உள்ளடக்கத்துக்குச் செல்

அண்ணாமலையார் கோயில்

ஆள்கூறுகள்: 12°13′53.76″N 79°4′1.92″E / 12.2316000°N 79.0672000°E / 12.2316000; 79.0672000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேவார பாடல் பெற்ற அருள்மிகு உண்ணாமுலையம்மை உடனமர் திருவண்ணாமலையார் திருக்கோவில்
தேவார பாடல் பெற்ற அருள்மிகு உண்ணாமுலையம்மை உடனமர் திருவண்ணாமலையார் திருக்கோவில் is located in இந்தியா
தேவார பாடல் பெற்ற அருள்மிகு உண்ணாமுலையம்மை உடனமர் திருவண்ணாமலையார் திருக்கோவில்
தேவார பாடல் பெற்ற அருள்மிகு உண்ணாமுலையம்மை உடனமர் திருவண்ணாமலையார் திருக்கோவில்
தமிழ்நாட்டிற்குள் இடம்
ஆள்கூறுகள்:12°13′53.76″N 79°4′1.92″E / 12.2316000°N 79.0672000°E / 12.2316000; 79.0672000
பெயர்
பெயர்:அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில்
தமிழ்:திருஅண்ணாமலையார் திருக்கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவண்ணாமலை மாவட்டம்
அமைவு:திருவண்ணாமலை
கோயில் தகவல்கள்
மூலவர்:அண்ணாமலையார் (சிவன்)
தாயார்:உண்ணாமுலையாள் (பார்வதி)
சிறப்பு திருவிழாக்கள்:கார்த்திகை தீபம், கிரிவலம், சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தமிழர் கட்டிடக்கலை
வரலாறு
கட்டப்பட்ட நாள்:பொ.ஊ. 9-ஆம் நூற்றாண்டு
அமைத்தவர்:பல்லவர், சோழர்கள், விஜயநகர மன்னர்கள், நாயக்கர்கள்
திருவண்ணாமலை கோபுரங்கள் தூரப் பார்வையில்

திருவண்ணாமலையார் கோயில் (Annamalaiyar Temple) என்பது தமிழ்நாட்டின், திருவண்ணாமலையில் உள்ள ஒரு சிவன் கோயிலாகும். இது சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும்.[1] திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும்.[2] இத்தலத்தில் தான் மாணிக்கவாசகர் திருவெம்பாவைபாடினார்.‌ இத்தலத்தின் மூலவர் அண்ணாமலையார் என்றும், அம்பிகை உண்ணாமுலையாள் என்றும் அழைக்கப்படுகின்றனர். நினைத்தாலே முக்தி தரும் தலம் எனும் பெருமையைக் கொண்ட தலமாகவும் அறியப்படுகிறது.

இத்தலத்தின்மீது நால்வர் என்று அழைக்கப்படும் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் தேவாரம் பதிகங்களைப் பாடியுள்ளார்கள். இத்தலத்தின் மூலவர் சிவபெருமான் என்றாலும், இங்குள்ள முருகன் மீது அருணகிரி நாதர் பாடல்களைப் பாடியுள்ளார். இத்தலத்தில் உள்ள மலை எல்லா யுகங்களிலும் அழியாமல் இருப்பதாகவும், இம்மலையானது சிவபெருமானே என்றும் சைவர்கள் நம்புகிறார்கள். இதனால் இம்மலையை வலம் வருதலைக் கடைபிடிக்கின்றனர். இவ்வாறு மலையை வலம் வருதல் கிரிவலம் என்று அழைக்கப்படுகிறது.

பல்வேறு நகரங்களிலிருந்தும் ஊர்களிலிருந்தும் எண்ணற்ற சித்தர்கள் இந்நகருக்கு வந்து வாழ்ந்து சமாதியடைந்துள்ளார்கள். அவர்களில் ரமணர், சேசாத்திரி சாமிகள், விசிறி சாமிகள், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் சமாதிகள் கிரிவலப் பாதையில் அமைந்துள்ளன.

முக்தி தரும் தலங்களில் திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் என்பது சைவர்களின் நம்பிக்கையாகும்.

