தலித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவில் சாதிய படிநிலை கட்டமைப்பில் அடித்தள மக்கள் பட்டியலின மக்கள் என்று பொதுவாக அடையாளப்படுத்தப் படுவார்கள். ஒடுக்கப்பட்ட மக்கள், நசுக்கப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்டோர், தீண்டத்தகாதவர்கள், பஞ்சமர்கள், அரிஜனங்கள், பட்டியல் இனத்தவர் என்றும் தலித்துகள் அழைக்க அல்லது குறிப்பிடப்படுவதுண்டு. இந்து-வர்ண தத்துவ சமய நோக்கில் ஒடுக்கப்பட்டவர்களாகவும், தீண்டத்தகாதவர்களாகவும், பொருளாதாரத்தில் தாழ்த்தப்பட்டு, அரசியல் அதிகார வலு அற்றவர்களாகவும், சமூகப் பண்பாட்டு நிலையில் மற்ற சமூகத்தால் வேறுபடுத்தப்பட்டவர்களாகவும் ஆக்கப்பட்டுள்ளனர். அப்படி ஆக்கபடுகிற ஒவ்வொரு சாதியையும் தலித் என்றே வட இந்தியாவில் அழைத்து வந்தனர். இந்த சமுதாயங்கள் பல கால தொடர்ச்சியான எதிர்ப்பு போராட்டங்கள் ஊடாக நியாயமான வாய்ப்புக்களை பெற, முன்னேற முயன்று கொண்டிருக்கின்றார்கள்.

பெயர்க் காரணம்[தொகு]

"இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (Backward Classes) மற்றும் அட்டவணை சாதிகள் (Schedule Castes) என்றும் குறிப்பிடப் பெற்றுள்ள மக்களை மராத்திய மொழி சொல்லில் தலித் என்று குறிப்பிடப்படுவதுண்டு. இதை ஜோதி ராவ் பூலே என்கிறவர் அறிமுகப்படுத்தினார். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாலே என்கிற சாதியில் வருகிற சத்திரிய ஜாதி வகுப்பைச் சேர்ந்த இவர், அழுத்தப்பட்டவர்கள் என்ற பொருளில் (Suppressed) இச்சொல்லை உருவாக்கினார்.

1920ஆம் ஆண்டு காஷ்மீரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பங்கெடுக்கச் சென்ற சுவாமி ஸ்ரத்தானந்தா அவர்கள் அகில இந்திய அளவில் வாழும் தீண்டாமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான கோரிக்கைகளை அம்மாநாட்டு ஒருங்கிணைப்பளார்களிடம் கொடுத்தார். அக்கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு காங்கிரஸ் கொண்டு சென்று தீர்வு காண வேண்டும் என்ற நோக்கம் அவருக்கு இருந்தது. சுவாமி ஸ்ரத்தானந்தா அப்போது உருவாக்கி நடத்திக் கொண்டிருந்த அமைப்பின் பெயர் தலித் சகோதரர்கள் என்பதாகும். இவர்தான் அரசியல் அரங்கில் தலித் என்னும் சொல்லை தீண்டாமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஒருங்கிணைந்த சொல்லாக உருவாக்கி அதை காங்கிரஸ் மாநாட்டிலும் அறிமுகப்படுத்தினார்.

மேலும் தலித் என்னும் மராட்டியச் சொல்லின் மூலம் தமிழாகும். தென்னிந்திய மொழிகளுள் ஒன்றாக மராட்டிய மொழியும் இருப்பதால் வேர்சொற்கள் தமிழில் இருந்து மராட்டியத்திற்கு செல்வதும் ஒன்றும் புதியதில்லை. தமிழில் தலம் என்பது மண்ணைக் குறிக்கும் சொல். தளம் என்பது தரையினைக் குறிக்கும் சொல். இச்சொல் மராட்டி உள்ளிட்ட மொழிகளுக்குப் போகும்போது விகுதியை இழந்துவிடுகிறது. எனவே விகுதியற்ற தலம் அல்லது தளம் ஆகிய சொற்கள் தல் என்றும் தள் என்றும் உச்சரிக்கப்படுகின்றன. எனவே மண்ணின் மைந்தர்கள் என்று பொருள்பட சுவாமி ஷ்ரத்தானந்தா தலித் என்று அழைத்தார். பிற்காலத்தில் 1972ல் மராட்டியத்தில் உருவான தலித் பேந்தர் இயக்கம் தலித் என்கிற வார்த்தைக்கு வீழ்த்தப்பட்டவர்கள் என்ற பொருளினை வழங்கியது.

