செய்யாறு (திருவண்ணாமலை மாவட்டம்)

ஆள்கூறுகள்: 12°39′43″N 79°32′37″E / 12.662000°N 79.543500°E / 12.662000; 79.543500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவத்திபுரம்
செய்யாறு
இரண்டாம் நிலை நகராட்சி
அடைபெயர்(கள்): திருவத்திபுரம்,
திருவத்திபுரம் is located in தமிழ் நாடு
திருவத்திபுரம்
திருவத்திபுரம்
செய்யாறு, தமிழ்நாடு
திருவத்திபுரம் is located in இந்தியா
திருவத்திபுரம்
திருவத்திபுரம்
திருவத்திபுரம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°39′43″N 79°32′37″E / 12.662000°N 79.543500°E / 12.662000; 79.543500
நாடு India
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
மாகாணம்தொண்டை நாடு
வருவாய் கோட்டம்செய்யாறு
சட்டமன்றத் தொகுதிசெய்யாறு
தோற்றுவித்தவர்தமிழ்நாடு அரசு
அரசு
 • வகைஇரண்டாம் நிலை நகராட்சி
 • நிர்வாகம்திருவத்திபுரம் நகராட்சி
 • வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் (RTO)ஆரணி
 • மக்களவை உறுப்பினர்திரு.எம்.கே.விஷ்ணுபிரசாத்
 • சட்டமன்ற உறுப்பினர்திரு. ஓ.ஜோதி
 • மாவட்ட ஆட்சியர்திரு. முருகேஷ், இ.ஆ.ப.
பரப்பளவு[1]
 • இரண்டாம் நிலை நகராட்சி72 km2 (28 sq mi)
பரப்பளவு தரவரிசைமீட்டர்கள்
ஏற்றம்123 m (404 ft)
மக்கள்தொகை (2011)
 • பெருநகர்37,986
இனங்கள்தமிழன்
மொழிகள்
 • அலுவல் மொழிதமிழ், English
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு604 407
இந்தியாவில் தொலைபேசி எண்கள்91-4182
வாகனப் பதிவுTN 97
சென்னையிலிருந்து தொலைவு110 கி.மீ (68மேல்)
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு93 கி.மீ (58மைல்)
ஆரணியிலிருந்து தொலைவு33 கிமீ (21மைல்)
இராணிப்பேட்டையிலிருந்து தொலைவு45 கி.மீ (25மைல்)
செங்கல்பட்டிலிருந்து தொலைவு61 கிமீ
காஞ்சிபுரத்திலிருந்து தொலைவு30 கிமீ (19மைல்)
வேலூரிலிருந்து தொலைவு65 கிமீ
இணையதளம்திருவத்திபுரம் நகராட்சி

செய்யாறு (Cheyyar), அல்லது திருவத்திபுரம் (Thiruvathipuram) அல்லது திருவோத்தூர் ஆனால் அதிகாரப்பூர்வமாக திருவத்திபுரம் நகரம் (Tiruvothur) இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில், அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு வட்டம், செய்யாறு ஊராட்சி ஒன்றியம், செய்யாறு வருவாய் கோட்டம், செய்யாறு (சட்டமன்றத் தொகுதி) ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும் மற்றும் 27 நகராட்சி உறுப்பினர்களுடன் கூடிய இரண்டாம் நிலை நகராட்சியாகவும் அமைந்துள்ளது. செய்யாறு ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருவத்திபுரம் நகரம் இங்கு அமைந்துள்ள வேதபுரீஸ்வரர் ஆலயம் மற்றும் செய்யாறு ஆறு மூலம் நன்கு அறியப்படுகிறது. நகரின் உள்ளாட்சி நிர்வாகம் திருவத்திபுரம் நகராட்சியின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

திருவத்திபுரம் நகரம் திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்கு பகுதியாக கடைக்கோடி பகுதியில் அமைந்துள்ளது. செய்யாறு நதிக்கரையில் மற்றும் ஆற்காடு-திண்டிவனம் மாநில நெடுஞ்சாலை 5 மற்றும் ஆரணி-காஞ்சிபுரம் ஆகிய நகரங்களை இணைக்கும் பகுதியாக அமைந்துள்ள ஒரு நகரமாகும்.

