திருவள்ளுவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவள்ளுவர்
திருவள்ளுவரின் தற்காலத்தைய சித்தரிப்பு
பிறப்புஉறுதியாகத் தெரியவில்லை; அனேகமாக பொ.ஊ. 5-ம் நூற்றாண்டுக்கு முன்[a]
பிறப்பிடம் உறுதியாக தெரியவில்லை; அனேகமாக மயிலாப்பூர்[1][2]
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்
  • வள்ளுவர்
  • முதற்பாவலர்
  • தெய்வப்புலவர்
  • மாதானுபங்கி
  • நான்முகனார்
  • நாயனார்
  • பொய்யில்புலவர்
  • பொய்யாமொழிப்புலவர்
  • ஞானவெட்டியான்
  • செந்நாப்போதார்
  • தேவர்
  • பெருநாவலர்[3]
குறிப்பிடத்தக்க படைப்புகள்திருக்குறள்
வாழ்க்கைத்
துணை
வாசுகி
பகுதிதொண்டை நாடு (பண்டைய தமிழகம்)
பள்ளிஇந்திய மெய்யியல்
குறிப்பிடத்தக்க மாணவர்கள்ஏலேலசிங்கன்
மொழிபழந்தமிழ்
முக்கிய ஆர்வங்கள்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
அகிம்சை, அறம்
செல்வாக்குக்கு உட்பட்டோர்

திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச்சங்ககால புலவரான இவர் பொ.ஊ.மு 400க்கும் பொ.ஊ. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தார் எனக் கருதப்படுகிறது. தமிழ்நாட்டு அரசு இவர் பிறந்த ஆண்டாக பொ.ஊ.மு 31ஐ அறிவித்து அதன் அடிப்படையில் திருவள்ளுவர் ஆண்டை கணக்கிடுகிறது.[7]

கன்னியாகுமரியில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை

திருவள்ளுவர், திருக்குறளை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு, மதுரையில் அரங்கேற்றியதாகவும் நம்பப்படுகிறது.

சங்ககால புலவரான ஔவையார், அதியமான் மற்றும் பரணர் மூவரும் சமகாலத்தவராக இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இதன் மூலம் சங்ககால புலவர் மாமூலனாரே முதன் முதலில் திருவள்ளுவரைப் பற்றிய செய்தியைத் தருகிறார். ஆகையால் மாமூலனாருக்கு முன்பே ஔவையார் என்ற பெயருடைய மற்றொரு புலவர் இருந்திருக்கலாம் என்றே தெரியவருகிறது. மாமூலனார் பொ.ஊ.மு. 4 ஆம் நூற்றாண்டு செய்தியைக் கூறுவதால், திருவள்ளுவர் பொ.ஊ.மு. 5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவராக இருக்க வேண்டும். ஆனாலும் மாமூலனார் பாடல் இடம்பெற்றுள்ள திருவள்ளுவமாலை தொகுக்கப்பட்ட காலம் (பொ.ஊ. 11ஆம் நூற்றாண்டு) மிகவும் பிந்தையது என்பதால், சங்க கால மாமூலனாரும் திருவள்ளுவமாலையில் இடம் பெறும் மாமூலனாரும் ஒருவர் அல்லர் என்னும் கருத்து நிலவுகிறது. திருவள்ளுவர், அனைத்துத் தமிழர்களாலும் அறிந்து போற்றப்படுபவராகவும் தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழ்கிறார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை

வாழ்க்கை[தொகு]

திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் பொ.ஊ.மு. முதல் நூற்றாண்டில், தற்போதைய சென்னை நகரில் உள்ள, மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கிறித்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் பிறந்ததாகக் கூறப்படுகிறது. ஆங்கில ஆண்டுடன் முப்பத்தொன்றைக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு கிடைக்கும்.[சான்று தேவை] காவிரிப்பக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாகவும் அறியப்படுகிறது.[8]

மா. இராச மாணிக்கனார் தன் கால ஆராய்ச்சி நூலில் பல்வேறு சான்றுகள் மூலம் மணிமேகலை எழுதப்பட்ட காலம் பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு என்கிறார். சில ஆராய்ச்சியாளர்களின் கருத்துகளை தக்க சான்றுகளுடன் மறுத்தும் கூறியுள்ளார். சிலப்பதிகாரமும், மணிமேகலையும் வெவ்வேறு காலங்களில் எழுதப்பட்டது என்று பல்வேறு சான்றுகளை தமிழ் ஆர்வலர் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் முன் வைக்கின்றனர்.

சிறப்புப் பெயர்கள்[தொகு]

சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் திருக்கோயில்

திருவள்ளுவர் பல சிறப்புப் பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். அவை:

  • தேவர்
  • நாயனார்
  • தெய்வப்புலவர்
  • செந்நாப்போதர்
  • பெருநாவலர்
  • பொய்யில் புலவர்
  • பொய்யாமொழிப் புலவர்
  • மாதானுபங்கி
  • முதற்பாவலர்

புலவர்களின் பாராட்டுகள்[தொகு]

பல புலவர்கள் இணைந்து தொகுத்த, திருவள்ளுவமாலை என்னும் நூலின் மூலமாக இதன் சிறப்பினை அறியலாம்.

