திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவாரம் பாடல் பெற்ற
திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):தென்னலக்குடி
பெயர்:திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருநீலக்குடி
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:நீலகண்டேசுவரர்
தாயார்:ஒப்பிலாமுலையாள்
தல விருட்சம்:ஐந்து இலைவில்வம், பலாமரம்
தீர்த்தம்:தேவிதீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருநாவுக்கரசர்
வரலாறு
தொன்மை:1000-2000 வருடங்களுக்கு முன்
அமைத்தவர்:சோழர்கள்

நீலகண்டேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசரால் தேவாரம் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரையில் அமைந்துள்ள சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் நீலகண்டேசுவரர், தாயார் ஒப்பிலாமுலையாள். இத்தலத்தின் தலவிருட்சமாக ஐந்து இலை வில்வ மரமும், பலாமரம் உள்ளன. தீர்த்தமாக தேவிதீர்த்தம் அமைந்துள்ளது.

அமைவிடம்[தொகு]

இத்தலம் தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருநீலக்குடி எனும் ஊரில் அமைந்துள்ளது. கும்பகோணம்- காரைக்கால் சாலையில் கும்பகோணத்தை அடுத்து உள்ளது. இத்தலம் பழங்காலத்தில் தென்னலக்குடி என்று அழைக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தலம் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 32ஆவது சிவத்தலமாகும்.

அமைப்பு[தொகு]

ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது கொடி மரம், பலிபீடம், நந்தி மண்டபம் உள்ளது. மூலவர் சன்னதியின் இடப்புறத்தில் இரு அம்மன் சன்னதிகள் உள்ளன. முதல் சன்னதியில் தவக்கோலம்மையும், இரண்டாவது சன்னதியில் அழகாம்பிகையும் உள்ளனர். இருவர் சன்னதியின் முன்பாகவும் பலிபீடமும், நந்தியும் உள்ளன. திருச்சுற்றில் சண்டிகேஸ்வரி சன்னதி உள்ளது.கோயிலின் எதிரே கோயில் குளம் உள்ளது. முன் மண்டபத்தில் மார்க்கண்டேயர், நால்வர், சூரியன், பைரவர் உள்ளனர். மண்டபத்தின் வலப்புறம் பிரம்மலிங்கத்தைக் கொண்ட முக்தி மண்டபமும், இடப்புறம் நடராஜர் சன்னதியும் நவக்கிரக சன்னதியும் உள்ளன. மூலவர் கருவறைக்கு முன்பாக நந்தி, பலிபீடம் காணப்படுகிறது. வெளியே வலப்புறம் நர்த்தன விநாயகரும் இடப்புறம் முருகனும் உள்ளனர். கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி மட்டும் உள்ளார். உள் திருச்சுற்றில் வலப்புறம் வாகனங்கள் உள்ளன. அடுத்து கன்னிமூலை கணபதி மற்றும் மார்க்கண்டேயர் சன்னதி, பாலசுப்ரமணியர் சன்னதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் சன்னதி, காசி விசுவநாதர் விசாலாட்சி சன்னதி, சரஸ்வதி சன்னதி, மகாலட்சுமி சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. வெளிச்சுற்றில் துர்க்கையம்மன் சன்னதி உள்ளது.சூரியனை மையமாக வைத்து அனைத்து கோள்களின் இயக்கம் நடைபெறுவதால் வான சாத்திர அடிப்படையில் இக்கோயிலின் நவக்கிரக அமைப்பு உள்ளது என்று தெரிவித்தனர்.

பாடியோர்[தொகு]

திருநாவுக்கரசர் இத்தலப்பெருமானைப் பின்வருமாறு போற்றிப் பாடுகிறார்.
வைத்த மாடும் மனைவியும் மக்கள்நீர்
செத்த போது செறியார் பிரிவதே
நித்த நீலக் குடியர னைந்நினை
சித்த மாகிற் சிவகதி சேர்திரே

திருநீலக்குடி சப்தஸ்தானம்[தொகு]

திருநீலக்குடி சப்தஸ்தானத்தில் திருநீலக்குடி, இலந்துறை, ஏனாதிமங்கலம், திருநாகேஸ்வரம், திருபுவனம், திருவிடைமருதூர் மற்றும் மருத்துவக்குடி ஆகிய ஏழூர்த் தலங்கள் அடங்கும்.[1]

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

தினமலர்க் கோயில்கள் தளம்

மேற்கோள்கள்[தொகு]

  1. ஏழுர்த் திருவிழாக்கள், முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002

படத்தொகுப்பு[தொகு]