திருவத்திபுரம் நகரம் உருவாக்கம்[தொகு]

  • இந்திய விடுதலையின் போது மாநிலம் மற்றும் மாவட்டம் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. கிராமமாக இருந்த திருவத்திபுரம் வட ஆற்காடு மாவட்டத்தில் இருக்கும் போது 1959 ஆம் ஆண்டு புதிய செய்யார் வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டது.
  • 1965 ஆம் ஆண்டு முதல் 1978 ஆம் ஆண்டு வரை பேரூராட்சியாக செயல்பட்டது.
  • 1989க்கு முன் வட ஆற்காடு மாவட்டமாக இருந்த காலக் கட்டத்தில் திருவத்திபுரம் பேரூராட்சியாக விளங்கியது.

வரலாறு[தொகு]

பல்லவர்கள், சோழர்கள் ஆட்சிப்பகுதியின் முக்கிய இடமாக இந்த திருவோத்தூர் பகுதி இருந்து வருகிறது[6] இத்திருத்தலம் திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட சிவத்தலமாகும்.

அமைவிடம்[தொகு]

பெயர்க் காரணம்[தொகு]

திருவத்திபுரம் என்ற பெயர் இங்குள்ள இறைவன் உயர்த்த மந்திரமான வேதத்தை ரிஷிகளுக்கு உரைத்ததால் வந்தது. 'திரு' என்ற சொல் இறைவனையும் 'ஓதுதல்' என்ற சொல் உரைத்தல் என்பதையும் குறிக்கிறது. இதன் பழைய பெயர் திருவோத்தூர் என்பதாகும். இதுதான் இன்று மருவி திருவத்திபுரம் என்று அழைக்கப்படுகிறது.[7] அதேபோல், செய்யார் என்ற பெயர் செய்யாறு என்ற நதி இங்கு ஓடுவதால்தான் தோன்றியது என கூறப்படுகிறது. 'சேய்' என்ற வார்த்தை பிள்ளை என்பதயும், 'ஆறு' என்ற வார்த்தை நதி என்பதயும் குறிக்கிறது. வரலாற்றில் பார்வதி (சிவன் மனைவி) அவரது மகன் முருகன் விளையாட தனது திரிசூலம் மூலம் உருவாக்கிய ஆறுதான் 'சேயாறு' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஊரின் பழைய பெயர் சேயாறு. இதுதான் இன்று மருவி செய்யாறு என்றழைக்கப்படுகிறது. ஆனால், நகரம், செய்யாறு என இன்றுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் வெறும் வாய்ச்சொல்லாகத் தான் கூறப்பட்டு வருகிறது. ஆதலால் ஆற்றின் பெயராகத் தான் செய்யாறு குறிக்கப்படுகிறது. ஆனால் நகரத்தின் பெயராக திருவத்திபுரம் என்று தான் அழைக்கப்படுகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 37,802 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். திருவத்திபுரம் மக்களிள் கல்வியறிவு பெற்றோர் 76.59% ஆகும்.[8]

மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.±%
195114,451—    
196115,386+6.5%
198119,274+25.3%
199125,067+30.1%
200135,201+40.4%
201137,802+7.4%
Sources:

நிர்வாகம் மற்றும் அரசியல்[தொகு]

நகராட்சி[தொகு]

நகராட்சி அதிகாரிகள்
தலைவர்
ஆணையர்
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
சட்டமன்றத் தொகுதி செய்யார் (சட்டமன்றத் தொகுதி)
சட்டமன்ற உறுப்பினர் திரு.ஓ.ஜோதி
மக்களவைத் தொகுதி ஆரணி மக்களவைத் தொகுதி
மக்களவை உறுப்பினர் திரு.எம்.கே. விஷ்ணு பிரசாத்

சட்டமன்றத் தொகுதி[தொகு]

வருவாய் வட்டம்[தொகு]

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் செய்யார் வட்டமும் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக திருவத்திபுரம் உள்ளது. இந்த வட்டத்தில் 131 வருவாய் கிராமங்களும், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்த வட்டத்தில் மக்கள் தொகை 2,18,188 ஆகும். இந்த வட்டத்தில் செய்யார் ஊராட்சி ஒன்றியம் மற்றும் அனக்காவூர் ஊராட்சி ஒன்றியம் ஆகிய ஒன்றியங்கள் இந்த வட்டத்தில் அமைந்துள்ளது [12]. அதுமட்டுமில்லாமல் இந்த வட்டத்தில் திருவத்திபுரம் நகராட்சி அமைந்துள்ளது.

