நானி பல்கிவாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நானி பல்கிவாலா
பிறப்பு(1920-01-16)16 சனவரி 1920
மும்பை, இந்தியா
இறப்பு11 திசம்பர் 2002(2002-12-11) (அகவை 82)
மும்பை, இந்தியா
தொழில்சட்ட அறிஞர், பொருளாதார அறிஞர்
காலம்20 ஆம் நூற்றாண்டு
கையொப்பம்

நானி பல்கிவாலா (Nani Ardeshir Plakhiwala 16 சனவரி 1920–11 திசம்பர் 2002) வழக்கறிஞர், இந்திய அரசியல்சட்ட நிபுணர், பொருளியல் அறிஞர், கல்வியாளர், இந்திய வரவு செலவுத்திட்ட ஆய்வாளர் என அறியப்பட்டவர். இந்திய அரசியல் சட்டம் வழங்கிய குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதில் ஈடுபாடு காட்டியவர்.

பிறப்பும் படிப்பும்[தொகு]

பார்சி இனத்தில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்த நானி பல்கிவாலாவின் முன்னோர்கள் பல்லக்கு செய்பவர்கள் ஆவர். அதனால் பல்கிவாலா என்னும் ஓட்டுப் பெயர் இவருக்கு ஏற்பட்டது. மும்பையில் ஒரு பள்ளியில் படித்தார். மெட்ரிக்குலேசன் வகுப்புக்குப் பின் மும்பையில் உள்ள தூய சேவியர் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்றார். பின்னர் சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டக் கல்வி படித்தார். பின்னர் சர் சாம்சட்ஜி காங்கா விடம் வழக்குரைஞர் தொழிலில் ஈடுபட பயிற்சி பெற்றார். உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றினார்

வழக்கறிஞர் பணிகள்[தொகு]

வங்கிகள் தேசியமயமாக்கல், கல்வி நிறுவனங்களை நடத்த சிறுபான்மையின மக்களின் உரிமைகள், மன்னர் மானிய ஒழிப்பு, பத்திரிகைகளின் சுதந்திரம், மண்டல்குழு ஆகிய சிக்கல்கள் தொடர்பான வழக்குகளில் தம் சட்ட அறிவு, வாதத் திறமை ஆகியவற்றை நிலைநாட்டினார். அலகாபாத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இந்திரா காந்தியின் சார்பாக வாதிட்டார். ஆனால் இந்திரா காந்தி நெருக்கடி நிலை அறிவித்தபோது அதனை எதிர்த்தார். கட்ச் பிரதேசத்தைப் பாகிஸ்தான் உரிமை கோரிய வழக்கில் உலக அரங்கில் இந்தியாவின் சார்பாக வாதிட்டார். கேக் (HAGUE) உலக நீதிமன்றத்தில் பிற நாட்டு சட்ட அறிஞர்கள் எழுதிவைத்துக் கொண்டு தம் வாதங்களைப் பேசியபோது நானி பல்கிவாலா மட்டும் வாய் மொழியாகப் பேசினார். 1958 ஆம் ஆண்டு முதல் இந்திய வரவு செலவு அறிக்கைகளைப் பற்றி ஆய்வுச் சொற்பொழிவு நடத்தி வந்தார்.

பெற்ற சிறப்புகள்[தொகு]

மொரார்சி தேசாய் தலைமை அமைச்சராக இருந்தபோது 1977 ஆம் ஆண்டில் இந்திய அரசு நானி பல்கிவாலவை அமெரிக்க நாட்டுக்கு தூதுவராக அமர்த்தியது. 1979 வரை இவர் அப்பதவியில் இருந்தார். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், ரட்கர்ஸ் பல்கலைக்கழகம், லாரன்சு பல்கலைக்கழகம், விஸ்கான்சின் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், மும்பை பல்கலைக்கழகம் ஆகியவை இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்தன. பத்ம விபூசண் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.

நூல்கள்[தொகு]

  • Law and Practice of Income Tax
  • Our Constitution Defaced and Defiled
  • We, the people and we, the Nation
  • India's Priceles Heritage and Essential Unity of All Religions
  • Nani Palkivalaa Selected Writings

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நானி_பல்கிவாலா&oldid=3771510" இலிருந்து மீள்விக்கப்பட்டது