செங்கிஸ் கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 186: வரிசை 186:
இதற்கிடையில், செங்கிஸ் கான் அவரது மூன்றாவது மகனான ஒகோடி கானை தனது இராணுவப் படையெடுப்புக்கு முன்னரே தனது வாரிசாக தேர்ந்தெடுத்தார். பின்னர் பின்வரும் கான்களும் அவரது நேரடி வம்சாவளியினராக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். மேற்கு நோக்கிச் சென்று குவாரசமியாவைப் போர்புரியும்போது, சின் சீனாவில் உள்ள அனைத்து மங்கோலியப் படைகளின் தளபதியாக செங்கிஸ் கான் தனது மிக நம்பகமான தளபதிகளில் ஒருவரான [[முகாலி]]யைத் தேர்ந்தெடுத்து இருந்தார்.
இதற்கிடையில், செங்கிஸ் கான் அவரது மூன்றாவது மகனான ஒகோடி கானை தனது இராணுவப் படையெடுப்புக்கு முன்னரே தனது வாரிசாக தேர்ந்தெடுத்தார். பின்னர் பின்வரும் கான்களும் அவரது நேரடி வம்சாவளியினராக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். மேற்கு நோக்கிச் சென்று குவாரசமியாவைப் போர்புரியும்போது, சின் சீனாவில் உள்ள அனைத்து மங்கோலியப் படைகளின் தளபதியாக செங்கிஸ் கான் தனது மிக நம்பகமான தளபதிகளில் ஒருவரான [[முகாலி]]யைத் தேர்ந்தெடுத்து இருந்தார்.


மிக உயரமான இரு புத்தர் சிலைகளைக் கொண்ட ஆப்கானித்தான் நகரமான பாமியானில் சகதை கானின் மகனான முத்துகன் போரில் உயிரிழந்தார். செங்கிஸ் கானின் கோபத்திற்கு அந்நகர் உள்ளானது. யாரும் அழவில்லை. மாறாக உணர்வுகளைக் கோபமாகப் போரில் காண்பித்தனர். வளமான அப்பகுதி பாலைவனமானது. மங்கோலியத் தாக்குதலுக்கு உண்டான அந்த இடம் இன்றும் உள்ளூர் அளவில் "சபிக்கப்பட்ட பகுதி" என்று அழைக்கப்படுகிறது.<ref>{{Cite book| last = மைக்கேல்| first = ப்ரவ்டின்| title = மங்கோலியப் பேரரசு அதன் வளர்ச்சி மற்றும் மரபு| url = https://archive.org/details/in.ernet.dli.2015.325365| publisher=ப்ராட்போர்ட் மற்றும் டிக்கன்ஸ்| year = 1940| page = 193-194| isbn = 978-1-138-53687-6}}</ref>
மிக உயரமான இரு புத்தர் சிலைகளைக் கொண்ட ஆப்கானித்தான் நகரமான பாமியானில் சகதை கானின் மகனான முத்துகன் போரில் உயிரிழந்தார். செங்கிஸ் கானின் கோபத்திற்கு அந்நகர் உள்ளானது. யாரும் அழவில்லை. மாறாக உணர்வுகளைக் கோபமாகப் போரில் காண்பித்தனர். வளமான அப்பகுதி பாலைவனமானது. மங்கோலியத் தாக்குதலுக்கு உண்டான அந்த இடம் இன்றும் உள்ளூர் அளவில் "சபிக்கப்பட்ட பகுதி" என்று அழைக்கப்படுகிறது.<ref>{{Cite book| last = மைக்கேல்| first = ப்ரவ்டின்| title = மங்கோலியப் பேரரசு அதன் வளர்ச்சி மற்றும் மரபு| url = https://archive.org/details/in.ernet.dli.2015.325365| publisher=ப்ராட்போர்ட் மற்றும் டிக்கன்ஸ்| year = 1940| page = 193-194| isbn = 978-1-138-53687-6}}</ref> அந்த இடத்திற்கு 'அலறல்களின் நகரம்' என்று மற்றொரு பெயரும் உண்டு.

[[படிமம்:Shahr-e-Gholghola.jpg|400px|thumb|ஆப்கானித்தானின் "அலறல்களின் நகரம்".]]


அரல் கடல் முதல் பாரசீகப் பாலைவனம் வரை உள்ள பகுதிகள் பயந்து கிடந்தது. கிசுகிசுப்பில் மட்டுமே தப்பிப்பிழைத்தவர்கள் "அந்த நபரைப்" பற்றி பேசினார்கள். சத்தமாகப் பேசப் பயந்தனர். ஒரு மங்கோலியக் குதிரைவீரன் தனி ஆளாக ஒரு கிராமத்திற்குச் சென்று பலரைக் கொன்றுவிட்டு அவர்களுடைய மாடுகளை ஓட்டிச் செல்லலாம். ஒருவர் கூட எதிர்த்து கைகூடத் தூக்க மாட்டார்களாம். அந்த அளவிற்கு எதிர்ப்பதற்கான சக்தியை மக்கள் இழந்திருந்தனர்.
அரல் கடல் முதல் பாரசீகப் பாலைவனம் வரை உள்ள பகுதிகள் பயந்து கிடந்தது. கிசுகிசுப்பில் மட்டுமே தப்பிப்பிழைத்தவர்கள் "அந்த நபரைப்" பற்றி பேசினார்கள். சத்தமாகப் பேசப் பயந்தனர். ஒரு மங்கோலியக் குதிரைவீரன் தனி ஆளாக ஒரு கிராமத்திற்குச் சென்று பலரைக் கொன்றுவிட்டு அவர்களுடைய மாடுகளை ஓட்டிச் செல்லலாம். ஒருவர் கூட எதிர்த்து கைகூடத் தூக்க மாட்டார்களாம். அந்த அளவிற்கு எதிர்ப்பதற்கான சக்தியை மக்கள் இழந்திருந்தனர்.

13:20, 11 செப்டெம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்

செங்கிஸ் கான்
(மங்கோலியர்களின் பெரிய கான்)
சீனாவின் பேரரசர் (இறப்பிற்குப் பிறகு)
செங்கிஸ் கானின் உருவப்படம் 14ம் நூற்றாண்டு யுவான் சகாப்த செருகேட்டில் சித்தரிக்கப்பட்டது; இப்போது தேசிய அரண்மனை அருங்காட்சியகம், தாய்பெய், தாய்வானில் அமைந்துள்ளது. அசல் பதிப்பு கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருந்தது. 1278இல் குப்லாய் கானால் நியமிக்கப்பட்டு மேற்பார்வையிடப்பட்ட ஒரு மங்கோலிய ஓவியனால் வரையப்பட்டது.
மங்கோலியப் பேரரசின் முதல் பெரிய கான்
ஆட்சிக்காலம்இளவேனிற்காலம் 1206 – ஆகஸ்ட் 18, 1227
முடிசூட்டுதல்மங்கோலியாவில் உள்ள ஆனன் ஆற்றினருகில் 1206ம் ஆண்டின் இளவேனிற்காலத்தில் நடந்த குறுல்த்தாய்
பின்னையவர்ஒகோடி கான்
பிறப்புதெமுசின்[குறிப்பு 1]
துணைவர்போர்ட்டே உசின் கதுன்
கஞ்சு கதுன்
குலான் கதுன்
எசுகென் கதுன்
எசுலுன் கதுன்
இசுகன் கதுன்
கஞ்சு கதுன்
அபிகா கதுன்
குர்பசு கதுன்
சகா கதுன்
மொகே கதுன்
மற்றும் பலர்
குழந்தைகளின்
பெயர்கள்
சூச்சி
சகதை கான்
ஒகோடி கான்
டொலுய்
மற்றும் பலர்
பெயர்கள்
ᠴᠢᠩᠭᠢᠰ ᠬᠠᠭᠠᠨ
செங்கிஸ் கான்
மங்கோலிய சிரில்லிக் எழுத்துக்கள்: Чингис хаан
சிங்கிஸ் கான் [குறிப்பு 2]
மொங்கோலிய எழுத்துமுறை (வலது):
சிங்கிஸ் ககான்[குறிப்பு 3]
மரபுசெங்கிசித்
தந்தைஎசுகெய்
தாய்ஓவலுன்
மதம்தெங்கிரி மதம்

செங்கிஸ் கான் அல்லது தெமுசின் போர்சிசின் (Genghis Khan; அண். 1162ஆகஸ்ட் 18, 1227) என்பவர் மங்கோலியப் பேரரசைத் தோற்றுவித்த மன்னராவார். கி.பி. 1206 இல் மங்கோலியத் துருக்கிய இனக்குழுக்களை இணைத்து மங்கோலியப் பேரரசை இவர் அமைத்தார். உலக வரலாற்றின் மிகவும் குறிப்பிடத்தக்க இராணுவத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.[5] இவரது இறப்புக்குப் பிறகு இவரது அரசு உலகின் மிகப்பெரிய ஒன்றிணைந்த நிலப் பேரரசு ஆனது. இவர் வடகிழக்கு ஆசியாவின் நாடோடிப் பழங்குடியினர் பலரை இணைத்து, அதன் மூலமாக ஆட்சிக்கு வந்தார். பேரரசு தாபகம் மற்றும் "செங்கிஸ் கான்" ஆகப் பறைசாற்றப்பட்ட பிறகு பெரும்பகுதி ஐரோவாசியாவை வெற்றிகொண்ட மங்கோலியப் படையெடுப்புளைத் தொடங்கினார். இவரது வாழ்நாளில் ஆரம்பிக்கப்பட்ட படையெடுப்புகள் கருப்பு சீனா, காக்கேசியா, குவாரசமியப் பேரரசு, மேற்கத்திய சியா மற்றும் சின் வம்சாவளியினருக்கு எதிரானவை உள்ளிட்டவையாகும். இந்தப் படையெடுப்புகளில் முக்கியமாகக் குவாரசமியா மற்றும் மேற்கத்திய சியாவின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல உள்ளூர் மக்கள் பெரிய அளவில் படுகொலை செய்யப்பட்டனர். இவரது வாழ்வின் இறுதிக்கட்டத்தில், மங்கோலியப் பேரரசானது மத்திய ஆசியா மற்றும் சீனாவின் கணிசமான பகுதிகளை ஆக்கிரமித்திருந்தது. 1 இலட்சம் படைவீரர்களைக் கொண்ட இவரது இராணுவம் 1,000 இலட்சம் மக்களைக் கொண்ட பேரரசை உருவாக்கியது.[6] ஏராளமான நிலப்பகுதிகளைக் கட்டுப்படுத்தியதன் காரணமாக செங்கிஸ் கான் உலக வரலாற்றிலேயே மிகப் பணக்கார மனிதராகவும் கருதப்படுகிறார்.[7]

செங்கிஸ் கான் இறப்பிற்கு முன், தனக்கு அடுத்த மன்னராக ஒகோடி கானை நியமித்தார். பின்வந்த காலங்களில் இவரது பேரன்கள் இவரது பேரரசைக் கானேடுகளாகப் பிரித்தனர்.[8] இவர் மேற்கு சியாவைத் தோற்கடித்த பின்னர் 1227ல் இறந்தார். இவர் மங்கோலியாவில் ஒரு அடையாளமில்லாத இடத்தில் புதைக்கப்பட்டார்.[9] இவரது சந்ததியினர் தற்கால சீனா, கொரியா, காக்கேசியா, மத்திய ஆசியா, கிழக்கு ஐரோப்பா மற்றும் தென்மேற்கு ஆசியாவின் கணிசமான பகுதிகள் ஆகியவற்றில் வெற்றிபெறுதல் அல்லது அடிமட்ட மாநிலங்களை உருவாக்குதல் மூலம் மங்கோலியப் பேரரசைப் பெரும்பகுதி ஐரோவாசியாவுக்கு விரிவாக்கினர். இந்தப் படையெடுப்புகளில் பல உள்ளூர் மக்கள் முன்பு போலவே பெரிய அளவில் மீண்டும் படுகொலை செய்யப்பட்டனர். இதன் விளைவாக, செங்கிஸ் கான் மற்றும் அவரது சாம்ராச்சியத்திற்கு உள்ளூர் வரலாற்றில் ஒரு பயபக்தியுடைய புகழ் உள்ளது.[10]

தனது இராணுவ சாதனைகளுக்கு அப்பால், செங்கிஸ்கான், பிற வழிகளிலும் மங்கோலியப் பேரரசை முன்னேற்றினார். தான் எழுத்தறிவற்றவராக இருந்தபோதிலும் மங்கோலிய சாம்ராச்சிய எழுத்து முறையாக உய்குர் எழுத்துமுறையைப் பின்பற்ற இவர் காரணமாக இருந்தார். மங்கோலிய சாம்ராச்சியத்தில் இவர் தகுதி அடிப்படையில் பதவி வழங்குவதையும் மத சகிப்புத்தன்மையையும் ஊக்குவித்தார். மேலும் வடகிழக்கு ஆசியாவின் நாடோடி பழங்குடியினரை ஐக்கியப்படுத்தினார். இன்றைய மங்கோலியர்கள் இவரை மங்கோலியாவின் தாபகத் தந்தையாகக் கருதுகின்றனர்.[11] இவரது படையெடுப்புகளின் கொடுமைத்தன்மை,[12] மற்றும் பலரை இனப்படுகொலை செய்த ஆட்சியாளராகக் கருதப்பட்டாலும், செங்கிஸ் கான் பட்டுப் பாதையை ஓர் ஒத்திசைவான அரசியல் சூழலின் கீழ்க் கொண்டுவந்ததன் மூலம் புகழப்படுகிறார். இது தொடர்பு மற்றும் வர்த்தகத்தை வடகிழக்கு ஆசியாவிலிருந்து முஸ்லிம் தென்மேற்கு ஆசியா, கிறித்தவ ஐரோப்பாவிற்குக் கொண்டுசேர்த்ததன் மூலம், மூன்று கலாச்சாரப் பகுதிகளின் எல்லைகளை விரிவுபடுத்தியது. 1995ல் அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை இவரை, கடந்த ஆயிரம் ஆண்டுகளின் மிக முக்கியமான மனிதராகத் தேர்ந்தெடுத்தது.[13]

இளமைப் பருவம்

வம்சம்

செங்கிஸ் கானின் ஒரு மார்பளவு சிலை மங்கோலியாவின் உலான்பாடரில் ஜனாதிபதி அரண்மனையில் ஒரு சுவரை அலங்கரிக்கிறது.

மங்கோலியர்கள் முதன்முதலில் சைபீரியக் காடுகளில் இருந்து மங்கோலியாவிற்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.[14] தெமுசின் தனது தந்தை வழியில் காபூல் கான், அம்பகை மற்றும் கமக் மங்கோலிய கூட்டமைப்புக்குத் தலைமை தாங்கிய ஹோடுலா கானுடன் தொடர்புடையவர். இவர்கள் அனைவரும் கி.பி. 900ல் வாழ்ந்த போடோன்சார் முன்ஹாக்கின் வழிவந்தவர்கள் ஆவர். கி.பி. 1161ல் சுரசன் சின் வம்சத்தவர் மங்கோலியர்களிடமிருந்து பிரிந்து தாதர்களுடன் இணைந்தபோது காபூல் கானைக் கொன்றனர்.[15]

போர்சிசின் தலைவரும், அம்பகை மற்றும் ஹோடுலா கானின் உறவினரும், தெமுசினின் தந்தையுமான எசுகெய், ஆளும் மங்கோலிய இனத்தின் தலைவராக உருவானார்.[16] அம்பகையின் நேரடிச் சந்ததியினரான தாய்சியுடு இனத்தவர் இந்த நிலைப்பாட்டை எதிர்த்தனர். கி.பி. 1161ம் ஆண்டுக்குப் பிறகு தாதர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்களானபோது, சின் தாதர்களிடமிருந்து கெரயிடுகளுக்குத் தங்கள் ஆதரவை மாற்றினர்.

பிறப்பு

இளவேனிற்காலம், ஆனன் ஆறு, மங்கோலியா. இதுவே தெமுசின் பிறந்து வளர்ந்த இடமாகும்.

சமகால எழுதப்பட்ட பதிவுகள் இல்லாததால் தெமுசினின் இளமைப் பருவம் பற்றி மிகக் குறைந்த தகவல்களே உள்ளன. இந்த காலகட்டத்தில் உள்ளார்ந்த சில ஆதாரங்களும் பெரும்பாலும் முரண்படுகின்றன.

தெமுசினின் முதல்பாதி பெயரான "தெமுர்" என்பது "இரும்பு சார்ந்த" எனப் பொருள்படும் மங்கோலிய வார்த்தையிலிருந்து பெறப்படுகிறது, அதேநேரத்தில் பின்பாதி பெயரான "சின்" என்பது "செயலைக்" குறிக்கிறது,[17] எனவே "தெமுசின்" என்பது "கொல்லர்" எனப் பொருள்படுகிறது.[18]

தெமுசின் அநேகமாக ஆசிய நாட்காட்டியின்படி குதிரை வருடமான கி.பி. 1162ல் [3] இளவேனிற்காலத்தில் (மார்ச் முதல் மே வரை) தற்கால மங்கோலியாவின் தலைநகரான உலான் பத்தூருக்கு அருகில், புர்கான் கல்துன் மலை, ஆனன், கெர்லென் ஆறுகளுக்கு அருகில் வடக்கு மங்கோலியாவின் தெலுன் போல்தக்கில் பிறந்திருக்கலாம். மங்கோலியர்களின் இரகசிய வரலாற்றின் அடிப்படையில் தெமுசின் பிறக்கும்போதே கையில் இரத்த கட்டி ஒன்றை இறுக்கிப் பிடித்தபடி பிறந்தார்.[தமிழ் 1] இது பிற்காலத்தில் அவர் மாபெரும் தலைவனாக வரவுள்ளதைக் குறித்ததாக அறியப்படுகிறது. இவர் கெரயிடு இன தொகுருலின் கூட்டாளியும், கமக் மங்கோலின் முக்கியமான கியாத் இனத் தலைவருமான எசுகெயின் இரண்டாவது மகன் ஆவார். தாய் ஓவலுனின் முதல் மகன் ஆவார்.[19] இரகசிய வரலாறு படி, தெமுசினின் தந்தை சற்று நேரத்திற்கு முன் பிடித்துக் கொண்டு வந்த தாதர் தலைவரான தெமுசின்-உகேயின் பெயரை தெமுசினுக்கு வைத்தனர்.

எசுகெய் போர்சிசின் (Боржигин) வம்சாவளியும் மற்றும் ஓவலுன் கொங்கிராடு பழங்குடியினரின் ஒரு பிரிவான ஒலகோனுடு இனத்தையும் சார்ந்தவராவர்.[20][21] மற்ற பழங்குடியினரைப் போலவே, அவர்களும் நாடோடிகளாகவே இருந்தனர்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் குடும்பம்

தெமுசினுக்கு கசர், கச்சியுன், தெமுகே என்ற மூன்று தம்பிகளும், தெமுலின் என்ற ஒரு தங்கையும், மற்றும் இவரது தந்தையின் முதல் மனைவி சோச்சிகலின் வழியில் பெக்தர் என்ற ஒரு அண்ணனும், பெலகுதை என்ற ஒரு தம்பியும் இருந்தனர். தெமுசினின் இளவயது வாழ்க்கை பற்றி சிறிய அளவு தகவல்களே உள்ளன. அத்தகவல்களும் தெமுசினின் தந்தை அவரை உயர்மதிப்பில் வைத்திருந்ததாகக் கூறவில்லை. இவரது தந்தை ஒருமுறை இடம்பெயரும்போது இவரை மறந்து விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். பின்னர் தாய்சியுடு இனத்தைச் சேர்ந்த தர்குதை என்பவர் இவரை மீட்டு இவரது குடும்பத்திடம் ஒப்படைத்தார். மங்கோலியாவின் மற்ற நாடோடிகளைப் போலவே தெமுசினின் ஆரம்ப கால வாழ்க்கையும் கடினமாக இருந்தது. இவர் தன் குழந்தைப்பருவத்தில் மொத்தமே சிலநூறு பேரையே பார்த்திருக்க வாய்ப்பிருந்துள்ளது. இவர் எழுத்தறிவு பெறவில்லை. எதிர்காலத்தில் இவர் செய்யப்போகும் சாதனைகளுக்கான எந்த அறிகுறியும் சிறுவயதில் இவரிடம் தென்படவில்லை. சிறுவயதில் இவர் எளிதில் அழுதுவிடக்கூடியவராக இருந்துள்ளார். இவரது தம்பி கசர் இவரைவிட மல்யுத்தத்தில் சிறந்தவர் மற்றும் சிறந்த வில்லாளி. இவரது ஒன்றுவிட்ட அண்ணன் பெக்தர் இவரிடம் அடிக்கடி வம்பிழுப்பதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். சிறுவயது தெமுசினுக்கு நாய்களிடம் பயம் இருந்துள்ளது என்பது இவரது தந்தையின் மூலம் நமக்குத் தெரியவருகிறது. ஆனால் மங்கோலிய நாய்கள் பொதுவாகவே மூர்க்கமானவை. மனிதர்களைக் கொல்லக்கூடிய தன்மை வாய்ந்தவை. இவை மனிதர்களைக் கொன்றதற்கான பதிவுகள் உள்ளன.[22] தெமுசினின் தந்தை இவரது 9ம் வயதில் இவரைவிட 1 வயது மூத்த கொங்கிராடு வம்சத்தைச் சேர்ந்த போர்ட்டே என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயித்தார். இவரைப் பெண் வீட்டில் ஒப்படைத்தார். தெமுசின் மண வயதான 12 வயது வரை, குடும்பத்தின் தலைவரான “தய் சச்சனுக்கு” பணிபுரிவதற்காக அங்கு தங்கினார். திருமணம் ஒருபக்கம் இருந்தாலும் இவரது தந்தை இவரை விட்டு விலக விரும்பியதாலேயே இவரை தொலைதூரத்திற்குக் கூட்டிச் சென்றதாகத் தோன்றுகிறது.

வீட்டிற்குச் செல்லும் வழியில், அவரது தந்தை நீண்ட கால மங்கோலிய எதிரிகளான தாதர்களைச் சந்திக்க நேரிட்டது. அவர்கள் அவரை உணவு உண்ண வருமாறு அழைத்து விஷம் வைத்துக் கொன்றனர். இதனை அறிந்து வீட்டிற்கு விரைந்த தெமுசினையும் இவரது குடும்பத்தையும், பெரிய ஆண் இல்லாத குடும்பம் என்ற காரணத்தால் மற்ற குடும்பங்கள் ஒதுக்கி வைத்தன.[23] நியாயம் கேட்ட ஒரு முதியவர் ஈட்டியால் முதுகில் குத்தப்படுகிறார். அவரைக் கண்ட தெமுசின் செய்வதறியாது அழுகிறான். இவர்களை ஒதுக்கிவைத்ததற்கு அப்பழங்குடியினரால் அதிகமான 9 பேர்களுக்கு உணவளிக்க முடியாது என்ற ஒரு காரணமும் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தெமுசின் தனது தந்தையை மரணப் படுக்கையில் காணுதல்.

அடுத்த பல ஆண்டுகளுக்கு, இவரது குடும்பம் வறுமையில் வாழ்ந்தது. பெரும்பாலும் காட்டுப் பழங்கள், காளைப் பிரேதங்கள், மர்மோட்கள், மற்றும் தெமுசினும் அவரது சகோதரர்களும் கொன்ற சிறு விலங்குகள் உள்ளிட்டவற்றை உண்டு வாழ்ந்தது. அங்கு தான் சமுக்காவின் நட்பு தெமுசினுக்குக் கிடைத்தது. செம்மறியாட்டின் கணுக்கால் எலும்புகளைக் கொண்டு ஆடப்படும் ஒரு வகை தாயம் மற்றும் எலும்புகளைக் காலுக்கு அடியில் கட்டிக் கொண்டு செய்யும் சுருள்வு போன்ற பனிச்சறுக்கு ஆகிய இரண்டு விளையாட்டுக்களே தெமுசின் குழந்தைப் பருவத்தில் விளையாண்டதாக நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது ஆகும். இந்நிலையில் தெமுசினின் அண்ணன் பெக்தர் குடும்பத்தின் மூத்த ஆண் என்ற காரணத்தால் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தினான். மேலும் ஓவலுனை (அவனது சொந்தத் தாயாக இல்லாத காரணத்தால்) மணம் முடிக்கும் தகுதி பெற்றான்.[24] தனது தந்தையின் இடத்தில் இன்னொருவனை வைத்துப் பார்க்கத் தெமுசினால் இயலவில்லை. ஒருமுறை தெமுசின் வேட்டையாடிய வானம்பாடியை பெக்தர் எடுத்துக்கொண்டான். மற்றொரு முறை இவர் பிடித்த மீனை எடுத்துக்கொண்டுள்ளான். குடும்பம் உணவின்றித் தவித்த நேரத்தில் இவ்வாறு பெக்தர் செய்தது தெமுசினின் கோபத்தை அதிகப்படுத்தியது. தெமுசின் பின்பக்கம் இருந்தும் இவரது தம்பி கசர் முன்பக்கம் இருந்தும் அம்பெய்து பெக்தரைக் கொன்றனர். ஆச்சரியப்படும் விதமாக பெக்தரின் தம்பி பெலகுதை எந்த எதிர்ப்பும் காட்டாமல் கடைசிவரை தெமுசினுக்கு விசுவாசமாக இருந்தார்.

படிமம்:Bekter.jpg
பெக்தரை கசர் கொல்லுதல். பின்புலத்தில் தெமுசின்.

கி.பி. 1177ல் தப்பி ஓடும் தெமுசின் 9 நாட்களுக்கு உணவின்றி தெர்குன் உயர்நிலத்தில் உள்ள காடுகளில் அலைந்து திரிகிறார். "எனக்கென ஒரு பெயரை உருவாக்காமல் எவ்வாறு இறப்பது?" என அவருக்குத் தோன்றுகிறது. காட்டில் இருந்து வெளியே வருகிறார். தனது தந்தையின் முன்னாள் கூட்டாளிகளான தாய்சியுடுகளால் அடிமையாக கடத்தப்பட்டு, கேங்கில் (குற்றவாளியின் கழுத்தில் தண்டனையாக சுமத்தப்படும் பலகை) பிணைக்கப்படுகிறார். அங்கிருந்து ஓர் இரவில் சோர்கன் சீரா என்ற இரக்க குணமுடைய ஒரு காவலாளியின் உதவியால் கூடாரத்திலிருந்து விடுவிக்கப்பட்டு ஓர் ஆற்றுப் பிளவில் பதுங்கித் தப்புகிறார். இந்தத் தப்பிப்பு தெமுசினுக்கு நற்பெயரைக் கொடுத்தது. விரைவில், செல்மே மற்றும் பூர்ச்சு அவருடன் இணைந்தனர். அவர்கள் மற்றும் அக்காவலாளியின் மகனான சிலவுன் இறுதியில் செங்கிஸ்கானின் தளபதிகள் ஆகினர்.

சிறுவன் தெமுசின் அடிமைப்படுத்தப்படுதல்.

தனது 13ஆம் வயதில் தனது தந்தையின் பதவிக்கு தெமுசின் வந்தபோது அவருக்குக் கிடைத்தது ஆனன் ஆற்றங்கரையில் தரிசான ஒரு சிறு நிலம் தான்.[25] அந்நேரத்தில் மங்கோலியாவின் எந்தவொரு பழங்குடியினக் கூட்டமைப்பும் அரசியல்ரீதியாக இணைக்கப்படாமல் இருந்தன. நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் தற்காலிக கூட்டமைப்பை உறுதிப்படுத்தப் பயன்பட்டன. இத்தகைய கடினமான அரசியல் சூழ்நிலை, பழங்குடியினப் போர், திருட்டு, இராணுவ படையெடுப்புகள், ஊழல் மற்றும் தெற்கிலுள்ள சீனா போன்ற வெளிநாடுகளின் இடையூறுடன் நடைபெறும் கூட்டமைப்புகளுக்கு இடையேயான பழிவாங்கல் போன்றவற்றைக் கண்டு தெமுசின் வளர்ந்தார்.[தமிழ் 2] தெமுசினின் தாய் ஓவலுன் பல பாடங்களை அவருக்குக் கற்றுக் கொடுத்தார். முக்கியமாக மங்கோலியாவின் சிரத்தன்மைக்குத் தேவையான வலிமையான கூட்டமைப்புகளை ஏற்படுத்தல் போன்றவை.

போர்ட்டேயுடன் திருமணம்

ஏற்கனவே தன் தந்தை நிச்சயித்தபடி இரு பழங்குடியினருக்கு இடையே இணைப்பை ஏற்படுத்த தனது 16வது வயதில் கொங்கிராடு பழங்குடியினத்தைச் சேர்ந்த போர்ட்டேயை மணந்தார். திருமணம் நடந்த சில நாட்களில், எசுகெய் ஓவலுனை அபகரித்ததற்குப் பழிவாங்க மெர்கிடு பழங்குடியினர் போர்ட்டேயைக் கடத்தினர். தெமுசின் சமுக்கா மற்றும் கெரயிடு பழங்குடியைச் சேர்ந்த தொகுருல் கானின் உதவியுடன் போர்ட்டேயை மீட்டார். 9 மாதங்கள் கழித்து போர்ட்டே, ஒரு மகனைப் பெற்றெடுத்தார். அக்குழந்தையின் உண்மையான தந்தை யார் என்ற குழப்பம் ஏற்பட்டது. தெமுசின் அக்குழந்தைக்கு சூச்சி (மங்கோலிய மொழியில் விருந்தாளி) என்று பெயரிட்டு அரவணைத்துக் கொண்டார்.[26] செங்கிஸ் கான் தனக்குப் பிறகு சூச்சியைத் தான் பெரிய கானாக்க விரும்பினார். ஆனால் இரண்டாவது மகன் சகதையின் எதிர்ப்பு காரணமாக அது நடைபெறவில்லை. பாரம்பரியப்படி செங்கிஸ் கான் பல திருமணங்கள் செய்து கொண்ட போதிலும் போர்ட்டேயே கடைசிவரை அவரது பேரரசியாக வாழ்ந்தார்.[27]

படிமம்:Temujin & Borte.jpg
போர்க்களத்தில் தெமுசினை போர்ட்டே அடையாளம் காணுதல்.

மேலும் போர்ட்டேவுக்கு சகதை (1187–1241), ஒகோடி (1189–1241), மற்றும் டொலுய் (1190–1232) என மூன்று ஆண் குழந்தைகளும், கொசின், அழகை, அல்-அல்துன், செச்செயிசென், துமேலுன், டொலை என 6 பெண் குழந்தைகளும் உண்டு. செங்கிஸ் கானுக்கு மற்ற மனைவிகள் மூலம் குழந்தைகள் பிறந்தபோதிலும் அவர்கள் அரசாள்வதில் இருந்து ஒத்துக்கிவைக்கப்பட்டனர். அவர்கள் செங்கிஸ் கானுக்கு ஆட்சியில் உதவிகரமாக இருந்தபோதிலும் அவர்கள் மொத்தம் எத்தனை பேர், அவர்களின் பெயர் என்ன என்பது பற்றி தெளிவான தகவல்கள் இல்லை.[28]

மங்கோலியக் கூட்டமைப்புகளை இணைத்தல்

கிதான் இராச்சியத்தின்போது (907-1125) மங்கோலியப் பழங்குடியினரின் எல்லைகள்

13ம் நூற்றாண்டில் சீனாவுக்கு வடக்கில் இருந்த மங்கோலியப் பீடபூமியானது நைமர்கள், மெர்கிடுகள், தாதர்கள், கமக் மங்கோலியர்கள் மற்றும் கெரயிடுகள் போன்ற பல்வேறு பழங்குடியினக் கூட்டமைப்புகளால் ஆளப்பட்டது. இவர்கள் எப்பொழுதும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். சூறையாடல்கள் மற்றும் பழிவாங்கல்கள் தொடர்ந்து நடைபெற்றது.

