விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2015

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திசம்பர் 6, 2015

கண்புரை என்பது கண் வில்லையில் ஒளி ஊடுறுவுத்தன்மையைக் குறைக்கும் ஒரு நிலைமை ஆகும். கண்ணில் திரை விழுந்துள்ளது என்றும் சொல்வதுண்டு. திரை என்றால், தோல் சுருக்கம் / கண்புரை, என்று இரு பொருள் கொள்ளலாம். கண்புரைகள் தன் இயல்பு-நிலையிலிருந்து மாற்றமடைந்த ஒருவித புரதத்தால் ஆனவை; இவை விழித்திரையில் வீழும் ஒளியின் அளவை குறைக்கவோ அல்லது முழுமையாகத் தடுக்கவோ செய்கின்றன. இது பெரும்பாலும் முதிர்ந்த வயதில் ஏற்படக்கூடிய ஓர் நிலமை ஆகும். அச்சமயத்தில் அவர்களின் கிட்டப்பார்வை கூடுதலாகி கண்வில்லை சற்றே மஞ்சளாக மாறி ஒளிபுகா வண்ணம் இருப்பதைக் காணவியலும். அவர்களுக்கு நீல நிறத்தை காண்கின்ற திறனும் குறையும். மேலும்...


15 வது இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வீட்டை பட்டியலிடுதல், மக்கள் தொகை கணக்கெடுப்பு என இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. முதற்கட்டமான வீட்டை பட்டியலிடுதலில், அனைத்து கட்டிடங்களை பற்றிய தகவல்கள் சேகரிப்பு ஏப்ரல் 1, 2010 அன்று தொடங்கியது. தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கானத் தகவல்களும் இந்த முதற்கட்டப் பணியின்போது சேகரிக்கப்பட்டன. பதியப்பட்ட அனைத்து இந்தியர்களுக்கும், இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையத்தால் ஒரு 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண் வெளியிடுவதற்கு இந்தப் பதிவேட்டிற்காக சேகரிக்கப்பட்டத் தகவல்கள் பயன்படுத்தப்பட்டன. மேலும்...


நவம்பர் 22, 2015

கடல் கொள்ளை என்பது கடலில் நடத்தப்படும் ஒரு கொள்ளை அல்லது குற்றச்செயல் ஆகும். இந்தச் சொல் நிலத்திலோ காற்றிலோ பெரும் நீர்ப்பரப்பிலோ அல்லது கடற்கரையிலோ நிகழும் செயல்பாடுகளுக்கும் பொருந்தும். கொள்ளை, கடற்கொள்ளை என்பன பன்னாட்டு நடைமுறைச் சட்டத்தில் குற்றம் என நடைமுறையிலுள்ளது. கடற்கொள்ளையில் ஈடுபட்டுள்ளவர்கள் கடற்கொள்ளையர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். குற்றம் புரிந்த கடற்கொள்ளையர்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு இராணுவ விதிகளின்படி தண்டிக்கப்பட்டனர். மேலும்...


வெலிகமை (வெலிகாமம்) என்பது இலங்கையின் தென் மாகாணத்தில் மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய நகராகும். இது கொழும்பிலிருந்து 144 கிமீ தெற்கில் அமைந்துள்ளது. பிராந்தியத்திலுள்ள முதன்மையான பட்டினங்களாகிய காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகியவற்றுக்கு இணையான ஒரு வணிக நகராகும். மேலும் இது பூகோள அமைப்பில் முக்கியமான இடத்தினைப் பெறுகின்றது. இலங்கையிலுள்ள பிரதான குடாக்களுள் முக்கியமானது ஆகும். மேலும்...


