விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2010

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிசம்பர் 26, 2010

ஐம்படைத் தாலி என்பது பண்டைக் காலத்திலிருந்தே தமிழரிடையே வழக்கில் இருந்த ஒருவகை அணிகலன் ஆகும். சிறுவர்களின் கழுத்தில் காவலுக்காக இது அணியப்பட்டதாகத் தெரிகிறது. புறநானூறு, அகநானூறு போன்ற சங்ககால நூல்களிலும், சங்க மருவியகால நூலான மணிமேகலையிலும், பெரியபுராணம், கலிங்கத்துப் பரணி, கம்பராமாயணம், திருவிளையாடற் புராணம் போன்ற பிற்கால நூல்களிலும் ஐம்படைத் தாலி தொடர்பான குறிப்புக்கள் உள்ளன. பிற்காலத்தில் இது பஞ்சாயுதம் என்றும் அழைக்கப்பட்டது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்வரை தமிழ்நாட்டில் இத்தகைய அணி சிறுவர்களுக்குக் காவலாக அணிவிக்கும் வழக்கம் இருந்துள்ளது ஆயினும் இன்று அருகிவிட்டது. இலங்கையில் இந்த வழக்கம் இன்றும் உள்ளது. ஐம்படை என்பது ஐந்து படைகள். இது ஐந்து ஆயுதங்கள் எனப் பொருள் படும். காத்தற் கடவுளாகிய திருமாலின் கையில் உள்ள சங்கு, சக்கரம், வில், வாள், தண்டம் என்னும் ஐந்து ஆயுதங்களை இச்சொல் குறிக்கும்.மேலும்..


Rosa Luxemburg.jpg

ரோசா லக்சம்பேர்க் (18711919), போலந்தில் பிறந்த ஒரு செருமனிய மார்க்சியவாதியும் சோசலிச மெய்யியலாளரும் ஒரு புரட்சியாளரும் ஆவார். செங்கொடி என்ற இதழை ஆரம்பித்தவர் இவரே. முதலாம் உலகப் போரில் செருமனி பங்குபற்றியதை செருமனி சமூக-சனநாயகக் கட்சி ஆதரித்ததைத் தொடர்ந்து இவர் மற்றொரு மார்க்சியவாதியான கார்ல் லீப்னெக்ட்டுடன் இணைந்து "புரட்சிகர ஸ்பர்டாசிஸ்ட் முன்னணி" என்ற அமைப்பை உருவாக்கினார். இதுவே பின்னர் செருமனிய கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரைப் பெற்றது. ஸ்பர்டாசிஸ்ட் லீக் தலைமையில் சனவரி 1919 இல் நடத்தப்பட்ட பெர்லின் புரட்சி தோல்வியில் முடிந்தது. ரோசா லக்சம்பேர்க்கின் ஆதரவிலான இப்புரட்சி ஃப்ரீகோர்ப்ஸ் என்ற வலதுசாரி துணை இராணுவக்குழுவினரால் நசுக்கப்பட்டது. ரோசா மற்றும் லீப்னெக்ட் உட்பட பல இடதுசாரிகள் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இவர்களின் இறப்பின் பின்னர் ரோசா லக்சம்பேர்க், கார்ல் லீப்னெக்ட் இருவரும் சனநாயக சோசலிஸ்டுகளாலும் மார்க்சியவாதிகளாலும் மாவீரர்களாகப் போற்றப்படுகின்றனர். மேலும்..


டிசம்பர் 19, 2010
Sphenodon punctatus in Waikanae, New Zealand.jpg

பிடரிக்கோடன் (Tuatara) நியூசிலாந்து நாட்டில் மட்டுமே வாழும் ஊர்வன வகுப்பு விலங்கு ஆகும். இது பார்ப்பதற்கு ஓணான், ஓந்தி போன்ற பல்லிகளைப் போலவே தோன்றினாலும், பல்லிகளில் இருந்து வேறுபடும் ஆப்புப்பல்வரிசையமைப்பிகள் வரிசையில் வரும் விலங்கு. 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பல்கிச் செழித்திருந்த ஆப்புப்பல்வரிசையமைப்பிகள் வரிசையில் பிடரிக்கோடன் குடும்பத்தைச் சேர்ந்த இரு இனங்கள் மட்டுமே இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவை. இன்று வாழும் உயிர்களில் இவற்றின் அண்மிய மரபுவழி உறவு கொண்டவை பாம்புகளையும் பல்லிகளையும் உள்ளடக்கிய "செதிற்றோல் ஊர்வன" மட்டுமே. இதனால் பல்லி பாம்புகளின் மரபுவழித் தோன்றலையும் படிவளர்ச்சியையும் ஆய்வதற்கும், அவற்றின் மூதாதைய இனங்களின் புறத்தோற்றம், வாழியல் முறைகள் போன்றவற்றை அறிந்து கொள்வதற்கும் பிடரிக்கோடன்களை ஆராய்ச்சியாளர்கள் ஆர்வத்துடன் நோக்குகின்றனர். பறவைகள், தொன்மாக்கள், முதலைகள் போன்ற மிகப்பழைய மரபில் வந்த உயிரினங்களின் மூதாதையரைப் பற்றி அறிந்து கொள்ளவும் இவை உதவுகின்றன. மேலும்..


Blaise pascal.jpg

பிலைசு பாஸ்கல் (1623-1662) ஓரு பிரெஞ்சு கணிதவியலாளர், இயற்பியலாளர் மற்றும் மெய்யியலாளர் ஆவார். கணிப்பான்களின் உருவாக்கத்திலும் பாய்மவியல் தொடர்பிலும் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். கணித உலகம் முழுவதும் இன்று ஒரு அடிப்படை நிறுவல் முறையாகத் திகழும் உய்த்தறிதல் முறையும், கணித உலகம் மட்டுமன்றி எல்லா இயல்களிலும் மற்றும் வெளியுலக வாழ்க்கையிலும் அன்றாடம் பேசப்பட்டு மேலும் மேலும் தீவிரமாகப் பயன்படுத்தப்படும் நிகழ்தகவு என்ற அடிப்படையில் தோன்றும் கருத்துகளும் தொடங்கியது இவருடைய படைப்புகளிலிருந்துதான். 18ஆவது வயதில் வரலாற்றிலேயே முதல் கூட்டல் கணினியை உண்டாக்கினார். இதைத் தவிர தனது 16வது அகவையில் வடிவவியலிலும் பாஸ்கல் ஒரு பெரிய சாதனை நிகழ்த்தியிருக்கிறார். இவர் நினைவாக இவரைப் பெருமைப்படுத்தும் முகமாக அழுத்தத்தின் SI அலகும், கணினி மொழி ஒன்றும் பாஸ்கல் எனப் பெயரிடப்பட்டுள்ளன. மேலும்..


டிசம்பர் 12, 2010
Dravida Nadu.jpg

திராவிட இயக்க இதழ்கள் 1916 இல் திராவிட இயக்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து தற்காலம் வரை ஏராளமாக வெளிவந்துள்ளன. ஆயினும், 19421962 வரையிலான காலகட்டத்தைத் திராவிட இயக்க இதழ்களின் பொற்காலம் என்று சொல்லுமளவுக்கு அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட இதழ்கள் வெளிவந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் திராவிட இயக்க முன்னணித் தலைவர்களுள் பெரும்பாலானோர் இதழாசிரியர்களாக விளங்கினர். 265 இற்கும் மேற்பட்ட இதழ்கள் திராவிட இயக்கக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்தவை ஆகும். அவை திராவிட இயக்கத்தையும் அக்காலத்திய தமிழகத்தையும், அதனூடே தமிழக அரசியலையும் நன்கு விளங்கிக்கொள்ள துணை நிற்கின்றன. திராவிட இயக்க வளர்ச்சிக்கு இவ்விதழ்கள் முக்கிய பங்காற்றின. இவ்விதழ்களே திராவிட இயக்கத் தலைவர்களையும் மக்களையும் ஒன்றிணைக்கும் பாலமாக விளங்கின. திராவிட இயக்க இதழ்களுள் திராவிடன், விடுதலை, குயில், முரசொலி, திராவிடநாடு போன்றவை குறிப்பிடத்தக்கவை. மேலும்..


Boltzmann2.jpg

லுட்விக் போல்ட்சுமான் (18441906) ஒரு ஆஸ்திரிய இயற்பியலாளர். புள்ளியியல் இயந்திரவியல் மற்றும் வெப்ப இயக்கவியல் துறைகளில் பங்களிப்புகளுக்காக அறியப்படுகிறார். வியன்னா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பிரிவில் படிப்பைத் தொடர்ந்து, 1866 இல் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் கணித இயற்பியலில் ஆழ்ந்த ஆய்வுகளை மேற்கொண்டார். அணு மற்றும் அணுத்துகள் மீது தான் போல்ட்ஸ்மேனின் முழு கவனமும் இருந்தது. 'மேக்ஸ்வெல் போல்ட்ஸ்மேன் பகிர்வு', 'மேக்ஸ்வெல் போல்ட்ஸ்மேன் புள்ளிவிவரம்' ஆகியவை தான் இயந்திரவியலில் அடிப்படைகளாகத் திகழ்ந்து கொண்டிருகின்றன. நகர்ந்து கொண்டிருக்கும் வாயுக்கள் மீது சீரான ஆய்வுகள் மேற்கொண்டு இந்த இயக்கத்துக்கான சமன்பாட்டினை வரையறுத்து தந்தார். போல்ட்சுமான் கண்டறிந்து அறிவித்த இத்தகைய விதிகள், குவாண்டம் கோட்பாட்டின் துணையின்றி தன்னிச்சையாகவும் சுலபமாகவும் புள்ளி விவர அடிப்படையிலான இயந்திரவியலை புரிந்து கொள்ள மிகச்சிறந்த சாதனமாக அமைந்தன. மேலும்..


டிசம்பர் 5, 2010
Tianhe.jpg

தியான்கே-I என்பது சீனாவின் டியான்ச்சினிலுள்ள தேசிய மீத்திறன்கணினி மையத்திலுள்ள ஒரு மீத்திறன்கணினி ஆகும். இது அமெரிக்காவிற்கு வெளியிலுள்ள ஒரு சில பெடாஃப்ளாப் நிலை மீத்திறன்கணிகளுள் ஒன்றாகும். அக்டோபர் 2010 நிலவரப்படி அவ்வியந்திரத்தின் மேம்படுத்தப்பட்ட பதிப்பான தியான்கே-1ஏ உலகிலேயே மிக வேகமான மீத்திறன்கணினியாக உள்ளது. இது 2.5 பெடாஃப்ளாப் என்ற வீதத்தில் செயல்படுகிறது. தியான்கே-1 ஆனது மிகப்பெரிய அளவிலான அறிவியல் கணிப்பீடுகளைச் செய்யப் பயன்படுத்தப்பட்டது. இது லினக்சு இயக்க அமைப்பைக் கொண்டது. இது வானூர்திப் பயணப் பாவனையாக்கத்திற்கும் பெட்ரோலியப் பொருள் தேடுதல் தொடர்பான கணக்கீடுகளைச் செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும்..


Rajasandow.jpg

இராசா சாண்டோ (1894-1943) தமிழ்த் திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். சலனப் படங்களில் நடிகராக வாழ்க்கையைத் தொடங்கிய இவர் சிறந்த நடிகராகவும் இயக்குனராகவும் பெயர் பெற்றார். ஆரம்ப கால இந்தியத் திரைப்படத்துறையின் முன்னோடிகளில் ஒருவராக விளங்கினார். ராஜா சாண்டோ புதுக்கோட்டையில் பிறந்தார். உடற்பயிற்சியாளராகத் தேர்ச்சி பெற்றிருந்த இவர் பம்பாயில் சண்டை நடிகராகத் தனது திரைப்பட வாழ்க்கையை ஆரம்பித்தார். இவரது கட்டுமஸ்தான உடற்கட்டிற்காக செருமானியப் பயில்வான் ஆய்கன் சாண்டோவின் பெயரால் ”ராஜா சாண்டோ” என்றழைக்கப்பட்டார். 1922ல் பதங்கரின் பக்த போதனா படத்தில் முதன்முறையாக முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வீர் பீம்சேன் (1923), தி டெலிபோன் கேர்ல் (1926) போன்ற சலனப்படங்கள் அவருக்கு நல்ல நடிகரெனப் பெயர்வாங்கித் தந்தன. தமிழ்நாட்டிற்குத் திரும்பிய பின் ஆர். பத்மநாபனின் அசோசியேட் ஃபிலிம் நிறுவனத்திற்காகப் பல சலனப் படங்களை இயக்கி, நடிக்கவும் செய்தார். பேயும் பெண்ணும் (1930), நந்தனார் (1930), அனாதைப்பெண் (1931), பிரைட் ஆஃப் ஹிந்துஸ்தான் (1931), சதி உஷா சுந்தரி (1931) போன்ற இவரது பெரும்பாலான சலனப் படங்கள் சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களைக் கொண்டிருந்தன. மேலும்..


நவம்பர் 28, 2010
Melaka state locator.PNG

மலாக்கா மலேசியாவின் 13 மாநிலங்களில் ஒன்றும், அதன் மூன்றாவது சிறிய மாநிலமும் ஆகும். இது தீபகற்ப மலேசியாவின் தென் பகுதியில் உள்ளது. இதன் தலைநகரம் மலாக்கா பட்டினம். இந்நகரை 2008 ஆம் ஆண்டில் உலகப் பாரம்பரியத் தளங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்தது. தென் மேற்கே மலாக்கா நீரிணையும் சுமாத்திரா தீவும் இருக்கின்றன. மலாக்கா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாநிலம். 1400ம் ஆண்டு பரமேசுவரா எனும் ஒரு சிற்றரசனால் மலாக்கா நகரம் உருவாக்கம் பெற்றது. இந்தக் காலக் கட்டத்தில் மலாக்கா அரசு மிகவும் வலிமை வாய்ந்த ஒரு பேரரசாக விளங்கியது. தீபகற்ப மலேசியாவின் தென் பகுதி, சுமத்திராவின் வட பகுதி மலாக்காவின் ஆளுமையின் கீழ் வந்தன. 1511 இல் போர்த்துக்கீசர் மலாக்காவைக் கைப்பற்றினர். பின்னர் 1641 இல் டச்சு ஆளுகைக்கும், 1824 இல் பிரித்தானியரின் ஆளுகைக்கும் உள்ளானது. 1948 இல் விடுதலை பெற்று மலாயாக் கூட்டமைப்பில் இணைந்தது. 1400 ஆம் ஆண்டிலிருந்து தொடக்க கால குடியேற்றவாசிகளாக மலாய்க்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மாநிலத்தின் பெரிய சமூகமாகவும் விளங்குகின்றார்கள். மேலும்..


Vinayagamoorthy.jpg

வை. அநவரத விநாயகமூர்த்தி (1923-2009) தமிழ்ப் புலமைப் பாரம்பரியத்தில் வந்த முதுபெரும் ஈழத்து எழுத்தாளரும், ஊடகவியலாளருமாவார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இணுவிலில் பிறந்த இவர் சென்னைப் பல்கலைக்கழகத் 'தமிழ் வித்துவான்' முதலாவது தேர்வில் சித்தியடைந்திருந்தார். கல்வி அமைச்சில் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். 1954 ஆம் ஆண்டில் 'உதயம்' மாத சஞ்சிகையை வெளியிட்டார். தொடர்ச்சியாக மூன்றாண்டுகள் வெளிவந்த இச்சஞ்சிகை ஈழத்தில் பல புதிய எழுத்தாளர்களை உருவாக்கியது. 1939 ஆம் ஆண்டில் தொடங்கிய எழுத்துப் பணி அவர் இறக்கும் வரை தொடர்ந்து கொண்டேயிருந்தது. கடைசிக் காலத்தில் தனது பதினோராவது நூலாக 'ஆனந்த நடனம்' என்னும் நூலை எழுதிக் கொண்டிருந்தார். 'திரிவேணித் தமிழ்ச் செல்வம்' என்ற தமிழ்நாட்டுப் பாடநூலில் இவரது கட்டுரை இடம்பெற்றுள்ளது. அநவரத விநாயகமூர்த்தி ஐநூற்றுக்கும் மேற்பட்ட இலக்கியக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இணுவை மூர்த்தி தனது இறுதிக்காலங்களில் சர்வதேச சமய சுதந்திரத்திற்கான நிறுவனத்தின் கொழும்புப் பிரிவின் துணைத் தலைவராகப் பணியாற்றி வந்தார். மேலும்..


