கோயில் தேவராயன்பேட்டை மச்சபுரீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள் நுழைவாயில்

கோயில் தேவராயன்பேட்டை மச்சபுரீசுவரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்[தொகு]

பாபநாசம்-தஞ்சாவூர் சாலையில் பாபநாசத்திலிருந்து 3 கிமீ தொலைவில் பண்டாரவாடையை அடுத்து கோயில் தேவராயன்பேட்டை உள்ளது.[கு 1] இவ்வூர் திருச்சேலூர் என்றழைக்கப்பட்டது. இவ்வூருக்குத் தெற்கே தேவராயன்பேட்டை என்ற ஒரு சிறிய ஊர் உள்ளதால் சேலுருக்கு கோயில் என்ற அடைமொழியுடன் கோயில் தேவராயன்பேட்டை என வாங்கப்படுகிறது. இவ்வூர் தற்போது பண்டாரவாடை என்ற ஊரின் உட்கிராமமாக உள்ளது. திருஞானசம்பந்தர் திருப்புள்ளமங்கையிலிருந்து திருப்பாலைத்துறைக்குச் செல்லும் வழியில் உள்ள இத்திருக்கோயிலை வணங்கிச்சென்றதை, கீழ்க்கண்ட பாடலில் சேக்கிழார் தன்னுடைய பெரிய புராணத்தில் குறிப்பிடுகிறார். [2]

அமைப்பு[தொகு]

இக்கோயில் முதலாம் ஆதித்த சோழன் (கி.பி.870-970) காலத்தில் கட்டப்பட்ட, முற்காலச்சோழர் கலைப்பாணியைச் சேர்ந்தது. கருவறை தொடங்கி, அந்தராளம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், முகமண்டபம், எனவும், நந்தி, பலிபீடம், கொடி மரம் என ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன. இரு நுழைவாயிலைக் கொண்ட இக்கோயிலின் உள், வெளித் திருச்சுற்றுகள் உயர்ந்த செங்கற்சுவற்றினால் அமைக்கப்பட்டுள்ளது. வெளித்திருச்சுற்றில் இறைவி சன்னதியான திருகாமக்கோட்டம் அமைந்துள்ளது. மேலும் நிலைவாயிலுக்கு எதிரில் நந்தியுடன் சிறு மண்டபம் உள்ளது. [2]

இறைவன்,இறைவி[தொகு]

இங்குள்ள இறைவன் மச்சபுரீசுவரர் ஆவார். இறைவி சுகந்த குந்தளாம்பிகை ஆவார்.

பிற சன்னதிகள்[தொகு]

முன் மண்டபத்தில் இடது புறத்தில் தர்ம விநாயகர், நவக்கிரகம், சனீசுவரர் சன்னதிகள் உள்ளன. [1]

குறிப்புகள்[தொகு]

  1. மட்டியான்திடல், கோயில் தேவராயன்பேட்டை ஆகிய இரு ஊர்களுமே சேலூர் என்று கூறப்படுவதாக பூ.மா.ஜெயசெந்தில்நாதன் தன்னுடைய தேவார வைப்புத்தலங்கள் என்னும் நூலில் (ப.233) குறிப்பிடுகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  2. 2.0 2.1 கோ.தில்லை கோவிந்தராஜன், சோழர் வரலாற்றில் மச்சபுரீஸ்வரர் கோயில், எம்.ஜெ.பப்ளிகேஷன் ஹவுஸ், சென்னை, 2019

படத்தொகுப்பு[தொகு]