இராமநாதபுரம்
இராமநாதபுரம்
இராம்நாடு, முகவை | |
---|---|
![]() பாம்பன் பாலத்தில் இருந்து பாம்பன் தீவின் தோற்றம் | |
அடைபெயர்(கள்): இராம்நாடு | |
ஆள்கூறுகள்: 9°21′50″N 78°50′22″E / 9.363900°N 78.839500°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | இராமநாதபுரம் |
அரசு | |
• வகை | சிறப்பு நிலை நகராட்சி |
• நிர்வாகம் | இராமநாதபுரம் நகராட்சி |
• மக்களவை உறுப்பினர் | நவாஸ் கனி |
• சட்டமன்ற உறுப்பினர் | காதர் பாட்ஷா (எ) முத்துராமலிங்கம் |
• மாவட்ட ஆட்சியர் | திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன், இ.ஆ.ப. |
ஏற்றம் | 35 m (115 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 61,440 |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீடு | 623 xxx |
தொலைபேசி குறியீடு | 04567 |
வாகனப் பதிவு | TN 65 |
சென்னையிலிருந்து தொலைவு | 509 கி.மீ. (316 மைல்) |
திருச்சியிலிருந்து தொலைவு | 182 கி.மீ. (113 மைல்) |
மதுரையிலிருந்து தொலைவு | 115 கி.மீ. (71 மைல்) |
விருதுநகரிலிருந்து தொலைவு | 119 கி.மீ (74 மைல்) |
இணையதளம் | ramanathapuram |
இராமநாதபுரம் (Ramanathapuram) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இதுவே மாவட்டத்தின் தலைநகரமாகும்.[2] இது இராம்நாடு என்றும் முன்பு முகவை[3] என்றும் அழைக்கப்பட்டது.
வரலாறு
[தொகு]பொ.ஊ. 1063இல் முதலாம் ராஜேந்திர சோழன், இந்நகரை தன் ஆளுமையின் கீழ் கொண்டுவந்தனால், இது சிறிது காலம் சோழ பேரரசின் கீழ் இருந்தது.
பின்னர் பொ.ஊ. 1520இல் விஜயநகர பேரரசை சேர்ந்த நாயக்கர்கள் பாண்டிய நாட்டை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர், இதனால் பாண்டிய நாட்டின் கீழ் ஒரு பாளையமாக இருந்த இராமநாதபுரம் சமஸ்தானம் நாயக்கரின் கீழ் பதினேழாம் நூற்றாண்டு வரை இருந்தது. மதுரை நாயக்கர்கள் காலத்தில் மறவர்கள், மதுரை ஆட்சியின் ராமநாதபுரத்தின் படைத்தலைவர்களாக இருந்தனர். நாயக்க மன்னரின் பலவீனத்தை பயன்படுத்தி இரகுநாதத்தேவர் என்னும் சேதுபதி மன்னரானார். இதில் சிவகங்கை மன்னரும் முக்கியமானவர். 1730இல் ஆற்காடு நவாப்பான சந்தா சாகிப் ராமநாதபுரத்தை கைபற்றினார். இந்த பகுதி 1741இல் மராத்தியர்களின் கீழும், பின்னர் 1744இல் நிஜாம்மின் கீழும் இருந்தது. 1752இல் நவாப்பின் மேல் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக, கடைசி நாயக்க மன்னரின் தலைமையில் உள்ளூர் தலைவர்கள் கலகம் செய்தனர். அந்த நேரத்தில், ஆற்காடு நவாப் அரியாசனத்தில் சந்தா சாகிப் மற்றும் முஹம்மது அலி ஆகிய இருவர் இருந்தனர் மற்றும் இந்த மாவட்டம் கர்நாடக பிரதேசத்தின் பகுதியாக இருந்தது. இராமநாதபுரம் நகரம் முந்தைய மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது . பிரித்தானியர்கள் சந்தா சாகிப்பையும், பிரஞ்சுக்காரர்கள் முஹம்மது அலியையும் ஆதரித்தனர். இதுவே தென்பகுதிகளில் தொடர் கருநாடகப் போர்களுக்கு வழிவகுத்தது.[4]
ராணி வேலு நாச்சியாரின் மறைவுக்கு பின்னர், மருது சகோதரர்கள் கிழக்கு இந்திய கம்பெனிக்கு முறையாக வரி செலுத்தி சிவகங்கையின் அதிகாரத்தில் இருந்தனர். கௌரிவல்லப பெரியஉடையத்தேவர், மருது சகோதரர்களிடமிருந்து சிவகங்கையை மீட்க ஆங்கிலேயர்களின் உதவியை நாடினார். களோனல் அக்னல் மருது சகோதரர்களை பிடித்து தூக்கில் போட்டுவிட்டு கௌரிவல்லப பெரியஉடையத்தேவரை, சிவகங்கையின் ஜமின் ஆக்கினார். 1892இல் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டு பிரித்தானிய ஆட்சியர் நிர்வாகத்திற்காக நியமிக்கப்பட்டார்.