எனவே தலித் பேந்தர் அளித்த வீழ்த்தப்பட்டவர்கள் என்கிற பொருள் மண்ணின் மைந்தர்கள் என்ற பொருளோடு முரண்பட்டாலும் அது உலக அளவில் அறிந்துக் கொள்ளப்பட்ட சொல்லாக மாறிவிட்டது. ஐநா சபை மற்றும் மேற்கந்திய நாடுகள் அச்சொல்லை ஏற்றுக் கொண்டுள்ளன. காரணம் பிளாக் பேந்தர் என்னும் கருஞ்சிறுத்தைகள் எனும் கருப்பர்களின் இயக்கம் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டதால், அவ்வியக்கத்தை முன்மாதிரியாகக் கொண்டு உருவான தலித் பேந்தர்கள் என்னும் தலித் சிறுத்தைகள் இயக்கம் உடனடியாக மேற்கத்திய மற்றும் அமெரிக்க நாடுகளின் அங்கீகாரத்தினைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாகத்தான் ஐநா மன்றத்தாலும் அடையாளப்படுத்தப்பட்ட சொல்லாக தலித் என்கிற சொல் மாறியது.

தற்போது தலித் மக்களின் அடையாளங்களையும் அவர்கள் படும் சாதிய கொடுமைகளையும் சர்வதேச சமூகத்திடமிருந்து மறைக்கும் முயற்சியில் இந்திய அரசு இறங்கியுள்ளதால் தலித் என்கிற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என்று கூறிவருகின்றது. இதை பல ஆங்கில நாளேடுகள் ஏற்க மறுத்துவிட்டன.

தமிழர்நாட்டில் தலித் என்ற வார்த்தையை பயன்படுத்தக்காரணம்[தொகு]

தமிழர்நாட்டில் பட்டியலின ஜாதிகளை அரசு ஆணைப்படி ஆதிதிராவிடர் என்றும், அதற்கானத்துறையை ஆதி திராவிடர் நலத்துறை என்றும் இன்றுவரை வழங்கப்பட்டுவருகிறது. ஜாதி சான்றிதழ்களிலும் அப்படியே குறிப்பிடப்படுகிறது. பட்டியலினம் என்றும் குறிப்பிடப்படுகிறது. இது திராவிட அரசியலை மையப்படுத்துவதாக ஜாதிய அமைப்புகள், சங்கங்கள் கருதியதால் இந்த வடமொழிப் பெயரை ஒரு சில ஜாதிய அமைப்புகள் பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தலித் என்று அழைத்துக் கொள்ளும் பிற்படுத்தப்பட்ட பட்டியலின மக்களின் மக்கள் தொகை[தொகு]

தலித் என்று அழைத்துக்கொள்ளப்படும் பட்டியலின ஜாதிகளின் மக்கள் தொகை இந்திய அரசு தளத்தில் உள்ள 2011 தகவலின்படி16.2% ஆகும். தமிழ்நாட்டளவில் இந்த சதவீதம் 2011 கணக்கெடுப்பின்படி 7.2% ஆகும். தமிழக அளவில் பட்டியலின ஜாதிகளாக வருபவை அரசு அட்டவணைப்படி 87[1] ஜாதிகளாக உள்ளது.

தலித் பண்பாட்டு அமைப்பு[தொகு]

"இந்திய தலித்துக்களின் பண்பாட்டு அமைப்பானது இந்தியாவின் ஆதிக்க பண்பாட்டின் சமூக ஒழுங்கமைப்பினைக் கேள்விக்குள்ளாக்குவதாகவும் மறுமதிபீடு செய்வதும் இல்லை. மாறாக அது அவ்வாதிக்கப் பண்பாட்டுனைப் போன்றதொரு அமைப்பொழுங்கைத் தனது பண்பாட்டுக்குள்ளும் தொடர்ந்து மறுபடைப்புச் செய்து கொண்டிருக்கின்றது" [2]

தலித்துகள் மீதான தாக்குதல்களும் , நீதிமன்ற தீர்ப்புகளும்[தொகு]

இந்தியா[தொகு]