நவம்பர் 21, 2010
BM, AES Egyptian Sulpture ~ Colossal bust of Ramesses II, the 'Younger Memnon' (1250 BC) (Room 4).jpg

ஓசிமாண்டியாசு (Ozymandias) என்பது 1818 இல் சோனட் வகையில் பெர்சி பைஷ் ஷெல்லி எழுதிய ஒரு புகழ்பெற்ற ஆங்கிலக் கவிதை. வெளியாகி கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகள் ஆன பின்பும், பல கவிதைத் தொகுப்புகளில் இக்கவிதை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. இக்கவிதையை ஷெல்லி தன் நண்பரும் சக கவிஞருமான ஒரேசு சிமித்துடன் நடந்த ஒரு போட்டியின் காரணமாக எழுதினார். பண்டைய எகிப்தின் பேரரசர்களுள் ஒருவரான இரண்டாம் ராமேசசின் பெரும் சிலை (படம்) ஒன்றின் தாக்கத்தினால் இக்கவிதை எழுதப்பட்டது. இதன் தனித்துவமான சொல்நடையும், காட்சியமைப்பும், கருத்தாழமும் ஆங்கிலக் கவிதையுலகில் இதற்கு அழியாத இடத்தைப் பெற்றுத் தந்துள்ளன. ஓசிமாண்டியாஸ் சொல்லும் நீதி, எவ்வளவு பெரிய பேரரசாயினும் ஒரு நாள் அழிந்து போகும்; பலம் வாய்ந்த சர்வாதிகாரிகள் ஒரு நாள் உலக நினைவிலிருந்து மறைந்து போவர் என்பதே. இக்கருத்தினை ஷெல்லி அற்புதமான காட்சியமைப்பின் மூலமும் உரத்து படிக்க ஏற்ற மொழிநடையில் வெளிக் கொணர்ந்துள்ளார். மேலும்..


Patrice Lumumba Photo 1960 b.gif

பத்திரிசு லுமும்பா (19251961) ஆபிரிக்கத் தலைவரும் காங்கோ குடியரசின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமரும் ஆவார். இவரே பெல்ஜியத்திடம் இருந்து தமது நாட்டை விடுதலை பெற உதவியவர். 1960 இல் பிரசெல்சில் நடந்த மாநாட்டில் கொங்கோவின் விடுதலை அறிவிக்கப்பட்ட அதே ஆண்டில் நடந்த பொதுத்தேர்தலில் லுமும்பாவின் கட்சி பெரும் வெற்றி பெற்று லுமும்பா காங்கோ குடியரசின் பிரதமரானார். விடுதலை நாளன்று பத்திரிசு லுமும்பா தனது முதலாவது புகழ் பெற்ற உரையை நாட்டு மக்களுக்கு வழங்கினார். ஆனாலும் 10 வாரங்களுக்குப் பின்னர் லுமும்பாவின் அரசு இராணுவப் புரட்சி ஒன்றின் மூலம் கவிழ்க்கப்பட்டது. சனவரி 17, 1961 இல் லுமும்பா பெல்ஜிய அதிகாரத்துக்குட்பட்ட கட்டங்காவில் காடொன்றினுள் கொண்டு செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். லுமும்பா சிறையில் இருந்து தப்பிக்க முயன்றதாகவும் ஆத்திரமடைந்த ஊர்வாசிகளே அவரைக் கொலை செய்ததாகவும் மூன்று வாரங்களுக்குப் பின்னர் உள்ளூர் வானொலி தகவல் தந்தது. மேலும்..


நவம்பர் 14, 2010
La Boqueria.JPG

உயிர்ச்சத்து என்பது பெரும்பாலான உயிரினங்களின் இயல்பான வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்கும் மிகச்சிறிய அளவில் தேவைப்படும் இன்றியமையாத கரிம நுண்ணூட்டச் சத்து ஆகும். உயிரினத்தால் உருவாக்கப்பட முடியாத அல்லது ஒரு சிறுபகுதி மாத்திரமே உருவாக்கப்படக் கூடிய கரிமச் சேர்மங்களே உயிர்ச்சத்துக்களாகக் கருதப்படுகிறது, இவற்றின் தேவை உண்ணும் உணவு மூலம் மட்டுமே பூர்த்தி செய்யப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட உயிரினத்துக்கு உயிர்ச்சத்தாகக் கருதப்பட்டாலும் வேறு உயிரினங்களுக்கு அவை உயிர்ச்சத்தாக அமையாமல் இருக்கலாம். உதாரணமாக, மனிதனுக்குத் தேவைப்படும் அசுகொர்பிக் அமிலம் (உயிர்ச்சத்து சி) வேறு உயிரினங்களால் முழுமையாக உருவாக்கப்படுகின்றபடியால் அவற்றிற்கு உயிர்ச்சத்தாகக் கருதப்படுவதில்லை. சில உயிர்ச்சத்துகளை சிறிய அளவில் உயிரினம் உற்பத்தி செய்ய இயலும். இவற்றின் போதுமான அளவிற்கு நல்ல சத்துள்ள உணவு உட்கொள்ளுதல் அவசியம் ஆகும். பதின்மூன்று உயிர்ச்சத்துக்கள் இதுவரை உலகளாவியரீதியில் அறியப்பட்டுள்ளது. மேலும்


Veeramani iyer.jpg

வீரமணி ஐயர் (1931-2003), ஈழத்துக் கவிஞரும் கருநாடக இசைக் கலைஞரும் ஆவார். யாழ்ப்பாணம் இணுவிலில் பிறந்தவர். தமிழகத்தில் ருக்மணிதேவி அருண்டேலிடம் பரதநாட்டியமும், எம். டி. ராமநாதன், பாபநாசம் சிவன் ஆகியோரிடம் கருநாடக இசையும் பயின்றார். இலங்கையில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் விரிவுரையாளராக இணைந்து 33 ஆண்டுகள் பணியாற்றி, ஏராளமான இசை, நாட்டிய ஆசிரியர்களை உருவாக்கினார். ஏராளமான சாகித்யங்களையும், நாட்டிய நாடகங்களையும், ஆலயங்கள் மீதான பாடல்களையும் இயற்றினார். 72 மேளகர்த்தா இராகங்களிற்கும், 175 தாளங்களிற்கும் இன்னும் இதற்கு மேலாகவும் உருப்படிகளை ஆக்கியுள்ளார். பல இராகங்களின் பெயர்களை முத்திரையமைத்துப் பாடியுள்ளமை இவருடைய ஆக்கங்களின் சிறப்பம்சமாகும். `கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்...' என்று ஆரம்பிக்கும் ஆனந்த பைரவி இராகத்தை பல்லவியில் கொண்டமைந்து நான்கு இராகங்கள் முத்திரை அமைக்கப் பெற்ற இவரது இராகமாலிகை கீர்த்தனை தென்னிந்தியப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் அவர்களால் பாடப்பெற்று உலகப் பிரசித்தி பெற்றதாகும். மேலும்..


நவம்பர் 7, 2010
Strokkur geyser eruption, close-up view.jpg

வெந்நீரூற்று (Geyser) என்பது நீரானது, நீராவியுடன் சேர்ந்து, குறிப்பிட்ட இடைவெளிகளில் கிளர்ந்தெழுந்து, மேல்நோக்கி மிகவும் வேகத்துடன் வெளியேற்றப்படுவதாகும். குறிப்பிட்ட சில நீர்நிலவியல் நிலைமைகளில் மட்டுமே இவ்வாறான வெந்நீரூற்றுகள் காணப்படுவதால் இது ஒரு அரிதான தோற்றப்படாகவே கருதப்படுகிறது. பொதுவாக இவை இயக்கநிலையிலுள்ள எரிமலைகள் இருக்கும் இடங்களில், பாறைக் குழம்புகளுக்கு அண்மையாகவே தோன்றியிருக்கும். நிலநீர் நிலத்தினடியில் கிட்டத்தட்ட 2000 மீட்டர் ஆழத்தில் சூடான பாறைகளைத் தொட்டுச் செல்லும். அப்போது உருவாகும் அழுத்தம் கூடிய கொதிக்கும் நீர் நிலத்துளைகளூடாக சூடான ஆவியுடன் கூடிய நீரை வேகத்துடன் வெளியேற்றும் செயற்பாட்டினால் இவை உருவாகின்றன. வெந்நீரூற்றுப் பகுதியில் ஏற்படும் கனிமப் படிவுகள், அருகில் ஏற்படும் எரிமலை வெடிப்புக்கள், ஏனைய அருகாமையிலுள்ள பீறிட்டு மேலே நீர் பீச்சியடிக்காமல் காணப்படும் வெந்நீரூற்றுக்களின் தாக்கம், மனிதர்களின் குறுக்கீடுகள் போன்றவற்றால், ஒரு வெந்நீரூற்று இடையே நிறுத்தப்படவோ, அல்லது முற்றாக நின்று போகவோ நேரலாம். மேலும்


Psubbarayan.jpg

பரமசிவ சுப்பராயன் (1889–1962) சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வராவார். இவரது ஆட்சி காலத்தில் தமிழகத்தில் முதன் முறையாக அரசாங்க வேலைகளில் தலித்துகளுக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு வழங்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணை கொண்டுவரப்பட்டது. திருச்செங்கோடு அருகே உள்ள குமாரமங்கலம் கிராமத்தின் ஜமீன்தாராகிய இவர், தனது வாழ்நாளில் சென்னை மாகாணத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சர், கல்வி மற்றும் சட்ட அமைச்சர், உள்துறை அமைச்சர், சட்டமன்ற மேலவை உறுப்பினர், இந்தோனேசியாவிற்கான இந்தியத் தூதுவர், இந்திய நாடாளுமன்ற கீழவை உறுப்பினர், மேலவை உறுப்பினர், மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர், மாகாராஷ்டிர மாநில ஆளுநர் போன்ற பல பதவிகளை வகித்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், ஆக்சுபோர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், டப்ளின் பல்கலைக்கழகத்தில் சட்டப்பயிற்சி பட்டமும் பெற்றவர். 1922 இல் தென்மத்திய பிரதேச நிலச்சுவான்தார்களின் பிரதிநிதியாக சென்னை மாகாண சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1926 இல் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும்..


அக்டோபர் 31, 2010
Calvin and Hobbes Original.png

கால்வினும் ஆபுசும் (Calvin and Hobbes) பில் வாட்டர்சனால் உருவாக்கப்பட்ட ஒரு ஆங்கிலப் படக்கதை. நாளிதழ்களில் தொடராக வெளியிடப்பட்டு பின்னர் நூல்வடிவிலும் வெளியானது. இது கால்வின் என்ற கற்பனை வளமிக்க ஆறு வயது சிறுவன், ஆபுசு என்ற அவனது பொம்மைப்புலி ஆகிய இரு புனைவுப் பாத்திரங்களைக் கொண்டு வரையப்பட்ட படக்கதையாகும். இந்தப் பாத்திரங்களின் பெயர்கள் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சான் கால்வின் என்ற பிரெஞ்சு மறுமலர்ச்சி இறையியலாளர், பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த தாமசு ஆபுசு என்ற ஆங்கிலேய அரசியல் மெய்யியலாளர் ஆகியோரின் பெயர்களைத் தழுவி அமைக்கப்பட்டன.1985 முதல் 1995 வரை நாளிதழ்களில் இப்படக்கதை தொடராக வெளியிடப்பட்டது. இப்படக்கதை புகழின் உயரத்தில் இருந்த காலத்தில் பல நாடுகளிலுமாக 2,400 நாளிதழ்களில் வெளிவந்தது. தவிர, இதுவரை பதினெட்டு நூல்களாகவும் இவை தொகுக்கப்பட்டு 4.5 கோடி படிகளுக்கும் மேல் அச்சாகியுள்ளன. மேலும்


KAN Sastri.jpg

கல்லிடைக்குறிச்சி அய்யா நீலகண்ட சாத்திரி (கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி, 1892-1975) ஒரு இந்திய வரலாற்றாளரும் திராவிடவியலாளரும் ஆவார். நீலகண்ட சாத்திரி திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி என்ற ஊரில் ஒர் ஏழைப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். முதுகலைப் பட்டப் படிப்பில் சென்னை மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார். வாரணாசி இந்துப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராகவும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கலைக்கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றினார். மைசூர் பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் பேராசிரியராகவும், யுனெஸ்கோவின் தென்னிந்தியப் பாரம்பரிய கலாச்சார நிறுவனத்தின் இயக்குனராகவும் இருந்தவர். தென்னிந்திய வரலாறு பற்றி 25 நூல்கள் எழுதியுள்ளார். தமிழ் வரலாற்றாளரான ஆ. இரா. வேங்கடாசலபதி, இருபதாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டின் சிறந்த வரலாற்றாளராக நீலகண்ட சாத்திரியைக் கருதுகிறார். ஆனாலும், சாத்திரியின் காலத்தில் தமிழ் நாட்டில் கிடைத்த ஆதாரங்களை வேறு களங்களில் உள்ள ஆதாரங்களோடு ஒப்பிட்டு ஆராயும் பழக்கம் வரலாற்றியலில் இருக்கவில்லை எனவும் அவர் கூறுகிறார். மேலும்..


அக்டோபர் 24, 2010
Periyar with Jinnah and Ambedkar.JPG

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் என்பது இந்தி மொழியை, இந்தியாவின் ஒரே அதிகாரபூர்வ மொழியாக்கும் மற்றும் இந்தி மொழி அல்லாத மாநிலங்களின் கல்வி பாடத்திட்டங்களில் இந்தியை கட்டாய பாடமாக்கும் இந்திய அரசின் முயற்சிக்கு எதிராக தமிழக மக்களால், பெரும்பாலும் சனநாயக, அற வழிகளில் நடத்தப்பட்ட போராட்டமாகும். 1937 இல் முதல் முறையாக இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது சென்னை மாகாணத்தில் முதல்முறை வெற்றிபெற்ற காங்கிரசுக் கட்சியின் இராஜகோபாலாச்சாரி தலைமையில் அமைந்த அரசு பள்ளிகளில் இந்தி படிப்பதை கட்டாயமாக்கியதை எதிர்த்து நீதிக்கட்சியும், பெரியார் ஈ.வெ.இராமசாமியும் மூன்று ஆண்டுகள் உண்ணாநோன்பு, மாநாடுகள், பேரணிகள் மற்றும் மறியல் போராட்டங்கள் நடத்தினர். அரசின் காவல் நடவடிக்கைகளில் இரண்டு போராட்டக்காரர்கள் இறந்தனர்; பெண்கள், சிறுவர்கள் உட்பட 1198 பேர்கள் கைது செய்யப்பட்டனர். காங்கிரசு அரசு 1939ஆம் ஆண்டு பதவிவிலகியதை ஒட்டி சென்னை மாகாண பிரித்தானிய ஆளுநர் எர்சுக்கின் பிரபு பிப்ரவரி 1940 இல் இந்தக் கட்டாய இந்திக் கல்வியை இரத்து செய்தார். மேலும்


அ. மாதவையா (1872-1925) தமிழின் ஒரு முன்னோடி எழுத்தாளர், புதின ஆசிரியர், பத்திரிக்கையாசிரியர். ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் புலமைப் பெற்றவர். மாதவையா, திருநெல்வேலி அருகே உள்ள பெருங்குளம் என்ற கிராமத்தில் பிறந்தவர். சென்னை கிறித்துவ கல்லூரியில் இளங்கலை படிப்பை முடித்து, அக்கல்லூரியிலேயே ஆசிரியராக பணிபுரிந்தார். 1892 இல் விவேக சிந்தாமணி என்ற பத்திரிகையில் சாவித்திரியின் கதை என்ற தொடரினை எழுதத் தொடங்கினார். தமிழில் பிரதாப முதலியார் சரித்திரம் (1879) என்ற புதினத்திற்குப் பின்பு எழுதப்பட்ட இரண்டாம் தமிழ் புதினம் இதுவாகும். ஆனாலும், அத்தொடர் 1903 இலேயே முத்துமீனாட்சி என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. 1898-99 காலப்பகுதியில் "பத்மாவதி சரித்திரம்" என்ற நாவலின் இரண்டு பாகங்களை எழுதினார். 1925 இல் பஞ்சாம்ருதம் என்ற பத்திரிக்கை ஒன்றைத் தொடங்கினார். பத்மாவதி சரித்திரத்தின் மூன்றாம் பகுதியினை 1924 இல் எழுதத் தொடங்கி, முழுமையடையாத தருணத்தில் மாதவையா காலமானார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் மேலவை உறுப்பினராக மாதவையா 1925 தேர்வு செய்யப்பட்டார். அப்போது தமிழைக் கட்டாய பாடமாக இளங்கலை பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும் என்று சொற்பொழிவினை நிகழ்த்தினார். மேலும்..


