நா. ம. ரா. சுப்பராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(என். எம். ஆர். சுப்பராமன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நா. ம. ரா. சுப்பராமன்
என். எம். ஆர். சுப்பராமன் நூற்றாண்டு பிறந்தநாள் அஞ்சல் தலை
நாடாளுமன்ற உறுப்பினர், மதுரை
பதவியில்
1962–1967
தனிநபர் தகவல்
பிறப்பு ஆகத்து 14, 1905(1905-08-14)
மதுரை, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு 25 சனவரி 1983(1983-01-25) (அகவை 77)
மதுரை, தமிழ்நாடு, இந்தியா
குடியுரிமை இந்தியன்
தேசியம் இந்தியன்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ்
வாழ்க்கை துணைவர்(கள்) பர்வதவர்தினி
உறவினர் என். எம். ஆர். கிருட்டிணமூர்த்தி

நா. ம. ரா. சுப்பராமன் (N. M. R. Subbaraman, 14 ஆகத்து 1905 – 25 சனவரி 1983) காந்தியவழியில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டவர். மதுரையில் நாட்டாண்மை மல்லி குடும்பத்தில், இராயலு அய்யர்-காவேரி அம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர். இவரது மனைவி பெயர் பர்வதவர்தனி. காந்தியவழியில் இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டதால் ”மதுரை காந்தி“ என மதுரை மக்களால் அன்பாக அழைக்கப்பட்டவர். [1]

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்களிப்பு[தொகு]

தேசியக் கவி இரவீந்திரநாத் தாகூர் கல்கத்தாவில் நடத்திக்கொண்டிருந்த சாந்திநிகேதன் கல்விக்கூடத்தில் இரண்டு ஆண்டு காலம் கல்வி பயின்றார். சுப்பராமன் செல்வக்குடும்பத்தில் பிறந்தாலும், இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிர பங்கேற்று கடுஞ்சிறை கண்டவர். சிறைவாசத்தின் போது இவருக்கு கிடைத்த அருமையான நண்பர்களான கோவை தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார் மற்றும் வேதாரண்யம் சர்தார். அ. வேதரத்தினம் ஆகியவர்களுடன் இணைந்து காங்கிரசு பேரியக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். சர்வோதயத் திட்டங்களிலும் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டார்.

நிலக்கொடை இயக்கம்[தொகு]

தமது நிலங்களைப் சர்வோதய சங்க தலைவர் வினோபா பாவே வகுத்த திட்டப்படி தனது நூறு ஏக்கர் விளைநிலங்களை பூதானம் (பூமி தானம்) மூலம், ஏழை எளிய மக்களுக்கு வழங்கிய சர்வோதயத் தொண்டர்.

அரசியல் இயக்கம்[தொகு]

1923ல் காக்கிநாடாவில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சி மாநாட்டுக்கு, மதுரை நகர் பிரதிநிதியாக கலந்து கொண்டார். இதனால் இவரது இந்திய விடுதலை வேட்கை அதிமாக்கியது. 1930ல் மதுரை மாவட்ட காங்கிரசு கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார். 1934ல் மகாத்மா காந்தி நாடு முழுவதும் தீண்டாமைக்கு எதிரான பிரசாரம் மேற்கொண்டார். அவரது பயணத்தில் காந்தியடிகள் மதுரை வருகையின் போது, என். எம். ஆர். சுப்பராமன் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கி இருந்தார். மகாத்மா காந்தி சுப்பராமனின் குடும்ப நண்பராக விளங்கினார்.

மதுரை நகராட்சியின் தலைவராக 1935-1942 வரை பதவியில் இருந்தார். மேலும் 1937ஆம் ஆண்டு மற்றும் 1946ஆம் ஆண்டு ஆகிய முறை சென்னை மாநில சட்டப்பேரவையில் உறுப்பினர் பதவியில் இருந்து மக்கள் பணி ஆற்றினார். ”வெள்ளையே வெளியேறு” என்று காந்தியடிகள் தொடங்கி வைத்த போராட்டத்தில் கலந்து கொண்டு கடுஞ்சிறைவாசம் அனுபவித்தார்.

