தேர்
தேர் என்பது பொதுவாக கோயில்களில் கடவுளரை ஊர்வலம் எடுத்துச் செல்லப் பயன்படுத்தும் ஓர் ஊர்தியாகும். இத்தேரை திருவிழா நாட்களில் பக்தர்கள் ஊர்வலமாக வடம் பிடித்து இழுத்துச் செல்வர். இதன் பீடம் மரத்தால் ஆனது. இது முழுவதும் மரச்சிற்பங்களால் அலங்கரிக்கப் பட்டு இருக்கும். இது இந்து மதத்தில் மட்டுமில்லாமல், பவுத்தம், கிறித்தவம் போன்ற மதங்களிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் புத்த சமயக் கடவுளான அருகனுக்குத் தேர் இருந்ததாகக் குறிப்பு இடம் பெற்றுள்ளது. எனவே கோயில் தேர் என்பது பவுத்த, சமண சமயங்களுக்கு உரியதாக இருந்து இந்து சமயத்திலும் அது பின்பற்றப்பட்டு வந்துள்ளதாகக் கருதலாம்.[1]
பொருளடக்கம் |
[தொகு] சங்க இலக்கியத்தில் தேர்கள்
சங்க இலக்கியங்களில் தேர் பற்றிய செய்திகளை அதிக அளவில் காண முடிகிறது. நெடுந்தேர், பொற்தேர், கொடித்தேர், கொடிஞ்சி நெடுந்தேர் என்று பலவகையான பெயர்கள் தேர்களுக்கு வழங்கப்பட்டன. இந்தத் தேர்கள் அரசன் மற்றும் வசதி படைத்தவர்களுக்கும் இருந்தன.
[தொகு] தேர்ப்படை
அக்காலத்தில் அரசனுக்கு இருந்த நான்கு வகைப் படைகளான தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்பனவற்றுள் தேர்ப்படை முதலாவது இடத்தில் வைக்கப்பட்டது. போர்களில் தேர் இன்றியமையாத பங்கு வகித்துள்ளது.
[தொகு] தேர் அமைப்புகள்
தேரின் அமைப்பைப் பொறுத்தவரை அது கோயில் விமானத்தின் அமைப்பைப் பிரதிபலிப்பதாகவே அமைகிறது. இத்தேர் சதுரம், அறுகோணம், பத்ன்கோணம், பனிரெண்டுகோணம், வட்டம், நீள்வட்டம், நீள் சதுரம், எண் கோணம், முட்டை வடிவம் என ஒன்பது வகைகளில் அமைக்கப்படுகிறது.[2]
[தொகு] தேர்ச் சிற்பங்கள்
- மானசாரம் தேரில் இடம்பெற வேண்டிய உருவங்கள் இவை என சிங்கம், யானை, முதலை, பூதகணம், யக்சி, நாகம், பிரம்மா, விஷ்ணு, சண்முகன், சரஸ்வதி, கணபதி, துர்க்கை, தேவதை, சிறு தெய்வங்கள், அரசன், அர்ச்சகர்கள், பிராமணர், பக்தர்கள், துவாரபாலகர், கின்னரர், நாகர், கருடன் போன்றவற்றைக் கூறுகிறது.[3] தேர்களில் புராணக்கதை தொடர்பான சிற்பங்கள், குறிப்பாக சைவக் கோயில் எனில் சைவப் புராணக்கதைகளை உணர்த்தும் சிற்பங்களும், வைணவக் கோயில் எனில் வைணவப் புராணக்கதைகளை உணர்த்தும் சிற்பங்களும் பெரும்பாலும் செதுக்கப்பட்டுள்ளன. சில தேர்களில் சைவம், வைணவம் எனும் இரண்டு சமயம் தொடர்பான சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன.
- தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், வடுகர்பேட்டை எனும் ஊரிலுள்ள கிறித்தவ தேவாலயத்திற்கான தேரில் இயேசு பெருமான் வாழ்க்கையை விவரிக்கும் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.[4]
[தொகு] தேர்த் திருவிழா
தேர்த் திருவிழா என்பது பலதரப்பட்ட மக்களை ஒன்று சேர்க்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. ஊர்கூடித் தேர் இழுத்தால் தான் தேர்த் திருவிழாவினைக் கொண்டாட முடியும். இது ஒற்றுமையை மறைமுகமாக வலியுறுத்தும் விழா என்று கூட கொள்ளலாம்.
- ஒரிசாவில் உள்ள பூரி, தமிழ் நாட்டில் உள்ள திருவாரூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் நடக்கும் தேர்த்திருவிழாக்கள் மிகவும் புகழ் பெற்றவை. தமிழ்நாட்டின் பல கோயில்களில் தேர்த்திருவிழா கொண்டாடப்படுகிறது.
- தூத்துக்குடியில் பனிமய மாதா ஆலயத் தேர்த்திருவிழா 1805 ஆம் ஆண்டு முதல் பல ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.[5]
[தொகு] மேற்கோள்கள்
- ↑ டாக்டர் அம்பை மணிவண்ணன் எழுதிய கோயில் ஆய்வும் நெறிமுறைகளும் நூல், பக்கம்: 178
- ↑ P.K.Acharya, (Ed & Tr) Architecture of Manasara ch.43, 111-15.
- ↑ P.K.Acharya, (Ed & Tr) Architecture of Manasara
- ↑ டாக்டர் அம்பை மணிவண்ணன் எழுதிய கோயில் ஆய்வும் நெறிமுறைகளும் நூல், பக்கம்: 179
- ↑ முத்துக்கமலம் இணைய இதழில் வெளியான “தூய பனிமய அன்னைப் பேராலயம்” கட்டுரை
[தொகு] உசாத்துணை
- டாக்டர் அம்பை மணிவண்ணன் எழுதிய “கோயில் ஆய்வும் நெறிமுறைகளும்” நூல்