அக்டோபர் 17, 2010
Rashidun654wVassal.png

ராசிதீன் கலிபாக்கள் எனப்படுபவர்கள் முகம்மது நபி அவர்களுக்குப் பிறகு, இசுலாமிய அரசை ஆட்சி செலுத்திய தலைவர்களைக் குறிக்கும். கிபி 632 முதல் 661 வரை இவர்களது ஆட்சி நீடித்தது. பொதுவாக இவர்களது ஆட்சி அரசியலை விட சமயத்திற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்பட்டது. முகம்மது நபியின் மறைவுக்கு பிறகு அவரது ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளை யார் ஆளுவது என்ற கேள்வி எழுந்தது. அப்பொழுது ஒருசாரார் முகம்மதுவின் நண்பரும், மாமனாருமான அபூபக்கரை ஆதரித்தனர். மற்றொரு சாரார் மதீனா வாசிகளை ஆதரித்தனர். இவ்வாறான ஒரு சிறிய சர்ச்சைக்குப் பிறகு அபூபக்கர் அடுத்த கலிபாவாக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது ஆட்சிக்குப்பிறகு உமர், உதுமான், அவருக்குப் பின் கடைசியாக அலி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ராசித்தீன் கலிபாக்களின் ஆட்சி அன்றைய காலக்கட்டத்தில் மிகவும் சக்தி வாய்ந்த அரசாட்சியாக இருந்தது. இவர்களின் ராணுவம் பைசாந்தியம், பாரசீகம் மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் இருந்த அநேக பேரரசுகளை வெற்றிக்கொண்டது. இவர்களது ஆட்சியின் கீழ் மத்திய கிழக்கு, ஈரான், சிரியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா பகுதிகள் ஆகிய அனைத்தும் வந்தன. அலியின் படுகொலைக்குப்பிறகு ஆட்சிக்கு வந்த முஆவியாவின் அரசு உமய்யா கலிபாக்கள் ஆட்சி என அழைக்கப்படுகின்றது. மேலும்


Swami Gnanapirakasar.jpg

சுவாமி ஞானப்பிரகாசர் (1875-1947) ஈழத்தைச் சேர்ந்த பன்மொழிப் புலவர், தமிழறிஞர். தமிழின் தொன்மையை உலகிற்கு எடுத்தியம்பியவர்களுள் ஒருவர். இலத்தின், கிரேக்கம் முதலாய பதினெண் மொழிகளில் எழுதவும், பேசவும் வல்லவராய் இருந்தார். பல தமிழ் நூல்களின் ஆசிரியர். யாழ்ப்பாணத்தை ஆட்சி புரிந்த பரராசசேகரனின் வழித்தோன்றலான இவர் இயற்பெயர் வைத்தியலிங்கம். ஐந்து வயதாக இருந்த போது ஞானஸ்நான திருவருட்சாதனத்தைப் பெற்று கத்தோலிக்க மதத்தைத் தழுவினார். யாழ் புனித பத்தரிசியார் கல்லூரியில் கல்வி பயின்று அரச எழுத்தராகச் சில ஆண்டுகள் பணியாற்றினார். 1895 இல் யாழ்ப்பாணம் குரு மடத்தில் சேர்ந்து, 1901 இல் குருவானவராக திருநிலைப்படுத்தப்பட்டார். 50 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதி அச்சேற்றினார். ‘சொற்பிறப்பு ஒப்பியல் அகர வரிசை’ என்ற பெயரில் இவர் வெளியிட்ட தமிழ் ஒப்பியல் அகராதி சிறந்த நூலாகும். யாழ்ப்பாண வைபவமாலையில் தாம் கண்ட வரலாற்று முரண்பாடுகளை யாழ்ப்பாண வைபவ விமரிசனம் என்னும் நூலில் எடுத்துக் காட்டினார். மேலும்..


அக்டோபர் 10, 2010
Carved Conch.jpg

வெண் சங்கு (Xancus pyrum) மெல்லுடலிகளில் ஒன்று. இது வலம்புரிச் சங்கு எனவும் சிலுவைச் சங்கு எனவும், தட்சணாமூர்த்திச் சங்கு எனவும் அழைக்கப்படுகிறது. இந்தியச் சங்கு இனமான சாங்கசு பைரம் தற்போது டர்பினல்லா பைரம் எனவும் அழைக்கப்படுகிறது. இதன் கடினமான ஓடு சுண்ணாம்பினால் ஆனது. சங்குகள் கூட்டம் கூட்டமாக வாழும் தன்மை கொண்டவை. கடலின் அடி மட்டத்தில் 20 முதல் 25 அடி ஆழமுள்ள சங்குப் படுகைகளில் வாழ்கின்றன. சங்கு ஒரு புலால் உண்ணியாகும். இவை கடலடியிலுள்ள புழுக்களை அதிகம் உண்கின்றன. சங்கு கடல் தரையின் மீது ஊர்ந்து செல்லும்போது, கடினமான பொருள்கள் அதன் மென்தோல் அறையினுள் நுழைந்து விடாமல் தடுக்க, சளி போன்ற நீர்மத்தை வழியில் சுரந்து அதன் மீது செல்கின்றது. சனவரி முதல் மார்ச் வரை மற்றும் நவம்பர் முதல் ஏப்ரல் வரை உள்ள காலம் சங்கின் இனப்பெருக்கக் காலம் ஆகும். பெண் சங்கு இனச்சேர்க்கைக்குப் பின் வெளியிடும் முட்டைக்கூடு சங்குப்பூ எனப்படுகிறது. இக்கூட்டின் குறுக்குவாட்டில் ஒன்றின் மீது ஒன்றென 24 முதல் 28 அறைகள் உள்ளன. ஒவ்வொரு அறைக்குள்ளும் கருவுற்ற முட்டைகள் இருக்கும். அறைகளின் பக்கவாட்டில் உள்ள துவாரத்தின் மூலம் கருவுற்ற முட்டைகளுக்குத் தேவையான உயிர்வளி கிடைக்கிறது. பின்பு கூட்டினுள் இருந்து இளம் சங்குகள் வெளிப்படுகின்றன. மேலும்


புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ. விருத்தாசலம் (1906-1948), தமிழ் இலக்கியத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். இவரது படைப்புகள் தமிழ் இலக்கியத்தில் மிகவும் அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளன. 2002 இல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமை ஆக்கியது. புதுமைப்பித்தன் கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூரில் பிறந்தார். நெல்லை இந்துக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். புதுமைப்பித்தன் எழுத்துப்பணியில் முழுவீச்சில் ஈடுபட்டது 15 ஆண்டுகளுக்கும் குறைவான காலம் தான். அக்குறுகிய கால அளவிலேயே அவர் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையுள்ள கட்டுரைகள், 15 கவிதைகள், சில நாடகங்கள், புத்தக விமரிசனங்கள் என எழுதிக் குவித்தார். புதுமைப்பித்தனின் சிறுகதைகள் தான் அவருக்கு எழுத்துலகில் தனி இடத்தை அளித்தன. அவர் எழுதியதாகக் கணிக்கப்படும் 108 சிறுகதைகளில் 48 கதைகள் தான் அவர் காலத்திலேயே வெளியிடப்பட்டன. புதுமைப்பித்தன் 1930களில் உருவாகிய மணிக்கொடி இயக்கத்தின் முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவராக விளங்கினார். மேலும்..


அக்டோபர் 3, 2010
Bundesarchiv Bild 101I-127-0396-13A, Im Westen, deutsche Panzer.jpg

பெல்ஜியம் சண்டை இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்தது. மே 10-28, 1940ல் நடந்த இச்சண்டையில் நாட்சி செருமனி பெல்ஜியம் நாட்டைத் தாக்கிக் கைப்பற்றியது. 1939ல் செருமனி போலந்தைத் தாக்கிக் கைப்பற்றியதால் இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. பின்னர் நேச நாடுகளும் செருமனியும் அடுத்த கட்ட மோதலுக்காக தயாராகின. இந்தக் காலகட்டம் போலிப் போர் என்றழைக்கப்பட்டது. செருமனி அடுத்து பிரான்சைத் தாக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. மாறாக செருமனியின் தளபதிகள் பெல்ஜியம், நெதர்லாந்து வழியாகத் தாக்கத் திட்டமிட்டனர். நேசப் படைகள் பெல்ஜியத்தின் மீதான தாக்குதலே செருமனியின் முக்கிய தாக்குதல் என நம்பித் தங்கள் படைகளில் சிறந்தவற்றை பெல்ஜியத்துக்கு அனுப்பின. ஆனால் செருமனியின் இன்னொரு பெரும் படை மஷினோ கோட்டை உடைத்து ஆர்டென் காடு வழியாக பிரான்சைத் தாக்கியது. செருமனியின் இந்த இருமுனைத் தாக்குதலும் செர்மானியக் கவசப் படையினரின் மின்னலடித் தாக்குதல் உத்தியும் நேசநாட்டுப் படைகளை நிலை குலையச் செய்தன. பதினெட்டு நாட்களில் பெல்ஜியம் தாக்குப்பிடிக்க முடியாமல் சரணடைந்தது. அடுத்த மாதம் பிரான்சும் சரணடைந்தது. மேலும்


Sir Ponnambalam Ramanathan (1851-1930).jpg

சேர் பொன்னம்பலம் இராமநாதன் (1851 - 1930) இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர். சிங்களவரும், தமிழரும் இன வேறுபாடு பாராது அவரைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர். சென்னை மாநிலக் கல்லூரியில் உயர் கல்வியும், பின்னர் கொழும்பில் சட்டக் கல்வி பயின்று உயர் நீதிமன்ற வழக்கறிஞர், பின்னர் சட்டமா அதிபராகப் பதவிவகித்து ஓய்வு பெற்றார். 1879 இல் சட்டசபைக்கு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1911 இல் சட்டசபைக்கான முதலாவது தேர்தலில் முழு இலங்கையரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். 1921 இல் பிரித்தானிய அரசினால் பிரபுப் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். மிகுந்த சொல்வன்மையும் வாதத் திறமையும் வாய்க்கப்பெற்ற இவர், இலங்கையில் பிரித்தானியரின் பல நடவடிக்கைகளுக்கு எதிராக வாதாடி இலங்கையரின் நலன்களைப் பாதுகாத்தார். இந்துக்களின் கல்வி மேம்பாட்டுக்காக யாழ்ப்பாணத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக இரண்டு பாடசாலைகளை நிறுவினார். கொழும்பு பொன்னம்பலவாணேசர் கோயிலை 1912 இல் கட்டினார். மேலும்..


செப்டம்பர் 26, 2010

பதுருப் போர் (கிபி 624) இசுலாமிய வரலாற்றில் முஸ்லிம்கள் இசுலாத்தின் விரோதிகளை இராணுவ ரீதியாக எதிர்த்துப் போராடிய முதலாவது போர் ஆகும். இந்தப் போர் தெற்கு அரேபியாவின் (இன்றைய சவுதி அரேபியா) எச்சாஸ் பகுதியில் இசுலாமிய நாட்காட்டியின் படி 2-ஆம் ஆண்டு ரமழான் பிறை 17-ல் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. மெக்காவில் இசுலாத்தை எதிர்த்த குறைசியர்களுடன் இடம்பெற்ற இப்போர் முகம்மது நபி அவர்களுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. முஸ்லிம்கள் பதுருப் போரில் மிகக் குறைந்த எண்ணிக்கையோடும் குறைந்த ஆயுதப் பலத்தோடும் வெற்றி பெற்றமைக்கான அடிப்படைக் காரணம் அவர்களிடம் காணப்பட்ட ஈமானிய பலமும் இறைவனின் உதவியுமே என இசுலாமிய வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளது. குர்ஆனில் விவரிக்கப்பட்ட ஒரு சில சமர்களில் இதுவும் ஒன்றாகும். முகம்மதுவின் நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட படையினர் மெக்காவின் படையினரை ஊடறுத்து பல குறைசித் தலைவர்களைக் கொன்றனர். மெக்காவில் உள்ள எதிரிகளை அழிப்பதற்கு இப்போரை அன்றைய முஸ்லிம்கள் ஒரு திருப்புமுனையாகக் கண்டனர். மேலும்..


Famine in India Natives Waiting for Relief in Bangalore.jpg

1876-78 ஆம் ஆண்டுகளில் பிரித்தானிய இந்தியாவின் ஒரு பகுதியாகிய சென்னை மாகாணத்தை கடும் பஞ்சம் பீடித்தது. இப்பஞ்சம் சென்னை மாகாணப் பெரும் பஞ்சம் என்று அழைக்கப்படுகிறது. இரு ஆண்டுகள் நீடித்த இப்பஞ்சம், முதலாண்டில் தென்னிந்தியப் பகுதிகளைத் (சென்னை, மைசூர், பம்பாய், ஐதராபாத்) தாக்கியது. இரண்டாம் ஆண்டில் வட இந்தியாவில் ஐக்கிய, மத்திய மாகாணங்களின் சில பகுதிகளுக்கும் பரவியது. இரு ஆண்டுகளில் ஐம்பது லட்சம் முதல் ஒரு கோடி மக்கள் பட்டினியாலும் நோயாலும் மாண்டனர். இப்பஞ்சத்தின் விளைவாக பிரித்தானிய அரசு பஞ்சக் குழுமத்தைத் தோற்றுவித்து பஞ்ச விதிகளை வகுத்தது. நிவாரணம் பெறுவோர் கடுமையான விதிகளுக்குட்படுத்தப் பட்டனர். முதியோர், உடல் ஊனமுற்றோர், குழந்தைகளுக்கு மட்டும் இலவச உணவு வழங்கப் பட்டது. ஏனையோருக்கு கடுமையான உடலுழைப்புக்கு பதிலாகவே நிவாரணமளிக்கப்பட்டது. நிவாரணக் கூலி பெற்றவர்களைக் கொண்டு பல கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சென்னை நகரின் அருகில் உள்ள பக்கிங்காம் கால்வாய் இவ்வாறு கட்டப்பட்டதே. மேலும்


செப்டம்பர் 19, 2010
Batesplate ArM.jpg

சில உயிரினங்கள் வேறு வலிய உயிரினத்திற்கான அடையாளங்களைப் போலியாகப் பெற்றுத் தம்மைக் காத்துக்கொள்ளும் தன்மைக்குப் பேட்சின் போலியொப்புரு (Batesian mimicry) என்று பெயர். இத்துறையில் ஆய்வு செய்த ஆங்கில இயற்கையியலாளர் என்றி பேட்சு என்பவர் பெயரால் இவ்விளைவு அறியப்படுகின்றது. இவர் பிரேசில் நாட்டின் மழைக்காடுகளில் 1840களின் இறுதியில் கள ஆய்வுகள் செய்தபொழுது இதனைக் கண்டுபிடித்தார். பிறிதொரு வலிய உயிரினத்தின் அடையாளங்களைப் போலியொப்பாகப் பெற்று வேட்டையாடும் எதிரிகளிடம் (கோண்மா) இருந்து தப்பும் தன்மை ஒரு படிவளர்ச்சி வெளிப்பாடு என்று கருதப்படுகின்றது. இந்த விளக்கம் சார்லசு டார்வின் முன்வைத்த படிவளர்ச்சிக் கோட்பாட்டுடன் பொருந்தி இருந்தது. இவ்விளக்கம் படிவளர்ச்சியை எதிர்த்தவர்களின் எதிர்ப்பைச் சந்தித்தது. அதுவரை கேலிக்காக மாந்தர் ஒருவரைப்போல மற்றொருவர் செய்து காட்டும் பகடிக்கூத்தை மட்டும் குறித்து வந்த "மிம்மிக்ரி" என்ற சொல் செடிகளின் பண்புகளையும் விலங்குகளின் பண்புகளையும் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படத் தொடங்கியது. மேலும்..


Abraham T. Kovoor.jpg

ஆபிரகாம் கோவூர் (1898-1978) இலங்கையின் பகுத்தறிவாளரும், உளவியலாளரும், எழுத்தாளரும் ஆவார். இவர், கேரளாவில் பிறந்து கொல்கத்தாவில் கல்வி கற்று பின்னர் கேரளாவில் சில காலம் கல்லூரி உதவி விரிவுரையாளராக இருந்தவர். தன் வாழ்க்கையின் பெரும்பாலான காலத்தைக் கொழும்பில் கழித்தார். இலங்கையில் பல பாடசாலைகளில் தாவரவியல் ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். கல்லூரிப் பணி ஓய்வு பெற்ற பின்னரே, ஆவிகள் தொடர்பான விந்தை நிகழ்வுகள் பற்றி தம் வாழ்நாள் ஆராய்ச்சியைப் பற்றிப் பேசவும் எழுதவும் தொடங்கினார்; இறுதிவரை அவர் தீவிர பகுத்தறிவாளராகவே கொள்கை முழக்கம் செய்தார். கோவூரின் நூல்களிலுள்ள நிகழ்வாய்வு உண்மை நிகழ்ச்சிகளை பல்வேறு நாடுகளில் பல பத்திரிகைகளும், செய்தித் தாள்களும் தொடர்ச்சியாக வெளியிட்டன. அக்கதைகளுள் ஒன்று, மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. அவருடைய நூலின் மற்றொரு உண்மைக்கதை, "நம்பிக்கை" என்ற பெயரில் தமிழ் நாடகமாகப் பலமுறை அரங்கு நிறைந்த அவையோர் முன் நடித்துக் காட்டப்பட்டது. மேலும்..