நவம்பர் 15, 2015

மெக்சிக்கோ அமெரிக்கப் போர் என்பது 1846-1848 ஆண்டுகளில் மெக்சிக்கோ மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட போரைக் குறிக்கும். 1845 ஆம் ஆண்டு அமெரிக்கா டெக்சாசை தன்னுடன் இணைத்துக்கொண்டதை எதிர்த்து மெக்சிக்கோ இப்போரை நடத்தியது. 1836 இல் டெக்சாசு மெக்சிக்கோவுக்கு எதிராகப் புரட்சி நடத்தி மெக்சிக்கோவிலிருந்து பிரிந்தாலும் மெக்சிக்கோ டெக்சாசைத் தன்னுடைய பகுதியாகக் கருதியது. 1846 இன் வசந்த காலத்திலிருந்து 1847 இன் இலையுதிர் காலம் வரை பெரும் போர் நடைபெற்றது. அமெரிக்கப் படைகள் விரைவாக நியு மெக்சிக்கோவையும் கலிபோர்னியாவையும் கைப்பற்றின. மேலும்...


மாமல்லபுரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுகுன்றம் வட்டம், திருக்கழுகுன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். 7ஆம் நூற்றாண்டில் பல்லவ நாட்டின் முக்கிய துறைமுகமாக விளங்கிய நகரமாகும். இந்நகரம் மகாபலிபுரம் என்றும் வழங்கப்படுகிறது. மாமல்லபுரத்தில் உள்ள கட்டடங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்: குடைவரைக் கோயில்கள் அல்லது மண்டபங்கள்; ஒற்றைக்கல் கோயில்கள் அல்லது இரதங்கள் மற்றும் கட்டுமானக் கோயில்கள். மேலும்...


சூலை 5, 2015

ஈரசோனியச் சேர்மம் அல்லது ஈரசோனிய உப்பு (Diazonium Compound or Diazonium Salt) என்பது R-N2+X என்னும் பொதுத் தொழிற்பாட்டுக் கூட்டத்தைக் கொண்ட கரிம வேதியியற் சேர்மம் ஆகும். இங்கு R என்பது அற்கைல் அல்லது ஏரைல் கூட்டத்தையும் X என்பது ஏலைடு போன்ற கனிம வேதியியல் எதிர்மின்னயனியை அல்லது கரிம வேதியியல் எதிர்மின்னயனியைக் குறிக்கும். அசோச் சாயங்களின் கரிம வேதியியல் தொகுப்பில் ஈரசோனிய உப்புகள் (சிறப்பாக, ஏரைல் கூட்டத்தைக் கொண்டவை) பயன்படுத்தப்படுகின்றன. மேலும்...


திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு (திசம்பர் 16, 1945 - சனவரி 26, 1957) என்பது முந்தைய இந்திய மாநிலமான திருவாங்கூர்-கொச்சி மாநிலத்தின் அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். இக்கட்சி நாகர்கோவிலைத் தலைமையகமாகக் கொண்டு தமிழின ஆர்வலர்களால் உருவாக்கப்பட்டது. திருவாங்கூர்-கொச்சி மாநிலத்தில் தமிழர்கள் அதிகமாக இருக்கும் வட்டங்களை சென்னை மாகாணத்தோடு இணைக்க வேண்டும் என்பதே இக்கட்சியின் முக்கியக் கொள்கையாக இருந்தது. இக்கட்சியில் பரவலாக அறியப்படும் மற்றொரு முக்கிய உறுப்பினர் கன்னியாக்குமரி மாவட்டத்தின் தந்தை என அழைக்கப்படும் ஏ. நேசமணி ஆவார். மேலும்...