வருவாய் கோட்டம்[தொகு]

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 3 வருவாய் கோட்டங்களில் இதுவும் ஒன்றாகும். செய்யார் வருவாய் கோட்டம் 01.04.1959 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த வருவாய் கோட்டத்தின் கீழ் செய்யார், வெம்பாக்கம், வந்தவாசி, சேத்துப்பட்டு ஆகிய தாலுகாக்கள் அடங்கியுள்ளது. செய்யாறு வருவாய் கோட்டத்தில் 459 வருவாய் கிராமங்கள் உள்ளன. இந்த வருவாய் கோட்டத்தின் தலைமையகம் திருவத்திபுரம் நகரில் அமைந்துள்ளது.

போக்குவரத்து[தொகு]

சாலை வசதிகள்[தொகு]

திருவத்திபுரம் நகரானது ஆரணி , திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம், தாம்பரம் ஆகிய நகரங்களை இணைக்கும் மாநில நெடுஞ்சாலை 5A உம் மற்றும் புதுச்சேரி, திண்டிவனம், மேல்மருவத்தூர், வந்தவாசி மற்றும் ஆற்காடு, இராணிப்பேட்டை நகரை இணைக்கும் மாநில நெடுஞ்சாலை 5 உம் இந்த நகரத்தை இணைக்கும் வகையில் வலைப்பின்னலாக அமைக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலை எண் புறப்படும் இடம் சேருமிடம் வழி
SH 5 ஆற்காடு திண்டிவனம் செய்யாறு, வந்தவாசி, தெள்ளாறு
SH 5A ஆரணி காஞ்சிபுரம் ச.வி.நகரம், மாம்பாக்கம், செய்யாறு, மாங்கால் கூட்ரோடு, தூசி
மாவட்ட சாலை செய்யாறு SH 115 இணைப்பு சாலை நெல்வாய், கிருஷ்ணாபுரம்
மாவட்ட சாலை செய்யாறு SH 4 இணைப்பு சாலை முக்கூர், நாவல்பாக்கம், பெரிய கொழப்பலூர்
மாவட்ட இதர சாலை செய்யாறு சுமங்கலி விண்ணவாடி

பேருந்து வசதிகள்[தொகு]

திருவத்திபுரம் நகரத்தில் போக்குவரத்து நிர்வாக வசதிக்காக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகள் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த உள்ளூர் பேருந்து சேவைகளை தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் பிரிவு வழங்குகிறது. அதுமட்டுமின்றி, 30 கி.மீ. தொலைவுள்ள புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் நகரப்பேருந்து சேவைகளும் மற்றும் ஆரணி, காஞ்சிபுரம் மற்றும் வந்தவாசியுடனும் இணைக்கப்பட்டுள்ளது.

பெரிய நகரங்களான சென்னைக்கு 30பேருந்துகளும், சேலத்திற்கு 8 பேருந்துகளும், பெங்களூருக்கு 3பேருந்துகளும், திருச்சிக்கு 1பேருந்து வீதமும் மற்றும் 30கிமீ தொலைவுள்ள கிராமப்புறங்களை இணைக்கும் வகையில் 12பேருந்துகளும் திருவத்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.

வழி சேருமிடம்
ஆரணி மார்க்கமாக

ஆரணி, திருவண்ணாமலை, படவேடு, போளூர், சேலம், ஒகேனக்கல், தருமபுரி, திருச்சி, சிதம்பரம், செங்கம், பெங்களூரு, கிருஷ்ணகிரி, ஓசூர் செல்லும் பேருந்துகள்

காஞ்சிபுரம் மார்க்கமாக

காஞ்சிபுரம், சென்னை, அரக்கோணம், திருத்தணி, திருப்பதி, தாம்பரம், அடையாறு, பூந்தமல்லி செல்லும் பேருந்துகள்