செப்டம்பர் 12, 2010
Dreischluchtendamm hauptwall 2006.jpg

மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை சீனாவில் யாங்சே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட நீர்மின்சாரம் உற்பத்தி செய்யும் ஒர் அணையாகும். இதுவே உலகின் பெரிய மின்சாரம் உற்பத்தி செய்யும் இடமாகக் கருதப்படுகிறது. அணை கட்டமைப்பு 2006ல் கட்டிமுடிக்கப்பட்டது. அக்டோபர் 30, 2008 அன்று கரையில் இருந்த 26வது மின்னியக்கி வணிக நோக்கில் செயல்படத் தொடங்கிய போது கப்பல் உயர்த்தும் பகுதியை தவிர மூல திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அனைத்து பகுதிகளும் கட்டி முடிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு மின்னியக்கியும் 700 மெகாவாட் திறனுடையது. இந்த அணைத் திட்டத்தால் மின் உற்பத்தி மற்றும் வெள்ளக் கட்டுப்பாடு தவிர ஆற்றில் பெரிய கலன்கள் செல்லும் வசதியும் கிடைக்கிறது. சீன அரசாங்கம் இத்திட்டத்தை வரலாற்று சிறப்புமிக்க பொறியியல், சமூக, பொருளாதார வெற்றியாக கருதுகிறது. எனினும் அணையினால் பல தொல்பொருள் மற்றும் பண்பாட்டு இடங்கள் நீரில் மூழ்கிவிட்டன. 1.3 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்தனர். மேலும் இதனால் நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாகின. மேலும்..


RajaofPanagal.jpg

பனகல் அரசர் (18661928) நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரும், சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் ஆவார். வேளமா சமூகத்தைச் சேர்ந்த நிலச்சுவாந்தார்கள் குடும்பத்தில் பிறந்தவர். சட்டப் படிப்பை முடித்து முதுகலைப் பட்டம் பெற்றவர். 1912 இல் இந்தியாவின் மத்திய நாடாளுமன்றத்திற்கு நில உரிமையாளர்கள் மற்றும் ஜமீன்தார்களின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1914 ஆம் ஆண்டு நடேச முதலியார் தொடங்கிய சென்னை திராவிடர் சங்கத்தில் சேர்ந்தார். 1917 இல் நீதிக்கட்சியில் சேர்ந்தார். 1919 இல் பிராமணரல்லாதோருக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வாதாட இங்கிலாந்து சென்ற நீதிக்கட்சிக் குழுவில் அங்கம் வகித்தார். 1920 ஆம் ஆண்டு இரட்டை ஆட்சி முறையின் கீழ் சென்னை மாகாணத்திற்கு நடைபெற்ற முதல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். சுப்பராயலு ரெட்டியார் தலைமையில் அமைந்த முதலாம் நீதிக்கட்சி அரசவையில் உள்ளாட்சித் துறை அமைச்சரானார். மேலும்..


செப்டம்பர் 5, 2010
FjellveienBergenCC.jpg

பேர்கன் நோர்வேயின் இரண்டாவது பெரிய நகரமாகும். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஒரு காலகட்டத்தில், நோர்வேயின் தலை நகரமாகவும் இது இருந்தது. நோர்வேயின் வடமேற்கு கரையோரத்திலுள்ள ஓர்டாலாந்து மாவட்டத்தில் பேர்கன் நகரம் அமைந்திருப்பதுடன், அம்மாவட்டத்தின் ஆட்சியக மையமும் இதுவேயாகும். பேர்கன் ஒரு முக்கியமான பண்பாட்டு மையமாக விளங்குவதுடன், 2000 ஆம் ஆண்டில் ஐரோப்பிய பண்பாட்டுத் தலைநகரங்கள் எனப் பெருமைப்படுத்தப்பட்ட ஒன்பது ஐரோப்பிய நகரங்களில் ஒன்று என்ற பெருமையையும் கொண்டுள்ளது. ஏழு மலைகளால் சூழப்பட்டு இருப்பதுடன், ஐரோப்பிய நகரங்களிலேயே அதிக மழையைப் பெறும் நகரமாக முன்னர் அறியப்பட்டிருந்ததால், “குடையுடன் கூடிய நகரம்” என்ற செல்லப் பெயரையும் கொண்டிருந்தது. முன்னொரு காலத்தில் குடைகளை பணமிட்டு பெற்றுக் கொள்ளக்கூடிய இயந்திரங்கள் நகரில் வைக்கப்பட்டிருந்ததாகவும், அவை சரியாக வெற்றியளிக்காததால் பின்னர் கைவிடப்பட்டதாகவும் அறியப்படுகிறது. மேலும்..


Thevan.jpg

ஆர். மகாதேவன் (செப்டம்பர் 8, 1913 - மே 5, 1957) பல நகைச்சுவைக் கதைகளையும் கட்டுரைகளையும் தேவன் என்ற புனைபெயரில் எழுதியவர். கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரில் பிறந்த மகாதேவன் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் கலைமாணிப் பட்டம் பெற்றார். சிறிது காலம் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியபின் ஆனந்த விகடன் வார இதழில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். 1942 முதல் 1957 வரை நிர்வாக ஆசிரியராக இருந்தார். 23 ஆண்டுக் காலம் விகடனில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றுக்கணக்கான நகைச்சுவைக் கட்டுரைகள், இருபதுக்கும் மேற்பட்ட தொடர்கள் எழுதினார். துப்பறியும் சாம்பு இவரது பிரபலமான பாத்திரப் படைப்பு. கோமதியின் காதலன் திரைப்படமாக வெளியாயிற்று. இவர் எழுதிய மிஸ் ஜானகி, மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன், கல்யாணி, மைதிலி, துப்பறியும் சாம்பு முதலிய நாவல்கள், மேடை நாடகங்களாகவும் பல இடங்களில் நடிக்கப் பட்டன. மிஸ்டர் வேதாந்தம், ஸ்ரீமான் சுதர்சனம் இரண்டு நாவல்களும் இயக்குநர் ஸ்ரீதர் தயாரித்து, சின்னத்திரையிலும் வழங்கப்பட்டன. மேலும்..


ஆகஸ்டு 29, 2010
Andersen-hc.jpg

டென்மார்க்கில் எச். சி ஆன்டர்சன் என அறியப்படும் ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் (1805 – 1875) ஒரு டேனிய மொழி எழுத்தாளரும் கவிஞரும் ஆவார். இவர் குறிப்பாகச் சிறுவர்களுக்கான கதைகளை எழுதுவதன் மூலம் புகழ் பெற்றார். இவரது வாழ்நாளில் உலகம் முழுவதிலும் உள்ள குழந்தைகளைத் தனது ஆக்கங்கள் மூலம் இவர் மகிழ்வித்தார். இவருடைய கதைகள் 150 மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்படிருப்பதுடன், இக் கதைகளைத் தழுவிப் பல திரைப்படங்களும், நாடகங்களும், நடன நிகழ்ச்சிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. பள்ளியில் படித்த காலமே மிகவும் இருண்ட காலம் எனவும், தனது வாழ்க்கையின் மிகவும் கசப்பான காலம் அது எனவும் பிற்காலத்தில் அவர் கூறினார். உடன் படித்தவர்களில் பலரையும் விட இவர் வயதில் மூத்தவராக இருந்ததனால் இவர் பெரும்பாலும் தனித்துவிடப்பட்டார். இவர் கவர்ச்சி இல்லாதவராகவும், புரிந்து கொண்டு கற்க முடியாதவராக இருந்ததாகவும் கருதப்பட்டது. மேலும்..


Tasmac logo.gif

டாஸ்மாக் எனப்படும் தமிழ் நாடு மாநில வாணிபக் கழகம் (Tamil Nadu State Marketing Corporation) தமிழ் நாட்டில் மது வகைகளை வர்த்தகம் செய்யும் அரசு நிறுவனம். இந்நிறுவனம் தமிழ் நாட்டில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் செய்ய ஏகபோக உரிமை பெற்றுள்ளது. டாஸ்மாக், 1983 ஆம் ஆண்டு எம். ஜி. ராமசந்திரனின் அதிமுக அரசாங்கத்தால், தமிழகத்தில் மதுவகைகளின் மொத்த விற்பனைக்காக தொடங்கப்பட்டது. இந்திய நிறுவனச் சட்டம் 1956 இன் படி மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழியங்கும் அமைப்பாக நிறுவப்பட்டது. தமிழ்நாட்டில் நீண்ட காலமாக மதுவிலக்கு அமலில் இருந்து வந்துள்ளது. முதன் முதலில் 1937 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் சி. ராஜகோபாலச்சாரியின் காங்கிரசு அரசாங்கத்தினால் மதுவிலக்கு அமல் படுத்தப்பட்டது. 2001 இல் மதுவிலக்கு விலக்கப்பட்ட போது, மாநில அரசு டாஸ்மாக் நிறுவனத்தை மீண்டும் மொத்த விற்பனை நிறுவனமாக பயன்படுத்தியது. தமிழ் நாடு அரசே இதன் நூறு சதவிகித உரிமையாளர் இந்நிறுவனம் அரசின் மதுவிலக்கு மற்றும் சுங்கவரித்துறையின் கட்டுப்பாட்டில் வருகிறது. மேலும்..


ஆகஸ்டு 22, 2010

சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர் (1854 - 1922), ஈழத்துப் புலவர் ஆவார். காலனித்துவ ஆட்சிக்காலத்தில் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்தவர்களில் இவரும் ஒருவராவர். புலவர் சிறுவயதிலிருந்தே தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை கற்று தேர்ந்தார். 1878 ம் ஆண்டில் ஏழாலை சைவபிரகாச தமிழ் வித்தியாசாலையில் ஆசிரியராக பணியாற்றினார். இரு ஆண்டுகளின் பின் அக் கல்லூரியின் தலைமை ஆசிரியரானார். வடமொழியிலிருந்து சில நூல்களை மொழிபெயர்த்தார். சாணக்கிய நீதி வெண்பா, மேக தூதக் காரிகை, இராமோதந்தம் என்பவை அவை. சிசுபாலவதம் உரைநடை மொழிபெயர்ப்பு ஆகும். சில இலக்கிய நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். தமிழ்ப்புலவர் சரித்திரம் என்பது அவர் தந்த ஒரு வரலாற்று நூல். வேறாக இலக்கியசொல் அகராதி, நீதிநெறி விளக்கம் போன்றவையும், சில செய்யுள் நூல்களும் உரைநடை நூல்களும் இயற்றினார். மேலும்..


Krishna and Arjun on the chariot, Mahabharata, 18th-19th century, India.jpg

மகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது இராமாயணம். வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது. அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் மனிதனுடைய நால்வகை நோக்கங்களையும், சமூகத்துடனும், உலகத்துடனும் தனிப்பட்டவருக்கு உரிய உறவுகளையும், பழவினைகள் பற்றியும் இது விளக்க முற்படுகின்றது. இது 74,000க்கு மேற்பட்ட பாடல் அடிகளையும், நீளமான உரைநடைப் பத்திகளையும் கொண்டு விளங்கும் இந்த ஆக்கத்தில் 18 இலட்சம் சொற்கள் காணப்படுகின்றன. இதனால் இது உலகின் மிக நீண்ட இதிகாசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நவீன இந்து சமயத்தின் முக்கிய நூல்களிலொன்றான பகவத் கீதையும் இந்த இதிகாசத்தின் ஒரு பகுதியே. பாண்டு, திருதராஷ்டிரன் என்னும் இரு சகோதரர்களின் பிள்ளைகளிடையே இடம் பெற்ற பெரிய போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதே இந்தக் காப்பியமாகும். இதனைத் தமிழில் இலக்கியமாகப் படைத்தவர் வில்லிபுத்தூரார் ஆவார். பாரதியார் மகாபாரதத்தின் ஒரு பகுதியை பாஞ்சாலி சபதம் எனும் பெயரில் இயற்றினார். வியாசர் விருந்து என்ற பெயரில் இராஜகோபாலாச்சாரி அவர்கள் மகாபாரதத்தினை உரைநடையாக இயற்றியுள்ளார். மேலும்..


ஆகஸ்டு 15, 2010

ச. வையாபுரிப்பிள்ளை (அக்டோபர் 12, 1891 - பெப்ரவரி 17, 1956) இருபதாம் நூற்றாண்டின் முதன்மை தமிழ் ஆராய்ச்சியாளர்களில் ஒருவர். தமிழ் நூற்பதிப்புத் துறையில் சிறந்த பதிப்பாசிரியராக விளங்கியவர். வழக்கறிஞரான இவர் தமிழில் சிறந்த புலமை உள்ளவர்; ஆய்வுக் கட்டுரையாளர், திறனாய்வாளர், கால மொழி ஆராய்ச்சியாளர், மொழி பெயர்ப்பாளர், சொற்பொழிவாளர் கதை கவிதைகள் புனையும் திறம் படைத்தவர் என பல்முக பரிமாணங்களைக் கொண்டவர். சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட பேரகராதியின் ஆக்கக் குழுத் தலைவராக செயற்பட்டவர். நாற்பதுக்கும் அதிகமான நூல்களையும் நூற்றுக்கணக்கான ஆய்வுகளையும் கட்டுரைகளையும் எழுதிக் குவித்தார். உ.வே.சாமிநாதய்யருக்குப் பிறகு பழந்தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து, ஆய்வு செய்து வெளியிட்ட பெருமை எஸ். வையாபுரிப் பிள்ளையைத் தான் சாரும். ஓலைச் சுவடிகளைப் பதிப்பித்ததுடன் நிற்காமல் அந்த இலக்கியங்களுக்குக் கால நிர்ணயம் செய்ததிலும் வையாபுரிப் பிள்ளைக்குப் பெரும் பங்கு உண்டு. மேலும்..


Nallur Kandasamy front entrance.jpg

நல்லூர் கந்தசுவாமி கோயில் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற இந்துக் கோயில்களுள் முக்கியமானது. இது இலங்கையின் வடபகுதியில், யாழ்ப்பாண நகரத்திலிருந்து இரண்டு மைல் தொலைவிலுள்ள நல்லூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. நல்லூர் 12ம் நூற்றாண்டு தொடக்கம் 17ம் நூற்றாண்டின் முற்பகுதிவரை இருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாக இருந்தது. இக்கோயிலின் தோற்றம் பற்றிச் சரியான தெளிவு இல்லையெனினும், யாழ்ப்பாண அரசு காலத்தில் மிகவும் முக்கியமான ஒரு கோயிலாக இருந்தது என்பதில் ஐயமில்லை. யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது அரசனான கூழங்கைச் சக்கரவர்த்தியின் அமைச்சனொருவனான புவனேகவாகு என்பவனால் இக் கோயில் கட்டுவிக்கப்பட்டதென யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போத்துக்கீசத் தளபதியான பிலிப்பே டி ஒலிவேரா, 1620ல் அரசின் தலை நகரத்தை யாழ்ப்பாணத்துக்கு மாற்றியபோது நல்லூர்க் கோயிலை இடித்துத் தரைமட்டமாக்கும்படி உத்தரவிட்டான். இதிலிருந்து பெறப்பட்ட கற்கள் யாழ்ப்பாணத்தில் புதிய கோட்டை கட்டுவதில் பயன்பட்டதாகத் தெரிகின்றது.மேலும்..


ஆகஸ்டு 8, 2010
EDungan.jpg

எல்லிஸ் ஆர். டங்கன் (1909 -2001) பல தமிழ்த் திரைப்படங்களை இயக்கிய ஒரு அமெரிக்கர். 1935 லிருந்து 1950 வரை பதின்மூன்று தமிழ்த் திரைப்படங்களை இயக்கிய இவர், எம். ஜி. ராமச்சந்திரன், டி. எஸ். பாலையா, என். எஸ். கிருஷ்ணன் ஆகிய நடிகர்களை அறிமுகப்படுத்தினார். டங்கன் ஒகையோ மாநிலத்தில் பிறந்தார். பள்ளிக் கல்வி முடிந்தவுடன், தெற்கு கலிபோர்னியா பல்கலைகழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டிருந்த திரைப்படத்துறையில் சேர்ந்தார். கல்லூரியில் டங்கனுடன் படித்த மாணிக்லால் டாண்டன் என்ற இந்திய மாணவர் மூலம் இந்தியத் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார் டங்கன். சதி லீலாவதி (1936) படத்தின் இயக்குனரானார். படம் நன்றாக ஓடியதைத் தொடர்ந்து, டங்கனுக்கு பல திரைப்பட வாய்ப்புகள் வந்தன. அவர் இயக்கிய சீமந்தினி (1936), அம்பிகாபதி (1937), சகுந்தலை (1940) ஆகியவை வெற்றிபெற்றன. மேலும்..