தல வரலாறு

[தொகு]

துவக்கத்தில் திருமாலுக்கும் அவரது நாபியில் இருந்து வெளிவந்த பிரம்மனுக்கும் தலங்களுள் யார் பெரியவர் என்ற சண்டை வர, அப்போது அவர்களுக்கு எதிராக சோதிப் பிழம்பாய் இலிங்க உருவில் நீண்டு வளர்ந்து முதலும் முடிவும் இல்லாது நின்றார் சிவபெருமான். இருவருள் தனது அடி அல்லது முடியை யார் முதலில் அடைகிறாரோ அவரே பெரியவர் என்று சிவபெருமான் சொல்ல, திருமால் வராகம் எனும் வடிவம் எடுத்து பூமியைப் பிழந்து கீழே திருவடிகளைத் தேடிச் சென்றார். பிரம்மன் அன்னப்பறவை வடிவம் எடுத்து முடியைத் தேடிச் சென்றார். இந்நிகழ்வை தேவாரத்தில் திருஞானசம்பந்தர் [3]

"தாணுதல் செய்த்திறைக் கானிய மாலொடு தண்டாமரையானும் நீணுதல் செய்தொழிய நிமிர்ந்தான்"

எனப் பாடி விவரித்துள்ளார். அதாவது நான்முகனும், திருமாலும் தேடத்தேட சிவபெருமான் முதலும் முடிவும் இல்லாமல் வளர்ந்துக்கொண்டே போனார். அச்சோதிப் பிழம்பே திருவண்ணாமலையென்பது சைவர்களின் நம்பிக்கையாகும். அதைத் தேவாரத்தில்

"கடல் வண்ணனும் வேதக் கிளர்தாமரை மலர்மேலுறை கேடில் புகழோனும் அளவாவணம் அழலாகிய அண்ணாமலை அண்ணல்" என்றுக் குறிப்பிட்டுள்ளார் சம்பந்தர்.

அதாவது, கடல் வண்ணனான திருமாலும், தாமரை மேல் அமர்ந்த பிரம்மனும் அளவிட முடியாத வண்ணம் (வணமென திரிந்தது) அழலாக (தீயாக) நின்ற அண்ணாமலையார் என்பது இதன் பொருள்.

அனைத்துச் சிவன் கோவில்களின் கருவறைச் சுற்றுச் சுவரில் இடம்பெறும் இலிங்கோத்பவர் சிற்பம் இக்கோவிலில் உருவானது என்பதும் சைவர்களின் நம்மிக்கையாகும்.

ஆணோடு பெண்ணும் சரிசமம் என்பதை அக்காலத்திலேயே உணர்த்த சிவபெருமானிடம் உமையம்மை அவருள் சரிபாதி கேட்டாள். இத்தலத்தில் தான் சிவபெருமான் தன்னுள் சரிபாதியை உமையம்மைக்கு அருளினார். இதை தேவாரத்தில்

"உண்ணாமுலை உமையாளொடு உடனாகிய ஒருவன் பெண்ணாகிய பெருமான் மலை திருமாமணி திகழ" என்று சம்பந்தர் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு வருடமும் இதைக் கொண்டாடக் கார்த்திகை விளக்கீடுதிருநாள் அன்றுத் திருவண்ணாமலை கோவிலில் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் நேரத்தில் கோவிலில் சிவபெருமான் மாதொருபாகனாக (அர்த்தநாரீஸ்வரர்) அலங்கரிக்கப்பட்டு வெளியே காட்சி தருவார் இதைப் பல லட்சம் பக்தர்கள் நேரிலும், செய்தி ஊடகங்கள் வாயிலாகத் திரையிலும் காண்பர்.

சொல்லிலக்கணம்

[தொகு]
  • திருவண்ணாமலை - திரு + அண்ணாமலை என்பது திருவண்ணாமலை ஆனது. அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்றுப் பொருள். அண்ணா என்றால் நெருங்க இயலாதது என்று பொருள். அண்ணாமலை என்பதற்கு நெருங்க இயலாத மலை என்றுப் பொருள். பிரம்மனாலும், திருமாலினாலும் அடி முடி அடைய முடியாத சிவபெருமானே இங்கு அண்ணாமலையாக உள்ளார் என்பதே இதன் பொருளாகும். திரு மற்றும் அண்ணாமலை எனும் சொற்கள் சேரும்போது தமிழ் இலக்கண விதியின் படி இடையில் வகர உடம்படுமெய் தோன்றும். எனவே திரு+வ்+அண்ணாமலை = திருவண்ணாமலை என்று ஆனது. இவ் வகர மெய் ஓசை இனிமைக்காக இரண்டு உயிர் எழுத்துக்களுக்கு நடுவில் சேர்க்கப்படும் மெய்யாகும். திருஅண்ணாமலை என்று எழுதுவதும் பேசுவதும் தொல்காப்பியத்தின் தமிழ் இலக்கண விதிக்கு புறம்பானது ஆகும்.

காலம்

[தொகு]

திருவண்ணாமலையிலுள்ள மலையானது 260 கோடி ஆண்டுகள் பழமையானது என பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.[4] சைவர்களின் நம்பிக்கைப்படி இம்மலையானது கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தங்க மலையாகவும், தற்போது நடைபெறும் கலி யுகத்தில் கல் மலையாகவும் இருக்கிறது.

பால் பிரண்டன் எனும் ஆய்வாளார் தனது மெசேஜ் பிரம் அருணாச்சலா எனும் நூலில் "லெமூரியா கண்டத்தின் எஞ்சிய பகுதி திருவண்ணாமலை" எனக் கூறியுள்ளார்.[5]


மலை வலம்

[தொகு]
திருவண்ணாமலை கோபுர தரிசனம்

திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாகக் கருதப்படுகிறது. எனவே கோயிலில் இறைவனை வலம் வருதலைப் போல மலையை வலம் வரும் வழமை இங்குள்ளது. மலையைச் சுற்றிவர இரு வழிகள் உள்ளன. மலையை ஒட்டிச் செல்லும் வழியில் பாறைகள், முட்கள் மிகுந்த கடின பாதையாக அமைந்துள்ளது

பொதுவாக மக்கள் வலம் வரும் பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், வருண லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் என எட்டு லிங்கங்களும், ரமணமகரிசி, சேசாத்திரி சுவாமிகள், விசிறி சாமியார் போன்றோர் சமாதிகள் அமைந்துள்ளன.

எல்லா நாட்களிலும் மலையை மக்கள் வலம் வருகிறார்கள் என்றாலும் முழு நிலவு நாளில் வலம் வருதல் சிறப்பாகக் கருதப்படுகிறது.

இம்மலையானது யுகங்களின் அழிவுகளிலும் அழியாமல் இருப்பதாகக் கருதப்படுகிறது. எனவே கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறியிருப்பதாக நம்பப்படுகிறது.

எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களைக் கொண்ட எண்கோண அமைப்பில் திருவண்ணாமலை நகரம் காணப்படுகிறது. அஷ்டலிங்கங்கள் எனப்படுபவை இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் , வருண லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம். தேவாரத்தில் புகழப்படும் ஆதி அண்ணாமலை திருக்கோயில் மலை வலப்பாதையில்தான் அமைந்துள்ளது. இந்த மலையின் சுற்றளவு 14 கிலோமீட்டர் உள்ளது. இம்மலையில் இன்றும் பல சித்தர்கள் வாழ்ந்து வருவதாக வரலாறு.

மலையை வலம் வரும்போது மனிதர்கள் இடப்பக்கம் நடக்க வேண்டும், ஏனென்றால் மலையை ஒட்டியுள்ள வலப்பக்கம் சித்தர்களும், யோகிகளும், தேவர்களும் வலம் வருவதாக ஐதீகம். கிரிவலம் செல்லும்போது பஞ்சாச்சர நாமத்தையோ (நமசிவாய, சிவாயநம) அல்லது திருமுறைகளையோ (தேவாரம், திருவாசம்) உச்சரிக்க வேண்டும். அதைத் தவிர்த்து வேறு எதையும் பேசக்கூடாது. கிரிவலம் செல்லும்போது நிதானமாக நடக்க வேண்டும், அவசரமாகவோ வேகமாகவோ மற்றவர்களை இடித்துக் கொண்டோ செல்லக் கூடாது.

திருவண்ணாமலை கோயிலில் உள்ள விநாயகர் சந்நிதி

கோயில் அமைப்பு

[தொகு]

24 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயில் 6 பிரகாரங்களையும் 9 ராஜகோபுரங்களையும் கொண்டதாகும். இக்கோயில் மலையடிவாரத்தில் இருப்பது சிறப்பு. இச்சிவாலயத்தில் 142 சன்னதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1000 தூண்களைக் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதன் அருகே பாதள லிங்கம், 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்பம், அண்ணாமலையார் பாத மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன.[6]

கோபுரங்கள்

[தொகு]

அண்ணாமலையார் கோயிலில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. அவைகளில் ராஜ கோபுரம், பேகோபுரம், அம்மணியம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம், கிளி கோபுரம், வல்லாள மகாராஜா கோபுரம் ஆகியவை குறிப்பிடத் தக்கவையாகும். இவற்றுள் கிழக்கே உள்ள இராஜ கோபுரம் இந்தியாவின் மூன்றாவது பெரிய கோபுரமாகும், அதோடு தமிழகத்தில் ஸ்ரீரங்கத்திற்கு அடுத்து மிகப்பெரிய கோபுரம் இந்த கோபுரமாகும்‌ இதன் உயரம் 217 அடி. மேலும் தெற்கு கட்டை கோபுரம், வடக்கு கட்டை கோபுரம், மேற்கு கட்டை கோபுரம் ஆகிய கோபுரங்கள் உள்ளன.

மண்டபங்கள்

[தொகு]

இச்சிவாலயத்தில் 306 மண்டபங்கள் உள்ளன. அவற்றில் ஆயிரம் கால் மண்டபம், தீப தரிசன மண்டபம், 16 கால் மண்டபம், புரவி மண்டபம், ஏழாம் திருநாள் மண்டபம் ஆகியவை உள்ளன.

சந்நிதிகள்

[தொகு]

சிவபெருமான் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். இத்தலத்தில் உள்ள மலையே சிவலிங்கம் என்பது நம்பிக்கை. அம்மன் உண்ணாமலையம்மை ஆவார். முருகன், விநாயகர், அர்த்தநாரீசுவரர், பெருமாள், பைரவர், பிரம்மலிங்கம், பாதாளலிங்கம் ஆகிய சன்னதிகள் உள்ளன.

தீர்த்தங்கள்

[தொகு]
  • சிவகங்கை தீர்த்தம்
  • பிரம்ம தீர்த்தம்

வழிபாடு

[தொகு]

இக்கோவிலில் ஆறுகால பூசை தினமும் நடைபெறுகிறது. பஞ்ச பருவ பூசைகளும், சுக்ரவாரம் மற்றும் சோமவார பூசைகளும் நடைபெறுகின்றன. பஞ்ச பருவ பூசைகள் என்று அழைக்கப்படுபவை, அமாவாசை, கிருத்திகை, பிரதோசம், பௌர்ணமி, சதுர்த்தி பூசைகளாகும்.[7]

கரும்புத் தொட்டில்

[தொகு]

குழந்தையில்லாதவர் திருவண்ணாமலையைக் கிரிவலம் வந்து தங்களுக்குக் குழந்தை பிறக்க அண்ணாமலையை வேண்டுகின்றார்கள். அவ்வாறு குழந்தை பிறந்தால் கரும்புத் தொட்டிலினை இட்டு மீண்டும் கிரிவலம் வந்து வேண்டிக் கொள்கின்றார்கள். இவ்வாறு கரும்புத் தொட்டியலிடுவது இக்கோவிலின் முக்கிய நேர்த்திக் கடன்களில் ஒன்றாகும்.[8]

விழாக்கள்

[தொகு]
கார்த்திகை தீபத் திருவிழாவின் போது கோயில்
கார்த்திகை தீபத் திருவிழாவின் போது கோயில்
திருவிழா காலத்தில் வடம்பிடித்து இழுக்கப்படும் தேர்
திருவிழா காலத்தில் வடம்பிடித்து இழுக்கப்படும் தேர்

பிரம்மோற்சவம்

[தொகு]

அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நான்கு பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன.

ஆனி மாத பிரம்மோற்சவம்

[தொகு]

ஆனி மாத பிரம்மோற்சவம் என்பது தட்சணாயன பிரம்மோற்சவம் என்று அழைக்கப்படுகிறது. கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த விழா, அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனுக்குச் சிறப்பு அபிசேக ஆராதனையும் பராசக்தியம்மன், விநாயகர், சந்திரசேகரர் சாமிகளுக்குப் பூசைகள் செய்யப்படுகின்றன.

விநாயகர் மற்றும் சின்னநாயகர் அம்மன், சந்திரசேகரர் வீதியுலா, ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர் எழுந்தருளுதல், ஆனி திருமஞ்சனம் ஆகியவை நடைபெறுகின்றன.

மாசி மகம் தீர்த்தவாரி

[தொகு]
அண்ணாமலையார் கோயிலில் உள்ள நந்தி சிலை

வள்ளாள ராஜாவின் மகனாகச் சிவபெருமானே பிறந்ததாக ஒரு தொன்மக் கதையுண்டு. இதன் காரணமாக வள்ளாள மகாராஜாவின் திதியைச் சிவபெருமானே அளிக்கின்றார். இந்நிகழ்வினை மாசி மகம் தீர்த்தவாரி என்றழைக்கின்றனர்.

கார்த்திகை தீபம்

[தொகு]

கார்த்திகை தீப நாளை ஒட்டி கார்த்திகை தீப பிரம்மோற்சவ திருவிழா அண்ணாமலையார் கோவிலில் நடைபெறுகிறது. இதில் பத்து நாட்கள் உற்றவர்களின் ஊர்வலங்களும், மூன்று நாள் தெப்ப திருவிழாவும் அதனையடுத்துச் சண்டிகேசுவர் உற்சவமும் நடைபெறுகிறது.

சிவன், கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாகக் காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூசைசெய்வர். பின்பு அந்தத் தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். இதனை, ‘ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்’ தத்துவம் என்கிறார்கள். பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும்.

பரணி தீபம்

[தொகு]

பத்தாம் நாள் அதிகாலை 4.00 மணிக்கு, மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள். இந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல் விளக்கு ஏற்றுவார்கள். அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இந்த பரணிதீபம் காலையில் நடக்கும்.

பரணி தீபம் ஏற்றப்பட்ட பிறகு, அதைக் கொண்டு பஞ்சமுகதீபம் ஏற்றப்படுகிறது. பரணி தீபத்தினை இறுதியாக பைரவர் சந்நிதியில் வைக்கின்றனர்.

மகாதீபம்

[தொகு]

மகா தீபம் கார்த்திகை தீப திருவிழா நாளின் மாலையில் அண்ணாமலை மலையின் மீது ஏற்றப்படுகிறது. இம்மலை 2,668 அடி உயரமானதாகும்.

மாலை நேரத்தில் பஞ்சமூர்த்திகள் தீப மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அவர்களைத் தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சிதருகின்ற அர்த்தநாரீசுவரர் உற்சவ கோலம் தீபமண்டபத்திற்கு எடுத்து வரப்படுகிறது. அவர் முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றப்படுகின்ற அதே நேரத்தில், மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.[9]

இந்த மகாதீபத்தினைப் பக்தர்கள் மலையின் மீது ஏறிப் பார்க்கின்றனர்.

பாடல் பெற்ற தலம்

[தொகு]

திருமுறைப் பாடல் பெற்ற 275 திருத்தலங்கள் (சிவன் கோயில்கள்) திருமுறைத்தலங்கள் எனப் போற்றப்படுகின்றன. இவற்றில் 22 திருத்தலங்கள் நடுநாட்டில் (தமிழ்நாட்டின் ஒரு பகுதி) அமைந்துள்ளன. இந்த 22 தலங்களில் மிகவும் சிறப்புடையது திருவண்ணாமலை ஆகும்.

அண்ணாமலையார் திருக்கோயில்

நால்வர்

[தொகு]

திருஞான சம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் முதலானோர் அண்ணாமலையாரை வந்து தரிசித்து பதிகங்கள் பாடியுள்ளார்கள். மாணிக்கவாசகர் திருவண்ணாமலைக்கு வந்து பலகாலம் தங்கியிருந்து (வைணவத்தில் மார்கழி மாதத்திற்கு திருப்பாவை இருப்பது போல) சைவத்திற்கு மார்கழியில் "திருவெம்பாவை" (20) பாடல்களையும், திருவம்மானை பதிகங்களையும் இயற்றி உள்ளார். கிரிவலப்பாதையில் அடியண்ணாமலை என்னும் இடத்தில் மாணிக்கவாசகருக்கு ஒரு கோயில் இருப்பதை இன்றும் காணலாம்.

அருணகிரி நாதர்

[தொகு]

அருணகிரிநாதர் திருவண்ணாமலையில் பிறந்தவர்.[10][11] இங்குள்ள இறைவன் முருகன் மீது பாடல்களைப் பாடியுள்ளார். அவர் கோபுரத்தில் கிளியாக மாறிப் பாடியமையால் அக்கோபுரத்தினை கிளிக்கோபுரம் என்று அழைக்கின்றார்கள்.

நூல்கள்

[தொகு]

இத்தலத்தில் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் நூல்கள் இயற்றப்பட்டுள்ளன.[12]

தேவாரம், திருவாசகம், பதினொராந்திருமுறை, பெரியபுராணம், கந்தபுராணம், திருப்புகழ், சோணசைல மாலை, திருவருணைக் கலம்பகம், அருணாசல புராணம், அருணாசல மகாத்மிய வசனம், அருணகிரி வெண்பா அந்தாதி, அண்ணாமலையார் வெண்பா, திருவருணை அந்தாதி, அண்ணாமலை சகதம், சாரப்பிரபந்தம், கார்த்திகை தீப வெண்பா, சோணாசல வெண்பா, சோணாசல சதகம், திருவருணைக்கலிவெண்பா, திருவருட்பதிகம், அருணாசலேசுவரர் பதிகம் -1, அருணாசலேசுவரர் பதிகம் - 2, உண்ணாமுலையம்மன் சதகம், அருணாசலேசர் நவகாரிகை மாலை, உண்ணாமுலையம்மன் வருகைப்பதிகம், அருணாசல சதகம், அருணாசல அட்சரமாலை, அண்ணாமலையார் வண்ணம், திருவண்ணாமலைப் பதிகங்கள், அண்ணாமலைப் பஞ்ச ரத்னம், திருவருணைத் தனி வெண்பா, அட்சரப் பாமாலை, அருணாச்சலேசுவரர் உயிர் வருக்கம் படைத்தற் பாமாலை, அருணசல அட்சரமாலை, அருணாசலநவ மணிமாலை, அருணாசல பதிகம், அருணாசல அஷ்டகம், அருணாசல பஞ்சபத்தனம் ஆகியவை இச்சிவாலயத்தின் புகழைப் பாடுகின்ற நூல்களாகும்.[14]

தல சிறப்பு

[தொகு]
  • கயிலையில் சிவபெருமான் இருப்பதால் அது அந்த மலைக்குச் சிறப்பு. ஆனால் இங்கு சிவபெருமானே அண்ணாமலையாக இருப்பதால் இம்மலை கயிலையை விடச் சிறந்தது என்று கந்த புராணம் கூறுகிறது.
  • திருவண்ணாமலையைச் சுற்றினாலே பாவங்கள் ஒழியும் என்றும், இந்த மலையைச் சுற்ற ஒரு அடி எடுத்து வைத்தாலே ஆயிரம் யாகங்கள் செய்த பலன் கிடைக்கும் என்றும் புராணங்கள் பெருமை படுத்துகின்றன.
  • இத்தலம் பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாகும்.
  • இத்தலத்தில் தான் சிவபெருமான் உமையம்மைக்கு தன்னில் சரிபாதி கொடுத்து மாதொருபாகனாக (அர்த்தநாரீஸ்வரர்) நின்றார். முதன் முதலில் உமையம்மையே கிரிவலம் சென்றார் என்பதும் இந்த மலையின் பெருமைகளுள் ஒன்று.
  • சிவாலயங்களில் பொதுவாக அம்மன் சன்னதியில் மட்டுமே பள்ளியறை அமைக்கப்படும் ஆனால் இத்தலத்தில் அண்ணாமலையார் சன்னதியில் பள்ளியறை அமைந்துள்ளது தனி சிறப்பாகும்.
  • நான்முகனின் தான் என்ற ஆனவத்தை அழித்த தலம் இது. ஆணவம் அழிந்தப்பின்னர் நான்முகன் வழிபடுவதற்காக சுயம்புவாக தோன்றிய சிவலிங்கமே தற்போதைய ஆதி அண்ணாமலையார் கோவிலில் உள்ளது. அது பிரம்மன் வணங்கிய சிவலிங்கம்.
  • திருவடியை தேடிச் சென்றத் திருமால் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு வணங்கிப் பணிந்தப்பின்னர் அவர் வணங்குவதற்காகத் தோன்றிய சுயம்பு லிங்கமே தற்போது அண்ணாமலையார் கோவிலில் உள்ள மூலவராகும்.
  • திருவாரூரில் பிறக்க முக்தி, காசியில்இறந்தால் முக்தி, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி ஆனால் திருவண்ணாமலையை ஒருவர் நினைத்தாலே முக்தி அடைவர் என்பது இந்த தலத்தின் மற்றொரு பெருமையாகும்.
  • காமதகனம் நிகழ்வு இத்தலத்தில் மட்டுமே நடைப்பெறுகிறது.
  • ஆடிப்பூரத்தன்று மாலையில் உண்ணாமுலையம்மன் சந்நிதி முன் தீமிதி திருவிழா நடைபெறுகிறது. இவ்வாறு தீமிதி திருவிழா நடைபெறும் சிவாலயம் இதுவே.
  • பிள்ளைகள் இல்லாத வள்ளால மகராஜாவுக்கு அண்ணாமலையாரே மகனாகத் தோன்றினார். எனவே வருடந்தோரும் அண்ணாமலையாரே வள்ளால மகாராஜாவுக்கு மகனாக இருந்து திதி தருகிறார். இது போல வேறு எந்த சிவாலயத்திலும் இறைவன் யாருக்கும் திதி தருவதில்லை.
  • இத்தலம் வந்த மாணிக்கவாசகர் வெகுகாலம் இங்கேயே தங்கி திருவெம்பாவை இயற்றினார். ஆதி அண்ணாமலையார் கோவிலுக்கு அருகே அவர் திருவெம்பாவை இயற்றின இடம் இன்றும் உள்ளது.
  • அருணகிரிநாதர் முதன் முதலில் திருப்புகழ் பாடத்துவங்கிய இடம் இதுவாகும். இங்கு அருணகிரிநாதருக்கு விழா எடுக்கப்படுகிறது.
  • வடமொழியின் கந்தபுராணத்தில் ஒரு பெரும்பகுதி "அருணாச்சல மஹாத்மியம்" என்ற பெயரில் அமைந்துள்ளது. அதில் திருவண்ணாமலையின் சிறப்புகள் குறித்துப் பாடப்பட்டுள்ளது.
  • தமிழகத்தின் வேறு எந்த கோவில்களுக்கும் இல்லாத சிறப்பாக இத்தலத்தின் மீது மட்டும் பலநூறு தனி நூல்கள் பாடல்கள் இயற்றப்பட்டுள்ளது.
  • பல லட்சம் மக்கள் தினமும் வந்து தரிசனம் செய்யும் கோவில் இது. பலரது வாழ்க்கையை மாற்றியமைத்த கோவில் இது. இன்றளவும் குழந்தை வரம் கிடைத்ததும் திருக்கார்த்திகை தேரோட்டத்தின் போது கரும்புத்தொட்டிலில் குழந்தைகளை வைத்து கோவிலை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்திவரும் பல்லாயிரம் தம்பதியர்களைக் காணலாம்.

ஞானிகளும் துறவிகளும்

[தொகு]

இத்தலம் சித்தர்களின் சரணாலயமாகவும் விளங்குகிறது. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான இடைக்காட்டுச் சித்தர் இத்தலத்திற்கு உரியவராக விளங்குகிறார்.

அண்ணாமலை சுவாமிகள், அப்பைய தீட்சிதர், அம்மணி அம்மாள், அருணகிரிநாதர் சுவாமிகள், அழகானந்த அடிகள், ஆதி சிவ பிரகாச சாமிகள், இசக்கி சாமியார், இடைக்காட்டுச் சித்தர், இரமண மகரிசி, இறை சுவாமிகள், ஈசான்ய ஞானதேசிகர், கண்ணாடி சாமியார், காவ்யகண்ட கணபதி சாத்திரி, குகை நமச்சிவாயர், குரு நமச்சிவாயர், குருசாமி பண்டாரம், சடைச் சாமிகள், சடைச்சி அம்மாள், சற்குரு சுவாமிகள், சேசாத்திரி சாமிகள், சைவ எல்லாப்ப நாவலர், சோணாசலத் தேவர், ஞான தேசிகர், தட்சிணாமூர்த்தி சாமிகள், தம்பிரான் சுவாமிகள், தெய்வசிகாமணி சித்தர், பத்ராச்சல சுவாமி, பழனி சுவாமிகள், பாணி பத்தர், மங்கையர்கரசியார், ராதாபாய் அம்மை, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், விசிறி சாமியார், விருபாட்சி முனிவர், வீரவைராக்கிய மூர்த்தி சாமிகள், ஶ்ரீலஶ்ரீ இராஜ யோகி மூக்குப்பொடிச் சித்தர் ஆகிய சித்தர்கள் அண்ணாமலையில் வாழ்ந்த சித்தர்களாவார்கள். இவர்களில் பலர் அண்ணாமலையிலேயே ஜீவசமாதி அடைந்துள்ளார்கள். சில சித்தர்களின் ஆசிரமம் திருவண்ணமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ளது.

தற்போதும் பல்வேறு சித்தர்கள் திருவண்ணாமலையில் வாழ்ந்து வருவதாக சைவர்கள் நம்புகிறார்கள்.

போக்குவரத்து

[தொகு]

இத்திருத்தலம் விழுப்புரம் காட்பாடி ரயில் மார்கத்தில் விழுப்புரத்திலிருந்து 65 கி.மீ, தூரத்திலும் காட்பாடியிலிருந்து 90 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து வந்து செல்வதற்கு பேருந்து வசதிகளை இத்திருத்தலம் கொண்டுள்ளது. ஒரு வழித்தடம் செங்கல்பட்டு, மதுராந்தகம், திண்டிவனம், செஞ்சி வழியாகவும் மற்றொறு வழித்தடம் திருபெரும்புதூர், காஞ்சிபுரம், ஆற்காடு, ஆரணி, போளூர் வழியாகவும் செல்லலாம்.

இத்திருத்தலம் வேலூரிலிருந்து 70 கி.மீ. தொலைவிலும், திண்டிவனத்திலிருந்து 60 கி.மீ. தொலைவிலும், விழுப்புரத்திலிருந்து 60 கி.மீ. தொலைவிலும், கிருட்டிணகிரியிலிருந்து 100 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

இத்திருத்தலத்தில் கிரிவலப்பாதையருகே உலங்குவானூர்தி இறங்குதளம் ஒன்று உள்ளது. இதன் மூலம் மிக முக்கிய பிரமுகர்கள் சென்னை மற்றும் பிற இடங்களிலிருந்து வந்துச் செல்ல முடியும்.

சேவார்த்திகளின் வசதிக்காக குறைந்த வாடகையில் தங்குமிடங்களை திருக்கோயில் நிர்வாகம் ஏற்படுத்தித் தந்துள்ளது. இதைத்தவிர தனியாருக்குச் சொந்தமான விடுதிகளும் திருக்கோயிலைச்சுற்றி உள்ளன.

ஊடகங்களில்

[தொகு]

சொ.மணியன், நா.மோகன கிருஷ்ணன் என்ற எழுத்தாளர்கள் திருவண்ணாமலை கிரிவலம் எனும் நூலை எழுதியுள்ளார்கள். திருவண்ணாமலையின் பெருமையும் அங்கு சுற்றி இருக்கும் முக்கிய இடங்கள் பற்றிய தொகுப்பு இதில் இடம்பெற்றுள்ளது. தங்கத் தாமரை பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது.

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  2. வீ. ஜெயபால், சைவ புலவர் நால்வரால் பாடல் பெற்ற திருத்தலங்கள், திருவாசகத் தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், 28, அம்மையப்பா இல்லம், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, டிசம்பர் 2014, ப.10
  3. ":: TVU ::". www.tamilvu.org. Retrieved 2025-09-04.
  4. "உலகிலேயே மிகப்பழமையான திருவண்ணாமலை!".
  5. "ஆலயம் தரும் அபூர்வ சேதிகள்! - திருவண்ணாமலை".
  6. http://temple.dinamalar.com/New.php?id=22
  7. "திருக்கோயிலின் தினசரி பூஜை விவரங்கள்- திருவண்ணாமலை தளம்". Archived from the original on 2015-01-02. Retrieved 2015-03-13.
  8. உலகிலேயே மிகப்பழமையான திருவண்ணாமலை! தினமலர் கோயில்கள் தளம்
  9. http://www.dailythanthi.com/Others/Devotional/2015/11/26022250/Arunacalesvarar-Thiruvannamalai-temple-festival-karttikaitipa.vpf
  10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-11-22. Retrieved 2016-07-27.
  11. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-05-22. Retrieved 2016-07-27.
  12. "அண்ணாமலை அற்புதங்கள் - ராதா பாய் நக்கீரன் இணையதளம் 17-11-2013". Archived from the original on 2014-01-05. Retrieved 2015-03-14.
  13. "திருவண்ணாமலை தலபுராணம் - Thiruvannamalai Temple sthala puranam". Archived from the original on 2015-03-18. Retrieved 2015-03-13.
  14. திருவண்ணாமலை திருத்தல விளக்கம் - மு.சீனிவாசவரதன், அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் - திருவண்ணாமலை வெளியீடு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்ணாமலையார்_கோயில்&oldid=4364591" இலிருந்து மீள்விக்கப்பட்டது