சிரவண குமாரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயில் மதில்சுவர் சிற்பங்களில் மேல்வரிசையில் சிரவண குமாரன் கதையைக் குறிப்பிடும் புடைப்புச் சிற்பங்கள்

சிரவண குமாரன் (சமஸ்கிருதம்: Śravaṇa kumāra श्रवण कुमार) இராமாயணத்தில் வரும் ஒரு கதாபாத்திரம். பெற்றோர் சேவைக்கு ஒரு உதாரணமாக காட்டப்படும் நபர்.

இவர் கண்பார்வையற்ற தம்பதிகளுக்கு பிறந்தவர். இவர்களின் முதிர்ந்த வயதில் இருவருக்கும் வாழ்க்கை ஆதாரமாக சிரவண குமாரன் விளங்க வேண்டியதாயிற்று. இவர் காவடி எடுத்துச்செல்வது போல் தம் பெற்றோரை இரு பக்கமும ஒரு தராசில் போகும் இடமெல்லாம் சுமந்து செல்வார். ஒருமுறை காடு ஒன்றின் மத்தியில் சென்றுகொண்டிருக்கும் போது தம் பெற்றோர் அவனை தாகம் காரணமாக குடிநீர் கொண்டுவர சொன்னார். நீரை ஒரு பெட்டகத்தில் எடுக்கும் போது துல்லிய செவியுணர்வு கொண்ட தசரத சக்கிரவர்த்தி அங்கு வேட்டையாட வந்திருந்தார். நீர் பெட்டகத்தில் நிறையும் ஒலி கேட்டு மான் ஒன்று நீர் அருந்த வந்திருக்கும் என்று நினைத்து அந்த திக்கை நோக்கி அம்பெய்தார். வீழ்த்திய பிராணி ஒரு சிறுவன் என்பதை அறிந்த மன்னன அதிர்ச்சியுற்று அவனிடமே அப்பாவச்செயலுக்கு பிராயச்சித்தம் கேட்டார். சிறுவன் அப்போதும் தன்னை பற்றி வருந்தாமல் தம் பெற்றோர் தாகம் தீர்க்குமாறு மன்னனிடம் வேண்டினான்.

நீர் பெட்டகத்தை சிறுவனின் பெற்றோரிடம் கொண்டு சென்ற தசரதன் தன் மகன் அல்ல என்று கூட அறியாது நீரை பெற்றனர் அவனின் பெற்றோர். தசரதன் நிகழ்ந்த சம்பவத்தை பற்றி அவர்களிடம் சொல்ல மிகவும் வேதனையுற்ற அத்தம்பதிகள் தசரதனும் அவ்வாறே தன் மக்களிடம் இருந்து பிரிந்து உயிர் விடும் தருணம் வரும் என்று சாபம் இட்டனர்.[1] [2] தன் மகனை கொன்ற கொலைகாரனிடம் இருந்து பெற்ற நீரை அருந்த மறுத்து அக்கணமே உயிர் துறந்தனர். இச்சம்பவம் நடந்த இடம் இன்று சிரவணதீ என்று அழைக்கபடுகிறது. உத்தர பிரதேசத்தில் காசிபூர் என்ற இடத்தில் இருந்து சுமார் 30 கி.மீ அருகில் உள்ளது இவ்விடம்.

தசரதன் இராமனிடம் இருந்து பிரிந்து சோகத்தில் மாள நேரிடவைத்த சாபம் இது என்று இராமாயணம் கூறுகிறது.

சிரவண குமாரன் தம் உயிர் நீத்த அந்த நிமிடத்திலும் தம் பெற்றோரின் சேவையை மறக்கவில்லை, அதனை தன் உயிரினும் மேலாக கொண்டிருந்தார் என்பதையும் தருமத்தின் போக்கு என்ன என்பதையும் இக்கதை மூலமாக இந்துக்கள் அடிக்கடி கூறுவதுண்டு.

மேற்கோள்கள்[தொகு]

  1. Sravana Kumara
  2. Śravaṇa-kumāra
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரவண_குமாரன்&oldid=2716780" இலிருந்து மீள்விக்கப்பட்டது