Easter Island map-en.svg

ஈஸ்டர் தீவு என்பது பசிபிக் பெருங்கடலின் தென்கிழக்கே அமைந்துள்ள பொலினீசியத் தீவாகும். இது சிலியின் ஆளுகைக்கு உட்பட்ட சிறப்பு மண்டலம் ஆகும். ஈஸ்டர் தீவு உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட குடியேற்றத் தீவுகளில் ஒன்றாகும். இது சிலியில் இருந்து 3,600 கிமீ மேற்கே அமைந்துள்ளது. ராப்பானூயி மக்களினால் அமைக்கப்பட்ட மோவாய் (moai) என அழைக்கப்படும் பல நினைவுச் சின்னங்கள் இத்தீவின் சிறப்பாகும். இது உலகப் பாரம்பரியக் களமாகும். மனித முகம் போல் தோற்றமுடைய பிரமாண்டமான நூற்றுக்கணக்கான கற்சிலைகள் தீவெங்கும் காணப்படுகின்றன, உயரம் சராசரியாக 10 மீட்டர், எடை 80 தொன். ஒரு மர்மமான கற்கால நாகரீகத்தின் நினைவாக எஞ்சியிருப்பது மோவய்கள் தவிர ஒன்றுமில்லை. முன்னூறுக்கும் மேற்ப்பட்ட மொவய்கள் பல்வேறு நிலைகளில் இன்றும் காணப்படுகின்றன. மூதாதையர்களின் வாழும் முகங்கள் இதைத்தான் மொவய்கள் குறிக்கின்றது. இந்த மோவய்களுடன் காணப்படுவது மனிதனும் பறவையும் சேர்ந்த ஒரு உருவம் (பறவை மனிதன்). மேலும்..


ஜூலை 25, 2010

மு. சி. பூரணலிங்கம் பிள்ளை (மே 25, 1866 - சூன் 6, 1947) தமிழறிஞர். தமிழ் மொழியின் தொன்மையையும், உயர்வையும் பிற மொழியினரும் அறியும் வண்ணம் செய்தவர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள "முந்நீர்ப்பள்ளம்" என்னும் ஊரில் பிறந்தார். ஆங்கிலப் பேராசிரியராக இருந்த பூரணலிங்கம் பிள்ளை, தமிழ்ப் பற்றும், தமிழ் இன உணர்வும் கொண்டு வாழ்ந்ததுடன் தமிழுக்குப் பெரும் பணியும் ஆற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் 18 நூல்களையும், ஆங்கிலத்தில் 32 நூல்களையும் மற்றும், சட்ட நூல்களையும் எழுதியுள்ளார். இவரது படைப்புகளில், சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், குழந்தை இலக்கியம், ஆய்வுக் கட்டுரைகள், மொழிபெயர்ப்பு, மற்றும் சொற்பொழிவு எனப் பல வீச்சுகளைக் காண முடிகிறது. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்து திறனாய்வு நூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். பூர்ணலிங்கம் பிள்ளையின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.



கடமா (Bos gaurus) என்பது இந்தியக் காடுகளில் காணப்படும் இரட்டைப்படைக் குளம்பிகள் குடும்பத்தை சேர்ந்த இனமாகும். உலகில் காணப்படும் ஆக்குடும்ப இனங்களிலேயே மிகப்பெரிய உடலளவைக் கொண்டது கடமா ஆகும். கடமா, காட்டுப்பசு, காட்டா, மரை, கட்டேணி, காட்டுபோத்து என்று பல பெயர்களில் அறியப்பட்டுள்ளது. தென்கிழக்காசியா|தென்கிழக்கு ஆசியப்]] பகுதியில் கடமாவில் நான்கு உள்சிற்றினங்கள் (sub-species) இருப்பதாக அறியப்பட்டுள்ளது. கடமாவின் மூதாதைய இனம் ஆசியக் கண்டத்தில் சுமார் 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக அறியப்பட்டுள்ளது. சங்க இலக்கியத்தில் கடமா கடமா தொலைச்சிய கானுறை வேங் கை (நாலடி, 300), மரையின் ஆண். மரையான் கதழ்விடை (மலைபடு. 331) என்றவாறு குறிக்கப்பட்டுள்ளது. இவை வெப்பமண்டல காடுகளில் வாழ்பவையாகும்.


ஜூலை 11, 2010
Smilodon populator rec.jpg

கொடுவாள் புலி (saber-toothed tiger) என்பது அழிந்து போன ஒரு வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய விலங்கு ஆகும். இதன் பேரினப் பெயர் சிமிலிடான் என்பதாகும். மேல்த்தாடையின் கோரைப் பற்கள் இரண்டும் கொடுவாள் போல நீண்டு இருப்பதால் இது இப் பெயர் பெற்றது. இது புலி என்று அழைக்கப்பட்டாலும் "கொடுவாள் பூனை" எனும் பெயரே சரி. ஏனெனில் புலிகள் பாந்தரினே கிளைக்குடும்பத்தைச் சேர்ந்தவை. சிமிலோடான்களோ மாக்கைரோடான்டினோ கிளைக் குடும்பத்தைச் சேர்ந்தவை. டென்மார்க் இயற்கையியலாளர் பீட்டர் வில்லெம் லுண்ட் 1841 இல் பிரேசிலில் உள்ள சிறு நகரின் குகையில் சி.பாப்புலேட்டரின் தொல்படிமத்தை முதன் முதலாய்க் கண்டறிந்த போது தான் அதிசயிக்கத்தக்க இந்த உண்மை உறுதியானது. கி.மு. பத்தாயிரமாம் ஆண்டு வாக்கில் இவை அழிந்ததாய் அறியப்படுகிறது. பனி ஊழி முடிவினால் ஏற்பட்ட மாற்றங்கள் இவ்விலங்கின் அழிவைத் தூண்டியிருக்கலாம் என பொதுவாக நம்பப்படுகிறது.


கல்வெட்டறிஞர் கா. ம. வேங்கடராமையா (ஏப்ரல் 4, 1912 - சனவரி 31, 1995) தமிழறிஞர். கல்வெட்டாராய்ச்சிப் புலவர், செந்தமிழ் கலாநிதி, தமிழ் மாமணி என பல பட்டங்களைப் பெற்றுள்ளார். சென்னையில், காரம்பாக்கம் என்ற சிற்றூரில் பிறந்தவர். இவருடைய தாய்மொழி தெலுங்கு. 1981 இல் தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டபோது அரிய கையெழுத்து சுவடித்துறை முதல் தலைவராக பொறுப்பேற்று 5 ஆண்டுகள் பணியாற்றினார். அதன்பின் திருவனந்தபுரத்தில் உள்ள பன்னாட்டுத் திராவிட மொழியியல் கழகத்தில் பணி புரிந்தார். "தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்" என்ற நூலில், தஞ்சாவூர் மராட்டியர் ஆட்சிக்குட்பட்ட சமுதாயத்துக்கு மராட்டிய மன்னர்கள் செய்த நன்மைகள், கலைச் சிறப்புகள், அக்காலத்திய பழக்க வழக்கங்கள், அரசியல் நிலைமைகள் போன்ற பலவற்றை மோடி ஆவணங்கள், கல்வெட்டுச் சான்றுகள், இலக்கியச் சான்றுகள் போன்றவற்றின் துணையுடன் ஆராய்ந்து எழுதியுள்ளார்.


ஜூன் 14, 2010

எழுத்துத் தமிழ், உலகில் தமிழ் வழங்கும் எல்லாப் பகுதிகளிலும் ஏறத்தாழ ஒன்றுபோலவே வேறுபாடுகள் அதிகம் இன்றி இருந்தாலும், பேச்சுத் தமிழ், இடத்துக்கிடம் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளுடன் அமைந்திருப்பதை அவதானிக்க முடியும். இத்தகைய வேறுபாட்டுடன் கூடிய மொழி வழக்குகள் வட்டார வழக்குகள் எனப்படுகின்றன. இலங்கையின் வடபகுதியில் பெரும்பான்மையாகத் தமிழர் வாழும் பகுதியான யாழ்ப்பாணப் பகுதியில் பேசப்படும் தமிழே இக் கட்டுரையில் யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ் எனக் குறிப்பிடப்படுகின்றது. யாழ்ப்பாணத்துப் பேச்சுத்தமிழில் புழங்கும் சொற்கள் பல தமிழகத்துச் சொற் பயன்பாடுகளிலிருந்து வேறுபட்டவையாக உள்ளன. பல அன்றாடப் பயன்பாட்டுச் சொற்களும் இவற்றுள் அடக்கம். ஒரு சமுதாயத்தின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டையும் பிரதி பலிப்பதாகக் கூறப்படும் உறவுமுறைச் சொற்கள் யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் எப்படி அமைகின்றன என்பதைப் பார்க்கலாம்.


Zakumi.jpg

உலகக்கோப்பைக் கால்பந்து 2010 அல்லது 2010 ஃபீஃபா (FIFA) உலகக்கிண்ணக் கால்பந்து போட்டித்தொடரின் இறுதிப்போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் 2010 ஜூன் 11 முதல் ஜூலை 11 வரை நடைபெறுகின்றன. தகுதிச் சுற்றில் போட்டியிட்ட 204 அணிகளிலிருந்து 32 அணிகள் இறுதிப் போட்டிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. இம்முறை முதற் தடவையாக ஆப்பிரிக்க நாடொன்றில் இறுதிச் சுற்று நடைபெறுகின்றது. ஜெர்மனியில் நடைபெற்ற 2006 உலகக்கோப்பை கால்பந்து இறுதிச் சுற்றில் இத்தாலி வெற்றி பெற்றது.

உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியை நடத்துவதனால் தென் ஆப்பிரிக்கா நேரடியாக விளையாடும் தகுதியைப் பெற்றது. முதல்நாள் விழா 2010 ஜூன் 11 ஜோகானஸ்பேர்க்கில் ஆரம்பமாகியது. புகழ்பெற்ற கலைஞர்கள் உட்பட 1500 பேர் இவ்விழாவில் பங்காளர்களாகப் பங்குபற்றிச் சிறப்பித்தனர். பார்வையாளர்களாக தென்னாப்பிரிக்க அரசுத்தலைவர் ஜேக்கப் சூமா, ஐநா செயலர் பான் கி மூன் உட்படப் பல தலைவர்கள் பார்வையாளர்களாகப் பங்கேற்றனர்.


மே 24, 2010

வைணு பாப்பு வானாய்வகம் என்பது இந்திய வானியற்பியல் நிலையத்தின் முதன்மை வானாய்வகமாகும். தமிழ்நாட்டின் வாணியம்பாடி அருகேயுள்ள காவலூரில் அமைந்துள்ளது இவ்வானாய்வகம். இங்குள்ள வைணு பாப்பு தொலைநோக்கி என்று பெயரிடப்பட்டுள்ள 2.34 மீட்டர் விட்டமுடைய தொலைநோக்கி ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும்; இது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட எதிரொளிப்பான் வகையைச் சார்ந்த தொலைநோக்கி ஆகும். இம்மையத்தின் சாதனைகளாக 1972-இல் வியாழன் கோளின் நிலவான கானிமீடின் வளிமண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது, 1977-இல் யுரேனசு கோளைச் சுற்றி வளையம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது, 1988-இல் சிறிய கோள் ஒன்று ராஜமோகன் என்ற ஆய்வாளரால் கண்டுபிடிக்கப்பட்டது (அதற்கு கணித மேதை ராமானுசனின் நினைவாக 4130 ராமானுசன் என்று பெயரிடப்பட்டுள்ளது) ஆகியவற்றைக் கூறலாம்.


Lasius Niger winged queen.jpg

எறும்பு குழுவாக வாழும் ஒரு பூச்சியினமாகும். இவை மிகவும் வியக்கவைக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட சமூக வாழ்வைக் கொண்டிருப்பனவாகும். ஒர் எறும்புக் குழு அல்லது சமூகத்தில் உள்ள எறும்புகளின் எண்ணிக்கை மிகவும் வேறுபடக் கூடியது. ஒவ்வொரு குழுவிலும் பொதுவாக ஒன்று அல்லது ஒரு சில இனப்பெருக்கும் திறன் கொண்ட ‘அரசி' என அழைக்கப்படும் பெண் தனியன்களும், சில இனப்பெருக்கும் திறன் கொண்ட ‘சுரும்புகள்' என அழைக்கப்படும் ஆண் தனியன்களும், இனப்பெருக்கும் திறனற்ற பெரும் எண்ணிக்கையிலான 'வேலையாட்கள்' , ‘போராளிகள்' ஆகத் தொழிற்படும் பெண் தனியன்களும் காணப்படும். இனப்பெருக்கத்திற்காக அரசி எறும்பானது, ஆண் எறும்புகளுடன் புணர்ச்சியை நிகழ்த்த மேலே பறக்கும். புணர்ச்சிக்குப் பின்னர் அவை சிறகுகளை இழந்து, கீழே இறங்கி புதிய ஒரு குழுவை அல்லது சமூகத்தை உருவாக்கத் தயாராகிவிடும். இது போன்ற இனப்பெருக்க பறப்பு தேனீக்களிலும் நடைபெறும். எறும்பின் முதல் நிலையாக முட்டையே கருதப்படும். எல்லாப் பூச்சிகளையும்போல், முட்டைகள் தொடர்ந்த உருமாற்றத்தில், முதலில் குடம்பியாகி, பின்னர் கூட்டுப்புழுவாகி, பின்னர் முழுவளர்ச்சியடைந்த எறும்பாக மாறும். குடம்பி நிலையில் அவை அசைவற்று இருக்குமாதலால், வேலையாட்கள் அவற்றிற்கு உணவூட்டி கவனித்துக் கொள்ளும்.


மே 17, 2010
Chandrayaan-1.svg

சந்திரயான்-1 என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் 2008, அக்டோபர் 22 இல் விண்வெளிக்குச் செலுத்தப்பட்ட ஆளில்லாத நிலவுப் பயணம் ஆகும். இதன் முக்கிய நோக்கம் நிலவுப்பரப்பில் பல்வேறு தாதுக்கள் மற்றும் வேதிமூலகங்களின் பரவலை ஆய்வு செய்வதும், முழு நிலவுப் பரப்பையும் அதிக துல்லியத்துடன் முப்பரிமாண வரைபடமாக்கலும் ஆகும். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் துருவ செயற்கைக்கோள் ஏவுவாகனமான பி.எஸ்.எல்.வி. சந்திராயன் I கலத்தை 240 கி.மீ x 24000 கி.மீ புவிச் சுற்றுப்பாதையில் செலுத்தியது. பின்னர், விண்கலமானது தன்னகத்துள்ள முன்னுந்து அமைப்பின் துணைகொண்டு நிலவைச்சுற்றிய 100 கி.மீ துருவச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. சந்திராயன் I விண்கலமானது சுற்றிவரக்கூடிய அமைப்பையும் நிலவில் இறங்கக்கூடிய அமைப்பையும் ஒருங்கே கொண்டிருந்தது. இப்பணித்திட்டத்தின் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை. இந்தியாவின் ஆய்வுக் கருவிகள் போக பன்னாட்டு விண்வெளி நிறுவனங்களான நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் பல்கேரியாவின் ஆய்வுக் கருவிகளும் இத்திட்டத்தில் அடங்கும்.


Mantrimanai.jpg

கி.பி. 13ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 1620ல் போர்த்துக்கீசரின் ஆட்சியின்கீழ் கொண்டுவரப்படும் வரை யாழ்ப்பாண அரசு நிலவிவந்ததற்கான தெளிவான ஆதாரங்கள் உண்டெனினும், அதன் தோற்றம் பற்றிய வாத எதிர்வாதங்கள் தொடர்ந்தும் நிலவியே வருகின்றன.யாழ்ப்பாண வரலாற்று மூல நூல்களில் ஒன்றான வையாபாடல் இவ்வரசின் ஆரம்பத்தைக் கி.மு. 101 என்று கூறுகிறது. இன்னொரு நூலான வைபவமாலை இவ்வரசு கிறித்து பிறந்தபின்னர் தொடங்கியதாகச் சொல்கிறது. எனினும் பல ஆய்வாளர்கள் யாழ்ப்பாண அரசு கி.பி. 13ஆம், 14ஆம் நூற்றாண்டை அண்டிய காலப் பகுதிகளிலேயே தொடங்கியிருக்கக் கூடும் எனக் கருதுகிறார்கள். 11ஆம் நூற்றாண்டில் இராஜேந்திர சோழனின் இலங்கைப் படையெடுப்பு, 13ஆம் நூற்றாண்டில் கலிங்க மாகனின் படையெடுப்பு என்பன யாழ்ப்பாண அரசு உருவாவதற்கான களம் அமைத்துக் கொடுத்தன என்பது அவர்களது கருத்து.யாழ்ப்பாண அரசின் தலைநகரமாக இருந்தவையென சிங்கைநகர், நல்லூர் என இரண்டு பெயர்கள் கூறப்படுகின்றன. தற்போதைய யாழ்ப்பாண நகருக்கு அருகேயுள்ள நல்லூர், அரசின் இறுதிக்காலத்தில் தலைநகராயிருந்ததென்பதில் ஐயமெதுவும் இல்லை. சிங்கைநகரென்பது யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குக் கரையிலுள்ள வல்லிபுரப்பகுதியில் அமைந்திருந்ததென்றும், இவ்வரசின் ஆரம்பகாலத் தலைநகரம் இதுவேயென்றும் சிலர் கூற, சிங்கைநகரென்பதும் நல்லூரையே குறிக்குமென்றும், யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரம் நல்லூர் மட்டுமேயென்றும் வேறு சிலர் கொள்வர்.


