விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


இந்தப் பக்கம் குறிப்பாக சிறப்பாகவும், முழுமையாகவும் எழுதப்பட்ட விக்கிப்பீடியா கட்டுரைகளை எடுத்துக் காட்டுகிறது. தமிழ் விக்கிப்பீடியாவிலுள்ள சிறந்த கட்டுரைகளை தெரிவு செய்வதற்கு உங்கள் உதவியைப் பெற எண்ணுகிறோம். இந்தப் பக்கத்தில் இடுவதற்காகக் கட்டுரையொன்றை நியமனம் செய்வதற்கு அதை விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் நியமனம் பகுதியில் சேர்த்து விடுங்கள். அங்கே அது பாணி, உரைநடை, முழுமை, துல்லியத் தன்மை, நடுநிலை என்னும் அம்சங்கள் தொடர்பில் மீளாய்வு செய்யபடும். இங்கே பட்டியலிடப்பட்டுள்ள கட்டுரைகள் இங்குள்ள மிகச் சிறந்தவற்றுள் சிலவாக இருப்பதனால் அவற்றை மேலும் மெருகூட்டுவதில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். ஆகையால் அவற்றைத் தயங்காமல் இற்றைப்படுத்துங்கள்.

தற்போது தமிழ் விக்கிப்பீடியாவிலுள்ள 1,64,336 கட்டுரைகளில் 11 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் இங்கே பட்டியிலிடப்பட்டுள்ளன.

இங்குள்ள கட்டுரையொன்று நீக்கப்பட வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் அதுபற்றிய வேண்டுகோளை விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் தகுதி நீக்க நியமனம் பக்கத்தில் பதிவு செய்துவிடுங்கள்.

கட்டிடக்கலை

கட்டிடக்கலை என்பது கட்டிடங்கள் வடிவமைப்புச் செய்வதற்கான கலையும் அறிவியலும் ஆகும். ஒரு விரிவான வரைவிலக்கணம், பெருமட்டத்தில், நகரத் திட்டமிடல், நகர்ப்புற வடிவமைப்பு மற்றும் நிலத்தோற்றம் முதலியவற்றையும், நுண்மட்டத்தில், தளபாடங்கள், உற்பத்திப்பொருள் முதலியவற்றை உள்ளடக்கிய, முழு உருவாக்கச் சூழலின் வடிவமைப்பைக் கட்டிடக்கலைக்குள் அடக்கும்.

இலங்கை

இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசு (ශ්රී ලංකා என்று சிங்களத்திலும்/ Sri Lanka என்று ஆங்கிலத்திலும்) (சிலோன் என்று 1972க்கு முன்பும்) இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பாலுள்ள ஒரு அழகான தீவு தேசம் ஆகும். அமைதியான நாடாக இருந்துவந்த இந்நாடு, கடந்த இரு தசாப்தங்களாக இன முரண்பாடுகளுக்குள் சிக்கித் திணறிக்கொண்டுள்ளது. இதன் உச்ச கட்டமாக அரசாங்கத்துக்கும், தொடக்கத்தில் பல தமிழ் போராளிக் குழுக்களுக்கும் தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான உள்நாட்டுப் போர், நாட்டின் இயல்பு நிலையைக் குழப்பியுள்ளது. கடந்த சில வருடங்களாக அமுலிலிருக்கும் போர் நிறுத்த உடன்படிக்கை நார்வே நாட்டின் அனுசரணையோடு 2002இன் முற்பகுதியில் அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கைச்சாத்தானது. இது அமைதிக்கான நம்பிக்கையை ஏற்படுத்திய போதும் தற்போது மீண்டும் நாட்டின் அரசியல் உறுதிப்பாடும் போர் நிறுத்த உடன்படிக்கையும் கேள்விக்குறியாகியுள்ளன.

சார்லி சாப்ளின்

சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் (Sir Charles Spencer Chaplin ) (ஏப்ரல் 16, 1889 - டிசம்பர் 25, 1977) என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின், ஹாலிவுட் திரையுலகின் மிகப்புகழ் பெற்ற கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல பரிணாமங்கள் உண்டு.

தமிழ்நாடு

தமிழ்நாடு ஓர் இந்திய மாநிலமாகும். தமிழ்நாடு, தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது. தமிழ்நாடு இந்தியத் தீபகற்பத்தின் தெற்குக் கோடியில் அமைந்துள்ளது. வடக்கில் கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களும், மேற்கில் கேரளாவும் உள்ளன. யூனியன் பிரதேசமாகிய பாண்டிச்சேரி தமிழ் நாட்டின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இம்மாநிலத்துக்குத் தென்கிழக்கில் இலங்கைத் தீவு உள்ளது.

சென்னை

சென்னை (Chennai) தமிழ்நாட்டின் தலைநகரும் இந்தியாவின் நான்காம் பெரிய நகரும் ஆகும். 1996ஆம் வருடத்திற்கு முன்னர் இந்நகரம் மதறாஸ் (Madras) என்றும் அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. சுமார் 7.45 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று. பதினேழாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால் பதித்தது முதலே சென்னை நகரம் முக்கிய நகரமாக வளர்ந்து வருகிறது. சென்னை, தென்னிந்தியாவின் வாசலாக கருதப்படுகிறது. சென்னை நகரில் உள்ள மரினா கடற்கரை, உலகின் நீளமான கடற்கரைகளுள் ஒன்று. சென்னை, கோலிவுட் எனப்படும் தமிழ்த் திரைப்படத்துறையின் தாயகம். பல விளையாட்டு அரங்கங்கள் உள்ள சென்னையில் பல விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன.