1910 ஆம் ஆண்டு மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் பகுதிகளைக் கொண்டு இராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்ட முன் (திருப்பத்தூர்),(திருவாடனை),(பரமக்குடி),(சிவகங்கை),(அருப்புக்கோட்டை) ( இராமேஸ்வரம் தீவு) மற்றும், (இராமநாதபுரம்) ஆகியவை இந்த வட்டங்கள் முந்தைய மதுரை மாவட்டத்தில் இருந்தது. மற்றும் (விருதுநகர்), (ஶ்ரீவில்லிபுத்தூர்) மற்றும்,(சாத்தூர்) ஆகியவை இந்த வட்டங்கள் முந்தைய திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்தது. ஜே.எப்.ப்ரைண்ட் முதல் மாவட்ட ஆட்சியர் ஆனார். பிரித்தானியர்களின் காலத்தில் இந்த மாவட்டம் இராம்நாடு என அழைக்கப்பட்டது. இந்த பெயர் சுதந்திரத்திற்கு பின்பும் நீடித்தது. பின்னர் தமிழ் பெயராகிய இராமநாதபுரம் இந்த மாவட்டத்திற்கு சூட்டப்பட்டது. இந்த பகுதியின் மற்றொரு பெயர் முகவை. முகவை என்றால் வைகையின் முகம், அதாவது வைகை நதி கடலில் சங்கமிக்கும் இடம் என்னும் பொருள்.
புவியியல்
[தொகு]இவ்வூரின் அமைவிடம் 9°23′N 78°50′E / 9.38°N 78.83°E ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 2 மீட்டர் (6 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 33 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 14,716 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 61,440 ஆகும். அதில் 30,904 ஆண்களும், 30,536 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 93.07% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 988 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 6370 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 963 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 76.39%, இசுலாமியர்கள் 19.71%, கிறித்தவர்கள் 3.08% மற்றும் பிறர் 0.81% ஆகவுள்ளனர்.[6]
நகர நிர்வாகம்
[தொகு]இராமநாதபுரம் ஒரு சிறப்பு நிலை நகராட்சி. இராமேஸ்வரம் - மதுரை மற்றும் திருச்சி - இராமேஸ்வரம் தொடருந்து பாதையை அகல தொடருந்து பாதையாக மாற்றிய பின், இந்த நகரம் இந்தியாவின் முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டது. மேலும் தேசிய நெடுஞ்சாலை 49, 210 மற்றும் கிழக்கு கடற்கரை சாலை ஆகியவை இராமநாதபுரத்தை மற்ற நகரங்களுடன் இணைக்கிறது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்
[தொகு]நகராட்சி அதிகாரிகள் | |
---|---|
தலைவர் | |
ஆணையர் | |
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் | |
சட்டமன்ற உறுப்பினர் | காதர் பாட்ஷா (எ) முத்துராமலிங்கம் |
மக்களவை உறுப்பினர் | நவாஸ் கனி |
இராமநாதபுரம் நகராட்சியானது இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த காதர் பாட்ஷா (எ) முத்துராமலிங்கம் வென்றார்.
