பள்ளிக்கரணை சதுப்புநிலம்

ஆள்கூறுகள்: 12°56′15.72″N 80°12′55.08″E / 12.9377000°N 80.2153000°E / 12.9377000; 80.2153000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பள்ளிக்கரணை சதுப்புநிலம்
அமைவிடம்பள்ளிக்கரணை, சென்னை, இந்தியா
ஆள்கூறுகள்12°56′15.72″N 80°12′55.08″E / 12.9377000°N 80.2153000°E / 12.9377000; 80.2153000
வகைசதுப்புநிலம்
வடிநிலப் பரப்பு235 சதுர கிலோமீட்டர்கள்
வடிநில நாடுகள்இந்தியா
அதிகபட்ச நீளம்15 கிலோமீட்டர்
அதிகபட்ச அகலம்3 கிலோமீட்டர்
மேற்பரப்பளவு80 சதுர கிலோமீட்டர்கள்
நீர்க் கனவளவு9 மில்லியன் கன மீட்டர்கள்
கடல்மட்டத்திலிருந்து உயரம்5 மீட்டர்
குடியேற்றங்கள்சென்னை

பள்ளிக்கரணை சதுப்புநிலம் (Pallikaranai marsh) சென்னையில் பள்ளிக்கரணையில் இருக்கும் ஒரு நன்னீரையுடைய சதுப்புநிலமாகும். சென்னை நகரின் தென்பகுதியில், வங்காள விரிகுடாவிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில், 80 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு உள்ளது. பள்ளிக்கரணையிலிருக்கும் இந்த சதுப்புநிலம்தான் சென்னையின் ஒரே சதுப்புநிலம்; இதை ராம்சார் பகுதியாக அறிவிக்க வனத்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது.[1] பள்ளிக்க்ரணை சதுப்பு நிலங்களில் அலையாத்தித் தாவரங்கள் நன்கு வளர்கிறது. இது இந்திய அரசால் 1985-86-ல் செயல்படுத்தப்பட்ட தேசிய சதுப்புநில பாதுக்காப்பு மற்றும் நிர்வாக திட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டுள்ள 94 சதுப்புநிலங்களில் ஒன்று, மேலும் தமிழ்நாட்டில் உள்ள மூன்றில் ஒன்று. தமிழகத்தின் மற்ற இரண்டு சதுப்புநிலங்கள் கோடியக்கரை வனஉயிரின உய்விடம் மற்றும் கழுவெளி சதுப்பு நிலம் ஆகியனவாகும்.

ஆக்கிரமிப்புகள்[தொகு]

1965-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 5 ஆயிரத்து 500 ஹெக்டேராக இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம், 2013 ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 600 ஹெக்டேராக சுருங்கி விட்டதாக கூறப்பட்டுள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், 100 ஏக்கருக்கும் மேல் ஆக்கிரமித்துள்ளதாகவும், மேலும் 1,085 தனியார் குடியிருப்புகள் ஆக்கிரமித்துள்ளதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.[2]

வரலாறு[தொகு]

பள்ளிக்கரணை ஈரநிலத்தின் ஒரு தோற்றம்

சென்னையின் ஒரு பகுதியான தென் சென்னையில் மத்திய கைலாசம் முதல் மேடவாக்கம் வரை 5,000 ஹெக்டேர் பரப்பளவுக்கு விரிந்து இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தற்போது பெருங்குடிக்குப் பக்கத்தில் வெறும் 500 ஹெக்டேர் பரப்பளவுக்கு குறைந்துள்ளது. இது முதலில் இருந்த அளவிற்கு பத்தில் ஒரு பகுதிதான் என்பது வருத்தத்திற்கு உரியது. இந்த நிகழ்வு சுமார் 30-40 ஆண்டுகளுக்குள் நடந்த ஒன்றுதான். தற்போது இயற்கையாளர்களின் தொடர் போராட்டத்துக்குப் பின், 2007இல் அரசு எஞ்சியுள்ள நீர்நிலையை பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதி என்று அறிவித்தது. அரசால் அமைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகைகளை இரு பக்கமும் பார்க்க முடிகிறது. ஆனால் பறவை வேட்டையைத் தடுக்க எந்த வனக் காவலர்களையும் அரசு நியமிக்கவில்லை.