இவரை,

"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு"

என பாரதியாரும்,

"வள்ளுவனைப் பெற்றதால்
பெற்றதே புகழ் வையகமே"

என பாரதிதாசனும் புகழ்ந்து பாடியுள்ளனர்.

நூல்கள்[தொகு]

இது தவிர மருத்துவம் பற்றிய இரு நூல்களை இவர் வழிவந்த வள்ளுவரால் இயற்றப்பட்டதாக கருதப்படுகிறது. அவரையும் திருவள்ளுவர் என்றே அழைத்தனர். அவை:

இதற்கான காரணம் இந்த பாடல் வரிகள் தாம்[8]:

"அகமகிழுமம்பிகைப் பெண்ணருளினாலே
யவனிதனில் ஞானவெட்டியருள யானும்
நிகழ்திருவள்ளுவனயனாருரைத்தவேத
நிரஞ்சனமாநிலவுபொழிரவிகாப்பமே"

இவை சித்தர் இலக்கியத்தைச் சேர்ந்தவை.

இவை போக இன்னமும் சில அற்புதமான நூல்களின் ஆசிரியர் பெயர் வள்ளுவர் எனத் தெரிய வருகிறது.

அந்த நூல்களில் முக்கியமானவை:

இந்த சுந்தர சேகரம் ஒரு முக்கியமான சோதிட (ஜியோதிஷ) நூல் ஆகும். இதில், பாரதத்தின் பண்டைய சோதிட நூல்களும், அதன் சார்ந்து எழுதப்பட்ட நூல்களில் இல்லாத பல அரிய சூத்திரங்களும் உள்ளன.

திருவள்ளுவரும் சமயமும்[தொகு]

திருவள்ளுவரும் சமணமும்[தொகு]

திருவள்ளுவர், திருக்குறளில், குறிப்பிட்ட கடவுள்கள் குறித்து எந்த கருத்தும் கூறவில்லை. திருக்குறளில் கூறப்பட்டுள்ள அறக் கோட்பாடுகள், சமண சமய நீதி நெறிகளை நெருங்கி உள்ளதால், திருவள்ளுவர் ஒரு சமணராக இருந்திருக்கக் கூடும் என்றே வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள்.[9]

திருவள்ளுவரும் சைவமும்[தொகு]

திருவள்ளுவரை, திருவள்ளுவநாயனார் என சைவர்கள் அழைக்கின்றனர்.[10] இவரை சைவர் என்றும், இவருடைய திருக்குறளை, சைவ நூல் என்றும் சைவர்கள் நம்புகிறார்கள்.[11] திருவாவடுதுறை ஆதீனமாகிய, கொரடாச்சேரி சிவத்திரு வாலையானந்த அடிகள், 'திருவள்ளுவர் சித்தாந்த சைவர்' எனும் நூலை எழுதியுள்ளார். அதில், திருவள்ளுவரின் சமயம் சார்ந்த கருத்துகள் அனைத்தும் சைவ சித்தாந்தத்தினை விளக்குவதைப் பற்றி எழுதியுள்ளார்.

அழுக்காறாமை எனும் அதிகாரத்திலும்[12], ஆள்வினையுடைமை[13] எனும் அதிகாரத்திலும் திருவள்ளுவர், திருமகளையும் அவளுடைய மூத்தவளான தவ்வையையும் குறிப்பிடுகிறார். இந்த இரண்டு குறள்களிலுமே, தற்போது வழக்கில் இருக்கும் திருமகளின் தன்மையும், மூதேவியின் தன்மையும் ஒத்துப் போகின்றன.

கோயிலில் திருவள்ளுவர் சன்னதி
புட்லூர் அம்மன் கோயிலில் வள்ளுவர் சன்னதி

திருவள்ளுவர் கோயில்[தொகு]

திருவள்ளுவர் மயிலாப்பூரில், பிறந்த இடத்தில் மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில் என்பது கட்டப்பட்டுள்ளது. இக்கோயில், புகழ்பெற்ற முண்டகக் கண்ணியம்மன் கோயிலுக்கு அருகே அமைந்துள்ளது.

வள்ளுவரின் உருவம்[தொகு]

1960இல் இந்திய அரசு வெளியிட்ட, திருவள்ளுவர் நினைவு அஞ்சல் தலை
19ஆம் நூற்றாண்டில் திருவள்ளுவரின் உருவப்படம்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே திருவள்ளுவருக்கு உருவம் கொடுக்கும் முயற்சிகள் துவங்கிவிட்டன. பலர் திருவள்ளுவருக்கு உருவம் கொடுக்கும் செயல்களில் ஈடுபட்டனர். 1950களின் பிற்பகுதியில், தற்போது காணும் வெள்ளுடை தரித்த வள்ளுவரை வரைவதற்கான முயற்சிகள் துவங்கின. இந்த முயற்சியைத் துவங்கியவர் கவிஞர் பாரதிதாசன் ஆவார். அவர் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த இராமச்செல்வன் என்பவருடன் சேர்ந்துவந்து, ஓவியர் வேணுகோபால் சர்மாவைச் சந்தித்தார். மூன்று பேரும் சேர்ந்து திருவள்ளுவர் படத்தை உருவாக்க திட்டமிட்டனர். இதற்கான செலவுகளை இராமச்செல்வன் ஏற்றுகொண்டார்.[14]