  1. வெண்மணி கிராமத்தில் 44 தலித் விவசாயத் தொழிலாளர்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் பிரதான குற்றவாளியான கோபால கிருஷ்ண நாயுடு உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.இத்தகைய பெரிய மனிதர்கள் உயிரோடு எரிப்பது போன்ற செயலில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள் என்று நீதி மன்றம் கூறியது .[3]
  2. திண்ணியம் என்ற கிராமத்தில் தலித் ஒருவரின் வாயில் மலத்தை திணித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாதி ஆதிக்க எண்ணம் கொண்ட வெறியர் விடுவிக்கப்பட்டார். முதல் தகவலறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பு உயர் அதிகாரியின் அனுமதி பெறவில்லை என்று காரணம் கூறப்பட்டது.[4]
  3. பீகார் மாநிலம் பதானிதோலா என்ற இடத்தில் 1996ம் ஆண்டு 21 தலித்துகள் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த அரா மாவட்டத்தின் அமர்வு நீதிமன்றம் 3 பேருக்கு தூக்குத் தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.ஆனால் பாட்னா உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட 23 பேரையும் விடுவித்து உத்தரவிட்டது .ரண்வீர் சேனா 1996ல் தலித் மக்களை கொன்றுகுவித்த அமைப்பாகும். படுகொலை செய்யப்பட்ட தலித்துகளில் குழந்தைகள், பெண்களும் அடங்குவர். 10 வயது குழந்தையைக் கொன்றதாகக் குற்றம்சாட் டப்பட்ட அஜாய்சிங், 3 வயது குழந்தையைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட மனோஜ் சிங் ஆகியோரும் நீதிமன்றத்தால் விடுவிக்கப் பட்டுள்ளனர். இந்தப் படுகொலையை நேரில் கண்டவர்கள் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில்தான் அமர்வு நீதிமன்றம் தெளிவான தீர்ப்பு வழங்கியது. ஆனால் சாட்சியத்தில் தெளிவில்லை என்று கூறி பாட்னா உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்துள்ளது. சாட்சிகள் குற்றம் இழைத்த அனைவரின் பெயரையும் கூறி அடையாளம் காட்டவேண்டிய அவசியம் இல்லை என்ற உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலை பாட்னா உயர்நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை.[5]
  4. தமிழ் நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருவானூர் என்ற தன் சொந்த ஊர் கோவிலில் சாமி கும்பிட்டதற்காக அந்த ஊர் மக்களே தலித் சிறுவனை அடித்து வன்கொடுமை செய்தனர்.[6]
  5. மும்பையில் உள்ள அகமது நகரில் நடந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த சகார் ஷெஜ்வல் என்ற 21 வயது இளைஞன் மே 16 ஆம் திகதி 2015 ஆம் ஆண்டு அம்பேத்கரின் பாடலை செல்போனில் வைத்திருந்ததற்காக கொலை செய்யப்பட்டான்.[7]
  6. கர்நாடக மாநிலத்தில் கஷன் மாவட்டத்தில் அமைந்துள்ள ஹொலேநார்சிபூர் தாலுகாவுக்கு உட்பட்ட ஒரு கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்யச்சென்ற பெண்களை உயர் சாதி என்று சொல்லிக்கொள்ளும் சிலர் அபராதம் விதித்தனர்.[8]
  7. 17 சனவரி 2016 அன்று தெலுங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத்தின் மத்திய பல்கலைக் கழகத்தில் ரோஹித் வெமுலா என்ற மாணவன் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு (ஏபிவிபி) மாணவர்களின் தாக்குதலால் தூக்கிலிட்டு மரணம் அடைந்தான். இந்த மாணவனின் தந்தை தனது மகன் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த கல்உடைக்கும் சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்றும் அவனது தாயார் தான் பட்டியலின ஜாதியைச் சேர்ந்தவர் என்றும் போலீஸ் விசாரணையில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிற்படுத்தப்பட்ட ஜாதியில் இருந்து படித்துவந்த இடையில் தான் பட்டியலின ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொண்டான் என்றும் அவரது தந்தையால் தெரிவிக்கப்பட்டது.[9]

தமிழ்நாடு[தொகு]

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 28 மாவட்டங்கள் தலித்துகள் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர் என ஆதிதிராவிடர்களுக்கான தேசிய ஆணையம் அறிவித்துள்ளது.[10]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-12-06. பார்க்கப்பட்ட நாள் 2016-02-16.
  2. மொஃபாத், 1979:3 - ச. பிலவேந்திரன் அவர்களின் தமிழ்ச் சொல்லாடலும் மானிடவியல் விவாதங்களும்
  3. "அநீதி". தீக்கதிர். 18 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 27 ஏப்ரல் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  4. S. Dorairaj (Volume 26 - Issue 24 :: Nov. 21-Dec. 04, 2009). "Unwilling to act Governments across the country have shown a remarkable reluctance to use the S.C./S.T. Act to protect Dalits from upper-caste violence". Frontline. பார்க்கப்பட்ட நாள் 27 ஏப்ரல் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  5. Shoumojit Banerjee (17 ஏப்ரல் 2012). "All accused in 1996 Bihar Dalit carnage acquitted". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 27 ஏப்ரல் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  6. கிருஷ்ணகிரியில் தலித் சிறுவன் மீது வன்கொடுமை: 6 பேர் கைது
  7. ரிங்டோனில் அம்பேத்கர் பாட்டு: தலித் இளைஞர் கொலையில் 4 பேர் சிக்கினர் தினகரன் மே 24 2015
  8. நுழைந்த 4 தலித் பெண்களுக்கு அபராதம்: கர்நாடகாவில் அவலம் தி இந்து தமிழ் 08. செப்டம்பர் 2015
  9. ஆராய்ச்சி மாணவர் தற்கொலை: ஹைதராபாத் மத்திய பல்கலை. சர்ச்சையும் பின்னணியும் தி இந்து தமிழ் 18 சனவரி 2016
  10. தமிழகத்தின் பெரும்பான்மை மாவட்டங்கள் தலித் எதிர்ப்பு மாவட்டங்களாக இருப்பது ஏன்?

துணை நூல்கள்[தொகு]

  • சி.என். குமாரசாமி. (2001). அம்பேத்கரும் தலித் மனித உரிமைப் போராட்டமும். சென்னை: தமிழ் புத்தகாலயம்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தலித்&oldid=3777464" இலிருந்து மீள்விக்கப்பட்டது