மே 10, 2010
Zebras, Serengeti savana plains, Tanzania.jpg

செரெங்கெட்டி தேசியப் பூங்கா, தான்சானியாவின் செரெங்கெட்டிப் பகுதியில் உள்ள பெரிய தேசியப் பூங்கா ஆகும். இது இங்கு ஆண்டுதோறும் நிகழும் விலங்குகளின் இடப்பெயர்வு தொடர்பில் புகழ் பெற்றது. இந் நிகழ்வின் போது ஒன்றரை மில்லியன் வெண்தாடிக் காட்டுமாடுகளும் (wildebeest), 200,000 வரிக்குதிரைகளும் இடம் பெயர்கின்றன.செரெங்கெட்டி தான்சானியாவின் மிகப் பழைய தேசியப் பூங்காவாகும். இன்றும் இது நாட்டின் சுற்றுலாத்துறையின் முக்கிய அம்சமாக உள்ளது.இப்பூங்கா 14,763 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கியுள்ளது. இதற்குள் புல்வெளிகள், ஐதான மரங்களைக் கொண்ட புற்றரைகள், ஆறுசார்ந்த காடுகள் என்பன அடங்கியுள்ளன. இப்பூங்கா நாட்டின் வட பகுதியில் தான்சானிய - கெனிய எல்லையில் அமைந்துள்ளது. இப் பகுதியில் இது மசாய் மாரா தேசிய ஒதுக்ககத்துடன் தொடர்ச்சியாக உள்ளது. இதன் தென்கிழக்குப் பகுதியில் இங்கோரொங்கோரோ பாதுகாப்புப் பகுதியும், தென்மேற்கில் மாசுவா வேட்டைவிலங்கு ஒதுக்ககமும், மேற்கு எல்லையில் இக்கோரோங்கோ மற்றும் குருமெட்டி வேட்டைவிலங்கு ஒதுக்ககமும் உள்ளன. வடகிழக்கில் லொலியோண்டோ வேட்டைவிலங்குக் கட்டுப்பாட்டுப் பகுதி அமைந்துள்ளது.


Two Peak Flow Meters.jpg

மூச்சுத்தடை நோய் அல்லது ஈழை நோய் (ஆஸ்த்துமா) என்பது நுரையீரலில் ஏற்படும் நீடித்த/நாட்பட்ட அழற்சியினால், மீண்டும் மீண்டும் வரக்கூடிய மூச்சு எடுத்தலில் சிரமத்தைக் கொடுக்கும் மூச்சுத்திணறல்/மூச்சிரைப்பு நிலை ஆகும். இதற்கு முக்கிய காரணம் சுவாசக் குழாய்களின் உட்படலத்தில் ஏற்படும் வீக்கத்தால், காற்று உட்சென்று வெளியேறும் பாதையில் ஒடுக்கமேற்பட்டு, காற்றின் ஓட்டத்தில் ஏற்படும் வீழ்ச்சியாகும். சுவாசக் குழாய்களைச் சுற்றியிருக்கும் தசைகளில் ஏற்படும் மீளும் தன்மை கொண்ட சுருக்கம், இறுக்கம் போன்றவையும், நுரையீரலில் ஏற்படும் அழற்சியினால் ஏற்படும் புண்பட்ட நிலை, வீக்கம் என்பனவும் அசெளகரியமான நிலையை ஏற்படுத்தும். இதன் தீவிரத்தன்மையும் , நிகழ்வுகளுக்கிடையிலான இடைவெளியும் மனிதனுக்கு மனிதன் வேறுபடும். இந்த நோய் எல்லா வயதினரிலும் காணப்படுவதாயினும், பொதுவாக குழந்தைகளிலேயே ஆரம்பிக்கும். இந்த நோயின் முக்கியமான அறிகுறிகளாக இழுப்பு, இருமல், நெஞ்சு இறுக்கம், விரைவான, குறுகிய மூச்சு என்பன அமைகின்றன. இந்த ஈழை நோயானது தொய்வு, இழுப்பு, முட்டு, சுவாச முட்டு, மூச்சுத் தடை நோய், மூச்சுப் பிடிப்பு நோய் என பல்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகிறது.


ஏப்ரல் 26, 2010
Sri Kamadchi Ampal temple 6039530.jpg

யேர்மன் தமிழர்கள் தமிழ் பின்புலம் உடைய ஜெர்மனி வாழ் மக்களாவர். யேர்மனிக்கும் தமிழ் நாட்டுக்கும் 300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொடர்பு உண்டு. இத்தொடர்பை ஜெர்மன் தமிழியல் மூலமாக மேலும் விளங்கிகொள்ளலாம். ஏறக்குறைய 60,000 தமிழர்கள் யேர்மனியில் வசிக்கின்றார்கள். பெரும்பாலனவர்கள் 1983 க்கு பின்பு இலங்கை இனப்பிரச்சினை காரணமாக அகதிகளாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் ஆவார்கள்.யேர்மன் வாழ் தமிழர்கள் ஒரு இடத்தில் என்றில்லாது யேர்மனி முழுவதிலும் பரந்து வாழ்கிறார்கள். இங்கு உருவாக்கப்படுள்ள 24 இந்துக்கோயில்களில் ஹம் காமாட்சி அம்மன் ஆலயம்(படம்) குறிப்பிடத்தக்க ஒரு பெரிய கோயிலாகும். தமிழ்மொழியைக் கற்பிப்பதிலும், தமிழ்மொழியைக் கற்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டு யேர்மனி, யூச்சன் நகரில் முதன்முதலில் தமிழ்ப்பாடசாலை, தமிழாலயம் என்ற பெயரில் தொடங்கப் பெற்றது.10 ஆண்டுகளில் யேர்மனியில் 103 தமிழாலயங்கள் உருவெடுத்திருந்தன. 15 வருடங்களில் 130 தமிழாலயங்கள் 6000 மாணவர்களுடன் வளர்ந்து நின்றது.


Photoelectric effect in a solid - diagram.svg

ஒளிமின் விளைவு (photoelectric effect) என்பது மாழை (உலோகம்) போன்ற ஒரு பொருள் மீது குறிப்பிட்ட அலைநீளங்கள் கொண்ட ஒளி அல்லது மின்காந்த அலைகள் விழுதால், அப்பொருளில் இருந்து எதிர்மின்னிகள் வெளியேறும் என்னும் விளைவாகும். இவ் விளைவைக் கண்டுபிடித்தவர் ஐன்றிக் ஏர்ட்ஃசு (Heinrich Hertz) என்பவர். நியூட்டனிய இயற்பியல் கொள்கைகளின்படி இவ்விளைவை விளக்க இயலாதநிலையில் இவ்விளைவை ஆல்பர்ட் ஐன்சுட்டைன் குவாண்டம் இயல்பியல் கொள்கைகளின் படி விளக்கியதற்காக அவருக்கு 1921 ஆம் ஆண்டு இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. வெளியேறும் எதிர்மின்னிகளை (இலத்திரன்களை) ஒளியுந்து இலத்திரன்கள் (photoelectrons) என அழைக்கப்பட்டன. அத்துடன் ஒளிவிலகல், ஒளிச்சிதறல், விளிம்பு விளைவு (Diffraction) போன்றவற்றை விளக்கும் அலை-துகள் இருமை ஆகியவையும் விளக்க இவ்விளைவின் அறிவு உதவியது.


ஏப்ரல் 19, 2010
Average prokaryote cell- en.svg

உயிரணுக்கொள்கை அல்லது கலக்கொள்கை (Cell theory) அனைத்து வகையான உயிரினங்களினதும் அடிப்படையான கட்டமைப்பு மற்றும் தொழிற்பாட்டு அமைப்பு உயிரணு அல்லது கலம் எனும் கருத்தை கூறுகின்றது. இக்கொள்கையின் மேம்பாடு 1600 களின் நடுப்பகுதியில் நுண் நோக்கியலில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக சாத்தியமானது. இக்கொள்கை உயிரியலின் அடிப்படைகளில் ஒன்றாகும். இக்கொள்கையானது புதிய உயிரணுக்கள் முன்பிருந்த உயிரணுக்களிலிருந்தே தோன்றுகின்றன என்றும் அனைத்து உயிரினங்களினதும் கட்டமைப்பு, தொழிற்பாடு, மற்றும் ஒழுங்கமைப்பு ரீதியிலான அடிப்படை அலகு உயிரணு என்றும் கூறுகின்றது.உயிரணுக்கொள்கை உள்ளடுக்குவது: (1)அனைத்து உயிர் வாழ் பொருட்களும் அல்லது உயிரினங்களும் உயிரணுக்களால் ஆக்கப்பட்டவை.(2)புதிய உயிரணுக்கள், பழைய உயிரணுக்கள் இரண்டாக பிரிவதன் மூலம் தோன்றுகின்றன.(3)உயிரின் அடிப்படை கட்டுமான அலகுகள் உயிரணுக்கள் ஆகும்.உயிரணுக்கள் பரம்பரை தகவலை (டி.என்.ஏ) கொண்டிருக்கிறது. இது உயிரணுக்களின் பிரிவின் போது, தாய் உயிரணுவிலிருந்து பிரிந்து வரும் மகள் உயிரணுக்களிற்கு கடத்தப்படுகிறது.


Reporters Without Borders 2008 Press Freedom Rankings Map.svg

எவ்வித தணிக்கையும், தடையும் இன்றி கருத்தை ஆக்க, அறிய, வெளிப்படுத்த, கற்பிக்க ஒருவருக்கு இருக்கும் சுதந்திரமே கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகும். இது அடிப்படை மனித உரிமைகளில் ஒன்று. கருத்து வெளிப்பாடு என்பது பேச்சுச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம், சமயச் சுதந்திரம் போன்ற பல்வேறு சுதந்திரங்களுடன் இணையாக முன்னிறுத்தப்படுகிறது. பேச்சு, எழுத்து, இசை, நாடகம், ஓவியம், நிகழ்த்தல், பல்லூடகம், அலங்காரம், நம்பிக்கைகள், இணையம் என பல்வேறு வடிவங்களிலும் கட்டுப்பாடுகளின்றி கருத்துக்களை ஆக்க, அறிய, வெளிப்படுத்த, பகிர ஆகியவற்றுக்கான சுதந்திரம் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகும்.கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மக்களாட்சிக்கு, அரசில், முடிவெடுத்தலில் மக்களின் பங்களிப்புக்கு மிகவும் அவசியமானது. அரசை, சமயத்தை, படைத்துறையை, சமூகக் கட்டமைப்புகள் என பலவற்றை விமர்சிப்பதற்கு கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் அவசியம் ஆகும். இந்த விமர்சனங்களால்தான் திருத்தங்கள், மாற்றங்கள் சாத்தியப்படுகின்றது.


ஏப்ரல் 5, 2010
Osmosis computer simulation.jpg

சவ்வூடு பரவல் அல்லது பிரசாரணம் (Osmosis) எனப்படுவது நீரழுத்தம் கூடிய கரைசல் (கரையத்தின் செறிவு குறைந்த கரைசல்) ஒன்றிலிருந்து, நீரழுத்தம் குறைந்த கரைசல் (கரையத்தின் செறிவு கூடிய கரைசல்) ஒன்றிற்கு தேர்ந்து உட்புகவிடும் மென்சவ்வு (semi-permeable membrane) ஒன்றின் ஊடாக நீர் மூலக்கூறுகள் பரவல் ஆகும். இது கரையம் அல்லது கரைபொருளை (solute) உட்செல்ல விடாது, கரைப்பானை (solvent) மட்டுமே தேர்ந்து உட்செல்ல விடும் மென்சவ்வினூடாக, கரைப்பானானது, சக்திப் பிரயோகமின்றி பரவும் (passive diffusion) ஒரு இயற்பியல் தொழிற்பாடாகும். இந்த சவ்வூடு பரவலின்போது வெளியேறும் சக்தியானது வேறு தொழிற்பாடுகளில் பயன்படுத்தப் படலாம்.சவ்வூடு பரவல் மூலம் இருவேறு செறிவுடைய கரைசல்களின் (solution) இடையே கரைப்பான் மூலக்கூறுகள் பரவுவதால், இரு கரைசல்களின் செறிவும் சமநிலைக்கு கொண்டு வரப்படும். இயல்பாக நிகழக் கூடிய இவ்வகை கரைப்பானின் பரவலைத் தடுக்க கொடுக்க வேண்டிய அமுக்கமே சவ்வூடு பரவல் அமுக்கம் எனப்படும்.உயிரினங்களில் இருக்கும் இவ்வகை சவ்வுகள் மாப்பொருள் (polysaccharides) போன்ற பெரிய மூலக் கூறுகளை ஊடுசெல்ல விடாதவையாகவும், நீர், மேலும் ஏற்றங்களற்ற சிறிய மூலக் கூறுகளை உட்செல்ல விடுபனவையாகவும் இருக்கின்றன.


School children in Louvre.jpg

அருங்காட்சியகம் என்பது, அரும்பொருட்களைச் சேகரித்தல், அவற்றைக் காட்சிக்கு வைத்தல் ஆகிய நோக்கங்களுக்காக உள்ள கட்டிடங்கள் அல்லது நிறுவனங்களைக் குறிக்கும்.இவை, மக்கள் மற்றும் அவர்கள் சூழல் தொடர்பான சான்றுகளை, மனமகிழ்ச்சி, கல்வி, ஆய்வு போன்ற நோக்கங்களுக்காகச் சேகரிப்பதுடன், அவற்றைப் பாதுகாத்தும், ஆய்வுகளை நடத்தியும், அதனை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தியும், காட்சிப்படுத்தியும் உதவுகின்றன. சமுதாயத்தின் வளர்ச்சிக்கும், அதன் சேவைக்குமாக இயங்குகின்ற இக் கண்காட்சிகள், நிலையானவையாகவோ அல்லது தற்காலிகமானவையாகவோ இருக்கலாம். அருங்காட்சியகங்களில் பல வகைகள் உள்ளன. பல பெரிய நகரங்களில், நுண்கலைகள், பயன்படுகலைகள், கைப்பணி, தொல்லியல், மானிடவியல், இன ஒப்பாய்வியல், வரலாறு, பண்பாட்டு வரலாறு, படைத்துறை வரலாறு, அறிவியல், தொழில்நுட்பம், இயற்கை வரலாறு, நாணயவியல், தாவரவியல், விலங்கியல், அஞ்சற்பொருள் சேகரிப்பு போன்ற துறைகளுக்காகத் தனித்தனியான அருங்காட்சியகங்கள் இருப்பதைக் காண முடியும்.


மார்ச் 29, 2010
Noel-coypel-the-resurrection-of-christ-1700.jpg

இயேசு கிறித்துவின் வாழ்க்கை, போதனை, சாவு ஆகியவற்றை எடுத்துரைக்கின்ற நற்செய்தி நூல்கள் அவர் தம் இறப்பிற்குப் பிறகு மீண்டும் உடலோடு உயிர்பெற்று எழுந்தார் என்றும் பதிவு செய்துள்ளன. இதுவே இயேசுவின் உயிர்த்தெழுதல் என அழைக்கப்படுகிறது. இயேசு உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சி அவர் விண்ணேற்றமடைந்த நிகழ்ச்சியிலிருந்து வேறுபடுத்திக் காட்டப்படுகிறது. இயேசு கிறித்து சாவின் மீது வெற்றிகொண்டு, உயிர்பெற்றெழுந்தது உண்மையாகவே நடந்த வரலாற்று நிகழ்ச்சி என கிறித்தவர்களின் நம்புகின்றனர். இயேசு இறந்து கல்லறையில் அடக்கப்பட்ட மூன்றாம் நாள் விடியற்காலையில் பெண்கள் சிலர் அவருடைய உடலில் பூசுவதற்கென நறுமணப் பொருட்களைக் கொண்டுசென்ற போது கல்லறையை மூடியிருந்த கல் புரட்டப்பட்டு, கல்லறை வெறுமையாய் இருக்கக் கண்டார்கள் (மத்தேயு 28:1-7; மாற்கு 16:1-8; லூக்கா 24:1-12; யோவான் 20:1-12). சாவின்மீது வெற்றிகொண்டு உயிர்பெற்றெழுந்த இயேசு நாற்பது நாள்கள் தம் சீடருக்குத் தோன்றினார்; அதைத் தொடர்ந்து விண்ணேகினார். இதுவே "இயேசுவின் விண்ணேற்றம்" என அழைக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சிகளைக் கிறித்தவர்கள் உயிர்த்தெழுதல் பெருவிழா, விண்ணேற்றப் பெருவிழா என்னும் திருநாட்களாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறார்கள்.


செம்மொழி (Classical language) என்பது ஒரு மொழியின் இலக்கியப்பழமை அடிப்படையிலும் பிற பண்புத்தகுதிகளின் அடிப்படையிலும் செய்யப்படும் வகைப்பாடு ஆகும். செம்மொழியாக ஒரு மொழியைத்தெரிவு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும். உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. இவற்றில் மிகப் பழமையானதாகவும், இலக்கியத்தில் சிறந்து விளங்குவதாகவும் உள்ள சில மொழிகளை செம்மொழிகள் என்று அடையாளப்படுத்துகின்றனர். ஒரு மொழியின் சிறப்பிற்கும், செம்மொழிக்கும் முதல் அடையாளமாகத் திகழ்வது அம்மொழியின் பழமை வாய்ந்த இலக்கியங்கள் தான். ஒரு மொழியின் பழமைக்கு இலக்கியம் சான்றாக இருந்தது என்பதுடன் அந்த மொழி சார்ந்த பகுதிகளில் உருவாக்கப்பட்ட கலைப் படைப்புகள் (கட்டிடக் கலை , சிற்பக் கலை போன்றவை) அந்த மொழியின் பழமையை உணர்த்தும் அடுத்த சான்றுகளாக இருக்க வேண்டும்.