வந்தவாசி மார்க்கமாக

வந்தவாசி, மேல்மருவத்தூர், திண்டிவனம், புதுச்சேரி, விழுப்புரம், திருச்சி செல்லும் பேருந்துகள்

பெரணமல்லூர் மார்க்கமாக

பெரணமல்லூர், சேத்துப்பட்டு, திருவண்ணாமலை போளூர்செல்லும் பேருந்துகள்

ஆற்காடு மார்க்கமாக

ஆற்காடு, வேலூர், திருப்பதி, பெங்களூரு, ஓசூர், ஆம்பூர், குடியாத்தம் செல்லும் பேருந்துகள்

வெம்பாக்கம் மார்க்கமாக பெருங்கட்டூர், வெம்பாக்கம், பிரம்மதேசம், காஞ்சிபுரம், சென்னை செல்லும் பேருந்துகள்
கலவை மார்க்கமாக கலவை, ஆற்காடு, வேலூர் செல்லும் பேருந்துகள்
பெரிய கொழப்பலூர் மார்க்கமாக சேத்துப்பட்டு, அவலூர்பேட்டை, திருவண்ணாமலை, பெங்களூரு போளூர் செல்லும் பேருந்துகள்
வாழைப்பந்தல் மார்க்கமாக ஆரணி, படவேடு செல்லும் பேருந்துகள்

தொடருந்து போக்குவரத்து[தொகு]

2008ஆம் ஆண்டு நடைபெற்ற நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரில் திண்டிவனம் - நகரி இரயில் பாதை திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த இரயில் பாதை விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலிருந்து, ஆந்திர மாநிலம், நகரி வரை அதாவது வந்தவாசி - செய்யாறு - ஆரணி - ஆற்காடு - இராணிப்பேட்டை - அரக்கோணம் மற்றும் திருத்தணி வழியாக இரயில் போக்குவரத்து இணைக்கும் வகையில் திட்டம் தீட்டப்பட்டு அதற்கான இரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. [13].

செய்யாரிலிருந்து 33 கி.மீ. தொலைவுள்ள காஞ்சிபுரம் தொடருந்து நிலையத்திலிருந்து சென்னை, திருப்பதி, மும்பை, புதுச்சேரி, விழுப்புரம் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் தொடருந்து வசதி உள்ளது. அதேபோல் செய்யாரிலிருந்து 67 கி.மீ. தொலைவில் உள்ள வேலூர் காட்பாடி இரயில் நிலையத்திலிருந்து வடமாநிலங்களுக்கும் மற்றும் செய்யாரிலிருந்து 58 கி.மீ. தொலைவிலுள்ள திண்டிவனம் தொடருந்து நிலையத்திலிருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு செல்ல தொடருந்து வசதிகள் உள்ளன.

விமான போக்குவரத்து[தொகு]

செய்யாறில் தற்போது விமான போக்குவரத்து வசதிகள் ஏதுமில்லை. செய்யார் இல் இருந்து சென்னை விமான போக்குவரத்து 93 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையம் மூலம் செய்யலாம். அதுமட்டுமின்றி, சென்னையின் 2 வது விமான நிலையம் அமைக்க செய்யூர், செய்யாறு, பரந்தூர், மாமண்டூர் ஆகிய ஏதாவது ஒரு பகுதியில் அமைக்க பரிசீலனை செய்வதாக அறிவித்தது. ஆனால் செய்யாறு, மாமண்டூர், செய்யூர் ஆகிய பகுதிகளில் விமான நிலையம் அமைக்க போதிய இடவசதி இல்லாத காரணத்தினாலும் மற்றும் சரியான சாலை வசதி இல்லாத காரணத்தினாலும் ஆனால் இந்த திட்டம் காஞ்சிபுரம் பகுதிக்கு அருகில் பரந்தூர் பகுதியை தேர்வு செய்யப்பட்டது.

