காலநேமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இமயமலையில் துறவி வேடத்தில் காலநேமி மற்றும் அனுமார், ஓவியம், ஆண்டு 1891
காலநேமி, அஹி மற்றும் மஹியை வதைத்த கையுடன் சஞ்சீவனி மலையை கொண்டு வரும் அனுமன்

காலநேமி (Kalanemi) அத்யாத்ம இராமாயணத்தில் கூறப்படும் ஒரு அசுரர் ஆவார். [1] காலநேமி, மாரீசனின் மகன் ஆவார். இந்திரசித்து[ - [[இலட்சுமணன் இடையே நடைபெற்ற போரில், இந்திரசித்து ஏவிய மின்னல் அஸ்திரத்தால், இலட்சுமணன் மூர்ச்சையாகி மயங்கி வீழ்ந்தார். இலட்சுமணனைக் காக்க, இலங்கை அரச மருத்துவர் சுசேனரின் அறிவுரைபடி, இமயமலையில் வளரும் சஞ்சீவினி எனும் மூலிகை மருந்துச் செடிகளைப் பறிக்கச் சென்ற அனுமாரைக் கொல்ல காலநேமியை இந்திரசித்து அனுப்பி வைக்கிறார். இறுதியில் காலநேமியைக் கொன்று, அனுமார் சஞ்சீவினி மூலிகைச் செடிகள் வளரும் குன்றைக் கொணர்ந்து இலக்குவனின் மூர்ச்சையைத் தெளிய வைக்கப்படுகிறார்.

காலநேமி கதைப்பாத்திரம், வால்மீகி எழுதிய மூல இராமாயணத்தில் குறிப்பிடப்படவில்லை. மகாபாரதத்திலும் காலநேமி என்ற கதைமாந்தர் குறிக்கப்படுகிறார்.

வரலாறு[தொகு]

அத்தியாத்ம இராமயணத்தின்படி, இராம-இராவணப் போரில், மேகநாதன் எய்திய அம்பால் குத்தப்பட்டு, மூர்ச்சித்து வீழ்ந்த இலக்குவனைக் காக்க, இலங்கையின் அரச மருத்துவர் சுசேனர், இமயமலையில் வளரும் சஞ்சீவினி மூலிகைச் செடிகளைப் பறித்து வரக் கூறுகிறார். சஞ்சீவினி மூலிகைச் செடிகளைப் பறிக்க, இமயமலையை நோக்கிச் சென்ற அனுமானைத் தடுத்துக் கொல்ல, இந்திரசித்து, காலநேமி என்ற பாம்பு அரக்கனை அனுப்புகிறார்.[2]

அனுமார் இமயமலையின் கந்தமாதன மலை எனும் துரோண கிரியை அடைந்து, சஞ்சீவினிச் செடிகளைப் பறிக்கையில், அவ்விடத்தில் போலித் துறவி வேடத்தில் வந்த காலநேமி, அனுமாரை வரவேற்று, அருகில் உள்ள ஏரியில் குளித்து விட்டு வந்தால் சஞ்சீவினி செடிகளைப் பறித்துத் தருவதாகக் கூறுகிறார். [3][4] அனுமார் ஏரியில் குளிக்கையில், காலநேமி ஏவிய மாய முதலை, அனுமாரைக் கொல்ல வருகையில், அனுமார் அம்முதலையைக் கொல்கிறார்.[4]. அனுமார் கையால் இறந்த முதலை அப்சரசாக மாறி, தான் ஒரு முனிவரால் சாபம் பெற்ற வரலாற்றைக் கூறி, [3] காலநேமியின் சதித் திட்டத்தை அனுமாருக்கு எடுத்துரைக்கிறாள். பின்னர்க் காலநேமியைக் கொன்று, விடிவதற்குள் சஞ்சீவினிச் செடிகள் பறித்து, இலக்குவனைக் காக்கக் கூறுகிறாள்.[5] அனுமானும் காலநேமியைக் கொன்று, சஞ்சீவினிச் செடிகளுடன் கூடிய மலைக்குன்றைத் தூக்கிக் கொண்டு, இலங்கை திரும்பி, இலக்குவனைக் காக்கிறார்.

பிற மொழி இராமாயணக் காவியங்களில் காலநேமி[தொகு]

மத்திய காலத்தில் எழுதப்பட்ட வங்காள மொழி இராமாயணம், தெலுங்கு மொழி ரங்கநாத இராமாயணம் மற்றும் இந்தி மொழியில் துளசிதாசர் எழுதிய ராமசரிதமானஸ் போன்ற பெரும்பாலான இராமாயணக் காவியங்கள் காலநேமியின் கதைபாத்திரம் கொண்டுள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. T. Gopala Krishna Rao (1984). Folk Ramayanas in Telugu and Kannada. Saroja Publications. பக். 102. https://books.google.com/?id=F4oOAAAAYAAJ&q=Adhyatma+Ramayana+kalanemi&dq=Adhyatma+Ramayana+kalanemi. 
  2. Lutgendorf 2007, ப. xcii–xciv.
  3. 3.0 3.1 Garrett 1871, ப. 301–02.
  4. 4.0 4.1 Lutgendorf 2007, ப. ccv–ccviii.
  5. Lutgendorf 2007, ப. ccix, cdxx.

ஆதார நூல்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காலநேமி&oldid=3824040" இலிருந்து மீள்விக்கப்பட்டது