சந்தனு
| சந்தனு | |
|---|---|
சந்தனுவும் கங்கையும் (B.P. பானர்ஜீ வரைந்த ஓவியம்) | |
| தகவல் | |
| தலைப்பு | குரு வம்ச அரசன் |
| பிள்ளைகள் |
|
| உறவினர் | |
| மதம் | இந்து சமயம் |

சந்தனு மகாபாரதக் கதையில் வரும் அஸ்தினாபுரத்தின் அரசன் ஆவார். மன்னர் பிரதீபனுக்கு பிறந்த சந்தனுவின் சகோதரர்கள் தேவாபி மற்றும் பாக்லீகர் ஆவார். சந்தனுக்கு கங்காதேவி மூலம் பீஷ்மர் எனும் மகனும், சத்யவதி எனும் பரதவகுலப் பெண் மூலம் சித்ராங்கதன் மற்றும் விசித்திரவீரியன் என இரு மகன்களும் பிறந்தனர். பாண்டவர்களும் கௌரவர்களும் இவரது வழித்தோன்றல்கள் ஆவர்.
மகாபிசக்
[தொகு]மன்னன் மகாபிசம் தனது வாழ்நாளில் சேமித்த புண்ணியங்களுக்காக சொர்க்கத்தில் இருக்க தேவர்களால் அனுமதிக்கப்பட்டார். இந்திர சபையில் தேவர்களுக்குச் சமமாக அமர்ந்து அரம்பையர்களின் நடனங்களை கண்டு ரசிக்கவும்,கந்தர்வர்களின் கான இசையை கேட்கவும், சுர பானத்தை பருகியும், எதையும் தரவல்ல காமதேனு பசு, கற்பக மரம் மற்றும் சிந்தாமணிக் கல் ஆகியவற்றுடன் தொடர்பு கொள்ளவும் அனுமதிக்கப்பட்டார். ஒரு நாள் கங்கை இந்திரனின் சபைக்கு வந்தாள் அப்போது மெல்லிய தென்றல் வீசவே, அவளது மேலாடை சற்று விலகி அவளது மார்பு அழகைக் காட்டியது. கூடியிருந்த தேவர்கள் மரியாதைக்காக தலையை குனிந்தனர், ஆனால் மகாபிஷக் வெட்கமின்றி கங்கையின் அழகை வியந்து கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தார். இந்த நிலையில் கங்கையும் சற்று நிலை தடுமாறித்தான் போனாள். இதைக் கண்ட இந்திரன் இருவரையும் எச்சரித்து மகாபிஷனை உடனடியாக தேவர்களின் நகரான அமராவதியை விட்டு வெளியேறுமாறு கட்டளையிட்டான். கங்கையை அழைத்து மகாபிஷனின் இதயத்தைப் பிளந்து வந்தால் மீண்டும் அமராவதிக்கு வரலாம் என்று கூறிவிட்டார்.[1]
(மகாபிஷக்) சந்தனுவுக்கு அரச பதவி
[தொகு]யயாதியின் மகனான மன்னர் புருவின் வம்சத்தின் அரசர்களில் சிறந்த அரசன் பிரதீபன், தனது மகன்கள் இராச்சியத்தை ஆளும் தகுதி வந்ததும் அவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு, துறவு மேற்கொள்ளத் தீர்மானித்தான். மூத்த மகன் தேவாபிக்குத்தான் அரச பதவி கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அவனுக்கு சரும வியாதி இருந்ததால் (பார்க்கும்படி உள்ள குறை) சட்டப்படி பதவி மறுக்கப்படும் (பின்னாளில் திருதராஷ்டிரனுக்கு மறுக்கப்பட்டது) குறையுள்ள ஒருவர் அரசனாக முடியாது. இந்நிலையில் சந்தனுவுக்கு மகுடம் சூட்டப்பட்டது. தேவாபி, சந்தனுவின் ஆதரவில் வசிக்க மறுத்து சந்நியாசியாகி காட்டிற்கு தவம் மேற்கொள்ள போய்விடுகிறான். இளையவனுக்கு அரசபதவி வழங்கப்படுவதற்கு இதுவே முதலும், முன்னுதாரணமும் ஆனது.[1]
