இரண்டாம் நாள் போர் (குருச்சேத்திரப் போர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகாபாரதத்தில் நடைபெற்ற குருச்சேத்திரப் போரின் இரண்டாம் நாள் போர் குறித்த தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.

முக்கிய அம்சங்கள்[தொகு]

முதல் நாளில் தனது படையினருக்கு ஏற்பட்ட பயத்தினை போக்கும் முயற்சியில் இறங்கினான், பாண்டவர் அணியின் தலைமைப் படைத்தலைவன் திருட்டத்துயும்னன் (திரௌபதியின் சகோதரன்). மிக்க கவனத்துடன் வழிமுறைகளை தனது படையினருக்கு விளக்கி, துணிச்சலும் உற்சாகமும் ஊட்டினான். அன்றைய தினத்தின் தொடக்கத்திலும் பாண்டவர் படையை கௌரவர் படை பலமாகத் தாக்கியது. இதைக்கண்ட அருச்சுனன், தனது தேரோட்டியான கிருஷ்ணனிடம் பீஷ்மரை நோக்கி தேரை செலுத்துமாறு கேட்டுக் கொண்டான். இதனைத் தொடர்ந்து பீஷ்மருக்கும் அருச்சுனனுக்கும் இடையே போர் தொடங்கியது. இருவரில் யாரும் வெல்ல முடியாமல் வெகுநேரம் போரை நடத்தினார்கள். இப்போரைக் காண தேவர்களும் கந்தர்வர்களும் வந்துவிட்டதாக வியாசர் எழுதியிருக்கிறார்.

அருச்சுனன் அன்று காட்டிய வீரத்தால் கௌரவர் படை பெருத்த சேதமடைந்தது. முதல்நாள் போரில் பாண்டவர்கள் பயந்ததைப் போன்று இரண்டாவது நாள் முடிவில் கௌரவர்கள் மனக்கலக்கத்தை அடைந்தார்கள்.

நிகழ்ந்த முக்கிய மரணங்கள்[தொகு]

1.பீஷ்மரின் தேரோட்டி
2.திருஷ்டத்யும்னனின் தேரோட்டி

உசாத்துணை[தொகு]

சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி எழுதிய மகாபாரதம் (வியாசர் விருந்து); வானதி பதிப்பகம், முப்பத்து எட்டாம் பதிப்பு, நவம்பர் 2009.