ஆரம்பகால முயற்சிகள்

தெமுசின் தனது தந்தையின் ஆன்டாவான (இரத்த சகோதரன்) தொகுருல் கானிடம்(சீன மொழியில் வாங் கான்) தானே ஒரு நட்பாளராக (மற்ற ஆதாரங்களின்படி ஒரு அடிபணிந்தவராக) முன்வந்து சேர்ந்தார். தொகுருல் கெரயிடு இன மக்களின் கான் ஆவார். இவர் சீனப் பட்டமான "வாங் கான்" (அல்லது "ஓங் கான்") என்ற பெயராலும் அறியப்படுகிறார். இப்பட்டத்தை சுரசன் சின் வம்சத்தவர் (1115–1234) கி.பி. 1197ல் இவருக்கு அளித்தனர். இவ்வாறு தான் தெமுசின் தனது இராணுவ வாழ்க்கையைத் தொடங்கினார். இக்கூட்டு மெர்கிடுகள் போர்ட்டேயை கடத்தியபோது ஏற்பட்டதாகும். தெமுசின் தொகுருல் கானிடம் உதவி கூறியபோது அவர் தனது கெரயிடு இனத்தை சேர்ந்த 20,000 படைவீரர்களைக் கொடுத்து உதவினார். மேலும் தெமுசினின் பால்யகால நண்பரும், சதரான் இனத்தின் கானுமாகிய சமுக்காவையும் இதில் சேர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.[29]

இப்போரில் போர்ட்டே மீட்கப்பட்டார். மெர்கிடுகள் படுதோல்வி அடைந்தனர். எனினும் இறுதியில் தெமுசினுக்கும் சமுக்காவுக்கும் இடையில் பகை ஏற்பட்டது. இதற்குமுன் அவர்கள் இருவரும் இரத்த சகோதரர்களாக (ஆன்டா) இருந்தனர். ஒருவருக்கொருவர் உண்மையாக எக்காலத்துக்கும் இருப்பதென சபதமெடுத்திருந்தனர்.

சமுக்காவுடன் பகை

பிரிந்த பிறகு இருவரும் தத்தமது வழியில் முன்னேறத் தொடங்கினர். இருவரும் எதிரிகளாக ஆயினர். சமுக்கா குடும்பப் பின்னணியை வைத்து மற்றவர்களுக்கு பதவிகளைக் கொடுக்க, தெமுசினோ குடும்பப் பின்னணியற்ற தகுதி வாய்ந்தவர்களுக்கு பதவி கொடுத்தார். தெமுசின் எல்லாவிதமான, முக்கியமாக அடித்தட்டு மக்களை ஈர்க்கத் தொடங்கினார்.[30] எல்லையற்ற நீல வானமானது இந்த உலகத்தை தெமுசினுக்காக ஒதுக்கி வைத்திருப்பதாக ஷாமன் கொகோசு தெப் தெங்கிரி பிரகடனப்படுத்தினார். தெமுசினின் சக்தி அதிகரிக்கத் தொடங்கியது.[31] கி.பி. 1186ல் மங்கோலியர்களின் கானாக தெமுசின் தேர்ந்தெடுக்கப்பட்டார். தெமுசினின் வளர்ச்சியால் அச்சுறுத்தலுக்குள்ளான சமுக்கா, கி.பி. 1187ல் 30,000 படைவீரர்களுடன் அவரைத் தாக்கினார். தெமுசின் தனது ஆதரவாளர்களைத் திரட்டி தாக்குதலுக்கு எதிராகத் தற்காத்துக் கொள்ள முயன்றார். எனினும் தலன் பல்சுத் எனுமிடத்தில் நடைபெற்ற போரில் தோற்கடிக்கப்பட்டார்.[31][32] வென்றதோடு நில்லாமல் சமுக்கா இப்போரில் பிடிபட்ட சுமார் 70 கைதிகளை ஈவு இரக்கமின்றி நீர்க் கொப்பரையில் அமுக்கினான்.[33] இந்நிகழ்வு பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமுக்காவைப் பின்பற்ற நினைத்தவர்கள் அவனிடம் இருந்து விலகினர். தெமுசினின் ரட்சகர் தொகுருல் கான் காரா கிதைக்குச் சென்று பதுங்கினார்.[34] இதன்பிறகு 10 ஆண்டுகளுக்கு தெமுசினின் வாழ்க்கை பற்றி சரியான தகவல்கள் இல்லை. ஏனெனில் இக்காலகட்டத்தைப் பற்றி வரலாற்றில் பதிவுகள் எதுவும் எழுதப்படவில்லை.[34]

ஆட்சிக்குத் திரும்புதல்

கி.பி. 1197ம் ஆண்டு சின் வம்சத்தினர் கெரயிடுகள் மற்றும் மங்கோலியர்களுடன் சேர்ந்து தங்களது முன்னாள் கூட்டாளிகளான தாதர்களைத் தாக்கினர். தெமுசின் இத்தாக்குதலின் ஒரு பகுதியை ஏற்று நடத்தினார். போரின் முடிவில் தெமுசினும், தொகுருலும் தங்களது பழைய பதவிக்கு சின் வம்சத்தவரால் உயர்த்தப்பட்டனர்.[34] தொகுருலுக்கு ஓங் கான் என்ற பட்டமும், தெமுசினுக்கு அதைவிட குறைந்த மதிப்புடைய சவுத் குரி (எல்லைக் காவலன்) என்ற பட்டமும் சின் வம்சத்தவரால் வழங்கப்பட்டது.[35]

கி.பி.1200ல் மங்கோலியக் கூட்டமைப்புக்கு (பொதுவாக மங்கோலியர்கள்) மேற்கில் நைமர்களும், வடக்கில் மெர்கிடுகளும், தெற்கில் தாங்குடுகளும், கிழக்கில் சின்களும் முக்கிய எதிரிகளாயிருந்தனர்.

தாதர்களுக்கு எதிராக சின் வம்சத்தவர் உடன் செங்கிஸ் கான் செய்த கூட்டணி தொடர்பான சுரசன் கல்வெட்டு (கி.பி. 1196), மங்கோலியா.

தெமுசின் தனது ஆட்சியிலும், எதிரிப் பழங்குடியினரை வெல்லும்போதும் பல வழிகளில் மங்கோலியப் பழக்கவழக்கங்களை உடைத்தார். குடும்ப உறவுகள் அடிப்படையில் பதவி வழங்காமல், தகுதி மற்றும் விசுவாசத்தின் அடிப்படையில் பதவிகளை வழங்கினார்.[36] விசுவாசமானவர்களுக்கும், யசா சட்டங்களை மதிக்கும் மக்களுக்கும், போர்வீரர்களுக்கும் எதிர்காலத்தில் போர்புரிந்து அதன்மூலம் கிடைக்கும் செல்வத்தைப் பிரித்து அளிப்பதென தெமுசின் உறுதியளித்தார். எதிரிப் பழங்குடியினரை தோற்கடித்தபோது அவர்களது படைவீரர்களை விரட்டிவிடவோ, மக்களை விட்டுவிடவோ செய்யவில்லை. பதிலாக வெல்லப்பட்ட பழங்குடியினரை தனது பாதுகாப்பு வளையத்திற்குள் வரவழைத்தார். அவர்களை தனது இனத்துடன் இணைத்தார். தனது தாயும் போரில் அனாதையான மற்ற இனக் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்குமாறு செய்தார். செங்கிஸ் கானுக்கு அனாதைக் குழந்தைகள் மேலான அனுதாபம் அவரது குழந்தை பருவ அனுபவங்கள் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இத்தகைய 4 குழந்தைகளின் பெயர்கள் நமக்குத் தெரியவருகிறது. அவர்கள் குகு (மெர்கிட் போர்), கொகோசு (ஷாமன் கொகோசு அல்ல) (தாய்சியுட் போர்), சிகி குதுக்து (தாதர் போர்) மற்றும் போராகுல் (சுரசன் போர்). இத்தகைய அரசியல் புதுமைகள் காரணமாக தோல்வியுற்றவர்களுக்கு மத்தியில் கூட தெமுசின் மேல் விசுவாசம் பெருகியது. தெமுசினின் பலம் ஒவ்வொரு வெற்றியின் முடிவிலும் அதிகமாகியது.[36]

படிமம்:Hoelun Ujin.jpg
தனது வளர்ப்புக் குழந்தைகளான கொகோசு, குகு, போரோகுல் மற்றும் சிகி குதுகுவுடன் தெமுசினின் தாய் ஓவலுன் .

தொகுருலுடன் பகை

தொகுருலின் மகனான செங்குமுக்கு தெமுசின் தனது தந்தையுடன் நட்பில் இருப்பது பொறாமையை ஏற்படுத்தியது. அவன் தெமுசினைக் கொல்ல திட்டமிட்டான். தொகுருல் பல தடவை தெமுசினால் காப்பாற்றப்பட்டிருந்தும் தனது மகன் பேச்சைக் கேட்க ஆரம்பித்தார்.[37] தெமுசினுடன் ஒத்துழைக்க மறுத்தார். செங்குமின் எண்ணத்தை அறிந்த தெமுசின் அவனையும், அவனது விசுவாசிகளையும் போரிட்டுத் தோற்கடித்தார்.

செங்கிஸ் கானும், தொகுருல் கானும். 15ம் நூற்றாண்டு ஜமி அல்-தவரிக் கையெழுத்துப்படியில் இருந்து ஒரு வரைபடம்.

ஒருமுறை தெமுசின் தனது மகன் சூச்சிக்கு தொகுருலின் மகளையும், தனது மகளுக்கு செங்குமின் மகனையும் கேட்டார். இதற்காக அனுப்பப்பட்ட தெமுசினின் தூதுவர்களிடம் தெமுசின் தன் வேலைக்காரன் என்றும், தன் மகளை நெருப்பில் எரித்தாலும் எரிப்பேனே தவிர அவன் மகனுக்குக் கொடுக்க மாட்டேன் என்றும் தொகுருல் கூறினார். தான் எவ்வளவு விசுவாசமாக இருந்தபோதிலும் தொகுருல் தன்னை சமமாக நடத்தாததை தெமுசின் உணர்ந்தார்.[38] இதன் காரணமாக இருவருக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டது. பின் போரானது. தொகுருல் ஏற்கனேவே தெமுசினை எதிர்த்த சமுக்காவுடன் இணைந்தார். எனினும் தொகுருலுக்கும், சமுக்காவுக்கும் இடையிலான பிரச்சினை மற்றும் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையிலான நட்பு இனங்கள் அவர்களை விட்டுப்பிரிந்த காரணம் போன்றவற்றால் போரில் அவர்களுக்குத் தோல்வியே கிடைத்தத்து. சமுக்கா போர் நடந்து கொண்டிருந்த பொழுது தப்பித்துச் சென்றான். இப்போரின் தோல்வி கெரயிடு இனத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. இறுதியில் இவ்வினம் கலைக்கப்பட்டது.

தெமுசினுக்கு எதிரிகளான நைமர்களிடம் சமுக்காவும் அவனது படையினரும் தஞ்சமடைந்தனர். சமுக்காவை அவரது சதரன் இனம், நைமர்கள், தாய்சியுடு, இகிரேஸ், கொரோலாஸ், சல்சியுது, தர்பது, சுல்துஸ், கடசின், பெசுது, மெர்கிடு, ஒயிரடு மற்றும் தாதர்கள் ஆகிய 13 இனப் பழங்குடியினர் ஆதரித்தனர். கி.பி.1201ல் அரசவையான குறுல்த்தாய் சமுக்காவிற்கு காரா கிதையின் ஆட்சியாளர்களால் பயன்படுத்தப்பட்ட பட்டமான குர் கான் ("பிரபஞ்ச ஆட்சியாளர்") பட்டத்தை வழங்கியது. கி.பி. 1204ம் ஆண்டின் (எலி வருடம்) [39] இலையுதிர்காலத்தில் தெமுசின் கெர்லான் ஆற்றின் ஓரத்திலே கென்டீ மலைகளை நோக்கித் தனது படைகளுடன் பயணித்தார். மங்கோலியர்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருந்தனர். பயணத்தின் காரணமாக வெகுவாகக் களைத்திருந்தனர். இதற்காகச் செங்கிஸ் கானின் ஒரு யோசனை செய்தார். இரவு நேரத்தில் குளிருக்காக 1 நெருப்பிற்குப் பதிலாக 5 நெருப்புகள் மூட்டப்பட்டன. மலை உச்சியில் பாதுகாப்பிற்காக நின்ற நைமர்களின் படைவீரர்கள் இதைக் கண்டனர். தங்கள் தலைவர் "தயங்"கிடம் வானத்திலுள்ள விண்மீன்களை விட அதிகமான எண்ணிக்கையில் நெருப்புகளை மூட்டி மங்கோலியர்கள் குளிர் காய்வதாகக் கூறினர். தயங் அவசரமாக விலகிக் கொள்ள முடிவெடுத்தார்.[40] உலகின் 2.4 கோடி சதுர கிலோமீட்டர் (அந்நேரத்தில் மனிதன் கண்டறிந்ததில் 3ல் 1 பங்கு உலகம்) பரப்பளவுள்ள பகுதியை வெல்லப் போகும் அந்தப் படையை சந்தித்த முதல் நபர் சமுக்காதான். இப்போரில் தான் சமுக்கா, தெமுசினின் 4 வேட்டை நாய்களைப் பற்றி "தயங்"கிற்குக் கூறினார். அவர்கள் செபே, செல்மே, சுபுதை மற்றும் குப்லாய் (குப்லாய் கான் அல்ல) ஆவர். பல ஆண்டு யுத்தங்களில் பலர் சமுக்காவை விட்டுப் பிரிந்தனர். கி.பி. 1206ல் சமுக்கா தனது சொந்த படைவீரர்களால் தெமுசினிடம் காட்டிக் கொடுக்கப்பட்டார்.

படிமம்:Jelme & Genghis Khan.jpg
செல்மே மற்றும் செங்கிஸ் கான்.

இரகசிய வரலாற்றின் படி தெமுசின் மீண்டும் சமுக்காவுடன் நட்புக்கொள்ள விரும்பினார். தலைவனைக் காட்டிக் கொடுத்த விசுவசமற்றவர்களுக்கு தனது படையில் இடமில்லை என்று கூறி தெமுசின் அப்படைவீரர்களைக் கொன்றார். நட்பை ஏற்றுக்கொள்ள மறுத்த சமுக்கா, ஒரு வானத்தில் ஒரு சூரியன் தான் இருக்க முடியும் என்று கூறி தனக்கு நல்ல இறப்பை வேண்டினான். வழக்கப்படி இரத்தம் தரையில் விழாமல் இறக்க வேண்டும். முதுகெலும்பை உடைத்ததன் மூலம் சமுக்கா இறந்தார். தெமுசினின் வீரர்களைக் கொப்பரையில் அமுக்கிக் கொன்றிருப்பதற்காக அறியப்பட்டிருந்தும், சமுக்கா இவ்வகையிலான இறப்பை விரும்பினார்.[41]

நாடோடி மன்னனாக, செங்கிஸ் கானாக முடிசூட்டல்

1207இல் மங்கோலியப் பேரரசு.

நைமர்களுடன் இணைந்த மெர்கிடுகள் தெமுசினின் பாதுகாவலர் சுபுதையால் தோற்கடிக்கப்பட்டனர். சுபுதை எதிர்காலத்தில் செங்கிஸ் கானின் வெற்றிகரமான தளபதிகளுள் ஒருவரானார். நைமர்களின் தோல்வி தெமுசினை மங்கோலிய ஸ்டெப்பியின் ஒரே ஆட்சியாளராக்கியது. அனைத்து கூட்டமைப்புகளும் தெமுசினின் கீழ் வந்தன அல்லது ஒன்றிணைக்கப்பட்டன.

செங்கிஸ் கானின் வாழ்க்கையானது நம்பிக்கை துரோகங்களாலும், சூழ்ச்சிகளாலும் நிறைந்திருந்தது. இதற்கு உதாரணமாக அவரது முன்னாள் நண்பனான சமுக்காவுடன் (இவரும் மங்கோலியப் பழங்குடியினருக்குத் தலைவராக முயற்சித்தார்) ஏற்பட்ட மோதல், தொகுருலுடன் (தெமுசின் மற்றும் அவரது தந்தையின் நண்பர்) ஏற்பட்ட மோதல், அவரது மகன் சூச்சி, தெமுசினுக்கும் அவரது தம்பி கசருக்கும் இடையே விரிசல் ஏற்படுத்த நினைத்த முக்கியமான ஷாமன் தெங்கிரியுடன் ஏற்பட்ட மோதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவரது இராணுவ யுக்திகள் தகவல் சேகரிப்பிலும், எதிரிகளின் எண்ணங்களை யூகிப்பதிலும் கவனம் செலுத்தின. இதற்கு அவர் ஒற்றர்களையும், யாம் வழி அமைப்புகளையும் பயன்படுத்தினார். இவர் எதையும் எளிதில் கற்றுக் கொண்டார். தான் எதிர்கொண்ட எதையும் முக்கியமாக முற்றுகைப் போர்முறையைச் சீனர்களிடம் இருந்து கற்றார். இவர் இரக்கமற்றவராக தனது செயல்களில் விளங்கினார். தாதர்களின் படையினரில் குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் உள்ள ஆண்களை அச்சாணிக்கு எதிராக அளவிடும் முறை மூலம் தேர்ந்தெடுத்துக் கொன்றார்.[42]

இதன் காரணமாக அவர் கி.பி. 1206ல் மெர்கிடுகள், நைமர்கள், மங்கோலியர்கள், கெரயிடுகள், தாதர்கள், உய்குர்கள் மற்றும் பல சிறு பழங்குடியினரை தனது ஆட்சியின் கீழ் இணைத்தார் அல்லது அடிபணியவைத்தார். இது ஒரு மகத்தான சாதனையாக இருந்தது. இதன் மூலம் முன்னர் போரிட்டுக் கொண்டிருந்த பழங்குடிகளை இணைத்து ஒரே அரசியல் மற்றும் இராணுவ சக்தியாக்கினார். இந்த கூட்டமைப்பில் இருந்தவர்கள் ஒட்டுமொத்தமாக மங்கோலியர்கள் என்று அழைக்கப்பட்டனர். மங்கோலியத் தலைவர்களின் அரசவையான குறுல்த்தாயில் தெமுசின் ஒன்றிணைக்கப்பட்ட பழங்குடியினரின் கான் ஆக ஏற்றுக் கொள்ளப்பட்டார். "செங்கிஸ் கான்" என்ற புதிய பட்டம் பெற்றார். இதன் பொருள் பிரபஞ்சத்தின் ஆட்சியாளர் என்பதாகும்.[43] ககான் எனும் பட்டமானது இவரது இறப்பிற்குப் பிறகு இவரின் பின்வந்த ஒகோடி கானால் இவருக்கு வழங்கப்பட்டது. ஒகோடி கானுக்கும் இப்பட்டம் வழங்கப்பட்டது. இறப்பிற்குப் பிறகு ஒகோடி கான் யுவான் அரசமரபைத் தோற்றுவித்தவராக அறிவிக்கப்பட்டார்.

மதம்

செங்கிஸ் கான் தெங்கிரி மதத்தைப் பின்பற்றினார். எனினும் மற்ற மதங்களிடம் சகிப்புத்தன்மையுடன் நடந்து கொண்டார். மற்ற மதங்களில் காணப்படும் தத்துவங்கள் மற்றும் தருமப் பாடங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டார். பௌத்தத் துறவிகள் (ஜென் துறவி ஹையுன் உட்பட), இசுலாமியர்கள், கிறிஸ்தவர்களிடமும் மற்றும் தாவோயியத்தைச் சேர்ந்த சியு சுஜியிடமும் அறிவுரை பெற்றார்.[44]

நியான் சங் (பிறப்பு 1282) என்பவர் எழுதிய ஃபொசு லிடை டொங்சை என்ற நூலின் படி செங்கிஸ்கானின் அரசு பிரதிநிதியான முகலி 1219ல் ஷான்க்ஷி நகரில் போரிட்டுக் கொண்டிருந்தார். அங்கு தான் ஜென் புத்த மதத் துறவியான ஹையுன் (海雲, 1203-1257) வாழ்ந்து வந்தார். முகலியின் சீனத் தளபதிகளுள் ஒருவர் ஹையுன் மற்றும் அவரது குரு ஜோங்குவானின் நன்னடத்தையால் ஈர்க்கப்பட்டார். அத்தளபதி அவர்களை முகலியிடம் அறிமுகப்படுத்தினார். முகலி அவர்களை செங்கிஸ் கானிடம் அழைத்துச் சென்றார். அவர்களைச் சந்தித்தபின் செங்கிஸ் கான் பின்வரும் ஆணையை வெளியிட்டார்: "இவர்கள் உண்மையிலேயே சொர்க்கத்திடம் வழிபடுகிறவர்கள். இவர்களுக்கு உணவு மற்றும் உடை வழங்கித் தலைவர்களாக ஆக்க வேண்டும். நான் இவர்களைப் போன்ற பல பேரை சேர்க்கத் திட்டமிட்டுள்ளேன். சொர்க்கத்திடம் வழிபடும்போது இவர்களுக்கு எந்த சிரமமும் இருக்கக் கூடாது. எனவே இவர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தடுக்க நான் இவர்களை தர்கன் ஆக்குகிறேன்." செங்கிஸ்கான் ஏற்கனவே ஹையுனை 1214ல் சந்தித்து இருந்தார். மங்கோலிய முறையில் முடி வளர்க்க மறுத்த அவரது பதில் மூலம் செங்கிஸ்கான் ஈர்க்கப்பட்டார். அவரது முறையான மொட்டையை வைத்துக்கொள்ள அனுமதி அளித்தார்.[45] 1220ல் தனது குரு ஜோங்குவானின் இறப்பிற்குப் பிறகு செங்கிஸ்கானின் ஆட்சியில் ஹையுன் சான் (சீன ஜென்) பள்ளிக்குத் தலைமை தாங்கினார். 1257 வரை வந்த அனைத்து கான்களாலும் சீனப் புத்த மதத்திற்குத் தலைமைத் துறவியாக தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்டார். 1257ல் மங்கோலியர்களால் நியமிக்கப்பட்ட ஷாவோலின் மடாலயத்தின் மற்றொரு சான் குருவான க்ஷுயேடிங் ஃபுயு தலைமைக் குருவாக நியமிக்கப்பட்டார்.[46]

1222ல் செங்கிஸ் கான் தாவோயியக் குருவான சியு சுஜியை (1148-1227) ஆப்கானிஸ்தானுக்கு வரவழைத்துச் சந்தித்தார். தன்னுடைய அழைப்பை ஏற்றதற்கு நன்றி தெரிவித்தார். அவர் தன்னுடன் சாகா வரத்திற்கான மருந்தை கொண்டு வந்து இருக்கிறாரா என வினவினார். ஆனால் அவரோ சாகா வரத்திற்கான மருந்து என்று எதுவும் கிடையாது என்று கூறினார். ஆனால் கட்டுப்பாடுகள் மூலம் வாழ்வை நீட்டிக்க முடியும் என்று கூறினார். செங்கிஸ் கான் அவருடைய நேர்மையான பதிலை பாராட்டினார். பின்னர் அவரை எல்லையற்ற சொர்க்கம் என்று அழைப்பது அவரா அல்லது மற்றவர்களால் என்று வினவினார்.[47] சியு சுஜி மற்றவர்கள் தான் அவ்வாறு அழைப்பதாக கூறினார். சியு சுஜியை அப்போதிலிருந்து மற்றவர்கள் "நிலைத்த" (Immortal) என்றுதான் அழைக்க வேண்டும் என்று செங்கிஸ் கான் ஆணையிட்டார். அவரை சீனாவில் உள்ள அனைத்து துறவிகளுக்கும் தலைவராக்கினார். சொர்க்கம் சியு சுஜியைத் தன்னிடம் அனுப்பி இருப்பதாகக் குறிப்பிட்டார். செங்கிஸ்கான் இறந்த அதே வருடத்தில் சியு சுஜி பெய்ஜிங்கில் இறந்தார். சியு சுஜியின் கோயில் வெண்முகில் கோயில் என்று ஆனது.[48]

புத்த மதத்தினர், கிறிஸ்தவ மதத்தினர் மற்றும் முஸ்லிம்கள் ஆகியவர்களுக்கு வரிவிலக்கு அளிக்கும் ஆணை 1368ல் யுவான் அரசமரபு முடியும் வரை தொடர்ந்தது. அனைத்து ஆணைகளும் ஒரே முறையைப் பின்பற்றின மற்றும் செங்கிஸ் கான் முதன்முதலாக இதை அளித்ததைத் சுட்டிக்காட்டின.[49] ஜுவய்னியின் கூற்றுப்படி செங்கிஸ் கான் குவாரசமியப் பேரரசை வென்ற பிறகு முஸ்லிம் மக்களுக்கு மதச் சுதந்திரம் வழங்கினார். ஆனால் ரஷித் அல் தின் என்பவர் ஒரு சில நேரங்களில் அலால் முறையில் மிருகங்களைக் கொல்வதைச் செங்கிஸ் கான் தடை செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம்கள் ஒரு விருந்தில் உண்ண மறுத்தபோது குப்லாய் கான் 1280ல் இந்த ஆணையை மீண்டும் வழங்கினார். ஹலால் முறையில் மிருகங்களைக் கொல்வதைத் தடை செய்தார். குப்லாய் கானின் இந்த ஆணை ஒரு தசாப்தத்திற்குப் பிறகு திரும்பப் பெறப்பட்டது. செங்கிஸ் கான் வஹித்-உத்-தின் என்ற இமாமை ஆப்கானித்தானில் 1221ஆம் ஆண்டு சந்தித்தார். அவரிடம் ஒரு மங்கோலிய படையெடுப்பாளர் வருவதை இறைதூதர் முகமது முன்னரே கணித்தாரா? என்று வினவினார்.[50]

இராணுவ படையெடுப்புகள்

மேலும் காண்க:மங்கோலியப் படையெடுப்புகளும் வெற்றிகளும்

செங்கிஸ் கான் போருக்காகத் தன் நாடோடிக் கூட்டத்துடன் அணிவகுத்தால் அவர்கள் கிலோமீட்டர் கணக்கில் பயணம் செய்து போர்புரிய மாட்டார்கள் அட்சரேகை தீர்க்கரேகை கணக்கில் தான் பயணம் செய்து போர்புரிவார்கள்.[51] ஆசியா மற்றும் ஐரோப்பாவில் மங்கோலியத் தாக்குதலால் பாதிப்படையாத நாடுகள் வெகு சிலவே. பாதிப்படைந்த நாடுகளின் முழு வரலாற்றின் போக்கும் மாற்றி அமைக்கப்பட்டது.[52]

மேற்கு சியா வம்சம்

கி.பி. 1206ல் மங்கோலியப் பேரரசு மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு மேற்கில் மேற்கு சியா வம்ச தாங்குடுகளும், கிழக்கிலும், தெற்கிலும் சின் வம்சத்தவரும் இருந்தனர். இதில் சின் வம்சமானது மஞ்சூரிய சுரசன்களால் ஆரம்பிக்கப்பட்டது. சின்கள் வடக்கு சீனாவை ஆண்டனர். பல ஆண்டுகளாக மங்கோலியர்களின் மேல் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

மங்கோலிய வீரர்களுக்கும் சீனர்களுக்கும் இடையேயான போர்.
செங்கிஸ் கான் பெய்ஜிங்குக்குள் நுழைதல்.

செங்கிஸ் கான் தன் மக்கள், இராணுவம் மற்றும் அரசை மேற்கு சியாவின் (சி சியா) மேல் படையெடுக்க ஆயத்தம் செய்தார். பலம் வாய்ந்த இளம் சின் மன்னர் மேற்கு சியாவின் உதவிக்கு வரமாட்டார் என்பதைச் சரியாகக் கணித்தார். தாங்குடுகள் உதவிக்கு அழைத்தபோது சின் மன்னர் மறுத்தார்.[37] கி.பி. 1211ல் மேற்கு சியாவின் ஓலகோய் நகரை செங்கிஸ் கானின் படைகள் முற்றுகையிட்டன. போரானது யாருக்கும் வெற்றி இன்றி பல வாரங்களுக்கு நடந்தது. இந்நிலையில் போரை முடிக்க செங்கிஸ் கான் ஒரு யோசனை செய்தார். செங்கிஸ் கான் 1,000 பூனைகளையும், 10,000 பறவைகளையும் கொடுத்தால் நகர முற்றுகையைக் கைவிடுவதாக கூறினார். எதிரிப் படையும் மகிழ்ச்சியுடன் அதற்கு இசைந்து அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பூனைகளையும், பறவைகளையும் கொடுத்தது. மங்கோலியர்கள் அவற்றின் வால்களில் கம்பளியைக் கட்டி நெருப்பை வைத்து அவிழ்த்து விட்டனர். பூனைகள் இருப்பிடத்தை நோக்கியும், பறவைகள் கூடுகளை நோக்கியும் நகருக்குள் இருந்த தம் இருப்பிடத்திற்கு அவசரமாக சென்றன. இதன் காரணமாக நகர் எங்கும் நெருப்பு பரவியது. இக்குழப்பத்தைப் பயன்படுத்தி அந்நகர் வெல்லப்பட்டது.[53] எனினும் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததாக 17ம் நூற்றாண்டுக்கு முந்தைய எந்த ஒரு நூலிலும் எழுதப்படவில்லை என்று கூறப்படுகிறது.[54] நல்ல அரண்களுடன் இருந்த நகரங்களை ஆரம்பத்தில் சிறு தடங்கல்கள் ஏற்பட்டபோதிலும் செங்கிஸ் கான் கைப்பற்றினார். மேற்கு சியாவின் பேரரசரை அடிபணிய வைத்தார்.

