திருவெம்பாவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகரால் சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளான சிவபெருமானைக் குறித்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். இந்த திருவெம்பாவை பாடல்களுடன், திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் பாடல்களையும் இணைத்து மார்கழி மாதத்தில் பாடுவதை சைவர்கள் மரபாகக் கொண்டுள்ளார்கள். [1] கன்னிப் பெண்கள் மார்கழி மாதத்தில் இருக்கும் பாவை நோன்பின் ஒரு பகுதியாக இந்த பாடல்களைப் பாடுவது உள்ளது. [2]

நூல் அமைப்பு[தொகு]

திருவெம்பாவை இருபது பாடல்களைக் கொண்டது. முதல் எட்டு பாடல்கள் சிவபெருமானின் புகழ்களைப் பாடியபடி நீராடச் செல்லுதலைக் குறிப்பது.[3]

ஒன்பதாவது பாடல் சிவபெருமானிடம் தங்கள் வேண்டுதல்களைக் கூறுவதாகவும், பத்தாவது பாடல் நீராடுதலையும் குறிப்பன.[4]

திருவெம்பாவை பெயர்க் காரணம்[தொகு]

மாணிக்கவாசகர் திருவண்ணாமலையை தரிசிக்கும்போது பாடப் பெற்றது திருவெம்பாவை. சிவனுக்குத் திருத்தொண்டு புரிவதையே வரமாகக் கேட்கிறது திருவெம்பாவை. திருவெம்பாவைக்குச் சிறப்பாக விளங்குவது "எம்பாவாய்" என்னும் தொடர்மொழி. அதன் இருபது பாடல்களிலும் பாட்டின் இறுதியில் திருவெம்பாவை என்றே வருவதால் அதுவே இதற்குப் பெயராய் அமைந்தது. இந்த "ஏலோர் எம்பாவாய்" என்ற தொடர் பொருளற்றது என்றும், "பாவை போன்ற பெண்ணே நீ சிந்திப்பாய்" என்று பொருள் தருவதாகவும் இரு கருத்துகள் நிலவுகின்றன.[5]

தத்துவம்[தொகு]

சிவசக்தியின் அருட்செயலையும், நவசக்திகள் ஒன்றுசேர்ந்து சிவபெருமானைத் துதிப்பதும் திருவெம்பாவையின் தத்துவமாகும். மனோன்மணி, சர்வ பூததமணி, பலப்பிரதமனி, பலவிகரணி, கலவிகரணி, காளி, ரெளத்திரி, சேட்டை, வாமை என்ற ஒன்பது சக்திகளின் ஏவலால் பிரபஞ்ச காரியம் நடைபெறும். இதனை உணர்ந்து நோற்பதே பாவை நோன்பாகும்.

பெண்கள் நோன்பு நோற்பதற்கு காலையில் செல்லும்போது தூங்கும் பெண்ணை எழுப்பும் காட்சி திருவெம்பாவையில் வருகின்றது. ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் சோதி, சிவலோகன், தில்லைச் சிற்றம்பலத்து ஈசன், அத்தன், ஆனந்தன், அமுதன், விண்ணுக்கு ஒரு மருந்து, வேத விழுப்பொருள், சிவன், முன்னைப் பழம், தீயாடும் கூத்தன் என்று பலவாறு இறைவனைக் குறித்துப் பாடி, நீராடி, சிவபெருமானிடம் அடியார்கள் வேண்டுவதை 'திருவெம்பாவை' விளக்குகிறது.

சிறப்பு[தொகு]

தாய்லாந்தில் திருப்பாவை, திருவெம்பாவை இவை மன்னர் முடிசூட்டலின்போது பாடப்படுகின்றன.[6]

திருவெம்பாவைப் பாடல்களில் சில[தொகு]

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்

சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்

மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்

மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்

வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து

போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்

ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என் னேஎன்னே

ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்

பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்

பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே

நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்

சீசி இவையுஞ் சிலவோ விளையாடி

ஏசும் இடமீதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்

கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும்

தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்

ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்

முத்தன்ன வெண்நகையாய் முன்வந் தெதிர் எழுந்தென்

அத்தன் ஆனந்தன் அமுதன் என் றள்ளூறித்

தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்

பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்

புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ

எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ

சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை

இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ

வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ

எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்

கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே

விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்

கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்

உள் நெக்கு நின்றுருக யாமாட்டோம் நீயேவந்து

எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்

மாலறியா நான்முகனும் காணா மலையினைநாம்

போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்

பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்

ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்

கோலமும் நம்மைஆட் கொண்டருளி கோதாட்டுஞ்

சீலமும் பாடிச் சிவனே சிவனேஎன்று

ஓலம் இடினும் உணராய் உணராய்காண்

ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்

மானேநீ நென்னலை நாளைவந் துங்களை

நானே எழுப்புவன் என்றலும் நாணாமே

போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ

வானே நிலனே பிறவே அறிவரியான்

தானேவந் தெம்மைத் தலையளித் தாட்கொண்டருளும்

வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்

ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்

ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்

அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்

உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்

சின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாய்திறப்பாய்

தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்

என்னானை என்அரையன் இன்னமுதென் றெல்லோமுஞ்

சொன்னோங்கேல் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ

வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்

என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்

கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்

ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்

கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை

கேழில் விழுப்பொருள்கள் பாடினோங் கேட்டிலையோ

வாழியீ தென்ன உறக்கமோ வாய்திறவாய்

ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ

ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை

ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய்

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே

பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற் றியனே

உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்

உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்

அன்னவரே எங்கணவர் ஆவார் அவர் உகந்து

சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்

இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்

என்ன குறையும் இலோமேலோர் எம்பாவாய்

பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்

போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே

பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்

வேதமுதல் விண்ணோரும் மண்ணுந் துதித்தாலும்

ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்

கோதில் குலத்தரன் தன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்

ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்

ஏதவனைப் பாடும் பரிசேலார் எம்பாவாய்

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்

கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி

ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்

செய்யாவெண் ணீறாடி செல்வா சிறுமருங்குல்

மையார் தடங்கண் மடந்தை மணவாளா

ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்

உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம்

எய்யாமற் காப்பாய் எமைஏலோர் எம்பாவாய்

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்

தீர்த்தன் நற் றில்லை சிற்றம்பலத்தே தீயாடும்

கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்

காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி

வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்

ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப

பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்

ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவாய்

பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதால்

அங்கம் குருகினத்தார் பின்னும் அரவத்தால்

தங்கள் மலம்கழுவு வார்வந்து சார்தலினால்

எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த

பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநஞ்

சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்

கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்

பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்

கோதை குழலாட வண்டின் குழாமாடச்

சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி

வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்

சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி

ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்

பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்

பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்

சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர

நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்

பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்

பேரரையர்க் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்

ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்

வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி

ஏருருவப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்

செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்

எங்கும் இலாதோர் இன்பம்நம் பாலதாக்

கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி

இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்

செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை

அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை

நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்

பங்கயப்பூம் புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்

முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்

என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்

மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்

பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்

என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்

தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு

முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே

என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்

அண்ணா மலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்

விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றார்போல்

கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்

தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்

பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்

விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்

கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்

பெண்ணேஇப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று

அங்கப் பழஞ்சொற் புதுக்கும் எம் அச்சத்தால்

எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்

எங்கொங்கை நின் அன்பர் அல்லார்தோள் சேரற்க

எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க

கங்குல்பகல் எங்கண் மற்றொன்றுங் காணற்க

இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்

எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்

போற் றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்

போற் றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்

போற் றியெல் லாவுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்

போற் றியெல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்

போற் றியெல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்

போற் றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்

போற் றியாம் உய்ய ஆட் கொண்டருளும் பொன்மலர்கள்

போற் றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. திருவெம்பாவை விளக்கம் கட்டுரை - என் வெங்கடேசன் - தினமணி நாளிதழ் - வெளியான நாள் 15 டிசம்பர் 2017
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-04-19. பார்க்கப்பட்ட நாள் 2019-02-05.
  3. திருவெம்பாவை விளக்கம் கட்டுரை - என் வெங்கடேசன் - தினமணி நாளிதழ் - வெளியான நாள் 15 டிசம்பர் 2017
  4. திருவெம்பாவை விளக்கம் கட்டுரை - என் வெங்கடேசன் - தினமணி நாளிதழ் - வெளியான நாள் 15 டிசம்பர் 2017
  5. திருவெம்பாவை விளக்கம் கட்டுரை - என் வெங்கடேசன் - தினமணி நாளிதழ் - வெளியான நாள் 15 டிசம்பர் 2017
  6. http://groups.google.com/group/minTamil/msg/03d1d7b8c1e5e32be

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவெம்பாவை&oldid=3636367" இலிருந்து மீள்விக்கப்பட்டது