தமிழக வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தமிழ்நாட்டு வரலாறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சோழர் காலத்தியக் கோவில் தென்னிந்தியாவின் பல்வேறு தீபகற்பகங்களை பத்து மற்றும் பதினோறாம் நூற்றாண்டில் ஒரே நிருவாகத்தின் கீழ் சோழர்கள் இணைத்தனர்.

தமிழக வரலாறு (History of Tamil Nadu) தற்கால இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தைப் பற்றியதாகும். இம்மண்டலம் வரலாற்றுக் காலத்துக்கு முன்பு முதல் மக்கள் வாழும் உறைவிடமாக தொடர்ந்து இருந்துவந்துள்ளது. தமிழ்நாட்டின் வரலாறும் தமிழ் மக்களின் நாகரீகமும் பண்பாடும் உலகின் மிகப் பழமையானவைகளில் ஒன்றாகும். முந்தைய பழங்கற்காலம் முதல் தற்காலம் வரையிலான தமிழ்நாட்டின் வரலாறு முழுவதிலும், இந்தப் பகுதியானது பல்வேறு புறக் கலாச்சாரங்களுடன் ஒருங்கிணைந்து இருந்து வந்துள்ளது. வரலாற்றில் ஒப்பீட்டளவில் குறுகிய காலப் பகுதிகளைத் தவிர்த்து, பிற காலகட்டங்களில் தமிழ்நாடு பகுதி புற ஆக்கிரமிப்புகள் எதுவுமின்றி சுதந்திரமாக இருந்து வந்துள்ளது.

சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவ பேரரசுகளே நான்கு பண்டைய பூர்வீக தமிழ் பேரரசுகளாக இருந்தன. இவர்கள் தனித்தன்மை வாய்ந்த கலாச்சாரம் மற்றும் மொழி ஆகியவற்றைக் கொண்டு இந்தப் பகுதியை ஆட்சி செய்தனர், இதனால் உலகில் அழியாமல் வழக்கத்திலிருந்த சில பழமையான இலக்கியங்களின் வளர்ச்சி சாத்தியமானது. இவர்கள் ரோமப் பேரரசுடன் அதிகப்படியான கடல்வழி வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். இப்பகுதியின் தலைமைக்காக இந்த மூன்று வம்சத்தைச் சேர்ந்தவர்களும் ஒருவருக்கொருவர் தொடர்ச்சியாக போரிட்டுக் கொண்டனர். மூன்று பேரரசுகளும் பாரம்பரியமாக ஆட்சி செய்துவந்த இந்தப் பகுதியை மூன்றாம் நூற்றாண்டில் நுழைந்த களப்பிரர்கள் விரட்டியதால் இப்பகுதியின் பாரம்பரிய ஆட்சி வடிவம் மாறியது. பாண்டியர்கள் மற்றும் பல்லவர்கள் மீட்டெழுந்து களப்பிரர் ஆதிக்கத்தை முறியடித்து தங்களின் பாரம்பரிய பேரரசுகளை மீண்டும் நிலைநாட்டினர். வீழ்ந்திருந்த சோழர்கள் ஒன்பதாம் நூற்றாண்டில் பல்லவர்களையும் பாண்டியர்களையும் தோற்கடித்து, தங்களது பெரும் சக்தியாக எழுச்சியடைந்து கிட்டத்தட்ட தெற்கு தீபகற்பப் பகுதி முழுவதும் தங்கள் பேரரசை விரிவுபடுத்தினர். வங்காள விரிகுடா பகுதியில் சோழப் பேரரசு சுமார் 3,600,000 சதுர கி.மீ. அளவிற்குப் பரவி இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில் இருந்த சிரீ விசயா பேரரசு பகுதியையும் சோழரின் கடற்படை கட்டுப்பாட்டில் கொண்டிருந்தது.

வடமேற்கு பகுதியிலிருந்து வந்த இசுலாமிய படைகளின் ஊடுருவல் காரணமாக இந்தியாவின் மற்ற பகுதிகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் தமிழ்நாட்டின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. பதினான்காம் நூற்றாண்டில் பண்டைய மூன்று பேரரசுகளின் வீழ்ச்சி காரணமாக, தமிழ்நாடு விசயநகரப் பேரரசின் ஒரு அங்கமாக மாறியது. விசயநகரப் பேரரசின் கீழ் தெலுங்கு பேசும் நாயக்கர் ஆட்சியாளர்கள் தமிழ்ப் பகுதியை ஆட்சி செய்தனர். மராத்தியர்களின் குறுகிய கால வருகை தமிழ்ப் பகுதியில் ஐரோப்பிய வணிக நிறுவனங்களின் வருகைக்கு வழிவகுத்தது. பதினேழாம் நூற்றாண்டின் போது இவ்வாறு வணிகம் செய்ய வந்தவர்கள் இறுதியில் இந்தப் பகுதியின் பூர்வீக ஆட்சியாளர்களை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்தனர். தென்னிந்தியாவின் பல பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாகாணம் பதினெட்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. இப்பகுதி பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியால் நேரடியாக ஆட்சி செய்யப்பட்டது. இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு மொழியியல் எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு மாநிலம் உருவாக்கப்பட்டது.

வரலாற்றுக்கு முந்தைய காலம்[தொகு]

பழைய கற்காலம்[தொகு]

தமிழ்நாட்டின் பகுதிகளில் பழங்கற்கால குடியிருப்புகள் இருந்த வரலாற்றுக்கு முற்பட்ட காலப்பகுதியானது பொ.ஊ.மு. 500,000 ஆண்டிலிருந்து பொ.ஊ.மு. 3000 ஆண்டு வரை நீடித்திருந்ததாக மதிப்பிடப்படுகிறது.[1] பழங்கற்காலத்தின் பெரும்பாலான காலகட்டங்களில் இப்பகுதியில், அடர்த்தியற்ற காட்டுப் பகுதிகள் அல்லது புல்வெளி சார்ந்த சுற்றுச்சூழலில் அமைந்த ஆற்றுப் பள்ளதாக்குகளுக்கு அருகிலேயே மனிதர்கள் வாழ்ந்து வந்தனர். இந்தப் பகுதிகளில் மக்கட்தொகை அடர்த்தி மிகக் குறைவாக இருந்தது ஆகையால் தென்னிந்தியாவில் இரண்டு இடங்களில் மட்டுமே தொடக்க பழங்கற்கால கலாச்சாரம் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னையின் வடமேற்கு பகுதியில் உள்ள அத்திரம்பாக்கம் பள்ளதாக்கு இந்தப் பகுதிகளில் ஒன்றாகும்.[2] தமிழ்நாட்டின் வடக்குப் பகுதிகளைச் சுற்றி பழங்கற்காலத்திய விலங்குகளின் புதைப்படிமங்கள் மற்றும் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல் சார்ந்த ஆய்வுகள் கூறுகின்றன. இவை பொ.ஊ.மு. 300,000 ஆண்டு காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம்.[3] தென்னிந்தியாவில் வாழ்ந்த மனிதர்கள் பெரும்பாலும் பண்டைய "பழங்கற்காலத்தில்" நீண்ட காலம் வாழ்ந்த ஓமோ இரெக்டசு இனத்தைச் சேர்ந்தவர்களாவர். மேலும் இவர்கள் கைக்கோடரி மற்றும் வெட்டுக்கத்தி ஆகியவற்றைப் பயன்படுத்தி வேட்டையாடி சேகரித்து வாழும் மக்களாக இருந்தனர்.[4]

50,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய தற்கால மனித இனத்தின் (ஓமோ செப்பியன்சு ) மூதாதைய இனத்தினர் மிகவும் மேம்பட்ட நிலையிலும், பல்வேறு கற்களைப் பயன்படுத்தி தகடு போன்ற கருவிகள் மற்றும் மெல்லிய நுண்தகடு கருவிகளையும் உருவாக்கி பயன்படுத்தியிருந்தனர். சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து நுண்கல் கருவிகள் என்று அறியப்படும் இன்னும் சிறிய கருவிகளை மனிதர்கள் உருவாக்கினர். சூரிய காந்தக் கல், அகேட் கல், சிக்கிமுக்கி கல், குவாட்டசு கல் போன்ற பொருள்களைப் பயன்படுத்தி நுண்கற்கள் கருவிகளை மனிதர்கள் உருவாக்கினர். 1949 ஆம் ஆண்டில், இது போன்ற நுண்கல் கருவிகளை திருநெல்வேலி மாவட்டத்தில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.[5] நுண்கற்கள் காலமானது பொ.ஊ.மு. 6000-3000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலமாகும் என தொல்லியல் துறை ஆய்வுகள் கூறுகின்றன.[6]

புதிய கற்காலம்[தொகு]

தமிழ்நாட்டில் சுமார் பொ.ஊ.மு. 2500 ஆண்டு புதிய கற்காலம் தொடங்கியது. சாணைபிடித்தல் மற்றும் மெருகேற்றல் போன்ற முறைகளைப் பயன்படுத்தி புதிய கற்காலத்தைச் சேர்ந்த மனிதர்கள் தங்கள் கற்கருவிகளுக்கு நயமான வடிவம் அளித்தனர். பண்டைய எழுத்துக்களைக் கொண்ட புதிய கற்காலத்தைச் சேர்ந்த கோடரியின் மேற்பகுதி தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[7] புதிய கற்கால மனிதர்கள் பெரும்பாலும் சிறிய சமதளமான மலைகள் அல்லது மலையின் அடிவாரத்தில், சிறிய, ஏறத்தாழ நிரந்தரமான குடியிருப்புகளில் வாழ்ந்தனர். மேய்ச்சல் காரணங்களுக்காக அவ்வப்போது அவர்கள் இடம் விட்டு இடம் பெயர்ந்தனர். அவர்கள் இறந்தவர்களை பள்ளங்கள் அல்லது புதைகலங்களில் புதைத்து சடங்குகளை முறையாகச் செய்தனர். அவர்கள் ஆயுதங்கள் மற்றும் கருவிகளை உருவாக்க தாமிரத்தைப் பயன்படுத்தவும் தொடங்கினர்.

இரும்புக் காலம்[தொகு]

இரும்பைப் பயன்படுத்தி ஆயுதங்கள் மற்றும் கருவிகளை வடிவமைக்கும் முறையை மனிதர்கள் இரும்புக் காலத்தின் போது தொடங்கினர். பல நூறு இடங்களில் காணப்படும் பெருங்கற்களாலான இடுகாடுகளைக் கொண்டு தீபகற்ப இந்தியாவில் இரும்புக் காலக் கலாச்சாரம் இருந்ததை அறிய முடிகிறது.[8] இடுகாடு நினைவுச் சின்னங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வு மற்றும் அவற்றின் வகைகளைக் கொண்டு வடக்குப் பகுதியிலிருந்து தெற்குப் பகுதிக்கு இரும்புக் கால குடியேற்றங்கள் பரவியதாகத் தெரிகிறது. திருநெல்வேலி மாவட்டத்தின் ஆதிச்சநல்லூர் மற்றும் இந்தியாவின் வடக்கு பகுதிகளில் நடைபெற்ற அகழ்வாய்வுகளை ஒப்பிடும் போது பெருங்கற்களாலான குடியேற்றங்கள் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்ததற்கான அடையாளங்கள் கிடைத்தன.[9]

சுமார் பொ.ஊ.மு. 1000 வது ஆண்டைச் சேர்ந்த பெருங்கற்களாலான புதைகல இடுகாடுகள் இருந்ததற்கான தெளிவான முற்கால அடையாளங்கள் இடுகாடுகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன, குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து 24 கி.மீ தொலைவில் இருக்கும் ஆதிச்சநல்லூர் என்ற இடத்தில் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தொல்பொருள் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் பூமியிலிருந்து 157 புதைகலங்களை அகழ்ந்தெடுத்தனர். அவற்றில் 15 கலங்களில் மனிதனின் மண்டை ஓடு, எலும்புக் கூடுகள் மற்றும் மற்றும் எலும்புகள், உமி, அரிசி தானியங்கள், கருகிய அரிசி மற்றும் புதிய கற்கால கோடரிக் கருவி ஆகியவற்றைக் கொண்டிருந்தன. கண்டெடுக்கப்பட்டுள்ள புதைகலத்தில் எழுத்தப்பட்ட எழுத்துகள், 2800 ஆண்டுகளுக்கு முந்தைய புதிய கற்காலத்தின் தமிழ்-பிராமி வரிவடிவத்தை ஒத்திருப்பதாக இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.[10] தொடர்ந்து அகழ்வாய்வு சோதனைகளை மேற்கொள்ளுவதற்கான தொல்லியல் களமாக ஆதிச்சநல்லூர் அறிவிக்கப்பட்டுள்ளது.[11][12]

தற்போதைய பொதுவான காலத்திற்கு முந்தைய தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் பற்றிய குறிப்புகள், பொ.ஊ.மு. 300 ஆண்டைச் சேர்ந்த அசோகரின் சாசனத்திலும் பொ.ஊ.மு. 150 ஆண்டைச் சேர்ந்த கதிகும்பா கல்வெட்டிலும் (ஓரளவு) கண்டறியப்பட்டுள்ளது. மிகப் பழைய வட்டெழுத்து ரீதியான சான்றில் தமிழ் நாட்டில் இருந்த ஆட்சி பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன, அதில் பாண்டிய நாட்டிலிருந்து களப்பிரர்களை வெளியேற்றிய பாண்டிய அரசன் கடுங்கோன் (சு. பொ.ஊ. 560–590) என்பவனைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது - நீலகண்ட சாத்திரி, தென்னிந்தியாவின் வரலாறு பக்கம் 105, 137

முற்கால வரலாறு[தொகு]

கார்வேலாவின் அத்திகும்பா கல்வெட்டு

பண்டைய தமிழ்நாட்டில், வேந்தர் என அழைக்கப்பட்ட அரசர்களின் தலைமையின் கீழ் இருந்த மூன்று முடியாட்சி மாநிலங்களும் வேள் அல்லது வேளிர் என்ற பட்டப் பெயர் கொண்டு அழைக்கப்பட்ட பல பழங்குடி இனத் தலைவர்களின் தலைமையில் இருந்த பழங்குடி இனக் குழுக்களும் இருந்தன.[13] இவர்களுக்கும் அடுத்ததாக, உள்ளூர் பகுதிகளின் இனக் குழுக்களின் தலைவர்கள் இருந்தனர், இவர்கள் கிழார் அல்லது மன்னர் என அழைக்கப்பட்டனர்.[14] பொ.ஊ.மு. மூன்றாம் நூற்றாண்டின் போது தக்காணப் பீடபூமி மௌரியப் பேரரசின் ஒரு அங்கமாக இருந்தது. பொ.ஊ.மு. முதல் நூற்றாண்டின் இடைப்பகுதி முதல் பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டு வரை இந்த பகுதி சாதவாகனர் வம்சத்தினரால் ஆளப்பட்டது. வடக்கு பகுதியைச் சேர்ந்த இந்தப் பேரரசுகளின் கட்டுப்பாட்டிலிருந்து தமிழ் பகுதி தன்னிச்சையாக இருந்தது. தமிழ் அரசர்கள் மற்றும் குழுத்தலைவர்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். பெரும்பாலும் அவர்கள் சண்டையிடுவது இடங்களுக்காகவே. அரசனின் நீதிமன்றங்கள் ஆற்றலைப் பகிர்ந்தளிப்பதற்கு பதிலாக சமூக நிகழ்வுகளுக்கான மையங்களாக இருந்தன. அவை வளங்களைப் பகிர்ந்தளிக்கும் மையங்களாக இருந்தன. ஆட்சியாளர்கள் படிப்படியாக வட இந்தியார்களின் ஆதிக்கம் மற்றும் வேதக் கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கினர். இவைகள் ஆட்சியாளரின் நிலையை மேம்படுத்த பலி கொடுக்கும் பழக்கத்தையும் ஊக்குவித்தன.[15]

அசோகப் பேரரசின் கீழ் இல்லாத பேரரசுகள் மற்றும் இந்தப் பேரரசுடன் நட்பு நிலையில் இருந்த பேரரசுகள் பற்றிய தகவல்கள் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுடன் சேர்ந்து சோழர்கள், பாண்டியர்கள் மற்றும் சேரர்களின் வம்சங்கள் (பொ.ஊ.மு. 273-232) அசோகத் தூண்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.[16][17] நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த தமிழ் பேரரசுகளின் கூட்டமைப்பைபற்றி பொ.ஊ.மு. 150 ஆண்டைச் சேர்ந்த கலிங்கப் பேரரசை ஆட்சி செய்த அரசன் கார்வேலனின் அத்திகும்பா கல்வெட்டு, குறிப்பிடுக்கிறது.[18]

முற்கால சோழர்களில் கரிகாலச் சோழன் மிகப் புகழ்பெற்றவராக இருந்தார். சங்க இலக்கியங்களின் பல்வேறு செய்யுள்களில் கரிகாலச் சோழன் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.[19] பின்னாளில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம் நூலில் வரும் பல்வேறு கதைகளிலும் கரிகாலன் பற்றிய செய்திகள் முக்கிய பொருளாக இருந்தது. மேலும் 11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இலக்கிய நூல்கள் மற்றும் கல்வெட்டுகளிலும் கரிகாலன் பற்றிய தகவல்கள் உள்ளன. இமாலயம் வரையிலான இந்தியா முழுவதையும் வென்றவன் எனவும் நிலமானியங்களைக் கொண்டு காவேரி ஆற்றின் வெள்ளத்தை தடுப்பதற்காக கரைகளைக் கட்டியவன் எனவும் இந்த நூல்கள் விளக்குகின்றன.[20] சங்க இலக்கியங்களில் இந்த தகவல்கள் இல்லை என்பதால் இந்த வரலாறு பற்றி வெளிப்படையாக தெரிவதில்லை. சோழர்களில் மற்றொரு புகழ்ழெற்ற மன்னன் கோச்செங்கண்ணன் ஆவான். சங்க கால இலக்கியப் பாடல்கள் பலவற்றில் அவனைப் பற்றி புகழ்ந்து பாடப்பட்டுள்ளது. இடைக்காலத்தின் போது சைவ அறிவாளராகவும் கருதப்பட்டார்.[21]

தொலெமியின் நிலப்படக்கலையை தொடர்ந்து உருவாக்கப்பட்ட தென்னிந்தியாவின் பழமையான வரைபடம்.

இந்திய தீபகற்பத்தின் தென்கோடிப் பகுதியான கொற்கையிலிருந்து முதலில் ஆட்சி செய்ய தொடங்கிய பாண்டியர்கள் பின்னாளில் மதுரை நகருக்கு மாறினர். சங்க இலக்கியத்திலும் பாண்டியர்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதே காலத்தில் இருந்த கிரேக்க மற்றும் உரோமானிய ஆவணங்களிலும் பாண்டியர்கள் பற்றி உள்ளது. மெகசுதனிசு, இந்திகா என்ற தனது நூலில் பாண்டியப் பேரரசு பற்றி குறிப்பிட்டுள்ளார்.[22] மதுரையின் தற்போதைய மாவட்டங்கள், திருநெல்வேலி மற்றும் தெற்கு கேரளாவின் சில பகுதிகளை பாண்டியர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். பாண்டியர்கள் கிரேக்கம் மற்றும் உரோம் ஆகிய நாடுகளுடன் வணிகத் தொடர்பையும் கொண்டிருந்தனர்.[23] பாண்டியர்கள் தமிழகத்தின் மற்ற பேரரசுகளுடன் இணைந்து ஈழத்தின் தமிழ் வணிகர்களுடன் வணிக மற்றும் திருமணத் தொடர்பையும் கொண்டிருந்தனர். சங்க இலக்கியங்களின் பல்வேறு பாடல்களில் பாண்டிய மன்னர்கள் பலர் பற்றி குறிப்புகள் காணப்படுகின்றன. இவர்களில் 'தலையாலங்கானம் வென்ற' நெடுஞ்செழியன் மற்றும் தியாகச் செயல்களுக்கான சிறப்பான ஒருவராக குறிப்பிடப்படும் ஆரான் முதுகுடுமி பெருவழுதி என்ற மற்றொரு நெடுஞ்செழியன் ஆகியோர் சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளனர். அகநானூறு மற்றும் புறநானூறு போன்ற தமிழ்நூல்களின் தொகுப்புகளில் உள்ள சிறிய பாடல்கள், மதுரைக் காஞ்சி மற்றும் நெடுநல்வாடை போன்ற இரண்டு முக்கிய நூல்களிலும் (பத்துப்பாட்டு தொகுப்புகளில் உள்ளது) சங்க காலத்தில் பாண்டிய பேரரசில் மேற்கொள்ளப்பட்ட சமூக மற்றும் வணிக ரீதியான செயல்கள் பற்றிய செய்திகள் உள்ளன. மூன்றாம் நூற்றாண்டின் முடிவில் களப்பிரர்களின் ஊடுருவல் காரணமாக முற்காலப் பாண்டியர்களின் புகழ் மறைந்து போனது.

தென்னிந்தியாவின் மலபார் கடற்கரை அல்லது அதன் மேற்கு பகுதியுடன் இணைந்த, தற்போதைய கேரள மாநிலம் ஆகியவை ஒன்றிணைந்த பகுதியாக சேரர்களின் பேரரசு இருந்தது. கடல் வழியாக ஆப்பிரிக்காவுடன் வாணிகம் செய்வதற்கு ஏற்ற வகையில் அவர்களின் இருப்பிடம் இருந்தது.[24][25] இந்தியாவின் மாநிலமான கேரளாவில் உள்ள இன்றைய மக்கள், பண்டையக் காலத்தில் தங்கள் பகுதியை ஆட்சி செய்த சேரர்கள் பேசிய மொழியே பேசுகின்றனர். மேலும் தமிழ் நாட்டின் பிற பகுதிகளுடனும் இவர்கள் பரவலான தொடர்பு கொண்டிருந்தனர். இது ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டு வரை மட்டுமே வழக்கத்தில் இருந்தது, இதன் பிறகு தமிழ் மொழியில் வடமொழியின் தாக்கம் காரணமாக மொழியின் தனிப்பட்ட அங்கீகாரம் மாறி புதிய மொழி ஒன்று பயன்பாட்டிற்கு வந்தது.[26]

பழமையான இலக்கியங்கள் தமிழில் வளர்வதற்கு இந்த முற்கால பேரரசுகள் ஆதரவளித்தன. சங்க இலக்கியம் என்று அறியப்படும் செவ்வியல் இலக்கியம் பொ.ஊ.மு. 200 முதல் 300 ஆம் ஆண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்ததாக அறியப்படுகிறது.[27][28] சங்க இலக்கியத்திலுள்ள பாடல்கள் பெரும்பாலும் உணர்வு மற்றும் பொருள் சார்ந்த தலைப்புகளையே கொண்டுள்ளன. இடைக்காலத்தில் இவைகள் வகைப்படுத்தப்பட்டு பல்வேறு தொகை நூல்களாக திரட்டப்பட்டுள்ளன. செழுமையான நிலம் மற்றும் பல்வேறு தொழில் சார்ந்த மக்கள் குழுக்கள் பற்றியே இந்த சங்கப் பாடல்கள் சித்தரிக்கின்றன. இந்த பகுதிகளை ஆட்சி செய்வது பரம்பரை குடியாட்சி முறையில் இருந்தது. எனினும் இந்த பகுதிகளின் செயல்பாடுகள் மற்றும் ஆட்சி செய்பவரின் ஆற்றல் ஆகியவை முன்பே இயற்றப்பட்ட ஒழுங்குமுறைகளை (தர்மம் ) பின்பற்றியே இருந்தது.[29] மக்கள் தங்களின் அரசரிடம் மிகவும் விசுவாசமாக இருந்தனர். உலகம் சுற்றும் புலவர்களும் இசைக்கலைஞர்களும் நடனக் கலைஞர்களும் தாராள மனமுடைய அரசனின் அவைகளை அலங்கரித்தனர். இசை மற்றும் நடனக் கலைகள் மேம்பட்டு புகழ்பெற்றிருந்தன. சங்ககாலப் பாடல்களில் பல்வேறு வகையான இசைக் கருவிகள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தன. தெற்கு பகுதி மற்றும் வடக்கு பகுதி நடனங்களை ஒருங்கிணைத்து புதிய வகை நடனம் ஆடுவது இந்த காலத்தில் தான் தொடங்கியது. இந்த வகை நடனங்கள் காப்பியமான சிலப்பதிகாரத்தில் முழுமையாக வெளிப்பட்டு இருந்தது.[30]

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகம் சிறப்பான முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டு இயக்கத்தில் இருந்தது. தொல்லியல் துறை ஆய்வுகள் மற்றும் இலக்கியங்களில் யுவனர்களுடனான வெளிநாட்டு வணிகம் செழுமையாக இருந்தததைக் கூறுகின்றன. தென்னிந்தாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் இருந்த முசிறி மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதியின் துறைமுக நகரம் பூம்புகார் ஆகிய இரு இடங்களில் ஏராளமான கப்பல்கள் நிறுத்தப்பட்டு வெளிநாட்டுப் பொருள்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்து வணிக மையங்களாக விளங்கின.[31] இந்த வணிகம் இரண்டாம் நூற்றாண்டிற்கு பிறகு வீழ்ச்சியடையத் தொடங்கியது. மேலும் உரோமானிய அரசுக்கும் பண்டைய தமிழ் நாட்டிற்கும் இருந்த நேரடி உறவு அரபியர்கள் மற்றும் கிழக்கு ஆப்ரிக்காவை சேர்ந்த ஆக்சுமைட்களின் நேரடி வணிகத்தால் சிதைவுறத் தொடங்கியது. உள்நாட்டு வணிகம் சிறப்பாக இருந்தது, பொருள்கள் வாங்குவது மற்றும் விற்பது பண்டகமாற்று முறைப்படி நடந்தது. பெரும்பாலான மக்களுக்கும் அதிக நிலங்களைக் கொண்டிருந்த பரம்பரை விவசாயிகளான வெள்ளாளர்களுக்கும் விவசாயம் தலைமைத் தொழிலாக இருந்தது.[32]

இடைக்காலம் (பொ.ஊ. 300–600)[தொகு]

பொ.ஊ.மு. 300 முதல் பொ.ஊ. 600 ஆம் ஆண்டு வரையிலான சங்க காலம் முடிவுற்ற பிறகு தமிழ் பகுதியில் என்ன நடந்தது என்பதற்கான தகவல் இல்லை. சுமார் 300 ஆம் ஆண்டுவாக்கில் களப்பிரரின் வருகையினால் அனைத்துப் பகுதிகளும் பாதிப்புக்குள்ளாயின. தமிழ் மன்னர்கள் நிறுவி இருந்த ஆட்சியை நீக்கிவிட்டு நாட்டில் கழுத்தை நெறிக்கும் ஆட்சியை களப்பிரர்கள் மேற்கொண்டனர். இதனால் பிற்கால இலக்கியங்களில் களப்பிரர் ஆட்சியாளர்கள் "கொடுங்கோலர்கள்" என்று குறிப்பிடப்பட்டது.[33] களப்பிரரின் தோற்றம் மற்றும் ஆட்சிப் பற்றிய தகவல்கள் அவ்வளவாக இல்லை. தங்கள் நினைவாக தொல்பொருள் அல்லது நினைவுச் சின்னத்தையோ இவர்கள் அதிக அளவில் விட்டுச் செல்லவில்லை. களப்பிரர் பற்றிய தகவல்கள் புத்தம் மற்றும் சமண இலக்கியங்களில் மட்டுமே அங்குமிங்குமாக உள்ளன.[34]

களப்பிரர்கள் புத்தம் அல்லது சமண நம்பிக்கையைப் பின்பற்றியதாகவும், இவர்கள் முற்கால நூற்றாண்டுகளில் தமிழ் பகுதியில் வாழ்ந்த பெரும்பாலான மக்கள் பின்பற்றிய இந்து மதங்களுக்கு (அத்திகா பள்ளிகள் மூலம் ) எதிராக இருந்தனர் எனவும் வரலாற்றாசிரியர்கள் ஊகஞ்செய்கின்றனர்.[35] ஏழாம் நூற்றாண்டு மற்றும் எட்டாம் நூற்றாண்டில் களப்பிரர் ஆட்சி வீழ்ந்த பிறகு வந்த இந்து மதத்தைச் சேர்ந்த அறிஞர்கள் தங்கள் நூல்களில் இவர்கள் பற்றி எந்த ஒரு குறிப்பையும் குறிப்பிடவில்லை. குறிப்பாக இவர்களது ஆட்சியை பற்றி எதிர்மறையாகவே குறிப்பிட்டு வைத்தனர். இவர்களது ஆட்சிக்காலம் ஓர் "இருண்ட காலம்" (இடைக்காலம்) என அழைக்கப்பட இதுவே காரணமாக இருக்கலாம். இங்கு ஆட்சி செய்து கொண்டிருந்த ஆட்சியாளர் குடும்பங்களில் சில களப்பிரர்களிடமிருந்து விலகி வடக்கு நோக்கி சென்று தங்களுக்கான இடங்களைத் தேர்வு செய்து கொண்டனர்.[36] பௌத்தம் மற்றும் சமண சமயங்கள் சமூகம் முழுவதும் பரவி நன்னடத்தை நெறிக் கவிதைகளுக்கு முக்கியத்துவம் அளித்தது.

எழுதுவது என்பது அதிகமானது, மேலும் தமிழ்-பிராமி எழுத்து முறையில் இருந்து தோன்றிய வட்டெழுத்து தமிழ் எழுத்துக்களை எழுதுவதற்கான தலைமை வரிவடிவமாக ஆனது.[37] தொடக்க நூற்றாண்டுகளில் எழுத்தப்பட இசையுடன் பாடும் பாடல்கள் ஒன்றாக திரட்டப்பட்டுள்ளன. இதிகாசச் செய்யுளான சிலப்பதிகாரம் மற்றும் வாழ்வியல் நெறிகளை கற்பிக்கும் திருக்குறள் போன்றவை இந்த காலகட்டங்களில் எழுதப்பட்டவையாகும்.[38] களப்பிரர் அரசர்கள் காலத்தில் இருந்த பௌத்தம் மற்றும் சமண அறிஞர்கள் அரசர்களால் ஆதரிக்கப்பட்டனர், இதனால் அக்கால இலக்கியங்களின் இயல்புகளில் அதன் தாக்கம் இருந்தது. இவ்வகையான இயல்புகளைக் கொண்ட பல்வேறு நூல்களும் இக்காலகட்டங்களில் இருந்த சமண மற்றும் பௌத்த சமயத்தை சார்ந்த எழுத்தாளர்களின் நூல்களாகும். நடனம் மற்றும் இசைத் துறையில், நாட்டுப்புற வடிவங்களுக்கு பதிலாக வடக்கத்திய பண்புகளின் பாதிப்பைக் கொண்ட புதிய வடிவங்களைப் பின்பற்றும் புதிய வகைகளுக்கு மேட்டுக்குடி மக்கள் ஆதரவளித்தனர். பழைய கற்கோவில்களில் சில இந்த காலகட்டத்தைச் சேர்ந்தவையாகும். பல்வேறு தெய்வங்களுக்காக கட்டப்பட்ட செங்கல் கோவில்களும் (கோட்டம் , தேவகுலம் , பள்ளி ) இலக்கியப் படைப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. பல்லவர்கள் மற்றும் பாண்டிய அரசுகளின் மீட்டெழுச்சியால் ஏழாம் நூற்றாண்டில் களப்பிரரின் ஆட்சி அகன்றது.[39]

களப்பிரர்கள் வெளியேறிய பிறகும் சமண மற்றும் பௌத்த மதத்தின் தாக்கம் தமிழ்நாட்டில் இருந்தது. முற்கால பாண்டிய மற்றும் பல்லவ அரசர்கள் இந்த மதங்களைப் பின்பற்றினர். இந்து மதம் நலிவுறுவதை பொறுத்துக் கொள்ள இயலாத இந்து மதத்தினரின் எதிர்வினைகள் வளர்ந்து ஏழாம் நூற்றாண்டின் பிந்தைய பகுதிகளில் உயர்க்கட்டத்தை அடைந்தன.[40] இந்து மதம் புத்துயிர் பெற்ற சமயத்தில் சைவம் மற்றும் வைணவ இலக்கியங்கள் பல உருவாக்கப்பட்டன. புகழ்பெற்ற பற்று இலக்கியங்கள் வளர்ச்சியடைய பல்வேறு சைவ நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் தூண்டுதலாக இருந்தனர். ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்கால் அம்மையார் நாயன்மார்களில் முதலானவராகக் கருதப்படுகிறார். சைவ இறைவாழ்த்து பாடகர்களான சுந்தரமூர்த்தி, திருஞான சம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோரும் இந்த காலகட்டத்தை சார்ந்தவர்கள் தான். பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பேயாழ்வார் போன்ற வைணவ ஆழ்வார்கள் வழங்கிய தெய்வ திருமறைகள் மற்றும் பாடல்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தம் என்ற நான்காயிரம் பாடல்களைக் கொண்ட திரட்டாக தொகுக்கப்பட்டுள்ளது.[41]

பேரரசுகளின் காலம் (பொ.ஊ. 600–1300)[தொகு]

வரலாற்றின் இடைக்காலங்களில் தமிழ்நாடு பல்வேறு பேரரசுகளின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் கண்டது. இந்த பேரரசுகளில் சிலர் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் தங்கள் ஆதிகத்தைச் செலுத்தி மிகவும் புகழ்பெற்று இருந்துள்ளனர். சங்க காலத்தின் போது மிக தலைமையாக இருந்த சோழர்கள் முதல் சில நூற்றாண்டுகளின் போது முற்றிலும் காணப்படவில்லை.[42] பாண்டியர்கள் மற்றும் பல்லவர்களுக்கிடையே போட்டியுடன் தொடங்கிய இந்தக் காலம் சோழர்களுக்கு புத்துயிர் அளிப்பதாக இருந்தது. சோழர்கள் சிறப்பான முறையில் அதிகாரம் பெற்று ஆட்சி செய்தனர். சோழர்களின் வீழ்ச்சி பாண்டியர்களுக்கு புத்தெழுச்சியாக அமைந்தது. கோவில் கட்டுதல் மற்றும் சமய இலக்கியம் பாண்டியர்கள் ஆட்சிக் காலத்தில் சிறப்பானவையாக அமைந்த காரணத்தினால் இந்த காலகட்டத்தில் இந்து மதம் மீண்டும் பலப்படுத்தப்பட்டது.[43]

முந்தைய காலத்தில் இருந்த சமணம் மற்றும் பௌத்த மதங்களின் தாக்கங்களை குறைத்து இந்து மதத்தின் பிரிவுகளான சைவம் மற்றும் வைணவம் ஆகியவை ஆதிக்கத்தில் இருந்தன. சோழ அரசர்கள் அதிகமாக ஆதரித்த சைவ மதம், கிட்டத்தட்ட நாட்டின் மதமாக இருந்தது.[44] இன்று இருக்கும் பழங்காலக் கோவில்களில் சில கோவில்கள் பல்லவர்களால் இந்தக் காலகட்டத்தில் கட்டப்பட்டதாகும். மாமல்லபுரத்தில் பாறையைக் குடைந்து கட்டப்பட்டுள்ள கோயில் மற்றும் காஞ்சிபுரத்தில் இருக்கும் கம்பீரமான கைலாசநாதர் கோவில் மேலும் வைகுண்டபெருமாள் கோவில் ஆகியவை பல்லவரின் கலைக்கு எடுத்துக்காட்டுகளாகும். அதிகமான வெற்றிப்பேறு மூலம் தாங்கள் அடைந்த செல்வங்களைக் கொண்டு எப்போதும் நிலைத்திருக்கும் வகையில் அமைந்துள்ள கோவில்களில் ஒன்றான தஞ்சாவூரில் உள்ள பெருவுடையார் (பிரகதீசுவரர்) கோவில் மற்றும் வெண்கல சிற்பங்கள் சோழர்களின் கலைக்கு எடுத்துக்காட்டுகளாகும். சிவன் மற்றும் விட்டுணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில்களுக்கு காணிக்கையாக கிடைக்கும் பணம், நகைகள், நிலங்கள், விலங்குகள் ஆகியவற்றால் கோவில்கள் பொருளாதார மையங்களாக மாறின.[45]

தமிழ்நாடு முழுவதும் தமிழை எழுதுவதற்கான தமிழ் வரிவடிவம் மாற்றப்பட்டு வட்டெழுத்து வரிவடிவம் பயன்படுத்தப்பட்டது. மதச்சார்பற்ற மற்றும் மதம் சார்ந்த இலக்கியம் இந்தக் காலகட்டத்தில் வளம் பெற்றது. தமிழ் காப்பியமான கம்பரின் இராமாவதாரம் பதின்மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகும். குழந்தைகளுக்கான பாடல்களை எழுதுவதில் மிகவும் ஆர்வம் கொண்ட ஔவையார் கம்பரின் சமகாலத்தவராவார். மதச்சார்பற்ற இலக்கியங்கள் பொதுவாக அரசர்களைப் பற்றி புகழ்ந்து பாடுவதற்காக எழுதப்படும். முந்தைய காலத்தில் எழுதப்பட்ட சமய பாடல்கள் மற்றும் சங்க காலத்தின் பழைய இலக்கியங்கள் கண்டறியப்பட்டு தொகை நூல்களாக தொகுக்கப்பட்டன. சமயம் சார்ந்த சடங்குகள் மற்றும் விழாச் சடங்குகளில் சமய ஆசான்கள் வடமொழியைப் பயன்படுத்தினர். இதன் மூலம் வடமொழி ஆதரிக்கப்பட்டது. முதலாம் இராசராச சோழன் காலத்தில் வாழ்ந்த நம்பி ஆண்டார் நம்பி என்பவர் சைவ நூல்களை ஒன்றாக திரட்டி திருமுறைகள் என்ற பதினோரு நூல்களாக வெளியிட்டுள்ளார். இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் (பொ.ஊ. 1133–1150) வாழ்ந்த சேக்கிழார் எழுதிய பெரியபுராணம் என்ற நூலில் சைவம் பற்றிய தகவல்கள் வரைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. முதலாம் குலோத்துங்க சோழன் இரண்டு முறை கலிங்க நாட்டிற்கு படையெடுத்துச் சென்றான் என்பது பற்றிய செய்திகளைக் கூறும் செயம்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி வாழ்க்கை வரலாறு பற்றிய பழங்கால எடுத்துக்காட்டாகும்.[46]

பல்லவர்கள்[தொகு]

பல்லவர்கள் மாமல்லபுரத்தில் உருவாக்கிய கடற்கரை கோவில் (எட்டாம் நூற்றாண்டு)

முதலாம் மகேந்திரவர்மன் மற்றும் அவரது மகன் மாமல்ல முதலாம் நரசிம்மவர்மன் ஆகியோரின் தோற்றத்துடன் ஏழாம் நூற்றாண்டு முதல் பல்லவர்களின் ஆட்சியை தமிழ்நாடு கண்டது. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு பல்லவர்கள் ஆட்சி அடையாளம் காணப்படவில்லை.[47] சாதவாகனர் அரசர்களின் செயல் அலுவலர்களாக பல்லவர்கள் இருந்தார்கள் என்று அறிஞர்களால் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.[48] சாதவாகனர்களின் வீழ்ச்சிக்கு பின்பு ஆந்திரா மற்றும் தமிழ்நாடு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் பல்லவர்கள் வைத்துக் கொண்டனர். பல்லவர்கள் தக்காணப் பீடபூமியை ஆட்சி செய்த வீடணுகுண்டினா என்பவருடன் திருமண உறவும் கொண்டிருந்தனர். சுமார் பொ.ஊ. 550 ஆண்டுவாக்கில் சிம்மவிட்டுணு என்ற அரசனின் ஆட்சிக்காலத்திலேயே பல்லவர்கள் மிகவும் புகழ்பெறத் தொடங்கினர். சோழர்களை அடிமைப் படுத்தி தெற்கு பகுதியில் உள்ள காவேரி ஆறு பகுதிகள் வரை பல்லவர்கள் ஆட்சி செய்தனர்.

முதலாம் நரசிம்மவர்மன் மற்றும் பல்லவமல்லன் இரண்டாம் நந்திவர்மன் ஆட்சிக் காலத்தில் பல்லவர்கள் சிறப்பாக இருந்தனர். காஞ்சிபுரத்தை தலைநகரமாகக் கொண்டு தென்னிந்தியாவின் பல பகுதிகளை பல்லவர்கள் ஆண்டனர். பல்லவர்கள் காலத்தில் திராவிடக் கட்டடக்கலை உயரிய நிலையில் இருந்தது.[சான்று தேவை] யுனெசுகோவினால உலகப் பாரம்பரிய இடம் என்று அறிவிக்கப்பட்ட கடற்கரைக் கோவில் இரண்டாம் நரசிம்மவர்மன் அரசனால் கட்டப்பட்டது. சீனாவில் உள்ள பௌத்த மதத்தின் கொள்கையான சென் பிரிவை நிறுவிய போதி தர்மர் என்பவர் பல்லவ வம்சத்தின் இளவரசர் என்று பல்வேறு அடையாளங்கள் கூறுகின்றன.[49][50]

வாதாபியை நடுவாகக் கொண்டு ஆறாம் மற்றும் ஏழாம் நூற்றாண்டில் சாளுக்கியர் குலம் தக்காண பீடபூமியின் மேற்கு பகுதியில் எழுச்சியடைந்தது. முதலாம் மகேந்திரவரமன் ஆட்சி காலத்தில் இரண்டாம் புலிகேசி (c.610–642) என்பவர் பல்லவ பேரரசின் மீது படையெடுத்தார். மகேந்திரவர்மனின் அடுத்தவரான நரசிம்மவர்மன் சாளுக்கியர் மீது திடீரென படையெடுத்து அவற்றைக் கைபற்றி வாதாபியை தனது வசமாக்கிக் கொண்டார். சாளுக்கியர் மற்றும் பல்லவர்களுக்கு இடையே இருந்த பகை 750 ஆம் ஆண்டில் சாளுக்கியர்கள் மறையும் வரை சுமார் 100 ஆண்டுகள் வரை தொடர்ந்திருந்தது. சாளுக்கியர்களும் பல்லவர்களும் பலமுறை சண்டையிட்டுள்ளனர். பல்லவர்களின் தலைநகரமான காஞ்சிபுரம் இரண்டாம் நந்திவர்மன் ஆட்சிக் காலத்தில் இரண்டாம் விக்ரமாதித்யா என்ற அரசனால் கைப்பற்றப்பட்டது.[51] இரண்டாம் நந்திவர்மன் நீண்ட ஆட்சிக் காலத்தைக் (732–796) கொண்டிருந்தார். 760 ஆம் ஆண்டில் கங்கைப் பேரரசைக் (தெற்கு மைசூர்) கைப்பற்ற பயணம் செய்த படைகளுக்கு இரண்டாம் நந்திவர்மன் தலைமை தாங்கினார். பல்லவர்கள் பாண்டியர்களுடனும் தொடர்ச்சியாக சண்டையில் ஈடுபட்டு வந்தனர். அவர்களின் எல்லைப் பகுதி காவேரி ஆற்றின் கரைபபகுதிகள் வரை பரவியது. பாண்டியர்கள் மற்றும் சாளுக்கியர்கள் என்ற இரண்டு பேரரசுகளிடம் பகையாக இருந்த காரணத்தினால் இவர்களுக்கு எதிராக பல்லவர்கள் போரிட வேண்டியிருந்தது.

பாண்டியர்கள்[தொகு]

பாண்டிய பேரரசு

தெற்குப் பகுதியில் களப்பிரர் ஆட்சியை வீழ்த்திய பெருமை பாண்டிய மன்னன் கடுங்கோன் (560–590) என்பவரைச் சாரும்.[52] கடுங்கோன் மற்றும் அவரது மகன் மாறவர்மன் அவனிசூளாமணி பாண்டியர்களின் ஆட்சிக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்தினர். பாண்டிய மன்னன் சேந்தன் தனது ஆட்சிக் காலத்தில் ஆற்றலை சேர நாடு வரைக்கும் விரிவாக்கினார். இவரது மகன் அரிகேசரி பராந்தக மாறவர்மன் (c. 650–700) நீண்டகாலம் செழிப்பாக ஆட்சி செய்தார். அவன் பல போர்களின் மூலம் பாண்டியர்களின் ஆற்றலை விரிவாக்கினான். பாண்டியர்கள் பண்டைய காலத்திலிருந்தே புகழ்பெற்றவர்கள். பதின்மூன்றாம் நூற்றாண்டில், அப்போதிருந்த பேரரசுகளில் மிகவும் செல்வமிக்க பேரரசு என்று மார்க்கோ போலோ பாண்டிய பேரரசைக் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் ரோமன் பேரரசு வரையிலான பரவலான தொடர்புகளுடன் இருந்தனர், அத்தொடர்புகள் அரசியல் நயமிக்கவையாகவும் இருந்தன.[53]

தங்கள் ஆட்சி எல்லையை விரிவாக்கிய பின்னர், சில ஆண்டுகள் கழித்து பல்லவர் ஆட்சிக்கு பல்வேறு இடையூறுகளை பாண்டிய பேரரசு விளைவித்தது. பாண்டிய மன்னர் மாறவர்மன் இராசசிம்மா சாளுக்கியர் மன்னர் இரண்டாம் விகுரமாதிதியனுடன் கூட்டணி வைத்து பல்லவ அரசர் இரண்டாம் நந்திவர்மனைத் தாக்கினர்.[54] காவிரிக் கரையில் நடந்த போரில் முதலாம் வரகுனன் பல்லவர்களைத் தோற்கடித்தார். பாண்டியர்களுக்கு அதிகரித்து வரும் ஆற்றலை தடை செய்வதற்காக பல்லவ மன்னர் நந்திவர்மன், கொங்கு மற்றும் சேர நாடுகளின் தலைவர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டார். போர்வீரர்கள் பலமுறைப் போரிட்டுக் கொண்டாலும் இறுதியில் பாண்டிய மன்னர்களின் படையே வெற்றி பெற்றது. பாண்டியர்கள் சுரீமாற சுரீவல்லபா என்பவரின் துணையுடன் இலங்கை மீது படையெடுத்து 840 ஆம் ஆண்டில் வடக்குப் பகுதிகளை அழித்தனர்.[55]

சுரீமாறாவின் துணையுடன் பாண்டியர்களின் ஆட்சி ஆற்றல் தொடர்ந்து வளர்ந்தது. பல்லவர்களின் பல்வேறு பகுதிகள் பாண்டியர்களின் கட்டுப்பாட்டில் வந்தன. வடக்கில் தக்காண பீடபூமியின் சாளுக்கியர்களை தோற்கடித்த இராட்டுரகுடாசு அமைப்புகளால் தற்போது பாண்டியர்களுக்கு நெருக்கடி அதிகமானது. கங்கை மற்றும் சோழர்களின் துணையுடன் மூன்றாம் நந்திவர்மன் என்ற அரசனை பல்லவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சுரீமாறாவை தெள்ளாறு போரில் தோற்கடித்தனர். பல்லவர்களின் பேரரசு வைகை ஆறு வரை மீண்டும் நீண்டது. பல்லவ அரசன் நரிபதுங்க என்பவரால் அரிசில் என்ற இடத்தில் பாண்டியர்கள் தோற்கடிக்கப்பட்டனர் (c. 848). பல்லவர்களின் மேலாளுமையை பாண்டியர்கள் பிறகு ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று.[56]

சோழர்கள்[தொகு]

பாண்டியர்கள் மற்றும் பல்லவர்களுக்கிடையே இருந்த சண்டையைப் பயன்படுத்திக் கொண்டு 850 ஆம் ஆண்டுகளில் விசயாலய சோழர் தஞ்சாவூரைக் கைப்பற்றி இடைக்கால சோழர் ஆட்சிக்கான அடித்தளத்தை அமைத்தார். இடைக்காலத்தில் சோழர் வம்சத்தை விசயாலய சோழர் நிறுவினார். அவரது மகன் முதலாம் ஆதித்யா சோழர்களின் ஆதிக்கத்தை விரிவுபடுத்துவதற்கான உதவிகளைச் செய்தார். 903 ஆம் ஆண்டில் பல்லவ பேரரசுக்குள் நுழைந்து பல்லவ அரசன் அபராசிதாவை போரில் கொன்றதன் மூலம் பல்லவர்களின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.[57] முதலாம் பராந்தக சோழன் ஆற்றலில் பாண்டிய நாடு முழுவதும் சோழப் பேரரசு பரவியது. சோழப் பேரரசுக்குள் தங்களது பகுதிகளை விரிவாக்கம் செய்த இராட்டுராகுட்டா குழுக்களினால் தனது ஆட்சிக் காலத்தின் இறுதியில் முதலாம் பராந்தக சோழன் பாதிக்கப்பட்டார்.

இராசேந்திர சோழரின் ஆட்சியில் சோழ பேரரசு1030).

மன்னர்களின் முறையற்ற ஆட்சித் திறமை, அரண்மனைக் கிளர்ச்சி மற்றும் வாரிசுகளின் தகராறு ஆகியவை ஏற்பட்டு அடுத்து வந்த ஆண்டுகளில் சோழர்கள் தற்காலிகமாக வீழ்ச்சியடைந்தனர். பலமுறை முயற்சி செய்தும் பாண்டிய நாட்டை முழுவதுமாக வீழ்த்த முடியவில்லை. மேலும் வடக்கு பகுதியில் இராட்டுராகுடா குழுவினரும் மிகவும் வலிமை வாய்ந்த எதிரிகளாக இருந்தனர். எனினும், முதலாம் இராசராச சோழனுக்குப் பிறகு 985 ஆம் ஆண்டு சோழர் ஆட்சி மீண்டும் மலர்ந்தது. இராசராசன் மற்றும் அவரின் மகனான முதலாம் இராசேந்திர சோழன் காலத்தில் பொருளாதாரம் மற்றும் கலாச்சார ரீதியாக சோழர்கள் ஆசியாவில் கவனிக்கத்தக்க வீரர்களாக மாறினர். தெற்குப் பகுதியில் மாலத்தீவுகளில் இருந்து வடக்கில் வங்காளத்தில் உள்ள கங்கை ஆற்றங்கரைப் பகுதிகள் வரை சோழர்களின் ஆட்சிப் பகுதிகள் பரவி இருந்தன. தென்னிந்திய தீபகற்பம், இலங்கையுடன் இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மாலத்தீவுகள் ஆகிய பகுதிகளில் இராசராச சோழன் வெற்றிக் கொண்டார். மலேய தீவுக்குழுமத்தில் இருந்த சுரீவிசயா பேரரசை தோற்கடித்து இராசேந்திர சோழன் சோழர்களின் ஆட்சியைப் பரப்பினார்.[58] பீகார் மற்றும் வங்காளப் பகுதியின் அரசனான மகிபாலா என்பவரை இவர் தோற்கடித்தார். வெற்றியைக் கொண்டாடும் விதமாக கங்கைகொண்ட சோழபுரம் (கங்கைப் பகுதியில் சோழர்கள் வெற்றி பெற்றதன் நினைவாக உருவாக்கப்பட்ட நகரம் ) என்ற புதிய தலைநகரத்தை உருவாக்கினார். சோழப் பேரரசு உயராற்றலில் இருந்த போது இலங்கையின் தெற்கு தீபகற்ப பகுதியிலிருந்து தங்களது பகுதிகளை வடக்கிலுள்ள கோதாவரி பகுதி வரை விரிவாக்கியது. இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் கங்கை ஆறு வரை நீண்டிருந்த பகுதிகளை சோழர்கள் அடக்கி ஆண்டனர். மலேய தீவுக்குழுமத்திலிருந்த சுரீவிசய பேரரசுக்குள் படையெடுத்து சோழப் பேரரசின் கடற்படை வீரர்கள் வெற்றி கண்டனர்.[59] சோழப் பேரரசின் இராணுவ வீரர்கள் தாய்லாந்து மற்றும் கம்போடியாவின் கெமர் பேரரசுகளிடம் நேரடியாக வரி வசூல் செய்தனர்.[60] இராசராசன் மற்றும் இராசேந்திர சோழன் போன்ற மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் சோழப் பேரரசு மிகவும் வளர்ச்சியடைந்தது. பேரரசை சுயமாக ஆட்சி செய்து கொள்ளும் பல உள்ளூர் பகுதிகளாகப் பிரித்தனர். அவற்றின் அலுவலர்கள் பொதுத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[61]

பெருவுடையார் ஆலயம்

இந்த காலம் முழுவதும், சோழர்கள் ஆட்சியை இலங்கையிலிருந்து அகற்ற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து போராடும் சிங்களர்கள், தங்களது பாரம்பரியப் பகுதிகளின் சுயாட்சியை மீண்டும் பெற முயற்சித்துக் கொண்டிருந்த பாண்டிய மன்னர்கள், சோழப் பகுதிகளைக் கைப்பற்றுவதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்த மேற்கு தக்காணப் பகுதிகளைச் சேர்ந்த சாளுக்கியர்கள் ஆகியோரால் சோழர்களுக்கு தொடர்ந்து தொல்லை ஏற்பட்டது. சோழர்கள் தங்களின் எதிரிகளுடன் இந்த வரலாற்றுக் காலம் முழுவதும் தொடர்ச்சியாக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். சாளுக்கியர்களும் சோழர்களும் தங்களது ஆற்றலில் சம அளவில் இருந்தனர். துங்கபத்ரா ஆற்றை எல்லையாகக் கொள்வதற்கு இரண்டு பேரரசுகளும் இரகசியமாய் ஒப்புக் கொண்டனர். வேங்கி பேரரசில் சோழர்களின் தலையீடு காரணமாக இரண்டு பேரரசுகளுக்கிடையே கருத்து வேறுபாடு அதிகரித்துக் கொண்டிருந்தது. சோழர்களும் சாளுக்கியர்களும் பலமுறை போரிட்டுக் கொண்டனர். இவர்களது போர் சில நேரங்களில் முடிவில்லாத இக்கட்டான நிலையில் இருந்துள்ளது.

கோதாவரி ஆற்றின் தெற்கு கரையில் அமைந்துள்ள வேங்கி பகுதிகளைச் சுற்றியுள்ள கிழக்கு சாளுக்கியர்களுடனான சோழர்களின் திருமணம் மற்றும் அரசியல் உறவு இராசராசன் ஆட்சிக் காலத்தில் சோழர்கள் வேங்கி பேரரசுக்குள் நுழைந்ததிலிருந்து தொடங்கியது. வீரராஜேந்திர சோழனின் மகன் ஆதிராஜேந்திர சோழன் 1070 ஆம் ஆண்டு ஏற்பட்ட கலகத்தின் போது படுகொலை செய்யப்பட்டார். இவரைத் தொடர்ந்து சோழர்களின் ஆட்சிக்காக சாளுக்கிய சோழர் வம்சத்தைச் சேர்ந்த முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். குலோத்துங்கன் வேங்கி பேரரசின் அரசன் இராசராச நரேந்திராவின் மகனாவார். சாளுக்கிய சோழர் வம்சத்தில் முதலாம் குலோத்துங்க சோழன் மற்றும் விகுரம சோழன் போன்ற திறமை வாய்ந்த அரசர்கள் குறைவாகவே இருந்தனர். சோழ அரசர்கள் தங்கள் ஆற்றலை இழப்பது இந்த காலகட்டத்திலிருந்து தொடங்கியது. சிங்களர்கள் மீட்டெழுச்சி காரணமாக இலங்கையின் தீவுப் பகுதிகளில் சோழர்கள் தங்களது ஆற்றலை இழந்து வெளியேறினர்.[62] மேற்கு பகுதியின் சாளுக்கிய அரசனான ஆறாம் விகுரமாதிதியா என்பவரிடத்தில் வெங்கிப் பேரரசையும், கங்காவாதி (மைசூரின் தெற்கு மாவட்டங்கள்) பகுதிகளை சாளுக்கிய இராணுத்தைச் சேர்ந்த போசள விடுணுவருதனா என்பவரிடமும் 1118 ஆம் ஆண்டுகளில் தங்கள் ஆற்றலை சோழர்கள் இழந்தனர். பாண்டிய நாட்டுப் பகுதிகளைக் கட்டுப்படுத்துவதில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக பாண்டியர்களின் ஆட்சிப் பொறுப்பிற்கு பலர் உரிமைக் கோரினர். இதன் காரணமாக உள்நாட்டுப் போரில் உரிமை பெற்ற பதிலியாக சிங்களர்கள் மற்றும் சோழர்கள் கலந்துக் கொண்டனர். பாண்டியர்களின் ஆற்றலைக் கட்டுப்படுத்தி கட்டுப்பாட்டில் வைப்பதற்காக காஞ்சிபுரத்தில் நிரந்தரமாக ஒரு போசள் இராணுவம் சோழர்கள் வாழ்ந்த இறுதி நூற்றாண்டு வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சோழ வம்சத்தின் கடைசி அரசானாக மூன்றாம் ராஜேந்திர சோழன் இருந்தார். காடவர் தலைவர் முதலாம் கோப்பெருஞ்சிங்கன் இராசேந்திராவை வெற்றிக் கொண்டு அவரை சிறையில் அடைத்தார். இராசேந்திராவின் ஆட்சி முடிவடைந்த காலத்தில் (1279) சோழர் பேரரசு முழுவதையும் பாண்டியர்கள் கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.[63]

பாண்டியர்களின் மறுமலர்ச்சி[தொகு]

நூற்றாண்டுகள் வரை இருந்த பல்லவர்கள் மற்றும் சோழர்களின் ஆதிக்கம் சடாவர்மன் சுந்தர பாண்டியன் என்ற பாண்டிய மன்னனால் மாற்றப்பட்டு, 1251 ஆம் ஆண்டு முதல் பாண்டியர்களின் ஆட்சி மீண்டும் மலர்ந்தது. கோதாவரி ஆற்றின் கரைகளிலிருந்த தெலுங்கு பேசும் நாடுகள் முதல் இலங்கையின் வடக்குப் பகுதியின் பாதியளவு வரை பாண்டியர்கள் ஆதிக்கத்தில் வந்தது. 1308 ஆம் ஆண்டில் முதலாம் மறவர்மன் குலசேகர பாண்டியன் இறந்த பிறகு ஆட்சிப் பொறுப்பை யார் ஏற்பது என்று அவரின் மகன்களுக்கிடையே போட்டி ஏற்பட்டது. சட்டப்படி வாரிசான சுந்தர பாண்டியன் மற்றும் சட்டப்படி வாரிசல்லாத வீர பாண்டியன் (அரசனால் பரிந்துரை செய்யப்பட்டவர்) ஆகியோர் ஆட்சிப் பொறுப்பிற்காக சண்டையிட்டுக் கொண்டனர். பின்னாளில் தில்லி சுல்தானகத்தின் படையெடுப்பு காரணமாக மதுரை தில்லி சுல்தானகத்தின் ஆட்சி அதிகாரத்திற்கு மாறியது (சுந்தர பாண்டியனின் வெற்றிக் காலங்களில் பாதுகாப்பு அரணாக மதுரை இருந்தது).

தில்லி சுல்தானகம்[தொகு]

தில்லி சுல்தானகத்தின் அலாவுதீன் கில்ஜி என்பவரின் தளபதி மாலிக் காஃபூர் 1311 ஆம் ஆண்டு மதுரை மீது படையெடுத்து மதுரையைக் கைப்பற்றினார்.[64] திருநெல்வேலியைச் சுற்றியுள்ள சிறிய பகுதிகளை பாண்டியர்கள் மற்றும் அவர்களின் வழித்தோன்றல்கள் சிறிது காலம் ஆட்சி செய்தனர். குலசேகர பாண்டியனின் சேர இராணுவத் தளபதியான ரவிவர்மன் குலசேகரன் (1299–1314) பாண்டிய ஆட்சியை தனது உரிமையாக்கிக் கொண்டான். நாட்டின் உறுதியற்ற நிலையைப் பயன்படுத்திக் கொண்டு தென் தமிழகம் முழுவதையும் படையெடுத்து கன்னியாகுமரி முதல் காஞ்சிபுரம் வரையிலான பகுதிகள் அனைத்தையும் சேர பேரரசின் கீழ் இரவிவர்மன் குலசேகரன் கொண்டு வந்தார். சென்னையின் புறநகர் பகுதியான பூந்தமல்லி என்ற இடத்தில் இவர் பற்றிய கல்வெட்டு கண்டு எடுக்கப்பட்டது.[65]

விஜயநகரம் மற்றும் நாயக்கர் காலம் (பொ.ஊ. 1300–1650)[தொகு]

நாயக்கர் மன்னரால் சீர்செய்யப்பட்ட தென்னிந்தியாவின் மதுரை நகரில் உள்ள மீனாட்சி ஆலயம்.

பதினான்காம் நூற்றாண்டில் தில்லி சுல்தானகத்தின் பற்றுதல் இந்துக்களிடையே பகையுணர்வை ஏற்படுத்தியது. இதன் காரணமாக இந்துக்கள் ஒன்றாக இணைந்து விஜயநகரப் பேரரசு என்ற புதிய பேரரசை உருவாக்கினர். கர்நாடகத்தின் விஜயநகரம் என்ற நகரத்தை மையமாகக் கொண்டு இந்துக்களுக்கான விசயநகரப் பேரரசை ஹரிஹரா மற்றும் புக்கா ஆகிய இருவரும் நிறுவினர்.[66] புக்காவின் ஆட்சியில் விஜயநகரப் பேரரசு வளம் பெற்று தெற்குப் பகுதி முழுவதும் பரவியது. தென்னிந்தியாவின் பல பேரரசுகளை புக்கா மற்றும் அவரது மகன் கம்பனா கைப்பற்றினர். கில்ஜி இராணுவத்தின் மிஞ்சிய வீரர்களை கொண்டு நிறுவப்பட்டிருந்த மதுரை சுலதானகத்தை 1371 ஆம் ஆண்டு விஜயநகரப் பேரரசு தோற்கடித்தது.[67] தென்னிந்தியாவின் பகுதிகள் முழுவதையும் இந்த பேரரசு இறுதியாக கைப்பற்றியது. நாயக்கர் என்ற பதவியில் உள்ளூர் ஆளுநர்களை நியமித்து பேரரசின் பல்வேறு பகுதிகளை ஆட்சிச் செய்யுமாறு விஜயநகரப் பேரரசு ஏற்பாடு செய்தது.

தள்ளிக்கோட்டைப் போரின் போது தக்காண சுல்தான்களால் 1564 ஆம் ஆண்டு விஜயநகரப் பேரரசு தோற்கடிக்கப்பட்டது.[68] உள்ளூர் நாயக்கர் ஆளுநர்கள் விஜயநகரப் பேரரசின் ஆட்சிக்கு விடுதலை அறிவித்து தங்களது ஆட்சியைத் தொடங்கினர். மதுரை நாயக்கர்கள் மற்றும் தஞ்சாவூர் நாயக்கர்கள் பிரிவினர் நாயக்கர்களில் மிகவும் பிரபலமானவர்கள். தஞ்சாவூர் நாயக்கர்களின் ரகுநாத நாயக்கர் (1600–1645) நாயக்கர்களில் மிகவும் சிறப்பானவராக இருந்தார்.[69] வணிகம் செய்வதை ஊக்குவிக்கும் எண்ணத்தில் சலுகைகளை வழங்கி தரங்கம்பாடி என்ற இடத்தில் வணிக மையம் ஒன்றை 1620 ஆம் ஆண்டு ரகுநாத நாயக்கர் அமைத்தார்.[70] எதிர்காலத்தில் ஐரோப்பியர்கள் நமது நாட்டின் வளங்கள் மீது பற்றுக் கொள்வதற்கு இந்த வணிக மையம் அடித்தளமாக அமைந்தது. டச்சுக்காரர்களின் வெற்றி ஆங்கிலேயர்களை தஞ்சாவூர் பகுதியில் வணிகம் செய்ய ஊக்கமளித்தது. எதிர்விளைவு ஏற்படுவதற்கான காரணமாக இது அமைந்தது. தஞ்சாவூர் நாயக்கர்களின் கடைசி அரசனாக விசய ராகவா (1631–1675) இருந்தார். நாட்டில் இருந்த பல்வேறு பழையக் கோவில்களை புதுப்பித்து நாயக்கர்கள் மீண்டும் கட்டினர். அவர்களது பங்களிப்புகளை நாட்டின் பல இடங்களில் இன்றும் காணலாம். பழைய கோவில்களுக்கு பெரிய தூண்களைக் கொண்டு மண்டபங்கள், நீளமான முகப்பு கோபுரங்கள் போன்றவற்றை அமைத்து தங்கள் காலத்தின் சமய கட்டமைப்புகளை நாயக்கர்கள் விரிவாக்கம் செய்துள்ளனர்.

மதுரையை ஆட்சி செய்த நாயக்கர்களில் திருமலை நாயக்கர் மிகவும் பிரபலமானவர். கலை மற்றும் கட்டடக்கலைக்கு பாதுகாப்பு அளித்து மதுரையைச் சுற்றி இருந்த பழையச் சின்னங்களை புதிய கட்டமைப்புகளுடன் திருமலை நாயக்கர் விரிவாக்கம் செய்தார். 1659 ஆம் ஆண்டு திருமலை நாயக்கரின் மறைவுக்கு பின்பு மதுரை நாயக்கரின் பேரரசு முடிவுக்கு வர ஆரம்பித்தது. இவருக்கு பிந்தைய அரசர்கள் பலம்குன்றிய விதத்தில் இருந்ததால் மதுரை மீதான படையெடுப்பு மீண்டும் துவங்கியது. மைசூரின் சிக்க தேவ ராயர் மற்றும் இசுலாமிய அரசர்கள் செய்தது போல மராத்தா பேரரசின் சிறந்த மன்னரான சிவாஜி போஸ்லேவும் தெற்கு நோக்கி படையெடுத்தார். இதன் காரணமாக தெற்கு பகுதிகளில் கலவரம் மற்றும் நிலையற்ற தன்மை நிலவியது. உள்ளூர் ஆட்சியாளராக இருந்த இராணி மங்கம்மாள் இந்த படையெடுப்புகளை துணிவுடன் தடைச் செய்தார்.[71]

நிசாம்கள் மற்றும் நவாப்களின் ஆட்சி[தொகு]

விஜயநகரப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் ஐரோப்பியர்கள் தமிழ்நாட்டில் குடியேறத் தொடங்கினர். செஞ்சி மற்றும் பழவேற்காடு அருகில் இருக்கும் கோரமண்டல கடற்கரை பகுதியில் வணிகம் செய்வதற்கான வணிக நிலையங்களை டச்சுக்காரர்கள் 1605 ஆம் ஆண்டு நிறுவினர். பழவேற்காட்டின் வடக்கு பகுதியைச் சுற்றியுள்ள 35 மைல்கள் (56 km) ஆறுமுகன் (துர்க்கராஜ்பட்ணம்) கிராமப் பகுதிகளில் கிழக்கிந்திய கம்பனி ஒரு 'தொழிற்சாலையை' (சேமிப்புக்கிடங்கு) 1626 ஆம் ஆண்டு நிறுவியது. கம்பனி நிருவாகத்தின் அலுவலர்களில் ஒருவரான ஃப்ரான்சிஸ் டே (Francis Day) என்பவர், வந்தவாசி பகுதியின் நாயக்கரான தர்மலா வேங்கடாதிரி நாயக்கர் என்பவரிடம் இருந்து மதராஸ்பட்டணம் என்ற மூன்று-மைல் (5 கிமீ) இடம் கொண்ட மீன்பிடி கிராமத்தை 1963 ஆம் ஆண்டில் தனது உரிமையாக்கிக் கொண்டார். மணற் சிறுதட்டுகளைக் கொண்டு சுமார் ஐந்து சதுர கிலோமீட்டர் பரப்பில் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அரண்மனையை கிழக்கிந்திய கம்பனி உருவாக்கியது.[72] இது தான் மதராஸ் நகரத்தின் ஆரம்பமாகும். வேலூர் கோட்டை மற்றும் சந்திரகிரியைச் சார்ந்து பேடா வெங்கட ராயன் என்ற விஜயநகர அரசன் (அரவிடு மரபு) கோரமண்டலக் கடற்கரையை ஆட்சி செய்து கொண்டிருந்தார். இவரின் ஒப்புதலுடன் இந்த சிறிய நிலப்பகுதியில் தனியுரிமையுடன் வியாபரம் செய்ய ஆங்கிலேயர் ஆரம்பித்தனர்.[73]

பீசப்பூர் (Bijapur) இராணுவத்தின் ஒரு பகுதியினர் விஜயராகவா என்பவருக்கு உதவி செய்வதற்காக தஞ்சாவூர் பகுதிக்கு வந்து மதுரை நாயக்கரிடமிருந்து வல்லம் என்ற பகுதியை 1675 ஆம் ஆண்டு கைப்பற்றினர். தஞ்சாவூர் பேரரசு முழுவதும் தங்களது ஆட்சியை நிலைநிறுத்த விஜயராகாவா மற்றும் இகோஜி (Ekoji) ஆகியோரை பீசப்பூர் இராணுவத்தினர் கொலைச் செய்தனர். இவ்வாறாக தஞ்சாவூரில் மராத்தா ஆட்சி தொடங்கியது. இகோஜிக்குப் பிறகு அவரின் மூன்று மகன்களான சாஜி (Shaji), முதலாம் சரபோஜி (Serfoji I), முதலாம் துலஜா (Thukkoji) என்கிற (alias) துக்கோஜி தஞ்சாவூரை ஆட்சி செய்தனர். மராத்திய ஆட்சியாளர்களில் இரண்டாம் சரபோஜி (1798–1832) மிகவும் சிறப்பானவர். கலை மீது கொண்ட நாட்டம் காரணமாக தனது வாழ்க்கையை அர்ப்பணம் செய்தார். கற்றுக் கொடுத்தலில் முதன்மையாக தஞ்சாவூர் மாறியது. கலை மற்றும் இலக்கியத்திற்கு பாதுகாப்பு அளித்து சரஸ்வதி மஹால் நூலகத்தை தனது இடத்தில் சரபோஜி நிறுவினார். வடக்குப் பகுதியிலிருந்து வந்த இசுலாமியர்களின் படையெடுப்பு தக்காணபீடபூமியின் மக்கள் மற்றும் ஆந்திர நாடுகளைச் சேர்ந்த இந்து மக்களை நாயக்கர் மற்றும் மராத்தா அரசர்களின் பாதுகாப்பில் இருக்குமாறு செய்தது. கர்நாடக இசையின் மும்மூர்த்திகளுடன் பிரபல கர்நாடக இசை அமைப்பாளாரான தியாகராஜா (1767–1847) இந்தக் காலகட்டங்களில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்தனர்.[74]

18 ஆம் நூற்றாண்டின் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையின் மாதிரிச் சித்திரம்.

முகலாய அரசர் ஔரங்கசீப் ஆட்சிக் காலம் 1707 ஆம் ஆண்டு முடிவடைந்த பிறகு வந்த போர்கள் பலவற்றை இவரது ஆட்சிக் கலைத்தது. மேலும் இவர்களது பேரரசில் அடிமையாக இருந்த பலரும் தங்கள் சுதந்திரத்தை வலியுறுத்தினர். தமிழ்நாட்டின் தெற்கு மாவட்டங்களை நிர்வகிக்கும் பொறுப்பு பல நூறு பாளையக்காரர் அல்லது பொலிகர் என்பவர்களிடம் அளிக்கப்பட்டது. இவர்கள் குறிபிட்ட கிராமங்களை ஆட்சி செய்தனர். இந்த உள்ளூர் தலைவர்கள் தங்கள் பகுதிகளில் அடிக்கடி போரிட்டுக் கொண்டனர். இந்த நிலை தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவின் பகுதிகளில் குழப்பத்தையும் கலவரத்தையும் ஏற்படுத்தியது. இந்த குழப்பமான நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஐரோப்பிய வணிகர்கள் வணிகம் செய்யத் தொடங்கினர்.[75]

ஐரோப்பியர்களின் குடியேற்றம் (பொ.ஊ. 1750–1850)[தொகு]

ஆங்கிலோ-பிரான்சு சண்டைகள்[தொகு]

முகமது அலி கான் வாலாசா, கர்னாடிக்கின் நவாப் (1717–1795)

பிரான்சுக்காரர்கள் இந்தியாவிற்கு புதியவர்களாக வந்தவர்கள். பிரான்சு கிழக்கிந்திய கம்பனி 1664 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, இந்தியாவில் தாங்கள் வணிகம் செய்வதற்கான அனுமதியை ஔரங்கசீப்பிடமிருந்து பிரான்சு அதிகாரிகள் 1666 ஆம் ஆண்டு பெற்றனர். கோரமண்டல கடற்கரைப் பகுதியில் உள்ள பாண்டிச்சேரியில் பிரான்சுக்காரர்கள் தங்கள் வணிக நிலையங்களை அமைத்தனர். 1739 ஆம் ஆண்டு காரைக்கால் பகுதியை கைப்பற்றியதன் மூலம் ஜோசப் ஃப்ரான்கோஸ் டூப்லெக்ஸ் பாண்டிச்சேரியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஐரோப்பாவில் ஆஸ்திரிய உரிமைக்கான போர் 1740 ஆம் ஆண்டு தொடங்கியது. இதன் விளைவாக இந்தியாவில் இருந்த ஆங்கிலேயர் மற்றும் பிரான்சு வீரர்களுக்கு இடையே சண்டை மூண்டது. கோரமண்டல கடற்கரைப் பகுதியில் இரண்டு நாட்டின் கடற்படைகளும் பல்வேறு சண்டைகளில் ஈடுபட்டனர். லா போர்டோனைஸ் (La Bourdonnais)தலைமையில் வந்த பிரான்சு படையினர் சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையை 1746 ஆம் ஆண்டு தாக்கி தங்கள் வசமாக்கிக் கொண்டனர். இந்த போரில் சிறைச் சாலையில் அடைக்கப்பட்டவர்களில் ராபர்ட் க்ளைவ் என்பவரும் ஒருவர். ஐரோப்பாவில் நடைபெற்ற போர் 1748 ஆம் ஆண்டு முடிவடைந்தது. ஆக்ஸ்-லா-சாப்பள் அமைதி (Aix-la-Chapelle) உடன்படிக்கையின் படி மதராஸ் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டது.[76]

ஆங்கிலேயருக்கும் பிரான்சுக்காரர்களுக்கும் இடையே இருந்த இராணுவச் சண்டை முடிவுற்று அரசியல் ரீதியான சண்டைகள் தொடங்கியது. பிரான்சுக்காரரிடம் மிகவும் பற்றுதலுடன் இருந்த கர்நாடகத்தின் நவாப் மற்றும் ஐதராபாத் நிசாம் ஆகிய இரண்டு பதவிகளும் ஆட்சியாளர்களால் பறிக்கப்பட்டது. டூப்லேக்ஸின் ஆதரவுடன் சந்தா சாகிப் கர்நாடகத்தின் நவாப் பொறுப்பேற்றார். இந்தப் பகுதியை முதலில் ஆட்சி செய்த முகம்மது அலி கான் வாலாஜா என்பவருக்கு ஆங்கிலேயர் ஆதரவு கொடுத்தனர். ஆற்காடு பகுதியில் இருந்த சந்தா சாகிப்பின் கோட்டையை தாக்குதல் செய்து ஆட்சிப் பொறுப்பை எடுத்துக் கொள்வதற்காக 1751 ஆம் ஆண்டு க்ளைவ் முகம்மது அலிக்கு உதவி செய்தார். க்ளைவ்வை ஆற்காடு பகுதியிலிருந்து வெளியேற்றும் சந்தா சாகிப்பின் முயற்சிக்கு பிரான்சுக்காரர்கள் உதவி செய்தனர். பிரான்சுக்காரகளுடன் ஆற்காடு இராணுவத்தினரும் இணைந்து போரிட்ட போதிலும் ஆங்கிலேயர்களின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் தோல்வி அடைந்தனர். பாரிஸ் ஒப்பந்தம் (1763) படி கர்நாடகத்தின் நவாப்பாக முகம்மது அலி முறைப்படி அறிவிக்கப்பட்டார். இந்த செயல்களின் விளைவாக 1765 ஆம் ஆண்டு முதல் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. தென்னிந்தியாவில் ஆங்கிலேயர் ஆதிக்கத்தை அங்கீகரிக்கும் விதமாக டெல்லி பேரரசு தீர்ப்பாணை ஒன்றை வெளியிட்டது.[77]