மே 24, 2015

சோழர் கடற்படை என்பது சோழப் பேரரசின் உள்ளடக்கப்பட்ட கடற்படைகள் மற்றும் அதன் ஏனைய கடல் படைக்கலங்கள் என்பவற்றைக் கொண்டிருந்தது. சோழப் பேரரசானது இலங்கை, சிறீவிஜயம் (தற்போதைய இந்தோனேசியா) ஆகியவற்றை வெற்றி கொண்டு விரிவடைவதற்கும், இந்து சமயம், திராவிடக் கட்டிடக்கலை, திராவிடக் கலாச்சாரம் தெற்காசியா என்பன தெற்காசியாவில் பரவுவதற்கும், கி.பி 900 காலப்பகுதியில் கடற்கொள்ளையினை தென்கிழக்காசியா தடுப்பதிலும் சோழர் கடற்படை முக்கிய பங்காற்றியது. இடைக்காலச் சோழர்கள் ஆட்சிக் காலத்தில் கடற்படை அளவிலும் தரத்திலும் வளர்ந்தது. சோழ கடற்படைத் தளபதிகள் சமூகத்தில் அதிகம் மதிக்கப்பட்டும் செல்வாக்கும் பெற்றும் காணப்பட்டனர். கடற்படையின் கட்டளைத்தளபதிகள் சில சந்தர்ப்பங்களில் ராஜதந்திரிகளாகவும் செயற்பட்டனர். கி.பி 900 முதல் கி.பி. 1100 வரை, சிறிய காயல் உட்பகுதிகளில் இருந்து ஆசியா முழுவதற்கும் ராஜதந்திர அடையாளமாகவும் மிகுந்த வல்லமை நீட்சியாகவும் கடற்படை காணப்பட்டது. மேலும்...


ஆசியா உலகின் மிகப்பெரியதும், அதிக மக்கள்தொகை கொண்டதுமான ஒரு கண்டம். பெரும்பாலும் கிழக்கு, வடக்கு ஆகிய அரைக்கோளப் பகுதிகளில் அமைந்துள்ள இது, யுரேசியா நிலப்பரப்பின் ஒரு பகுதியாகும். புவி மேற்பரப்பின் 8.7% பரப்பளவு ஆசியாக் கண்டத்தில் உள்ளது. உலக நிலப்பரப்பில் இது 30% ஆகும். 3.9 பில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட ஆசியாவில், உலகின் மக்களில் ஏறத்தாழ 60 சதவீதம் பேர் வாழ்கின்றனர். 20 ஆம் நூற்றாண்டில் ஆசியாவின் மக்கள்தொகை ஏறத்தாழ நான்கு மடங்காகியது. பொதுவாக ஆசியா யுரேசியாவின் கிழக்கு ஐந்தில் நான்கு பகுதியைக் கொண்டதாகக் கொள்ளப்படுகிறது. இது சூயெசுக் கால்வாய்க்கும் ஊரல் மலைகளுக்கும் கிழக்கிலும்; காக்கேசிய மலைகள், கசுப்பியன் கடல், கருங்கடல் என்பவற்றுக்குத் தெற்கிலும் அமைந்துள்ளது. கிழக்கில் பசிபிக் பெருங்கடலும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும், வடக்கில் ஆர்க்டிக் பெருங்கடலும் ஆசியாவின் எல்லைகளாக உள்ளன. மேலும்...


மே 10, 2015

சோழர் கடற்படை என்பது சோழப் பேரரசின் உள்ளடக்கப்பட்ட கடற்படைகள் மற்றும் அதன் ஏனைய கடல் படைக்கலங்கள் என்பவற்றைக் கொண்டிருந்தது. சோழப் பேரரசானது இலங்கை, சிறீவிஜயம் (தற்போதைய இந்தோனேசியா) ஆகியவற்றை வெற்றி கொண்டு விரிவடைவதற்கும், இந்து சமயம், திராவிடக் கட்டிடக்கலை, திராவிடக் கலாச்சாரம் தெற்காசியா என்பன தெற்காசியாவில் பரவுவதற்கும், கி.பி 900 காலப்பகுதியில் கடற்கொள்ளையினை தென்கிழக்காசியா தடுப்பதிலும் சோழர் கடற்படை முக்கிய பங்காற்றியது. இடைக்காலச் சோழர்கள் ஆட்சிக் காலத்தில் கடற்படை அளவிலும் தரத்திலும் வளர்ந்தது. சோழ கடற்படைத் தளபதிகள் சமூகத்தில் அதிகம் மதிக்கப்பட்டும் செல்வாக்கும் பெற்றும் காணப்பட்டனர். கடற்படையின் கட்டளைத்தளபதிகள் சில சந்தர்ப்பங்களில் ராஜதந்திரிகளாகவும் செயற்பட்டனர். கி.பி 900 முதல் கி.பி. 1100 வரை, சிறிய காயல் உட்பகுதிகளில் இருந்து ஆசியா முழுவதற்கும் ராஜதந்திர அடையாளமாகவும் மிகுந்த வல்லமை நீட்சியாகவும் கடற்படை காணப்பட்டது. மேலும்...


