தருமபுரி கோட்டை மல்லிகார்சுனர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மல்லிகார்சுனர் கோயில்
பெயர்
பெயர்:மல்லிகார்சுனர் கோயில்
அமைவிடம்
ஊர்:தர்மபுரி
மாவட்டம்:தர்மபுரி மாவட்டம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:மல்லிகார்சுனர்
தல விருட்சம்:வேளா மரம்
சிறப்பு திருவிழாக்கள்:
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:நுளம்பர்
வரலாறு
தொன்மை:கி.பி.8- 9 நூற்றாண்டு

தருமபுரி கோட்டை மல்லிகார்சுனர் கோயில் என்பது தர்மபுரி மாவட்டம், தர்மபுரியில் கோட்டைக் கோயில்கள் என அழைக்கப்படும்[1] மூன்று கோயில்களில் ஒரு சிவன் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். [2]

பிற பெயர்கள்[தொகு]

இக்கோயில் கோட்டைக்கோயில், கோட்டை ஈஸ்வரன் கோயில், தகடூர் காமாட்சி கோயில், கோட்டை சிவன் கோயில் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. [2]

வரலாறு[தொகு]

நுளம்பர் கட்டிய பல கோயில்களில் இக்கோயில் குறிப்பிடத்தக்கது. இவர்கள் கி.பி. எட்டு ஒன்பதாம் நூற்றாண்டுகளில் இக்கோயிலை கட்டியுள்ளனர். இக்கோயில் இறைவனை பழங்கல்வெட்டுகள் சாணாயிரமுடையார் எனக் குறிப்பிடுகன்றன. நுளம்பரது காலத்திற்குப் பிறகு இக்கோயில் பராமரிப்பின்றி பாழ்பட்டுப் போனது. இந்நிலையில் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் திருக்காலத்தியில் இருந்து தகடூருக்கு வந்த வண்ணானைக் கும்பிட்டார் என்னும் சிவனடியார் இந்தக் கோட்டைச் சிவாலயங்கள் பாழ்பட்டு இருப்பதைக் கண்டு வருந்தி அவற்றைப் புதுப்பிக்க எண்ணி, அப்போது சோழர்களின் கீழ் தகடூரை ஆண்டுவந்த அதியமான் மரபினனான இராசராச அதியமானிடம் சென்று இம்மூன்று கோயில்களையும் தகுந்த சிவப்பிராமணர்களைக் கொண்டு வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென வேண்டினார். அதியமானோ தகுந்த சிவப்பிராமணர்களை அழைத்து வரும் பொறுப்பை அவரிடமே வழங்கினார். தகுந்த சிவப்பிராமணர்களை மன்னனிடம் அழைத்து வர, கோயில்களில் இரண்டு ஆண்டுகள் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வழிபாடுகள் துவங்கின என கல்வெட்டுகள் குறிக்கின்றன.[3] கோயிலின் இறைவன் பெயர் விசயநகரப் பேரரசர் மல்லிகார்ஜுன ராயன் காலத்தில் மல்லிகார்ச்சுனர் என மாற்றப்பட்டிருக்க வேண்டுமெனக் கருதப்படுகிறது.

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் மல்லிகார்ச்சுனர் ஆவார். இறைவி காமாட்சியம்மை ஆவார்.[2]

பிற சன்னதிகள்[தொகு]

வலம்புரி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகர், சித்தலிங்கேசுவரர் சன்னதிகள் உள்ளன. கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேசுவரர் சன்னதி உள்ளது.[2]

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தகடூர் (தர்மபுரி)". அறிமுகம். http://shaivam.org. Archived from the original on 2016-10-04. பார்க்கப்பட்ட நாள் 16 அக்டோபர் 2016. {{cite web}}: External link in |publisher= (help)
  2. 2.0 2.1 2.2 2.3 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  3. இரா. இராமகிருட்டிணன் (2016). தகடூர் நாட்டுத் திருக்கோயில்கள். சென்னை: நாம் தமிழர் பதிப்பகம். பக். 89.