தி இந்தியன் சோசியாலஜிஸ்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தி இந்தியன் சோசியாலஜிஸ்ட் (The Indian Sociologist) 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வெளிவந்த ஒரு இந்திய தேசியவாத இதழ். 1905-14 மற்றும் 1920-22 காலகட்டங்களில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வெளியானது. ஹெர்பர்ட் ஸ்பென்சரின் கொள்கைகளால் தூண்டப்பட்ட ஷ்யாம்ஜி கிருஷ்ணவர்மா என்பவரால் இலண்டனில் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்தியா பிரித்தானியப் பேரரசிடமிருந்து அமைதியான முறையில் விடுதலை பெற வேண்டுமென்று கோரி வந்தது. ஆனால் 1907ம் ஆண்டு அதன் போக்கு தீவிரமானது. இதனால் இந்தியாவில் இதன் இறக்குமதியும் விற்பனையும் தடைசெய்யப்பட்டன. பிரித்தானிய அரசின் கெடுபிடிகளால் பாரிசு நகருக்கு இடம்பெயர்ந்த கிருஷ்ணவர்மா அங்கிருந்து இந்த இதழை தொடர்ந்து வெளியிட்டார். இங்கிலாந்தில் இந்த இதழ் தடை செய்யப்படவில்லையாதலால், அது அங்கு அச்சிடப்பட்டு வந்தது. ஆனால் அச்சிட்ட அச்சுக்கூட உரிமையாளர்கள் இருவர் பிரித்தானிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, ஆட்சி விரோத குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். 1914ல் முதலாம் உலகப் போர் மூண்டதால் ஜெனீவா நகருக்கு இடம் பெயர்ந்தார். ஆனால் சுவிட்சர்லாந்து அதிகாரிகளின் நெருக்கடியால் தன் இதழை வெளியிடுவதை நிறுத்திக் கொண்டார். பின் மீண்டும் டிசம்பர் 1920 - செப்டம்பர் 1922 வரை இவ்விதழ் வெளிவந்தது.

மேற்கோள்கள்[தொகு]