பி. கக்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கக்கன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பி. கக்கன்
உள்துறை அமைச்சர் (சென்னை மாநிலம்)
பதவியில்
3 அக்டோபர் 1963 – 5 மார்ச் 1967
வேளாண்மைத் துறை அமைச்சர் (சென்னை மாநிலம்)
பதவியில்
13 மார்ச் 1962 – 3 அக்டோபர் 1963
சமயநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1962–1967
பொதுத்துறை அமைச்சர் (சென்னை மாநிலம்)
பதவியில்
13 ஏப்ரல் 1957 – 13 மார்ச் 1962
மேலூர் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1957–1962
மதுரை மக்களவை உறுப்பினர்
பதவியில்
1951–1957
பிரதமர்ஜவகர்லால் நேரு
முன்னையவர்எவருமில்லை
பின்னவர்கே. டி. கே. தங்கமணி
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1946–1950
ஆட்சியாளர்ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ்
பிரதமர்ஜவகர்லால் நேரு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1908-06-18)18 சூன் 1908
தும்பைப்பட்டி, மேலூர், சென்னை மாகாணம், இந்தியா
இறப்பு23 திசம்பர் 1981(1981-12-23) (அகவை 73)
சென்னை, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிகாங்கிரசு (ஓ)
துணைவர்சுவர்ணம் பார்வதி கக்கன்
தொழில்அரசியல்வாதி

பி. கக்கன் (P. Kakkan, 18 சூன் 1908 – 23 திசம்பர் 1981),[1] விடுதலைப் போராட்ட வீரர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் (கமிட்டித்) தலைவர், இன்னும் இதர பல பொறுப்புகளை 1957 முதல் 1967 வரை நடைபெற்ற காங்கிரசு அரசாங்கத்தில் வகித்த, அரசியல்வாதி ஆவார். கக்கன் தமையனார் விஸ்வநாதன் ஒரு வழக்கறிஞர்.

இளமைக்காலம்[தொகு]

கக்கன் சூன் 18, 1908 ஆம் ஆண்டு மதராஸ் இராசதானியாக தமிழகம் இருந்தபொழுது மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்திலுள்ள தும்பைப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தார். இவரின் தந்தை பூசாரி கக்கன், கிராமக் கோயில் அர்ச்சகராக (பூசாரியாக)ப் பணிபுரிந்தவர். தொடக்கக் கல்வியை மேலூரில் பயின்ற அவர் திருமங்கலம் அரசு மாணவர் விடுதியில் தங்கி பி. கே. என். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார்.[2][3]

இந்திய விடுதலைப் போராட்டம்[தொகு]

கக்கன் தனது பள்ளி மாணவப்பருவத்திலேயே காங்கிரசு இயக்கத்தில் தன்னை இணைத்து, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார்.[4] அன்றைய காலகட்டத்தில் பறையர்கள் மற்றும் சாணார்கள் கோயில்களில் நுழைவது தடை செய்யப்பட்டிருந்தது. இராஜாஜி அரசு ‘கோயில் உள்நுழைவு அதிகாரம் மற்றும் உரிமைச் சட்டம், 1939’ என்ற சட்டத்தினைக் கொண்டு வந்ததின் விளைவாக, இத்தடை நீக்கப்பட்டது. மதுரையில் கக்கன் பறையர்கள் மற்றும் சாணார்களைத் தலைமை தாங்கி மதுரைக் கோயிலினுள் நுழைந்தார்.[4]வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் கக்கன் பங்கேற்று அலிப்பூர் சிறையில்[4] அடைக்கப்பட்டார். 1946 இல் நடந்த தொகுதிப் பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று[4] 1946 முதல் 1950 வரை உறுப்பினராகப் பொறுப்பு வகித்தார்.

அரசியல் பணி[தொகு]

கக்கன் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராக 1952 முதல் 1957 வரை பொறுப்பு வகித்தார்.[5] காமராசர் தமிழகத்தின் முதல்வர் பொறுப்பை ஏற்கும் பொருட்டு தான் வகித்து வந்த தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் (கமிட்டி) தலைவர் பதவியை விட்டு விலகியபொழுது கக்கன் அந்தப் பதவியை ஏற்றார்.[6][7][8] 1957 இல் இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்று மதராஸ் மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. கக்கன் பொதுப்பணித்துறை, ஆதிதிராவிடர் நல்வாழ்வு, பழங்குடியினர் நலத்துறை ஆகிய துறைகளின் அமைச்சராக ஏப்ரல் 13, 1957 இல் பொறுப்பேற்றுக் கொண்டார்[9][10]. மார்ச் 13, 1962 முதல் அக்டோபர் 3, 1963 வரை விவசாயத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்[5]. ஏப்ரல் 24, 1962, முதல் வணிக ஆலோசனைக்குழுவின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.[11] அக்டோபர் 3, 1963 [5] அன்று மாநில உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று 1967 வரை அப்பொறுப்பிலிருந்தார். இவர் உள்துறை அமைச்சராக இருந்த போது இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது, அதில் சுமார் 70 மாணவர்கள் துப்பாக்கிச்சூட்டால் இறந்தனர்.[12][13]

நற்பணிகள்[தொகு]

கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை, வீடூர் அணைகள் கட்டப்பட்டன.[4] ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்திற்காக அரிசன சேவா சங்கம்[4] உருவாக்கப்பட்டது. அவர் விவசாய அமைச்சராகப் பொறுப்பில் இருந்த காலத்தில் இரண்டு வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள்[4] மதராசு மாகாணத்தில் துவக்கப்பட்டன.[14] இவர் நாட்டுக்கு ஆற்றிய பணிகளைப் பாராட்டி இந்திய அரசு இவரின் உருவப்படம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை 1999-ஆம் ஆண்டு[4] வெளியிட்டுக் கௌரவப்படுத்தியது.

இறுதிக் காலம்[தொகு]

கக்கன், மேலூர் (தெற்கு) தொகுதியில், 1967 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட, திமுக வேட்பாளர் ஒ.பி. ராமனிடம் தோற்றார்.[15] இத்தேர்தல் தோல்விக்குப்பின் 1969 முதல் 1972 வரை தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் (கமிட்டித்) தலைவர் பொறுப்பு வகித்தார். 1973 இல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.

தனிக் கருத்து போக்கு[தொகு]

கக்கனின் தந்தையார் கோயில் அர்ச்சகராக இருந்த காரணத்தினால், கக்கன் அதிக சமயப்பற்றுள்ளவராக இருந்தார். மகாத்மா காந்தியின் வழியைப் பின்பற்றினார். பெரியார் தனது சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் இந்துக்களின் கடவுளான இராமனின் உருவப்படம் எரிப்புப் போராட்டத்தை அறிவித்தபொழுது, கக்கன் அதற்குத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்தார். இது ஒரு சமூக விரோதச் செயல் என்றும், சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட காந்தியின் நம்பிக்கைக்குரிய கடவுளை அவமதிப்பதாகும் என்றும் கருத்து தெரிவித்தார்.[16]

மறைவு[தொகு]

1981 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நலக் குறைவால் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சில நாளில் நினைவிழந்த கக்கன், நினைவு திரும்பாமலேயே 1981 திசம்பர் 23 ஆம் நாள் இறந்தார். 1981 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 24 ஆம் நாளில் கண்ணம்மாப் பேட்டையில் உள்ள இடுகாட்டில் எரியூட்டப்பட்டார்.[17]

மேற்கோள்கள்[தொகு]

  1. "பி. கக்கன் 10". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 18 சூன் 2015.
  2. தமிழ்நாடு சட்டமன்றம். 'மதராசு சட்டமன்றத்தில் யார் எவர்? 1957'. சட்டமன்றக் குழு, 1957, p. 27.
  3. "பி. கக்கன் 10". தி இந்து (தமிழ் நாளிதழ்). பார்க்கப்பட்ட நாள் 2015-06-19.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 4.7 "24. சுதந்திரப்போராட்ட வீரர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு". பத்திரிகையாளர் சம்மேளனத்தின் நடப்பு வெளியீடுகள். பத்திரிகையாளர் சம்மேளனம், இந்திய அரசு. பார்க்கப்பட்ட நாள் 2008-10-29.
  5. 5.0 5.1 5.2 இந்தியாவில் யாருடன் யார். கைடு பதிப்பகம். 1967. பக். 64. 
  6. முத்துசாமி, எம். எஸ். (1988). கு. காமராசர்: சமூக அரசியல் ஆய்வு. தமிழ்நாடு அரசியல் அறிவியல் கழகம். பக். 101. 
  7. நரசிம்மன், வி. கே. (1967). காமராசர்: ஆய்வு. மணக்தலாஸ். பக். 71. 
  8. "கக்கன் டி.என்.சி.சி தலைவர்". த இந்து : இந்த நாள் அந்த காலம். டிசம்பர் 30, 2004 இம் மூலத்தில் இருந்து 2005-01-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050115081147/http://www.hindu.com/2004/12/30/stories/2004123000240902.htm. பார்த்த நாள்: 2008-10-29. 
  9. "அமைச்சரவை" (PDF). மதராஸ் சட்டமன்றம் 1957–1962. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை. Archived from the original (PDF) on 2011-07-16. பார்க்கப்பட்ட நாள் 2008-10-29.
  10. "அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாக்காக்கள்" (PDF). மதராஸ் சட்டமன்றப் பேரவை 1957–1962. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை. Archived from the original (PDF) on 2011-07-16. பார்க்கப்பட்ட நாள் 2008-10-29.
  11. "மதராஸ் சட்டமன்றத்தினால் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் விவரம் -மார்ச் 29 முதல் மே 7, 1962 வரை" (PDF). மதராஸ் சட்டமன்றம் 1962–1967. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை. Archived from the original (PDF) on 2011-05-14. பார்க்கப்பட்ட நாள் 2008-10-29.
  12. நீதிக்கட்சியின் பொன்விழாக் கொண்டாட்டம், 1968. நீதிக்கட்சி. 1968. பக். 68. 
  13. Sumathi Ramaswamy. Passions of the Tongue. UNIVERSITY OF CALIFORNIA PRESS. https://publishing.cdlib.org/ucpressebooks/view?docId=ft5199n9v7;brand=ucpress. 
  14. தமிழக அரசியல் களத்தில் கக்கனின் பங்களிப்புகள்
  15. "1967 இல் நடைபெற்ற மதராஸ் சட்டமன்றத் தேர்தலின் புள்ளியியல் வெளியீடு" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-27. பார்க்கப்பட்ட நாள் 2008-10-30.
  16. ரிச்மென், பவுலா (1991). தெற்காசியாவின் மாறுபட்ட தன்மை கொண்ட பண்பாடுகள், அத்தியாயம் 9: ஈ. வெ. ராமசாமியின் இராமாயண வாசிப்பு. கலிபோர்னியா பல்கலைக்கழகம். http://www.escholarship.org/editions/view?docId=ft3j49n8h7&chunk.id=d0e9800&toc.depth=1&toc.id=d0e9800&brand=eschol. 
  17. https://www.vikatan.com/news/coverstory/75740-kakkan-great-leader-of-tamilnadu-and-humble-soul.html

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._கக்கன்&oldid=3924640" இலிருந்து மீள்விக்கப்பட்டது