சிவபெருமானுடன் சம்மந்தமான அனைத்தும் சைவம் என்று அறியப்பெறுகிறது. சைவநெறியென்றும், சிவநெறியென்றும், சிவ வழிபாடென்றும் சைவ சமயம் வழங்கப்பெறுகிறது. சிவவழிபாடு தமிழர்களின் குறிஞ்சி நிலத்தெய்வமான சேயோன் வழிபாட்டிலிருந்து தோன்றியதாகும். ஆதி சைவம், வீர சைவம், சித்தாந்த சைவம் என பல வகை பிரிவுகளை உள்ளடக்கிய இச்சமயம், இந்து மதத்தின் வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்தியம் முதலிய இந்து சமயப்பிரிவுகளையும் தன்னுள் இணைத்துக் கொண்டது. கல்லாடம் எனும் நூல் மூலம் முதல் தமிழ்ச்சிற்றிலக்கியத்தை தோற்றுவித்தது, பக்தி இலக்கிய காலத்தில் நாயன்மார், சமயக்குரவர் போன்றோரின் எழுச்சியால் எண்ணற்ற சைவ இலக்கியத்தினை படைத்தது என்று சைவம் தமிழுக்கு ஆற்றிய தொண்டால் 'சைவத்தமிழ்' என்று அழைக்கப்பெறுகிறது.
முருகன் இந்து சமயத்தினரின் உருவக் கடவுள்களுள் ஒருவராவார். இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே; இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அன்பின் ஐந்திணையில் தலையாயதாகிய குறிஞ்சி நிலத்தின் கடவுள் ஆவார். சரவணன், கார்த்திகேயன், குமரன், கந்தன், வடிவேலன், சுப்ரமணியன், சுவாமிநாதன், செந்தில்நாதன், ஆறுமுகன் (சண்முகன்) போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார். பண்டைய காலத்தில் கௌமாரம் எனும் தனித்த மதமாக இருந்த முருகன் வழிபாடு பின்பு சைவ சமயத்துடன் இணைந்தது.
மங்கையர்க்கரசியார் என்பவர் அறுபத்து நான்கு நாயன்மார்களில் ஒருவராவர். சோழ இளவரசியான இவர், நின்றசீர்நெடுமாறன் என்ற பாண்டிய மன்னனை மணந்தார். பாண்டிய நாடு முழுவதும் சமண சமயம் பரவியிருந்த போது, சைவ சமயத்தினை பின்பற்றிய இருவர்களில் மங்கையர்கரசியாரும் ஒருவர். திருஞான சம்மந்தரை திருமறைக்காட்டிலிருந்து பாண்டிய நாட்டிற்கு வரவைத்தார். அந்நேரத்தில் பாண்டிய மன்னனை வெப்புநோய் தாக்க, கூன்பாண்டியனானர். அந்நோயை சமணர்களால் குணப்படுத்த இயலாமல் போக, சம்மந்தரிடம் தன் கணவரை பற்றியிருந்த வெப்புநோயை குணமாக்க வேண்டினார் மங்கையர்கரசியார்.. ஞானசம்மந்தர் திருநீர் அளித்து அந்நோயிலிருந்து பாண்டியனை விடுவித்தார். அதனால் பாண்டிய நாட்டில் சமணம் மறைந்து சைவம் தளைத்தது. இதனால் சம்மந்தர் மானி என்ற இயற்பெயர் கொண்டவரை மங்கையற்கரசியார் என்று அழைக்க அப்பெயரே நிலைத்தது.
மொஹெஞ்சதரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள், ஆரியருக்கு முற்பட்டதொரு நாகரிகம், திராவிட நாகரிகம் என்பதை ஐயமறத் தெரிவிக்கின்றன. இவ்வகழ்வாய்வுகளில் சைவ சமயம் பற்றிய - குறிப்பாகச் சிவனுக்கு அல்லது அதற்கு முற்பட்ட வடிவ வழிபாடு பற்றிய குறிப்புகள் கிடைத்துள்ளன. உலகின் மிகப் பழைய உயிரோட்டமுள்ள சமயம் சைவ சமயமேயாகும்
- அகழ்வாராய்ச்சி அறிஞர் சர். ஜான் மார்ஷல்
உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள் என்ற பட்டியலின் கீழுள்ள கட்டுரைகளில் மூன்று வரிகளுக்கும் மேல் குறுங்கட்டுரைகளாகவாவது இயன்றவரை உருவாக்கலாம். தக்க ஆதாரங்களை இணைத்து சிறப்பான கட்டுரையாக்குதல் மேலும் சிறப்பு.
விக்கித் திட்டம் சைவத்தில் பங்களிப்பாளர்களுக்கு வழிகாட்டுதலையும், சிறப்பான செயல்பாடுகளுக்காக பயனர்களுக்கு பதக்கங்கள் கொடுத்து ஊக்கத்தினையும் செய்யலாம்.