சின் வம்சம்

கி.பி. 1211ல் மேற்கு சியாவை வென்ற பிறகு சின் வம்சத்தை வெல்ல நினைத்தார் செங்கிஸ் கான். "எங்களது பேரரசு கடலைப் போல் உள்ளது; உங்களுடையதோ ஒரு கைப்பிடி மண்" என செங்கிஸ் கானைக் குறிப்பிட்டு சின்களின் அரசர் கூறியதாக ஒரு சீன அறிஞர் பதிவிட்டுள்ளார். "நாங்கள் எப்படி உன்னைப் பார்த்து பயப்பட முடியும்?" என்றும் கேட்டார். அவர்களுக்குச் சீக்கிரமே பதில் கிடைத்தது. சின்களின் தளபதி வன்யன் சியுசின் மங்கோலியர்களைத் தாக்க தனக்கு முதலில் கிடைத்த வாய்ப்பை வீணடித்தார். அதற்குப் பதிலாக மிங்கன் எனும் தூதரை அனுப்பினார். தூதன் கணவாயின் மறு பக்கத்தில் சின் இராணுவம் இருப்பதை உளறினான். எகுலிங்கு என்ற இடத்தில் நடந்த போரில் மங்கோலியர்கள் சின் வீரர்களைக் கொன்றழித்தனர். கி.பி. 1215ல் செங்கிஸ் கான் சின் தலைநகரான சொங்குடுவை (தற்கால பெய்ஜிங்) வென்றார். இதன் காரணமாக சின் மன்னர் சுவாங்சாங் தன் நாட்டின் வட பகுதியை அப்படியே விட்டுவிட்டு ஓடினார். தலைநகரை கைபேங்குக்கு மாற்றினார். ஊக்கமளிக்கும் வகையில் செங்கிஸ் கான் பதுங்கும் புலி கொண்ட தங்க பட்டிகையைத் தன் தளபதிகள் ஒவ்வொருவருக்கும் பரிசாக வழங்கினார். முகலி வாங்க்னிங்-ஃபூ என்ற நகரை அடிபணிய வைத்தார். இதனுடன் சேர்த்து மங்கோலியர்கள் மொத்தம் 862 நகரங்களைக் கைப்பற்றியிருந்தனர். மஞ்சள் ஆற்றைக் கடக்க தங்களிடம் படகுகள் இல்லாத காரணத்தால் மங்கோலியர்கள் தங்கள் ஈட்டிகளை ஒன்றாக இணைத்து, இடையே உள்ள இடைவெளிகளை கற்கள் மற்றும் மணல் மூலம் நிரப்பி ஒரு பாலத்தைக் கட்டினர்.[55] கி.பி. 1232, கி.பி. 1233ல் ஒகோடி கானால் கைபேங்கு கைப்பற்றப்பட்டது. சின் வம்சமானது கி.பி. 1234ல் கைசோவு நகரின் முற்றுகைக்குப் பிறகு வீழ்ந்ததது.

கருப்பு சீனா

கி.பி. 1212 இளவேனிற்காலத்தில் காரா கிதையின் (கருப்பு சீனா) லியாவோ-யங் நகரில், சின் பேரரசிடம் இருந்து ஒரு படை உதவிக்கு வருவதாக வதந்தி பரப்பப்பட்டது. முற்றுகை கைவிடப்பட்டது. உடனடியாக மங்கோலியர்கள் பின்வாங்கி ஓடினர். தங்களது பொருட்கள் மற்றும் கூடாரங்கள் அனைத்தையும் லியாவோ-யங் நகர சுவர்களுக்கு அடியில் விட்டு விட்டு ஓடினர். இரண்டு நாட்களுக்கு இப்படிப் பின்வாங்கினர். பின்னர் வீரர்களுக்குப் புதுக் குதிரைகள் வழங்கப்பட்டது. பின்வாங்கிய வீரர்கள் அனைவரும் ஒரே இரவில் முழுத் தூரத்தையும் கடந்து நகரை நோக்கி முன்னேறினர். இந்தச் செயலுக்குப் பலன் கிடைத்தது. தங்கள் கோட்டைக் கதவுகளைத் திறந்து வைத்துவிட்டு காரா கிதை வீரர்களும், பொதுமக்களும் கைவிடப்பட்ட கூடாரங்களைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர். அவர்களைத் தாண்டிப் புயல்போல் மங்கோலியர்கள் நகருக்குள் புகுந்து வென்றனர்.

அடுத்த இளவேனிற்காலத்தில் கோட்டைகளை எவ்வாறு கைப்பற்றுவது என்பதை மங்கோலியர்கள் கற்றிருந்தனர். செங்கிஸ் கானின் இளைய மகன் டொலுய் மற்றும் மருமகன் சிகி ஆகியோர் முதல் ஆட்களாகக் கோட்டைச்சுவர் மீது ஏறி மற்ற வீரர்களுக்கு உதாரணமாக விளங்கினர்.[56] அந்நேரத்தில் செங்கிஸ் கான் என்ற பெயரைப் பற்றிய பயம் சிறிது சிறிதாக எதிரிகளுக்கு உருவாகிக் கொண்டிருந்தது. மேற்குப் பகுதி தலைநகரான ததுங்-ஃபூவில் இருந்த தளபதி ஹுஷாஹு செங்கிஸ் கான் வருகிறார் என்ற செய்தியை அறிந்ததுமே தப்பித்து ஓடினான்.[57]

நைமர்கள் கூட்டமைப்பின் தலைவனான குசலுகு செங்கிஸ் கானிடம் தோற்ற பிறகு மேற்கில் சென்று காரா கிதையில் (மேற்கு லியாவோ என்றும் அழைக்கப்படுகிறது, ஏனெனில் லியாவோ வம்சத்தின் எஞ்சியவர்களால் இது தோற்றுவிக்கப்பட்டது) ஆட்சி செய்து கொண்டிருந்தார். செங்கிஸ் கான் அவனை வீழ்த்த நினைத்தார். அந்நேரத்தில் மங்கோலியப் படையானது தொடர்ந்து 10 ஆண்டுகள் போரிட்டிருந்தது. மேற்கு சியா மற்றும் சின் வம்சத்தவர்களுக்கு எதிரான இடைவிடாத போரினால் சோர்ந்திருந்தது. எனவே செங்கிஸ் கான், ‘’அம்பு’’ என்றழைக்கப்படும் தனது இளைய தளபதி செபே தலைமையில் வெறும் 2 தியுமன் (20,000) படைவீரர்களை மட்டும் அனுப்பினார்.

மேலும் அச்சிறு படையைக் கொண்டு மங்கோலியர்கள் குசலுகுவின் ஆதரவாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தினர். இதன் காரணமாக குசலுகுவின் இராணுவம் கசுகரின் மேற்குப் பகுதியில் தோற்கடிக்கப்பட்டது. குசலுகு தப்பித்த போதிலும் அவர் செபேயின் படைவீரர்களால் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார். கி.பி. 1218ம் ஆண்டு வாக்கில் காரா கிதையின் தோல்வியின் காரணமாக மங்கோலியப் பேரரசானது மேற்கில் பால்கசு ஏரி வரை பரவியிருந்தது. இந்த ஏரி குவாரசமியப் பேரரசின் எல்லையில் இருந்தது. குவாரசமியா என்பது ஒரு இசுலாமிய அரசாகும். இது மேற்கில் காசுப்பியன் கடல், பாரசீக வளைகுடா, தெற்கில் அரேபியக் கடல் வரை பரவியிருந்தது. ஆனால், மறுக்கமுடியாதவகையில், காராகிதையின் வெற்றிக்குப் பிறகு மற்ற நாடுகள் மீதான ஆர்வம் செங்கிஸ் கானுக்கு இல்லாமல் போய்விட்டது.[58]

குவாரசமியப் பேரரசு

குவாரசமியப் பேரரசு

அப்பாசியக் கலிபா குவாரசமியா மீது படையெடுக்குமாறு செங்கிஸ்கானுக்கு செய்தி அனுப்ப விரும்பினார். ஆனால் தனது ஒற்றன் குவாரசமியா வழியே செல்லும்போது பிடிபடாமல் செல்ல முடியாது என்று அவருக்குத் தெரிந்தது. எனவே ஓர் ஒற்றன் தலையை மொட்டை அடித்து நீல மையால் ஊசியைக் கொண்டு அவன் தலையில் செய்தி எழுதப்பட்டது. அந்த ஒற்றன் தலையில் முடி வளரும் வரை காத்திருந்து பின்னர் அவனை செங்கிஸ் கானுக்குத் தூது அனுப்பினர். அந்த ஒற்றன் மங்கோலியாவை அடைந்தபோது அவனுக்கு மொட்டை அடிக்கப்பட்டு அச்செய்தி அறியப்பட்டது. ஆனால் செங்கிஸ் கானுக்கு போர் புரியும் எண்ணம் இல்லை. அதனால் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

13ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குவாரசமிய வம்சமானது ஷா அலாதின் முகமதுவால் ஆளப்பட்டது. செங்கிஸ் கான் பட்டுப் பாதை வழியாக இதனுடன் வணிகம் செய்ய விரும்பினார். அதற்காக சுமார் 500 பேர் அடங்கிய வணிகக் குழுவை ஒட்டகங்களுடன் உகுனா என்பவரின் தலைமையில் அனுப்பினார். அவர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமிய வணிகர்கள். அவர்களில் ஓர் இந்தியரும் முக்கியப் பங்கு வகித்தார். ஆனால் ஒற்றார் நகர ஆட்சியாளரான இனல்சுக் வேவு பார்க்க வந்ததாகக் கூறி அவர்களைத் தாக்கினார். நரகத்தின் கதவுகளைத் திறந்தார். இனல்சுக்குக்கு அறிமுகமான வணிகர் குழுவின் உறுப்பினர் ஒருவர் "ஹயர் கான்" என்ற பட்டத்தைக் கூறி அழைக்காமல் இனல்சுக் என்று பெயரைச் சொல்லி அழைத்துவிட்டதாக ஒரு அபத்தமான காரணத்தையும் இனல்சுக் கூறினார். இனல்சுக் இத்தாக்குதலுக்கு இழப்பீடு வழங்கவோ, குற்றம் புரிந்தவர்களை ஒப்படைக்கவோ மறுத்தார். இதனால் நிலைமை இன்னும் மோசமானது. பாரசீக வரலாற்றாளர் சுவய்னியின் கூற்றுப்படி இத்தாக்குதல் "ஒரு வணிக வண்டியை மட்டும் அழிக்கவில்லை, ஒரு முழு உலகத்தையும் வீணாக்கிவிட்டது". செங்கிஸ் கான் இரண்டாவது முறையாக மீண்டும் 3 தூதுவர்களை (2 மங்கோலியர்கள், 1 இசுலாமியர்) அனுப்பி இனல்சுக்கைச் சந்திக்காமல் ஷாவை நேரடியாக சந்திக்கச் சொன்னார். ஷாவோ மூவருக்கும் மொட்டை அடித்து இசுலாமிய தூதுவனின் தலையை வெட்டி மற்ற இருவரின் கையில் கொடுத்து அனுப்பினார். ஷாவின் இந்தச் செயலை அவரது சொந்த மக்கள் கூட ஆதரித்து இருக்க மாட்டார்கள். செங்கிஸ் கான் புர்கான் கல்துன் மலைக்குச் சென்று மூன்று நாட்களுக்கு உணவு உண்ணாமல் தெங்கிரியை (கடவுள்) வழிபட்டார். பின்னர் ஒற்றர்களைப் பயன்படுத்தி குவாரசாமியப் பேரரசைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் கேட்டறிந்தார். வரப்போகும் போருக்கான சகுனங்கள் நல்லவிதமாக இல்லை என்று ஈரானியக் குறிசொல்பவர்கள் ஷாவிடம் சொன்னதைக் கூட செங்கிஸ் கான் அறிந்திருந்தார். அந்தளவுக்கு செங்கிஸ் கானின் ஒற்றர்கள் திறமையாகச் செயல்பட்டனர். மங்கோலியர்கள் போருக்காகப் பட்டு உடையை உடுத்தச் செங்கிஸ் கான் அறிவுறுத்தினார். பட்டை அம்புகளால் துளைக்க முடியாது. உடலைத் துளைத்து அம்பு ஒடிந்துவிட்டாலும் பட்டு உடையை வெளியே எடுப்பதன் மூலம் அம்பையும் வெளியே எடுத்துவிடலாம். பட்டுடன் ஊசி நூல்கள் மற்றும் அம்பு நுனியைக் கூர்மையாக்கத் தேவையானவற்றையும் மங்கோலியர்கள் எடுத்துச் சென்றனர். செங்கிஸ் கான் சுமார் 1,00,000 படைவீரர்கள் (10 தியுமன்), தனது முக்கியத் தளபதிகள் மற்றும் தன் மகன்கள் அடங்கிய ஒரு மாபெரும் படையுடன் புறப்பட்டார். ஒரு சில படைகளைச் சீனாவில் விட்டுவிட்டு, ஒகோடி கானை தனக்கு அடுத்த கானாக நியமித்துவிட்டு குவாரசமியாவுக்குப் புறப்பட்டார். ஒவ்வொரு மங்கோலிய வீரனும் 4 குதிரைகளுடன் புறப்பட்டனர். பயணத்தின் போதே குதிரையை மாற்றிப் பயணம் செய்தனர். நீண்ட பயணத்தின் ஒருகட்டத்தில் நீர் கிடைக்காத போது மங்கோலியர்கள் தங்கள் குதிரைகளின் கழுத்தில் ஓட்டையிட்டு அவற்றின் இரத்தத்தைக் குடித்தனர். பின் ஓட்டைகளை மூடினர். உலர்த்தப்பட்ட ஆட்டுக்கறியையும் எடுத்துச்சென்றனர். கறியைக் குதிரை சேணத்திற்குக் கீழ் வைத்துவிடுவர். பயணம் செய்யச் செய்ய அவர்கள் உடல் எடையால் கறி அழுத்தி நைந்து மிருதுவாகிவிடும். அதை உண்பர். மங்கோலியக் குதிரைகள் குளிருக்கு ஏற்பத் தகவமைந்தவை. உறைந்த தரையையும் தங்கள் குளம்புகளால் நோண்டி புல்லைச் சாப்பிடக்கூடியவை. எனினும் பயணம் முடிவதற்குள் குளிர் காரணமாக ஏராளமான குதிரைகளும் சில வீரர்களும் இறந்தனர். மங்கோலியர்கள் சுருக்குக் கயிறுகளையும் கொண்டுசென்றனர். 600 வருடங்களுக்குப் பிறகு நெப்போலியன் உருசியா மீது படையெடுத்தபோது கூட மங்கோலியர்களின் வழித்தோன்றல்களான கல்முக்குகள் இதே போன்ற சுருக்குக் கயிறுகளைப் பயன்படுத்தி குதிரைகள் மேல் உட்கார்ந்திருந்த பிரெஞ்சுப் படையினரை சுருக்கிட்டுக் கீழே தள்ளித் தரதரவென தரையில் இழுத்துச் சென்றனர். மேலும் மங்கோலியர்கள் ஐரோப்பியர்களுக்கு 100 வருடங்களுக்கு முன்னரே பீரங்கிகளைத் தயாரித்தனர். அதைப் பிரித்து யாக் எருமைகள் மற்றும் ஒட்டகங்கள் மேல் இந்தப் போருக்காக ஏற்றிச் சென்றனர். அதேபோல் ஆறுகளைக் கடக்க ஒகோடி 38க்கும் மேற்பட்ட பாலங்களையும் கட்டினார்.[59] பாலம் கட்டாத இடத்தில் மங்கோலியர்கள் தங்கள் குதிரைகளை நீருக்குள் இறக்கி அவற்றின் வால்களைப் பிடித்து ஆற்றைக் கடந்தனர்.

சலால் அத்-தின் சிந்து நதியைக் கடப்பதைச் செங்கிஸ் கான் பார்த்தல்.

ஷா அலாதின் குவாரசாமியாவின் கிழக்குப் பகுதியில் செங்கிஸ் கானுக்காகக் காத்திருந்தார். மாதக்கணக்கில் பயணம் செய்ததால் மங்கோலியர்கள் களைத்திருப்பர், அவர்களை எளிதாக வீழ்த்திவிடலாம் என்று நினைத்திருந்தார். செங்கிஸ் கான், தளபதிகள் மற்றும் அவரது மகன்கள் தலைமையிலான மங்கோலிய இராணுவமானது குவாரசமியாவால் ஆளப்பட்ட பகுதிக்குள் நுழைந்ததன் மூலம் தியான் சான் மலைகளைக் கடந்தது. செங்கிஸ் கான் படைகளை மூன்றாகப் பிரித்தார். அவரது மகன் சூச்சி முதல் படையுடன் குவாரசமியாவின் வடகிழக்குப் பகுதியை நோக்கி வந்தார். அவரது தளபதி செபே இரண்டாவது படையுடன் இரகசியமாக தென்கிழக்குப் பகுதியை நோக்கி வந்து முதல் படையுடன் சமர்கந்தின் மேல் சிறு தாக்குதலை நடத்தினர். மூன்றாவது படையானது செங்கிஸ் கான் தலைமையில் பயணித்தது. ஷா ஒரு பெரும்படையை செபேவுக்கு எதிராக அனுப்பினார். அப்படை கிளம்பியவுடனேயே ஷாவுக்கு ஒரு செய்தி வந்தது. அது செங்கிஸ் கான் நாட்டின் மேற்குப் பகுதியை தீக்கிரையாக்குவதாக வந்த செய்தி. ஷாவால் நம்பமுடியவில்லை. ஆனால் அகதிகளாக வந்த மக்கள் அதை உறுதி செய்தனர்.[60] செங்கிஸ் கான் இரகசியமாகத் தன் படையை முன் எந்த இராணுவமும் கடக்காத தொலைவாக சுமார் 3,200 கி.மீ. தொலைவிற்குப் பாலைவனம், மலைகள் மற்றும் புல்வெளி வழியாகக் கூட்டி வந்து யூகிக்க முடியாத வகையில் எதிரி எல்லைகளுக்குப் பின்னால் மேற்குப் பகுதியில் தோன்றினார். அப்பகுதி நாடோடிகளுடன் நட்புக்கொண்டு வழியறிந்து செங்கிஸ் கான் அப்பாலைவனத்தைக் கடந்தார். 650 வருடங்களுக்குப் பிறகு உருசிய இராணுவத்தினர் 650 கி.மீ. அகலமுடைய இப்பாலைவனத்தைக் கடக்க முயன்று தங்கள் குதிரைகள் அனைத்தையும் இழந்தனர். ஆனால் செங்கிஸ் கான் தனது படையினரை திறம்பட வழிநடத்தி அப்பாலைவனத்தைக் கடந்தார். பரந்த பாலைவனத்தைக் கடந்து மரங்களைக் கண்டவுடனேயே மங்கோலியர்கள் அவற்றை வெட்டி ஏணிகள், முற்றுகை இயந்திரங்கள் மற்றும் பிற தாக்குதல் கருவிகளை உருவாக்கினர். மேற்கில் செங்கிஸ் கான், கிழக்கில் சூச்சி, வடக்கில் சகதை மற்றும் ஒகோடி, மற்றும் தெற்கில் செபே என ஷா நான்கு திசைகளிலும் எந்நேரமும் சுற்றி வளைக்கப்படலாம் என்ற சூழ்நிலை உருவானது.

ஷாவின் இராணுவம் பல்வேறு உட்பூசல் சண்டைகளால் பிரிந்திருந்தது. அவர் தனது படைகளைச் சிறுசிறு குழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு நகரத்தையும் காக்க அனுப்பி வைத்திருந்தார். இப்பிரித்தல் குவாரசமியத் தோல்வியில் முக்கியப் பங்காற்றியது. மங்கோலியர்கள் நெடுதூரப் பயணம் காரணமாகக் களைத்திருந்தபோதும் ஒரு பெரும்படைக்குப் பதிலாக சிறுசிறு படைகளைச் சந்தித்தனர். மங்கோலிய இராணுவம் உயர்ந்த மூலோபாயம் மற்றும் தந்திரோபாயங்கள் மூலமாக சீக்கிரமே ஓற்றார் நகரைக் கைப்பற்றியது. செங்கிஸ் கான் மக்களை மொத்தமாகக் கொல்ல உத்தரவிட்டார். எஞ்சியவர்கள் அடிமைப்படுத்தப்பட்டனர். இனல்சுக்கின் காதுகள் மற்றும் கண்களில் காய்ச்சிய வெள்ளி ஊற்றப்பட்டது. போரின் முடிவில் ஷா சரணடையாமல் தப்பினார். செங்கிஸ் கான் சுபுதை மற்றும் செபேயை 20,000 வீரர்கள் மற்றும் 2 ஆண்டு நேரம் வழங்கி அவரைப் பிடிக்க உத்தரவிட்டார். ஷா விசித்திரமான முறையில் தன் ஆட்சிக்குட்பட்ட ஒரு சிறு தீவில் இறந்தார். தான் செய்த தவறுகளின் காரணமாக ஒரு காலத்தில் செல்வச்செழிப்பில் பேரரசனாக வாழ்ந்த ஷா தான் அணிந்திருந்த ஒரே ஒரு சட்டையுடன் பரிதாபகரமாக நிலையில் புதைக்கப்பட்டார்.[61]

மங்கோலிய வெற்றியானது முன்னெப்போதும் இல்லாத வகையில் ஈவு இரக்கமற்றதாக இருந்தது. சமர்கந்தின் வீழ்ச்சிக்குப் பிறகுத் தலைநகரம் பொக்காராவுக்கு மாற்றப்பட்டது. செங்கிஸ் கான் அரச கட்டடங்களை மட்டுமின்றி ஊர்கள், மக்கள், ஏன் பெரும்பகுதி விளைநிலங்களைக் கூட அழித்தார்.

செங்கிஸ் கான் மற்றும் அவருடைய தளபதிகளின் குறிப்பிடத்தக்க வெற்றிகள் மற்றும் வழிகள்.

மங்கோலியர்கள் சமர்கந்தைத் தாக்கினர். பிடிக்கப்பட்ட எதிரிகளின் உடல்களைக் கேடயங்களாகப் பயன்படுத்தினர். பல நாட்களுக்குப் பிறகு மீதமிருந்த சில போர்வீரர்கள், ஷாவின் விசுவாசமான ஆதரவாளர்கள் கோட்டையில் தாக்குப்பிடித்தனர். கோட்டை வீழ்ந்தபிறகு செங்கிஸ் கான் தனது “சரணடை அல்லது இற” விதிமுறையைச் செயல்படுத்த ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது. சமர்கந்தில் ஆயுதத்தைக் கையில் எடுத்த ஒவ்வொரு எதிரி வீரனும் வெட்டி வீழ்த்தப்பட்டான். சமர்கந்தின் மக்கள் நகரைக் காலி செய்ய உத்தரவிடப்பட்டனர். நகரத்துக்கு வெளியே ஒரு சமவெளியில் கூடுவதற்கு உத்தரவிடப்பட்டது. அங்கு அவர்கள் கொல்லப்பட்டனர். வெற்றியைக் குறிக்கக் கொல்லப்பட்டவர்களின் தலைகள் பிரமிடுகளாக அடுக்கப்பட்டன.[62] மங்கோலிய உயர் அதிகாரியான அதா-மாலிக் சுவய்னி, ஆக்சசு ஆற்றங்கரையில் தரமேசில் இவ்வாறு எழுதினர், "அனைத்து மக்களும், ஆண்களும், பெண்களும் வெளியே சமவெளிக்கு ஓட்டப்பட்டு, வழக்கப்படிப் பிரிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்".[62]

பொக்காராவுக்கு செல்லும் முன் எதிரில் பட்ட சில சிறு நகரங்களைச் செங்கிஸ் கான் தாக்கினார். இதன்மூலம் உள்ளூர் மக்கள் பொக்காராவுக்கு அகதிகளாக ஓடினர். அவர்கள் நகரங்களை ஆக்கிரமித்தது மட்டுமின்றி மங்கோலியர்கள் பற்றிய பயத்தையும் அதிகப்படுத்தினர். இந்த உத்தியால் பொக்காராவின் துருக்கியப் பாதுகாவலர்கள் பயம் அடைந்தனர். 500 வீரர்களைத் தவிர சுமார் 20,000 வீரர்கள் முக்கிய மங்கோலிய இராணுவம் வருவதற்குள் தப்பித்துவிடலாம் என்று நினைத்து ஓடினர். பொக்காரா அதிகப்படியான பாதுகாப்பின்றி இருந்தது. ஒரு அகழி மற்றும் ஒரு சுவருடன் காணப்பட்டது. இது அனைத்து குவாரசமிய நகரங்களிலும் காணப்பட்ட ஒரு பொதுவான கட்டமைப்பாகும். நகரத் தலைவர்கள் மங்கோலியர்களுக்கு வாயில்களைத் திறந்து விட்டனர். எனினும் துருக்கியப் பாதுகாவலர்களின் ஒரு படை மற்றொரு 12 நாட்களுக்கு நகரின் கோட்டையை நடத்தியது. கோட்டையில் இருந்து தப்பிப்பிழைத்தவர்கள் கொல்லப்பட்டனர். கலைஞர்களும், கைவினைஞர்களும் மங்கோலியாவுக்கு அனுப்பப்பட்டனர். போரில் கலந்து கொள்ளாத இளைஞர்கள் மங்கோலியா இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். மீதமுள்ள மக்கள் அடிமைகளாக அனுப்பப்பட்டனர். மங்கோலிய வீரர்கள் நகரை சூறையாடியபோது, தீ விபத்து ஏற்பட்டு பெரும்பான்மையான நகரம் தரைமட்டமானது.[63] செங்கிஸ் கான் தான் வென்ற எந்த நகரத்துக்குள்ளும் நுழைந்தது கிடையாது. நகரம் வெல்லப்பட்டதும் அதைத் தன் படைவீரர்களிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றுவிடுவார். ஆனால் அவர் பொக்காரா நகரத்துக்குள் முதன்முதலில் நுழைந்தார். அங்கிருந்த பெரிய கட்டடமான கலோன் தூபிப் பள்ளிவாசலைப் பார்த்து "இதுதான் ஷா இருக்கும் இடமா?" என்று கேட்டார். மொழிபெயர்த்தவர் "இல்லை, இது வழிபடும் இடம்" என்றார். செங்கிஸ் கான் வேறெந்த கட்டடத்துக்குள்ளும் அதுவரையில் நுழைந்ததாக வரலாற்றுப் பதிவுகள் கிடையாது. எஞ்சிய மக்களை செங்கிஸ் கான் வரவழைத்தார். அங்கு அவர் கூறியதாவது,

[64]

செங்கிஸ் கான் பேசிய கலோன் தூபிப் பள்ளிவாசல்.

மற்ற கட்டடங்கள் அழிக்கப்பட்டபோதும் உயர்ந்த கட்டடமான அந்தப் பள்ளிவாசலை மட்டும் எதுவும் செய்ய வேண்டாம் என்று செங்கிஸ் கான் கூறினார். இதன் காரணமாக அப்பள்ளிவாசல் இன்றும் நிலைத்து நிற்கிறது.

இதற்கிடையில், செல்வந்த வர்த்தக நகரமான ஊர்கெஞ்ச் இன்னும் குவாரசமியப் படைகளின் கைகளில் இருந்தது. மங்கோலியப் படையெடுப்பின் மிக கடினமான போரானது ஊர்கெஞ்ச் மீதான தாக்குதல் என நிரூபிக்கப்பட்டது. குவாரசமியப் பாதுகாவலர்கள் ஒரு கடும் தற்காப்பில் ஈடுபட்டு அதன் பிறகுதான் நகரம் வீழ்ந்தது. அவர்கள் பகுதி, பகுதியாகப் போரிட்டனர். மங்கோலியத் தந்திரோபாயங்களை நகரச் சண்டையிடுவதற்கு ஏற்றவகையில் மாற்றியமைப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, மங்கோலியச் சேதம் சாதாரண அளவைவிட அதிகமாக இருந்தது.

எப்போதும் போல் கலைஞர்கள் மங்கோலியாவுக்கு அனுப்பப்பட்டனர். மங்கோலிய வீரர்களுக்கு அடிமைகளாக இளம் பெண்களும், குழந்தைகளும் கொடுக்கப்பட்டனர். எஞ்சிய மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். பாரசீக அறிஞர் அதா-மாலிக் சுவய்னி கூறுகையில், 50,000 மங்கோலிய வீரர்கள் ஒவ்வொருவரும் 24 ஊர்கெஞ்ச் குடிமக்களைக் கொல்ல உத்தரவிடப்பட்டது. அதாவது 12 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டனர் என்று பொருள்படுகிறது. மனித வரலாற்றில் மிகவும் குருதி தோய்ந்த படுகொலைகளில் ஒன்றாக ஊர்கெஞ்ச் கருதப்படுகிறது. எனினும் நவீன வரலாற்றாளர்களின் கூற்றுப்படி இதற்கெல்லாம் தகுந்த ஆதாரங்கள் கிடையாது. எந்த நகரத்தாலும் மங்கோலியத் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை. எந்தக் கோட்டையும் கைப்பற்றப்படாமல் தப்பவில்லை. எந்த வழிபாட்டாலும் மக்களைக் காப்பாற்ற முடியவில்லை. எந்த அதிகாரியாலும் பேசியோ அல்லது லஞ்சம் கொடுத்தோ தப்பமுடியவில்லை. எதனாலும் மங்கோலிய இராணுவத்தை தடுக்கவோ ஏன் அதன் வேகத்தைக் கட்டுப்படுத்தக் கூட முடியவில்லை.

இதற்கிடையில், செங்கிஸ் கான் அவரது மூன்றாவது மகனான ஒகோடி கானை தனது இராணுவப் படையெடுப்புக்கு முன்னரே தனது வாரிசாக தேர்ந்தெடுத்தார். பின்னர் பின்வரும் கான்களும் அவரது நேரடி வம்சாவளியினராக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். மேற்கு நோக்கிச் சென்று குவாரசமியாவைப் போர்புரியும்போது, சின் சீனாவில் உள்ள அனைத்து மங்கோலியப் படைகளின் தளபதியாக செங்கிஸ் கான் தனது மிக நம்பகமான தளபதிகளில் ஒருவரான முகாலியைத் தேர்ந்தெடுத்து இருந்தார்.

மிக உயரமான இரு புத்தர் சிலைகளைக் கொண்ட ஆப்கானித்தான் நகரமான பாமியானில் சகதை கானின் மகனான முத்துகன் போரில் உயிரிழந்தார். செங்கிஸ் கானின் கோபத்திற்கு அந்நகர் உள்ளானது. யாரும் அழவில்லை. மாறாக உணர்வுகளைக் கோபமாகப் போரில் காண்பித்தனர். வளமான அப்பகுதி பாலைவனமானது. மங்கோலியத் தாக்குதலுக்கு உண்டான அந்த இடம் இன்றும் உள்ளூர் அளவில் "சபிக்கப்பட்ட பகுதி" என்று அழைக்கப்படுகிறது.[65] அந்த இடத்திற்கு 'அலறல்களின் நகரம்' என்று மற்றொரு பெயரும் உண்டு.

ஆப்கானித்தானின் "அலறல்களின் நகரம்".

அரல் கடல் முதல் பாரசீகப் பாலைவனம் வரை உள்ள பகுதிகள் பயந்து கிடந்தது. கிசுகிசுப்பில் மட்டுமே தப்பிப்பிழைத்தவர்கள் "அந்த நபரைப்" பற்றி பேசினார்கள். சத்தமாகப் பேசப் பயந்தனர். ஒரு மங்கோலியக் குதிரைவீரன் தனி ஆளாக ஒரு கிராமத்திற்குச் சென்று பலரைக் கொன்றுவிட்டு அவர்களுடைய மாடுகளை ஓட்டிச் செல்லலாம். ஒருவர் கூட எதிர்த்து கைகூடத் தூக்க மாட்டார்களாம். அந்த அளவிற்கு எதிர்ப்பதற்கான சக்தியை மக்கள் இழந்திருந்தனர்.