திருமணம்
[தொகு]துறவு மேற்கொண்ட பிரதீபன் ஒரு நாள் நதிக்கரையில் தியானம் செய்து கொண்டிருந்தபோது கங்கை வந்து அவனுடைய வலது தொடையில் அமர்ந்தாள். பெண்ணே நீ என் வலது தொடையில் அமர்ந்துவிட்டாய் அதனால் மகளுக்கு சமமானவளாகிறாய், இடது தொடையில் அமர்ந்திருந்தால் மனைவியாவாய். (திருமணத்தின் போது மணப்பெண்ணை இடது பக்கம் அமரச்செய்து மங்கல நாண் அணிவிக்கிற நடைமுறை இன்றும் இந்தியாவில் நிலவுகிறது.) ஒரு மகளின் விருப்பத்தை நிறைவேற்றுவது தந்தையின் கடமை உன் விருப்பம் என்ன? நான் உங்கள் மகன் சந்தனுவை மணம் முடிக்க விரும்புகிறேன் என்றாள் கங்கை. அப்படியே நடக்கும் என்று ஆசி வழங்கினார் பிரதீபன் சில நாட்களுக்குப் பிறகு தந்தையைக் காணவந்த சந்தனுவிடம் கங்கை என்ற அழகான பெண் உன்னை அணுகி திருமணம் செய்துகொள்ள விரும்புவாள், அவளது ஆசையை நிறைவேற்று அது தான் என் விருப்பமும் என்றார் பிரதீபன். விரைவிலேயே கங்கையும், சந்தனுவும் சந்தித்தனர். கங்கை ஒரு நிபந்தனை விதித்தாள். நான் என்ன செய்தாலும் என்னை எந்த கேள்வியும் கேட்கக் கூடாது, கேட்டால் உடனே போய்விடுவேன். கங்கை மீது காம வயப்பட்டிருந்த சந்தனு மறுமொழி சொல்லாமல் நிபந்தனையை ஏற்றுக்கொண்டான். கங்கை - சந்தனு திருமணம் நடந்து முடிந்தது.[1]
வசுக்கள்
[தொகு]
கங்கை - சந்தனு இணையரின் முதல் குழந்தை பிறந்தது முதல் குழந்தை பிறந்த மகிழ்ச்சிக்கிடையே கங்கை முதல் குழந்தையை கங்கை நீரில் மூழ்கடித்தாள். அழகான மனைவியை இழக்க விரும்பாத சந்தனு அமைதி காத்தான். அடுத்த வருடமும் இப்படியே நடந்தது, இப்படியே கங்கை ஏழு குழந்தைகளை ஆற்றிலே மூழ்கடித்தாள். ஒவ்வொரு முறையும் சந்தனு அமைதியாகவே இருந்தான். எட்டாவது குழந்தையை கங்கையில் விடும்போது சந்தனு அழுது கூச்சலிட்டான். "ஏ! இரக்கமில்லாதவளே நிறுத்து அவன் ஒருவனாவது வாழட்டும்" என்றான். கங்கை அவனை பார்த்து சிரித்தாள், "உங்கள் வார்த்தையை மீறிவிட்டீர்கள், புரூரவரை ஊர்வசி விட்டுச் சென்ற மாதிரி, நானும் உங்களை விட்டு பிரிய வேண்டிய காலம் வந்துவிட்டது. நான் நதியில் விட்டது எட்டு வசுக்களில் ஏழுபேர், வசிட்டரின் பசுக்களை திருடிய குற்றத்திற்காக குழந்தைகளாக பிறக்க சாபம் பெற்றவர்கள். எட்டு பேரின் வேண்டுதலுக்காக நான் தாயானேன். அவர்கள் பூமியில் மிக மிகக் குறைந்த காலத்திற்கு வாழட்டும் என