நாயனாரும் சேரமான் பெருமாளும் முறையே கரியிலும் பரியிலுமெறி கயிலைக்கு செல்வதை அறிந்த இவர் தாமும் அவர்களுடன் அங்கு செல்ல விரும்பி தாம் பிள்ளையாருக்கு வழக்கமாக செய்யும் பூசையை அவசரமாக செய்ய, இவர் எண்ணம் அறிந்த பிள்ளையார், அவசரம் வேண்டாம் நான் உன்னை கயிலைக்கு அழைத்துச் செல்வேன் என்று கூறினார். இதனால் மகிழ்ந்த இவர், பிள்ளையார் மீது விநாயகர் அகவல் பாடினார். பிள்ளையாரும் கூறியவாறு இவரை தும்பிக்கையால் தூக்கி கயிலையில் வைத்தார் என்பர். அங்கு வந்த சேரமான், இவரிடம் தாங்கள் எவ்வாறு வேகமாக இங்கு வந்தீர்கள் என்று வினாவ, பின்வரும் செய்யுளில் பிள்ளையாரின் அருளால் இங்கு வந்தேன் என்று விடையளித்தார்.

மதுரமொழி நல்லுமையாள் சிறுவன் மலரடியை 
முதிர நினையவல் லார்க்கரி தோமுகில் போன்முழங்கி
அதிர வருகின்ற யானையும் தேரும் அதன்பின்வரும் 
குதிரையும் காதம் கிழவியும் காதம் குலமன்னனே! 

இவர், சுந்தரமுர்த்தி நாயனாரும் சேரமான் பெருமாளும் வாழ்ந்ததாகக் கருதப்படும் 8ஆம் மற்றும் 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார் என்று கூறுவர்.


[தொகு] மூன்றாம் ஔவையார்

இவ் ஔவையார், இரண்டாம் குலோத்துங்க சோழனின் அவையில் புலவமணிகளாக திகழ்ந்த கம்பர், செயங்கொண்டார், புகழேந்தி, ஒட்டக்கூத்தர், சேக்கிழார் போன்றோர் காலத்தில் வாழ்ந்தவர் என்பர். இவர் வாழ்நாளில் சுவையான நிகழ்ச்சிகள் பல நிகழ்ந்தன, அவற்றுள் இரண்டை கீழே கூறுதும். மேல் கூறிய புலவர்கள் கூடியிருந்த சோழனின் அவைக்கு எளிமையை விரும்பும் இவர் வந்தபோது, அங்கு மிகுந்த அடம்பரத்தோடும், அளவற்ற செருக்குடனும் கம்பர் இருப்பதைக் கண்டு சினம் கொண்டு, ஆடம்பரமும் தற்பெருமையும் இகழ்ச்சிக்குரியன என்று முறையே கூறும் இரு பின்வரும் அரிய செய்யுள்களை பாடி, அவையோருடன் வாதம் செய்தார் என்பர்.


 விரகர் இருவர் புகழ்ந்திட வேண்டும் 
 விரல்நிறைய மோதிரங்கள் வேண்டும்- அரையதனில் 
 பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர்கவிதை 
 நஞ்சேனும் வேம்பேனும் நன்று.

வான்குருவி யின்கூடு வல்லார்க்குத் தொல்கறையான்
தேன்சிலம்பி யாவருக்குஞ் செய்யரிதால் - யாம்பெரிதும் 
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும்  ஒவ்வொன் றெளிது. 


நீண்ட தூரம் நடந்த களைப்பால்,ஒரு தாசி வீட்டுத்திண்ணையில் இளைப்பாறும் பொருட்டு இருந்த இவருக்கு அத்தாசியும் கூழ் கொடுத்து உபசரித்தாள். பின்னர் அவ்வீட்டுச் சுவரில் ஒரு வெண்பாவின் முதல் எழு சீர்கள் மட்டுமே எழுதியிருக்க கண்டு, அத்தாசியிடம் அதுபற்றி வினாவ, கம்பர் 500 பொனுக்கு அரை வெண்பா தான் படுவராம், மேலும் 500 பொன் வேண்டுமாம் மிகுதியை பாட எனக் கூறி அழுதாள் சிலம்பி என்னும் அத்தாசி. ஔவையாரும் உள்ளம் இரங்கி மிகுதியை தான் பாடிச் சென்றார் என்பர். அவ்வெண்பாவைக் கீழே காட்டுதும்:-

தண்ணிருங் காவிரியே! தார்வேந்தன் சோழனே 
மண்ணாவதுங் சோழ மண்டலமே-  பெண்ணாவாள்
அம்பொற் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு. 