தொழில்வளம்[தொகு]

2008 ஆம் ஆண்டிற்கு முன்னர் வரை தொன்றுதொட்டு செய்யார் மக்களுக்கு வேளாண்மை சார்ந்த தொழிலும் நெசவுத் தொழிலும் மட்டுமே முக்கிய தொழில்களாக இருந்தன. நகருக்கு வெளியே ஆற்காடு - வந்தவாசி - திண்டிவனம் சாலையில் திருவத்திபுரத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் தமிழ்நாட்டின் முக்கிய சர்க்கரை ஆலைகளுள் ஒன்றான செய்யார் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இங்கு "15மெகாவாட் இணை மின் உற்பத்தி நிலையமும் செயல்படுகின்றது", ஆவின் பால் பதனிடு நிலையமும் அமைந்துள்ளது. சுற்றுப்புற கிராமங்களிருந்து நாள்தோறும் சேகரிக்கப்படும் பால் குளிரூட்டப்பட்டு சென்னைக்கு செல்கிறது. இவை தவிர தனியாருக்கு சொந்தமான பெரிய பால்கோவா செய்யார் பால்கோவா தயாரிப்பகமும் உள்ளது. இங்கு நாள்தோறும் தயாராகும் பால்கோவா சென்னை, ஓசூர் மற்றும் சேலம் ஆகிய நகரங்களுக்கு தினமும் அனுப்பப்படுகிறது. அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையமும் உழவர்சந்தையும் சுற்றுப்புற கிராமங்களிருந்து வரும் விவசாயிகளுக்கு பலன் அளிக்கின்றன.

செய்யாரிலிருந்து ஐந்து கிலோ மிட்டர் தொலைவில் உள்ள ஜடேரி என்னும் கிராமத்தில் இருந்து வைணவர் நெற்றிகளில் இடும் திருமண் என்னும் நாம கட்டி இந்த கிராம மண்ணில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. இந்த நாமக்கட்டி புவிசார் குறியீடும் பெற்றுள்ளது [14]

செய்யார் சிப்காட்[தொகு]

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி ஏதும் இல்லை என்ற காரணத்தினால் 2008 ஆம் ஆண்டு அப்போதைய திமுக அரசால் திட்டம் தொடங்க வழிவகுத்தது. அதேபோல் , ஆரணி மற்றும் வந்தவாசி ஆகிய தொகுதிகளில் இடம் தேர்வு செய்ய முடிவெடுக்கப்பட்டது. ஆனால் ஆரணி மற்றும் வந்தவாசி ஆகிய பகுதிகளில் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் இல்லாத காரணத்தால் செய்யார் தொகுதியில் உள்ள மாங்கால் பகுதியில் சிப்காட் அடைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசின் தொழில் முன்னேற்ற கழகத்தின் சார்பில் செய்யாருக்கு அருகில், ஆரணி - காஞ்சிபுரம் சாலையில் உள்ள வெம்பாக்கம் வட்டம் மாங்கால் கூட்டு சாலை அருகே செய்யார் தொழிற்பேட்டை (Cheyyaru SIPCOT) மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலமும் (SEZ) அமைக்கப்பெற்று வருகின்றன. இந்த சிப்காட் நிறுவனம் காஞ்சிபுரம் நகரிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும், திருவத்திபுரம் நகரிலிருந்து 17 கி.மீ. தொலைவிலும், ஆரணியில் இருந்து 49 கி.மீ. தொலைவிலும் மற்றும் வந்தவாசியிலிருந்து 27கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது சென்னைக்கு அருகில் உள்ளதாலும் திருப்பெரும்புதூர் மற்றும் ஒரகடம் தொழிற்பேட்டைகளின் இடப்பற்றாக் குறையை நீக்க மாற்று இடம் தேவைப்படுவதாலும் இந்தப் பகுதி தேர்ந்தெடுக்கப்படுள்ளது. ஆரம்பிக்கப்பெற்று இரு ஆண்டுகளில் தைவான் நாட்டின் Nike & Lotus காலணி தயாரிப்பகம், அசோக் லே-லாண்டின் அலுமினிய வார்ப்பகம், Llyods ஆகிய நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடங்கியது .செய்யார் சிப்காட்டில் மஹேந்திரா மற்றும் ஸ்விங்ஷட்டர் ஆகிய பெரு நிறுவனங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் இந்நிறுவனத்தின் மூலம் ஏராளமான படித்த வேலையில்லாத இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது. அதேபோல், 660 ஏக்கர் பரப்பளவில் 770 கோடி செலவில் மருந்தியல் தொழிற்பூங்கா வேலைப்பாடுகளும் நடைபெற்று வருகிறது.