பறவைகள்[தொகு]

நீலத் தாழைக்கோழிகள், நாமக்கோழிகள், முக்குளிப்பான்கள், நீளவால் இலைக்கோழிகள் (Pheasant tailed jacana), நெடுங்கால் உள்ளான்கள் (Black winged stilt), வாத்துகள் போன்றவைகளைக்காண முடியும். கூழைக்கடா எனப்படும் பெலிகன் பறவைகளின் முக்கியமான ஓய்விடம் இது ஆகும். நீலத் தாழைக்கோழிகள் (Purple moorhen) காய்ந்த வெங்காயத் தாமரை இடையே பெருமளவு இரை தேடிக் கொண்டிப்பதைக்காணலாம். முக்குளிப்பான்கள் (Little Grebe) நொடிக்கொரு தரம் நீரில் மூழ்கி இரை தேடுவதைப்பார்க்கலாம், நாமக் கோழிகள் (Common Coot) சிறுசிறு குழுக்களாக நீந்தி இரை தேடிக் கொண்டிருக்கும். மேலும் குஜராத்தில் இருந்து பூநாரைகள் (ஃபிளாமிங்கோ) போன்றவையும் வருகை தருகின்றன. நீலத் தாழைக்கோழிகள், நாமக்கோழிகள், முக்குளிப்பான் ஆகியவற்றுடன், பல்வஸ் சீழ்க்கைச் சிறகி (Fulvous Whistling duck) [3] எனப்படும் அரிய வாத்து வந்ததை மெட்ராஸ் நேச்சுரலிஸ்ட்ஸ் சொசைட்டியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தண்ணீர்க் கோழி (பெண்) (Watercock), சாம்பல் கதிர்க்குருவி (Ashy prinia), காக்கை, கள்ளப்பருந்து, கரிச்சான், கதிர்க்குருவிகள், சீழ்க்கைச் சிறகி, சாம்பல் ஆள்காட்டி (Whitetailed Lapwing), அன்றில் பறவைகள் (Glossy ibis) போன்றவையையும் காணலாம்.

அருகில் அமைந்துள்ள இடங்கள்[தொகு]

இதன் எதிர்ப்புறம் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் (National Institute of Ocean Technology - NIOT) அமைந்துள்ளது. தரமணி பறக்கும் மின்சார தொடர்வண்டி நிலையம், கணினி தொழில் நுட்ப பூங்காக்கள் (List of tech parks in Chennai), வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையம் தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி (National Institute of Fashion Technology, NIFT) போன்றவை.

வரவு[தொகு]

கோடை காலத்தின் முடிவில் ஜூலை மாதம் பறவைகள் வரத் தொடங்கும். இவை பெறும்பாலும் உள்நாட்டு வலசை பறவைகள் ஆகும். பருவமழை பெய்யத்துவங்கியவுடன் தெற்கிலுள்ள இதுபோன்ற நீர்நிலைகளுக்கு வந்துவிடுகின்றன. இவை இனப்பெருக்கம் செய்தபின் கோடையில் நீர்நிலை வறளும்போது இவை வேறு இடங்களுக்கு இடம்பெயர்கின்றன. டிசம்பர்-ஜனவரி மாதத்தில் வெளிநாட்டுப் பறவைகளும் பள்ளிக்கரணைக்கு வலசை வருகின்றன. குஜராத்தில் இருந்தும் கூட வலசை வரும் பூநாரைகள் (ஃபிளாமிங்கோ) இங்கு காணலாம்.[4]↓

சம்பவங்கள்[தொகு]

2011 மார்ச் 19 மாலை 4 மணி அளவில் இந்த சதுப்பு நிலத்தில் காமாட்சி மருத்துவமனைக்கு எதிரேயுள்ள பகுதியில் தீப்பிடித்து அருகிலுள்ள மற்ற 15 இடங்களுக்கும் பரவியது[4]. சுமார் 5 மணிநேரம் நீடித்த இத்தீவிபத்தில் மொத்தமுள்ள 200 ஏக்கர் பாதுகாக்கப்பட்ட சதுப்புநிலத்தில் 10 ஏக்கருக்கும் அதிகமான நிலத்துண்டுப் பகுதிகள் எரிந்துபோயின. வலசை வந்து கூடுகட்டி வாழும் பறவைகளும் இந்நிகழ்வில் இறந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது[5].

இதனையும் காண்க[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  1. "வனத்துறை பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை ராம்சார் பகுதியாக அறிவிக்க முயற்சி மேற்கொண்டுள்ளது". தி இந்து நாளிதழ். 2011. Archived from the original on 2012-11-02. பார்க்கப்பட்ட நாள் 28-Sep-2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. 600 ஹெக்டேராக சுருங்கிய பள்ளிக்கரணை சதுப்புநிலம் : ஆய்வறிக்கையில் தகவல்
  3. Whistling duck sighted at Pallikaranai The Hindu, MARCH 11, 2010
  4. "5 மணி நேரம் நீடித்த பள்ளிக்கரைணை தீ விபத்து". டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 2012-09-25. பார்க்கப்பட்ட நாள் 29 மார்ச்சு 2013.
  5. "பள்ளிக்கரணை தீவிபத்தில் வலசை வந்த பறவைகள் இறப்பு". தி இந்து. Archived from the original on 2011-03-26. பார்க்கப்பட்ட நாள் 29 மார்ச்சு 2013.

↑[4]சொர்க்கம்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Pallikaranai wetland
என்பதில் ஊடகங்கள் உள்ளன.