சூளைமேடு
சூளைமேடு (Choolaimedu) இந்திய மாநகரம் சென்னையில் அமைந்துள்ள ஓர் முதன்மையான குடியிருப்பு மற்றும் வணிக சுற்றுப் பகுதி ஆகும். இதன் எல்லைகளாக கோடம்பாக்கம், வடபழநி, அமைந்தக்கரை, மகாலிங்கபுரம் மற்றும் நுங்கம்பாக்கம் உள்ளன. புலியூர் கிராமத்தின் பகுதியாக இருந்த இப்பகுதி இன்று வணிக மையமாகத் திகழ்கிறது. சென்னையின் இரு போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளான ஆற்காடு சாலையையும் நெல்சன் மாணிக்கம் சாலையையும் இணைக்கிறது.நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையம் சூளைமேட்டிற்கு அருகாமையில் உள்ளது. இலயோலாக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, மீனாட்சி பொறியியல் கல்லூரி மற்றும் பனிமலர் பல்தொழில் நுட்பப் பயிலகம் ஆகியன சூளைமேட்டிற்கு அண்மையில் உள்ள கல்வி நிறுவனங்களாகும்.
சூளைமேடு நெடுஞ்சாலையும் நெல்சன் மாணிக்கம் சாலையும் வணிக வளாகங்களை கொண்டிருக்கும் முக்கிய சாலைகளாகும். எச்.சி.எல் நிறுவனத்தின் வளாகம் குறிப்பிடத்தக்க கட்டிடமாகும்.
இரண்டு பெரிய கோவில்கள், மூன்று தேவாலயங்கள் மற்றும் இரண்டு மசூதிகளுடன் அனைத்து சமயத்தினரும் நல்லிணக்கத்துடன் வாழும் பகுதியாக விளங்குகிறது.