கல்வி[தொகு]

செய்யாறு திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு கல்வி மாவட்டமாகும். இந்த பள்ளிக் கட்டிடம் ஆகஸ்ட் 31, 1917 இல் திறக்கப்பட்டது. அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி 1967 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இக்கல்லூரி 69 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது. இந்த கல்லூரி முதலில் சென்னை பல்கலைக்கழகத்தில் இணைந்தது. 2002 ஆம் ஆண்டு திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட பின்னர், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இணைந்தது. இக்கல்லூரி தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகரிப்பு சபையினால் மூன்று நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளளது. இது பி.ஏ., எம்.ஏ., பி.எஸ்ஸி., எம்.எஸ்ஸி. மற்றும் பிஎச்.டி. படிப்புகளை வழங்குகிறது. சமீபத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியும் இங்கு தொடங்கப்பட்டுள்ளது [15].

அருள்மிகு வேதபுரீஸ்வரர் ஆலயம்[தொகு]

ஆற்றங்கரை பாலத்தின் மேலிருந்து பார்க்கும்போது வேதபுரீஸ்வரர் ஆலயம்

அருள்மிகு பாலகுஜாம்பிகை உடனுறை வேதபுரீஸ்வரர் ஆலயம் தொண்டை மண்டலத்தின் பாடல்பெற்ற தலங்களுள் எட்டாவது தலமாகும். இங்கு சிவன் வேதங்களை புரிபவனாக கிழக்கு நோக்கி அமைந்துள்ளார். சிவனடியார் ஒருவர் நதிக்கரையில் பனை மரங்களை நட்டு சிவனை வணங்கி வந்தார். அப்பனை மரங்கள் அனைத்தும் கனி தராத ஆண் பனைகளாகின. இதனைக் கண்டு, சமணர், அச்சிவனடியாரை ஏளனம் செய்தனர். இதனைச் செவியுற்ற திருஞானசம்பந்தர் சமணர்களோடு சொற்போரில் ஈடுபட்டார். இருவரும் தத்தம் இறைவனை வேண்டி தமிழ் செய்யுள் ஏற்றி செய்யாற்றில் விட்டனர். திருஞானசம்பந்தரின் செய்யுள் எதிர் நீந்தி செய்யாறைவென்றான் என்னும் ஊரில் கரை ஒதுங்கியது. சமணர்களின் செய்யுள் ஆற்றின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு அனகப்பதூர் எனுமிடத்தில் ஒதுங்கியது. திருஞானசம்பந்தர் சிவனை வேண்டி பத்து பதிகங்களைப் பாடி ஆண் பனைகளை குழையீன்ற வைத்தார். இன்றும் இத்தல விருட்சமான பனை மரங்கள் கார்த்திகை மாதத்தில் ஆண் பனைகளாக பனை பூக்களையும், சித்திரை மாதத்தில் பெண் பனைகளாக பனை கனிகளையும் ஒரே மரத்தில் விளைவிக்கின்றன. இது வேறு எங்கும் இல்லாத தாவரவியல் விந்தை ஆகும். சிவனை நோக்காது வாயிலை நோக்கி அமர்ந்துள்ள நந்தி இக்கோவிலின் இன்னொரு சிறப்பாகும். வேதங்களை புரியும் இறைவனுக்கு இடையூறுகள் வராமலிருக்க நந்தி சிவனை நோக்காமல் வாயிலை நோக்கி காவல்காப்பதாக நம்பப்படுகிறது. ஒரு சமயம் சிவபக்தரான தொண்டை மன்னனை எதிரிகளிடமிருந்து காப்பதற்காக வாயிலை நோக்கி நந்தி திரும்பியது எனும் செவி வழி கதையும் வழக்கில் உண்டு. உட்பிராகாரத்தில், உயரமான பீடத்தில் நாகலிங்கம் சந்நிதி அமைந்துள்ளது. ஞானசம்பந்தர், திருவோத்தூர் தலம் வந்தபோது, அவரை வெறுக்கும் சமணர்கள் ஒரு வேள்வி செய்து, ஐந்து தலைகளை உடைய ஒரு பாம்பை ஞானசம்பந்தர் மீது ஏவினார்கள். அப்போது, இத்தல இறைவன் ஒரு பாம்பாட்டியாக வந்து, ஐந்து தலை நாகத்தின் தலை மீது ஏறி அதை அடக்கி ஆலயத்தினுள் வந்து அமர்ந்தார். அதுவே இந்த நாகலிங்கம் சந்நிதி. இந்த நாகலிங்கத்தை வழிபட்டுவர, நாக தோஷங்கள் விலகும். நாகலிங்கத்தின் நேர் பார்வையில் சனி பகவான் சந்நிதி அமைந்துள்ளது. ஆகையால், சனியால் ஏற்படும் தொல்லைகள், தோஷங்கள், நாகலிங்கத்தை வழிபடுவதால் தீரும். திருமணம் ஆகாதவர்கள், சனிக்கிழமைகளில் இந்தச் சந்நிதியில் 9.30 - 10.30 மணியளவில் சிறப்பு பூஜை நடைபெரும் அந்தசமையத்தில் தீபமேற்றி வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்று ஐதீகம்.