மார்ச் 22, 2010
Narayana Guru.jpg

ஸ்ரீ நாராயணகுரு இந்து ஆன்மிகவாதியும் இந்தியாவின் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். சாதிக் கொடுமைகளால் கேரளாவில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அடிப்படை உரிமைகள் பல மறுக்கப்பட்ட காலகட்டத்தில் ஈழவர் சமூகத்தில் பிறந்தவர் நாராயணகுரு. குருதேவன் என்று அவரது சீடர்களினால் அழைக்கப்பட்ட நாராயணகுரு 1855 ஆம் ஆண்டில் ஆகஸ்ட்மாதம் 28ம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள செம்பழந்தி எனும் கிராமத்தில் ஈழவ சமுதாயத்தில் விவசாயம் செய்து வந்த மாடன் ஆசான் - குட்டி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர். நம்பூதிரிகளைத் தவிர பிறர் கோவில்களின் கருவறைக்குள் நுழைய முடியாத நிலையில் நாராயண குரு பல கோவில்களைக் கட்டி ஆலயப் பிரவேசத்திற்கு புதிய வழி முறையைக் கொண்டு வந்தார். கேரளாவில் திருச்சூர், கண்ணூர், அஞ்சுதெங்கு, கோழிக்கோடு போன்ற இடங்களில் கோவில்களைக் கட்டினார்.


Quartz oisan.jpg

திண்மம் என்பது இயற்பியலில்பொருள்களின் இயல்பான நான்குநிலைகளில் ஒன்றாகும். திண்மப்பொருள் என்பது திடப்பொருள் என்றும் அழைக்கப்படும். திண்மப்பொருள் தனக்கென ஓருருவம் கொண்டது. இப்பொருளில் உள்ள அணுக்கள் ஒன்றுக்கொன்று நிலையான தொடர்பு கொண்டுள்ளன. சூழலின் வெப்பநிலையில் அணுக்கள் அதிர்ந்து கொண்டு இருந்தாலும், அணுக்கள் தங்களுக்கிடையே இருக்கும் தொடர்புகள் மாறுவதில்லை. ஒரு திண்மத்தில் உள்ள அணுக்களுக்கு இடையே உள்ள தொலைவும் ஏறத்தாழ அணுவின் விட்டத்திற்கு ஒப்பிடக்கூடியதாக (ஒப்பருகாக) இருக்கும்.ஒரு திண்மத்தில் உள்ள அணுக்கள் எம்முறையில் அமைந்திருக்கின்றன என்பதைப் பொருத்து திண்மங்கள் படிகம், பல்படிகத் திண்மம்,சீருறாத் திண்மம் என பலவாறு பகுக்கப்படுகின்றன.


மார்ச் 15, 2010
Madurai Sulthanate Coin2.jpg

தமிழகத்தில் இசுலாமியர் ஆட்சி பாண்டிய நாட்டில் கி.பி. 1142ஆம் ஆண்டு துவங்கியதாக அறியப்பட்டாலும் அதற்கு முன்னரே மக்களிடையே இசுலாம் பரவியிருந்தது. கி.பி எட்டாம் நூற்றாண்டில் சேர மன்னனான சேரமான் பெருமாள் பாசுகர ரவிவர்மா என்பவரின் காலத்தில் இசுலாம் மேற்கு மலபார் கடற்கரை பகுதிகளில் அறிமுகமாகியது. பின் இது தமிழக பகுதிகளிலும் பரவியது. இதே சமயத்தில் வியாபார நோக்கத்தோடு சில அராபிய, எகிப்து மற்றும் துருக்கிய குழுக்கள் தமிழகத்தின் சோழ மண்டல கடற்கரை பகுதிகளில் முகாமிட்டன. இவர்கள் மூலமாக இசுலாமிய மதத்தை ஏற்றுக்கொண்டவர்கள், அந்தந்த பகுதியை ஆண்ட மன்னர்களுக்கு நெருக்கமாகி ஆட்சி அதிகாரத்திலும் பங்கு பெற்றனர். இதே நேரத்தில் சில வட இந்திய இசுலாமிய அரசுகளின் எல்லை விரிவாக்க நடவடிக்கைகளின் மூலமாகவும் சில இசுலாமிய அரசுகள் தமிழகத்தில் ஏற்ப்பட்டன.


RetroTranscription.jpg

ஆர்.என்.ஏ. பிரித்துருவாக்கம் (RNA transcription) என்பது டி.என்.ஏ வில் இருந்து ஆர்.என்.ஏ வாக மாற்றப்படும் நிகழ்வை குறிப்பது ஆகும்.இந்நிகழ்வில் பல வகையான நொதிகள் ஈடுபட்டு டி.என்.ஏ வை ஆர்.என்.எ வாக மாற்றுகின்றன. இவற்றில் மிக முக்கியமான நொதி டி.என்.ஏ சார்ந்த ஆர்.என்.ஏ பாலிமரசு (DNA dependent RNA polymerase) ஆகும். ஆர்.என்.ஏ உற்பத்தி. டி.என்.ஏ வின் 3' முனைப் பகுதியில் இருந்து 5' முனை வரை மாற்றப்பட்டு, டி.என்.ஏ விற்கு நேரெதிரான இழை ஒன்று உருவாக்கப்படும்.அதாவது, ஆர்.என்.ஏ க்கள் 5' முனை பகுதியில் தொடக்கப்பட்டு, 3' முனை பகுதியில் முடிக்கப்படும். இந் நிகழ்வின் போது , டி.என்.ஏ வில் தயமின் என்னும் மூலக்கூறு யுரசில் (uracil) என்னும் மூலக்கூறாக மாற்றப்படும்.


மார்ச் 8, 2010
SeaGen installed.jpg

நீர்ப்பெருக்கு ஆற்றல், சிலநேரங்களில் நீர்ப்பெருக்குத் திறன் என்பது நீராற்றல் வகைகளில் நீர்வரத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை பயன்படுத்தி மின்னாற்றல் அல்லது வேறு ஆற்றல்வகையாக மாற்றிக் கிடைத்திடும் ஆற்றலாகும்.காற்றுத் திறன் அல்லது சூரிய ஆற்றலை விட நீர்ப்பெருக்கு ஏற்படும் காலங்களையும் அளவுகளையும் துல்லியமாகக் கணிக்க முடியும்.வரலாற்றில் ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவின் அட்லாண்டிக் கடற்கரைப் பகுதிகளிலும் நீர்ப்பெருக்காலைகள் இயங்கி வந்துள்ளதைக் காண முடியும்.உரோமர்கள் காலத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.நீர்ப்பெருக்கு ஆற்றல் நேரடியாக புவி-மதி இடையேயான நகர்வுகளை பெரும்பகுதியும் குறைந்த அளவில் புவி-ரவி இடையேயான நகர்வுகளையும் கொண்டு கிடைக்கப்பெறும் ஒரே ஆற்றல் வடிவமாகும்.


Polynomialdeg3.svg

கணிதம் தோன்றிய காலத்திலிருந்து சமன்பாடுகளை விடுவித்துத் தீர்வு காணும் பிரச்சினை தலையாய பிரச்சினையாக இருந்து வருகிறது. 15 வது நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட கணித மலர்ச்சியில் முதன் முதலில் முப்படியச் சமன்பாடு களைத் தாக்க முயன்று 16 வது நூற்றாண்டில் வெற்றியும் கண்டனர். முப்படியச் சமன்பாட்டில் சாரா மாறி யின் உயர்ந்த அடுக்கு மூன்றாக இருக்கும். அதை

என்று எடுத்துக்கொள்வதில் பொதுத்தன்மைக்கு ஒரு குந்தகமும் இல்லை. ஏனென்றால், இன் கெழு 1 ஆக இல்லாவிட்டால், முழு சமன்பாட்டையும் அக்கெழுவால் வகுத்து (*) காட்டும் உருவத்திற்குக் கொண்டுவந்துவிடலாம். அக்கெழு 0 வாக இருந்தால் சமன்பாடே இருபடியம் ஆகி விடும்.




மார்ச் 1, 2010
Wiktionary-logo.svg

மொழியின் தோற்றம் என்பது, மனிதரின் படிமலர்ச்சியின் ஒரு காலகட்டத்தில், அவர்கள் மொழியைப் பயன்படுத்துவதற்கான வல்லமையைப் பெற்றதைக் குறிக்கிறது. இக்கொள்கை ஓமோ சாப்பியன்கள், மொழியைப் பயன்படுத்தும் வல்லமையற்ற, மனிதரல்லாத மூதாதையிலிருந்து தோன்றினர் என்பதை உட்கிடக்கையாகக் கொண்டுள்ளது. மொழி வல்லமை, அவர்களின் வளர்ச்சிக்குப் பெருமளவில் உதவியதுடன், பிற உயிரினங்களில் இருந்து அவர்களை வேறுபடுத்தும் முக்கியமான காரணிகளுள் ஒன்றான உயிரியல் இயல்பு ஆகவும் உள்ளது. எழுத்து மொழியைப் போலன்றிப் பேச்சு மொழி அதன் இயல்புகள் குறித்தோ அல்லது அது இருந்ததைக் குறித்தோ எவ்விதமான நேரடி வரலாற்றுத் தடயங்களையும் விட்டுச் செல்லவில்லை. இதனால் மொழியின் தோற்றம் பற்றி அறிந்து கொள்வது கடினமாக இருப்பதால், இதற்காக அறிவியலாளர்கள் மறைமுகமான முறைகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. 19ம் நூற்றாண்டின் இறுதியில் மனிதனுடைய தோற்றம் பற்றிச் சார்லஸ் டார்வின் தனது கோட்பாட்டை முன்வைத்த காலத்தில் இருந்தே, இத் தலைப்புப் பெருமளவு கவனத்தை ஈர்த்து வந்திருப்பதுடன், சர்ச்சைகளுக்கும் உள்ளாகி வந்துள்ளது.


Bt-toxin-crystals.jpg

பாசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் (Bacillus thuringiensis) அல்லது சுருக்கமாக பி.டி. (Bt) என்பது ஒரு மண்வாழ் கிராம்-நேர் நுண்ணுயிர். இது இயற்கையில் பட்டாம்பூச்சி, அந்துப்பூச்சி போன்றவற்றின் வயிற்றில் உயிர்வாழ்கின்றது. இது உயிர்க்கொல்லியாக பயன்படுத்தப்படுகிறது (வணிகப் பெயர்கள் டைப்பெல் (Dipel), தூரிசைடு (Thuricide)); இந்த நுண்ணுயிரியை 1901 ஆம் ஆண்டு ஷிகெடானே இசிவாட்டா (Shigetane Ishiwata) என்ற நிப்பானிய உயிரியலாளர் கண்டுபிடித்தார். பின்னர் 1911 -இல் எர்ணசுட்டு பெர்லினர் என்ற செருமானியர் மாவு விட்டில் புழுவில் ஏற்படும் "இழ்ச்லாவ்சூக்ட்" (Schlaffsucht) என்ற நோயை ஆராயும் போது பி.டி.யைப் பிரித்தெடுத்தார். இந்நுண்ணுயிரிகள் உருவாக்கும் ஒரு வகை படிக அகநச்சுகள் (crystal endotoxins) அந்துப்பூச்சிகள், வண்ணத்துப்பூச்சிகள், ஈக்கள், கொசுக்கள், வண்டுகள், குளவிகள், தேனீக்கள், எறும்புகள் ஆகிய உயிரின வகைகளிலுள்ள குறிப்பிட்ட சிலவற்றுக்கு நச்சாக விளங்குகின்றன. இவ்வகை படிக நச்சுக்களின் இருப்பிடமாக பி.டி. உள்ளதால், இதனைக் கொண்டு மரபணு மாற்றுப் பயிர்கள் உருவாக்கப்படுகின்றன.


பெப்ரவரி 22, 2010
Tw15ul9.jpg

ஒலிபெருக்கி என்பது ஏதேனும் ஒரு வகையில் ஒலியை பெரிதாக்கி வெளிப்படுத்தும் ஒரு கருவி. பொதுவாக ஒலியலைகளை மின்னலைத் துடிப்புகளாக மாற்றி, தக்க முறைகளால் மிகைப்படுத்தி பின்பு மீண்டும் மின்னலைகளை ஏதேனும் ஒரு வகையில் ஒலியலைகளாக மாற்றும் கருவிக்கு ஒலிபெருக்கி என்று பெயர். ஒலி என்பது ஏதேனும் ஒன்று அதிர்வதால் அதனைச் சூழ்ந்துள்ள காற்றில் உண்டாகும் அழுத்த ஏற்றத்தாழ்வுகளால் உருவாகின்றது. இந்த அழுத்த வேறுபாடுகள் நம் காதை அடைகின்றன. இந்த ஒலிபெருக்கிகளிலும் மெல்லிய தட்டு அல்லது தகடு போன்ற ஒரு பகுதி மேலும் கீழுமாக எழுப்ப வேண்டிய ஒலிக்கு ஏற்றாற்போல அதிரும். இப்படி அதிரச்செய்ய ஒரு நிலைக்காந்தத்தின் மீது மின்னோட்டம் செல்லும் கம்பிச்சுருள் கொண்ட மின்காந்தம் அமைக்கப்பட்டிருக்கும். இந்த சுருள்கம்பியில் மின்னோட்டம் பாயும் பொழுது மின்னோட்டத்தின் அளவுக்கும், திசைக்கும் ஏற்றாற்போல ஏற்படும் காந்தப் புலம் நிலைக்காந்தத்தின் காந்தப்புலத்தால் வெவ்வேறு அளவில் ஈர்க்கப்பட்டும் விலக்கப்பட்டும் அசையும். இந்தச் சுருளுடன் இணைக்கப்பட்டிருக்கும் மெல்லிய தட்டு, தகடு அல்லது விரிகூம்பு அசைவதால் அதிர்வுகள் ஏற்படுகின்றன. இந்த அதிரும் தகட்டால் ஒலி எழும்புகின்றது.


William Wordsworth at 28 by William Shuter2.jpg

வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் ஒரு முக்கியமான ஆங்கில இன்பத்துப்பால் கவிஞர். இவர் தமது நெருங்கிய நண்பர் சாமுவேல் கோல்ரிச்சுடன், இணைந்து 1798 ஆம் ஆண்டு கூட்டுப் பதிப்பாக வெளியிட்ட வசன கவிதைகள் (லிரிகல் பல்லாட்கள்) கொண்டு ஆங்கில இலக்கியத்தில் இன்பவியல் காலத்தைத் தொடங்க உதவியிருக்கிறார். புதிய வகை கவிதை "மனிதர்களின் உண்மையான மொழியின்" அடிப்படையில் அமைந்திருந்தது என்பதுடன் 18ம் நூற்றாண்டு கவிதையின் மிகவும் செல்வாக்கு பெற்றிருந்த சொல்நடையைத் தவிர்ப்பதாக இது இருந்தது. அவருடைய தொடக்ககால கவிதையான தி பிரிலூட் வேர்ட்ஸ்வொர்த்தின் தலைசிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது.


பெப்ரவரி 15, 2010
Lungs.gif

நுரையீரல் என்பது உயிரினங்கள் மூச்சுக் காற்றை இழுத்து வெளிவிடும் ஒரு முக்கிய உறுப்பாகும். வளிமப் பரிமாற்றம் இவ்வுறுப்பின் முக்கிய பணியாகும். சில முக்கிய வேதிப் பொருட்களை உருவாக்குவதும், வேறு சிலவற்றை செயலிழக்கச் செய்வதும் இதன் பணியாகும். நுரையீரலானது உடலியக்கத்திற்கு ஆற்றல் தரும் ஆக்சிசனை உள் எடுத்துக்கொள்வதற்கும் கார்பன்-டை-ஆக்சைடு வளிமத்தை வெளியேற்றுவதற்கும் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது. நுரையீரலில் சுரக்கும் சளி போன்ற நீர்மம் சில தூசிகளை அகற்றி வெளியேற்றும். மூக்கின் வழியாக நாம் உள்ளிழுக்கும் காற்று, காற்றுக் குழாய் வழியாக நுரையீரலுக்கு செல்கிறது. காற்றுக்குழாய் மார்புப்பகுதியில் இரண்டாக பிரிந்து வலது, இடது நுரையீரல்களுக்கு செல்கிறது. வலது நுரையீரல் மூன்று பாகமாகவும் (lobes) இடது நுரையீரல் இரண்டு பிரிவாகவும் உள்ளது. இரண்டாக பிரியும் மூச்சுக் கிளைக் குழாய்கள் (பிரான்கியல் குழாய்கள்) பல நுண் கிளைகளாக பிரிந்து மில்லியன் கணக்கான நுண்காற்றறைகள் ஆகியஅல்வியோல் எனப்படும் காற்றுப்பைகளில் (நுண்வளிப்பைகளில்) முடிவுறும். இந்த நுண்வளிப்பைகளில்தான் வளிமப் பரிமாற்றம் நிகழ்கின்றது.