ஆசியா உலகின் மிகப்பெரியதும், அதிக மக்கள்தொகை கொண்டதுமான ஒரு கண்டம். பெரும்பாலும் கிழக்கு, வடக்கு ஆகிய அரைக்கோளப் பகுதிகளில் அமைந்துள்ள இது, யுரேசியா நிலப்பரப்பின் ஒரு பகுதியாகும். புவி மேற்பரப்பின் 8.7% பரப்பளவு ஆசியாக் கண்டத்தில் உள்ளது. உலக நிலப்பரப்பில் இது 30% ஆகும். 3.9 பில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட ஆசியாவில், உலகின் மக்களில் ஏறத்தாழ 60 சதவீதம் பேர் வாழ்கின்றனர். 20 ஆம் நூற்றாண்டில் ஆசியாவின் மக்கள்தொகை ஏறத்தாழ நான்கு மடங்காகியது. பொதுவாக ஆசியா யுரேசியாவின் கிழக்கு ஐந்தில் நான்கு பகுதியைக் கொண்டதாகக் கொள்ளப்படுகிறது. இது சூயெசுக் கால்வாய்க்கும் ஊரல் மலைகளுக்கும் கிழக்கிலும்; காக்கேசிய மலைகள், கசுப்பியன் கடல், கருங்கடல் என்பவற்றுக்குத் தெற்கிலும் அமைந்துள்ளது. கிழக்கில் பசிபிக் பெருங்கடலும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும், வடக்கில் ஆர்க்டிக் பெருங்கடலும் ஆசியாவின் எல்லைகளாக உள்ளன. மேலும்...


ஏப்ரல் 5, 2015

மருத்துவ சோதனையில், ஒரு நோயானது நோயை உருவாக்கும் பண்பு கொண்ட வைரசு, பக்டீரியா, பூஞ்சை, புரோட்டோசோவா, மற்றும் பல்கல ஒட்டுண்ணிகள் போன்ற உயிரினங்களின் காரணமாக ஏற்படுகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டால், அந்நோய் தொற்றுநோய் என அழைக்கப்படுகிறது. இந்நோய்க்காரணிகள் விலங்குகளிலும், தாவரங்களிலும் நோயை ஏற்படுத்தலாம். தொற்றுநோயானது ஒரு குறிப்பிட்ட இனத்துக்குள்ளேயோ அல்லது ஒரு இனத்திலிருந்து, வேறொரு இனத்துக்கோ கடத்தப்படலாம். நோய்க்கடத்தல் வெவ்வேறு வழி முறைகளில் நடக்கலாம். நேரடி தொடுகையினால், காற்றின் வழியாக, நீரின் ஊடாக, உணவினால், தொடுகைக்குட்படும் பொருட்களினால் அல்லது ஒரு நோய்க்காவியினால் தொற்றுநோயானது கடத்தப்படலாம். மேலும்...


எறும்பு குழுவாக வாழும் ஒரு பூச்சியினமாகும். இவை மிகவும் வியக்கவைக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட சமூக வாழ்வைக் கொண்டிருப்பனவாகும். ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் அல்லது குழுவில் உள்ள எறும்புகள் தமக்கிடையே பரிமாறிக் கொள்ளும் வேதிப்பொருள் வழிப்பட்ட தொடர்பாடலானது மிகவும் சிக்கலானதும், இலகுவில் புரிந்து கொள்ளப்படாததாகவும் இருக்கிறது. 2009 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இவற்றின் எண்ணிக்கை உயர் எல்லையாக, கிட்டத்தட்ட 22,000 இனங்கள் இருப்பதாக அறியப்படுகிறது. எறும்புகளின் மிகவும் ஒழுங்காக கட்டமைக்கப்பட்டிருக்கும் சமூக வாழ்வு, தமது வாழ்விடத்தை தமக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் இயல்பு, தம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்ளும் திறன் போன்றவையே எறும்புகளின் வெற்றிக்கான காரணங்களாக கருதப்படுகின்றன. மேலும்...