இந்தியா 1947ல் விடுதலை பெற்ற பின்பும் சுப்பராமன் மக்கள் பணியை தொடந்து ஆற்றினார். நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக 1962-1967 வரை தொடந்தார்.[2]

தீண்டாமை ஒழிப்பு இயக்கம்[தொகு]

காந்தீய கொள்கைகளில், அரிசன முன்னேற்றத்தை தேர்ந்தேடுத்து இதற்காகவே தம்மை அர்பணித்துக் கொண்டவர். 1939ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்டவர்கள் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் நுழையும் போராட்டத்தில் மதுரை. அ. வைத்தியநாதய்யருடன் சுப்பராமன் துணையாக போராடியதுடன் கக்கன் போன்றவர்களையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மேம்பாட்டிற்காக உறைவிடப்பள்ளிகள் நிறுவினார். நரிக்குறவப் பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து திருமணம் செய்துவைத்தார்.

உருவாக்கிய தொண்டு நிறுவனங்கள்[தொகு]

காந்தியப் பணியில்[தொகு]

”அகில இந்திய காந்தி நினவு நிதி” அமைப்பு துவக்கப்பட்ட போது, சுப்பராமன், தமிழ்நாட்டில் அதன் அமைப்புச் செயலராகவும், பின் அதன் தலைவராகவும் 1981ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.

கொடைத்திறன்[தொகு]

ஆன்மீகத்தில் மிகவும் பற்றுக் கொண்ட இவர் கீதா பவனம் கட்டி பகவத்கீதை பாராயணம் நடத்த வழி வகுத்தார். சௌராட்டிர சமூக பெண்கள் கல்வி முன்னேற்றத்திற்காக, மதுரையில் சௌராட்டிர பெண்கள் மேல்நிலைப் பள்ளி, இவர் முயற்சியால் துவக்கப்பட்டது.

தன் இல்லத்தில் இருந்த நூல்களை மதுரை சௌராட்டிரக் கல்லூரி நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கினார். மதுரையில் பல கூட்டுறவு சங்கங்களை நிறுவி, கூட்டுறவு இயக்கத்தை வளர்த்தவர்களில் இவர் முக்கியமானவர். தாம் மதுரை சொக்கிக்குளத்தில் வாழ்ந்த மாளிகையை மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் ”காந்தியியல்” (Gandhian Thought) துறைக்கு நன்கொடையாக வழங்கினார்.

மறைவுக்குப்பின் அரசு செலுத்திய மரியாதை[தொகு]

சுப்பராமனின் பொதுநலத் தொண்டினை பாராட்டும் விதமாக, சுப்பராமனின் நூற்றாண்டு பிறந்த நாளில், (2005ஆம் ஆண்டில்) சுப்பராமானின் நினைவு தபால் தலையை இந்திய அரசின் அஞ்சல் துறை வெளியிட்டது.[3][4]

மதுரை மாநகராட்சி இவர் பெயரில் பூங்கா ஒன்று மதுரையில் அமைத்ததுடன், மதுரை மாநகர், தெற்குவாசல்-வில்லாபுரத்தை இணைக்கும் மேம்பாலத்தின் திறப்பு விழாவின் போது (11-08-1989), என். ஆர். சுப்பராமனின் நினைவை போற்றும் விதமாக அந்த மேம்பாலத்திற்கு ’என். எம். ஆர். சுப்பராமன் மேம்பாலம்’ என்று பெயரிட்டார், அன்றைய தமிழக முதல்வர் மு. கருணாநிதி.

தமக்கு சொந்தமான இடத்தை மதுரை மாநகராட்சிக்கு தானமாக அளித்து அதில் மகப்பேறு மருத்துவமனை கட்ட உதவினார். மதுரை மாநகராட்சி நிர்வாகம் இந்த மருத்துவமனைக்கு, சுப்பராமனின் தந்தை இராயலு அய்யர் நினைவாக என். எம். இராயலு அய்யர் மகப்பேறு மருத்துவமனை எனப்பெயர் சூட்டி கெளரவித்தது. (இந்த மகப்பேறு மருத்துவமனையை காந்தி பொட்டல் ஆசுபத்திரி என்று இப்பகுதி மக்கள் அழைப்பர். மேலும் இந்த மகப்பேறு மருத்துவமனை முன்பாக, மகாத்மா காந்தியின் முழு உருவச்சிலை பொதுமக்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2014-05-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-03-29 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  2. http://164.100.47.132/LssNew/members/statedetailar.aspx?state_name=Madras[தொடர்பிழந்த இணைப்பு]
  3. A Commomorative Postage Stamp on Masdurai Ganhi N. M. R. Subbaraman
  4. என். எம். ஆர். சுப்பராமன் நினைவு அஞ்சல் தலை வெளியீடு[தொடர்பிழந்த இணைப்பு]

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நா._ம._ரா._சுப்பராமன்&oldid=3587330" இருந்து மீள்விக்கப்பட்டது