ஆலன் ஆக்டவியன் ஹியூம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலன் ஆக்டேவியன் ஹியூம் (1829–1912)

ஆலன் ஆக்டேவியன் ஹியூம் (Allan Octavian Hume) (6 சூன் 1829 – 31 சூலை 1912), இங்கிலாந்தின் கென்ட் நகரில் ஜோசப் - மரியா தம்பதியின் எட்டாவது குழந்தையாக ஆலன் ஆக்டேவியன் ஹியூம் பிறந்தார். தந்தை ஜோசப் ஹியூம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் ஒரு தீவிர உறுப்பினராக இருந்தவர். கல்லூரிப் படிப்பை முடித்ததும் ஆலன் ஓர் ஐ.சி.எஸ். அதிகாரியாகத் தேர்வு பெற்று இந்தியாவில் 1850-ல் உத்தரப் பிரதேசத்தில் பணியைத் தொடங்கினார். இந்தியாவில் காங்கிரஸ் கட்சியைத் துவக்கக் காரணமானவர்களில் இவரும் ஒருவர்.[1]

எட்டாவா நகரில் 1856-ல் ஓர் ஆங்கிலப் பள்ளிக்கூடத்தை ஆலன் தொடங்கினார். ஆலன் ஆற்றிய பணியைப் போற்றும் வகையில் பிற்காலத்தில் அந்தப்பகுதி "ஹியூம் கஞ்ஜ்' என்று வழங்கப்பட்டு அது மருவி தற்பொழுது "ஹோம் கஞ்ஜ்' என அழைக்கப்படுகிறது.

1857-ல் சிப்பாய்க் கலகத்துக்குப் பிறகு ஆங்கில மேலதிகாரிகளின் 1859 ஜனவரி சுற்றறிக்கையின்படி இந்திய மாணவர்களுக்குக் கல்வி தரும் திட்டத்தை உடனடியாக நிறுத்திவிட வேண்டும் என்று மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அந்தச் சுற்றறிக்கைக்குப் பதிலாக 1859 மார்ச் 30-ம் தேதியிட்ட கடிதத்தில் ஆலன் பின்வரும் கருத்தை வலியுறுத்தினார்: ""இந்திய மாணவர்களுக்குக் கல்வி தரும் முயற்சி அதிகமாக வேண்டும் என்று இதற்கு முன் கிழக்கு இந்தியக் கம்பெனியின் இயக்குநர்கள் போட்ட உத்தரவு உள்ளது.

அதன்படி தொடர்ந்து கல்வி அறிவைப் பரப்புவது நல்லது. கல்வி அறிவு மூலம் மக்களுக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டால்தான் அது அரசுக்கு நன்மை பயக்கும். அறியாமையில் மக்களை அடக்கி வைப்பதால் கடைசியில் எதற்கும் அடங்காத ஆவேசம் மக்களுக்கு ஏற்பட்டு எதிர்ப்படும் எல்லாக் கட்டுப்பாடுகளையும் அவர்கள் உடைத்தெறிந்துவிடுவார்கள் என்பதற்கு வரலாற்றில் பல சான்றுகள் இருக்கின்றன.

மக்களுடைய முன்னேற்றத்தில் அக்கறை காட்டி அவர்களுடைய மதிப்பையும், நம்பிக்கையையும் பெறுவதில்தான் அரசாங்கம் செயல்பட வேண்டும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.

ஆங்கில அரசாங்கம் மேற்கொண்ட பற்பல சீர்கேடான நடவடிக்கைகளை ஆலன் வலுவாக எதிர்த்தார். எடுத்துக்காட்டாக, மதுக்கடைகளை ஆங்காங்கு விரிவுபடுத்தி அதனால் கிடைக்கும் ஏராளமான வருவாயை அரசாங்கம் ஆண்டுதோறும் பெருக்கிக் கொள்வதை ஆலன் கண்டித்தார். அதனால், குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஏழைகளின் குடும்பங்கள் படும் துன்பங்களைத் தவிர்க்கும் வகையில் அரசாங்கம் தனது வரி வசூலை மட்டும் கவனித்துக் கொண்டிராமல் மக்களின் நலன்களையும் கவனிக்க வேண்டும் என்று 1860 மே மாதத்தில் ஆலன் எழுதிய அறிவிப்பில் தெரிவித்திருந்தார்.

ஆலன் தந்த ஆலோசனைகளையும், முற்போக்கான திட்டங்களையும் அப்பொழுது இருந்த ஆங்கில மேலதிகாரிகள் பலர் புறக்கணித்தாலும், வைஸ்ராய் பதவிக்கு வந்த மேயோ பிரபு, ரிப்பன் பிரபு போன்றோர் ஆலனின் ஆலோசனைகளை வரவேற்றார்கள். விவசாயத் துறையை மேம்படுத்த ஆலன் அளித்த ஆய்வறிக்கைகளைப் பார்த்த மேயோ பிரபு, அவற்றை நிறைவேற்ற ஆலன்தான் பொருத்தமானவர் என்று முடிவெடுத்து 1870-ல் ஆங்கில அரசின் வைஸ்ராய் தலைமையகத்தில் விவசாயம், வருவாய், வணிகம் உள்ளிட்ட துறையில் செயலாளராக ஆலன் நியமிக்கப்பட்டார்.

1876-ல் வைஸ்ராயாக வந்த லிட்டன் பிரபுவுடன் ஆலனால் பல பிரச்னைகளில் ஒத்துப்போக இயலவில்லை. குறிப்பாக, வெளிநாட்டு வணிக ஒப்பந்தங்களில் இந்தியாவுக்கு ஏற்படவிருந்த பெரும் இழப்புகளை ஆலன் சுட்டிக்காட்டினார்.

மேலும், 1876-78-ல் பெரும் பஞ்சம் ஏற்பட்டு ஒரு கோடி மக்கள் மாண்டனர். அதற்கான தீர்வு ஆலன் தந்த பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவை லிட்டன் பிரபுவுக்குப் பிடிக்கவில்லை. உடனே, ஆலன் செயலாளர் பணியிலிருந்து பதவியிறக்கம் செய்யப்பட்டு அப்பொழுது இருந்த வடமேற்கு மாகாணத்தின் (தற்கால உத்தரப்பிரதேசம்) வருவாய்த் துறை வாரியத்தின் இளநிலை உறுப்பினராக அனுப்பப்பட்டார். அப்பொழுது இருந்த பத்திரிகைகள் அனைத்தும் கடுமையான முறையில் மிக நேர்மையான ஓர் அதிகாரி ஆட்சியாளர்களால் மிக மோசமாக நடத்தப்பட்டார் என்று கண்டித்தன.

1882 ஜனவரி முதல் நாளில் தமது அரசாங்கப் பதவியை ஆலன் துறந்துவிட்டார். அதன் பிறகு இந்திய மக்களுக்குத் தாம் செய்ய வேண்டிய கடமை ஒன்று அவருக்கு இருந்தது. அது, ஆங்கில அரசாங்கம் இந்தியர்களுக்குச் செய்து வரும் அநீதிகளை வெளிப்படுத்தித் தக்க முன்னேற்றத்தைத் தர வேண்டும் என்பதை வலியுறுத்த இங்கிலாந்து சென்று, அங்கு இந்தியா பற்றிய ஓர் அமைப்பை உண்டாக்க அவர் திட்டமிட்டார். ஆனால், வில்லியம் வெட்டர்பர்ன் போன்று இருந்த நண்பர்கள் இங்கிலாந்துக்குச் செல்வதைவிட இந்தியாவிலேயே இந்திய மக்களுக்காக ஓர் அமைப்பை உருவாக்குவது நல்லது என்று ஆலோசனை கூறினார்கள்.

இந்தியாவின் உரிமைகளை நிலைநாட்டவும், இந்தியாவை முன்னேற்றப் பாதையில் நடத்திச் செல்லவும் தக்கதொரு அமைப்பை உருவாக்க ஆலன் எடுத்த முதல் முயற்சி, கோல்கத்தா பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகளுக்கு 1883, மார்ச் 1-ல் சிறந்ததொரு வெளிப்படையான வேண்டுகோளை வெளியிட்டார்.

பறவையியல், இயற்கை வரலாற்றுக்குமான பங்களிப்புகள்[தொகு]

இவர் இளமையில் இருந்தே அறிவியலில் தன ஆர்வம் கொண்டிருந்தார். இவர் எழுதுகிறார்: அறிவியல்,

...புறத்தில் நிலவும் பொருள்களைப் பற்றிய ஆர்வத்தை மாந்தருக்குக் கற்பிக்கிறது… விலங்கு உள்ளுணர்வை நிறைவு செய்து உறுதியும் தன்னலமும் வாய்ந்த உலக வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. உண்மைபால் காதல் கொள்ளச் செய்கிறது. விருப்பு வெறுப்பில்லாத அறிதிறன் புலங்களுக்குப் பயிற்சியளிக்கிறது

மேலும் இயற்கை வரலாறு பற்றி 1867 இல் இவர் எழுதுகிறார்:[2]

... இளையவருக்கும் முதியவருக்கும் ஒன்றேபோல, சமயத்துக்கு அடுத்து, இயற்கை வரலாற்றுப் புலங்களின் ஆய்வு, அனைவரும் ஆட்படும் உலகச் சபலங்களிலிருந்து மீள மிக வலிவான காப்பை அளிக்கிறது. எந்தவொரு இயற்கை அறிவியல் புலமும் உண்மையாக ஆய்வு செய்யும்போது சரியான உயர்வான படைப்பாளரின் (கடவுளின்) பெருந்தன்மை, நன்மை, மதிநுட்பம் ஆகியவற்றை அறிவிக்காமல் போவதில்லை; இதனால் நாம் குறைந்த தன்னலத்துடனும் குறைந்த உலக அக்கறையுடனும் குறைந்த பக்தியுடனும் அமைந்து, செல்வம், அதிகாரம், வாழ்க்கை இருப்புநிலை ஆகிய சாத்தானின் முட்களால் குதறப்படுவோம் எனக் கொள்ளலாகாது. ஆனால், இந்த ஆய்வு நம்மை நம்முடன் வாழ்வோரிடம் மதிநுட்பத்தோடும் நல்ல உறவோடும் பயன்மிக்கவராக மாற்றிவிடுகிறது.

கிரேகுசு,உரோத்னே கோட்டையின் நிலப்படம், சிம்லா (1872)

இவர் எதாவாவில் வேலை செய்தபோது, சொந்த ஆர்வத்தில் பல பறவைகளின் உருப்படிகளைத் திரட்டினார். இவற்றை 1867 கிளர்ச்சியின்போது காட்சிக்கு வைத்தார். பின்னர் இந்தியத் துணைக்கண்ட பறவைகள் பற்றிய முறையான அளக்கையை மேற்கொண்டு ஆவணப்படுத்தித் தொடங்கினார். இதன்வழி உலக ஆசியப் பறவைகளின் பெருந்திரளான தகவலைத் தொகுத்தார். இவற்றைச் சிம்லா, யாக்கோ மலை உரோத்னே கோட்டையில் இருந்த தன் வீட்டில் அருங்காட்சியகமாகவும் நூலகமாகவும் தொகுத்தார்.

திரட்டுகள்[தொகு]

உரோத்னே கோட்டை காப்பகமும் முகப்பும் (2016).

இவரது பறவைத் திரட்டுகள் 47 தியோதார் மரப்பேழைகளில் பொட்டலப்படுத்தப்பட்டன. இவை உருப்படிகளைச் சிதைக்காமல் இருக்க ஆணிகள் இன்றி செய்யப்பட்டன. ஒவ்வொரு பேழையும் அரை டன் எடைகொண்டிருந்தது. இவை மலையிலிருந்து கீழே கொணர்ந்து மாட்டுவண்டிகளில் ஏற்றி, முதலில் கால்காவுக்கும் பின்னர் பம்பாய் துறைமுகத்துக்கும் போக்குவரத்து செய்யப்பட்டன. பிரித்தானிய அருங்காட்சியகத்துக்கு 1885 இல் சென்றவற்றில் 82,000 உருப்படிகள் இருந்தன. ஆனால், அருங்காட்சியகத்தில் 75,577 உறுப்படிகளே காட்சிக்கு வைக்க முடிந்துள்ளது. திரட்டுகளின் தகவல்கள் கீழே தரப்படுகின்றன (பழைய பெயர்களே தரப்பட்டுள்ளன).[2] இவர் ஏற்கெனவே 20,000 உருப்படிகளை வண்டுகள் துளைத்துச் சிதைத்தமையால் அழித்துவிட்டார்.[3]

  • 2830 கொன்றுண்ணிகள்(Accipitriformes)… 8 வகைகள்
  • 1155 ஆந்தைகள் (Strigiformes)…9 வகைகள்
  • 2819 காக்கைகள், வான்கோழிகள், காஞ்சனப்புள்கள் etc.…5 வகைகள்
  • 4493 குயில்வகை இன்னிசைப் பறவைகளும் ஈப்பிடிப்பான்களும்… 21 வகைகள்
  • 4670 பூங்குருவிகளும் கதிர்க்குருவிகளும்…28 வகைகள்
  • 3100 கொண்டைக்குருவிகளும் wrens, dippers, etc.…16 வகைகள்
  • 7304 timaliine birds…30 வகைகள்
  • 2119 சிட்டுகளும் கீச்சaன்களும்…9 வகைகள்
  • 1789 தேன்சிட்டுகளும் (Nectarinidae) வெண்கண் குருவிகளும் (Zosteropidae)…8 வகைகள்
  • 3724 தூக்கணாங்குருவிகளும் (Hirundiniidae), வாலாட்டிகளும் நெட்டைக்காலிகளும் (Motacillidae)…8 வகைகள்
  • 2375 finches (Fringillidae)…8 வகைகள்
  • 3766 சூரைக்குருவிகளும் (Sturnidae), weaver-birds (Ploceidae), வானம்பாடிகளும் (Alaudidae)…22 வகைகள்
  • 807 எறும்பு பூங்குருவிகளும்(Pittidae), அகல் அலகிகளும் (Eurylaimidae)…4 வகைகள்
  • 1110 கொண்டலாத்திகளும் (Upupae), உழவாரன் குருவிகளும் (Cypseli), காட்டுப் பக்கிகளும் (Caprimulgidae) frogmouths (Podargidae)…8 வகைகள்
  • 2277 Picidae, இருவாயன்களும் (Bucerotes), பஞ்சுருட்டான்களும் (Meropes), மீன்கொத்திகளும் (Halcyones), பனங்கடைகளும்(Coracidae), தீக்காக்கைகளும் (trogones)…11 வகைகள்
  • 2339 மரங்கொத்திகள் (Pici)…3 வகைகள்
  • 2417 honey-guides (Indicatores), குக்குறுவான்களும் (Capiformes), குயில்களும் (Coccyges)…8 t வகைகள்
  • 813 கிளிகள் (Psittaciformes)…3 வகைகள்
  • 1615 புறாக்கள் (Columbiformes)…5 வகைகள்
  • 2120 கவுதாரிகள் (Pterocletes), game-birds and megapodes(Galliformes)…8 வகைகள்
  • 882 காணான்கோழிகள் (Ralliformes), ஓந்திகளும் (Gruiformes), வரகுக் கோழிகளும் (Otides)…6 வகைகள்
  • 1089அரிவாள்மூக்கன்களும் (Ibididae), நாரைகளும் (Ardeidae), கூழைக்கடாக்களும் நீர்க்காகங்களும் (Steganopodes), முக்குளிப்பான்களும் (Podicipediformes)…7 வகைகள்
  • 761 வாத்துவகைகள் (Anseriformes)…2 வகைகள்
  • 15965 முட்டைகள்
ஆத்ரோமிசு இயூமேய் (Hadromys humei)

இவரது திரட்டுகள் 256 வகைமை உருப்படிகளைக் கொண்டிருந்தன. மேலும்,இவரது திரட்டுகளில் இவற்றோடு புதிய சிறப்பினமாகிய ஆத்ரோமிசு இயூம் உட்பட, 400 பாலூட்டி உருப்படிகளும் இருந்தன.[4]

பணிகள்[தொகு]

  • My Scrap Book: Or Rough Notes on Indian Oology and Ornithology (1869)
  • List of the Birds of India (1879)
  • The Nests and Eggs of Indian Birds (3-volumes)
  • Game Birds of India, Burmah and Ceylon (3-volumes)
  • Hints on Esoteric Theosophy
  • Agricultural Reform in India (1879)
  • Lahore to Yarkand. Incidents of the Route and Natural History of the Countries Traversed by the Expedition of 1870 under T. D. Forsyth
  • Stray Feathers (11-volumes + index by Charles Chubb (ornithologist)

மேற்கோள்கள்[தொகு]

  1. Allan-Octavian-Hume
  2. 2.0 2.1 Moulton, Edward (2003). "The Contributions of Allan O. Hume to the Scientific Advancement of Indian Ornithology". in J. C. Daniel and G. W. Ugra. Petronia: Fifty Years of Post-Independence Ornithology in India. New Delhi, India: BNHS, Bombay & Oxford University Press. பக். 295–317. 
  3. Anon. (1885). "The Hume Collection of Indian Birds". Ibis 3: 456–462. doi:10.1111/j.1474-919X.1885.tb06259.x. https://www.biodiversitylibrary.org/page/8615524. 
  4. Thomas, Oldfied (1885). On the mammals presented by Allan O. Hume, Esq., C.B., to the Natural History Museum. பக். 54–79. https://archive.org/stream/proceedingsofgen86zool#page/53/mode/1up. 

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

பணிகள்
wwவாழ்க்கைத் தரவு வாயில்கள்
தாவரவியல்
தேடல் ஆவணங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலன்_ஆக்டவியன்_ஹியூம்&oldid=3832318" இலிருந்து மீள்விக்கப்பட்டது