பகாசுரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பகாசுரன் மகாபாரதத்தின் உப கதை ஒன்றின் நாயகன். ஏகசக்கரம் என்ற கிராமத்தை அடுத்த காட்டில் வசித்து வந்த அரக்கன். குந்தியும், பாண்டவர்களும் தங்கியிருந்த அரக்கு மாளிகை எரிந்த பிறகு தப்பிப் பழைத்து ஏகசக்கரம் என்ற கிராமத்தில் பிராமணர்கள் போல் வேடமிட்டு வசித்து வந்த போது பாண்டவர்களில் பலவானான பீமனால் கொல்லப்பட்டான்.[1]

கதை[தொகு]

ஏகசக்கரம் என்ற கிராமத்தை அடுத்த காட்டில் வசித்து வந்த அரக்கன் பகாசுரன், அவனுக்கு பசி எடுக்கும் போது ஏகசக்கரம் கிராமத்தில் நுழைந்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் அடித்து நொறுக்கி,சாப்பிட்டு வந்தான்.இவனது அட்டகாசத்தைக் குறைப்பதற்காக அவனுடன் கிராமத்தினர் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர், அதன் படி மாதம் இரு முறை அவனுக்கு ஒரு வண்டி நிறைய உணவை அனுப்பி வைப்பார்கள். வண்டி உணவு முழுவதும் சாப்பிட்டுவிட்டு, மாடுகளையும், வண்டி ஓட்டியையும் சாப்பிட்டு விடுவான். ஒவ்வொரு குடும்பமும் அவனுடையத் தேவைக்காக பதினைந்து நாட்களுக்கு ஒரு தடவை உணவை கொடுத்து வந்தனர்.[1]

குந்தியும், பாண்டவர்களும் தங்கியிருந்த அரக்கு மாளிகை எரிந்த பிறகு தப்பிப் பழைத்து பஞ்சத்தில் அடிபட்ட பிராமணர்கள் போல வேடமிட்டு ஓரிடத்தில் தங்காமல் காடுகளில் அலைந்து திரிந்தார்கள்.குந்தி எப்போதும் அழுதுகொண்டே இருந்தாள்,காட்டில் இருக்கும் போது உணவுக்காக காட்டை அடுத்துள்ள கிராமங்களில் பிச்சை எடுத்து மாலையில் உணவைப் பிரித்துக் கொள்வார்கள். ஏகசக்கரம் கிராமத்தில் குந்திக்கும், பாண்டவர்களுக்கும் தங்குவதற்காக ஓர் இளம் பிராமணன் உதவி செய்தான், ஒரு நாள் இரவு அந்த இளம் பிராமணரின் மனைவி "அந்த அரக்கனுக்கு உணவு தருவது இந்த முறை நம் முறை,நீங்கள் போய்விட்டால் நான் விதவையாகி, நம் மகளுக்கும் எந்த உதவியும்,ஆதரவும் இல்லாமல் தன்னந்தனியாக விடப் படுவோமே" என்று அழுதாள். தனக்கு உதவி செய்த பிராமணருக்கு துன்பம் என்று உணர்ந்த குந்தி பிராமணரை அழைத்து விசாரித்தாள். அரக்கன் செய்த கொடுமையும், ஏற்பட்ட ஒப்பந்தத்தையும் கூறினாள்.

"பயப்படாதீர்கள்! வீட்டில் தங்க எங்களுக்கு இடம் கொடுத்திருக்கிறீர்கள், குறைந்தபட்சம் நாங்கள் செய்யக்கூடியது உங்களைக் காப்பதுதான். உன் கணவருக்குப் பதிலாக உன் பிள்ளைகளில் ஒருவனை அரக்கனிடம் போகட்டும், என்னால் ஒருவனை தியாகம் செய்ய முடியும்" என்று அவர்களிடம் குந்தி கூறினாள். "ஆனால் நீங்கள் எங்கள் விருந்தாளிகள்" என்று கூறி அதை ஏற்க மறுத்தார்கள். குந்தி தீர்மானமாக பீமனை உணவு வண்டியை ஓட்டிக்கொண்டு போகும்படி சொன்னாள்.இந்த செயலைக் கண்டு தம்பதியர் மனம் உருகிப்போனார்கள், பீமனுக்கு குந்தி விடைகொடுத்து அனுப்பியது மற்ற சகோதரர்களுக்கு சிரிப்பை உண்டாக்கியது. குந்தி பீமனை அனுப்பியது புத்திசாலித்தனமானது, ஒன்று அந்த அரக்கனால் கிராமத்திற்கு இனி தொல்லையே இருக்காது, இரண்டு ஏதோ கிடைத்ததைச் சாப்பிட்டு வந்தவனுக்கு ஒரு வண்டி நிறைய வகை வகையான உணவு கிடைக்கும்.

காட்டிற்குள் நுழைந்தவுடன் பீமன் வண்டுயை நிறுத்தினான், அரக்கனுக்குக் கொண்டுவந்த உணவைச் சாப்பிடத் தொடங்கினான். பீமன் உணவை சப்புக்கொட்டி, ருசித்துச் சாப்பிடும் சத்தம் அரக்கனின் காதில் விழுந்ததும் அவன் பயங்கரக் கோபத்துடன் வந்து, உணவு வண்டியை பார்த்ததும் பீமன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பது புரிந்துவிட்டது. உடனே பீமனை தாக்கத்தொடங்கினான், பீமன் அரக்கனின் கழுத்தை ஒரு கையால் பிடித்து, அவனைத் தூக்கி வண்டியோடு சேர்த்துக் கீழே தள்ளி அமுக்கிப் பிடித்துக்கொண்டே இன்னொரு கையால் உணவை அள்ளி உண்ணத் தொடங்கி உணவு முழுவதையும் திருப்தியுடன் உண்டு முடித்தான். பிறகு இருவரும் இரண்டு மலைகள் மோதிக்கொண்டது போல் மோதிக் கொண்டார்கள். மரங்களை பிடுங்கி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டார்கள், அவர்கள் சண்டையிட்டது பூமி அதிர்ந்தது.அந்த காட்டில் இருந்த மிருகங்கள் பயந்து ஓட்டமெடுத்தன. இறுதியில் பகாசுரனின் கழுத்தை முறித்தான் பீமன்.

சான்றாவணம்[தொகு]

  1. 1.0 1.1 Jaya-An Illustrated Retelling of the MAHABHARATA-DEVDUTT PATTANAIK
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகாசுரன்&oldid=3847156" இலிருந்து மீள்விக்கப்பட்டது