மின்ஹஜ் அல்-சிராஜ் ஜூஸ்ஜனி என்ற வரலாற்றாசிரியர் கூற்றுப்படி இமாம் ஒருவர் செங்கிஸ் கானிடம் பணியாற்றினார். அவரிடம் செங்கிஸ் கான், "ஒரு வலிமையான பெயர் உலகில் எனக்கு பின்னால் நிலைத்திருக்கும்" என்று கூறினார். தயக்கத்துடனே அந்த இமாம் "நீங்கள் ஏராளமான மக்களைக் கொன்று கொண்டிருக்கிறீர்கள், உங்கள் பெயரை நினைவில் வைத்துக் கொள்ள ஒருவர் கூட இல்லாமல் போகலாம்" என்றார். செங்கிஸ் கானுக்கு இமாமின் இந்தப் பதில் பிடிக்கவில்லை. பின்னர் செங்கிஸ் கான் "முழுமையான புரிதலை நீங்கள் கொண்டிருக்கவில்லை என்பது எனக்கு தெளிவாகத் தெரிகிறது மற்றும் நீங்கள் குறைந்த அளவே புரிந்து கொண்டிருக்கிறீர்கள். இந்த உலகில் ஏராளமான மன்னர்கள் உள்ளனர். கொள்ளைக்கார ஷாவின் குதிரைக் குளம்பு அடையும் இடம் எல்லாம் பேரழிவு ஏற்படும். இது தவிர உலகின் மற்ற பகுதிகளில் உள்ள மக்கள், மற்றும் நாடுகளின் மன்னர்கள் என் கதையைப் புரிந்துகொள்வார்கள்!" என்றார்.[66]

சார்சியா, கிரிமியா, உருசியா மற்றும் வோல்கா பல்கேரியா

செங்கிஸ் கானின் தங்க தினார், காசுனி அச்சகத்தில் வார்க்கப்பட்டது, ஆண்டு 1221/2

கி.பி. 1220ல் குவாரசமியப் பேரரசின் தோல்விக்குப் பிறகு செங்கிஸ் கான் பாரசீகம் மற்றும் ஆர்மீனியாவில் இருந்த படைகளைக் கூட்டிக் கொண்டு மங்கோலியாவுக்குத் திரும்பினார். சுபுதையின் ஆலோசனைப்படி மங்கோலிய இராணுவம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. செங்கிஸ் கான் முதல் இராணுவத்தை ஆப்கானித்தான் மற்றும் வட இந்தியா வழியாக மங்கோலியாவுக்கு வழிநடத்த, மற்றொரு இராணுவம் சுமார் 20,000 (2 தியுமன்) வீரர்களுடன் காக்கேசியா மற்றும் உருசியாவுக்கு, சுபுதை மற்றும் செபே தலைமையில் சென்றது. அவர்கள் ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான் வரை சென்றனர். சார்சியா இராச்சியத்தைத் தோற்கடித்தனர். கிரிமியாவில் உள்ள காஃபாவின் செனோவா வர்த்தகக் கோட்டையைத் தாக்கினர். பின் கருங்கடல் அருகே குளிர்காலத்தைக் கழித்தனர். மங்கோலியாவுக்குத் திரும்புகையில், சுபுதையின் படைகள் தங்களைத் தடுக்க வந்த குமான்-கிப்சாக்குகள், ஹலிச்சின் 'தைரிய' மிசுதிசுலாவ் மற்றும் கீவின் மூன்றாம் மிசுதிசுலாவ் தலைமையிலான மோசமாக ஒருங்கிணைக்கப்பட்ட 80,000 கீவ உருசியாவின் துருப்புக்கள் அடங்கிய கூட்டுப் படைகளைத் தாக்கியது. சுபுதை சிலாவிக் இளவரசர்களுக்குத் தூதுவர்களை அனுப்பித் தனியாக அமைதிக்காக அழைப்பு விடுத்தார். ஆனால் தூதுவர்கள் சிரச்சேதம் செய்யப்பட்டனர். கி.பி. 1223ம் ஆண்டில் கல்கா ஆற்றின் அருகே நடந்த போரில் சுபுதையின் படைகள் தங்களை விட பெரிய கீவ படையைத் தோற்கடித்தனர். சமாரா பெண்ட் போரில் அண்டை நாட்டு வோல்கா பல்கேரியர்களால் மங்கோலியர்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆனால் இந்நிகழ்வைப்பற்றி, மோசுலில் சுமார் 1,100 மைல்களுக்கு அப்பால் அரபு வரலாற்றாசிரியரான இபின் அல்-ஆதிர் எழுதிய ஒரு சிறிய பதிவைத் தவிர வேறு வரலாற்றுப் பதிவு எதுவும் இல்லை.[67] மோர்கன், சேம்பர்ஸ், கிரோசெட் போன்றோரின் பல்வேறு வரலாற்று ரீதியான இரண்டாம் நிலை ஆதாரங்கள்- மங்கோலியர்கள் உண்மையில் பல்கேரியர்களைத் தோற்கடித்தனர் என்று கூறுகின்றன - சேம்பர்ஸ் ஒரு படி மேலே சென்று பல்கேரியர்கள், தாங்கள் மங்கோலியர்களைத் தோற்கடித்து அவர்களைத் தங்களின் பிரதேசத்தில் இருந்து வெளியேற்றியதாக (சமீபத்தில் தோற்கடிக்கப்பட்ட) உருசியர்களிடம் கதை கூறினர் என்கிறார்.[67] பின்னர் உருசிய இளவரசர்கள் சமாதானத்திற்காகத் தூது அனுப்பினர். சுபுதை அமைதிக்கு ஒப்புக்கொண்டார். ஆனால் இளவரசர்களை மன்னிக்கும் மனநிலையில் அவர் இல்லை. மங்கோலியச் சமுதாயத்தில் பிரபுக்களுக்கான வழக்கமாக இருந்தது போலவே, உருசியப் இளவரசர்களுக்கும் இரத்தமில்லாத மரணம் கொடுக்கப்பட்டது. சுபுதை ஒரு பெரிய மர மேடையைக் கட்டி தனது மற்ற தளபதிகளுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டார். கீவின் மூன்றாம் மிசுதிசுலாவ் உட்பட ஆறு உருசிய இளவரசர்கள் இந்தத் தளத்தின் கீழ் வைக்கப்பட்டு நசுங்கி மரணமடைந்தனர்.

மேற்கு நோக்கிப் படையெடுப்பது பற்றி சுபுதை செங்கிஸ் கானிடம் பேசுதல்

பல்கேரியாவின் எல்லைக்கு அப்பால் ஏராளமான பசுமையான மேய்ச்சல் நிலம் உள்ளதைப் போர்க் கைதிகளிடமிருந்து மங்கோலியர்கள் அறிந்து கொண்டனர். அங்கேரியையும், ஐரோப்பாவையும் கைப்பற்றத் திட்டமிட்டனர். இதன் பின்னர் செங்கிஸ் கான் சுபுதையை மங்கோலியாவிற்குத் திரும்ப அழைத்தார். சமர்கந்திற்குத் திரும்பும் வழியில் செபே இறந்தார். சுபுதை மற்றும் செபே தலைமையிலான புகழ்பெற்ற குதிரைப்படைப் படையெடுப்பு, அவர்கள் காசுப்பியன் கடல் முழுவதையும் தங்கள் பாதையில் தோற்கடித்தது, இன்றுவரை இணையற்றதாக இருக்கிறது. மேலும் மங்கோலிய வெற்றிகள் பிற நாடுகளுக்கு, குறிப்பாக ஐரோப்பாவிற்குப் பரவியது. இந்த இரண்டு இராணுவ நடவடிக்கைகளும் பொதுவாக அப்பிராந்தியங்களின் அரசியல் மற்றும் கலாச்சாரச் கூறுகளை உணர முயற்சித்த உளவுத்துறை நடவடிக்கைகளாகக் கருதப்படுகின்றன. கி.பி. 1225ல் இரு இராணுவங்களும் மங்கோலியாவுக்குத் திரும்பின. இந்தப் படையெடுப்புகள் வழியில் இருந்த எந்தவொரு எதிர்ப்பையும் அழித்ததன் மூலம் திரான்சோக்சியானா மற்றும் பாரசீகத்தை ஏற்கனவே பலம் வாய்ந்த பேரரசுடன் சேர்த்தன. பின்னர் செங்கிஸ் கானின் பேரன் படு மற்றும் தங்க நாடோடிக் கூட்டத்தின் கீழ் மங்கோலியர்கள் கி.பி. 1237ல் வோல்கா பல்கேரியா மற்றும் கீவ உருசியா ஆகிவற்றைக் கைப்பற்றினர். கி.பி. 1240ல் படையெடுப்பு முடிவடைந்தது.

நெப்போலியனும் இட்லரும் உருசியா மீது படையெடுத்ததுதான் அவர்களின் அழிவிற்குக் காரணம் என்று சொல்லப்படுவது உண்டு. அதில் உருசியாவின் கடுங்குளிரும் ஒரு முக்கியப் பங்காற்றியது என்ற கருத்தும் உண்டு. ஆனால் மங்கோலியர்கள் உருசியா மீது குளிர்காலத்தில் படையெடுத்துச் சென்றனர். வென்றனர்.[68] குளிர்காலத்தில் தான் ஆறுகள் உறைந்திருந்தன. எனவே மங்கோலியர்களின் குதிரைகள் ஆற்றைக் கடப்பது எளிதாக இருந்தது.[69] அந்நேரத்தில் உருசியா ஒரு ஒன்றிணைந்த பெரிய நாடாக இருக்கவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். பல்வேறு சிறு சிறு அரசுகளாக இருந்த உருசியாவை ஒன்றிணைத்து அதை ஒரு மாநிலமாக்கியது மங்கோலியர்கள் தான்.

நோவ்கோரோட் கிரானிக்கல் எனும் உருசிய நூலில் மங்கோலியப் படையெடுப்பு பற்றி பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது: "இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று தெரியவில்லை, எங்கு சென்றார்கள் என்றும் தெரியவில்லை; கடவுளுக்குத்தான் தெரியும் நம் பாவங்களுக்குத் தண்டனையாக இவர்களை எங்கிருந்து கூட்டிவந்தார் என்று".[70]

மேற்கு சியா மற்றும் சின் வம்சங்கள்

கி.பி. 1142ல் மேற்கு சியா, சின்/சுரசன் வம்சம் (1115–1234), சாங் வம்சம் மற்றும் தலி அரசு.

கப்பம் கட்டிய தாங்குடுகள் (மேற்கு சியா அல்லது சி சியா) குவாரசமியப் படையெடுப்பின் போது செங்கிஸ் கானுக்கு ஆதரவாகப் படைகளை அனுப்பவில்லை. மேற்கு சியாவும், தோற்கடிக்கப்பட்ட சின் வம்சமும் இணைந்து செங்கிஸ் கானுக்கு எதிராகக் கூட்டணி ஏற்படுத்தினர். மங்கோலியர்கள் திறம்பட பதிலடி கொடுப்பதைத் தவிர்ப்பதற்காக குவாரசமியாவிற்கு எதிரான படையெடுப்பைப் பயன்படுத்தினர். செங்கிஸ் கான் தன் படைவீரன் ஒருவனிடம் "நம்பிக்கை துரோக தாங்குடு அரசு இன்னும் இருக்கிறது" என்று நண்பகலிலும் மாலைப்பொழுதிலும் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் தன்னிடம் கூறுமாறு கூறினார்.

சின் வம்சத் தூதன் ஒருவன் அமைதி உடன்படிக்கை பற்றிப் பேச, பரிசளிக்க ஒரு கிண்ணம் நிறைய அழகிய முத்துக்களுடன் செங்கிஸ் கானிடம் வந்தான். செங்கிஸ் கான் தன் கூடாரத்தின் எதிரில் இருந்த குப்பையில் முத்துக்களை வீசச் சொன்னார். குனிபவர்கள் யார் வேண்டுமானாலும் எடுத்துச் செல்லட்டும் என்றார். பேரரசர்கள் மற்றும் அரசர்கள் பரிசுகளுடன் வந்து அமைதி உடன்படிக்கை செய்வது பின்னர் அவற்றை மீறுவது, இதுவே அவர்களுக்கு வாடிக்கையாகப் போய்விட்டதை அறிந்திருந்தார். தனக்கு வயதாகிவிட்டதை உணர்ந்திருந்தார். துன்பகரமான கனவுகள் தூக்கத்தில் தோன்றி நிம்மதியின்றி இருந்தார். அடிக்கடி "நான் என் கடைசிப் பயணத்தை மேற்கொள்ளப்போகிறேன்" என்றார்.[71]

கி.பி. 1226ல் மேற்கிலிருந்து திரும்பிய செங்கிஸ் கான் தாங்குடுகளுக்கு பதிலடி கொடுக்க ஆரம்பித்தார். இவரது படைகள் சீக்கிரமே கெயிசுயி, கன்சோவு மற்றும் சுசோவு (சியாங்சு மாகாணத்தில் உள்ள சுசோவு அல்ல), மற்றும் இலையுதிர் காலத்தில் சிலியாங்புவைக் கைப்பற்றின. தாங்குடுகளின் படைத்தலைவன் ஒருவன் மங்கோலியர்களைக் கெலன் மலைப் பகுதியில் போருக்கு அழைத்தான். ஆனால் தோற்கடிக்கப்பட்டான். நவம்பரில் செங்கிஸ் கான் தாங்குடுகளின் லிங்சோவு நகரை முற்றுகையிட்டு வென்றார். மஞ்சள் நதியைக் கடந்து தாங்குடுகளின் உதவி இராணுவத்தை வென்றார். புராணத்தின் படி, இவ்விடத்தில் தான் செங்கிஸ் கான் வானத்தில் 5 விண்மீன்கள் வரிசையாக இருப்பதைக் கண்டார். தனது வெற்றிக்கு நல்ல சகுனமாக இதை எண்ணினார்.

கி.பி. 1227ல் செங்கிஸ் கானின் படையானது தாங்குடுகளின் தலைநகரான நிங்சியாவை தாக்கி அழித்து மேலும் முன்னேறி லிந்தியாவோ-ஃபு, சினிங் மாகாணம், சின்டு-ஃபு மற்றும் தெசுன் மாகாணம் ஆகியவற்றை இளவேனிற்காலத்தில் கைப்பற்றியது. தெசூனில், தாங்குடு தளபதி மா சியான்லாங் பல நாட்களுக்குக் கடுமையான எதிர்ப்பைக் கொடுத்தார். மேலும் நகர நுழைவாயிலுக்கு வெளியே படையெடுப்பாளர்களுக்கு எதிராக தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தினார். மா சியான்லாங் பின்னர் போரில் பெற்ற அம்புக் காயங்கள் காரணமாக இறந்தார். தெசூனை வென்ற பிறகு செங்கிஸ் கான் கடுமையான கோடைக்காலம் காரணமாக லியுபன்சனுக்குச் (குயிங்சுயி ஜில்லா, கன்சு மாகாணத்திற்கு) சென்றார். புதிய தாங்குடு பேரரசர் விரைவில் மங்கோலியர்களிடம் சரணடைந்தார். எஞ்சியிருந்த தாங்குடுகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக சரணடைந்தனர். தாங்குடு பேரரசரின் பெயர் "புர்கான்" ஆகும். இப்பெயருக்குக் கடவுள் என்று பொருள். கொல்லும் முன் அரசரின் பெயரை மாற்றச் சொன்னார் செங்கிஸ் கான். அதன் பின்னரே அரசர் கொல்லப்பட்டார். நம்பிக்கை துரோகம் மற்றும் எதிர்ப்பின் காரணமாக செங்கிஸ் கான் தாங்குடு அரச குடும்பம் முழுவதையும் கொல்ல உத்தரவிட்டார். தாங்குடு பரம்பரை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

‘எனக்கென்று தனித்துவமான குணங்கள் எதுவும் கிடையாது. அகந்தை மற்றும் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்ததன் காரணமாக எல்லையற்ற நீல வானமானது என்னைச் சுற்றியுள்ள நாகரிகங்களை கண்டித்துள்ளது.’

தான் பல நாடுகளை வென்றதற்குக் காரணமாகச் செங்கிஸ் கான் கூறியது. (சீனாவில் இருந்த ஒரு தாவோயியத் துறவிக்குச் செங்கிஸ் கான் எழுதிய கடிதத்தில் இருந்து)

செங்கிஸ் கானுக்குப் பின் அடுத்த மன்னன்

செங்கிஸ் கான் மற்றும் அவரது மூன்று மகன்கள். 15ம் நூற்றாண்டு சமி அல்-தவரிக்கின் கையெழுத்துப்படி.
செங்கிஸ் கானுக்கு முன் அமர்ந்திருக்கும் மங்கோலியத் தலைவர்கள்.

செங்கிஸ் கானுக்குப் பின் யார் மன்னன் என்ற கேள்வி அவரது கடைசி ஆண்டுகளில் வயது முதிர்ந்தபோது முக்கியமான பிரச்சினையாக எழத்தொடங்கியது. செங்கிஸ் கானின் மகன் சூச்சியின் உண்மையான தந்தை யார்? என்பது முக்கியமாக சர்சைக்குரியதாக இருந்தது. ஏனெனில் சூச்சி சகோதரர்களில் மூத்தவராக இருந்தார். பாரம்பரிய வரலாற்றுப் பதிவுகளின் படி, சூச்சியின் தந்தை யார்? என்ற சர்ச்சையை சகதை மிகவும் வலுவாக எழுப்பினார். மங்கோலியர்களின் இரகசிய வரலாற்றின் படி, செங்கிஸ் கான் குவாரசமியப் பேரரசின் மீது படையெடுப்பதற்கு முன்பு, சகதை தனது தந்தைக்கும் சகோதரர்களுக்கும் முன்பாக சூச்சியை செங்கிஸ் கானின் வாரிசாக ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று அறிவித்தார். இந்தப் பதட்டத்திற்கு விடையிறுக்கும் வகையிலும்,[72] மற்றும் மேலும் பிற காரணங்களுக்காகவும், ஒகோடி வாரிசாக நியமிக்கப்பட்டார்.

செங்கிஸ் கான், அவரது தளபதிகளான செபே மற்றும் சுபுதை, ஆலோசகர் எலு சுகை, மனைவி, குழந்தைகள் மற்றும் பாதுகாவலர்களுடன்

ஒகோடி

ஒகோடி கான், இயற்பெயர் ஒகோடி (அண். கி.பி. 1185[73]-திசம்பர் 11, 1241), செங்கிஸ் கானின் 3வது மைந்தனும், மங்கோலியப் பேரரசின் 2வது பெரிய கானும் ஆவார். இவர் தந்தை ஆரம்பித்த விரிவாக்கத்தைத் தொடர்ந்தார். மங்கோலியப் பேரரசின் எல்லையை மேற்கு மற்றும் தெற்கு திசைகளில் ஐரோப்பா மற்றும் ஆசியா மீது படையெடுத்து விரிவாக்கி உலகப் பிரபலமானார்.

சூச்சி

செங்கிஸ் கான் அவரது மகன்களுக்கு (குறிப்பாக சகதை மற்றும் சூச்சி ஆகியோருக்கு) இடையேயான மோதல் பற்றி அறிந்து இருந்தார். அவர் இறந்துவிட்டால் அவர்களுக்கு இடையேயான மோதல் குறித்து கவலை கொண்டார். ஆகையால் அவருடைய மகன்களின் மத்தியில் தனது பேரரசைப் பிளவுபடுத்த அவர் தீர்மானித்தார். அவர்கள் அனைவரையும் கான்களாகவும், அவருடைய மகன்களில் ஒருவரை அவரது வாரிசாக நியமிக்கவும் முடிவு செய்தார். சகதை அவரது கோபம் மற்றும் அவதூறான நடத்தை காரணமாக அவநம்பிக்கையாகக் கருதப்பட்டார். ஏனெனில் அவர் தனது தந்தையின் வாரிசாக சூச்சி ஆகவிருந்தால், சூச்சியைப் பின்தொடர மாட்டேன் என்று கூறியிருந்தார். செங்கிஸ் கானின் இளைய மகனான டொலுய், சகோதரர்களில் இளையவராக இருந்தார். அதனால் வாரிசாக நியமிக்கப்படவில்லை. மங்கோலிய கலாச்சாரத்தில் இளைய மகன்களுக்கு அவர்களின் வயது காரணமாக அதிகப் பொறுப்புகள் கொடுக்கப்படுவதில்லை. சூச்சியை வாரிசாக அறிவித்து இருந்தால், சகதை அவருடன் போரிட்டு பேரரசைக் கவிழ்த்துவிடுவார். எனவே, செங்கிஸ் கான் ஒகோடியிடம் அரியணையைக் கொடுக்க முடிவு செய்தார். ஒகோடி, செங்கிஸ் கானால் நம்பகத்தன்மை உள்ளவராகவும், மற்றவர்களுடன் ஒப்பிடும்போது நிலையானவராகவும், நடைமுறை வாழ்க்கை அறிந்தவராகவும், நடுநிலையானவராகவும் இருந்தார். ஒகோடியின் நியமனம் அவரது சகோதரர்களை சமாதானம் செய்யக் கூடிய வகையிலும் இருந்தது.

சூச்சி கி.பி. 1226ல் தனது தந்தையின் வாழ்நாளிலேயே இறந்தார். ராட்சநெவ்சுகி போன்ற சில அறிஞர்கள் சூச்சிக்கு செங்கிஸ் கானின் ஒரு உத்தரவினால் இரகசியமாக விஷம் வைக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்பு பற்றி கருத்து தெரிவித்துள்ளனர். ரசித் அல்-தின் கூறும்போது கி.பி. 1226ம் ஆண்டு இளவேனிற்காலத்தில் தனது மகன்களை மாபெரும் கான் அழைத்தார். அவரது சகோதரர்கள் இந்த உத்தரவை ஏற்றுக் கொண்டபோது, சூச்சி குராசானிலேயே இருந்தார். வரலாற்றாளர் சிசனி கூறும்போது கருத்து வேறுபாடு சூச்சி மற்றும் சகோதரர்களுக்கு இடையே ஊர்கெஞ்ச் முற்றுகைப் போரின்போது சிறு சச்சரவில் இருந்து உருவானது. சூச்சி அழிவில் இருந்து ஊர்கெஞ்சை பாதுகாக்க முயன்றார், ஏனெனில் அது அவருக்கென பரிசாக ஒதுக்கி வைத்திருந்த ஒரு பகுதியில் இருந்தது. சிசனி சூச்சியின் தெளிவான வெளிப்படையான கூற்றுடன் தனது கதையை முடிக்கிறார்: "செங்கிஸ் கான் பல மக்களைப் படுகொலை செய்து, பல நிலங்களை வீணாக்கிவிட்டார். நான் வேட்டையாடும் போது எனது தந்தையைக் கொன்று, சுல்தான் முகமதுவுடன் ஒரு கூட்டணியை உருவாக்கி, இந்த நிலத்தை உயிரோடு கொண்டுவந்து முஸ்லிம்களுக்கு உதவியும் ஆதரவும் வழங்கினால் நான் ஒரு சேவையைச் செய்ததாக இருக்கும்." இந்த திட்டங்களைக் கேட்டதற்குப் பின் செங்கிஸ் கான் தனது மகனுக்கு இரகசியமாக விஷம் வைக்கக் கட்டளையிட்டார் என்று சிசனி கூறுகிறார்; ஆயினும் கி.பி. 1223ல் சுல்தான் முகமது இறந்துவிட்டதால், இந்த கதையின் துல்லியம் கேள்விக்குரியதாகிறது.[74]

குப்லாய் கான்மோங்கே கான்ஒகுல் கைமிஸ்குயுக் கான்தோரேசின் கதுன்ஒக்தாயி கான்டொலுய்செங்கிஸ் கான்


இறப்பும், சமாதியும்

கி.பி. 1227ல் செங்கிஸ் கான் இறப்பின்போது மங்கோலியப் பேரரசு.
தனது தந்தை செங்கிஸ் கானை மரணப் படுக்கையில் காணும் டொலுய்.

செங்கிஸ் கான் மேற்கு சியாவின் தலைநகரான இன்சுவானின் வீழ்ச்சியின்போது ஆகத்து கி.பி. 1227ல் இறந்தார். இவரது மரணத்தின் சரியான காரணம் ஒரு மர்மமாகவே உள்ளது. மேற்கத்திய சியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் அவர் கொல்லப்பட்டதாகவும், நோய், குதிரையிலிருந்து விழுதல், வேட்டையாடுகையில் அல்லது போரிடும்போது ஏற்பட்ட காயம் போன்ற பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. .[75][76][77] மங்கோலியர்களின் இரகசிய வரலாற்றின்படி, செங்கிஸ் கான் அவரது குதிரையிலிருந்து வேட்டையாடும்போது விழுந்து ஏற்பட்ட காயம் காரணமாக இறந்தார். இவர் ஏற்கனவே வயது முதிர்ந்திருந்தார். தனது பயணங்கள் காரணமாகச் சோர்வாக இருந்தார். உக்ரைன் நாட்டு கலிசிய-வோலினிய வரலாற்றுக்கூறின்படி, அவர் போரில் மேற்கத்திய சியாவால் கொல்லப்பட்டதாகக் ஆணித்தரமாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் மார்கோ போலோ செங்கிஸ் கான் தனது இறுதி இராணுவ நடவடிக்கையின்போது அம்பு தாக்கி ஏற்பட்ட தொற்றுக் காரணமாக இறந்தார் என்று எழுதியுள்ளார்.[78] பிந்தைய மங்கோலிய வரலாற்றுக்கூறுகள் இவரது மரணத்தைப் போரில் பரிசாகப் பெறப்பட்ட ஒரு மேற்கத்திய சியா இளவரசியுடன் தொடர்புபடுத்துகின்றன. கி.பி. 17ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து வந்த ஒரு வரலாற்றுக்கூறு இக்கதையை மேலும் அதிகப்படியாக அந்த இளவரசி ஒரு சிறிய கத்தியை மறைத்து வைத்து அவரைக் குத்தினாள் என்று கூறுகிறது. ஆனால் சில மங்கோலிய எழுத்தாளர்கள் இந்தக் கதையைப் போட்டியாளர்களான ஓயிராட்களின் உருவாக்கம் எனச் சந்தேகிக்கின்றனர்.[79] தன் இறப்பிற்குப் பிறகு எதிரி நாடுகள் மங்கோலியர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தலாம் என்று செங்கிஸ் கானுக்குத் தெரிந்திருந்தது. இதன் காரணமாக மங்கோலியப் படைகள் அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட நாடுகளுக்குச் செல்லும் வரை தான் இறந்த விஷயத்தை வெளியில் கூறக்கூடாது என்று சொல்லியிருந்தார்.

மரணத்திற்கு சில வருடங்களுக்கு முன்பு, செங்கிஸ் கான் தனது இனத்தின் பழக்கவழக்கங்களின்படி, அடையாளம் இல்லாமல் தன்னை புதைக்குமாறு கேட்டுக்கொண்டார். இறந்தபின், இவரது உடல் மங்கோலியாவுக்கு, முன்கூட்டியே கூறியபடி கென்டீ அயிமக்கில் உள்ள பிறந்த இடத்திற்கு திரும்பியது. அங்கு ஆனன் ஆறு மற்றும் புர்கான் கல்துன் மலைக்கு (கென்டீ மலைத் தொடரின் பகுதியில்) அருகில் புதைக்கப்பட்டதாகப் பலரும் கருதுகின்றனர். புராணத்தின் படி, இறுதிச் சடங்கு காவலர்கள் தங்கள் பாதையில் எதிர்ப்பட்ட யாரையும், எவற்றையும் இறுதியாக அவர் எங்கு புதைக்கப்பட்டார் என்பதை மறைப்பதற்காகக் கொன்றனர். தற்போதுள்ள கல்லறையானது அவரது ஞாபகார்த்தமாக அவரது இறப்பிற்குப் பல வருடங்கள் கழித்துக் கட்டப்பட்ட நினைவிடமாகும்.

செங்கிஸ் கான் கல்லறை, எசின் ஹோரோ கி நகரம், உள் மங்கோலியா, சீனா

கி.பி. 1939ம் ஆண்டில், சீன தேசியவாத இராணுவ வீரர்கள், இக்கல்லறையை சப்பானியப் படைகளிடமிருந்து பாதுகாக்க ஆண்டவரின் உறைவிடம் (மங்கோலிய மொழியில் எட்சன் கோரூ) எனும் இடத்தில் இருந்து நகர்த்தி வண்டிகள் மீது 900 கிமீ (560 மைல்) கம்யூனிஸ்ட்-கட்டுப்பாட்டில் இருந்த யானான் பகுதி வழியாக எடுத்துச்செல்லப்பட்டு தோங்சன் தஃபோ தியானில் உள்ள புத்த மடாலயத்தில் பத்து ஆண்டுகள் பாதுகாக்கப்பட்டது. கி.பி. 1949ல் கம்யூனிஸ்ட் துருப்புக்கள் முன்னேறியபோது, தேசியவாத படைவீரர்கள் 200 கிமீ (120 மைல்) தொலைவில் மேற்கு நோக்கி சினிங்கில் உள்ள பிரபல திபெத்திய மடாலயமான கும்பம் (அல்லது தயர் சி) மடாலயத்திற்கு மாற்றினர். ஆனால் அதுவும் விரைவில் கம்யூனிஸ்ட் கட்டுப்பாட்டின் கீழ் விழுந்தது. கி.பி. 1954ம் ஆண்டின் முற்பகுதியில், செங்கிஸ் கானின் சவப்பெட்டி மற்றும் பீடங்கள் மங்கோலியாவில் உள்ள ஆண்டவரின் உறைவிடத்திற்குத் திரும்பின. கி.பி. 1956ம் ஆண்டுவாக்கில் அவற்றைப் பாதுகாக்க ஒரு புதிய கோயில் அமைக்கப்பட்டது.[80] கி.பி. 1968ல் சீனப் பண்பாட்டுப் புரட்சியின் போது, சிவப்புக் காவலர்கள் கிட்டத்தட்ட மதிப்புமிக்க எல்லாவற்றையும் அழித்தனர். கி.பி. 1970களில் பீடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன. கி.பி. 1989ம் ஆண்டில் செங்கிஸ் கானின் ஒரு பெரிய பளிங்கு சிலை கட்டிமுடிக்கப்பட்டது.[81]

அக்டோபர் 6, 2004 அன்று, சப்பானிய-மங்கோலியக் கூட்டு தொல்லியல் ஆய்வானது கிராமப்புற மங்கோலியாவில் செங்கிஸ் கானின் அரண்மனையாக நம்பப்படும் ஒரு அரன்மணையை வெளிப்படுத்தியது. இது உண்மையில் ஆட்சியாளரின் நீண்ட காலமாக இழந்த கல்லறையைக் கண்டறிவதற்கான வாய்ப்பை எழுப்புகிறது.[82] நாட்டுப்புறக் கதையின்படி ஒரு நதி திசை திருப்பப்பட்டு அவரது கல்லறையைக் கண்டுபிடிக்க முடியாதபடி அழித்ததாகக் கூறப்படுகிறது ("உருக்" ஐச் சேர்ந்த சுமேரிய மன்னர் கில்கமேஸ் மற்றும் ஹூனர்களின் தலைவர் அட்டிலா ஆகியோர் புதைக்கப்பட்டதைப் போலவே). மற்ற கதைகள் இவரது கல்லறை பல குதிரைகளை அதன் மீது ஓடவிட்டதன் மூலம் அடையாளமின்றி அழிக்கப்பட்டது என்றும், பிறகு மரங்கள் அதன் மீது நடப்பட்டது என்றும், மற்றும் குளிர்காலத்தில் விழும் பனிக்கட்டிகளும் கல்லறையை மறைத்து அதன் பங்கை ஆற்றின என்றும் கூறுகின்றன.