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் கட்சியைச் (இஒமுலீ) சேர்ந்த நவாஸ் கனி வென்றார்.
போக்குவரத்து
[தொகு]இந்நகரம் தமிழகத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை 49 ஆனது, இராமேசுவரம் - மதுரையை இணைக்கிறது. தமிழ்நாட்டின் முக்கிய கடற்கரை சாலையாக கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. இது மாநில தலைநகரமான சென்னை மற்றும் இராமநாதபுரத்தை இணைக்கிறது. இந்த சாலையானது இராமநாதபுரத்தை, பாண்டிச்சேரி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியுடன் இணைக்கிறது.
இராமநாதபுரத்தில் தொடருந்து நிலையம் ஒன்று உள்ளது. இது மதுரை சந்திப்பு வழியாக, இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு, இரயில் போக்குவரத்து மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
இங்கிருந்து 120 கி.மீ தொலைவிலுள்ள மதுரை வானூர்தி நிலையம் அருகிலுள்ள வானூர்தி நிலையம் ஆகும்.
புனிதத் தலங்கள்
[தொகு]- இராமேசுவரம் ஆனது சிவன் மற்றும் இராமரின் புனித யாத்திரை தலங்களாக இந்துக்கள் அறியப்படும் இடமாகும்.
- உலகெங்கிலும் இருந்து முஸ்லிம்கள் வருகை தரும் ஏர்வாடி தர்கா புனிதத் தலமாக கருதப்படுகிறது.
சுற்றுலா தலங்கள்
[தொகு]இராமநாதபுரம் அரண்மனை
[தொகு]
இராமநாதபுரம் அரண்மனை நகரில் அமைந்துள்ளது. இது 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இந்த அரண்மனைக்குள் இராமலிங்க விலாசம் என்னும் அரசவை மண்டபமும் கௌரி விலாசம் என்னும் விருந்தினர் மாளிகையும் இராசராசேசுவரி கோவிலும் வேறு சில மாளிகைகளும் இருக்கின்றன. இங்குள்ள இராமலிங்க விலாசத்தில்தான் வீரபாண்டிய கட்டபொம்மன் ஜாக்சன் என்னும் ஆங்கிலேயே அதிகாரியுடன் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டார். எனவே இந்த அரண்மனை இந்திய விடுதலைப் போராட்டத்தில் தொடர்புடைய ஒரு அரண்மனையாக பார்க்கப்படுகிறது.
வழிபாட்டுத் தலங்கள்
[தொகு]இராமநாதபுரத்திற்கு கிழக்கே இராமேஸ்வரம் மேற்கே திருஉத்திரகோசமங்கை தெற்கே திருப்புல்லாணி வடக்கே தேவிபட்டினம் ஆகிய முக்கிய இந்து வழிபாட்டுத் தளங்கள் இம்மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கின்றன. திருப்புல்லாணி அருகே உள்ள சேதுக்கரை, இராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், தேவிபட்டினம் நவபாஷனம் ஆகிய இடங்களில் ஆடி அமாவாசைக்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து தீர்த்தமாடுவர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "இராமநாதபுரம் நகராட்சி".
- ↑ "இராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சி". தமிழ்நாடு அரசு. Archived from the original on 2013-07-27. Retrieved அக்டோபர் 22, 2013.
- ↑ "மோகனூர்... முகவைனூர்... முகவை..." Hindu Tamil Thisai. 2025-01-30. Retrieved 2025-01-31.
- ↑ இராமநாதபுரம்
- ↑ "Ramanathapuram". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30, 2007.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்