ஒரே இடத்தில ஐம்பூத(பஞ்ச)தலங்கள், ஆறடி உயரத்தில் தென்முகக் கடவுள் ஆகியவையும் இத்தலத்தின் சிறப்புகளாகும். தொண்டை மன்னர்கள், பல்லவர்கள், விஜய நகர மன்னர்கள் மற்றும் சோழர்கள் இத்தலத்திற்கு திருப்பணிகள் செய்தனர். கோவிலின் உட்பிரகாரத்தில் உள்ள கன்னட, தெலுங்கு மொழி கல்வெட்டுகள் விஜயநகர மன்னர்களின் பங்களிப்பையும், 11 ஆம் மற்றும் 13 ஆம் நுற்றாண்டைச் சேர்ந்த சோழர்களின் குறிப்புகளும் இக்கோவிலின் வரலாற்றை பறைசாற்றுகின்றன. சித்திரை மாதத்தில் நடைபெறும் ஆற்றுத்திருவிழா, பங்குனி தெப்பல் திருவிழா, மாசி அப்பாவு - தோப்பு திருவிழா மற்றும் தை மாதம் பத்து நாட்கள் நடைபெறும் இரதசப்தமி பிரம்மோற்சவம் ஆகியவை சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெறும் கோலாகலங்களாகும். தினமும் நான்குகால பூஜைகள், பிரதோச சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன.

அரசியல்வாதிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "District Census Handbook : Tiruvannamalai" (PDF). Census of India. p. 30. பார்க்கப்பட்ட நாள் 21 June 2017.
  2. ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அரசானை வெளியீடு
  3. திருவண்ணாமலை மாவட்டத்தில் கல்வி மாவட்டங்களை 5 ஆக பிரிப்பு
  4. செய்யார் நெடுஞ்சாலை கோட்டம்
  5. செய்யார் சுகாதார மாவட்டம்
  6. திருவண்ணாமலை மாவட்டம் இணையதளம்
  7. செய்யார் பெயர்க்கான வரலாறு
  8. திருவத்திபுரம் நகராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  9. "Population Details". thiruvathipuram municipality. 2011. பார்க்கப்பட்ட நாள் 2012-12-29.
  10. 10.0 10.1 "Census Info 2011 Final population totals – Arani". Archived from the original on 2008-04-09. பார்க்கப்பட்ட நாள் 2021-05-03.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  11. திருவத்திபுரம் நகராட்சியின் மக்கள்தொகை
  12. செய்யார் வருவாய் கோட்டத்தின் வருவாய் வட்டங்கள் மற்றும் வருவாய் கிராமங்கள்
  13. திண்டிவனம் - நகரி ரயில்பாதை திட்டம் மந்தகதியில் நடைபெறும் திட்டப் பணி
  14. தினமணி நாளிதழ் - 06-08-2023 ஞாயிறு - இணைப்பு - கொண்டாட்டம் - பக்கம் 1
  15. செய்யார் வட்டத்தில் கல்வி

வெளி இணைப்புகள்[தொகு]