செங்கிஸ் கான் பயன்படுத்தியதாகக் கூறப்படும் பொருட்களை இன்றும் தர்கத் எனப்படும் மக்கள் பாதுகாத்து வருகின்றனர். அவர்கள் 800 வருடங்களாக 36 தலைமுறைகளாக இப்பணியைச் செய்து வருகின்றனர்.[83]

செங்கிஸ் கான் 129,000-க்கும் அதிகமான படைவீரர்களை விட்டுவிட்டு இறந்தார்; 28,000 வீரர்கள் அவரது பல்வேறு சகோதரர்கள் மற்றும் அவரது மகன்களுக்கு வழங்கப்பட்டனர். இளைய மகனான டொலுய் 100,000-க்கும் அதிகமான வீரர்களைப் பெற்றார். இப்படையானது உயர்மட்ட மங்கோலிய குதிரைவீரர்களின் பெரும்பகுதியைக் கொண்டிருந்தது. பாரம்பரிய வழக்கப்படி, இளைய மகன் தனது தந்தையின் சொத்துக்களை பெறுகிறார். சூச்சி, சகதை, ஒகோடி கான், மற்றும் குலானின் மகனான கெலசியன் ஆகியோர் ஒவ்வொருவரும் 4,000 வீரர்களைப் பெற்றனர். மூன்று சகோதரர்களின் சந்ததியினர் ஒவ்வொருவரும் 3,000 வீரர்களைப் பெற்றனர்.

மங்கோலியப் பேரரசு

மங்கோலியப் பேரரசின் தற்போதைய எல்லைக்குள் சுமார் 300 கோடி மக்கள் வசிக்கின்றனர்.[84] 30 நாடுகள் உள்ளன.[85]

அரசியல் மற்றும் பொருளாதாரம்

     மங்கோலியப் பேரரசின் வளர்ச்சி      தங்க நாடோடிக் கூட்டம்      சகதாயி கானரசு      இல் கானேடு      யுவான் அரசமரபு

மங்கோலியப் பேரரசானது செங்கிஸ் கானால் உருவாக்கப்பட்ட குடிமக்கள் மற்றும் இராணுவ சட்டமான யசா சட்ட முறையைப் பின்பற்றியது. பதவிகள் இன மற்றும் மாந்த வகைப்பாட்டின் அடிப்படையில் வழங்கப்படாமல் தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட்டன. இதில் செங்கிஸ் கான் மற்றும் அவரது குடும்பத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. மங்கோலிய சாம்ராச்சியம் அதன் அளவைப் போலவே பல்வேறுபட்ட இன மற்றும் பண்பாடுகளைக் கொண்ட சாம்ராச்சியங்களில் ஒன்றாக இருந்தது. பேரரசின் பல்வேறு நாடோடிக் குடிமக்கள் இராணுவ மற்றும் குடிமக்களின் வாழ்க்கையில் தங்களை மங்கோலியர்களாவே கருதினர். இவர்களில் மங்கோலியர்கள், துருக்கியர்கள் உள்ளிட்டோரும் அடங்குவர்.

மதகுருமார்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. சிலநேரங்களில் அது ஆசிரியர்களுக்கும், மருத்துவர்களுக்கும் நீட்டிப்புச் செய்யப்பட்டது. மங்கோலியப் பேரரசானது சமய சகிப்புத் தன்மையுடன் விளங்கியது. ஏனெனில் மங்கோலியப் பாரம்பரியம் நீண்டகாலமாக மதம் ஒரு தனிப்பட்ட கருத்து என்று வரையறுத்திருந்தது. சட்டம் அல்லது குறுக்கீட்டிற்கு அப்பாற்பட்டது என்று வரையறுத்திருந்தது. செங்கிஸ் கானின் வழிகாட்டியும், எதிர்காலப் பகைவருமான ஓங் கான் நெசுதோரியக் கிறித்தவ மதத்தைத் தழுவினார். பல்வேறு மங்கோலிய மக்கள் சாமனிசம், பௌத்தம் மற்றும் கிறித்தவ மதத்தைப் பின்பற்றினர். மத சகிப்புத்தன்மை ஆசியப் புல்வெளியில் நன்கு நிறுவப்பட்ட கருத்தாக இருந்தது.

தற்கால மங்கோலிய வரலாற்றாசிரியர்கள் செங்கிஸ் கான் அவருடைய வாழ்நாளின் முடிவில், மாபெரும் யசாவின் கீழ் ஒரு குடிமக்களின் அரசை உருவாக்க முயன்றார் என்று கூறுகின்றனர். இதன்மூலம் அனைத்து தனிநபர்களும் சட்டத்தின் முன் சமம் என்ற கருத்து நிறுவப்பட்டிருக்கும். பெண் உரிமை உள்ளிட்டவை நிலைநாட்டப்பட்டிருக்கும்.[86] எனினும், இதற்கோ, சீனர்கள் போன்ற உடல் உழைப்பில்லாத மக்கள் மீது இருந்த பாகுபாடான கொள்கைகளை நீக்கியதற்கோ எந்த ஆதாரமும் இல்லை. மங்கோலியப் பேரரசு மற்றும் குடும்பத்தில் பெண்கள் மிகவும் முக்கியப் பங்காற்றினர். உதாரணமாக, தோரேசின் கதுன், அடுத்த ஆண் ககான் தேர்ந்தெடுக்கப்படும்வரை மங்கோலிய பேரரசை ஆளும் பொறுப்பில் சிறிது காலம் இருந்தார். தற்கால அறிஞர்கள் வர்த்தக மற்றும் தகவல் தொடர்பை ஊக்குவித்ததாகக் கூறப்படும் கொள்கையைப் பாக்ஸ் மங்கோலிகா (மங்கோலிய அமைதி) என்கின்றனர்.

செங்கிஸ் கான் தான் வென்ற நகரங்களை ஆளத் தகுதி வாய்ந்த பணியாளர்கள் தேவை என்பதை உணர்ந்தார். மேலும் மங்கோலியர்கள் நாடோடிகள் என்பதால் அவர்களுக்கு அதில் அனுபவம் இல்லை என்பதையும் உணர்ந்தார். இதற்காக அவர் எலு சுகை எனும் கிதான் இளவரசரைத் தேர்ந்தெடுத்தார். எலு சுகை சின் மன்னர்களிடம் பணியாற்றிய அனுபவம் பெற்றிருந்தார். சின்களை வென்ற பிறகு மங்கோலிய இராணுவம் எலு சுகையைக் கைது செய்தனர். சின்கள் கிதான்களை வென்று ஆட்சிக்கு வந்திருந்தனர். செங்கிஸ் கான், கிதான் வம்சாவளியைச் சேர்ந்த எலு சுகையிடம் அவரின் மூதாதையர்களுக்காகத் தான் பழிவாங்கிவிட்டதாகக் கூறினார். அவரோ தன் தந்தை சின் வம்சத்திற்காக நேர்மையாக பணியாற்றினார் என்றும், தானும் அவ்வாறே பணியாற்றியதாகவும் கூறினார். மேலும் அவர் சொந்தத் தந்தையை எதிரியாக நினைக்கவில்லை என்றும் கூறினார். அதனால் பழிவாங்குதல் என்ற கேள்வி பொருந்தாது என்றார். இப்பதில் செங்கிஸ் கானைக் கவர்ந்தது. எலு சுகை மங்கோலியப் பேரரசின் பகுதிகளை நிர்வகித்தார். தொடர்ச்சியாக வந்த மங்கோலியக் கான்களின் நம்பிக்கைக்கு உரியவராகத் திகழ்ந்தார்.[87]

இராணுவம்

மங்கோலியப் போரின் உருவாக்கப்பட்ட காட்சிகள்

ஜாக் வேதர்போர்டின் கூற்றுப்படி தோற்கடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இணைக்கப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை, அல்லது மொத்தப் பரப்பளவு என எதை எடுத்துக் கொண்டாலும் செங்கிஸ் கான் வரலாற்றில் வேறு எந்த மனிதனையும் விட இரு மடங்கு வென்றுள்ளார்.[88] 400 வருடங்களாக உரோமானியர்கள் கைப்பற்றியதைவிட அதிக நிலப்பகுதியையும், அதிக மக்களையும் இருபத்து ஐந்தே வருடங்களில் மங்கோலிய இராணுவம் கைப்பற்றியது. செங்கிஸ் கான் காலத்தில் மங்கோலியாவின் மொத்த மக்கட்தொகை வெறும் 7 இலட்சம் மட்டுமே. அந்த 7 இலட்சத்தில் இருந்து கிட்டத்தட்ட 1 இலட்சம் வீரர்களைத் தன் இராணுவத்தில் சேர்த்தார். போரில் வீரர்கள் மரணமடைந்தாலும் வெல்லப்பட்டதில் அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட பொருட்களின் பங்கு குடும்பங்களைச் சென்றடைந்தது. மங்கோலியர்கள் பொதுவாகவே நல்ல வில்களை வைத்திருந்தபோதும், ஒவ்வொரு வீரனும் தன் வில்லிற்குப் பொறுப்பெற்றுக் கொண்டனர். ஒவ்வொரு வில்லின் தரமும் வெவ்வேறு அளவில் இருந்தது. அதேநேரம் அவர்கள் எதிர்த்துப் போர்புரிந்த நாகரிகங்களின் இராணுவங்கள் ஆயுதங்களை மொத்தமாகத் தயாரித்தன. செங்கிஸ் கானைப் பொறுத்தவரை விதிகளைப் பின்பற்றி போர்புரிபவர்களுக்கு வெற்றி கிடைப்பதில்லை. விதிகளை உருவாக்கி அதை மற்றவர்களைப் பின்பற்ற வைப்பவர்களுக்குத் தான் வெற்றி கிடைக்கும் என்று அறிந்திருந்தார். செங்கிஸ் கான் முகலி, செபே மற்றும் சுபுதை உள்ளிட்ட அவரது தளபதிகள் மேல் முழுமையான நம்பிக்கை வைத்திருந்தார். அவர்களை நெருக்கமான ஆலோசகர்களாகக் கருதினர். நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்குக் கொடுக்கப்பட்ட அதே சலுகைகளை அவர்களுக்கும் கொடுத்தார். நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மேல் வைத்த நம்பிக்கையை அவர்கள் மேலும் வைத்தார். மங்கோலியப் பேரரசின் தலைநகரமான கரகோரத்தில் இருந்து தொலைவில் அவர்கள் போர் புரியும்போது முடிவுகள் எடுக்க அவர்களுக்கு முழு சுதந்திரம் அளித்து இருந்தார். செங்கிஸ் கான் மத்திய ஆசியாவில் போர்புரிந்தபோது சின் வம்சத்துக்கு எதிரான மங்கோலியப் படைகளுக்குத் தலைமை தாங்கும் பொறுப்பு முகலி என்ற ஒரு நம்பகமான இராணுவ அதிகாரியிடம் வழங்கப்பட்டது. சுபுதை மற்றும் செபே, காக்கேசியா மற்றும் கீவ உருசியா மேல் புகழ்பெற்ற குதிரைப்படைப் படையெடுப்பு எடுக்க அனுமதிக்கப்பட்டனர். இது அவர்கள் தங்கள் சொந்த முயற்சியில் ககான் முன்வைத்த ஒரு யோசனையாகும். செங்கிஸ் கான் கட்டளைத் தீர்மானங்களை எடுப்பதில் தனது தளபதிகளுக்கு ஒரு தன்னாட்சி உரிமையை வழங்கிய அதே நேரத்தில் அவர்களிடமிருந்து நிகரில்லா விசுவாசத்தையும் எதிர்பார்த்தார்.

செங்கிஸ் கானுக்கு விதிகளை மீறுவது பிடிக்காது. சரணடைந்தவர்களை மங்கோலியர்கள் எதுவும் செய்ய மாட்டார்கள். ஒரு முறை சரணடைந்த ஒரு நகரை அவரது மருமகன் ஒருவர் கொள்ளையடித்தார். இதனால் கோபம் கொண்ட செங்கிஸ் கான் அவரைத் தளபதி பொறுப்பிலிருந்து நீக்கி சாதாரண படைவீரனாக்கினார். அடுத்த போரில் படையின் முதல் ஆளாகச் செல்லுமாறு கட்டளையிட்டார். ஆனால் போர் முடிவில் அந்த மருமகன் உயிரோடு திரும்பவில்லை.[89]

மங்கோலியப் படையானது முற்றுகைப் போரிலும் சிறந்து விளங்கியது. தாக்குதலுக்குட்பட்ட நகரங்களுக்கு செல்லும் அனைத்து பொருட்கள், நீர் மற்றும் உணவு போன்றவை முடக்கப்பட்டன. நதிகள் அவற்றின் பாதையிலிருந்து நகரங்களுக்குள் திருப்பிவிடப்பட்டன. எதிரிக் கைதிகள் மங்கோலிய இராணுவத்திற்கு முன்னால் கேடயமாகப் பயன்படுத்தப்பட்டனர். புதிய யோசனைகள், நுட்பங்கள் மற்றும் கருவிகள் ஆகியவற்றை வெல்லப்பட்ட மக்களிடமிருந்து பெற்றனர். முக்கியமாக முஸ்லிம் மற்றும் சீன முற்றுகை இயந்திரங்கள் மற்றும் பொறியாளர்கள் நகரங்களைக் கைப்பற்றுவதில் மங்கோலியக் குதிரைப்படைக்குத் துணை நின்றனர். மங்கோலிய இராணுவத்தின் மற்றொரு நிலையான தந்திரோபாயமானது தோல்வியடைந்து ஓடுவது போல் நடிப்பதாகும். இவை எதிரிப் படையின் அமைப்புக்களை உடைக்கப் பயன்பட்டன. இதன் மூலம் பெரும்பகுதி படையில் இருந்து சிறு படைகள் கவர்ந்திழுக்கப்பட்டன. அவர்கள் மங்கோலியர்களைத் துரத்திக் கொண்டு ஓடுவர். மங்கோலியர்கள் ஏற்கனவே ஓர் இடத்தில் தங்கள் படையை மறைத்து வைத்திருப்பர். துரத்தும் எதிரிகள் அவ்விடத்திற்குக் கொண்டுவரப்படுவர். பின் திடீர் தாக்குதல் நடத்தப்படும். எதிரிகள் கொல்லப்படுவர்.

யாம் வழித்தடங்கள் தொலைதொடர்புக்கும், பொருட்களைக் கொண்டு செல்லவும் பேரரசு முழுவதும் ஏற்படுத்தப்பட்டன. இது முந்தைய சீன மாதிரிகளைத் தழுவி ஏற்படுத்தப்பட்டது. இராணுவப் புலனாய்வு மற்றும் அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புகளைச் சேகரிப்பதற்காக விரைவாகச் செயல்பட செங்கிஸ் கான் இவ்வழித்தடங்கள் மேல் சிறப்பு கவனம் செலுத்தினார். இதற்காக சாம்ராச்சியம் முழுவதும் யாம் வழி நிலையங்கள் நிறுவப்பட்டன.[90]

மங்கோலிய இராணுவம் வெடிமருந்தைப் போருக்குப் பயன்படுத்தியது. மங்கோலியர்களின் வெடிமருந்துத் தாக்குதலில் இருந்து தப்பியவர்கள் மங்கோலியர்கள் டிராகன்களைக் கொண்டு தாக்குவதாக செய்திகளை பரப்பினர். கிராகோஸ் என்ற ஆர்மீனிய வரலாற்றாளர் மங்கோலியர்களின் தோற்றத்தைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: "அவர்கள் நரகத்தில் இருந்து வந்ததைப்போல் பயமுறுத்தும் தோற்றத்தில் இருந்தனர். அவர்களுக்குத் தாடி இல்லை. எனினும் சிலருக்கு உதட்டுக்கு மேல் மற்றும் தாடையில் சிறிதளவு முடி இருந்தது. அவர்கள் குறுகிய மற்றும் உடனே பார்க்கும் கண்களையும், உயர்ந்த கிரீச்சுக் குரலையும் கொண்டிருந்தனர். கடினமான உடலுடன் அதிக காலம் உயிர்வாழக்கூடியவர்களாக இருந்தனர். அவர்கள் திருட்டை விரும்புவதில்லை. திருட்டில் ஈடுபட்டுப் பிடிபடுபவர்களைக் கொல்கின்றனர்."[91]

ஜாக் வெதர்போர்டு என்ற அமெரிக்க மானுடவியலாளர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:" செங்கிஸ் கான் தான் சார்ந்த ஏழைப் பழங்குடியினரில் மிகவும் ஏழைக் குடும்பத்தில் இருந்து வந்தவர். அவர் உயர்குடிமக்கள் துரோகம் செய்பவர்கள் என்று உணர்ந்தார்... உயர்குடி மக்கள் காட்டிக்கொடுப்பவர்கள் அதேநேரத்தில் ஏழை மக்கள் அவருக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்று உணர்ந்தார். செங்கிஸ் கான் காட்டுமிராண்டியாக மற்றும் மிகவும் கொடூரமான மனிதனாகச் சித்தரிக்கப்படுவதன் காரணமாக நான் கருதுவது யாதெனில் நகரங்களை அவர் வெல்லும்போது பணக்காரர்களை அப்படியே கொன்றுவிடுவார்... அவர்களால் செங்கிஸ் கானுக்கு எந்தத் தேவையும் கிடையாது; அவர்களுக்குப் வழக்கமாக எழுதப் படிக்கத் தெரியாது, அவர்களுக்கு மருத்துவம் தெரியாது, அவர்களுக்கு பாடம் கற்றுக்கொடுக்கத் தெரியாது, அவர்கள் மதம் சார்ந்தவர்கள் கூடக் கிடையாது, அவர்களுக்கு ஆடை நெய்யவோ அல்லது மட்பாண்டங்கள் செய்யவோ தெரியாது. எனவே செங்கிஸ் கானைப் பொறுத்தவரை அவர்கள் பயனற்றவர்கள் மற்றும் ஆபத்தானவர்கள். எனவே அவர் தான் வென்ற ஒவ்வொரு நகரத்திலும் அவர்களைக் கொன்றார்."[92]

மங்கோலியர்களைப் பற்றி நல்லவிதமாக எழுதாத ஜூஸ்ஜனி கூட மங்கோலிய இராணுவத்தின் கடும் கட்டுப்பாடுகளை ஒத்துக்கொள்கிறார். அவரது கூற்றுப்படி "தரையில் கிடைக்கும் குதிரை சாட்டை தன் சொந்த சாட்டையாக இல்லாத பட்சத்தில் அதை வீரர்கள் எடுக்கக் கூடாது. பொய் சொல்லவோ, திருடவோ கூடாது".[93]

மங்கோலியக் கான்கள் பயணம் செய்யப் பயன்படுத்திய மாட்டு வண்டி. படம்: மார்க்கோபோலோவின் குறிப்புகளில் இருந்து

கானேடுகள்

தனது இறப்பிற்குப் பல வருடங்களுக்கு முன் செங்கிஸ் கான் மங்கோலியப் பேரரசைக் கானேடுகளாகப் பிரித்து தனது மகன்கள் ஒகோடி, சகதை, டொலுய் மற்றும் சூச்சி (செங்கிஸ் கான் இறப்பதற்குப் பல மாதங்களுக்கு முன்பு சூச்சி மரணமடைந்தார். இதனால் அவரது பகுதிகள் அவரது மகன்களான படு மற்றும் ஓர்டா ஆகியோருக்கு பிரித்தளிக்கப்பட்டன.) ஆகியோரிடம் அளித்தார். சகடை இறந்த காரணத்தால் அவரது அரசானது படு மற்றும் ஒர்டாவிடம் பிரித்தளிக்கப்பட்டது. இக்கான்கள் அனைவரும் ஒகோடியை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டனர். கானேடுகள் பேரரசின் பிரிவுகளாக இருந்தன. இவற்றின் கான்கள் பெரிய கானைப் பின்பற்றும்படி எதிர்பார்க்கப்பட்டனர். அந்நேரத்தில் பெரிய கானாக ஒகோடி நியமிக்கப்பட்டிருந்தார்.

தலைநகரம் கரகோரத்தின் தற்கால இடம்

பின்வருவன செங்கிஸ் கானால் பிரிக்கப்பட்ட கானேடுகள்:

  • பெரிய கானின் பேரரசு: ஒகோடி கான் பெரிய கான் ஆவார். அரசின் பகுதியானது சீனா உள்ளிட்ட பெரும்பாலான கிழக்கு ஆசியா; இந்தப் பிராந்தியமானது பின்னர் குப்லாய் கானின் கீழ் யுவான் வம்சத்தின் பகுதியானது.
  • மங்கோலியத் தாயகம் (தற்கால மங்கோலியா, காரகோரம் உட்பட): மங்கோலிய முறைப்படி இளைய மகன் டொலுய் கான் மங்கோலியத் தாயகத்திற்குப் பக்கத்தில் சிறிய பகுதியைப் பெற்றார்.
  • சகதை கானேடு: செங்கிஸ் கானின் 2ம் மகனான சகதைக்கு மத்திய ஆசியாவும், வடக்கு ஈரானும் வழங்கப்பட்டது.
  • நீல ஹோர்டே படு கானுக்கும், வெள்ளை ஹோர்டே ஓர்டா கானுக்கும் வழங்கப்பட்டது. இரண்டும் பின்னர் தோக்தமிசின் கீழ் கிப்சாக் கானேடு அல்லது கோல்டன் ஹோர்டே கானேடாக இணைக்கப்பட்டன. செங்கிஸ் கானின் மூத்த மகனான சூச்சி, தொலைதூர உருசியா மற்றும் ருதேனியாவைப் பெற்றார். செங்கிஸ் கானுக்கு முன்னால் சூச்சி இறந்துவிட்டதால், அவருடைய பகுதி அவரது மகன்களுக்கும் இடையே பிரிக்கப்பட்டது. படு கான் உருசியப் படையெடுப்பைத் தொடங்கினார். பின்னர் ஹங்கேரி மற்றும் போலந்து மீது படையெடுத்தார். பல படைகள் நசுக்கப்பட்டன. ஒகோடியின் மரணச் செய்தி மூலம் திரும்ப அழைக்கப்பட்டார்.

செங்கிஸ் கானுக்குப் பிறகு

செங்கிஸ் கானின் மகன் ஒகோடி கான்

பொதுவாக மங்கோலியப் பேரரசின் பகுதிகள் முழுவதும் செங்கிஸ் கானால் கைப்பற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. ஆனால் அது உண்மையல்ல. கி.பி. 1227ல் செங்கிஸ் கான் இறந்தபோது மங்கோலியப் பேரரசு காசுப்பியன் கடலிலிருந்து யப்பான் கடல் வரை நீண்டிருந்தது. அதன் விரிவாக்கம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தலைமுறைகளுக்குத் தொடர்ந்தது. செங்கிஸ் கானுக்குப் பின்வந்த ஒகோடி கானின் தலைமையில் விரிவாக்க வேகம் அதன் உச்சத்தை அடைந்தது. மங்கோலியப் படைகள் பாரசீகத்தை அடைந்தன. மேற்கு சியாவிலும், குவாரசமியாவிலும் எஞ்சியவற்றை முடித்தன. சீனாவின் ஏகாதிபத்திய சாங் வம்சத்துடன் மோதின. இறுதியில் கி.பி. 1279ல் சீனா முழுவதையும் கைப்பற்றின. மேலும் உருசியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவையும் அடைந்தன.

கருத்துகள்

மற்ற குறிப்பிடத்தகுந்த படையெடுப்பாளர்களைப் போலவே செங்கிஸ் கானும், இவருடன் சேர்ந்து படையெடுத்தவர்களில் இருந்து, வெல்லப்பட்டவர்களால் வேறு விதமாகப் பார்க்கப்படுகிறார். எதிர்மறையான கருத்துக்கள் பல்வேறு புவியியல் பிராந்தியங்களிலிருந்து பல கலாச்சாரங்களால் எழுதப்பட்ட வரலாறுகளில் தொடர்கின்றன. மங்கோலியப் படையினரால் வெல்லப்பட்ட பிரதேசங்களில் பொதுமக்கள் முறைப்படுத்தப்பட்டப் படுகொலை செய்யப்பட்டது, கொடூரங்கள் மற்றும் அழிவு ஆகியவற்றை அவர்கள் அடிக்கடி மேற்கோளிடுகின்றனர். செங்கிஸ் கானின் வெற்றிகளின் சாதகமான அம்சங்களையும் மற்ற எழுத்தாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

நேர்மறை

கசக்கஸ்தான் நாட்டு நாணயத்தில் செங்கிஸ் கான். நாணய சேகரிப்பாளர்களுக்காக உருவாக்கப்பட்டது, புழக்கத்திற்காக அல்ல.

செங்கிஸ் கான் பட்டுப் பாதையை ஒரே அரசியல் அமைப்புக்குள் கொண்டுவந்தார். இதன் காரணமாக ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசியா ஆகிய மூன்று பகுதிகளும் தொடர்பு மற்றும் வணிகத்தில் முன்னேற்றம் கண்டன. செங்கிஸ் கான் தன் ஆட்சியில் தகுதி அடிப்படையில் பதவி வழங்கினார். சமய சகிப்புத் தன்மையுடன் விளங்கினார். தன்னுடைய கொள்கைகளை அனைத்து வீரர்களுக்கும் தெளிவுபடுத்தினார்.[94]

மங்கோலியாவில்

செங்கிஸ் கான் நாட்டின் உருவாக்கத்திற்காகவும், அரசியல் மற்றும் இராணுவ அமைப்புகளை ஏற்படுத்தியதற்காகவும், போர்களில் கண்ட வெற்றிகள் காரணமாகவும் மங்கோலியாவில் நூற்றாண்டுகளாகப் போற்றப்படுகிறார். துருக்கியர் போன்ற மற்ற இனத்தவராலும் மதிக்கப்படுகிறார். இவர் மங்கோலியர்கள் மத்தியில் அசாதாரணமானவராக உருவாகியுள்ளார். மங்கோலியர்கள் இவரை மங்கோலியக் கலாச்சாரத்தின் சின்னமாகக் கருதுகின்றனர்.

மங்கோலியாவில் கம்யூனிச காலத்தின்போது செங்கிஸ் கான் அடிக்கடி பிற்போக்குத்தனமானவராக விவரிக்கப்பட்டார். இவரைப் பற்றிய நேர்மறைக் கருத்துகள் தவிர்க்கப்பட்டன.[95] கி.பி. 1962ல் இவரது 800வது பிறந்தநாளின்போது இவரது பிறப்பிடத்தில் ஒரு நினைவுச்சின்னம் ஏற்படுத்தப்பட்டது. இவரது 800வது பிறந்த நாளை நினைவுகூரும் ஒரு மாநாடும் நடத்தப்பட்டது. இதற்குச் சோவியத் ஒன்றியத்திலிருந்து விமர்சனம் கிளம்பியது. ஆளும் "மங்கோலிய மக்கள் புரட்சிக் கட்சியின்" மத்தியக் குழுவின் செயலாளர் தோமர்-ஓச்சீர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

ஒரு மலைப்பகுதியில் இவரது ஓவியம், உலான் பத்தூர், 2006

கி.பி. 1990களின் முற்பகுதியில், செங்கிஸ் கான் பற்றிய நினைவுகள் ஒரு சக்திவாய்ந்த புத்துயிர் பெற்றன. "மங்கோலிய மக்கள் குடியரசின்" காலத்தில் அதன் அடக்குமுறைக்கு ஒரு பகுதி எதிர்வினையாக இது ஏற்பட்டது. செங்கிஸ் கான் தேசிய அடையாளத்தின் மையமான நபர்களில் ஒருவராக ஆனார். ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொண்டிருந்த பழங்குடியினரை ஐக்கியப்படுத்தியதில் இவரது பாத்திரத்திற்காக மங்கோலியர்களால் இவர் நேர்மறையாகக் கருதப்படுகிறார். உதாரணமாக, மங்கோலியர்கள் அடிக்கடித் தம் நாட்டை "செங்கிஸ் கானின் மங்கோலியா" என்கின்றனர். தங்களைச் "செங்கிஸ் கானின் குழந்தைகள்" என்கின்றனர். முக்கியமாக இளம்வயதினர் செங்கிஸ் கான் "மங்கோலியர்களின் தந்தை" என்கின்றனர். இருப்பினும், இவரது மிருகத்தனமான உணர்வைப் பற்றிய ஒரு வேறுபாடு உள்ளது. மங்கோலியர் அல்லாதவர்கள் எழுதிய வரலாற்று ஆவணங்கள் செங்கிஸ் கானுக்கு எதிராக நியாயமற்ற முறையில் உள்ளன என்று மங்கோலியர்கள் கருதுகின்றனர். இவரது கொலைகள் மிகைப்படுத்தப்படும் அதேநேரத்தில் நேர்மறையான தன்மையும் வெளிப்படுத்தப்படுவதில்லை என்கின்றனர்.[96]

இன்று மங்கோலியாவில் இவரது பெயர் மற்றும் படங்கள் பொருட்கள், கட்டடங்கள், வீதிகள் மற்றும் பிற இடங்களில் இடம்பெறுகிறது. தினசரிப் பொருட்களான மதுபான பாட்டில்கள் முதல் மிட்டாய் வரை இவர் முகம் காணப்படுகிறது. 500,1000,5000,10000 மற்றும் 20000 மதிப்புள்ள மங்கோலிய தோக்குரோக்கு (₮) பண நோட்டுகளில் இவர் உருவம் காணப்படுகிறது. மங்கோலியாவின் முக்கியமான உலான் பத்தூர் விமான நிலையம் சிங்கிஸ் கான் விமான நிலையம் என்று பெயரிடப்பட்டுள்ளது. பெரிய செங்கிஸ் கான் சிலைகள் தலைநகரத்திற்கு அருகிலும், அந்நாட்டுப் பாராளுமன்றத்திற்கு முன்னும்[97] நிற்கின்றன. சாதாரணப்படுத்துதலைத் தவிர்க்க இவரது பெயர் மற்றும் படத்தை பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் விதிப்பது பற்றி மீண்டும் மீண்டும் விவாதங்கள் நடத்தப்படுகின்றன.[98]

படிமம்:Azért áll itt, mert itt választották Temüdzsint Dzsingisz kánná (It stands here because Temujin was elected to be Chinggis khaan here) - panoramio.jpg
செங்கிஸ் கான் சிலை, எர்தின், தோவ் மாகாணம், மங்கோலியா. இங்குதான் தெமுசினுக்கு செங்கிஸ் கான் என்ற பட்டம் சூட்டப்பட்டது.

