தருமபுரி பரவாசுதேவப் பெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தருமபுரி பரவாசுதேவப் பெருமாள் கோயில் என்பது தர்மபுரி மாவட்டம், தர்மபுரியில் கோட்டைக் கோயில்கள் என அழைக்கப்படும் மூன்று கோயில்களில் ஒரு விஷ்ணு கோயிலாகும்.[1]

அமைவிடம்[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 479 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 12°08'33.6"N, 78°09'57.4"E (அதாவது, 12.142656°N, 78.165949°E) ஆகும்.

கோயிலின் சிறப்பு[தொகு]

இக்கோயிலில் அமைந்துள்ள பெருமாளின் திருவடிகளை பிரம்மா பிரதிட்டை செய்ததாகவும், தேவர்கள், முனிவர்கள், அர்ஜுனன் ஆகியோரால் பூசிக்கப்பட்டதாகவும் வழிவழியாகக் கூறப்படுகிறது. மேலும் பதினெண் சித்தர்களில் தன்வந்திரி, திரிமூலி ஆகியோரால் அருட்கொடை பெற்ற தலமாகவும் நம்பப்படுகிறது.[2]

கோயிலின் வரலாறு[தொகு]

இக்கோயில் நுளம்பரது காலத்திலோ அல்லது அதற்கு சற்று பிற்பட்ட காலத்திலோ கட்டப்பட்டிருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. இக்கோயிலில் ஆண்டாள், அனுமான் ஆகியோருக்கு உட்கோயில்கள் பிற்காலத்தில் கட்டப்பட்டுள்ளன.

பரவாசுதேவப் பெருமாளின் தோற்றம்[தொகு]

கோயில் உண்ணாழியில் ஆதி சேடன் ஏழுதலைகளுடன் பரவாசுதேவப் பெருமாளின் தலைக்குமேல் குடைபிடிக்க அவரின் இடது தொடையின் மேல் தாயார் அமர்ந்திருக்க, பெருமாளின் வலது மேல்கையில் சக்கரமும், கீழ்கையில் கதாயுதமும், இடது மேல்கையில் சங்கும், கீழ்கை ஆதிசேடன் மேல் சாய்வாக ஊன்றியும் பாம்பணையின் மேல் இடது காலைத் தொங்கவிட்டபடி அமர்ந்திருக்க கருடர், அனுமான் போன்றோர் திருவடிகளை வணங்கி நிற்பதுபோல காட்சியளிக்கிறார்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தருமபுரி ஸ்ரீபரவாசுதேவ சுவாமி கோயிலில் பரமபத வாசல் திறப்பு". செய்தி. http://m.dailyhunt. பார்க்கப்பட்ட நாள் 17 அக்டோபர் 2016.
  2. இரா. இராமகிருட்டிணன் (2016). தகடூர் நாட்டுத் திருக்கோயில்கள். சென்னை: நாம் தமிழர் பதிப்பகம். p. 91.