பின்னர் வேணுகோபால் சர்மா தான் வரைந்த படத்தை முடித்த பிறகு, நாகேசுவரபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் இந்தப் படத்தை வைத்தார். அப்போது காமராஜர், கா. ந. அண்ணாதுரை, மு. கருணாநிதி, நெடுஞ்செழியன் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களும் இந்தப் படத்தைப் பார்வையிட்டு பாராட்டிச் சென்றனர்.

பிறகு இந்தப் படம், 1960இல் கா. ந. அண்ணாதுரையால், காங்கிரஸ் மைதானத்தில் வெளியிடப்பட்டது. பின்பு 1964 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில், வேணுகோபால் சர்மா வரைந்த, திருவள்ளுவரின் உருவத்தை அன்றைய துணைக் குடியரசுத் தலைவரான சாகிர் உசேன் திறந்து வைத்தார். வேணுகோபால் சர்மாவுக்கு பொன்னாடை போர்த்தி விருது வழங்கப்பட்டது. தமிழக முதல்வரான அண்ணாதுரை இவருக்கு "ஓவியப் பெருந்தகை" என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார்.

பிறகு இதே படம், இந்திய அரசால் அஞ்சல் தலையாகவும் வெளியிடப்பட்டது. 1995 இல் தஞ்சாவூரில் நடந்த எட்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை ஒட்டி இந்திய அரசால் இதே படத்தை அடிப்படையாக கொண்ட இந்திய இரண்டு ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது.

நினைவுச் சின்னங்கள்[தொகு]

இந்தியாவின் தென் கோடியில் மு.கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசு, 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை ஒன்று அவரின் நினைவாக நிறுவியுள்ளது. இது முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அமைந்துள்ளது. இந்த சிலையை வடிவமைத்தவர் சிற்பி கணபதி ஸ்தபதி என்பவர்.

சென்னையில் வள்ளுவர் நினைவாக வள்ளுவர் கோட்டம் என்ற நினைவிடம் ஒன்று தமிழ்நாடு அரசால் 1973-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. வள்ளுவர் இயற்றிய திருக்குறளின் 1330 குறள்களும், இங்குள்ள குறள் மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இங்கு திருவாரூர் கோயில் தேர் போன்ற தோற்றமுடைய நினைவுச் சின்னமும் உள்ளது.

1960இல் இந்திய அரசு திருவள்ளுவரின் நினைவாக ஒரு அஞ்சல் தலை வெளியிட்டது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

குறிப்புகள்[தொகு]

a. ^ வள்ளுவரின் காலம் பொ.ஊ.மு. நான்காம் நூற்றாண்டு முதல் பொ.ஊ. ஐந்தாம் நூற்றாண்டு என்று பாரம்பரியமாகவும் மொழியியல் பகுப்பாய்வு உள்ளிட்ட பல்வேறு பகுப்பாய்வு முறைகளின் அடிப்படையிலும் கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இவரது காலம் பொ.ஊ.மு. 31 என்று தமிழக அரசால் 1921-ல் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் வள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.[15]

மேற்கோள்கள்[தொகு]

Commons logo
Commons logo
இந்த தலைப்பைச் சார்ந்த மேற்கோள்கள் சில விக்கிமேற்கோள் திட்டத்தில் உள்ளன :திருவள்ளுவர்
  1. Waghorne, 2004, ப. 120–125.
  2. Muthiah, 2014, ப. 232.
  3. P. R. Natarajan 2008, ப. 2.
  4. Zvelebil 1973, ப. 157–171.
  5. Zvelebil 1975, ப. 123–127.
  6. 6.0 6.1 Lal 1992, ப. 4333–4334, 4341–4342.
  7. "Dalithmurasu – Children – Education – Study – Sports". www.keetru.com.
  8. 8.0 8.1 The Tamil Plutach: containing a summary account of the lives of the poets and poetesses of southern India and Ceylon from the earliest to the present times, with select specimens of their compositions, Page 102, Simon Casie Chitty – January 1, 1859. Ripley & Strong, printers – Publisher
  9. "Thiruvalluvar scholar".
  10. சைவ நற்சிந்தனைகள் - பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
  11. பெரியார். "keetru.com". www.keetru.com.
  12. அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும். பொருள்: பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.
  13. மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் தாளுளான் தாமரையி னாள். பொருள்: ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்.
  14. "திருவள்ளுவரின் உருவம் உருவானது எப்படி? இதுவரை எத்தனை உருவங்களில் அவர் வரையப்பட்டுள்ளார்?". பிபிசி தமிழ் (நவம்பர் 06, 2019)
  15. Arumugam, 2014, ப. 5, 15.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவள்ளுவர்&oldid=3886030" இலிருந்து மீள்விக்கப்பட்டது