மங்கோலியாவின் வரலாற்றில் முக்கியத் தலைவர்களில் ஒருவராகச் செங்கிஸ் கான் கருதப்படுகிறார்.[99] ஒரு அரசியல் மற்றும் இன அடையாளமாக மங்கோலியர்களின் தோற்றத்திற்கு இவர் காரணமானவராக இருக்கிறார். ஏனென்றால் கலாச்சார ஒற்றுமை கொண்ட பழங்குடியினருக்கு இடையே ஒன்றுபட்ட அடையாளம் இல்லை. இவர் பல மங்கோலியப் பாரம்பரியங்களை வலுப்படுத்தினார். பழங்குடி மக்களுக்கு இடையே இடைவிடாத யுத்தம் நடந்த ஒரு காலப்பகுதியில் நிலைத்தன்மையும், ஒற்றுமையும் வழங்கினார். மங்கோலிய மொழிக்கு முதல் எழுத்துருவம் கொடுத்தவரும் இவரே. முதல் மங்கோலியச் சட்டங்களான இக் சசக்கையும் ("மாபெரும் நிர்வாகம்") இவர்தான் உருவாக்கினார்.[100] மங்கோலியா அதிபர் திசகியாகீன் எல்பெக்தோசு, ஊழல் மற்றும் லஞ்சத்தை இக் சசக் கடுமையாகத் தண்டித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.[101] மேலும் அனைத்து குடிமக்களும் நிலை அல்லது செல்வம் சார்ந்து இல்லாமல் சட்டத்தின் கீழ் சமமான பாதுகாப்பைக் கோரிய செங்கிஸ் கானை ஊழல் எதிர்ப்பு முயற்சிகளுக்கு ஆசிரியராகக் கருதுகிறார். செங்கிஸ் கானின் பிறந்தநாளின் 850வது ஆண்டுவிழாவில், அதிபர் "சிங்கிஸ் … நீதியின் தொடக்கம் மற்றும் ஒருங்கிணைப்பானது சட்டத்தின் சமத்துவமேயன்றி, மக்களிடையே உள்ள வேறுபாடுகள் அல்ல என்பதை ஆழமாக உணர்ந்த ஒரு மனிதர். நல்ல சட்டங்கள் மற்றும் விதிகள் ஆடம்பரமான அரண்மனைகளைவிட நீண்ட காலம் வாழ்ந்தன என்பதை அறிந்த ஒரு மனிதர்."[102] சுருக்கமாக, மங்கோலியர்கள் இவரை மங்கோலியப் பேரரசின் தாபகத்தின் அடிப்படை நபராகப் பார்க்கின்றனர். எனவே ஒரு நாடாக மங்கோலியாவிற்கு அடிப்படையானவராவார்.

கி.பி. 2012 முதல், மங்கோலிய சந்திர நாட்காட்டியின்படி குளிர்காலத்தின் முதல் நாள் (இவரது பிறந்த நாள்) தேசிய விடுமுறையாகக் கடைபிடிக்க எல்பெக்தோசால் ஆணையிடப்பட்டுள்ளது.[103]

ஐரோப்பாவில்

நடுக் காலங்களில் மேற்கு ஐரோப்பிய எழுத்தாளர்களின் மத்தியில் செங்கிஸ்கான் பற்றி நேர்மறையான எண்ணம் இருந்தது.[104] ஆங்கிலேய தத்துவவாதியான ரோஜர் பேகன் செங்கிஸ்கானின் பேரரசின் அறிவியல் மற்றும் தத்துவ வலிமையை பாராட்டி எழுதியுள்ளார்.[105] ஆங்கிலேய தூதுவரான ஜெப்ரி சாசர் பின்வருமாறு எழுதினார்:

இத்தாலிய பயணியான மார்க்கோபோலோ செங்கிஸ்கான் "மிகுந்த மதிப்பு கொண்ட, மிகுந்த திறமை உடைய மற்றும் வீரம் நிறைந்த மனிதன்" என்று குறிப்பிட்டுள்ளார்.[106][107]

இருவிதமாகவும்

சீனாவில்

செங்கிஸ் கான் நினைவிடம் ஹோஹோட், உள் மங்கோலியா, சீனா

செங்கிஸ் கான் சீனாவில் இருவேறு விதமாகப் பார்க்கப்படுகிறார். சீனா 65 வருடப் போராட்டத்திற்குப் பிறகு மங்கோலியர்களால் வெல்லப்பட்டது. செங்கிஸ் கான் மற்றும் அவரது வழித்தோன்றல்கள் பற்றிய எண்ணமானது இன்னும் ஒரு கலவையாகவே உள்ளது. சீனாவின் மக்கள்தொகையில் கடுமையான சரிவு ஏற்பட்டது.[108] வடக்கு சீனாவின் மக்கள் தொகை கி.பி. 1195ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 5 கோடியாய் இருந்தது. அது கி.பி. 1235-36ம் ஆண்டின் மங்கோலிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படி 85 இலட்சமாகக் குறைந்தது. இக்காலகட்டத்தில் எண்ணிக்கை தெரியாத அளவு மக்கள் தென் சீனாவிற்குக் குடிபெயர்ந்தனர்.[109]

உள் மங்கோலியாவில் இவருக்கென்று ஒரு நினைவுச்சின்னம் மற்றும் கட்டிடங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. இங்கு குறிப்பிடத்தகுந்த அளவிலே மங்கோலிய இனத்தவர் வாழ்கின்றனர். அவர்களது மக்கள்தொகை சுமார் 50 இலட்சம் ஆகும். இது மங்கோலியாவின் மக்கள்தொகையைப் போல் சுமார் இருமடங்கு ஆகும். செங்கிஸ் கான் சீனா முழுவதையும் வெல்லாதபோதும், இவரது பேரன் குப்லாய் கான் சீனா முழுவதையும் வென்றார். யுவான் அரசமரபைத் தோற்றுவித்தார். பொதுவாக யுவான் அரசமரபுதான் சீனா முழுவதையும் மீண்டும் ஒன்றிணைத்தது எனக் கூறப்படுவது உண்டு. செங்கிஸ் கானை ஒரு இராணுவத் தலைவராகவும், அரசியல் நுண்ணறிவு கொண்டவராகவும் போற்றி ஏராளமான கலைப்படைப்புகள் மற்றும் இலக்கியங்கள் உள்ளன. மங்கோலியர்கள் நிறுவிய யுவான் அரசமரபானது, சீன அரசியல் மற்றும் சமூக அமைப்புமுறைகளில் ஒரு அழிக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தியது. இது அடுத்தடுத்த தலைமுறைகளிலும் பிரதிபலித்தது. இதற்கு முன் இருந்த சின் வம்சத்தில் இலக்கியங்களானது ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்தது.

செங்கிஸ் கான் தாவோயிசத் தலைவர் குயி சுசியை ஆதரித்தார். இப்போது ஆப்கானித்தான் என்றழைக்கப்படும் பகுதியில் தனிப்பட்ட முறையில் அவரைச் சந்தித்தார். சின் மற்றும் சாங் மன்னர்கள் அழைத்தபோது அவர்கள் அழைப்பை ஏற்காத குயி சுசி செங்கிஸ் கானின் அழைப்பை ஏற்று சுமார் 5,000 கி.மீ. தூரத்தைக் கடந்துவந்து அவரைச் சந்தித்தார். ஏனெனில் குயி சுசி செங்கிஸ் கானை கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவராகக் கருதினார்.[110] பின்னர் வட சீனாவில் உள்ள அனைத்து மத விவகாரங்களையும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை செங்கிஸ் கான் குயி சுசிக்கு வழங்கினார்.

செங்கிஸ் கான் மற்றும் குப்லாய் கான் நினைவுச்சின்னம், ஹோலின் கோல், சீனா

எதிர்மறை

பாக்தாத் படையெடுப்பு (1258), சமி அல்-தவரிக் கையெழுத்துப் பிரதியில் இருந்து.

மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக ஈரானில் செங்கிஸ் கான் கிட்டத்தட்ட அனைவராலும் அழிவுகரமான மற்றும் இனப்படுகொலை செய்த போர்த்தலைவராகக் கண்டிக்கப்படுகிறார். இந்தப் பகுதிகளின் மக்கள்தொகைக்கு பெரும் அழிவை ஏற்படுத்தியவராகக் கருதப்படுகிறார்.[111] இசுதீவன் ஆர். வார்த் என்பவர் மங்கோலியப் படையெடுப்புகளைப் பற்றி எழுதியதாவது "ஒட்டுமொத்தமாக, மங்கோலிய வன்முறை மற்றும் அட்டூழியங்கள் ஈரானியப் பீடபூமியின் மக்கள்தொகையில் நான்கில் மூன்று பங்கு வரை கொன்றன, சாத்தியமான முறையிலே 1 முதல் 1.5 கோடி மக்கள். சில வரலாற்றாசிரியர்கள் ஈரானின் மக்கள்தொகை மீண்டும் 20 ஆம் நூற்றாண்டின் மத்தியப்பகுதி வரை அதன் முன்-மங்கோலிய மட்டங்களை அடையவில்லை என மதிப்பிட்டுள்ளனர்."[112]

ஆப்கானித்தானில் (மற்ற துருக்கியரல்லாத முஸ்லிம் நாடுகளிலும்) இவர் பொதுவாக எதிர்மறையாகப் பார்க்கப்படுகிறார். எனினும் சில இனங்கள் இருமுகப் போக்கைக் காட்டுகின்றன. ஏனெனில் ஆப்கானித்தானின் கசாரா அங்கு நிலைநிறுத்தப்பட்ட ஒரு பெரிய மங்கோலிய காவற்படையின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிறது.[113][114]

மெர்வ், சமர்கந்து, ஊர்கெஞ்ச், நிசாபூர், பம்யன், பால்க் மற்றும் ஹெறாத் ஆகிய நகரங்களில் மக்கள் கொல்லப்பட்டனர். இதில் பால்க் ஆரம்பகால ஆரிய நாகரிகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படுகிறது. கோரசான் மாகாணத்தின் பெரும்பகுதிகள் முழுவதுமாக அழிக்கப்பட்டன. இவரது பேரன் குலாகு கான் வடக்கு ஈரானின் பெரும்பகுதிகளை அழித்தார். பாக்தாத்தைச் சூறையாடியதன் மூலம் இசுலாமின் பொற்காலத்தை முடித்தார். எனினும் அவரது படைகள் எகிப்திய அடிமை வம்சத்தால் தடுக்கப்பட்டன. ஹுலாகுவின் வழிவந்த கசன் கான் அடிமை வம்சத்தைத் தோற்கடித்தார். சிரியாவைத் தன் கட்டுப்பாட்டிற்குள் சிறிது காலம் வைத்து இருந்தார், எனினும் தோற்கடிக்கப்பட்டார். பாரசீக வரலாற்றாசிரியர் ரசித்-அல்-தின் ஹமாதனி எழுதிய வரலாறுகளின்படி, மங்கோலியர்கள் மெர்வில் 70,000க்கும், நிசாபூரில் 90,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். கி.பி. 1237ல் செங்கிஸ் கானின் பேரன் படு கான் கீவிய உருசியாவின் மேல் படையெடுத்தார். மூன்றே வருடங்களில் மங்கோலியர்கள் நோவ்கோரோட் மற்றும் புஸ்கோவ் தவிர கிழக்கு ஐரோப்பாவின் அனைத்து முக்கியமான நகரங்களையும் நிர்மூலமாக்கினர்.[115]

திருத்தந்தையின் மங்கோலிய பெரிய கானுக்கான தூதரான சியோவனி டி பிலானோ கர்பினி கீவ் வழியாக பெப்ரவரி 1246ல் பயணித்தார். அவர் பின்வருமாறு எழுதியுள்ளார்:

ஈரானிய மக்களின் நடுவில் செங்கிஸ் கான், இவரது பேரன் ஹுலாகு மற்றும் தைமூர் ஆகியோர் அழிவை ஏற்படுத்தியவர்களாகக் கருதப்படுகின்றனர்.[117][118]

புகழ்பெற்ற முகலாயப் பேரரசர்கள் செங்கிஸ்கானின் பெருமைமிகு வழித்தோன்றல்களாக இருந்தனர். முக்கியமாகத் தைமூரின் வழித்தோன்றல்களாக இருந்தனர். எனினும் அவர்கள் குவாரசமிய ஷாக்கள், துருக்கியர்கள், பாரசீகர்கள், பாக்தாத் மற்றும் டமாஸ்கஸ், நிசாபூர், புகாரா ஆகிய நகரங்களின் குடிமக்கள், நிசாபூரின் அட்டர் போன்ற வரலாற்று நபர்கள் மற்றும் பல குறிப்பிடத்தகுந்த முஸ்லிம்கள் ஆகியோருக்கு எதிரான மங்கோலிய அட்டூழியங்களில் இருந்து தங்களை விலக்கிக் கொண்டனர். எனினும் முகலாயப் பேரரசர்கள் நேரடியாக செங்கிஸ் கான் மற்றும் தைமூரின் மரபை ஆதரித்தனர்; இந்த இருவரின் பெயர்கள் மற்ற புகழ்பெற்ற நபர்களுக்கு வைக்கப்பட்டுள்ளன முக்கியமாகத் தெற்காசியாவின் முஸ்லிம் மக்களிடையே.[119]

உருசியா, மத்திய கிழக்கு, கொரியா, சீனா, உக்ரைன், போலந்து மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளின் பெரும்பாலான பகுதிகளில் செங்கிஸ் கான் மற்றும் இவரது அரசானது அழிவின் காரணமாகவும், மக்கள் தொகை இழப்பின் காரணமாகவும் எதிர்மறையாகப் பார்க்கப்படுகிறது.

வழித்தோன்றல்கள்

முகலாயப் பேரரசர் பாபரின் தாய் செங்கிஸ் கானின் வழித்தோன்றல் ஆவார்.

உடல் தோற்றம்

படிமம்:1000 Tugriks - Recto.jpg
மங்கோலிய தொக்குரோக்கு 1000 பணத்தில் செங்கிஸ் கான்

பாரசீக வரலாற்றாளர் மின்ஹஜ் அல்-சிராஜ் ஜூஸ்ஜனி, குவாரசாமியப் பேரரசின் குராசான் பகுதிக்கு வந்த 60 வயது செங்கிஸ் கானின் தோற்றத்தைப் பின்வருமாறு விளக்குகிறார்: "நல்ல உயரமான மனிதன், சக்திவாய்ந்த வலுவான உடற்கட்டமைப்பு, அவரது முகத்தில் சிறிதளவே முடி இருந்தது, அதுவும் நரைத்திருந்தது, பூனை போன்ற கண்களுடன் இருந்தார்" என்கிறார். செங்கிஸ் கானின் பண்புகளாக அவர் "அர்ப்பணிப்புடைய ஆற்றல், பகுத்தறியும் தன்மை, மேதை, புரிந்துகொள்ளும் தன்மை, பிரமிக்கவைக்கும் தன்மை, எளிமை, உறுதி" ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார். மேலும் எதிரிகளைப் பொறுத்தவரை செங்கிஸ் கான் "படுகொலை செய்பவர், வீழ்த்துபவர், துணிச்சல்காரர், இரத்த வெறி கொண்டவர், மற்றும் இரக்கமற்றவர்" என்று குறிப்பிடுகிறார்.[120][121] இவரை நேரில் கண்ட சாங் வம்சத் தூதர் "பெரிய உடம்புடன், அகன்ற நெற்றியுடன், நீளமான தாடியுடன் மற்றவர்களிடம் இருந்து தனித்துவமாக இருந்தார்" என்று செங்கிஸ்கானைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

செங்கிஸ் கான் யாரையும், அவரது படத்தை வரைவதற்கோ, அவரது சிற்பங்களை செதுக்குவதற்கோ அல்லது நாணயத்தின் மீது அவரது உருவப்படத்தை அச்சிடவோ அனுமதித்தது இல்லை. இவர் இறந்து அரை நூற்றாண்டுக்கு இவரது படத்தை வரைய யாருக்கும் தைரியம் வரவில்லை.

பெரும்பாலான வரலாற்றாசிரியர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உருவப்படமானது தேசிய அரண்மனை அருங்காட்சியகம், தைபே, தைவானில் உள்ளதாகும். இது அவரது இறப்பிற்குப் பிறகு பேரன் குபிலையின் மேற்பார்வையில் வரையப்பட்டதாகும்.

செங்கிஸ் கான் எப்படிப்பட்ட மனிதன்

‘நான் ஆடம்பரத்தை வெறுக்கிறேன். எளிமையை விரும்புகிறேன்... நீங்கள் நல்ல உடை, வேகமான குதிரைகளைப் பெறும்போது உங்கள் பார்வை மற்றும் நோக்கத்தை எளிதாக மறப்பீர்கள். [அத்தகைய சூழ்நிலையில்], நீங்கள் ஒரு அடிமையாகத் தான் இருப்பீர்கள், எல்லாவற்றையும் இழப்பீர்கள்’

செங்கிஸ் கான்

[122] செங்கிஸ் கானிடம் மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் தன்மை (charisma) இருந்தது. இவரது பல தளபதிகள் பல்வேறு தருணங்களில் இவரால் கவர்ந்திழுக்கப்பட்டே இவருடன் இணைந்தனர்.[123] செங்கிஸ் கானின் வாழ்க்கையில் ஒரு தளபதி கூட இவரைவிட்டு விலகியது கிடையாது. செங்கிஸ் கான் என்றுமே தன் நண்பர்களை ஆபத்தில் விட்டுவிட்டுச் சென்றதோ அல்லது அவர்களுக்குத் கொடுத்த வாக்கைக் காப்பாற்றத் தவறியதோ கிடையாது.[124] செங்கிஸ் கான் மனிதர்களைப் படிப்பதில் ஒப்பற்றவராக விளங்கினார். மனித உளவியலை நன்றாக அறிந்திருந்தார்.[125] தன் பேரக்குழந்தைகளிடம் அதிக அன்பு செலுத்தினார்.[126] மாடுமேய்ப்பவர்கள் மற்றும் குதிரைமேய்ப்பவர்கள் என்ன உடை உடுத்தினரோ அதையே தான் தானும் உடுத்தினார். அவர்கள் என்ன உணவு உண்டனரோ அதையே தான் தானும் உண்டார்.[127] மன்னன் என்பதால் வசதியான வாழ்க்கை வாழவில்லை. ஆடம்பரத்தை வெறுத்தார். எளிமையை விரும்பினார். பல செல்வந்த நாடுகளை வென்றபோதும் அவர் தனக்கென ஒரு வீடு கூட கட்டிக்கொண்டது கிடையாது. ஒரு கூடாரத்தில் பிறந்தார், கூடாரத்திலேயே இறந்தார்.

சாவோ ஹங் என்ற சாங் வம்சத்துத் தூதர் செங்கிஸ் கானைச் சந்தித்தபோது அவர் பேரரசருக்கான எந்த சிகை அலங்காராமும் இன்றி ஒரு சாதாரண படைவீரனைப் போல் உச்சத்தலையில் முடியின்றி, தலையின் முன் பக்கம் மற்றும் இரு பக்கவாட்டிலும் தோள்களில் படும்படி முடியுடன் இருந்ததைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார்.[128] மங்கோலிய அரசவை ஒரு பெரிய கூடாரத்திற்குள் அமைந்திருந்தது. அந்த அவையில் அணிகலன் எதுவும் இன்றி இருந்த ஒரே நபர் செங்கிஸ் கான் தான். அவர் உடையாக உடுத்தியதும் ஒரு பழைய ஆடையைத்தான். இவ்விஷயத்தில் செங்கிஸ் கான் பிடிவாதமாக இருந்தார். கரகோரம் என்ற தலைநகரை உருவாக்கியபோதும் அங்கு வாழும் எண்ணம் எதுவும் செங்கிஸ் கானுக்கு இல்லை. "ஒருவேளை என் பிள்ளைகள் கல் வீடுகளிலும் சுவர் கொண்ட நகரங்களிலும் வாழலாம். ஆனால் நான் வாழமாட்டேன்" என்றார். கடைசிவரை நாடோடியாக வாழவே ஆசைப்பட்டார். அவரது உள்ளுணர்வின்படி அவர் மக்களுக்குத் தகுந்த வாழ்க்கையும் இதுவாகத்தான் இருந்தது.[129] தங்கள் தலைவனை செங்கிஸ் கானிடம் காட்டிக் கொடுத்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் தங்கள் தலைவனுக்கு விசுவாசமாக செங்கிஸ் கானை எதிர்த்துப் போரிட்டவர்கள் செங்கிஸ் கானால் நல்ல முறையில் நடத்தப்பட்டுள்ளனர். ஏழைகள் யாரேனும் ஆடையின்றி இருந்தால் தான் அணிந்திருக்கும் ஆடையை அவர்களிடம் கழட்டிக்கொடுத்து விடுவார் என்று இவரைப் பற்றிக் கூறப்பட்டது. செங்கிஸ் கானுக்குத் தான் சவாரி செய்யும் குதிரையைக் கொடையாகக் கொடுக்கும் பண்பு இருந்தது.[130] ஒருமுறை அலகுஸ் டிகின் என்ற ஒங்குட் இனத் தலைவர் நைமர்களை எதிர்த்து செங்கிஸ் கானுடன் இணைந்தார். இதன் காரணமாகக் கொல்லப்பட்டார். செங்கிஸ் கான் அக்குடும்பத்தை பழைய நிலைக்கு உயர்த்தினார். அவரின் மகனுக்குப் பணி வழங்கினார். தன் சொந்த மகளை அவனுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். எலு லுகோ என்ற கிதான் இளவரசன் குவாரசாமியப் போரில் உயிரிழந்தார். அவரின் விதவை மனைவி செங்கிஸ் கானை அவரின் இறுதிப் போரான கன்சு படையெடுப்பின்போது சந்தித்தார். அவரை கருணையுடன் வரவேற்ற செங்கிஸ் கான் அவரது இரு மகன்களையும் தந்தையைப் போல் பாசத்துடன் நடத்தினார். இச்செயல்கள் அவரினுள் இருந்த ஒரு உன்னதமான மனிதனை நமக்குக் காட்டுகிறது.[131]

செங்கிஸ் கானின் மிகவும் அசாதாரணமான பண்புகளில் ஒன்றானது தனது கோபத்தைக் கட்டுப்படுத்தி மற்றவர்களின் பேச்சை கேட்பது ஆகும். செங்கிஸ் கானின் சித்தப்பா இவரிடம் இருந்து விலகி எதிரிகளுடன் இணைந்துகொண்டார். இதனால் கோபமடைந்த செங்கிஸ்கான் அவருக்கு மரண தண்டனை விதித்தார். ஆனால் இவரது நண்பர் பூர்ச்சு, பாதுகாவலர் முகலி மற்றும் தத்தெடுக்கப்பட்ட சகோதரர் சிகி குதுகு ஆகியோர் "உங்களது சொந்த சித்தப்பாவைக் கொல்வது உங்களையே தண்டிப்பதைப் போன்றது. உங்கள் தந்தையின் அடையாளமாக இந்த உலகில் உயிர் வாழ்வது அவர் ஒருவர்தான், அவருக்குப் புரியவில்லை அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்" என்று கூறி செங்கிஸ் கானைக் கண்டித்தனர். செங்கிஸ் கான் அழுக ஆரம்பித்தார். "ஏதோ உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள்" என்று கூறி விட்டு அமைதியாகி விட்டார்.[132] மற்றவர்களிடமிருந்து செங்கிஸ் கானை வேறுபடுத்திக் காட்டும் மற்றொரு பண்பானது நீங்கள் எந்த அளவுக்கு அவரிடம் நெருங்கி பழகுகிறீர்களோ அந்த அளவிற்கு அவரை போற்றத்தோன்றும்.

குவாரசமியா மீதான படையெடுப்பின் போது, ஒரு முஸ்லிம் 100 அடி ஆழமுள்ள கிணற்றில் இருந்து ஒரு காளை மாட்டின் உதவியுடன் சக்கரத்தைச் சுற்றி தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்தார். அவனது நிலையைக் கண்டு பரிதாபப்பட்ட செங்கிஸ் கான் அவனுக்கு வரி மற்றும் கட்டாய வேலையில் இருந்து விலக்கு அளித்தார். பாரசீகர்களின் மருத்துவ நிபுணத்துவத்தை மதித்தார். தன் கண்ணில் ஏற்பட்ட தொற்றை ஒரு பாரசீக மருத்துவரின் மூலம் சரிசெய்து கொண்டார்.[133]

ஆன்மீகம்

செங்கிஸ் கான் ஒரு ஆன்மீகவாதி. குழந்தைப் பருவத்தில் இருந்தே ஆன்மீகம் பற்றி அறிந்து வளர்ந்தார். ஒவ்வொரு போருக்கும் முன்னர் தெங்கிரியை (வான் கடவுள்) வழிபட்டுவிட்டுத்தான் போருக்குக் கிளம்புவார். சீனர்கள் செங்கிஸ் கான் தன் இராணுவத்தை ஒரு கடவுளைப் போல் வழிநடத்தினார் என்கின்றனர்.[134]

அலெக்சாண்டர் மற்றும் மற்றவர்களுடன் ஒப்பீடு

அலெக்சாண்டரிடம் அவரது தந்தை உருவாக்கிக் கொடுத்த இராணுவம் இருந்தது. நெப்போலியனிடம் பிரான்ஸ் என்ற ஒரு நாடு இருந்தது. ஆனால் இவை இரண்டுமே செங்கிஸ் கானிடம் இல்லை. இவற்றை செங்கிஸ் கான் அடிமட்டத்தில் இருந்து உருவாக்கினார்.[135] மற்ற அனைத்து படையெடுப்பாளர்களும் படித்தவர்கள். அலெக்சாண்டர் அரிஸ்டாட்டிலால் பயிற்றுவிக்கப்பட்டார். ஜூலியஸ் சீசர் பண்டைய கிரேக்கத்தின் முழு அறிவையும் பெற்றிருந்தார். நெப்போலியன் அறிவொளி இயக்கம் மூலம் அறிவு பெற்றார்.[136] ஆனால் செங்கிஸ் கானோ தன் சொந்த அனுபவங்களில் இருந்து கற்றுக்கொண்டார். அலெக்சாண்டர், நெப்போலியன் மற்றும் தைமூரின் பேரரசுகள் அவர்கள் இறந்த உடனேயே சிதறுண்டன.[137] ஆனால் செங்கிஸ் கானின் பேரரசு அவரது இறப்பிற்குப் பிறகு 150 வருடங்களுக்கு மேல் நீடித்தது. இவரது வழித்தோன்றலான அலிம் கான் (பொக்காராவின் அமீர், உஸ்பெக்கிஸ்தான்) 1920ல் சோவியத் புரட்சியால் பதவியிறக்கப்படும் வரை செங்கிஸ் கானும் அவரது வழித்தோன்றல்களும் சுமார் 700 வருடங்களுக்கு உலகின் பல்வேறு நாடுகளை ஆண்டு கொண்டிருந்தனர்.

தன் 33ம் வயதில் அலெக்சாண்டர் மர்மமான முறையில் பாபிலோனில் இறந்தார். அவர் இறந்த உடனேயே அவரது வீரர்கள் அவரது குடும்பத்தைக் கொன்றுவிட்டு அவரது நிலப்பகுதிகளை எடுத்துக்கொண்டனர். ஜூலியஸ் சீசரோ அவரது நண்பர் புரூட்டஸ் உள்ளிட்டோரால் உரோமானிய செனட்டில் கொல்லப்பட்டார். நெப்போலியனோ தான் போரில் வென்ற பகுதிகளை இழந்து ஒரு கைதியாக ஒரு தன்னந்தனித் தீவில் இறந்தார்.[138] ஆனால் கிட்டத்தட்ட 70 வயது செங்கிஸ் கானோ தன் படுக்கையில் அன்பான குடும்பத்தார், நம்பிக்கையான நண்பர்கள் மற்றும் அவர் ஆணையிட்டால் உயிரையும் கொடுக்கத் தயாராக இருந்த வீரர்கள் சூழ உயிர்நீத்தார்.

பாரசீக வரலாற்றாளர் ஜூவைனி "போர்த்தந்திரங்களில் சிறந்தவராகக் கருதப்படும் அலெக்சாண்டர் செங்கிஸ் கான் காலத்தில் வாழ்ந்திருந்தால் தந்திரங்களைப் பொறுத்தவரையில் செங்கிஸ் கானின் குடிமகனாகத்தான் இருந்திருப்பார். வேறுவழியின்றி கண்ணைமூடிக் கொண்டு செங்கிஸ் கானைப் பின்பற்றியிருப்பார்" என்கிறார்.[139]

உலகிற்கு செங்கிஸ் கானின் நன்கொடை

சமயசகிப்புத் தன்மையை முதன்முதலில் கொண்டுவந்தது செங்கிஸ் கான் தான். உலகின் முதல் சர்வதேசத் தபால் அமைப்பை ஏற்படுத்தியது செங்கிஸ் கான் தான். அயல்நாட்டுத் தூதர்களுக்கு, தூதர்கள் தன்னுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் எதிரி நாட்டில் இருந்து வந்திருந்தாலும் பாதுகாப்புக் கொடுக்கும் முறையை இவர்தான் முதன்முதலில் செயல்படுத்தினார். இன்றைய ஆங்கிலேயர்களின் அடையாளமாக, நவநாகரிக ஆடையாகக் கருதப்படும் "பேன்ட்கள்" காட்டுமிராண்டிகளாகக் கருதப்படும் மங்கோலியர்களின் ஆடையாகும். இதைச் செங்கிஸ் கானின் படைகள் தான் ஐரோப்பாவுக்கு அறிமுகப்படுத்தின. மங்கோலியர்களின் ஐரோப்பியப் படையெடுப்புக்குப் பின்னர் ஐரோப்பியர்கள் தங்கள் இசைக்கருவிகளை மங்கோலியர்கள் பயன்படுத்திய புல்வெளிப் பகுதி வில்களைக் கொண்டு மீட்ட ஆரம்பித்தனர். ஆச்சரியப்படும்போது பயன்படுத்தப்படும் ஆங்கில வார்த்தை "ஹுரா" (hurray). இதை முதன்முதலில் மங்கோலியர்கள்தான் பயன்படுத்தினர். காகிதம், அச்சிடுதல், திசைகாட்டி மற்றும் வெடிமருந்து ஆகிய நான்கு முக்கியக் கண்டுபிடுப்புகளை ஐரோப்பாவிற்குக் கொண்டு சென்றதில் இவரது இராணுவம் முக்கியப் பங்காற்றியது. இக்கண்டுபிடிப்புகள் ஐரோப்பிய மறுமலர்ச்சி ஏற்பட முக்கியக் காரணமாயின. மங்கோலியர்கள் விசிலடிக்கும் அம்புகளை போர்க்களத்தில் பயன்படுத்தினர்.

இந்தியாவின் மேல் படையெடுக்காததன் காரணங்கள்

சலால் அத்-தின் சிந்து நதியைக் கடந்து தில்லியை ஆண்ட இல்த்துத்மிசிடம் அடைக்கலம் கேட்டபோது அவர் அடைக்கலம் தர மறுத்துவிட்டார். இல்த்துத்மிசு செங்கிஸ் கானின் கோபத்திற்கு ஆளாக விரும்பவில்லை. இந்தியா மங்கோலியப் படையெடுப்புக்கு உள்ளாவதை விரும்பவில்லை. அதேநேரம் இல்த்துத்மிசு பாக்தாத்தின் கலீபாவிற்கு விசுவாசமாக இருந்தார். சலால் அத்-தின் கலீப்பிற்கு எதிராக இருந்தார். செங்கிஸ் கான் இந்தியா மீது படையெடுக்காததற்கு இன்னொரு காரணம் இந்திய கோடைகால வெப்பம். ஈரப்பதம் காரணமாக மங்கோலிய வீரர்களின் வில்கள் வலுவிழந்தன. மங்கோலிய வீரர்கள் வெப்பமண்டல நோய்களால் பாதிக்கப்பட்டனர். செங்கிஸ் கானிடம் இருந்ததோ சிறிய இராணுவம். வீரர்கள் இறக்க ஆரம்பித்தனர். வீரர்கள் இறப்பதை செங்கிஸ் கான் என்றுமே விரும்பியதில்லை. செங்கிஸ் கான் வங்காளம், அசாம், இமயமலை மற்றும் மேற்கு சியா வழியாக மங்கோலியாவிற்குத் திரும்ப விரும்பினார். ஆனால் இல்த்துத்மிசு அனுமதியும் கொடுக்காமல் மறுக்கவும் இல்லாமல் நழுவினார். செங்கிஸ் கானுக்கு இல்த்துத்மிசின் மனது புரிந்தது. சலால் அத்-தின் ஒருவருக்காக போர் புரிய இல்த்துத்மிசு விரும்பவில்லை. செங்கிஸ் கானுக்கும் அதே எண்ணம் தான். எனினும் சலால் அத்-தின் குறிப்பிட்ட காலத்திற்கு இந்தியப் பகுதியில் தான் சுற்றித் திரிந்தார். இல்த்துத்மிசு தன் மகள் ஒருவரையும் சமாதானம் செய்ய அவருக்கு மணம் முடித்துக் கொடுத்தார். மற்றொரு காரணம் இந்தியாவில் புல்வெளிகள் இல்லை. அதனால் மங்கோலியக் குதிரைகளுக்கு உணவளிக்க முடியாது. அதேபோல் வெல்லப்பட்ட பகுதிகளை ஆள மங்கோலியர்களிடம் ஆட்கள் இல்லை. செங்கிஸ் கானுக்கு குறிசொல்பவர்கள் மேல் நம்பிக்கை உண்டு. அவர்களும் இந்தியா மீதான படையெடுப்பைப் பற்றி நல்லவிதமாகச் சொல்லவில்லை. மங்கோலிய வீரர்கள் ஒரு ஒற்றைக்கொம்புக் குதிரையைக் (ஒரு இந்தியக் காண்டாமிருகமாக இருந்திருக்கவே வாய்ப்புகளுண்டு) கண்டதாக செங்கிஸ் கானிடம் கூறினார். இதுவும் நல்ல சகுனமாகப் படவில்லை. இத்தகைய காரணங்களால் செங்கிஸ் கான் இந்தியா மீது படையெடுக்கவில்லை.[140]

நவீன கலாசாரத்தில் சித்தரிப்புக்கள்

செங்கிஸ் கான் பாத்திரத்தில் நடிகர் லீகைன்
செங்கிஸ் கானின் கல்லறை மாடத்தில் உள்ள அவரது சிலை, சீனா

பல படங்கள், நாவல்கள் மற்றும் பிற தழுவல் படைப்புகள் இவரைப் பற்றி வெளிவந்துள்ளன.

முற்றுகை போர் பற்றிய சுவரோவியம், செங்கிஸ் கான் பொருட்காட்சி-சான் ஜோஸ், கலிபோர்னியா, அமெரிக்கா.

புத்தகங்கள்

  • ஜாக் வெதர்ஃபோர்டின் செங்கிஸ் கான் அன்ட் தி மேக்கிங் ஆஃப் மாடர்ன் வேர்ல்ட் (Genghis Khan and the making of modern world – Jack weatherford) (2004)
  • ஜாக் வெதர்ஃபோர்டின் செங்கிஸ் கான் அண்ட் தி குவெஸ்ட் ஃபார் காட்: ஹவ் த வேர்ல்ட்ஸ் கிரேட்டஸ்ட் கான்குவரர் கேவ் அஸ் ரிலீஜியஸ் ஃப்ரீடம் (Genghis Khan and the quest for god: How the world's greatest Conqueror gave us religious freedom – Jack weatherford) (2016)
  • ஃப்ராங்க் மெக்லினின் செங்கிஸ் கான் த மேன் ஹூ கான்குவர்ட் த வேர்ல்ட் (2015)

படங்கள்

  • செங்கிஸ் கான் (1950), மனுவல் கோன்டேவால் இயக்கப்பட்ட ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டுத் திரைப்படம்.
  • சங்கிஸ் கான் (1957), கெதர் கபூரால் இயக்கப்பட்ட ஒரு இந்தியத் திரைப்படம்.
  • சங்கிஸ் கான் (1958), ஒரு பாக்கித்தான் நாட்டுத் திரைப்படம்.
  • தி கான்குவரர் (1956), ஜான் வெயின் தெமுசினாக நடித்த ஒரு ஹாலிவுட் திரைப்படம்.
  • செங்கிஸ் கான் (1965), நடிகர் ஓமர் செரீப் நடித்த ஒரு திரைப்படம்.
  • அண்டர் தி எடர்னல் புளூ ஸ்கை (1990), அக்வன்செரஞ்சின் எக்தைவன் என்பவர் தெமுசினாக நடித்து பல்ஜின்யம் என்பவர் இயக்கிய ஒரு மங்கோலியத் திரைப்படம்.
  • செங்கிஸ் கான் (1992), ரிச்சர்ட் டைசன், சார்ல்டன் ஹெஸ்டன் மற்றும் பாட் மோரிடா நடித்த வெளிவராத ஒரு ஹாலிவுட் திரைப்படம்.
  • செங்கிஸ் கான் (1998), ஒரு மங்கோலியத் திரைப்படம்.
  • செங்கிஸ் கான்: டு தி என்ட்ஸ் ஆப் தி எர்த் அன்ட் சீ அல்லது தி டெசண்டன்ட் ஆப் கிரே உல்ப், ஒரு ஜப்பானிய-மங்கோலியத் திரைப்படம்.
  • மங்கோல் (2007), செர்ஜி போட்ரோ என்பவர் இயக்கிய ஒரு திரைப்படம். இப்படம் அயல்நாட்டு மொழிப்பட வகையில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
  • நோ ரைட் டு டை - சிங்கிஸ் கான் (2008), ஒரு மங்கோலியத் திரைப்படம்.
  • பை தா வில் ஆப் செங்கிஸ் கான் (2009), ஒரு ரஷ்யத் திரைப்படம்.

தொலைக்காட்சித் தொடர்

  • செங்கிஸ் கான் (1987), அலெக்ஸ் மான் என்பவர் நடித்த ஒரு ஹாங்காங் தொலைக்காட்சித் தொடர்.
  • செங்கிஸ் கான் (1987), டோனி லியூ என்பவர் நடித்த ஒரு ஹாங்காங் தொலைக்காட்சித் தொடர்.
  • செங்கிஸ் கான் (2004), ஒரு சீன-மங்கோலிய தொலைக்காட்சித் தொடர். இதில் தெமுசினாக நடித்த பா சென் என்பவர் செங்கிஸ் கானின் 2வது மகன் சகடையின் வழிவந்தவராவார்.

கவிதைகள்

  • தி என்ட் ஆப் செங்கிஸ், எஃப்.எல். லூகாஸ் என்பவர் எழுதிய கவிதைகள். மரணப் படுக்கையில் இருந்த செங்கிஸ் கான் தன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்ப்பது போன்று எழுதப்பட்டிருந்தது.[141]

நாவல்கள்

  • வசிலி யான் எழுதிய ஜெங்கிஸ் கான் மற்றும் படு கான்.
  • கான் இகுல்டென் எழுதிய தி கான்குவரர் நாவல் தொடர்கள்.
  • பியர்ஸ் அந்தோனி எழுதிய ஸ்டெப்பி.
  • தென்னெட்டி சூரி தெலுங்கில் எழுதிய ஜெங்கிஸ் கான்.
  • டிமிட்ரி குளுகோவ்ஸ்கி எழுதிய செங்கிஸ் கான் (லாஸ்ட் இன்கார்நேசன்) இன் மெட்ரோ 2033.

சிறுகதைகள்

  • டக்லஸ் ஆடம்ஸ் மற்றும் க்ரஹாம் சாப்மன் எழுதிய தி ப்ரைவேட் லைப் ஆப் செங்கிஸ் கான்.

இசை

  • மேற்கு ஜெர்மனியின் பாப் இசைக் குழுவான சிங்கிஸ் கான் 1979ல் பாடிய சிங்கிஸ் கான் பாடல்.

காணொளி விளையாட்டுகள்

  • ஏஜ் ஆப் எம்பயர்ஸ் 2: தி ஏஜ் ஆப் கிங்ஸ்
  • குருசேடர் கிங்ஸ் 2
  • டெட்லியஸ்ட் வாரியர்: லெஜன்ட்ஸ்
  • சித் மேயர்ஸ் சிவிலைசேசன்

பெயர்

தமிழில் இவரது பெயர் செங்கிஸ் கான் என்று உச்சரிக்கப்பட்டாலும் சரியான மங்கோலிய உச்சரிப்பு சிங்கிஸ் கான் ஆகும்.

குப்லாய் கான் 1271 இல் யுவான் அரசமரபைத் தோற்றுவித்தபோது செங்கிஸ் கானுக்கு தைசு என்ற பட்டத்தைக் கொடுத்தார்.

காலக்கோடு

நினைவுச்சின்னம் ஹுளுன்புயிர், உள்மங்கோலியா, சீனா
  • 1162: தெமுசின் கென்டீ மலைப்பகுதியில் பிறந்தார்.
  • 9 வயதாகும்போது, அவரது தந்தை எசுகெய் தாதர்களால் விடம் வைத்துக் கொல்லப்படுகிறார், தெமுசினும் அவரது குடும்பமும் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
  • 1184: தெமுசினின் மனைவி போர்ட்டே மெர்கிடுகளால் கடத்தப்படுகிறார். தெமுசின் தன் ஆன்டாவான சமுக்காவையும், வாங் கானையும் உதவிக்கு அழைக்கிறார். அவர்கள் போர்டேவை மீட்கின்றனர்.
  • 1185: முதல் மகன் சூச்சி பிறக்கிறார். போர்ட்டே மீட்கப்பட்ட சில காலத்தில் குழந்தை பிறந்ததால் அதன் தந்தை யார் என்ற கேள்வி எழுகிறது.
  • 1190: தெமுசின் மங்கோலியப் பழங்குடியினரை இணைக்கிறார், அவர்களது தலைவனான பின்னர் யசா சட்டங்களை வகுக்கிறார்.
  • 1201: சமுக்காவின் சதரன் இனத்தை வெல்கிறார்.
  • 1202: தாதர்களை வென்ற பிறகு வாங் கானின் வாரிசாகிறார்.
  • 1203: வாங் கானின் கெரயிடுகளை வெல்கிறார். வாங் கான் தன் கூட்டாளிகளான நைமர்களாலேயே எதிர்பாராத விதமாகக் கொல்லப்படுகிறார்.
  • 1204: நைமர்களை வெல்கிறார். அனைத்து இனங்களும் இணைக்கப்பட்டு மங்கோலியர்கள் ஆகின்றனர்.
  • 1206: சமுக்கா கொல்லாப்படுகிறான். தெமுசினைப் பின்பற்றுபவர்கள் அவருக்குச் செங்கிஸ் கான் என்ற பட்டத்தைக் குறுல்த்தாயில் சூட்டுகின்றனர்.
  • 1207–1210: வடமேற்கு சீனாவையும், திபெத்தின் சில பகுதிகளையும் கொண்ட மேற்கு சியா மீது படையெடுக்கிறார். மேற்கு சியா அடிபணிகிறது. உய்குர்கள் அமைதியாக அடிபணிகின்றனர். இதன் காரணமாக மதிப்புடன் மங்கோலியப் பேரரசில் பணியாற்றுகின்றனர்.
  • 1211: குறுல்த்தாய்க்குப் பிறகு வட சீனாவின் சின் வம்சம் (1115–1234) படையெடுப்புக்கு உள்ளாகிறது.
  • 1215: பெய்ஜிங் வீழ்கிறது. செங்கிஸ் கான் காரா கிதையின் பக்கம் தன் கவனத்தைத் திருப்புகிறார்.
  • 1219–1222: குவாரசமியப் பேரரசு வெல்லப்படுகிறது.
  • 1226: மங்கோலியர்களுக்கு எதிராக அணி சேர்ந்ததால் மேற்கு சியாவின் மீது படையெடுக்கிறார்.
  • 1227: தாங்குடுகளை வென்ற பிறகு செங்கிஸ் கான் இறக்கிறார்.

இதனையும் காண்க

குறிப்புகள் (ஆங்கிலம்)


  1. மொங்கோலியம்: Тэмүжин தெமுசின்;[1]
    பண்டைய சீனம்: 鐵木真; எளிய சீனம்: 铁木真பின்யின்: டியேமுசென்வேட்-கில்சு: டியேஹ்3-மு4-சென்1
  2. இவரது பெயர் "செங்கிஸ் கான்" என்று தமிழில் உச்சரிக்கப்பட்டாலும், மங்கோலிய வரலாற்றாசிரியர்கள் பொதுவாக "சிங்கிஸ்" என்ற உச்சரிப்பையே பயன்படுத்துகின்றனர், அதுவே மொங்கோலிய உச்சரிப்புடன் ஒத்தும் போகிறது.[2]
  3. பண்டைய சீனம்: 成吉思汗பின்யின்: செங்ஜிசி ஹான்வேட்-கில்சு: செங்2-சி2-சு1 ஹான்4

உசாத்துணை

குறிப்புகள் (தமிழ்)

  1. ஜெயராமன், பாலா (ஜனவரி 01, 2011). வில்லாதி வில்லன். பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9-3513-5122-1. https://books.google.co.in/books?id=BJuPCgAAQBAJ&dq=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D&hl=en&sa=X&ved=0ahUKEwihwo--q6XYAhXDQ48KHSiDB4cQ6AEILzAB. 
  2. "ரத்த சரித்திரம்". Archived from the original on ஆகத்து 12, 2012. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 24, 2017. {{cite web}}: Unknown parameter |dead-url= ignored (help)

குறிப்புகள் (ஆங்கிலம்)

  1. "நடு ஆசியப் பத்திரிக்கை". நடு ஆசியப் பத்திரிக்கை (ஓ. கரசோவிட்சு) 5: 239. 1959. https://books.google.com/books?id=PjjjAAAAMAAJ. பார்த்த நாள்: சூலை 29, 2011. 
  2. மார்கன், தாவீது (2007). மங்கோலியர்கள் (2 ). பிளாக்வெல் பதிப்பகம். பக். 186. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4051-3539-9. https://books.google.co.in/books?id=2A8jnQEACAAJ&dq=editions:wo8uD9YDWysC&hl=en&sa=X&ved=0ahUKEwiJweCU06LYAhWBKY8KHfDMBpkQ6AEIKzAB. 
  3. 3.0 3.1 ரசீத் அல்-தின் என்பவர் செங்கிஸ் கான் கி.பி. 1155ம் ஆண்டில் பிறந்தார் என்று வாதிடுகிறார். அதேநேரத்தில் 'யுவான்ஷி' (元史, "யுவான் வம்சத்தின் வரலாறு") கி.பி. 1162 அவரது பிறந்த வருடம் என பதிவுசெய்கிறது. ராட்சநெவ்சுகி என்பவர் கூறுவதன் படி, கி.பி. 1155ல் இவர் பிறந்தார் என்கிறார். மேலும் இவர் தனிப்பட்ட முறையில் தன் 72வது வயதில் தாங்குடுகளுக்கு எதிரான போருக்குத் தலைமை தாங்கினார் என்று பொருள்படுகிறது. மேலும், ஆல்டன் டாப்சி (17ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு மங்கோலிய வரலாற்றுக்கூறு), செங்கிஸ் கானின் சகோதரி தெமுலின், இவரைவிட ஒன்பது ஆண்டுகள் இளையவர் என்று குறிப்பிடுகிறது; ஆனால் இரகசிய வரலாறு, மெர்கிடுகளின் தாக்குதல் நடந்த சமயத்தில் தெமுலின் ஒரு குழந்தை என்று குறிப்பிடுகிறது, செங்கிஸ் கான் கி.பி. 1155ல் பிறந்திருந்தால் அந்த நேரத்தில் அவரது வயது 25 ஆக இருந்திருக்கும். சாவோ ஹங் என்கிற சாங் வம்சத் தூதர் தனது பயணத்தின்போது தான் கேள்வி கேட்ட மங்கோலியர்கள் அனைவரும் அவர்களது வயதுகளை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை என்று கூறுகிறார்.
  4. ராட்ச்னெவ்சுகி, பால் (1991). செங்கிஸ் கான்: அவரது வாழ்க்கை மற்றும் மரபு. பிளாக்வெல் பதிப்பகம். பக். 142. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-631-16785-4. https://books.google.co.in/books/about/Genghis_Khan.html?id=eCfVjwEACAAJ&redir_esc=y. "செங்கிஸ் கான் ஆகத்து 1227ல் தான் இறந்தார் என்று ஓரளவுக்கு உறுதியாகக் கூற முடியும்; ஆனால் எந்தத் தேதியில் என்பதில் வரலாற்று ஆதாரங்கள் வேறுபடுகின்றன." 
  5. ஹரால்ட் லாம்ப். "செங்கிஸ் கான் அனைத்து மனிதர்களின் பேரரசர்". தோர்ன்டன் பட்டர்வொர்த் லிமிடெட் லண்டன் – via இன்டர்னெட் ஆர்கிவ்.
  6. மார்கன். மங்கோலியர்கள். பக். 5.
  7. ஜேக்கப் டேவிட்சன். "எக்காலத்திலும் பணக்காரர்களாக விளங்கிய 10 நபர்கள்". சி.என்.என். மனி. Archived from the original on 2015-08-24. பார்க்கப்பட்ட நாள் 2018-08-31. {{cite web}}: Unknown parameter |dead-url= ignored (help).
  8. சான்டர்சு, யோவான் சோசப் (2001). மங்கோலிய வெற்றிகளின் வரலாறு. பிலடெல்பியா: பென்சில்வேனியாப் பல்கலைக்கழகப் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8122-1766-7. 
  9. யோவான் மேன் (2004). செங்கிஸ் கான்: வாழ்க்கை, இறப்பு, மற்றும் உயிர்த்தெழல் (மறுபதிப்பு, விளக்கப்பட்டது ). பன்டம் பதிப்பகம். பக். 254–55. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-312-36624-8. https://books.google.com/books?id=OXTv9a0HZakC&lpg=PA247&dq=tangut%20castrate%20genghis&pg=PA254#v=onepage&q&f=false. பார்த்த நாள்: மே 17, 2014. 
  10. இயான் செப்ரீசு (2007). மங்கோலியா: பொருளாதார மற்றும் அரசியல் முன்னேற்றங்களுக்கான ஒரு வழிகாட்டி. டய்லர் மற்றும் பிரான்சிசு. பக்கங்கள். 5–7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-42545-X
  11. "செங்கிஸ் கான்". வடக்கு சார்சியாக் கல்லூரி மற்றும் மாநிலப் பல்கலைக்கழகம். Archived from the original on மார்ச் 6, 2010. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 26, 2010. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help); Unknown parameter |deadurl= ignored (help)
  12. பேதுரு டய்லர் (மே 27, 2015). "உலகத்தின் மிகப்பணக்காரத் தீவிரவாத இராணுவம்". பி.பி.சி. சிரச்சேதங்களும் மற்றும் மொத்தமாகக் கொல்லுதலும் ஐ.எஸ்.ஸின் முத்திரை ஆகும் - முழுக் கிராமங்களும் கொல்லப்பட்டுள்ளன, பெண்கள் அடிமைகளாக விற்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்தக் கொலைகள் எப்போதாவது நடைபெறுவது கிடையாது. இது இரக்கமற்றதாகவும் மற்றும் கணக்கிடப்பட்டும் நடத்தப்படுகிறது, முன்னாள் பிரித்தானிய உளவுத்துறை அதிகாரி அலைசிடர் குரூக் குறிப்பிடுவதன் படி: 'அவர்கள் உண்மையில் ஒரு வகையில் செங்கிஸ் கானையும் மற்றும் இராணுவப் படையெடுப்புகளுக்கு மங்கோலிய முறையையும் பின்பற்றுகின்றனர். நீங்கள் உங்கள் எதிரிகளிடம் மொத்தமான பயத்தை உருவாக்குகிறீர்கள், மற்றும் ஒரு கிராமத்திற்கு முதல் முறையாகச் செல்லும்போது நீங்கள் அனைவரையும், நாய்களையும், பூனைகளையும், அனைத்தையும் கொல்கிறீர்கள். அதனைத் தரைமட்டம் ஆக்குகிறீர்கள்.'
  13. "அவரது வழிகளின் யுகம்". 31 திசம்பர் 1995. Archived from the original on 17 பிப்ரவரி 2019 – via வாஷிங்டன்போஸ்ட்.காம். {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  14. புர்கன், மைக்கேல் (2009). மங்கோலியர்களின் பேரரசு. செல்சீ ஹவுஸ் பதிப்பகத்தார். பக். 23. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4381-0318-1. https://archive.org/details/EmpireOfTheMongols. 
  15. ராட்ச்னெவ்சுகி, பால் (1991). செங்கிஸ் கான்: அவரது வாழ்க்கை மற்றும் மரபு. பிளாக்வெல் பதிப்பகம். பக். 9–10. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-631-16785-4. https://books.google.co.in/books/about/Genghis_Khan.html?id=eCfVjwEACAAJ&redir_esc=y. 
  16. எல். பெக்வித், கிறித்தோபர் (2009). பட்டுப்பாதையின் பேரரசுகள்: வெண்கலக் காலம் முதல் தற்காலம் வரை நடு ஐரோவாசியாவின் வரலாறு. பிரின்சுடன் பல்கலைக்கழகப் பதிப்பகம். பக். 184. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-691-13589-4. https://books.google.co.in/books?id=-Ue8BxLEMt4C&printsec=frontcover#v=onepage&q&f=false. 
  17. கேம்பெல், மைக். "தெமுசின் என்ற பெயரின் பொருள் தோற்றம் மற்றும் வரலாறு". Behind the Name. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 29, 2016. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  18. கிலாசு, சிரில்; சுமித், ஹசுடன் (ஜனவரி 2003). இசுலாமின் புதியக் கலைக்களஞ்சியம். பக். 313. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7591-0190-6. https://books.google.com/?id=focLrox-frUC&pg=PA313&lpg=PA313&dq=Tem%C3%BCjin+means+%22blacksmith%22.#v=onepage&q=Tem%C3%BCjin%20means%20%22blacksmith%22.&f=false. 
  19. மார்கன், தாவீது (1990). மங்கோலியர்கள் (ஐரோப்பிய மக்கள்). பக். 58. https://books.google.co.in/books?id=7nvOSTs8E8EC&dq=morgan+david+mongols&hl=en&sa=X&ved=0ahUKEwixrp7oq6XYAhVIo48KHVrYBYUQ6AEIJjAA. 
  20. ஜாக்சன்-லவுபர், குயிடா மிரில் (1994). பாரம்பரிய இதிகாசங்களின் கலைக்களஞ்சியம். பக். 527. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-87436-724-9. https://books.google.co.in/books?id=NZgYAAAAIAAJ&q=Encyclopedia+of+traditional+epics&dq=Encyclopedia+of+traditional+epics&hl=en&sa=X&ved=0ahUKEwiLufufrKXYAhWBr48KHUgeAo4Q6AEIJjAA. 
  21. கான், பால் (1998). மங்கோலியர்கலின் இரகசிய வரலாறு: சிங்கிஸ் கானின் தோற்றம் (விரிவாக்கப்பட்ட பதிப்பு): யுவான் சாவோ பி சியின் தழுவல், பிரான்சிசு உட்மன் கிலீவ்சின் ஆங்கில மொழிபெயர்ப்பின் அடிப்படையில். ஆசியக் கலாச்சாரத் தொடர். பாசுடன்: செங் மற்றும் திசுயி நிறுவனம். பக். 192. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-88727-299-1. https://books.google.co.in/books?id=GKCtl8BLaEsC&printsec=frontcover&dq=Secret+History+of+the+Mongols:+The+Origin+of+Chingis+Khan&hl=en&sa=X&ved=0ahUKEwjgwcu2raXYAhXEMI8KHQY_Bp0Q6AEIJjAA#v=onepage&q=Secret%20History%20of%20the%20Mongols%3A%20The%20Origin%20of%20Chingis%20Khan&f=false. 
  22. க்லீவ்ஸ், ஃப்ரான்சிஸ் உட்மேன் (1982). மங்கோலியர்களின் இரகசிய வரலாறு. ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பக். 17. https://archive.org/details/Cleaves1982SecretHistoryMongols. 
  23. "உங்கள் சூழ்நிலைகளை மறுவடிவமைத்தல்: உலகின் ஆட்சியாளராக செங்கிஸ் கானின் உயர்வு". 300 மனிதன். Archived from the original on 2018-11-19. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 29, 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |dead-url= ignored (help)
  24. வெதர்போர்டு, ஜாக் (மார்ச் 22, 2005). செங்கிஸ் கான் மற்றும் நவீன உலகத்தின் உருவாக்கம். பக். 23. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-307-23781-1. https://books.google.com/books?id=5HCaqYbD5t0C&lpg=PR3&dq=the%20Making%20of%20the%20Modern%20World&pg=PA23#v=onepage&q=the%20Making%20of%20the%20Modern%20World&f=false. பார்த்த நாள்: திசம்பர் 16, 2014. 
  25. டக்லஸ், ஆர் கே (1877). செங்கிஸ் கானின் வாழ்க்கை: சீன மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது. ட்ருப்னர் அன் கோ. பக். XXXIII-XXXIV. https://archive.org/details/cu31924022996270/page/n0. 
  26. மைக்கேல், ப்ரவ்டின் (1940). மங்கோலியப் பேரரசு அதன் வளர்ச்சி மற்றும் மரபு. ப்ராட்போர்ட் மற்றும் டிக்கன்ஸ். பக். 41. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-138-53687-6. https://archive.org/details/in.ernet.dli.2015.325365. 
  27. "செங்கிஸ் கான் சரிதை (1162/7)". சரிதை ஒளியலை வரிசை. Archived from the original on சூலை 16, 2009. பார்க்கப்பட்ட நாள் மே 20, 2008. {{cite web}}: Unknown parameter |dead-url= ignored (help)
  28. வெதர்போர்டு, ஜாக் (2010). மங்கோலிய இராணிகளின் இரகசிய வரலாறு: செங்கிஸ் கானின் மகள்கள் அவரது பேரரசை எவ்வாறு மீட்டனர். நியூயார்க்: மகுடப் பதிப்பகக் குழுமம். பக். xiii, 2. https://books.google.co.in/books?id=z0-i93wTDJUC&printsec=frontcover&dq=Secret+History+of+the+Mongol+queens&hl=en&sa=X&ved=0ahUKEwiHlM7craXYAhXGO48KHR4cB0kQ6AEIJjAA#v=onepage&q=Secret%20History%20of%20the%20Mongol%20queens&f=false. 
  29. கிரவுசட், ரீன் (1944). உலகை வென்றவர்: சிங்கிஸ்-ககானின் வாழ்க்கை. நியூயார்க்: வைக்கிங் பதிப்பகம். https://www.goodreads.com/book/show/983069.Conqueror_of_the_World. 
  30. கில்டிங்கர் 1997, பக்கம். 113.
  31. 31.0 31.1 கில்டிங்கர் 1997, பக்கம். 114
  32. லேன் 2004, பக்கம். xxvii
  33. வெதர்போர்டு, ஜாக் (2005). செங்கிஸ் கான் மற்றும் நவீன உலகத்தின் உருவாக்கம். மகுடப் பதிப்பகக் குழுமம். பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-307-23781-1. https://books.google.co.in/books?id=A8Y9B5uHQcAC&printsec=frontcover&dq=genghis+khan+biography&hl=en&sa=X&ved=0ahUKEwjcyt68r6XYAhXFpo8KHSzoCSYQ6AEIKzAB#v=onepage&q=genghis%20khan%20biography&f=false. 
  34. 34.0 34.1 34.2 லேன் 2004, பக்கம். 23
  35. பிரன், மிக்கல் (2012). செங்கிஸ் கான். லண்டன்: ஒரு உலக வெளியீடுகள். பக். 35. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-78074-204-5. https://books.google.com/books?id=ndPZAQAAQBAJ&printsec=frontcover#v=onepage&q&f=false. 
  36. 36.0 36.1 வெதர்போர்டு, ஜாக் (2004). "2: மூன்று ஆறுகளின் கதை". செங்கிஸ் கான் மற்றும் நவீன உலகத்தின் உருவாக்கம். மூன்று ஆறுகள் பதிப்பகம். பக். 44. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-609-80964-4. https://books.google.co.in/books?id=A8Y9B5uHQcAC&printsec=frontcover&dq=genghis+khan+biography&hl=en&sa=X&ved=0ahUKEwjcyt68r6XYAhXFpo8KHSzoCSYQ6AEIKzAB#v=onepage&q=genghis%20khan%20biography&f=false. 
  37. 37.0 37.1 மேன், யோவான் (2004). செங்கிஸ் கான்: வாழ்க்கை, இறப்பு மற்றும் உயிர்த்தெழல். லண்டன்; நியூயார்க்: பன்டம் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-593-05044-4. https://books.google.com/books?id=OXTv9a0HZakC&printsec=frontcover&vq=death#v=onepage&q&f=false. 
  38. யூல், கென்றி (1993). மார்க்கோ போலோவின் பயணங்கள். கூரியர் நிறுவனம். பக். 239. https://books.google.co.in/books?id=RhE5ZUcZ_Q4C&printsec=frontcover&dq=travels+of+marco+polo+henry&hl=en&sa=X&ved=0ahUKEwitxZ2rsKXYAhXHNY8KHWjJBVYQ6AEIJjAA#v=onepage&q=travels%20of%20marco%20polo%20henry&f=false. 
  39. மார்சல், இராபர்ட் (1993). கிழக்கிலிருந்து புயல்: செங்கிஸ் கான் முதல் குபிலை கான் வரை. கலிபோர்னியாப் பல்கலைக்கழகப் பதிப்பகம். பக். 32. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-520-08300-4. https://books.google.co.in/books?id=YQleM5Yc0VAC&pg=PA32&dq=jamukha+lost&hl=en&sa=X&ved=0ahUKEwic-9T9kKTXAhUJS48KHWhgD_0Q6AEIMTAC#v=onepage&q=jamukha&f=false. பார்த்த நாள்: நவம்பர் 4, 2017. 
  40. மேன், யோவான் (சூன் 19, 2014). மங்கோலியப் பேரரசு: செங்கிஸ் கான், இவரது வழித்தோன்றல்கள் மற்றும் நவீன சீனாவின் நிறுவல். ரான்டம் ஹவுஸ். பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4481-5464-7. https://books.google.co.in/books?id=5rXmAgAAQBAJ&pg=PT39&dq=jamukha+1204&hl=en&sa=X&ved=0ahUKEwjGrezDk6TXAhXKLY8KHU0dDLkQ6AEIJTAA#v=onepage&q=jamukha%201204&f=false. பார்த்த நாள்: நவம்பர் 4, 2017. 
  41. டீ ஹார்டோக், லியோ (2004). செங்கிஸ் கான்: உலகத்தை வென்றவர். டவுரிஸ் பார்க்கே பேப்பர்பேக்ஸ். பக். 30. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-86064-972-1. https://books.google.co.in/books?id=a4p9C6J35XYC&pg=PA30&dq=jamuqa+died&hl=en&sa=X&ved=0ahUKEwjHzY_C_KzYAhUV5o8KHd8dC_UQ6AEIWTAJ#v=onepage&q=jamuqa%20died&f=false. பார்த்த நாள்: டிசம்பர் 28, 2017. 
  42. ஆனன், உர்குங்கே (1990). சிங்கிஸ் கானின் வரலாறு மற்றும் வாழ்க்கை: மங்கோலியர்களின் இரகசிய வரலாறு. ப்ரில் ஆர்கைவ். பக். 120. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9-0040-9236-5. https://books.google.co.in/books?id=AcwUAAAAIAAJ&pg=PA68&dq=genghis+khan+measuring+against+linchpin&hl=en&sa=X&ved=0ahUKEwjb08rk_qzYAhULOI8KHUCBC0wQ6AEIJjAA#v=onepage&q=linchpin&f=false. பார்த்த நாள்: டிசம்பர் 28, 2017. 
  43. கெல்பெர், ஹேரி (01 ஜூலை 2011). டிராகன் மற்றும் அயல்நாட்டுச் சாத்தான்கள்: சீனா மற்றும் உலகம், கி.மு. 1100 முதல் தற்காலம் வரை. புளூம்ஸ்பரி பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4088-2184-8. https://books.google.co.in/books?id=m8VS9FyJU4UC&pg=PT50&dq=genghis+khan+title+1206&hl=en&sa=X&ved=0ahUKEwjE5LWTgq3YAhXINI8KHbHbA9A4KBDoAQg6MAQ#v=onepage&q=genghis%20khan%20title%201206&f=false. பார்த்த நாள்: டிசம்பர் 28, 2017. 
  44. எஸ்கில்ட்சென், ஸ்டீபன் (2004). ஆரம்ப குவான்சென் தாவோயிய ஆசிரியர்களின் கற்பித்தல்கள் மற்றும் பயிற்சிகள். நியூயார்க் மாநிலப் பல்கலைக்கழகப் பதிப்பகம். பக். 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7914-6045-0. https://books.google.co.in/books?id=OfBdDuham2AC&printsec=frontcover&dq=The+Teachings+and+Practices+of+the&hl=en&sa=X&ved=0ahUKEwj8y8iksaXYAhVIQY8KHfzUAgUQ6AEIJjAA#v=onepage&q=The%20Teachings%20and%20Practices%20of%20the&f=false. 
  45. Page 245, புனிதத்தன்மை அல்லது இறையாண்மையால் மதிப்பீடு: பதின்மூன்றாம் நூற்றாண்டின் மங்கோலிய உலகப் பேரரசில் ஒரு அரசியல் இறையியலாக சமய சகிப்புத் தன்மை, கிறிஸ்டோபர் பி. அட்வுட், சர்வதேச வரலாற்று விமர்சனம், தொகுதி.26, எண்.2 (சூன் 2004), here
  46. Page 216-217, Not Quite a Hybrid System: Khubilai's Buddhist Administration in Southeastern China, Feifei Wang, National University of Singapore, here
  47. Page 12, The Mongol Khans and Chinese Buddhism and Taoism, Sechin Jagchid, The Journal of the International Association of Buddhist Studies, Vol.2, No.1, 1979, here
  48. Page 14-19, The Mongol Khans and Chinese Buddhism and Taoism, Sechin Jagchid, The Journal of the International Association of Buddhist Studies, Vol.2, No.1, 1979, here
  49. Page 239, Validation by Holiness or Sovereignty: Religious Toleration as Political Theology in the Mongol World Empire of the Thirteenth Century, Christopher P. Atwood, The International History Review, Vol.26, No.2 (June 2004), here
  50. Page 246-248, Validation by Holiness or Sovereignty: Religious Toleration as Political Theology in the Mongol World Empire of the Thirteenth Century, Christopher P. Atwood, The International History Review, Vol.26, No.2 (June 2004), here
  51. லாம்ப், ஹரால்ட் (1928). செங்கிஸ் கான் அனைத்து மனிதர்களின் பேரரசர். தோர்ன்டன் பட்டர்வொர்த் லிமிட்டட். பக். 11. https://archive.org/details/genghiskhantheem035122mbp. 
  52. உலகை வென்றவரின் வரலாறு தொகுதி I. ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். 1958. பக். VII. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-297-02704-8. https://archive.org/details/historyoftheworl011691mbp. 
  53. எ. கேப்ரியல், ரிச்சர்ட் (2006). செங்கிஸ் கானின் மிகச்சிறந்த தளபதி: வல்லமையான சுபுதை. ஒக்லஹாமாப் பல்கலைக்கழகப் பதிப்பகம். பக். 53. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7914-6045-0. https://books.google.co.in/books?id=XXWFca82UvYC&printsec=frontcover&dq=the+valiant+subutai&hl=en&sa=X&ved=0ahUKEwj2pbHwsaXYAhWKK48KHVPoB7YQ6AEIJjAA#v=onepage&q&f=false. 
  54. பார்ட்லெட், டபுள்யூ பி (2009). மங்கோலியர்கள் செங்கிஸ் கான் முதல் தைமூர் வரை. ஆம்பர்லி பப்ளிசிங். பக். 43. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-8486-8088-3. https://books.google.co.in/books?id=OaxPePGBXawC&printsec=frontcover&dq=the+mongols+from+Genghis+khan+to+taimur&hl=en&sa=X&ved=0ahUKEwicgf_WhezdAhVLT30KHVliDfkQuwUIJjAA#v=onepage&q=Volohai&f=false. 
  55. டக்லஸ், ஆர் கே (1877). செங்கிஸ் கானின் வாழ்க்கை: சீன மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது. ட்ருப்னர் அன் கோ. பக். 80, 82. https://archive.org/details/cu31924022996270/page/n0. 
  56. மைக்கேல், ப்ரவ்டின் (1940). மங்கோலியப் பேரரசு அதன் வளர்ச்சி மற்றும் மரபு. ப்ராட்போர்ட் மற்றும் டிக்கன்ஸ். பக். 124-126. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-138-53687-6. https://archive.org/details/in.ernet.dli.2015.325365. 
  57. டக்லஸ், ஆர் கே (1877). செங்கிஸ் கானின் வாழ்க்கை: சீன மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது. ட்ருப்னர் அன் கோ. பக். 70. https://archive.org/details/cu31924022996270/page/n0. 
  58. லாம்ப், ஹரால்ட் (1928). செங்கிஸ் கான் அனைத்து மனிதர்களின் பேரரசர். தோர்ன்டன் பட்டர்வொர்த் லிமிட்டட். பக். 104. https://archive.org/details/genghiskhantheem035122mbp. 
  59. மைக்கேல், ப்ரவ்டின் (1940). மங்கோலியப் பேரரசு அதன் வளர்ச்சி மற்றும் மரபு. ப்ராட்போர்ட் மற்றும் டிக்கன்ஸ். பக். 158. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-138-53687-6. https://archive.org/details/in.ernet.dli.2015.325365. 
  60. மைக்கேல், ப்ரவ்டின் (1940). மங்கோலியப் பேரரசு அதன் வளர்ச்சி மற்றும் மரபு. ப்ராட்போர்ட் மற்றும் டிக்கன்ஸ். பக். 165. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-138-53687-6. https://archive.org/details/in.ernet.dli.2015.325365. 
  61. டக்லஸ், ஆர் கே (1877). செங்கிஸ் கானின் வாழ்க்கை: சீன மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது. ட்ருப்னர் அன் கோ. பக். XX. https://archive.org/details/cu31924022996270/page/n0. 
  62. 62.0 62.1 "நடு ஆசிய உலக நகரங்கள்". மே 10, 2005. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 18, 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Cite has empty unknown parameter: |1= (help)
  63. மார்கன், தாவீது (1986). மங்கோலியர்கள். ஐரோப்பாவின் மக்கள். பிளாக்வெல் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-631-17563-6. https://books.google.co.in/books?id=2A8jnQEACAAJ&dq=editions:wo8uD9YDWysC&hl=en&sa=X&ved=0ahUKEwiJweCU06LYAhWBKY8KHfDMBpkQ6AEIKzAB. 
  64. உலகை வென்றவரின் வரலாறு தொகுதி I. ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். 1958. பக். 105. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-297-02704-8. https://archive.org/details/historyoftheworl011691mbp. 
  65. மைக்கேல், ப்ரவ்டின் (1940). மங்கோலியப் பேரரசு அதன் வளர்ச்சி மற்றும் மரபு. ப்ராட்போர்ட் மற்றும் டிக்கன்ஸ். பக். 193-194. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-138-53687-6. https://archive.org/details/in.ernet.dli.2015.325365. 
  66. அல்-சிராஜ் ஜூஸ்ஜனி, மின்ஹஜ் (1970). ஆசியாவின் முகம்மதிய வம்சங்களின் ஒரு பொது வரலாறு, மொழிபெயர்ப்பு மேஜர் எச். ஜி. ரவர்டி. ஓரியன்டல் புக்ஸ். பக். 1041-42. https://archive.org/details/in.ernet.dli.2015.110439. 
  67. 67.0 67.1 சாத்தானின் குதிரைப்படை: மங்கோலியர்களின் ஐரோப்பியப் படையெடுப்பு. 1979. பக். 31. https://books.google.co.in/books?id=7AKlPwAACAAJ&dq=devil%27s+horsemen&hl=en&sa=X&ved=0ahUKEwidk8iosqXYAhUFto8KHWr3ABYQ6AEIJjAA. 
  68. "செங்கிஸ் கானின் மிருகத்தனமான திறமை". Archived from the original on செப்டம்பர் 20, 2018. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 20, 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help); Unknown parameter |deadurl= ignored (help)
  69. மைக்கேல், ப்ரவ்டின் (1940). மங்கோலியப் பேரரசு அதன் வளர்ச்சி மற்றும் மரபு. ப்ராட்போர்ட் மற்றும் டிக்கன்ஸ். பக். 251. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-138-53687-6. https://archive.org/details/in.ernet.dli.2015.325365. 
  70. நோவ்கோரோட் கிரானிக்கல். 1914. பக். xxiv. https://archive.org/details/chronicleofnovgo00michrich. 
  71. மைக்கேல், ப்ரவ்டின் (1940). மங்கோலியப் பேரரசு அதன் வளர்ச்சி மற்றும் மரபு. ப்ராட்போர்ட் மற்றும் டிக்கன்ஸ். பக். 224. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-138-53687-6. https://archive.org/details/in.ernet.dli.2015.325365. 
  72. ராட்ச்னெவ்சுகி 1991, ப. 126
  73. "செங்கிஸ் கானின் பின்னால் வந்த அவரது மகன் ஒகோடி (1185–1241) இறந்தபோது"
  74. ராட்ச்னெவ்சுகி 1991, ப. 136–7
  75. எம்மன்சு, ஜேம்சு பி. (2012). லி, சியாவோபிங். ed. செங்கிஸ் கான். சான்டா பார்பரா, கலிபோர்னியா: ஏபிசி-சி.எல்.ஐ.ஓ.. பக். 139. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-59884-415-3. https://books.google.com/books?id=jhPyvsdymU8C&printsec=frontcover#v=onepage&q&f=false. பார்த்த நாள்: ஆகத்து 21, 2013. 
  76. ஹார்ட்-டேவிசு, ஆதாம் (2007). வரலாறு: நாகரிகம் உதித்தது முதல் இந்நாள் வரை. லண்டன்: டோர்லிங் கின்டெர்சிலே. பக். 165. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-4053-1809-0. https://books.google.com/books?id=SCouMhrlDzYC&printsec=frontcover#v=onepage&q&f=false. 
  77. மேன், யோவான் (2004). செங்கிஸ் கான்: வாழ்க்கை, இறப்பு, மற்றும் உயிர்த்தெழல். நியூயார்க் நகரம்: புனிதர் மார்ட்டினின் பதிப்பகம். பக். 239–240. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-312-36624-7. https://books.google.com/books?id=OXTv9a0HZakC&printsec=frontcover&vq=death#v=onepage&q&f=false. 
  78. லாங்கே, பிரென்டா (2003). செங்கிஸ் கான். நியூயார்க் நகரம்: இன்ஃபோபேஸ் பதிப்பகம். பக். 71. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7910-7222-6. https://books.google.com/books?id=Yclu5Rw-3WUC&printsec=frontcover#v=onepage&q&f=false. 
  79. ஹெயிசிக், வல்தெர் (1964). மங்கோலியர்கள். மக்கள் வரலாற்றைத் தேடுகின்றனர். தியூசல்டோர்ஃபு. பக். 124. https://books.google.co.in/books?id=8pgNAAAAIAAJ&q=Die+Mongolen.+Ein+Volk+sucht+seine+Geschichte&dq=Die+Mongolen.+Ein+Volk+sucht+seine+Geschichte&hl=en&sa=X&ved=0ahUKEwiQg56Ds6XYAhUIRY8KHYYZCqcQ6AEIJjAA. 
  80. மேன் (2004), பக். 329–333.
  81. மேன் (2004), பக். 338.
  82. "செங்கிஸ் கானின் அரண்மனை தோண்டி எடுக்கப்பட்டது". பி.பி.சி.. அக்டோபர் 7, 2004. http://news.bbc.co.uk/1/hi/world/asia-pacific/3723218.stm. பார்த்த நாள்: மே 20, 2008. 
  83. "எங்கள் முன்னோர் செங்கிஸ் கானின் ஆன்மாவைப் பாதுகாத்தல்". சிக்ஸ்த் டோன். Archived from the original on மே 27, 2017. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 01, 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |deadurl= ignored (help)
  84. "செங்கிஸ் கானின் மிருகத்தனமான திறமை". Archived from the original on செப்டம்பர் 20, 2018. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 20, 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help); Unknown parameter |deadurl= ignored (help)
  85. மெக்லின், ஃப்ராங்க் (2015). "முடிவு". உலகை வென்ற மனிதன் செங்கிஸ் கான். பக். 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4464-4929-5. 
  86. போசா, ஜெஹாங்கிர் எஸ். (மே 10, 2005). "மங்கோலியா செங்கிஸ் கானின் நல்ல பக்கத்தைக் காண்கிறது". இண்டர்நேசனல் ஹெரால்ட் ட்ரிபியூன். பார்க்கப்பட்ட நாள் மே 20, 2008.
  87. லாம்ப், ஹரால்ட் (1928). செங்கிஸ் கான் அனைத்து மனிதர்களின் பேரரசர். தோர்ன்டன் பட்டர்வொர்த் லிமிட்டட். பக். 102. https://archive.org/details/genghiskhantheem035122mbp. 
  88. "செங்கிஸ் கானின் நாடோடிக் கூட்டம் ஐரோப்பாவை வெல்வதை எது தடுத்தது என்று கடைசியாக அறிவியலாளர்கள் தெரிந்து கொண்டனர்". Archived from the original on மே 29, 2016. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 15, 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |deadurl= ignored (help)
  89. "ஜாக் வெதர்போர்டு சொல்கிறார் மத்திய கிழக்கில் நாம் செய்த தவறுகளைச் செங்கிஸ் கான் செய்திருக்கமாட்டார் என்று". பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 12, 2016.
  90. வெதர்போர்டு, ஜாக் (மார்ச் 22, 2005). செங்கிஸ் கான் மற்றும் நவீன உலகத்தின் உருவாக்கம். பக். 58. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-307-23781-1. https://books.google.com/books?id=5HCaqYbD5t0C&lpg=PR3&dq=the%20Making%20of%20the%20Modern%20World&pg=PA24#v=onepage&q=the%20Making%20of%20the%20Modern%20World&f=false. பார்த்த நாள்: அக்டோபர் 12, 2016. 
  91. கன்ட்சகேட்சி, கிராகோஸ் (1986). ஆர்மீனியர்களின் வரலாறு. பக். 80. https://archive.org/details/KirakosGanjaketsisHistoryOfTheArmenians. 
  92. "செங்கிஸ் கானின் முக்கியத்துவம்". தி இந்து. Archived from the original on 2018-01-15. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 15, 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |deadurl= ignored (help)
  93. அல்-சிராஜ் ஜூஸ்ஜனி, மின்ஹஜ் (1970). தபகத்-இ-நசிரி: ஆசியாவின் முகம்மதிய வம்சங்களின் ஒரு பொது வரலாறு, மொழிபெயர்ப்பு மேஜர் எச். ஜி. ரவர்டி. ஓரியன்டல் புக்ஸ். பக். 1079. https://archive.org/details/in.ernet.dli.2015.110439. 
  94. ஃபோஸ், கிளைவ் (2007). சர்வாதிகாரிகள். பக். 57. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-905204-35-9. https://books.google.co.in/books?id=L0cGiYZlo84C&q=The+Tyrants&dq=The+Tyrants&hl=en&sa=X&ved=0ahUKEwik1pGAtKXYAhWLvo8KHb_PC6MQ6AEIJjAA. பார்த்த நாள்: திசம்பர் 25, 2017. 
  95. கிறிஸ்டோபர் கப்லோன்ஸ்கி: சிங்கிஸ் கான் மறையும் நிகழ்வு.
  96. கிரிஃப்ஃபித்ஸ், டேனியல் (ஜனவரி 11, 2007). "ஆசியா-பசிபிக் | பொதுவுடைமைக்குப் பிந்தைய மங்கோலியாவின் போராட்டம்.". பி.பி.சி. செய்திகள். http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/6252741.stm?lsf. பார்த்த நாள்: ஆகத்து 3, 2009. 
  97. "ஒருகாலத்தில் தவிர்க்கப்பட்ட செங்கிஸ் கான் மங்கோலியாவை மீண்டும் வெல்கிறார்". 10 சூலை 2006.
  98. "வணிகம் | செங்கிஸ் கானுக்குப் பாதுகாப்புக் கொடுக்கப்படலாம்.". பிபிசி செய்திகள். அக்டோபர் 6, 2006. http://news.bbc.co.uk/1/hi/business/5412410.stm. பார்த்த நாள்: ஆகத்து 3, 2009. 
  99. "ஆசியா-பசிபிக் | மங்கோலியா செங்கிஸ் கானை மகிமைப்படுத்துகிறது.". பிபிசி செய்திகள். மே 3, 2002. http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/1967201.stm. பார்த்த நாள்: ஆகத்து 3, 2009. 
  100. "சிங்கிஸ் கானின் யசா". பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 16, 2010. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  101. "ஊழலுக்கு எதிரான ஒன்றுகூடும் முயற்சியின் அறிமுகத்தில் சனாதிபதி எல்பெக்தோர்சின் பேச்சு". மங்கோலியச் சனாதிபதியின் அலுவலகம். மார்ச் 3, 2011. Archived from the original on 2012-03-13. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 1, 2013. {{cite web}}: Check date values in: |date= (help); Unknown parameter |dead-url= ignored (help)
  102. "புனிதமான சபையில் மங்கோலியச் சனாதிபதி திசகியாகீன் எல்பெக்தோர்சின் பேச்சு, செங்கிஸ் கான் பிறந்த 850வது ஆண்டுவிழாவிற்கு அர்ப்பணிக்கப்பட்டது". மங்கோலியச் சனாதிபதியின் அலுவலகம். நவம்பர் 14, 2012. Archived from the original on ஏப்ரல் 14, 2013. பார்க்கப்பட்ட நாள் June 21, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |dead-url= ignored (help)
  103. "மங்கோலியா மகா சிங்கிஸ் கானின் பிறந்தநாளைக் கொண்டாடப் போகிறது". இன்ஃபோமங்கோலியா.காம். Archived from the original on அக்டோபர் 14, 2013. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 12, 2013. {{cite web}}: Unknown parameter |deadurl= ignored (help)
  104. Weatherford, Jack (22 Mar 2005). Genghis Khan and the Making of the Modern World. Crown/Archetype. பக். 239. https://books.google.com/books?id=A8Y9B5uHQcAC&pg=PA239. 
  105. Weatherford, Jack (22 March 2005). Genghis Khan and the Making of the Modern World. Crown/Archetype. பக். xxiv. 
  106. Polo, Marco (1905). The Adventures of Marco Polo. D. Appleton and Company. பக். 21. https://books.google.com/books?id=dcMXAAAAIAAJ&pg=PA21. 
  107. Brooks, Noah (1 October 2008). The Story of Marco Polo. Cosimo, Inc.. பக். 81. https://books.google.com/books?id=PyJhcJ4LrV8C&pg=PA81. 
  108. வில்லியம் போனெர், அடிசன் விக்கின் (2006). "கடன் பேரரசு: ஒரு காவிய நிதி நெருக்கடியின் எழுச்சி". யோவான் விலே மற்றும் மகன்கள். பக்.43–44. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-73902-2
  109. கிரேசியெல்லா கசெல்லி, கில்லவுமே உன்ஸ்ச், ஜாக்குவஸ் வல்லின் (2005). "மக்கள்தொகை: பகுப்பாய்வு மற்றும் தொகுப்பு, நான்கு தொகுதி தொகுப்பு: மக்கள்தொகை ஆய்வுக்கட்டுரை". அகாடெமிக் பிரஸ். பக்.34. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-765660-X
  110. மெக்லின், ஃப்ராங்க் (2015). "அத்தியாயம் 13". உலகை வென்ற மனிதன் செங்கிஸ் கான். பக். 25. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4464-4929-5. 
  111. "செங்கிஸ் கானின் மரபு" லாஸ் ஏஞ்சலஸ் மாகாண கலை அருங்காட்சியகம்-மீண்டும்.
  112. ஆர். வார்த், இசுதீவன் (2009). அழிவற்றது: ஈரான் மற்றும் அதன் ஆயுதப்படைகளின் இராணுவ வரலாறு. ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகப் பதிப்பகம். பக். 39. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-58901-258-5. https://books.google.com/books?id=8eUTLaaVOOQC&pg=PA39&dq#v=onepage&q=&f=false. 
  113. செர்சல், டி; சுவே, ஒய்; பெர்டோரெல்லி, ஜி; வெல்ஸ், ஆர்.எஸ்.; பவோ, டபுள்யூ; சு, எஸ்; கமர், ஆர்; அயுப், கியூ et al. (2003). "மங்கோலியர்களின் மரபியலின் மரபு". மனித மரபியலின் அமெரிக்கப் பத்திரிக்கை 72 (3): 717–721. doi:10.1086/367774. பப்மெட்:12592608. 
  114. எலிசபெத் டபுள்யூ. ஜோன்ஸ், டேனியல் எல். ஹர்ட்ல் (2009). மரபியல்: மரபணுக்கள் மற்றும் ஜீனோம்களின் பகுப்பாய்வு. ஜோன்ஸ் மற்றும் பார்ட்லெட் லேர்னிங். பக். 309. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7637-5868-4. https://books.google.co.in/books?id=cfvILxY9tCIC&printsec=frontcover#v=onepage&q&f=false. 
  115. "உருசியாவின் வரலாறு". Archived from the original on சனவரி 21, 2010. {{cite web}}: Unknown parameter |deadurl= ignored (help)
  116. "கீவின் அழிவு". டீஸ்பேஸ்.லைப்ரரி.யுடோரான்டோ.சிஏ. Archived from the original on மே 30, 2012. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 12, 2013. {{cite web}}: Unknown parameter |dead-url= ignored (help)
  117. "''சாம்பலிலிருந்து பீனிக்ஸ்: ஈரானில் ஒரு புத்தகத்தின் கதை''". வெப்.ஆர்கிவ்.ஓர்க். திசம்பர் 14, 2007. Archived from the original on திசம்பர் 14, 2007. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 12, 2013.
  118. "நாகரிகங்கள்: நாம் மற்றவர்களை எப்படிப் பார்க்கிறோம், மற்றவர்கள் நம்மை எப்படிப் பார்க்கிறார்கள்". யுனெஸ்கோ.ஓர்க். Archived from the original on அக்டோபர் 27, 2013. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 12, 2013. {{cite web}}: Unknown parameter |deadurl= ignored (help)
  119. புர்கன், மைக்கேல் (2009). மங்கோலியர்களின் பேரரசு. செல்சீ ஹவுஸ் பதிப்பகத்தார். பக். 12. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4381-0318-1. https://archive.org/details/EmpireOfTheMongols. 
  120. வெதர்போர்டு, ஜாக் (மார்ச் 22, 2005). "அத்தியாயம் 1". செங்கிஸ் கான் மற்றும் நவீன உலகத்தின் உருவாக்கம். பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-307-23781-1. https://books.google.com/books?id=5HCaqYbD5t0C&lpg=PR3&dq=the%20Making%20of%20the%20Modern%20World&pg=PA24#v=onepage&q=the%20Making%20of%20the%20Modern%20World&f=false. பார்த்த நாள்: அக்டோபர் 12, 2016. 
  121. அல்-சிராஜ் ஜூஸ்ஜனி, மின்ஹஜ் (1970). தபகத்-இ-நசிரி: ஆசியாவின் முகம்மதிய வம்சங்களின் ஒரு பொது வரலாறு, மொழிபெயர்ப்பு மேஜர் எச். ஜி. ரவர்டி. ஓரியன்டல் புக்ஸ். பக். 1077. https://archive.org/details/in.ernet.dli.2015.110439. 
  122. "செங்கிஸ் கானிடம் இருந்து 9 தலைமைப்பண்புப் பாடங்கள்". ஃபோர்ப்ஸ். Archived from the original on மே 04, 2016. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 15, 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help); Unknown parameter |deadurl= ignored (help)
  123. மெக்லின், ஃப்ராங்க் (2015). "அத்தியாயம் 6". உலகை வென்ற மனிதன் செங்கிஸ் கான். பக். 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4464-4929-5. 
  124. மைக்கேல், ப்ரவ்டின் (1940). மங்கோலியப் பேரரசு அதன் வளர்ச்சி மற்றும் மரபு. ப்ராட்போர்ட் மற்றும் டிக்கன்ஸ். பக். 130. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-138-53687-6. https://archive.org/details/in.ernet.dli.2015.325365. 
  125. மெக்லின், ஃப்ராங்க் (2015). "அத்தியாயம் 6". உலகை வென்ற மனிதன் செங்கிஸ் கான். பக். 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4464-4929-5. 
  126. மெக்லின், ஃப்ராங்க் (2015). "அத்தியாயம் 6". உலகை வென்ற மனிதன் செங்கிஸ் கான். பக். 22. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4464-4929-5. 
  127. மெக்லின், ஃப்ராங்க் (2015). "அத்தியாயம் 13". உலகை வென்ற மனிதன் செங்கிஸ் கான். பக். 23. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4464-4929-5. 
  128. வெதர்போர்டு, ஜாக் (2016). செங்கிஸ் கான் மற்றும் கடவுளுக்கான தேடல்: உலகத்தின் மகா படையெடுப்பாளர் எவ்வாறு நமக்குச் சமய சகிப்புத் தன்மையை வழங்கினார். நியூயார்க்: பென்குயின் பதிப்பகக் குழுமம். பக். 11. https://books.google.co.in/books?id=AWF_CwAAQBAJ&printsec=frontcover&dq=Genghis+Khan+and+the+Quest+for+God:+How+the+World%27s+Greatest+Conqueror+Gave+Us+Religious+Freedom&hl=en&sa=X&ved=0ahUKEwiEuoysqqXYAhXLso8KHdQKBGUQ6AEIJjAA#v=onepage&q=Genghis%20Khan%20and%20the%20Quest%20for%20God%3A%20How%20the%20World's%20Greatest%20Conqueror%20Gave%20Us%20Religious%20Freedom&f=false. 
  129. மைக்கேல், ப்ரவ்டின் (1940). மங்கோலியப் பேரரசு அதன் வளர்ச்சி மற்றும் மரபு. ப்ராட்போர்ட் மற்றும் டிக்கன்ஸ். பக். 205. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-138-53687-6. https://archive.org/details/in.ernet.dli.2015.325365. 
  130. பர்தோல்ட், வாசிலி (1928). துருக்கிஸ்தான் மங்கோலியப் படையெடுப்பு வரை. பக். 460. 
  131. கிரவுசட், ரீன் (1970). புல்வெளிகளின் பேரரசு: நடு ஆசியாவின் வரலாறு. ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகப் பதிப்பகம். பக். 250. 
  132. யோவான் மேன் (2004). செங்கிஸ் கான்: வாழ்க்கை, இறப்பு, மற்றும் உயிர்த்தெழல் (மறுபதிப்பு, விளக்கப்பட்டது ). பன்டம் பதிப்பகம். பக். 278. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-312-36624-8. https://books.google.com/books?id=OXTv9a0HZakC&lpg=PA247&dq=tangut%20castrate%20genghis&pg=PA254#v=onepage&q&f=false. பார்த்த நாள்: மே 17, 2014. 
  133. ராட்ச்னெவ்சுகி, பால் (1991). செங்கிஸ் கான்: அவரது வாழ்க்கை மற்றும் மரபு. பிளாக்வெல் பதிப்பகம். பக். 164-167. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-631-16785-4. https://books.google.co.in/books/about/Genghis_Khan.html?id=eCfVjwEACAAJ&redir_esc=y. 
  134. டக்லஸ், ஆர் கே (1877). செங்கிஸ் கானின் வாழ்க்கை: சீன மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது. ட்ருப்னர் அன் கோ. பக். 105. https://archive.org/details/cu31924022996270/page/n0. 
  135. "செங்கிஸ் கான் பற்றி பாப் கலாச்சாரம் கற்பித்தது எல்லாம் தவறு". Archived from the original on செப்டம்பர் 20, 2018. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 20, 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help); Unknown parameter |deadurl= ignored (help)
  136. "செங்கிஸ் கானின் மிருகத்தனமான திறமை". Archived from the original on செப்டம்பர் 20, 2018. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 20, 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help); Unknown parameter |deadurl= ignored (help)
  137. "புத்தக விமர்சனம்: செங்கிஸ் கான் பிராங்க் மெக்லினின் முதல் தர வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்திற்குத் தகுதியானவர் இல்லை". Archived from the original on செப்டம்பர் 20, 2018. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 20, 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help); Unknown parameter |deadurl= ignored (help)
  138. லாம்ப், ஹரால்ட் (1928). செங்கிஸ் கான் அனைத்து மனிதர்களின் பேரரசர். தோர்ன்டன் பட்டர்வொர்த் லிமிட்டட். பக். 14. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-296-02857-2. https://archive.org/details/genghiskhantheem035122mbp. 
  139. உலகை வென்றவரின் வரலாறு தொகுதி I. ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். 1958. பக். 24. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-297-02704-8. https://archive.org/details/historyoftheworl011691mbp. 
  140. மெக்லின், ஃப்ராங்க் (2015). "அத்தியாயம் 11". உலகை வென்ற மனிதன் செங்கிஸ் கான். பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4464-4929-5. 
  141. லூகாஸ், எஃப். எல் (1953). பல நேரங்கள் மற்றும் காலங்களில் இருந்து. பாட்லே ஹெட். பக். 148–155. https://books.google.co.in/books?id=DYg4AAAAIAAJ&dq=From+Many+Times+and+Lands&hl=en&sa=X&ved=0ahUKEwj12Pn6tqXYAhVEvI8KHZQwBl0Q6AEIJjAA. 

ஆதாரங்கள் (ஆங்கிலம்)

மேலும் படிக்க (ஆங்கிலம்)

முதன்மை ஆதாரங்கள் (ஆங்கிலம்)

வெளி இணைப்புகள் (ஆங்கிலம்)

செங்கிஸ் கான்
போர்சிசின் குடும்பம் (கி.பி. 1206 – கி.பி. 1635)
பிறப்பு: கி.பி. 1162 இறப்பு: கி.பி. 1227
அரச பட்டங்கள்
முன்னர்
ஹோடுலா கான்
கமக் மங்கோலின் ககான்
கி.பி. 1189 – கி.பி. 1206
கமக் மங்கோல் முடிந்தது
மங்கோலியப் பேரரசு ஆரம்பமானது
புதிய பட்டம்
மங்கோலியப் பேரரசு நிறுவப்பட்டது
மங்கோலியப் பேரரசின் ககான்
கி.பி. 1206 – கி.பி. 1227
பின்னர்
டொலுய்
பிரதிநிதியாக
"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்கிஸ்_கான்&oldid=3278079" இலிருந்து மீள்விக்கப்பட்டது