பெரிய மதிலால் சூழப்பட்ட இக் கோயிலின் நுழைவாயிலில், உயரமான தூண்களைக் கொண்ட ஒரு நுழைவு மண்டபம் அமைந்துள்ளது. இக் கோயில் கட்டிடம் மாவுக் கற்களால் அமைக்கப்பட்டது. இதன் சமச்சீரான கட்டிட அமைப்பு, ஒரே அளவு முதன்மை கொண்ட கருவறைகளில் அமைந்துள்ள சிற்பங்கள் போன்ற இயல்புகளால் இக்கோயில் பிற ஹோய்சாலக் கோயில்களுக்கு மத்தியில் தனித்துவமாக விளங்குகிறது. இதை விடச் சிறப்பான சிற்பங்களையும், சிறப்பான கட்டிடக்கலையையும் கொண்ட பல ஹோய்சாலக் கோயில்கள் இருந்தாலும், இக் கோயில் எல்லாத் தேவைகளையும் நிறைவு செய்வதாக உள்ளது. இது புகழ் பெற்ற சிற்பியும் கட்டிடக்கலைஞருமான ருவாரி மலிதம்மா என்பவரால் கட்டப்பட்டது.
ஒரு மேடை மீது அமைந்துள்ள இக் கோயில் ஒன்றுபோலவே அமைந்த மூன்று சிறு கோயில்களையும் அவற்றில் மீதமைந்த மூன்று விமானங்களையும் கொண்டது. உள்ளே மேற்படி சிறு கோயில்கள் ஒவ்வொன்றும், சுகநாசி எனப்படும் சிறிய மண்டபங்களினூடாகப் பெரிய மண்டபம் ஒன்றுக்கு இணைக்கப்பட்டுள்ளன. மூன்று சிறு மண்டபங்களும் அவற்றுக்கெனத் தனியான விமானம் போன்ற மேற்கட்டிட அமைப்புக்களையும் கொண்டுள்ளன. இச்சிறு கோயில்களின் புறச்சுவர்கள், விமானங்கள், சுகநாசிகள் அனைத்துமே மிகச் சிறப்பாக அழகூட்டப்பட்டு ஒட்டுமொத்தமாக ஒரு சமநிலையான வடிவமைப்பை வழங்குகின்றன. இக்கோயிலின் மையப்பகுதியாக உள்ளது முன் குறித்த பெரிய மண்டபம் ஆகும். சிறு கோயில்கள் மூன்றும் இம் மண்டபத்தின் பிற்பகுதியில் ஒன்றும் இரண்டு பக்கங்களில் ஒவ்வொன்றுமாக அமைந்துள்ளன. மேடை கோயில் கட்டிடத்தின் தள அமைப்பைப் பின்பற்றி அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றிலும் தூண் வரிசைகளோடு கூடிய சுற்று மண்டபங்களும் உள்ளன. கோயில் கட்டிடங்களின் புறச் சுவர்களுக்கு வெளியேயும் நீண்டிருக்கும் மேடை, பக்தர்கள் கோயிலுக்குள் நுழையுமுன் அதனைச் சுற்றி வருவதற்கான இடவசதியை வழங்குகிறது.
மூன்று சிறு கோயில்களின் கீழ்ப் பகுதிகளும், 16 முனைகளைக் கொண்ட நட்சத்திர வடிவில் அமைந்துள்ளன. மேலுள்ள விமானங்களும் அதே வடிவத்தையே பின்பற்றுகின்றன. 16 முனைகளைக் கொண்டிருப்பதால் இது வட்டமான வடிவம் கொண்டதுபோல் தெரிகிறது.