இதையறிந்த கம்பர் பின்வருமாறு ஔவையை இகழ்ந்தார் என்பர்.

கூழுக்குப் பாடி குடி கெடுத்தாள் பாவி

இவ் ஔவையும் பல தனி நிலைச் செய்யுள்களையும் பந்தன் அந்தாதி மற்றும் அசதிக்கோவை என்னும் நூலைகளையும் பாடியுள்ளார். பந்தன் அந்தாதி மற்றும் அசதிக்கோவை என்னும் நூல்களில் பெரும்பாகம் காலத்தால் அழிந்துவிட்டது. மேலும் இவர் காலத்தில் தமிழ் இலக்கியம் உயர் நிலையை எய்தியது என்பர்.

[தொகு] பிற்கால ஔவையார்கள்

பிற்காலத்தில் குறிப்பாக 14ஆம் நூற்றாண்டுக்கும் 18ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மேலும் இரு ஔவைகள் வாழ்ந்தனர் என்பது அறிஞ்ர்களின் கருத்தாகும். இதில் ஒருவர் 14ஆம் அல்லது 15ஆம் நூற்றாண்டிலும் மற்றையவர் 18ஆம் நூற்றாண்டிலும் வாழ்ந்ததாகக் கூறுவர். இவர்கள் வாழ்க்கை பற்றிய தகவல்கள் ஒன்றும் தற்காலத்தில் கிடைக்கப்பெறவில்லை.

[தொகு] முந்தியவர்

இவர்களில் முந்தியவர் ஆத்தி சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி நாற்பது போன்ற நூல்களை சிறுவர்களுக்கு இயற்றி, தமிழ்ச் சிறுவர்கள் நெஞ்சில் ஔவைப் பாட்டியாக நிலைத்து இருப்பவர். முற்கால ஔவைகள் வாழ்க்கையில் கடைப் பிடித்த எளிமையை, இவர் தமிழ் உரைநடையில் கடைப் பிடித்து, சிறுவர்களின் நினைவில் இலகுவில் பதியும் வண்ணம், தமிழ் அறத்தை வலியுறுத்தும் செய்யுள்களை வடித்தவராவார்.அசதிக்கோவை, பந்தனந்தாதி, விநாயகர் அகவல் போன்ற நூல்களை இயற்றியவரும் இவரே என்றும் சிலர் கூறுவர்.[3].

[தொகு] பிந்தியவர்

இவ் ஔவை ஔவைக் குறள் என்ற வேதாந்தக் கருத்தை உள்ளடக்கிய நூலை இயற்றினார். மேலும் விநாயகர் அகவலை பாடியவரும் இவர் என்று கூறுவோரும் உள்ளனர்.


[தொகு] ஒளவை என்ற சொல்லின் பொருள்

ஔவை அல்லது அவ்வை என்ற சொல் அவ்வா என்ற சொல்லின் திரிபாக இருக்கலாம் என்ற கருத்து பலரிடம் நிலவுகின்றது. ஒளவை என்பது மூதாட்டி அல்லது தவப்பெண் என்ற கருத்தை உடையது என்று பழந்தமிழ் அகராதி கூறும். பிற்காலத்தில் ஒளவை என்ற சொல், ஆண்டு மற்றும் அறிவு என்பவற்றில் முதிர்ச்சி அடைந்தவர்களை குறிக்கும் சொல்லாக விளங்கி்ற்றுப் போலும்.[4].

[தொகு] மேற்கோள்கள்

  1. குமாரசுவாமிப்புலவர், தமிழ் புலவர் சரித்திரம், 1914. பக். 62
  2. தமிழ்நாடு வரலாற்றுக் குழு-தமிழ்நாட்டு வரலாறு-சங்க காலம்-அரசியல்' , 1990. பக்.
  3. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்., தொகுதி 1, 1984. பக்.
  4. குமாரசுவாமிப்புலவர், இலக்கிய சொல்லகராதி , 1914. பக். 98

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%94%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
ஏனைய மொழிகள்