தீர்மானித்தேன், ஆனால் கடைசியாகப் பிறந்தவனை காப்பாற்ற முடியவில்லை, இவன் மிகவும் சிரமப்படுவான். திருமணம் செய்து கொள்ளமாட்டான். உமக்குப் பிறகு ஆட்சிக்கும் வரமாட்டான். உமக்கு அடுத்தபடியாக குடும்பத்தின் தலைவனாகவும் இருப்பான், ஆணாக இருக்கும் ஒரு பெண்ணின் கையால் மிக கேவலமாக மரணமடைவான்". குறுக்கிட்டான் "சந்தனு அப்படி நடக்காது, நடக்க விடமாட்டேன்" என்றான் ஆவேசத்துடன்."சரி விடுங்கள் உங்கள் மகனை வளர்த்து சிறந்த போர் வீரனாக்குவேன். போர் கலையில் தேர்ந்த பரசுராமனிடம் சீடனாகச் சேர்ப்பேன். மணவயதை அடைந்ததும் உங்களிடம் அழைத்து வருகிறேன் அப்போது சந்திப்போம்" என்று கூறி மகன் (வீடுமர்), தேவவிரதனுடன் மறைந்து விட்டாள், சந்தனு தனித்து விடப்பட்டான்.[1]
மறுமணம்
[தொகு]
கங்கை- சந்தனு இணையரின் மகனான தேவவிரதன் (பீஷ்மர்) தேர்ந்த வீரனாக, அரசகுமாரனுக்கு உரிய தகுதியானவனாக இருந்தான். ஆனால் தேவவிரதன் (பீஷ்மர்) அரசாள மறுத்துவிட்டான். மீண்டும் சந்தனு காதல்வயப்பட்டான். கங்கையில் படகு ஓட்டிவந்த சத்தியவதியைக் கண்டான், அவளது உடலிலிருந்து வந்த இனிய நாற்றம் சந்தனுவை காதல் கொள்ள வைத்தது. சந்தனுவின் காதலை ஏற்க கங்கையைப் போன்றே அவளும் நிபந்தனை விதித்தாள். சந்தனுவின் நாட்டை ஆட்சி செய்ய தனது வயிற்றில் பிறக்கும் குழந்தைகளுக்கு உரிமை தந்தால் சம்மதிக்கிறேன் என்றாள். தேவவிரதன் (பீஷ்மர்) ஏற்கனவே அரசகுமாரனாக தயாராக இருக்கும்போது வேறு பிள்ளைகள் எப்படி முடியும். குழம்பிப் போன சாந்துனுவின் சங்கடத்தை போக்க அதிரடியாக ""நான் ஆட்சியை துறக்கிறேன்"" என அறிவிக்கிறான் தேவவிரதன். சத்தியவதி மீண்டும் கேட்கிறாள். "உங்கள் குழந்தைகள் என் மகனின் குழந்தைகளிடம் சண்டையிடுவார்களே எப்படி தடுப்பது தேவவிரதன் புன்னகைத்து தனது வம்ச சரித்திரத்தையே மாற்றும் முடிவு ஒன்றை எடுத்தான் எந்த வருத்தமுமின்றி "நான் திருமணமே செய்துகொள்ள மாட்டேன், எந்தப் பெண்ணுடனும் இருக்க மாட்டேன், எந்தக் குழந்தைக்கும் தந்தையாகவும் மாட்டேன்" இந்த அறிவிப்பு அண்ட சராசரத்தையும் திகைப்படையச் செய்தது. வானத்து தேவர்கள் ஒன்று கூடி (பீஷ்மர்) தேவவிரதனுக்கு தன் மரணத்தை, மரண நேரத்தை தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று வரமளித்தனர். (பீஷ்மர்) தேவவிரதன் பிரம்மசர்யம் அனுசரிக்க முடிவெடுத்தான். சந்தனுவின் மறுமணம் இனிதே முடிந்தது. காலப்போக்கில் சித்ராங்கதன் மற்றும் விசித்திரவீரியன் என இருவர் பிறந்தனர். சிறிது காலத்திலேயே சந்தனு மரணமடைந்தான்.[1]