நகர்பேசி

நகர்ந்து கொண்டே பேசக் கூடிய வசதி அளிக்கும் தொலைபேசிகள் நகர்பேசி என்று அழைக்கப் படுகின்றன. இவை கம்பியில்லா தொலைதொடர்புக்கு உதவுபவை. வழக்கம் தொட்டே சாதாரண தொலைபேசிகள் இயங்க அவற்றிற்கு சுவற்றிலுள்ள தொலைபேசி இணைப்பகத்தின் முனையத்துடன் கம்பித் தொடர்பு தேவை. நகர்பேசிகளுக்கு இத்தகைய இணைப்புகள் வானலைகள் மூலம் ஏற்படுத்தப் படுவதால் அவற்றுக்குக் கம்பித் தொடர்பு தேவையில்லை. நகர்பேசிக்கு மற்ற பெயர்கள் செல்பேசி (செல்லுமிடமெல்லாம் எடுத்துச் சென்று பேச) மற்றும் அலைபேசி (அலைந்து கொண்டே பேச).

இந்தியா

இந்தியா, தெற்கு ஆசியாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இந்தியா, இந்திய துணைக்கண்டத்தின் பெரும் பகுதியை தன்னுள் அடக்கியுள்ளது. இந்தியா பாரதம் என்றும் அழைக்கப் படுகிறது. இந்தியா என்ற பெயர் சிந்து நதியின் பெயரிலிருந்து பெறப்பட்டது. பரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ள நாடு. இந்தியாவின் கடற்கரை மொத்தம் 7000 கி.மீ. நீளம் கொண்டது. நிலப்பகுதியில், வங்காளதேசம், மியன்மார், சீனா, பூட்டான், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் என்பவற்றுடன் இந்தியா எல்லைகளைக் கொண்டுள்ளது. இலங்கையும், மாலத்தீவும் இந்தியக்கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் உள்ளன.

கொலம்பஸ்

கிரிஸ்டோபர் கொலம்பஸ் (Christopher Columbus ) (1451-1506) ஒரு கடல் பயணி, வணிகர். இவர் 1492-இல் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை (ஸ்பெயின் நாட்டுக்கொடியுடன்) வந்தடைந்த முதல் ஐரோப்பியர் ஆவார்.அவர் இத்தாலியின் ஜெனோவா என்ற ஊரைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது.

ஆப்பிள்

ஆப்பிள் ஒரு குளிர் பகுதிப் பழம் ஆகும். பழுத்த ஆப்பிள் வெளிப்புறம் பெரும்பாலும் சிவப்பாகவும், சில இரகங்களில் இளம்பச்சை அல்லது மஞ்சளாகவோ காணப்படும். ஆப்பிள் பழத்தின் தோல் மெல்லியதாயும், பழச்சதை உறுதியாகவும் இருக்கும். சதையின் உள்ளே சில சிறு விதைகள் இருக்கும். மத்திய ஆசியாவில் தான் ஆப்பிள் முதலில் பயிர் செய்யப்பட்டது. தற்போது, ஆப்பிள் உலகின் எல்லா குளிர் பகுதிகளிலும் வளர்க்கப்படுகிறது. ஆப்பிளின் அறிவியல் பெயர் Malus sp. ஆப்பிள் மற்ற பழங்களைப் போல பெரும்பாலும் சமைக்கப்படாமலேயே சாப்பிடப்பட்டாலும் அது பல பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆப்பிளைக் கொண்டு பழரசங்களும், சிடர் என்ற பானமும் தயாரிக்கப்படுகின்றன.

ஐக்கிய இராச்சியம்

ஐக்கிய இராச்சியம் (பாரிய பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்), மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடாகும். அது காமன்வெல்த் நாடுகள், ஜி8, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ ஆகியவற்றின் ஒரு அங்கமாகும். பொதுவாக ஐக்கிய இராச்சியம் என்றோ UK என்றோ அல்லது (தவறுதலாக) பாரிய பிரிட்டன் என்றோ பிரிட்டன் என்றோ அழைக்கப்படும் ஐக்கிய இராச்சியமானது மொத்தமாக நான்கு பாகங்களைக் கொண்டது. இவற்றில் மூன்று — பண்டைய நாடுகளான இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்து ஆகியவை — பாரிய பிரிட்டன் தீவில் உள்ளன. நான்காவது பாகமான, அயர்லாந்து தீவிலுள்ள வடக்கு அயர்லாந்து, ஐக்கிய இராச்சியத்தின் ஒரு மாகாணமாகக் கருதப் படுகிறது. வடக்கு அயர்லாந்துக்கும் அயர்லாந்து குடியரசுக்கும் நடுவிலுள்ள எல்லையானது ஐக்கிய இராச்சியத்தின் ஒரே சர்வதேச நில எல்லையாகும். ஐ.இ உலகெங்கும் பற்பல கடல் கடந்த நிலப்பரப்புகளையும் கொண்டுள்ளது; பற்பல சார்பு நாடுகளுடன் உறவுகளையும் கொண்டுள்ளது.

சோழர்

1030-ல் சோழ மண்டலம்
1030-ல் சோழ மண்டலம்

சோழர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இரு குலங்கள் சேரர்களும் பாண்டியர்களும் ஆவர். சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது. கிறித்துவுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சிற்றரசர் நிலைக்குத் தாழ்ந்து போயினர். பழைய சோழமண்டலப் பகுதிகளிலே, உறையூர், பழையாறு போன்ற இடங்களில் அவர்களது சிற்றரசுகள் நிலவின. கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழ் நாட்டில் சோழர்கள் மீண்டும் வலிமை பெறத்தொடங்கினர். பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது. கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில் நிலவியது.



முதற்பக்கக் கட்டுரைகள் காப்பகம்
  • விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள்