எங்கேயோ கேட்ட குரல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எங்கேயோ கேட்ட குரல்
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புபி. ஏ. புரொடக்சன்ஸ்
கதைபஞ்சு அருணாசலம்
இசைஇளையராஜா
நடிப்புரஜனிகாந்த்
அம்பிகா
ராதா
டெல்லி கணேஷ்
கமலா காமேஷ்

எங்கேயோ கேட்ட குரல் (Enkeyo Ketta Kural) என்பது பி.ஏ. ஆர்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் பஞ்சு அருணாசலம் தயாரித்த திரைப்படமாகும். கதை-வசனத்தை அவரே எழுதினார். திரைப்படத்தை எஸ். பி. முத்துராமன் இயக்க, இளையராஜா இசை அமைத்தார்.

இதில் ரஜனிகாந்த், ராதா, அம்பிகா, டெல்லி கணேஷ், கமலா காமேஷ் முதலானோர் நடித்தார்கள்.

கதை[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

பஞ்சாயத்து தலைவர் (டெல்லி கணேஷ்) - அவரது மனைவி (கமலா காமேஷ்) ஆகியோருக்கு பொன்னி)(அம்பிகா), காமட்சி(ராதா) இருவரும் மகள்கள். பொன்னி படித்தவள். நாகரீகத்தை விரும்புகிறவள். வீட்டு வேலை எதுவும் தெரியாது. பொன்னி அந்த ஊர் பெரியவருக்கு (வி.எஸ்.ராகவன்) செல்லப்பிள்ளை. காமாட்சி குடும்பப் பொறுப்புகளை உணர்ந்தவள். இவர்களுக்கு முறை மாப்பிள்ளை (ரஜினிகாந்த்). விருப்பம் இல்லாமலேயே முறை மாப்பிள்ளையை மணக்கிறார், பொன்னி. கணவன் அன்புடன் நெருங்கி வரும்போது, "போய் குளித்து விட்டு வாருங்கள். ஒரே வியர்வை நாற்றம்" என்பாள்.

பொன்னி கர்ப்பமாவாள். அதைக் கலைக்க முயற்சிப்பார். தாயாரும், கணவனும் தடுத்து விடுவார்கள். குழந்தைக்கு தாய்ப்பால் கூட கொடுக்க மாட்டார். இந்நிலையில், பொன்னியின் மீது அன்பு செலுத்திய பெரியவரின் மகனும், அவர் மனைவியும் மனப் பொருத்தம் இல்லாமல் பிரிந்து விடுகிறார்கள்.

"உன் வாழ்க்கையும் வெற்றி பெறவில்லை. என் வாழ்க்கையும் வெற்றி பெறவில்லை. நீ என்னுடன் சென்னைக்கு வந்துவிட்டால், இரு வரும் சேர்ந்து வாழலாம் என்று பொன்னியிடம் பெரியவரின் மகன் கூறுகிறார். ஒரு நிமிடத்தில் ஏற்படும் சலனத்தால், அவருடன் பொன்னி சென்னைக்கு செல்கிறாள்.

அங்கு சென்றதுமே அவள் மனம் மாறுகிறது. தன் தவறை உணருகிறாள். மயக்கம் அடைந்து விழுகிறாள். பிறகு, தீக்குளிக்க முயலுகிறாள். சிறு காயத்துடன் தப்புகிறாள்.

இதற்கிடையே `ஓடிப்போன பொன்னியை கிராமத்தை விட்டு பஞ்சாயத்து தள்ளி வைக்கிறது. அவள் கணவனின் (ரஜினியின்) துயரத்தைப் போக்க, காமட்சியை (ராதா) அவருக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள். பொன்னியின் குழந்தையை (மீனா) தன் குழந்தை போல காமட்சி வளர்க்கிறாள்.

இந்த தகவல், பொன்னியை அழைத்துச்சென்ற பெரியவர் மகனுக்குத் தெரிகிறது. அதை அவளுக்கு கூறுகிறார். `கிராமத்துக்கு வெளியே எனக்கு நìலம் இருக்கிறது. அதை உனக்கு எழுதித் தருகிறேன். அங்கே வீடு கட்டிக்கொண்டு நீ வசிக்கலாம் என்று கூறி அனுப்பி வைக்கிறார்.

துறவு வாழ்க்கை

மனதில் சலனம் அடைந்தாலும், உடலில் களங்கப்படாத பொன்னி, தன் கிராமத்துக்கு வெளியே ஒரு குடிசை போட்டுக்கொண்டு தன்னந்தனியே துறவி போல் வாழ்கிறாள். இப்படியே 13 வருடம் ஓடுகிறது. தன் மகள் பருவப்பெண்ணாய் நடமாடுவதை தூரத்திலிருந்தே பார்த்து கண்ணீர் விடுகிறாள். நாளடைவில், உடல் நலம் குன்றி படுத்த படுக்கையாக இருக்கிறாள். தாய்ப்பாசத்தால், அவளை பார்க்க வருகிறார்,தாய் (கமலா காமேஷ்) "அம்மா! நான் ஒரு நிமிட சலனத்தால் வீட்டை விட்டு வெளியேறினாலும், உடலில் களங்கப்படாதவள் என்று கூறி, நடந்ததையெல்லாம் கூறுகிறாள் பொன்னி. "நீ என் மகள்! நீ களங்கப்பட்டிருக்க மாட்டாய் என்று எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டுக்கொண்டே இருந்தது என்பார், தாய். "அம்மா! சாவதற்கு முன் அவரை (ரஜினி) ஒரு முறை நான் பார்க்க வேண்டும். மன்னிப்பு கேட்கவேண்டும்! என்று தாயிடம் கூறுகிறாள் பொன்னி.

கடைசி ஆசை

பொன்னி களங்கமற்றவள் என்பதை அறியும் கணவன் அவளை பார்க்கச் செல்வார். கணவரை பார்த்துக் கதறுவாள் பொன்னி.

"என் மனதில் நீண்ட காலமாக ஒரு சுமை இருந்தது. நீ களங்கப்படவில்லை என்று அறிந்ததும், அந்த சுமை இறங்கி விட்டது. ஒரு சின்ன சபலம் கூட, ஒரு பெண்ணின் வாழ்க்கையை வீணாக்கி விடும் என்பதற்கு உன் வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டு என்பார்

"நான் அதிக நாளைக்கு உயிர் வாழமாட்டேன். நான் இறந்தால், எனக்கு செய்ய வேண்டிய சடங்குகளை நீங்கள் செய்ய வேண்டும். என்னை அனாதைப் பிணமாக விட்டு விடாதீர்கள். இதுதான் என் கடைசி ஆசை என்று கண்ணீருடன் யாசிப்பாள்..

"உன் கடைசி விருப்பத்தை நிறைவேற்றுவேன் என்று கூறிவிட்டு நடப்பார், கணவன்.அடுத்த நிமிடமே, அவர் விட்டுச்சென்ற செருப்பருகே சுருண்டு விழுந்து உயிர் துறப்பாள்.

இதுபற்றி தகவல் தெரிந்ததும், ஊர் பஞ்சாயத்து கூடும். (பஞ்சாயத்து தலைவர் பொன்னியின் அப்பாதான்)

பொன்னி ஏற்கனவே கிராமத்தை விட்டு விலக்கி வைக்கப்பட்டவள் என்பதால், அவள் உடலை அனாதைப்பிணமாக கருதி தகனம் செய்வது என்று முடிவு செய்யப்படும். தகனச் செலவுகளுக்காக வெட்டியானுக்கு 36 ரூபாய் 50 பைசாவை பஞ்சாயத்து வழங்கும்.

இதை அறியும் கணவன் தன் மனைவியின் உடலை தான் தகனம் செய்யப்போவதாக அறிவிப்பார்.

"பஞ்சாயத்தின் கட்டளையை மீறினால், நீங்களும் ஊரை விட்டு வெளியேற வேண்டியதுதான் என்று பஞ்சாயத்து தலைவர் கூறுவார்.

அதையும் மீறி, பொன்னியின் உடலை தன் இரு கைகளாலும் தூக்கிச்சென்று தகனம் செய்து விட்டு, ஊரை விட்டு வெளியேறுவார்,கணவன்(ரஜினி).

காமட்சியும் (ராதா), மகளும் (மீனா) அவருடன் செல்வார்கள்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எங்கேயோ_கேட்ட_குரல்&oldid=3738896" இலிருந்து மீள்விக்கப்பட்டது