ஆங்கிலேய அரசாங்கத்தின் ஆதிக்கம்[தொகு]

சென்னை மாகாணம், 1909

கம்பனி ஆட்சி நிர்வாகம் அதிகரித்துக் கொண்டிருந்த நிலையிலும் தங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் பகுதிகளில் தங்கள் கருத்தை எடுத்துரைக்க இயலாத காரணத்தினால், தாங்கள் கைப்பற்றிய பகுதிகளில் சரிவர ஆட்சி செய்ய இயலாத நிலைக்கு கம்பனி ஆட்சியாளர்கள் ஒவ்வொரு நாளும் தள்ளப்பட்டனர். ஆங்கிலேய பாரளுமன்றத்தைச் சேர்ந்த உறுப்பினர்களின் எண்ணங்கள் கம்பனி ஆட்சியை ஆங்கிலேய அரசாங்கமே மேற்கொள்ளும் நிலையை வலியுறுத்தியது. கம்பனியின் நிதி நிலைமையும் மோசமாக இருந்தது. நிதிக்காக நாடாளுமன்றத்தில் விண்ணப்பமும் செய்திருந்தனர். இந்த நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, ஆங்கிலேய நாடாளுமன்றம் சீரமைப்பு சட்டம் (கிழக்கிந்திய கம்பனி சட்டம் என்றும் அறியப்படும்) என்ற சட்டத்தை 1773 ஆம் ஆண்டு இயற்றியது.[78] கம்பனி நிர்வாகத்தை நிர்வகிப்பதற்கான விதிமுறைகளை தளர்த்தி ஆளுநர் பதவியை உருவாக்குவது போன்றவை இந்த சட்டத்தில் இடம்பெற்றிருந்தன. இவ்வாறாக வாரென் காசுடிங்ஸ் (Warren Hastings) முதல் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 1784 ஆம் ஆண்டின் பிட்ஸ் இந்தியா சட்டம் கம்பனி நிர்வாகத்தை ஆங்கிலேய அரசாங்கத்தின் துணை நிலையாக மாற்றியது.

ஆங்கிலேயர் ஆதிக்க நிலப்பகுதிகளில் வேகமான வளர்ச்சியும் விரிவாக்கமும் அடுத்த சில பத்தாண்டுகளில் இருந்தது. 1766 முதல் 1799 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஆங்கிலேய-மைசூர் போர்கள் மற்றும் 1772 முதல் 1818 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஆங்கிலேய-மராத்திப் போர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை கம்பனி ஆட்சியின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.[79] வரிவசூல் செய்யும் முறையில் கம்பனி அதிகாரிகளுடன் மதுரை பேரரசைச் சேர்ந்த பாளையக்காரர்களின் தலைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல் சச்சரவாக மாறியது. பாளையக்காரர்கள் தங்கள் பகுதியே தாங்களே நிர்வகிக்கும் அதிகாரம் பெற்றிருந்தனர். இது ஆங்கிலேயர்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு எதிரான முதல் எதிர்ப்பாக அமைந்தது. அதற்கான முதல் குரல் திருநெல்வேலி சீமையின் நெற்க்கட்டான் செவல் பாளையத்திலிருந்து மன்னர் பூலித்தேவர் மூலமாக எழுந்தது. 1755 முதல் 1767 வரை சுமார் 12 ஆண்டுகள் தொடர்ந்த பல்வேறு இடங்களில் நடைபெற்ற போர்கள் பூலிக்தேவனின் மறைவால் முடிவுக்கு வந்தது. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பாளையக்காரர் தலைவரான கட்டபொம்மன் கம்பனி நிருவாகத்தினரின் வரி வசூலிக்கும் முறைக்கு எதிராக 1790 ஆம் ஆண்டு கலகம் செய்தார். முதல் பாளையக்காரர் போரின் போது (1799–1802) கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு 1799 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். ஒரு வருடங்கள் கழித்து இரண்டாம் பாளையக்காரர் போர் தீரன் சின்னமலை என்பவரால் நடத்தப்பட்டது. திப்புசுல்தான் பேரரசுக்கு பிறகு ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற மூன்று போரிகளில் வெற்றி பெற்ற தீரன் சின்னமலை மற்றும் அவரது இரண்டு சகோதரர்கள் சட்டவிரோதமாக தூக்கிலிடப்பட்டனர். ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற போரில் உயிரிழந்த இறுதி தமிழ் மன்னர் தீரன் சின்னமலை ஆவார். பல்வேறு இயக்கங்களை நடத்தி இந்த போரட்டங்களை கம்பனி ஆட்சியாளர்கள் தடைச் செய்தனர். தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளைத் தங்களது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள பாளையக்காரர் போர் முடிவுகள் ஆங்கிலேயருக்கு உதவியது.[80]

1798 ஆம் ஆண்டு லார்ட் வெல்சுலே (Lord Wellesley) என்பவர் ஆளுநராக பொறுப்பேற்றார். பின்வந்த ஆறு ஆண்டுகளில் அதிகமான வெற்றிகளைப் பெற்று கம்பனி ஆதிக்கத்தின் அதிகார எல்லைகளை இரண்டு மடங்காக உயர்த்தினார். பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவில் மீண்டும் அதிகார உரிமை பெறுவதை தடை செய்தார். தக்காண பீடபூமி மற்றும் கர்நாடகத்தில் ஆட்சியில் இருந்த பலரை அழித்தார். முகலாய பேரரசை கம்பனி பாதுகாப்பின் கீழ் கொண்டு வந்து தஞ்சாவூரின் முகலாய மன்னரான சரபோஜியை கட்டாயப்படுத்தி உடன்படிக்கையின் கீழ் ஆட்சி செய்யும் நிலைக்கு கொண்டு வந்தார். மதராஸ் மாகாணம் நிறுவப்பட்டு கம்பனி ஆட்சியின் கீழுள்ள பகுதிகள் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டது. ஆங்கிலேயர்களின் நேரடி நிருவாகம் மக்களிடையே சினத்தை ஏற்படுத்தியது. மதராஸ் மாகாணத்தின் ஆளுநராக இருந்த வில்லியம் பெண்டிக் பிரபு உள்ளூர் வீரர்கள் தங்களது சமய குறிகளை (விபூதி, திலகம் போன்றவை) செய்து கொள்ளக் கூடாது என்று ஆணையிட்டதைத் தொடர்ந்து வேலூர் பாசறையைச் (cantonment) சேர்ந்த வீரர்கள் 1806 ஆம் ஆண்டில் கலகம் செய்தனர். கிறித்துவ மதத்திற்கு மாறுவதற்கு இந்தச் சட்டம் தங்களை கட்டாயப்படுத்துவதாக எதிர்ப்பு தெரிவித்து வீரர்கள் கலகம் செய்தனர். 114 ஆங்கிலேய அதிகாரிகள் கொலைச் செய்யப்பட்டும், பல நூறு கிளர்ச்சியாளர்கள் தூக்கிலிடப்பட்டும் இந்த கலகம் ஒடுக்கப்பட்டது. அவமதிப்பு காரணமாக பெண்டிக் பிரபு பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.[81][82]

கம்பனி ஆட்சியின் முடிவு[தொகு]

கம்பனி ஆட்சிப் பகுதிகளின் பல்வேறு மாவட்டங்களில் நிலவிய அதிருப்தி நிலைமைகள் 1857 ஆம் ஆண்டின் சிப்பாய் போரில் வெடித்தது. கூட்டணி ஆட்சி நிலவில் இருந்த இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்தக் கலகம் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தியது. தமிழ்நாடு அதிகமாக பாதிக்கப்படவில்லை. போரின் விளைவால் கம்பனி ஆட்சியை ரத்து செய்யும் 1858 ஆம் ஆண்டு சட்டத்தை ஆங்கிலேய அரசு அறிவித்து, அரசாங்கத்திடம் ஆட்சியை ஒப்படைத்தது.

ஆங்கிலேயர் ஆட்சி (1850–1947)[தொகு]

1858 ஆம் ஆண்டு முதல் பிரத்தானிய அரசு இந்தியாவில் நேரடியாக ஆட்சி செய்வதாக கருதியது. ஆரம்ப காலங்களில் அரசாங்கம் தன்னிசையாக செயல்பட்டது. இந்தியர்களின் உணர்வுகளை முக்கியமானதாக ஆங்கிலேய அரசு கருதவில்லை. உள்ளூர் அரசாங்கத்தில் இந்தியர்கள் பங்குகொள்ள பிரித்தானியாவின் இந்திய பேரரசு அனுமதி வழங்க ஆரம்பித்தது. உள்ளூர் அரசாங்கத்தில் இந்திய மக்களுக்கு பங்கு அளிக்கும் தீர்மானத்தை வைசிராய் ரிப்பன் 1882 ஆம் ஆண்டு இயற்றினார். 1892 ஆம் ஆண்டின் இந்திய கவுன்சில் சட்டம் மற்றும் 1909 ஆம் ஆண்டின் மிண்டோ-மோர்லே சீர்திருத்தம் போன்ற சட்டமியற்றல்கள் மதராஸ் மாகாண சட்ட மேலவையை நிறுவுவதற்கு வழி செய்தது.[83] மகாத்மா காந்தி தலைமையில் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கம், இந்திய அரசுச் சட்டம் (மோண்டாகு-செம்ல்ஸ்ஃபோர்டு சீர்திருத்தம் என்றும் அறியப்படுகிறது) என்ற சட்டத்தை வெளியிடுவதற்கு காரணமாக அமைந்தது. உள்ளூர் தொகுதிகளுக்கான முதல் தேர்தல் 1921 ஆம் ஆண்டு நடைபெற்றது.[83]

சென்னை மாகாணப் பஞ்சம் (1877).நிவாரணம் வழங்குதல்.விளக்கப்பட்ட இலண்டன் செய்தியிலிருந்து (1877)

கோடைக்காலத்தில் பருவமழை சரியாக பெய்யாதது மற்றும் ரியோத்வரி அமைப்பின் நிருவாகத்தில் கிடைத்த குறைவான வருமானம் ஆகியவற்றால் 1876–1877 ஆம் ஆண்டுகளில் சென்னை மாகாணத்தில் கடுமையான பஞ்சம் நிலவியது.[84] அரசாங்கமும் பல தொண்டு நிறுவனங்களும் இணைந்து நகரம் அதன் புறநகர்ப் பகுதிகளில் பல நிவாரணப் பணிகளை மேற்கொண்டன. இந்தியாவிலிருந்த ஐரோப்பியர்களிடமிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பஞ்ச நிவாரண நிதி பெறப்பட்டது. பஞ்சத்தால் பாதிகப்பட்ட இடங்களில் போதுமான அளவு உதவிகளை செய்ய இயலாத ஆங்கிலேய அரசாங்கத்தை விமர்சனம் செய்து வில்லியம் டிக்பை போன்ற மனிதநேயமிக்கவர்கள் கண்டனம் செய்து எழுதினர்.[85] மூன்று முதல் ஐந்து மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்ட பிறகு, 1878 ஆம் ஆண்டில் பெய்த பருவமழையினால் பஞ்சம் முடிவுக்கு வந்தது.[84] பஞ்சத்தால் ஏற்பட்ட அழிவுகளின் விளைவால் பஞ்சக் குழுமம் என்ற குழுமம் 1880 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் நிறுவப்பட்டு பேரழிவு நிவாரணக் கொள்கைகள் வகுக்கப்பட்டது. பஞ்ச நிவாரண நிதியாக 1.5 மில்லியன் ரூபாயை அரசாங்கமும் ஒதுக்கியது. எதிர்காலத்தில் இவ்வாறு பஞ்சம் ஏற்பட்டால் அதன் விளைவுகளைக் குறைப்பதற்காக வாய்க்கால் கட்டுதல், தரை மற்றும் தொடர்வண்டி பாதைகளை மேம்படுத்துதல் போன்ற குடிமையியல் வேலைகளும் மேற்கொள்ளப்பட்டன.

சுதந்திரப் போராட்டம்[தொகு]

சுதந்திரம் பற்றிய எண்ணம் நாடு முழுவதும் மேலோங்கி இருந்தது. ஆங்கிலேயர்களின் காலணி ஆதிக்கத்தை எதிர்த்து சுதந்திரத்திற்காக பாடுபட தமிழ்நாட்டிலிருந்தும் பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் தாமாக முன்வந்தனர். 1904 ஆம் ஆண்டு ஈரோடு அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த திருப்பூர் குமரன் இவர்களில் குறிப்பிடத்தக்கவர். ஆங்கிலேயருக்கு எதிராக கண்டனப் பேரணி நடத்திய போது குமரன் உயிரிழந்தார். பாண்டிச்சேரியில் இருந்த பிரெஞ்சு அரசு பிரித்தானிய காவல்துறையினரிடமிருந்து தப்பித்துக் கொள்ள முயன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இடமளித்து ஆதரவு தந்தது. பாண்டிச்சேரியில் வாழ்ந்தவர்களில் 1910 ஆம் ஆண்டு வாழ்ந்த அரவிந்தரும் ஒருவர். அரவிந்தர் காலத்தில் வாழ்ந்தவர்களில் கவிஞர் சுப்ரமணிய பாரதியும் ஒருவர்.[86] புரட்சிகரமான பாடல்கள் பலவற்றை தமிழில் எழுதியதன் மூலம் சுதந்திரப் புரட்சியை பாரதி ஏற்படுத்தினார். இந்தியா என்ற இதழையும் பாண்டிச்சேரியிலிருந்து பாரதி பிரசுரம் செய்தார். தமிழ் புரட்சியாளர்களான வி.வி.எஸ்.அய்யர் மற்றும் வ.உ.சிதம்பரம் பிள்ளை ஆகியோருடன் அரவிந்தர் மற்றும் பாரதியார் நட்புடன் இருந்தனர்.[86] இந்தியாவில் ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட நேதாஜி உருவாக்கிய இந்திய தேசிய இராணுவம் (INA), என்ற அமைப்பின் உறுப்பினர்களில் தமிழ்நாட்டிலிருந்து குறிப்பிட்ட உறுப்பினர்கள் இருந்தனர்.[87][88] INA வின் முக்கிய தலைவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த லட்சுமி சேகள் என்பவரும் ஒருவர்.

டாக்டர். டி.எம். நாயர் (Dr. T.M. Nair) மற்றும் ராவ் பகதூர் தியாகராய செட்டி (Rao Bahadur Thygaraya Chetty) ஆகியோர் 1916 ஆம் ஆண்டின் பிராமணன்-அல்ல அறிக்கை (Non-Brahmin Manifesto) மூலம் திராவிட இயக்கத்திற்கான அடித்தளம் அமைத்தனர்.[89] இரண்டு வகையான இயக்கங்களை மையமாகக் கொண்டு 1920 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் வட்டார அரசியல் உருவானது. 1921 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற நீதிக் கட்சி இவைகளில் ஒன்று. இந்திய சுதந்திர இயக்கத்தைப் பற்றிக் கருத்தில் கொள்ளாமல், சமூகத்தில் பின்தங்கிய வகுப்பினர் மீது இழைக்கப்படும் கொடுமைகளை நீதிக் கட்சி கருத்தில் கொண்டிருந்தது. மற்றொரு இயக்கம் ஈ.வி.இராமசாமி நாயக்கர் தலைமை வகித்த சமயமற்ற, பிராமணர் அல்லாதவர் சீர்திருத்த இயக்கம்.[89] 1935 ஆம் ஆண்டில் அனைத்திந்திய கூட்டரசு சட்டத்தை ஆங்கிலேய அரசு வெளியிட்டது முதல் தனியாட்சிக்கான முயற்சிகள் 1935 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கப்பட்டன. உள்ளூர் தேர்தல்கள் மீண்டும் நடத்தப்பட்டன. தமிழ்நாட்டில் நீதிக் கட்சியை தோற்கடித்து காங்கிரசு கட்சி ஆட்சியைப் பிடித்தது. பள்ளிகளில் இந்தி மொழியை கட்டாயமாக அறிமுகம் செய்யும் காங்கிரசு அரசின் முடிவை எதிர்த்து இராமசாமி நாயக்கர் மற்றும் சி.என்.அண்ணாதுரை இணைந்து 1938 ஆம் ஆண்டில் தங்களது போரட்டத்தைத் தொடங்கினர்.[90]

சுதந்திரத்திற்கு பிந்தைய காலம்[தொகு]

மெதராஸ் என்ற பெயரிலிருந்து மாற்றம் செய்யப்பட்டு 1969 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ்நாடு அரசியல் மாநிலம்.

1947 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்ற பிறகு மேற்கொண்ட மாநிலங்கள் பங்கீடு தமிழ்நாட்டில் பெரிய அளவில் விளைவை ஏற்படுத்தவில்லை. மதத்தினரிடையே பிரிவினை வாத வன்முறைகள் ஏதுமில்லை. தமிழ்நாட்டில் அனைத்து சமயத்தினரும் ஒருவருக்கொருவர் மரியாதை மற்றும் அமைதியான இணக்க நிலையுடனும் இருந்தனர். மதராஸ் மாகாணத்தில் காங்கிரசு கட்சி முதல் அமைச்சரவையை அமைத்தது. சி.ராசகோபாலாச்சாரி (இராஜாஜி) முதல் முதலமைச்சராக பொறுப்பேற்றார். மெதராஸ் மாகணாம் என்பது மெதராஸ் மாநிலம் என்று மாற்றியமைக்கப்பட்டது. மெதராஸ் மாநிலத்தில் இருந்த தெலுங்கு பேசும் மக்களுக்காக ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்று பொட்டி திருராமலு என்பவர் போரட்டம் செய்தார். இந்திய அரசாங்கம் மெதராஸ் மாநிலத்தைப் பிரிப்பது என்று முடிவு செய்தது.[91] ராயலசீமா மற்றும் அதைச் சுற்றிய ஆந்திரக் கடற்கரைப் பகுதிகள் ஆந்திரப் பிரதேசம் என்ற புதிய மாநிலமாக 1953 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. பெல்லாரி மாவட்டம் மைசூர் மாநிலத்தின் ஒரு பகுதியாக மாறியது. 1956 ஆம் ஆண்டு தெற்கு கன்னடா மாவட்டம் மைசூருக்கு மாற்றப்பட்டது. மலபார் கடற்கரை மாவட்டங்கள் புதிதாக உருவாக்கபட்ட கேரள மாநிலத்தின் பகுதிகளுடன் இணைக்கப்பட்டு, மெதராஸ் மாநிலம் தற்போதைய வடிவத்தை எட்டியது. மெதராஸ் மாநிலம் தமிழ்நாடு (தமிழர்கள் வாழும் பகுதி) என்ற பெயருக்கு 1968 ஆம் ஆண்டில் மாற்றப்பட்டது.

இலங்கையில் இனப் பிரிவுச் சார்ந்த சண்டை காரணமாக 1970 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் அதிகமான இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு தப்பி வந்தனர். தமிழ் அகதிகளின் அவலநிலை தமிழக அரசியல் கட்சிகளிடையே எழுச்சியுடன் கூடிய ஆதரவை உண்டாக்கியது.[92] இலங்கை தமிழர்கள் நிலைக் குறித்து இலங்கை அரசிடம் பரிந்துரை செய்யுமாறு தமிழக அரசியல் கட்சிகள் இந்திய அரசாங்கத்திற்கு நெருக்கடி அளித்தன. தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.ஈ) இயக்கத்தை இலங்கையில் கட்டுப்படுத்துவதற்காக இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு முன்னாள் பிரதம மந்திரி ராஜீவ் காந்தி அனுப்பினார். இதன் காரணமாக 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 அன்று ராஜீவ் காந்தி இலங்கையைச் சேர்ந்த இயக்கத்தினரால் படுகொலைச் செய்யப்பட்டார். அது முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.ஈ) இயக்கம் தமிழ்நாட்டில் தன் ஆதரவை இழந்தது.[93][94]

2004 ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் ஏற்பட்ட இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளை வெகுவாக பாதித்தது. இந்த பேரழிவில் தோராயமாக 8000 மக்கள் உயிரிழந்தனர்.[95] அதிக மக்கள் தொகை கொண்ட இந்திய மாநிலங்களில் ஆறாவது இடத்தில் உள்ள தமிழ்நாடு, பொருளாதாரத்தில் முன்னணியில் உள்ள மாநிலங்களில் 2005 ஆம் ஆண்டின் அறிக்கையின் படி ஏழாம் இடத்தில் இருந்தது.[96] திறமை வாய்ந்த பணியாளர்களின் தேவை அதிகரிப்பு காரணமாக தமிழ்நாட்டில் கல்வி நிலையங்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது. சாதி வாரியாக 69 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திற்கு தமிழ்நாட்டில் பரவலாக இருந்த உடன்பாடு செயல் காரணமாக மாநிலத்தின் கல்வி நிலையங்கள் மற்றும் வேலைவாய்ப்பு அனைத்திலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 69 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. சாதி வாரியாக இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திற்கு தமிழ்நாட்டில் பொதுமக்களிடம் பெரிய அளவில் ஆதரவு இருந்தது. இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக குறிப்பிடப்படும் படியான போராட்டங்கள் ஏதும் நடைபெறவில்லை.[97]

பிராந்திய அரசியலின் பரிணாம வளர்ச்சி[தொகு]

சுதந்திரம் பெற்ற பிறகு தமிழ்நாட்டின் அரசியல் நிலைமை மூன்று விதமான நிலைகளை அடைந்துள்ளது. 1947 ஆம் ஆண்டுக்கு பிறகு இருந்த காங்கிரசு கட்சியின் செல்வாக்கு 1960 ஆம் ஆண்டில் திராவிட கட்சியின் கொள்கைகளால் மாறியது. 1990 ஆம் ஆண்டின் இறுதி வரை இந்த நிலை நீடித்திருந்தது. திராவிட அரசியல் கட்சிகளில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக மற்ற அரசியல் கட்சிகளுடன் ஒப்பந்தம் செய்து கூட்டணி அரசாங்கம் அமைக்கும் நிலையை தற்போது கொண்டிருக்கிறது.

திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) என்ற கட்சியினை 1949 ஆம் ஆண்டு அண்ணாதுரை தொடங்கினார்.[98] தமிழ்நாட்டில் இந்திக் கலாச்சாரம் திணிக்கப்படுவதை எதிர்க்க முடிவு செய்து இந்தியாவின் தெற்கு பகுதியை திராவிடர்களுக்கு என்று தனியாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் திமுக விடுத்தது. திராவிட நாடு தனிப்பட்ட மாநிலமாக இருக்க வேண்டும் என்பது கோரிக்கையாக இருந்தது. திராவிட நாடு என்பது தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, கர்நாடாக மற்றும் கேரளாவின் பகுதிகளை உள்ளடக்கிய திராவிடர்களின் நாடு என்பதாகும்.[99] மதராஸ் மாகாணத்தில் இந்திய தேசிய காங்கிரசு கட்சிக்கு 1950 ஆம் ஆண்டு இறுதி வரை இருந்த ஈடுபாடு மற்றும் 1962 ஆம் ஆண்டில் இந்தியப் பகுதிகளில் சீனாவின் நுழைவு ஆகிய காரணங்கள் உடனடியாக திராவிட நாடு கோரும் கோரிக்கைக்கு இடையூறாக அமைந்தது. இந்திய அரசியலமைப்பில் 1963 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பதினாறாவது சட்டத் திருத்தம் பிரிவினை வாதக் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்தது. இதன் காரணமாக திராவிடனுக்கு தனிப்பட்ட நாடு கோரிக்கையை திமுக முழுமையாக நிறுத்திவிட்டு இந்திய அரசியலமைப்பில் செயல்திறன் மிக்க சுயாட்சி கட்சியாக மாறுவதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்தியது.[100]

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதால் கிடைத்த மக்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி சுதந்திரத்திற்கு பின்னர் அரசாங்கத்தை அமைத்த காங்கிரசு கட்சி 1967 ஆம் ஆண்டு வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. மாநிலப் பள்ளிகளில் கட்டயாமாக இந்தி மொழியைக் கொண்டு வரும் மத்திய அரசாங்கத்தை எதிர்த்து 1965 மற்றும் 1968 ஆம் ஆண்டு நடத்திய போரட்டங்களுக்கு திமுக தலைமை தாங்கியது. வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிலையங்களில் உடனடி செயலாக்கம் போன்றவை தமிழ்நாட்டில் முதன்மையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது திராவிட இயக்கத்தின் கோரிக்கையாக இருந்தது.[101] அண்ணாதுரை மற்றும் கருணாநிதி போன்ற திராவிட இயக்கத்தின் தலைவர்கள் தங்களிடமிருந்த எழுத்து திறமையைப் பயன்படுத்தி மேடை நாடகங்கள் மற்றும் திரைப்படங்கள் மூலமாக இயக்கத்தின் அரசியல் செய்திகளைப் பரப்பினர்.[102] தமிழ்நாட்டின் முதலமைச்சராக பின்னாளில் பதவியேற்ற எம்.ஜி இராமச்சந்திரன் என்பவரும் நாடகம் மற்றும் திரைப்பட நடிகராவார்.[103]

1967 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. திமுக கழகம் இரண்டாக பிளவுபட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அஇஅதிமுக) என்ற கட்சியினை 1971 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் துவங்கினார். இன்று வரை திமுக மற்றும் அஇஅதிமுக இரண்டு கட்சிகளும் தமிழ்நாடு அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.[104] 1977, 1980 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று அஇஅதிமுக கட்சியைச் சேர்ந்த எம்.ஜி.ஆர் மூன்று முறை தொடர்ச்சியாக மாநிலத்தில் ஆட்சி செய்தார். கட்சியினருக்கிடையே ஏற்பட்ட பல்வேறு பிரிவுகள் காரணமாக எம்.ஜி.ஆரின் இறப்பிற்கு பின்னர் அஇஅதிமுக பிளவுற்றது. முடிவில் ஜெ.ஜெயலலிதா அஇஅதிமுக கட்சியின் தலைமைப் பொறுப்பேற்றார்.

1990 ஆம் ஆண்டின் பின்பகுதியில் பல்வேறு அரசியல் சமநிலை மாற்றங்கள் தமிழ்நாடு அரசியலில் நிலவின. இறுதியாக திமுக மற்றும் அஇஅதிமுக கட்சிகளுக்கு தமிழ்நாட்டு அரசியலில் இரட்டை முன்னுரிமை அளிக்கப்பட்டது. காங்கிரசு கட்சியில் 1996 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஏற்பட்ட பிளவு தமிழ் மாநில காங்கிரசு என்ற கட்சி உருவாக காரணமானது. தமாகா கட்சி திமுக கட்சியுடன் கூட்டணியுடனும், திமுக கட்சியிலிருந்து பிரிந்த மற்றொரு கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (மதிமுக) அஇஅதிமுக கட்சியுடனும் கூட்டணியுடன் இருந்தன. பல்வேறு சிறிய கட்சிகள் மக்களிடையே பிரபலமடையத் தொடங்கின. திமுக மற்றும் தமாகா கட்சி 1996 ஆம் ஆண்டு தேசிய நாடாளுமன்ற தேர்தலில் வைத்திருந்த கூட்டணியை முறியடிக்கும் விதத்தில் அஇஅதிமுக கட்சி பல்வேறு சிறிய கட்சிகளுடன் இணைந்து 'மிகப்பெரிய கூட்டணியை' உருவாக்கியது. தேர்தல் நேரத்தில் கூட்டணி அமைப்பதற்கான முதல் நிகழ்வாக இது இருந்தது. இன்றும் தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும் போது அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்துக் கொள்கின்றன.[105] காங்கிரசு கட்சியின் தேர்தல் செல்வாக்கு தேசிய அளவில் 1990 ஆம் ஆண்டு முதல் குறைய ஆரம்பித்தது. இதன் காரணமாக தமிழ்நாடு உள்ளிட பல மாநிலங்களில் காங்கிரசு கட்சி கூட்டணி வைத்துள்ளது. இதன் காரணமாக திராவிடக் கட்சிகள் மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றன.[106]

காலக் குறிப்புகள்[தொகு]

குறிப்புதவிகள்[தொகு]

