அய்யா வைகுண்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அய்யா வைகுண்டர் (c.1833 –c.1851) (தமிழ்: அய்யா வைகுண்டர், சமக்கிருதம்: अय्या वैघुण्ढर्, மலையாளம்: അയ്യാ വൈകുണ്ഠർ) அல்லது சிவ நாராயணர்[1] ஏகப்பரம்பொருளின் ஏகனேக அவதாரமாவார் . அவர் நாராயணருக்கும் லட்சுமி தேவிக்கும் மகனாக திருச்செந்தூர் கடலினுள் கொல்லம் ஆண்டு 1008, மாசி மாதம் 20-ஆம் தியதி அவதரித்தார்.[2] மும்மூர்தியினரின் நாமரூபங்களை ஏற்று, அனைத்து தெய்வ சக்திகளையும் உள்ளடக்கி நாராயணர் தனது ஒன்பதாம் பிறப்பை, வைகுண்ட அவதாரத்துக்கு முன்பு திருச்செந்தூர் கடற்கரையில் எடுக்கிறார்.[3] தனது ஒன்பதாம் பிறப்பை எடுக்கும் இந்த நாராயணரே, பின்னால் வைகுண்டக்குழந்தையை பெற்றெடுக்கப்போகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.[4] இன்னிகழ்வுகள் அனைத்தும் கலியனை சம்ஹாரம் செய்யவும், கலியுகத்தை பூர்த்தி செய்யவும் நாராயணரின் அடுக்கடுக்கான செயல்திட்டங்களின் பகுதியே ஆகும்.

முன்னர், கலியுகத்தின் அறுதிகாலகட்டம் நெருங்கி வரவே, வைகுண்டரை பெற்றெடுப்பதற்காக பிரபஞ்சத்தின் அனைத்து பெண்சக்திகளையும் உள்ளடக்கி லெட்சுமி தேவியை மகரமாக திருச்செந்தூர் கடலினுள் வளர விட்டிருந்தார் நாராயணர்.[5] நாராயணர் அருளால் இந்த லெட்சுமியின் கருவிலே ஏகப்பரம்பொருள் வைகுண்டராக பிறக்கிறார்.[6] பிறந்த உடனேயே கலியை அழித்து தர்ம யுகத்தை தொற்றுவிப்பதற்கான அவருக்கான சாசனம் ’விஞ்சை’ என்னும் பெயரில் கடலினுள்ளேயே நாராயணரால் வைகுண்டருக்கு வழங்கபடுகிறது.[7]

நாராயணர் தாமே வைகுண்டராக பிறக்கிறார் என்னும் கூற்று அகிலத்திரட்டு அம்மானையில் மேலோங்கியிருந்தாலும், 'கலியழிப்பு' 'தர்மயுகத் தோற்றம்' என்ற இரு நோக்கங்களுக்காக நாரண-வைகுண்டர், நாராயணர் வைகுண்டர் என்ற இரு வேறு ஆளுமைகளாக, காலவோட்ட பின்னலில் ஒரே நேர்கோட்டை சுற்றும் இரு துருவங்களாக சூக்ஷும்மாக செயல்படுகின்றனர்.[8] இதையே வேறு விதமாக சொன்னால், நாராயணர் தனது கலியழிப்பு பணியின் சூக்ஷும்மான நிலைகளமாக வைகுண்டர் விளங்குகிறார். மும்மூர்த்திகள் முதலான 33 கோடி தேவர்கள் மற்றும் 44 கோடி தேவ ரிஷிகளின் தவங்களின் பயனாகவும், அவர்களை கலி ஆதிக்கத்திலிருந்து மீட்டெடுக்கவும் வைகுண்டரின் பிறவி அமைவதால்[9] பிரபஞ்சத்தின் அனைத்து ஆண்/பெண் தெய்வ சக்திகளின் ஒருங்கிணைந்த வடிவமாக அவர் அமைவதோடு, அனைவரின் வணக்கத்துக்குரிய ஏகமூர்த்தியாக வைகுண்டர் திகழ்கிறார்.[10]

மறுமுனையில், அவர் சமீப கால்கட்டத்தினர் ஆதலால் ஒரு புராண பாத்திரமாக மட்டுமில்லாமல் அவர் வரலாற்றிலும் வெகுவாக அறியப்படுகிறார்.[11] அகிலத்திரட்டில் காணப்படும் அவரின் போதனைகள், செயல்பாடுகள் ஆகியவற்றுள் பெரும்பாலானவை புற சமகால வரலாற்று குறிப்புகளிலும் காணப்படுகின்றன.[12] பரந்து விரிந்த அவரின் ஆன்மீக ஆளுமையும், போதனைகளும் பெரும்பாலும் அகிலத்திரட்டிலேயே காணப்படுகின்ற போதிலும் அவர் வாய்மொழி மூலமாகவும் போதித்தார்.[13] அவரின் வாய்மொழி போதனைகள் பத்திரம், சிவகாண்ட அதிகார பத்திரம், திங்கள் பதம், சாட்டு நீட்டோலை என பல புத்தகங்களாக தொகுக்கப்பட்டுள்ளன.[14] சமய உருவாக்கம், சமய ஒருங்கிணைவு போன்ற செயல்பாடுகள் அகிலத்திரட்டின் போதனைகளுக்கு நேரெதிரானவை என்றாலும்[15] அகிலத்திரட்டும், அருள் நூலில் காணப்படும் சில புத்தகங்களும் அய்யாவழி என்னும் சமய உருவாகத்தின் அடிப்படையாக அமைந்துள்ளது.[16] அய்யா வைகுண்டர் கடலிலிருந்து வெளிப்பட்ட தினமான மாசி 20-ஆம் நாள் (மார்ச்-3 அல்லது மார்ச்-4) வைகுண்ட அவதார தினமாக கொண்டாடப்படுகிறது.[17]


இது சார்பு கட்டுரைகளின் பாகமான
அய்யாவழி
அய்யாவழியின் வரலாறு
கோட்பாடுகள்

ஏகம்- அடிப்படை ஒருமை
வேதன்-படைப்பாளர்
திருமால்-காப்பாளர்
சிவன்-அழிப்பவர்
வைகுண்டர்-அவதாரம்
அய்யாவழி மும்மை

புனித நூல்கள்

அகிலத்திரட்டு அம்மானை
விஞ்சையருளல்
திருக்கல்யாண இகனை
அருள் நூல்

வழிபாட்டுத்தலங்கள்

சுவாமிதோப்பு பதி
பதிகள்
நிழல் தாங்கல்கள்

சமயவியல்

அய்யாவழி புத்தகங்கள்
அய்யாவழி அமைப்புகள்

சமயச்சடங்குகள்

முதன்மை போதனைகள்

சார்ந்த நம்பிக்கைகள்

அத்வைதம்
சுமார்த்தம்

முந்தைய அவதாரங்கள்[தொகு]

அகிலத்திரட்டின் படி, ஏகமெல்லாம் நிறைந்திருக்கும் இறைவன் தாமே சிவமாக, சக்தியாக, நாதமாக, விஷ்ணுவாக, ருத்திரராக, மகேஷ்வரனாக தோன்றி, ஆதித்தன் வாயு முதலான அண்ட பிண்டங்களை படைத்து அதிலே 84 லட்சம் வகையான உயிரினங்களையும் படைத்து இந்த உலகை இயக்கி வருகிறான். தான் படைத்து இயக்கி வரும் இந்த பூவுலகில் எப்போதெல்லாம் தர்மம் குன்றி அதர்மம் மேலோங்குகிறதோ அப்போதெல்லாம் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதற்காக அவதார புருஷனாக தோன்றுகிறான்.

ஆதியில் அண்டசராசரங்கள் அடங்கிய இவ்வுலகம் தோன்றியவுடன் தான்வந்த யுகத்திற்க்கு நீடிய யுகமெனவே ஆதிபிரமா பெயரிட்டு இவ்வுகத்துக் யாரை இருத்துவோ மென்றுசொல்லி மும்மூர்த்திகளும், தேவர்களெல்லோருங் கூடி ஆலோசிக்கு மளவில் தில்லையா ஈசன் திருவேள்வி தான் வளர்க்க நல்லையா வேள்வி நன்றாய் வளர்த்திடவே வேள்விதனில் குரோணி என்கிற கொடிய அசுரன் உடன் பிறந்தான், குரோணியானவன் பிறந்த சில நாட்களில் தேவர்களையும், கயிலையையும் அழிக்க முற்படும் போது, அசுரன் தனை அழித்து தேவர்களை இரட்சித்துக் காக்க நாராயணர் சிவனை நோக்கி தவம் இருக்கிறார், அசுரனை அழிக்க வரமருளிய சிவபெருமான் நாராயணரிடம் "குரோணியை ஆறு துண்டுகளாக வெட்டி அழிக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யும் போது அவனின் ஒவ்வொரு துண்டமும் அசுரனாக பூமியில் பிறக்கும் என்றும், அப்படி பிறக்கும் அசுரர்களை அழிக்க நீரே உத்தமராக அவதரிக்க வேண்டும் என்றும்" எனக் கூறி வரமருள, நாராயணர் சம்மதித்து குரோணியை ஆறு துண்டுகளாக வெட்டி வதம் செய்கிறார். அந்த யுகமான நீடிய யுகம் அத்தோடு முடிகிறது. அதன்படி தர்மத்தை காக்க யுகாயுகங்கள் தோறும் அவதரித்த நாராயணர் சதுர மற்றும் நெடிய யுகங்களில் தோன்றி குரோணியின் துண்டத்தில் இருந்து தோன்றிய அசுரர்களான குண்டோமசாலி, தில்லை மல்லாலன், மல்லோசி வாகனென்ற அசுர்களை அழித்தார். பின் கிரேதாயுகத்தில் முருகப் பெருமானாகவும், நரசிம்மராகவும், திரேதாயுகத்தில் ஸ்ரீராமராகவும் அவதரித்து அந்த யுக அசுரர்களான சிங்கமுகா சூரன், சூரபத்மன், இரணியன், இராவணன் என்ற அசுரர்களையும் அழித்தார்.

துவாபரயுகத்தில் ஸ்ரீகிருஷ்ணராக அவதரித்து துரியோதனக்கு புத்திமதி அருளினார், சூரனவன் கேட்க மறுக்கவே பஞ்சபாண்டவர்களுக்கு துணையாக இருந்து துரியோதனன் தனை வதைத்தார். அத்துடன் பாண்டவர்களுக்கு குருநாடு பட்டமுஞ் சூட்டி அரசாள வைத்து தர்மத்தை நிலை நாட்டினார்.

பாண்டவர்கள் நன்றாய்ப் பாராளும் நாளையில் தன்னுடைய கிருஷ்ண அவதாரத்தை நிறைவு செய்து வைகுண்டம் செல்ல எண்ணிய அய்யா நாராயணர் கானகம் வழிநடந்து, மலையேறி, வேடன் அம்புக் கணுவாலே எய்யப்பட்டு, பஞ்சவர்களுடைய பாரப்பெலன்களையும் வாங்கி, தான் காட்டிக் கொண்டிருந்த பொய்யான வேசத்தையும் களைத்து விட்டு கயிலையங்கிரி செல்லும் வழியில் கங்கையுங் கண்டு கங்கையிலே குளித்த கன்னிமார் பெண்களுடைய கற்பையுஞ் சோதித்து, ஏழுலோகம் புகுந்து ஏழு வித்துமெடுத்து இருதய கமலத்திலே இருத்தி எரியுங் கட்டையெனக் கிடந்து ஏந்திழைமாரைச் சூழ வளையும் படியாகக் கொந்தலையும் எழுப்பி, ஏழுபெண்களுக்கும் ஏழு மதலையுங் கொடுத்துத் தவசுக்குக் கன்னிமாரையும் அனுப்பிப் பத்திரகாளியிடத்தில் பாலரையுங் கொடுத்து, ஸ்ரீரங்கம் போய் செகமறியும்படி பள்ளிகொண்டிருந்தார்.

ஸ்ரீரங்க மானதிலே ஸ்ரீரங்க நாதருந்தான் பாரெங்கு மெய்க்கப் பள்ளிகொண் டிருக்கையிலே, தேவர்களின் வாக்கினால் ஈசுரர் குரோணியின் கடைசி துண்டமான ஆறாவது துண்டமதை கலியானாக பிறவிச் செய்ய கலியுகம் பிறக்கிறது. முந்தைய யுகத்தில் துரியோதனாக பிறந்த குரோணியானவன் இவ்யுகத்தில் கலியனாக பிறக்கிறான். கலியனவன் கேட்டப்படியே ஒரு பெண்னையும் அவனின் விலாவிலொரு யெலும்பைத் தட்டிக் கழற்றி சச்சுவருந் தானாக்கி நீசன்பலத்தில் நேர்பாதியாக்கி படைத்து கொடுத்தார். நீசக் கலியனானவன் பரம்பொருள் சிவபெருமானிடம் இப்பூலோகத்தை அரசாளும் வரங்களையும், நீதி மாயன் சக்கரமும், பல்வித சாத்திர வித்தைகளும், மரணம் வரா வித்தைகளும் பெற்று வரும் போது, ஸ்ரீரங்கரான நாராயணர் ஆண்டிவுரு எடுத்து, தலை விரித்துக் கந்தைகலை பூண்டு எவ்வித ஆயிதமும் இல்லாமல் நீசனிடம் சென்று - "நீ ஈசரிடம் பெற்ற வரங்களிலே, இந்த தேச இரப்பனுக்கு சிறுக ஈயு. தராதே போனால் சண்டைக்கு வா?” என்றார். உடனே புத்தியில்லா நீசன், “இப்போது நான் உன்னோடு சண்டையிட்டால் பெண்டாட்டிச் சிரிப்பாள்!" ஆகவே "பண்டாரமென்றும் பரதேசியானவரைத் தண்டரளக் கந்தைத் தலை விரித்த ஆண்டிகளை அட்டியது செய்யேன், அவரோடு சண்டையிடேன் அவர்களிடம் மோதி வம்பு ஒருநாளும் செய்வதில்லை” என்றான். உடனே நாராயணர் நன்று, இப்படியே அட்டி செய்ய மாட்டேனென்று "ஆணையிட்டு தா" என்றார். அதற்க்கு கலிநீசனும் அப்படியே "ஆண்டிகளை இடறு செய்யேன்! மீறி இடறு செய்து ஆண்டிகளை சில்லமிட்டால், வீணே போகும் என் வரங்கள்" என்று ஆணையிட்டான்.

இக்காரணங்களால் தான் கலிநீசனுக்கு கொடுத்த வரங்களைப் பறிக்க நாராயணர் கலியுகத்தில் "ஸ்ரீ நாராயண பண்டாரமாக" அவதரித்ததாக அகிலத்திரட்டு கூறுகிறது.

வைகுண்ட அவதாரம்[தொகு]

1008 - ல் கடலில் இருந்து உதித்த வைகுண்டர் ஒரு ஒப்பற்ற அவதாரம் என அகிலத்திரட்டு கூறுகிறது.

நல் மக்களை இரட்சித்துக் காக்க, இந்நீசக்கலியனுக்கு கொடுத்த வரங்களைப் பறித்து கலிநீசன்தனை அழிக்க, தர்மம் தனை வளர்க்க வியாச முனிவர் வகுத்த ஆதி ஆகமத்தின் படியே திருச்செந்தூர் கடலினுள்ளகமே சென்ற நாராயணர், சீதை முதல்மயங்க சீமையீரே ழுமயங்க மாமோகச் சக்கரத்தை மாயவனார் தான்வீசிச் சீமை யெழுகடலும் சிணமே மயக்கினரே மயக்கியந்த மால்மகரம் மாமோக மாயிருக்க தியக்கியந்த நாரணரும் சென்றார் மதுரமதுள். மதுரமதுள் சென்று அவதரிக்க நினைத்த நாராயணர் கொல்லம் ஆண்டு 1008 மாசி மாதம் 20-ஆம் தேதி (1st March C.1833) வெள்ளிக்கிழமை இவ்வுலக மக்களின் மேன்மைக்காக பத்தாவது அவதாரமாக மகர கருவறையில் அரூபமாய் வால ராமசந்திர சூரிய நாராயணர் தாமே மும்மூர்த்திகளும் தானாகி சர்வ அதிபதியாக வைகுண்டராக அவதரித்தார்.

“ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டமாய்த் தோன்றினார்” - அகிலத்திரட்டு

வைகுண்டராக அவதரித்த நாராயணர் திருச்செந்தூரில் கடலில் இருந்து கடற்கரைக்கு வந்து தருவைக்கரை யெனுமிடத்தில் பண்டாரமாக மனுச் சொருபம் எடுத்தார். நாராயண பண்டாரமாக மானிடர்களுக்கு காட்சி அளித்த மாயன் கந்தைக்காவி பூண்டு, கழுத்தில் தாவடம்பூண்டு கையதிலே மாத்திரைக் கோலும், கமுக்கூட்டிலே பிரம்பும், நெற்றியில் வெள்ளை நாமமும், உச்சியிலே கொண்டையிட்டு உத்திராட்ச மாலை சுத்தி, உயர்ந்தசுரைக் கூடுமிட்டு வைகுண்டர் என்ற பெயரோடு தருவைக்கரை கடந்து தெச்சணம் வந்த வைகுண்டர் தற்போது அம்பலப் பதி இருக்குமிடத்தில் சிவலிங்கத்தை நிலைபெற செய்து வருவேனெனச் வாக்குமிகக் கொடுத்துத் சிறப்பு செய்து விட்டு மணவைபதி இருக்கும் இடமான சுவாமிதோப்பு வந்தார்.

ஆக வைகுண்டர் என்பவர் சாதாரண மனிதர் மட்டும் அல்ல, நாராயணர் மட்டும் அல்ல, ஏகப்பரம்பொருள் மட்டும் அல்ல, ஆனால் மற்றொரு புறம், மனிதரும் தான், நாராயணரும் தான், ஏகப்பரம்பொருளும் தான். சரியாகச்சொன்னால் அவர் இம்மூன்றின் தொகுதியாவார். சிவபெருமானுடன் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப் பிரகாரம் கலியை அழிக்கும் கடமை உடையவர் இவரே. வைகுண்ட அவதாரத்தில் இவ்வளவு சூட்சுமங்கள் மேற்கொண்டதற்கு காரணம், கலியன் வாங்கிய வரங்களை முறியடிப்பதற்காகவே.

அகிலத்திரட்டு வேதநூல் வைகுண்டரை ஸ்ரீ பண்டாரம், ஆண்டவர், மாயோன், நாராயணர், விஷ்ணு, ஸ்ரீ திருமால், ஸ்ரீ பெருமாள், அய்யா நாராயணர், சிவ நாராயணர் மற்றும் சூரிய நாராயணர் என்றும் பல நாமங்களில் குறிப்பிடுகின்றது. அதை போலவேதான் பக்தர்களும் அவரை ‘அய்யா’, ‘ஸ்ரீமன் வைகுண்ட சுவாமி’ மற்றும் ‘ஸ்ரீமன் நாராயண சுவாமி’ என்று பெருமையோடு அழைத்து வணங்கி வருகின்றனர்.

தவம்[தொகு]

முக்கியக் கட்டுரை:வைகுண்டரின் தவம்

தெட்சணம் எனப்படும் பூவண்டன் தோப்பை (தற்போதய சுவாமி தோப்பு) அடைந்த வைகுண்டர் ஆறு ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தார். அவர் மூன்று நிலையில் தவம் மேற்கொண்டதாக அகிலம் கூறுகிறது. மூன்று நிலைகளும் மூன்று நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த நோக்கங்களை கூறும் போது அகிலம்,

"முதற்றான் தவசு யுகத்தவசு என்மகனே
தத்தமுள்ள இரண்டாம் தவசு சாதிக்காமே
மூன்றாம் தவசு முன்னுரைத்த பெண்ணாட்கும்
நன்றான முற்பிதிரு நல்ல வழிகளுக்கும்"

மேலும் தவத்தின் இருப்பு முறையும் நிலைக்கு நிலை மாறுபட்டதாக கூறப்படுகிறது. முதல் இரண்டு வருடங்களும் அவர் ஆறு அடி குழியிலும், அடுத்த இரண்டாண்டுகள் தரையிலும், கடைசி இரண்டு ஆண்டுகள் உயர்ந்த பேடமிட்டு தவம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் தவம் புரிந்த கால கட்டத்தில் பச்சரிசிப் பால் அல்லாது வேறெந்த உணவு உட்கொள்ளவில்லை; குறைவாகப் பேசினார்.

தீய சக்திகளை ஒடுக்குதல்[தொகு]

அய்யா வைகுண்டரின் அவதார இகனைகளில் முக்கியமானதாக பேய்கள் எரிப்பை அகிலத்திரட்டு அம்மானை கூறுகிறது. இவை அய்யா தவம் இருந்த காலகட்டத்தில் நடந்தவைகளாகும். வைகுண்ட அவதாரத்தின் மூலம் அனைத்து பேய்களும் எரிக்கப்படுகின்றன.

"உகசிவ வானோர் எல்லோரும் போகரிது
வகையுடன் நாந்தான் செய்யும் வழிதனை பார்த்துக்கொள்ளும்
இகபரன் முதலாய் இங்கே இரும் எனச் சொல்லிவைத்துப்
பகைசெய்த கழிவை எல்லாம் எரிக்கவே பரனங்குற்றார்"

அய்யா தவம் இருந்த வடக்கு வாசலில் இச்சம்பவம் நடைபெறுகிறது. அய்யாவை தரிசிக்க வந்திருந்த மக்களிலே சிலரின் உடம்புகளில் பேய்களை ஆட வைக்கிறார் அய்யா. பின்னர் அவர்களின் சக்திகளை ஒப்படைத்து தீயிலே தங்களை மாய்த்துக்கொள்வதாக சத்தியம் செய்யவைக்கிறார். இவ்வாறௌ அய்யாவின் கட்டளைகளுக்கிணங்கி அவை சத்தியம் செய்ததும் பேயால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் தரையில் விழுகின்றனர். இவ்வாறு பேய்கள் எரிக்கப்படுகின்றன. அகிலம் இந்நிகழ்ச்சியை சிறப்பாக விவரிக்கிறது.

(மேலும் விவரங்களுக்கு:அய்யாவழி புராணத்தை) காண்க

மந்திர தந்திர முறைகளை திரும்பப்பெறுதல்[தொகு]

பேய்களை எரித்தது போன்று மேலும் பல அவதார இகனைகளை வைகுண்டர் நடத்தியுள்ளார். இதைப்பற்றி கூறும்போது அகிலம், வைகுண்டர் மலையரசர்கள் எனப்படும் காணிக்காரர்களின் மந்திர தந்திர வாகட முறைகளை திரும்பப்பெற்று விட்டதாக கூறுகிறது.

மலைகளில் வாழும் காணிக்காரார்கள் மிகுந்த மந்திர சக்தியுடையவர்களாகவும் குறி சொல்லும் திறமை படைத்தவர்களாகவும், பேய் ஓட்டும் சக்தி படைத்தவர்களாகவும் கருதப்படுகிறார்கள். வைகுண்டர் அவர்களை தெச்சணம் எனப்படும் அய்யா தவம் இருந்த சுவாமிதோப்பிலே மக்கள் முன்னிலையில் தங்கள் சக்தியனைத்தையும் வைகுண்டரிடம் ஒப்படைத்து உறுதிமொழி அளிக்க செய்தாக ஆகிலம் கூறுகிறது. அய்யாவின் இச்செயலை மக்கள் மிகுந்த ஆச்சிரியத்துடன் கண்டுகளித்தனர். இச்செயல் அவர்கள் மனதில் வைகுண்டர் மீது மிகுந்த பக்தியை உருவாக்கியது. அவர்கள் அய்யாவை வைகுண்ட சுவாமி என அழைக்கலாயினர். பேயை எரித்த வைகுண்டர் சுற்றி இருந்த மக்களை பார்த்து கீழ்க்கண்டவாறு கூறினார்,

"பொய்யில்லை பசாசில்லை பில்லியின் வினைகளில்லை
நொய்யில்லை நோவுமில்லை நொன்பலத் துன்பமில்லை
தொய்வில்லை இறைகளில்லை சுருட்டும் மாஞாலமில்லை
மையில்லை உலகத்தோரே வாழும் ஒரு நினைவாலென்றார்"

பண்டாரமாக வைகுண்டர்[தொகு]

வைகுண்டரின் புகழ் தென் திருவிதாங்கூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் மிகவேகமாகப் பரவியது. அவர் சமுதாயப் பார்வையில் ஒரு அற்புத சக்தி படைத்த மனிதராக அறியப்பபட்டார். மறுபுறம் சமய நம்பிக்கையின் அடித்தளத்தில் பண்டாரமாக அறிவிக்கப்பட்டார். அகிலத்திரட்டு அம்மானை அவரை நாராயண பண்டாரம் என விளம்புகிறது.

நாட்டுமக்கள் இவரது போதனைகளை கவனிக்க இவர் முன்னிலையில் கூடினார்கள். மேலும் அவர் அவர்களது நோய்களைத் தீர்த்ததாகவும் அகிலம் கூறுகிறது. அவரை மக்கள் வழிபடத்தொடங்கினர். வைகுண்டர் அவர்களை சாதி வேறுபாடின்றி ஒரே கிணற்றில் குளிக்க போதித்தார். மேலும் அவர்களை அனைத்து பேதங்களையும் கடந்து சமபந்தி உண்ணவும் போதித்தார். இந்தியாவின் முதல் சமபந்தி அய்யாவழி சமயக் கூடல்களில் தான் அமைக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

அய்யா மக்களுக்கு பல போதனைகளை வழங்கினார். அவற்றில் முக்கியமானதாக, அவர் நடக்கும் கலியுகத்தை அழித்து பேரின்பநிலையான தர்மயுகத்தை மலரச்செய்து சான்றோருக்கு நித்திய வாழ்வை அளிக்கப் போவதாக கூறினார். மறுமை தர்மமான அந்நிலையை அடைய "தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம்" என்னும் கோட்பாட்டை ஆதாரமாக வைத்துச் செயல்பட மக்கள் அவரால் அறிவுறுத்தப்பட்டனர். மேலும் அவரின் அவதார செயல்பாடுகள், சமுதாயப் பார்வையில் இக்கோட்பாட்டையே மையமாக வைத்தே சுழல்வதைப் பார்க்க முடிகிறது.

சான்றோராகிய மக்கள் தர்மயுக வெளிப்படலுக்கு முக்கிய பங்கு ஆற்ற வேண்டியவர்களாக அறிவுறுத்தப்பட்டனர். அவர்கள் தங்களை தர்மயுக மக்களாக மாற்ற சில முறைகளை கடைபிடிக்க அய்யா வளியுறுத்தினார். இவ்வாய்மொழிகளில், மக்கள் தங்களை சுய மரியாதை உடையவர்களாக, மானமுடையவர்களாக, அச்சமற்றவர்களாக, வடிவப்படுத்துமளவு கலி தன்னால் அழிந்துகொண்டே வரும் என்பது முதன்மைபெற்றது. இங்குள்ளவை அனைத்தும் ஒன்றாதலால் எதற்கும் அச்சமில்லை என்னும் அத்துவித கோட்பாடடை ஒத்திருந்தது இது. மக்கள் கலியாகிய மாயை விட்டகலுமளவு வைகுண்டர் தர்ம ராஜாவாக இருந்து அவர்களை ஆளும் இத்தர்ம யுகத்தை உணரமுடியும் என்னும் அகிலக் கோட்பாடு இதை உறுதி செய்கிறது.

குற்றப்பத்திரிகை[தொகு]

அய்யாவின் புகழையும் அவரைச்சுற்றி திரளும் ஆயிரக்கணக்கான மக்களையும் கண்டு பொறையுற்ற சில மேட்டுகுடியினர் அப்பகுதியை ஆண்டு வந்த திருவிதாங்கூர் மன்னன் சுவாதி திருநாளிடம் புகார் செய்ததாக தெரிகிறது. இதை அகிலமும் குறிப்பிடுகிறது. இதன் பெயரில் மன்னன் வைகுண்டரை கைது செய்து துன்பப்படுத்தினான். அங்கு அவர் பல அற்புதங்களை செய்ததாக அகிலம் குறிப்பிடுகிறது.

சிறை வாசத்துக்குப் பின்பு[தொகு]

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட வைகுண்டர் சான்றோர் மக்களால் வாகனம் மூலம் தெச்சணம் கொண்டுவரப்பட்டார். பின்னார் சான்றோர் மக்களை பக்குவப்படுத்த புற மற்றும் அகத்தூய்மையை அளிக்கும் துவையல் தவசு எனப்படும் தவமுறையை செயல் படுத்த 700 குடும்ப மக்களை வாகைப்பதிக்கு அனுப்பிவைத்தார். மேலும் பல அவதார இகனைகளை நிறைவேற்றினார். மும்மையின் தொகுதியான வைகுண்டர் நாராயணராக இருந்து சப்த கன்னியரையும், பரப்பிரம்மம் எனப்படும் ஏகமாக இருந்து ஏழு தெய்வ கன்னியரையும் திருமணம் செய்தார். மேலும் திருநாள் இகனையையும் நடத்த உத்தரவிட்டார்.

வைகுண்டம் போதல்[தொகு]

பின்னர் வைகுண்டரை சான்றோர் தங்கள் வீடுகளுக்கு விருந்துக்கு அழைத்ததாக அகிலம் குறிப்பிடுகிறது. அவர் வாகனத்தில் சான்றோரால் சுமந்து செல்லப்பட்டார். இவ்விருந்துகளின் போது அவர் அந்தந்த இடங்களில் நிழல் தாங்கல்களை அமைத்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இக்கருத்துக்கு கருத்துக்களும் உண்டு. இவற்றை எதிர்ப்பவர்கள் அகில வரிகளை ஆதாரம் காட்டுகிறார்கள். வைகுண்டர் அவைகளுக்கு அடிக்கல் நாட்டவில்லை எனவும் அவ்விழாக்களில் அவர் கலந்துகொள்ள மட்டுமே செய்தார் என்பது அவர்கள் நிலைபாடு. ஆனால் சில தாங்கல்கள் அவர் சச்சுருவமாக இருந்தபோதே அமைக்கப்பட்டு விட்டது என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒன்று. வைகுண்டர் ஐவரை சீடர்களாக தேர்ந்தெடுத்தார். அவர்களுள் ஒருவரான அரி கோபாலன் சீடர் மூலமாகவே அய்யாவழியின் முதன்மைப் போதனை நூலாகிய அகிலத்திரட்டு அம்மானை வெளிப்படுத்தப்படுகிறது.

வைகுண்டர் 1851- ஆம் ஆண்டு ஜூன் மாதம், திங்கட்கிழமையில் வைகுண்டம் சென்றார். அவர் எடுத்த அவதார உடல் தற்போது சுவாமிதோப்பு பதியில் பள்ளியறையாக இருக்கும் இடத்தில் மண்ணறையில் வைக்கப்படுகிறது. இப்பார்வை அகிலத்தின் அடிகளை ஆதாரமாகக் கொண்டு கருதப்படுபவை. ஆனால் இதே வரிகளை ஆதாரமாகக் கொண்டு அவர் மனித உரு எடுக்கவில்லை என்றும், இறைவனை ஜோதிரூபமாக பள்ளியறையில் பாவித்து சான்றோர் திருநாள் நடத்தினார்கள் என்பது சில தத்துவ முதன்மை வாதிகளின் கருத்து. மேலும் சில வரிகளின் ஆதாரத்துடன், வைகுண்டர் மனித உரு எடுத்தார் எனவும், ஆனால் அவர் உடலோடு வைகுண்டம் சென்றுவிட்டதால் சுவாமி தோப்பு பள்ளியறையில் மேற்குறிப்பிட்ட மண்ணறை முறை ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல என்பது வேறு சில அமைப்புகளின் வாதம்.

சீடர்கள்[தொகு]

அய்யா வைகுண்டருக்கு ஐந்து சீடர்கள் உண்டு. முந்தின யுகத்தில் பாண்டவர்களாக இருந்த ஐந்து பேரையும் இக்கலி யுகத்தில் ஐந்து சீடர்களாக பிறவி செய்யப்பட்டதாக அகிலம் கூறுகிறது. அவர்கள்,

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. அரி கோபாலன், சீடர் (19). அகிலத்திரட்டு அம்மானை (முதல் பதிப்பு ). சென்னை: காலச்சுவடு பதிப்பகம். பக். 349. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788189359829. 
  2. கிருஷ்ண நாதன், த (2000). அய்யா வைகுண்டர் வாழ்வும் சிந்தனையும். நாகர்கோவில்: திணை வெளியீட்டகம். பக். 44. 
  3. விவேகானந்தன், நா (2003). அகிலத்திரட்டு அம்மானை மூலமும் உரையும் (முதல் பதிப்பு ). நாகர்கோவில்: விவேகனந்தா பதிப்பகம். பக். 424. 
  4. பார்ட்ரிக், ஜி (2003). ரிலிஜியன் ஆண்ட் சபல்டெர்ன் ஏஜென்சி (முதல் பதிப்பு ). சென்னை: சென்னை பல்கலைகழகம். பக். 210. 
  5. விவேகானந்தன், நா (2003). அகிலத்திரட்டு அம்மானை மூலமும் உரையும் (முதல் பதிப்பு ). விவேகனந்தா பதிப்பகம். பக். 386. 
  6. மணிபாரதி, ஆ (2017). அகிலத்திரட்டு அம்மானை மூலமும் உரையும் - இரண்டாம் பாகம் (முதல் பதிப்பு ). சென்னை: திருநாமபுகழ் பதிப்பகம். பக். 54. 
  7. அகிலதிரட்டு அகக்கொவை (முதல் பதிப்பு ). கன்னியாகுமரி: தெட்சணத்து துவாரகாபதி. 2009. பக். 28. 
  8. பூஜிய புத்திரர், வி (4 மார்ச் 1999). வையமீரேழுக்கும் மகிழ்வு தரும் வைகுண்ட ஜெயந்தி (8 ). ஆற்றூர்: வைகுண்டர் செவா சங்கம். 
  9. விவேகானந்தன், நா (2003). அகிலத்திரட்டு அம்மானை மூலமும் உரையும் - பாகம் ஒன்று (முதல் பதிப்பு ). நாகர்கோவில்: விவேகனந்தா பதிப்பகம். பக். 234-236. 
  10. விவேகானந்தன், நா (1993). திருவாசகம் மூலமும் உரையும் (மூன்றாம் பதிப்பு ). நாகர்கோவில்: விவேகனந்தா பதிப்பகம். பக். 30-33. 
  11. ஸ்ரீதர மேனன், ஆ (1996). ஏ சர்வே அஃப் கேரளா ஹிஸ்டரி. சென்னை: எஸ். விஸ்வநாதன் பிரைவேட் லிமிடட். பக். 400. 
  12. அருணன், திரு (1999). தமிழகத்தில் இருநூற்றாண்டு கால சமுதாய புரட்சி. மதுரை: வாகை பதிப்பகம். பக். 28. 
  13. பொன்னு, இரா (2000). Sri Vaikunda Swamigal and the Struggle for Social Equality in South India.. மதுரை: ராம் வெளியீட்டகம். பக். 47. 
  14. மணிபாரதி, ஆ (1995). சாமிதோப்பு அய்யா நாராயண சுவாமி 2. சென்னை: தினத்தந்தி குடும்பமலர் 5. 
  15. விவேகானந்தன், நா (2003). அகிலத்திரட்டு அம்மானை மூலமும் உரையும் - இரண்டாம் பாகம். நாகர்கோவில்: விவேகனந்தா பதிப்பகம். பக். 68. 
  16. விவேகானந்தன், நா (2017). அருள்நூல் மூலமும் உரையும் (முதல், திருத்திய பதிப்பு ). நாகர்கோவில்: விவேகனந்தா பதிப்பகம். பக். 23. 
  17. பொன்னு, இரா (2002). வைகுண்ட சுவாமிகள் ஓர் அவதாரம் (முதல் பதிப்பு ). மதுரை: ராம் வெளியீட்டகம். பக். 59. 

மேற்கோள்கள்[தொகு]

  • இரா. அரிகோபாலன் சீடர் எழுதிய அகிலத்திரட்டு அம்மானை, தென்தாமரைக்குளம், 10th December 1841, முதற் பதிப்பு 1939.
  • ஆ. அரிசுந்தர மணியின், அகிலத்திரட்டு அம்மானை பாராயண உரை, 2002
  • நா. விவேகானந்தனின், அகிலத்திரட்டு அம்மானை மூலமும் உரையும், இரண்டாம் பாகம் 2003, முதற் பதிப்பு.
  • அமலனின், அய்யா வைகுண்டர் புனித வரலாறு.
  • ஆ. மணிபாரதியின், அகிலத்திரட்டு விளக்க உரை, இரண்டாம் பாகம், 2003, முதற் பதிப்பு.
  • அய்யா வைகுண்டர் வாழ்க்கை வரலாறு, நெல்லை தினகரன் வெளியீடு
  • அகிலத்திரட்டு அகக்கோர்வை தெச்சணத்து துவாரகாபதி வெளியீடு
  • சி. உமைதாணு மற்றும் போ.காசி உதயம் ஆகியவர்களின், பகவான் வைகுண்ட சுவாமிகள் புனித வரலாறு 1966, (தினமலர் நாளேடின் நெல்லை பதிப்பில் தொடராக வெளிவந்த செய்திகளின் தொகுப்பு).
  • தி.பாலசுந்தரம் M.A.,B.Ed. அவர்களின், அகிலத்திரட்டு உரைநடை, சுவாமிதாேப்பு, 2013 மூன்றாம் பதிப்பு, அய்யா வைகுண்டர் வீமன் சீடர் அறக்கட்டளை வெளியீடு.
  • ரா. காேபாலகிருஷ்ணனின் அகிலத்திரட்டு ஆகமம், சென்னை, 2019 முதல்பதிப்பு, அகிலத்திரட்டு இந்தியா மிஷன் வெளியீடு
  • த. முத்து பிரகாஷ் அவர்களின், உலகைப் படைத்துக் காக்கும் மஹாவிஷ்ணுவின் ஸ்ரீ வைகுண்ட அவதார வரலாறு, 2021, முதற் பதிப்பு அகிலஉலக அய்யாவழி சேவை அமைப்பு வெளியீடு

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அய்யா_வைகுண்டர்&oldid=3786009" இலிருந்து மீள்விக்கப்பட்டது