பெப்ரவரி 8, 2015

வேலூர், தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டைச் சேர்ந்த நகரமும் வேலூர் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். பாலாற்றின் கரையில் உள்ள வேலூரின் முக்கிய சுற்றுலா இடமாக வேலூர் கோட்டை விளங்குகிறது. வெவ்வேறு காலங்களில் இடைக்காலச் சோழர்கள், பிற்கால சோழர்கள், விஜயநகரப் பேரரசு, இராஷ்டிரகூடர்கள், பல்லவர்கள், கர்நாடக இராச்சியம் மற்றும் ஆங்கிலேயர்கள் வேலூரை ஆண்டுள்ளனர். இது மாநிலத் தலைநகர் சென்னைக்கு மேற்கே சுமார் 145 கிலோமீட்டர் (90 மைல்) தொலைவிலும் திருவண்ணாமலைக்கு கிழக்கில் 82 கிலோமீட்டர் (51 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. தோல் தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு சேவைத் துறை நிறுவனங்கள் இந்நகரின் பொருளாதாரத்திற்கு பெரிதும் பங்களிக்கின்றன. இந்நகர மக்கள் பல்வேறு உள்ளூர் மற்றும் வெளியூர் தொழில் துறைகளில் பணியாற்றுகிறார்கள். மாவட்டத் தலைநகரமாக இருப்பதால் இங்கு வேலூர் மாவட்ட நிர்வாக அலுவலகங்கள், அரசு கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள், பள்ளிகள் முதலியன அமைந்துள்ளன. மேலும்...


தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்பதின் வடமொழியாக்கமே பிரகதீசுவரர் கோயில் அல்லது தஞ்சை பெரிய கோயில் ஆகும். தஞ்சாவூரிலுள்ள சிவபெருமானுக்குரிய இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகும். அத்துடன் இந்தியாவில் அமைந்துள்ள அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட கோவில்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் (கி.பி.985-1014) கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர் தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக்கோயில், 17 ஆம் மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் ஆகியது. தஞ்சைப் பெரியகோவில் எனவும் இக்கோவில் அறியப்படுகிறது. மேலும்...


சனவரி 11, 2015

கொழுப்பு அமிலம் (Fatty acid) என்பது நிறைவுற்ற அல்லது நிறைவுறாத, நீளமான, கிளைக்காத, கொழுப்பார்ந்த பின் தொடரியைக் கொண்ட கார்பாக்சிலிக் அமிலமாகும். இயற்கையில் காணப்படும் கொழுப்பு அமிலங்கள் இரட்டைப் படை எண்ணிக்கையில் (நாலு முதல் இருபத்தியெட்டு வரை) கார்பன் அணுக்களை தொடரியாகக் கொண்டிருக்கும். சாதரணமாக கொழுப்பு அமிலங்கள், டிரைகிளிசரைடு மற்றும் பாஸ்போகொழுமியத்திலிருந்து வருவிக்கப்பட்டவையாகும். கொழுப்பு அமிலங்கள் பிற மூலக்கூறுகளுடன் இணைக்கப்படாமல் இருக்கும்போது, தனிக்கொழுப்பு அமிலங்கள் என்றழைக்கப்படுகின்றன. மேலும்...


இயற்கணிதக் குறிமுறை (Algebraic notation அல்லது AN) என்பது சதுரங்க விளையாட்டில் நகர்த்தல்களை பதியவும் விளக்கவும் பயன்படுத்தும் ஒரு வழியாகும். இதுவே அனைத்து சதுரங்க நிறுவனங்களில், புத்தகங்களில், சஞ்சிகைகளில் மற்றும் பத்திரிகைகளில் பயன்படுத்தப்படும் நியம முறையாகும். இங்கிலாந்து தவிர்ந்த மற்ற ஐரோப்பிய நாடுகள் இயற்கணிதக் குறிமுறையை, விளக்கக் குறிமுறை பொதுவாக இருந்த காலத்தில் பயன்படுத்தின. மேலும்...