  1. "Historical Atlas of South India-Timeline". French Institute of Pondicherry. Institut Françoise de Pondichéry. Archived from the original on 2006-09-28. பார்க்கப்பட்ட நாள் 2006-11-15.
  2. Pappu et al., Antiquity vol 77 no 297, September 2003
  3. K.A.N. Sastri, A History of South India , OUP, reprinted 2000, p 44.
  4. Tools of the Madras Industry have been found in the Kaveri and Vaigai beds —K.A.N. Sastri, Srinivasachari, Advanced History of India , p. 14.
  5. K.A.N. Sastri, A History of South India , p. 45.
  6. K.A.N. Sastri, A History of South India , p. 46.
  7. "Significance of Mayiladuthurai find". The Hindu May 1, 2006. The Hindu Group. Archived from the original on 2006-06-17. பார்க்கப்பட்ட நாள் 2006-11-15.
  8. One such was found at Krishnagiri in Tamil Nadu—"Steps to preserve megalithic burial site". The Hindu, Oct 6, 2006. The Hindu Group. Archived from the original on 2008-09-18. பார்க்கப்பட்ட நாள் 2006-11-15.
  9. K.A.N. Sastri, A History of South India , pp. 49–51
  10. Subramanian T.S. (Feb 17, 2005) The Hindu, retrieved 7/31/2007 Rudimentary Tamil-Brahmi script' unearthed at Adichanallur பரணிடப்பட்டது 2005-02-17 at the வந்தவழி இயந்திரம்
  11. Subramanian T.S. (May 26, 2004 ) The Hindu, retrieved 7/31/2007 Skeletons, script found at ancient burial site in Tamil Nadu பரணிடப்பட்டது 2004-07-01 at the வந்தவழி இயந்திரம்
  12. 'The most interesting pre-historic remains in Tamil India were discovered at Adichanallur. There is a series of urn burials. seem to be related to the megalithic complex. - Zvelebil, K.A., Companion Studies to the History of Tamil Literature – pp 21–22, Brill Academic Publishers.
  13. K.A.N. Sastri, A History of South India, pp 109–112
  14. 'There were three levels of redistribution corresponding to the three categories of chieftains, namely: the Ventar, Velir and Kilar in descending order. Ventar were the chieftains of the three major lineages, viz Cera, Cola and Pandya. Velir were mostly hill chieftains, while Kilar were the headmen of settlements...' —"Perspectives on Kerala History". P.J.Cherian (Ed),. Kerala Council for Historical Research. Archived from the original on 2006-08-26. பார்க்கப்பட்ட நாள் 2006-11-15.{{cite web}}: CS1 maint: extra punctuation (link)
  15. K.A.N. Sastri, A History of South India , p 129
  16. 'Everywhere within Beloved-of-the-Gods, King Piyadasi's domain, and among the people beyond the borders, the Cholas, the Pandyas, the Satyaputras, the Keralaputras, as far as Tamraparni...' —"Asoka's second minor rock edict". Colorado State University. பார்க்கப்பட்ட நாள் 2006-11-15.
  17. K.A.N. Sastri, The CōĻas , 1935 p 20
  18. "Hathigumpha Inscription". Epigraphia Indica, Vol. XX (1929–1930). Delhi, 1933, pp 86–89. Missouri Southern State University. Archived from the original on 2006-11-17. பார்க்கப்பட்ட நாள் 2006-11-15.
  19. Pattinappaalai , Porunaraatruppadai and a number of individual poems in Akananuru and Purananuru have been the main source for the information we attribute now to Karikala. See also K.A.N. Sastri, The Colas , 1935
  20. Cilappatikaram (c. sixth century C.E.) which attributes northern campaigns and conquests to all the three monarchs of the Tamil country, gives a glorious account of the northern expeditions of Karikala, which took him as far north as the Himalayas and gained for him the alliance and subjugation of the kings of Vajra, Magadha and Avanti countries. There is no contemporary evidence either in Sangam literature or from the north Indian source for such an expedition.
  21. "63 Nayanmars". Tamilnation.org. பார்க்கப்பட்ட நாள் 2006-11-15.
  22. In Megasthenes' account (350 BCE – 290 BCE), the Pandya kingdom is ruled by Pandaia, a daughter of Herakles —K.A.N. Sastri, A History of South India , p 23
  23. "'Roman Maps and the Concept of Indian Gems". The Bead Museum, Inc. Archived from the original on 2006-06-15. பார்க்கப்பட்ட நாள் 2006-05-15.
  24. 'Archaeologists from UCLA and the University of Delaware have unearthed the most extensive remains to date from sea trade between India and Egypt during the Roman Empire, adding to mounting evidence that spices and other exotic cargo travelled into Europe over sea as well as land.' "Archaeologists Uncover Ancient Maritime Spice Route Between India, Egypt". Veluppillai, Prof. A.,. dickran.net. Archived from the original on 2006-10-09. பார்க்கப்பட்ட நாள் 2006-11-15.{{cite web}}: CS1 maint: extra punctuation (link)
  25. Archaeological evidence for the maritime contact between the Sangam age Cheras and the Roman empire has been found at Karur near Tiruchi. —R. Nagasami, Roman Karur
  26. "Malayalam" Manipravalam or Mani+Pavazham Mani=Sanskrit Pavazham= Tamil,.manipravalam called Malayalam . first appeared in writing in the vazhappalli inscription which dates from about 830 AD. "Writing Systems and Languages of the world". Omniglot. Omniglot.com. பார்க்கப்பட்ட நாள் 2006-11-15."Writing Systems and Languages of the world". Omniglot. Omniglot.com. பார்க்கப்பட்ட நாள் 2006-11-15.
  27. Kamil Veith Zvelebil, Companion Studies to the History of Tamil Literature , p 12
  28. K.A.N. Sastri, A History of South India , OUP (1955) p 105
  29. K.A.N. Sastri, A History of South India , OUP (1955) pp 118, 119
  30. K.A.N. Sastri, A History of South India , OUP (1955) p 124
  31. 'The vast quantities of gold and silver coins struck by Roman emperors up to Nero (54–68CE) found all over Tamil Nadu testify the extent of the trade, the presence of Roman settlers in the Tamil country'. K.A.N. Sastri, A History of South India , OUP (1955) pp 125–127
  32. K.A.N. Sastri, A History of South India , OUP (1955) p 128
  33. 'Kalabhraas were denounced as 'evil kings' (kaliararar ) —K.A.N. Sastri, A History of South India , p 130
  34. Hermann Kulke, Dietmar Rothermund, A History of India , Routledge (UK), p 105
  35. K.A.N. Sastri, A History of South India p 130
  36. K.A.N. Sastri postulates that there was a live connection between the early Cholas and the Renandu Cholas of the Andhra country. The northward migration probably took place during the Pallava domination of Simhavishnu. Sastri also categorically rejects the claims that these were the descendants of Karikala Chola —K.A.N. Sastri, The CōĻas , 1935 p 107
  37. "South Asian Writing Systems". Lawrence K Lo. பார்க்கப்பட்ட நாள் 2006-11-15.
  38. The identity of the author of Tirukkural is not known with any certainty. This work of 1330 distichs is attributed to Tiruvalluvar, who was probably a Jain with knowledge of the Sanskrit didactic works of the north.
  39. Pandya Kadungon and Pallava Simhavishnu overthrew the Kalabhras. Acchchutakalaba is likely the last Kalabhra king —K.A.N. Sastri, The CōĻas , 1935 p 102
  40. K.A.N. Sastri, A History of South India pp 382
  41. K.A.N. Sastri, A History of South India pp 333–335
  42. K.A.N. Sastri, The CoLas , pp 102
  43. K.A.N. Sastri, A History of South India p 387
  44. There is an inscription from 1160 that the custodians of Siva temples who had social intercourses with Vaishnavites would forfeit their property. —K.A.N. Sastri, The CōĻas , 1935 pp 645
  45. Some of the output of villages throughout the kingdom was given to temples that reinvested some of the wealth accumulated as loans to the settlements. The temple served as a centre for redistribution of wealth and contributed towards the integrity of the kingdom —John Keays, India a History, pp 217–218
  46. K.A.N. Sastri, A History of South India pp 342–344
  47. K.A.N. Sastri, A History of South India pp 91–92
  48. Durga Prasad, History of the Andhras up to 1565 A. D ., pp 68
  49. Kamil V. Zvelebil (1987). "The Sound of the One Hand", Journal of the American Oriental Society , Vol. 107, No. 1, p. 125-126.
  50. Graeme Lyall. Seon – The Buddhism of Korea பரணிடப்பட்டது 2006-05-03 at the வந்தவழி இயந்திரம் .
  51. K.A.N. Sastri, A History of South India pp 140
  52. "Pandya Dynasty". Encyclopaedia Britannica. Encyclopædia Britannica, Inc. பார்க்கப்பட்ட நாள் 2006-11-15.
  53. https://tamilnation.org/heritage/pandya/index.htm
  54. K.A.N. Sastri, A History of South India p 140
  55. K.A.N. Sastri, A History of South India p 145
  56. K.A.N. Sastri, A History of South India pp 144–145
  57. K.A.N. Sastri, A History of South India p 159
  58. K.A.N. Sastri, The CoLas , 1935. pp 211–215
  59. The kadaram campaign is first mentioned in Rajendra's inscriptions dating from his 14th year. The name of the Srivijaya king was Sangrama Vijayatungavarman —K.A.N. Sastri, The CoLas , 1935 pp 211–220
  60. There is an inscription in the Chidambaram temple dated 1114 mentioning a peculiar stone presented by the king of Kambhoja (Kampuchea)to Rajendra Chola which the Chola king caused to be inserted into the wall of the Chidambaram shrine —K.A.N. Sastri, The CoLas , 1935 p 325
  61. 'In the twelfth year of Parantaka I the [Uttaramerur] sabha passed a resolution […] that the election of local government officials will be carried out through lots (kudavolai )' —K.A.N. Sastri, The Colas , p 496.
  62. K.A.N. Sastri, Srinivasachari, Advanced History of India , pp 294
  63. K.A.N. Sastri, Srinivasachari, Advanced History of India , pp 296–297
  64. K.A.N. Sastri, A History of South India pp 197
  65. "Chera Coins – Tamil Coins, a Study". R. Nagasamy. Tamil Arts Academy, Madras. Archived from the original on 2006-07-18. பார்க்கப்பட்ட நாள் 2006-11-15.
  66. K.A.N. Sastri, A History of South India pp 214–217
  67. Kampana's wife Ganga Devi wrote an account of this campaign in a Sanskrit poem Madhura Vijayam (Conquest of Madurai) —K.A.N. Sastri, A History of South India pp 241
  68. Rama Raya fought Ali Adil Shah at Talikota on 15 September 1564 —K.A.N. Sastri, A History of South India , p 266
  69. K.A.N. Sastri, Srinivasachari Advanced History of India p 428
  70. K.A.N. Sastri, Srinivasachari Advanced History of India p 427
  71. K.A.N. Sastri, Srinivasachari Advanced History of India p 553
  72. John Keay, India, a History , p 370
  73. K.A.N. Sastri, Srinivasachari, Advanced History of India , p 583
  74. "Maratha Kings of Thanjavur". "Saraswathi Mahal Library. Archived from the original on 2006-11-27. பார்க்கப்பட்ட நாள் 2006-11-18.
  75. John Keay, India, a History , pp 372–374
  76. John Keay, India, a History , pp 393–394
  77. John Keay, India, a History , p 379
  78. Hermann Kulke, Dietmar Rothermund, A History of India pp 245
  79. John Keay, India, a History , pp 380
  80. Nicholas Dirk, The Hollow Crown , pp 19–24
  81. "The first rebellion". The Hindu Jun 19, 2006. The Hindu Group. Archived from the original on 2007-11-02. பார்க்கப்பட்ட நாள் 2006-11-15.
  82. Read, Anthony, The Proudest Day—India's Long Ride to Independence, pp 34–37
  83. 83.0 83.1 "The State Legislature—Origin and Evolution". Government of Tamil Nadu. Archived from the original on 2010-04-13. பார்க்கப்பட்ட நாள் 2006-10-16.
  84. 84.0 84.1 Romesh Chunder Dutt, Open Letters to Lord Curzon on Famines and Land Assessments in India , p10
  85. "Victorian Values: Death and Dying in Victorian India". David Arnold. Fathom Knowledge Network. Archived from the original on 2006-10-21. பார்க்கப்பட்ட நாள் 2006-11-13.
  86. 86.0 86.1 "Political situation in Pondicherry (1910–1915)". Extract from diary of A.B. Purani (PT MS5 (1924), 86. Sri Aurobindo Ashram Trust. Archived from the original on 2007-03-11. பார்க்கப்பட்ட நாள் 2006-11-15.
  87. "Noting that the Tamils formed a large chunk of the strength of the INA, Prof. Pfaff, said it was always a moving experience to interact with the INA members from Tamil Nadu." "Tamils' contribution to INA campaigns recalled". The Hindu Dec 22, 2005. The Hindu Group. Archived from the original on 2006-02-09. பார்க்கப்பட்ட நாள் 2006-11-15.
  88. "More than 75 per cent of the INA soldiers were Tamils" according to V. Vaidhyalingam, secretary and treasurer, Tamil Nadu Indian National Army League. "The unsung heroes". The Hindu Aug 02, 2004. The Hindu Group. Archived from the original on 2004-10-30. பார்க்கப்பட்ட நாள் 2006-11-15.
  89. 89.0 89.1 Subramaniyam Swami, Is the Dravidian movement dying?, Frontline, Vol.20, Iss. 12, June 2003
  90. "Sowing The Seeds Of A Policy For Free India and the Anti-Hindi Agitation in the South 1910–1915". M. S. Thirumalai, Ph.D. languageinindia.com. பார்க்கப்பட்ட நாள் 2006-11-15.
  91. "The battle for Andhra". The Hindu, Mar 30, 2003. The Hindu Group. Archived from the original on 2007-11-02. பார்க்கப்பட்ட நாள் 2006-11-17.
  92. Rajesh Venugopal, The Global Dimensions of Conflict in Sri Lanka p 19
  93. Chris McDowell, A Tamil Asylum Diaspora, p112
  94. "Tamil Tiger 'regret' over Gandhi". BBC News. 2006-06-27. பார்க்கப்பட்ட நாள் 2006-06-27.
  95. "Government of India Ministry of Home Affairs Situation Report". Ministry of Home Affairs, Government of India. Archived from the original on 2006-12-23. பார்க்கப்பட்ட நாள் 2006-11-15.
  96. "Ranking of states". India Today Group. India Today Group. Archived from the original on 2006-10-28. பார்க்கப்பட்ட நாள் 2006-11-15.
  97. "With the highest rate of reservation already in place, TN stays calm". The Financial Express, May 28, 2006. The Financial Express, Mumbai. பார்க்கப்பட்ட நாள் 2006-11-15.
  98. The Justice Party was renamed the Dravidar Kazhagam (Dravidian Association) in September 1944 —Nambi Arooran, K., The Demand for Dravida Nadu
  99. The geographical region of the proposed Dravida Nadu roughly corresponded to the then Madras Presidency, comprising people speaking Tamil, Telugu, Malayalam and Kannada. —S. Viswanathan, A history of agitational politics
  100. Hargrave, R.L.: "The DMK and the Politics of Tamil Nationalism", Pacific Affairs , 37(4):396–411 at 396–397.
  101. Cynthia Stephen, The History Of Reservations In India From The 1800S To The 1950s
  102. S. Theodore Baskaran, The Roots of South Indian Cinema, Journal of the International Institute,
  103. L. R., Jegatheesan. "ஆளும் அரிதாரம் (Reigning filmdom)" (in Tamil). பிபிசி. http://www.bbc.co.uk/tamil/specials/178_wryw/. பார்த்த நாள்: 2006-11-08. 
  104. John Harriss and Andrew Wyatt, THE CHANGING POLITICS OF TAMIL NADU IN THE 1990s, Conference on State Politics in India in the 1990s: Political Mobilisation and Political Competition, December 2004. p2
  105. "The arithmetic of alliance and anti-incumbency". The Hindu, May 06, 2004. The Hindu Group. Archived from the original on 2004-05-31. பார்க்கப்பட்ட நாள் 2006-11-15.
  106. John Harriss and Andrew Wyatt, THE CHANGING POLITICS OF TAMIL NADU IN THE 1990s, Conference on State Politics in India in the 1990s: Political Mobilisation and Political Competition, December 2004. p4

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழக_வரலாறு&oldid=3897191" இலிருந்து மீள்விக்கப்பட்டது