Diving.jpg

நீரில் பாய்தல் என்னும் விளையாட்டு ஓர் உயரமான மேடை அல்லது தாவுப்பலகையிலிருந்து களிநடம் புரிந்தவாறோ அல்லாதோ நீரில் குதிப்பதாகும். இது ஒலிம்பிக் போட்டிகளில் இடம் பெறும் ஒரு விளையாட்டாகும். போட்டியாளர்கள், சீருடற் பயிற்சியாளர்கள் மற்றும் தேர்ந்த நடனப் பெண்கள் போன்றே உடற்திறன், உடல் வளைதல், நீர் மற்றும் காற்றில் தடையின்றி செல்லும் திறமை கொண்டு விளங்குகிறார்கள். சீனா, அமெரிக்கா, இத்தாலி, ஆஸ்திரேலியா மற்றும் கனடா இந்த விளையாட்டில் சாதனைகள் புரிந்து வருகின்றன. பெரும்பான்மையான போட்டிகள் மூன்று வகையில் நடத்துகின்றன: 1மீ மற்றும் 3மீ தாவுப்பலகை மற்றும் உயரமேடை. உயரமேடை நிகழ்வுகளில் போட்டியாளர்கள் ஐந்து, ஏழரை, பத்து மீட்டர் உயரத்திலிருந்து குதிக்க அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள் பாய்தலின் பல அம்சங்களை, கரணமடித்தல் மற்றும் உடலை சுழற்றுதல் உட்பட, எவ்வாறு நிகழ்த்தினார்கள், பாய்தலுக்கு ஏற்றவாறு எவ்வாறு உடல் ஒத்துழைத்தது, நீரில் நுழையும்போது எந்தளவு தண்ணீர் தெளித்தது என்பன நீதிபதிகளால் எடைப் போடப்படுகின்றன.


பெப்ரவரி 8, 2010
Uars ozone waves.jpg

ஓசோன் படை தேய்வின் விளைவுகள் என்பது புவியின் வளி மண்டலத்தில் அதிகளவை உள்ளடக்கிய ஓசோன் படையின் தேய்வினால் புவியின் சூழலில் ஏற்படும் மாற்றங்களையும் பிரச்சினைகளையும் குறிக்கும்.ஓசோன் படையானது படைமண்டலத்தில் உள்ள பகுதியாகும்.இப்பகுதி புவியின் மேற்பரப்பில் இருந்து 10-25 மைல் (15-40 கிமீ) உயரத்தில் அமைந்துள்ளது. இப்படையானது சூரியனில் இருந்து வீசப்படும் புற ஊதாக்கதிர்களிடமிருந்து (UV) பாதுகாப்பு கவசமாக செயற்படுகின்றது.1974 இல் வேதியியலாளர்கள் சேர்வூட் ரொலன்ட் மற்றும் மரியா மொலினா என்போர் மனித செயற்பாடுகளின் மூலம் வளிமண்டலத்திற்கு வெளியிடப்படும் பொருட்களினால் ஓசோன் படையிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கண்டுபிடித்துள்ளனர். ஆராய்வுகளின்படி UV-B கதிர்வீசலுக்கும் தோல் புற்றுநோய்க்கும் இடையில் திடமானதொரு உறவு நிகழ்வதாக கூறப்படுகின்றது. UV-B கதிர்வீசலினால் கண் நோய்கள் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறானது உயர்ந்த அளவில் காணப்படுகின்றது.


Coomaraswamy.jpg

கலாயோகி ஆனந்த கெந்திஷ் குமாரசுவாமி கீழைத்தேயக் கலைகளுக்கும், இந்து மதத்துக்கும் சிறந்த தூதுவராக விளங்கியவர். சிறந்த ஓவியர், சிற்பி, கட்டடக்கலைஞர், கலைத் திறனாய்வாளர் (விமரிசகர்), ஆராய்ச்சியாளர், நூலாசிரியர்.ஆகத்து 22, 1877ஆம் ஆண்டு இலங்கையின் கொழும்பிலே ஆங்கில அன்னைக்கும் தமிழர் சேர் முத்துக் குமாரசாமிக்கும் பிறந்தவர் தந்தையை இழந்து தாயின் பராமரிப்பிலே இங்கிலாந்தில் வளர்ந்து லண்டன் பல்கலைக்கழகத்திலே அறிவியல் இளங்கலைப் பட்டம் பெற்றார்.இந்திய விடுதலை இயக்க ஆதரவாளராக, அதன் தலைவர்களோடு தொடர்பு கொண்டிருந்தார். ரவீந்திரநாத் தாகூர், சகோதரி நிவேதிதை முதலியோரின் நண்பராக வாழ்ந்தார்.இறைவனின் ஐந்தொழிலை காட்டும் சிவநடனத்தை விளக்கி 1912ஆம் ஆண்டு எழுதிய ஆங்கிலக் கட்டுரை மூலம் இந்தியக் கலைகளின் சிறப்பினை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.சில தாயுமானவர் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.1917 முதல் ஐக்கிய அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் அமைந்திருந்த நுண்கலை நூதனசாலையிற் கீழைத்தேயப் பிரிவில் பணிபுரிந்தார்.தமது எழுபதாவது வயதில் செப்டம்பர் 9 1947ஆம் ஆண்டு அங்கு காலமானார்.


பெப்ரவரி 1, 2010
AFMsetup.jpg

நானோ தொழில்நுட்பம் எனப்படுவது 100 நானோ மீட்டருக்கும் குறைவான அளவுகளால் அமைந்த உருவ அமைப்புகளைக் கொண்டு, அச்சிறு அளவால் சிறப்பாகப் பெறப்படும் பண்புகளைக் கொண்டு ஆக்கபடும் கருவிகளும், பொருட்பண்புகளும் நானோ தொழில் நுட்பம் என்று அழைக்கப்படுகின்றது. ஒரு நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரின் 1,000,000,000ல் (ஒரு பில்லியனில்) ஒரு பங்கு.சாதாரணமாக மனிதர்களின் தலைமுடியானது 70,000 முதல் 80,000 நானோ மீட்டர் தடிப்புடையது.இத்தொழில்நுட்பம் உயிரியல், வேதியியல், இயற்பியல், மின்னியல், மருத்துவம், பொறியியல் என்று பல்துறைகளில் தாக்கம் ஏற்படுத்தி வருகின்றது.கருவிகளை சிறிதாக்கிக்கொண்டே போவதின் விளைவாக அணுப்புற விசை நுண்ணோக்கி (atomic force microscope (AFM))(படம்) மற்றும் வாருதல் வகை புரை ஊடுருவு மின்னோட்ட நுண்ணோக்கி (scanning tunneling microscope (STM)) போன்ற மிகுதுல்லிய நுண்கருவிகள் கிடைத்துள்ளன.


CN Annadurai 1970 stamp of India.jpg

அறிஞர் அண்ணா என்று பரவலாக அறியப்பட்ட காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை தமிழ் நாடு மாநிலத்தின் ஆறாவது முதலமைச்சராகப் பணியாற்றியவர். காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் செப்டம்பர் 15ஆம் நாள் 1909ஆம் ஆண்டு பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். தமிழக அரசியலில் காங்கிரசல்லாத ஆட்சியின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். 1949ஆம் ஆண்டு தி. மு. கவினை நிறுவியவர். தமிழிலும், ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதி இயக்கி அதில் ஒரு பாத்திரமாக நடித்தவரும் ஆவார். தமிழ் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவரும் தன்னுடைய திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை அதன் மூலம் முதன்முதலாக பரப்பியவரும் இவரே.அண்ணாதுரை முதலமைச்சரான இரண்டு வருடத்திற்குள் புற்று நோய் தாக்குதலுக்குள்ளாகி, மருத்துவ பராமரிப்பிலிருக்கும் பொழுது 3 பெப்ரவரி,1969ஆம் ஆண்டு மரணமடைந்தார்.


சனவரி 25, 2010
Fresh tilapia.jpg

திலாப்பியா (Tilapia) ஆப்பிரிக்காவில் தோன்றி, உலகில் மிதமான மற்றும் வெப்பமான தட்பவெப்ப நிலை நிலவும் அனைத்து இடங்களிலும் பரவலாக காணப்படும் மீனினமாகும். நன்னீரில் இயற்கையாக வாழும் இம் மீன் உவர்நீரிலும் வாழ வல்லது. மீன் வளர்ப்பு முறையின் மூலம் தற்பொழுது (2010) ஆண்டொன்றுக்கு இவ்வகை மீன்கள் சுமார் 27 இலட்சம் (2,700,000) டன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழில் திலேப்பியா, சிலேபி, சிலேபிக் கெண்டை முதலானவை இம் மீனின் வேறுபெயர்களாகும்.


Good msv 3.jpg

செமினிவிரிடீ (geminiviridae) என்பவை பயிர்களைத் தாக்கும், ஓரிழை கொண்ட வட்ட வடிவிலான டி.என்.ஏ தீ நுண்மம் ஆகும். இவை தோராயமாக 2.6 kb- 2.8 kb வரை டி.என்.ஏ வரிசைகள் கொண்டவை. மேலும் ஒற்றையாகவோ (monopartite) இரட்டையாகவோ (bipartite) அமைந்து இருக்கும். இவற்றின் புற உறை (capsids) முற்றுப் பெறாத இரு இகோச (icosa) தலைகளைக் கொண்டுள்ளதால், இவற்றுக்கு செமினி நுண்மங்கள் எனப் பெயர். புற உறைகள் 18-20 நானோமீட்டர் (nm) சுற்றளவும், 30 nm நீளமும் கொண்டவை. இரட்டைப் பிரிவு கொண்ட நுண்மங்களின் (DNA A, DNA B) இழைகள் ஒவ்வொன்றும் தனியாக புற உறைகளால் சூழப்பட்டு இருக்கும். பொதுவாக களைகளில் (weeds) இவை செரிமையக்கப்பட்டு, பின் மெதுவாக அதனின் இழையில் ஏற்படும் மாற்றங்களால் உணவுப்பயிர்களைத் தாக்குகின்றன. மேலும், தன் இருப்பிடங்களுக்கு ஏற்ப தம்மை தகவமைப்பு ஏற்படுத்தும் தன்மையையும் இவை கொண்டுள்ளன. இதனால் இவற்றின் சிற்றினத்தைக் குறிக்கும் பொழுது, அவற்றின் ஊரைக் குறிபிட்டாக வேண்டும்.


சனவரி 17, 2010
TermiteMOUNDtop-Tamilnadu17.5.JPG

கறையான்கள் ஏறத்தாழ 20 கோடி ஆண்டுகளுக்கு முன்னரும், இந்த பூமியில் வாழ்ந்து வந்தன. இதற்கான ஆதாரங்களை, அதற்குரியத் தொல்லுயிர் எச்சம் மற்றும் அம்பர் உறுதிசெய்கின்றன. கறையான்களைவெள்ளை எறும்புகள் என்றும் அழைக்கின்றனர். இன்றையக் கறையான்களில் பத்து விழுக்காடே, நமக்கு பொருளாதார சீர்கேட்டை உருவாக்கும். மற்றவை, தேவையில்லாதவற்றை உண்டே வாழ்கின்றன. இவை எறும்புகளைப் போலவே காணப்பட்டாலும், உயிரின வகைப்பாட்டின் படி ஆராய்கின்ற போது கறையான்கள்,எறும்புகளிலிருந்து முற்றிலும் வேறுபடுகின்றன. எறும்புகளைச் சமமற்ற இறகிகள் என்ற உயிரினவரிசையில் தொகுத்துள்ளனர். முதிர்வடைந்த கறையான்கள் (ஈசல்கள்) சமஇறகிகள் என்ற உயிரினவரிசையில் தொகுத்துள்ளனர்.


மகாவீரர்

மகாவீரர் என்பவர் சமண சமயத்தின் மையக் கருத்துக்களை பரப்பியவரும் வர்த்தமானர் என்றும் அறியும் இந்திய துறவியாகும். சமண மத மரபு வரலாற்றில் அவர் 24ஆவதாகவும் கடைசியாகவும் தோன்றிய தீர்த்தங்கரர் ஆவார். பீகார் மாநிலத்தில் ஜமுயி மாவட்டத்தில் இருந்த லச்சுவார் என்ற முன்னாள் அரசாட்சியின் "சத்திரியகுண்டா" என்ற இடத்தில் மகாவீரர் சித்தார்த்தன் என்னும் அரசனுக்கும் திரிசாலா என்ற அரசிக்கும் இந்திய நாட்காட்டியில் சைத்ர மாதம் வளர்பிறை பதின்மூன்றாம் நாள் (கிரெகொரியின் நாட்காட்டியில் ஏப்ரல் 12) அன்று பிறந்தார். உலகெங்கும் உள்ள சமணர்கள் அவரது பிறந்தநாளை மகாவீர் ஜெயந்தி எனக் கொண்டாடுகின்றனர். 12 ஆண்டுகள் ஆன்மீகத் தேடலுக்குப் பின்னர் சமண சமயத்திற்கு புத்துயிர் ஊட்டி இந்தியாவெங்கும் பரப்பினார்.


சனவரி 10, 2010
Preparation of Pongal.jpg

தைப்பொங்கல் தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆபிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது. பொங்கலன்று அதிகாலை எழுந்து முழுகுவர். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள்.


Rubiks cube solved.jpg

கணிதத்தில் ஆய்ந்து அலசப்படும் கருத்துப் பொருட்களெல்லாம் கணங்களை அடிப்படையாகக்கொண்டன. இப்பொருட்கள் உண்டாகும் முறைகளை இருபதாவது நூற்றாண்டின் தொடக்கத்தில் கணிதவியலர்கள் அமைப்பு என்ற புதிய கண்ணோட்டம் தரும் தலைப்புகளில் வகைப்படுத்தினர். இந்த வகைப்படுத்தலால் கணிதவியலில் புரட்சிகரமான பாதை தோன்றி பற்பல முக்கிய விளைவுகள் தோன்றின. அவற்றுள் முதலாவது, காலம் காலமாக பல மேதைகளின் கண்டுபிடிப்புகளினால் தொகுத்து வைத்திருந்த கணிதமெல்லாம் ஒன்று சேர்ந்து இணையக்கூடிய வாய்ப்பு உருவானதோடு மட்டுமல்லாமல் சென்ற நூற்றாண்டில் கணிதத்தை வியப்பூட்டும் அளவுக்கு விரிவடையவும் செய்தது.


சனவரி 3, 2010
TamilNadu Logo.svg

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த மன்றங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படியே அந்த ஊர்களின் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.தமிழ்நாட்டில் இருக்கும் உள்ளாட்சி மன்றங்கள் மாநகராட்சி மன்றம், நகராட்சி மன்றம், பேரூராட்சி மன்றம், மாவட்ட ஊராட்சி மன்றம்,ஊராட்சி ஒன்றியக் குழு, ஊராட்சி மன்றம் எனும் மன்றங்களாகப் பிரிக்கப்பட்டு இருக்கின்றன.


CHF10 8 front.jpg

லெ கொபூசியே (1887 – 1965) சுவிசில் பிறந்த ஒரு பிரான்சிய கட்டிடக்கலைஞரும், எழுத்தாளரும் ஆவார். இன்று, நவீனத்துவம் அல்லது அனைத்துலகப் பாணி என்று அறியப்படும் கட்டிடக்கலைப் பாணி தொடர்பிலான பங்களிப்புகளுக்காக இவர் புகழ் பெற்றார். நவீன வடிவமைப்புத் தொடர்பான கோட்பாட்டு ஆய்வுகளுக்கான முன்னோடியாகக் கருதப்படுகின்ற இவர், நெருக்கடியான நகரங்களில் வாழ்பவர்களுக்கு, நல்ல வாழ்க்கை நிலையை வழங்கும் முயற்சியில் உழைத்தார். நவீன கட்டிடக்கலை வடிவங்கள் வருமானம் குறைந்த பகுதியினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான அமைப்பு அடிப்படையிலான தீர்வுகளைக் கொடுக்கும் என அவர் நம்பினார். அவருடைய "இம்மெயுபிள்சு வில்லாக்கள்" எனப்படும் திட்டம் இந் நோக்கத்தைக் கொண்ட ஒரு திட்டமாகும். இவர் ஒரு கட்டிடக்கலைஞர் மட்டுமன்றி, ஒரு நகரத் திட்டமிடலாளர், ஓவியர், சிற்பி, எழுத்தாளர் மற்றும் நவீன தளபாட வடிவமைப்பாளரும் ஆவார்.


முதற்பக்கக் கட்டுரைகள் காப்பகம்
  • விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள்