சர்வோதயக் கல்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆதாரக்கல்வி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
காந்தியவாதியும், சுதந்திரப் போராளியும், நெய் தலிமின் நிறுவனரான ஸ்ரீ சித்த புஷான் ஹார்டி 1940 இல் பீகார் மாநிலத்தில் (தற்போது மேற்குவங்காளம்) உள்ள மன்ஹூம் மாவட்டத்தில் உள்ள மஜ்ஹிஹிரா என்ற கிராமத்திற்கு வந்தார், அங்கு அவர் மஜ்ஹிஹிரா தேசிய ஆதாரக் கல்வி நிறுவனத்தை (MNBEI) நிறுவினார்.[1] தற்போது இப்போது 100 வயதை கடந்த இவர் , இன்னும் எளிய வாழ்க்கையை வாழ்ந்து கைராட்டையைப் பயன்படுத்திவருகிறார்.

சர்வோதயக் கல்வி, வார்தா கல்வி, ஆதாரக் கல்வி, புதிய கல்வி (Nai Talim (இந்தி: नई तालीम, உருது: نئی تعلیم) என்பது அறிவு மற்றும் வேலை ஆகியவை தனித்தனியானவை அல்ல என்று குறிப்பிடுகின்ற ஒரு கொள்கை ஆகும். காந்தியடிகள் இந்தக் கல்விமுறையை ஊக்குவித்தார்.[2]

இந்த சொற்றொடர் 'அனைவருக்கும் அடிப்படை கல்வி' என மொழிபெயர்க்கப்படுகிறது.[3] இருப்பினும், இது பல பொருள்களைக் கொண்டதாக உள்ளது. இது ஆங்கில கல்வி முறை மற்றும் காலனித்துவத்துடன் காந்திக்கு ஏற்பட்ட அனுபவத்திலிருந்து உருவாக்கப்பட்டது. அந்த வகையில் ஆங்கிலேயக் கல்விமுறையான மெக்காலே கல்வி, இந்தியக் குழந்தைகளை நேரடியான சமுதாயச் சூழ்நிலையிலிருந்தும் உடல் உழைப்பிலிருந்தும் பிரித்துவிடுவதையும், அரசு மற்றும் தனியாருக்கு பணியாளர்களாக குமாஸ்தா கல்வி முறையால் மாற்றுவதையும் கண்டார். மேலும் இதனால் புதிய உயரடுக்கு வர்க்கத்தை உருவாக்கி உடல் உழைப்பிலிருந்தும் பிரித்து விடுகிறதை உணர்ந்தார். மொத்தத்தில் காந்தியக் கல்வி முறையானது குழந்தைகள் தங்கள் கைவண்ணத்தையும் கற்பனைத் திறனையும் காட்டும் தொழில் பட்டறைகளை அறிமுகம் செய்யும் கல்வியாக இருந்தது.

தனது கல்வித் திட்டத்தை மூன்றே வாசகங்களில் காந்தி விளக்கினார். ‘வாழ்க்கைக்கான கல்வி; வாழ்க்கை மூலம் கல்வி; வாழ்க்கை முழுவதும் கல்வி’ என்பவையே அவை. காந்தியக் கல்வியின் அடிப்படை தனி மனிதர்களைச் சமுதாயத்துக்குப் பயனுள்ளவர்களாக மாற்றுவது என்பதே.[4]

கல்வியின் அம்சங்கள்[தொகு]

சர்கா சுதேசி மற்றும் தன்னம்பிக்கையை பிரதிபலிக்கிறது - நய் தாலிம் - ஒரு அடிப்படை கல்வி முறை, மஹாஹிரா, புருலியாவில் செயல்படுத்தப்பட்ட மகாத்மா காந்தியின் கருத்து.

காந்தியக் கல்வி ஆறு முதன்மைப் பகுதிகளைக் கொண்டது. முதல் அம்சம், ஏழாண்டு ஆதாரக் கல்வியை இலவசமாக அரசே தரத்தோடு வழங்க வேண்டும். இரண்டாவது அம்சம், ஆதாரக் கல்வியானது முழுக்க முழுக்கத் தாய்மொழிவழிக் கல்வியாக இருக்கவேண்டும். மூன்றாவது அம்சம், கைத்தொழில் மூலமோ, ஆக்கப்பணி மூலமோ கல்வி கற்றுத்தரப்படும். நான்காவது அம்சம், பள்ளியின் சட்ட திட்டங்களிலிருந்து தாங்கள் கற்க வேண்டிய தொழில் உட்பட மாணவர்களே தீர்மானித்து சுயக்கட்டுப்பாட்டுடன் ஒரு சமூகமாகப் பள்ளியை வழிநடத்துவார்கள். தங்களது சூழலோடு பொருந்துகிற கல்வி என்பது ஐந்தாவது அம்சம். ஆறாவது அம்சம், குடிமைப் பயிற்சி. நாட்டின் உயர்ந்த லட்சியங்களாகக் காந்தி கருதிய மதச்சார்பின்மை, வாய்மை, நேர்மை, பொது வாழ்வியல், சமுதாயப் பங்கேற்பு, அகிம்சை வழியில் உரிமைகளைப் பெறும் வழிகளை அறிதல் என அவரது கல்வி விரிவடைகிறது.

வரலாறு[தொகு]

காந்தியின் முதல் கல்விச் சோதனை தென்னாப்பிரிக்காவில் டால்ஸ்டாய் பண்ணை ஆசிரமத்தில் துவங்கியது.[5] தென் ஆப்பிரிக்காவிலிருந்து 1915 இல் இந்தியா திரும்பியவர் அன்றைய இந்தியக் கல்வித் திட்டத்தை ஆய்வுக்கு உட்படுத்தினார். அதன் விளைவாக, புதிய கல்வித் திட்டத்தை உருவாக்கினார். அதன்படி 1917 இல் அகமதாபாத்தில் தன்னுடைய அடிப்படைக் கல்வி மற்றும் புதிய கல்வி எனும் கொள்கைகளின்படி புதிய பள்ளிகளைத் தொடங்கினார். இதே போன்று 1921 இல் குசராத்தில் குஜராத் வித்யா பீடம் என்ற பல்கலைக்கழகத்தை நிறுவினார்.[6] இதற்கு வெகுகாலத்திற்குப் பிறகு, விடுதலைப்போராட்ட வெப்பம் மிகுந்த காலத்தில் சேவாகிராமத்தில் வாழ்ந்தபோது, ‘ஹரிஜன்’ இதழில் நாட்டின் கல்வி குறித்து விரிவான ஒரு கட்டுரையை காந்தி எழுதினார். அதில் கல்விமுறையின் 10 பலவீனங்களைப் பட்டியலிட்டிருந்தார். அவை,[7]

  1. நமது மரபுக்கும் பண்பாட்டுக்கும் முரண்பட்டதாக இந்த மெக்காலே குமாஸ்தா கல்வி உள்ளது.
  2. இந்தக் கல்வி, குழந்தையை நேரடியான சமுதாயச் சூழ்நிலையிலிருந்தும் உடல் உழைப்பிலிருந்தும் பிரித்துவிடுகிறது.
  3. கற்றவர்களைத் தனி இனமாக, பிரிவாக இன்றைய கல்வி உருவாக்கிவிட்டது.
  4. அரசு மற்றும் தனியார்க்குப் பணியாளர்களாக மாணவர்களை மாற்றுவதற்கான பயிற்சி மட்டுமே இன்றைய கல்வி.
  5. மாணவர்களின் மனத்தில் சமுதாய உணர்வு இன்றி சுயநல தனிமனித உணர்வு புகுந்துவிட்டது.
  6. ஒரு நூற்றாண்டாகத் தொடரும் இந்த அந்நியர் கல்வியில் தொடக்கப் பள்ளி என்பது எந்த முன்னேற்றமுமின்றி வதங்கிவிட்டது.
  7. கல்வித் திட்டத்தின் பெரும்பகுதி வாழ்க்கைக்குப் பயன்படாததாக வீணானததாக உள்ளது.
  8. பொதுமக்கள் கல்வி முன்னேற்றம் பற்றி இன்றைய கல்வி எண்ணிப்பார்ப்பதே கிடையாது.
  9. இயந்திர முறையில் ஒரே மாதிரி கல்வியை அனைத்துக் குழந்தைகளுக்கும் - அவரவர் தேவை உணராமல் வழங்குகிறார்கள்.
  10. கல்விமுறையும் தேர்வுகளும் கல்வியை மாணவர்களின் உள்ளத்தில் பயத்தை உருவாக்கிப் பெரிய சுமையாகவே மாற்றிவிடுகிறது.

பின்னர் காந்தி 1937 அக்டோபர் 22 இல் வார்தாவில் தேசிய கல்வி மாநாட்டை கூட்டினார். அது இந்தியத் தேசியக் கல்வி மாநாடு என்று அழைக்கப்படுகிறது. கல்வியாளர் டாக்டர் ஜாகிர் ஹுசைன் தலைமையில் இந்தியக் கல்வி குறித்து முடிவுசெய்ய ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. வார்தா கல்வித் திட்டம் அல்லது ஆதாரக் கல்விக் கொள்கை அந்த கல்விக் குழுவால் பரிசீலித்து முன்மொழியப்பட்டது. பிறகு வர்தாவிலும் செகாவோனிலும் சர்வோதய மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. காந்தியின் மரணத்திற்குப் பிறகு அடிப்படை கல்வி மற்றும் முன்-அடிப்படை கல்விப் பள்ளிகள் உருவாக்கப்பட்டன.

மத்திய அரசு அமைத்த தேசிய திட்ட ஆணையம் பல அடிப்படைகளில் காந்தியின் அடிப்படை கல்வி பார்வைக்கு எதிர்ப்பைப் தெரிவித்தது. நேருவின் அரசின் பார்வையானது நாட்டை தொழில்மயமாக்குவதையும், மையப்படுத்தப்பட்ட திட்டமிட்ட பொருளாதாத்தையும் கொண்டதாக இருந்ததால், இதில் காந்தியின் 'ஆதாரக் கல்வி' அல்லது சுய-ஆதரவு பள்ளிகளுக்கு இடமின்றி போனது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தர அறிவுஜீவிகளாளலும், அரசியல் தலைவர்களாளும் ஆதரவளிக்கப்பட்டது."

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-23. பார்க்கப்பட்ட நாள் 2017-07-29.
  2. Richards, Glynn (1996), A Source-Book on Modern Hinduism, Routledge
  3. Basic Education (Nai Talim)
  4. Dinabandhu Dehury: Mahatma Gandhi's Contribution to Education
  5. http://home.iitk.ac.in/~amman/soc748/sykes_story_of_nai_talim.html
  6. முனைவர் இரா. முரளி (3 அக்டோபர் 2017). "காலத்தின் தேவை கல்வியாளர் காந்தி!". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 3 அக்டோபர் 2017.
  7. ஆயிஷா இரா. நடராசன் (27 சூலை 2017). "காந்தியக் கல்வியும் மெக்காலேவாதிகளும்". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 29 சூலை 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்வோதயக்_கல்வி&oldid=3922721" இலிருந்து மீள்விக்கப்பட்டது