கூறைநாடு புனுகீஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூறைநாடு புனுகீஸ்வரர் கோயில்
புவியியல் ஆள்கூற்று:11°05′43″N 79°38′38″E / 11.095397°N 79.643824°E / 11.095397; 79.643824
பெயர்
பெயர்:கூறைநாடு புனுகீஸ்வரர் கோயில்
அமைவிடம்
ஊர்:மயிலாடுதுறை
மாவட்டம்:மயிலாடுதுறை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:புனுகீஸ்வரர்
தாயார்:சாந்தநாயகி

புனுகீஸ்வரர் கோயில், தமிழ்நாட்டில், மயிலாடுதுறையில் கூறைநாடு என்னுமிடத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இத் தலம் அமைந்துள்ள கூறைநாடு, கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் மயிலாடுதுறை நகருக்குச் செல்லும் முன்பாக உள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 34 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 11°05'43.4"N, 79°38'37.8"E (அதாவது, 11.095397°N, 79.643824°E) ஆகும்.

அமைப்பு[தொகு]

அழகான ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது முன்மண்டபத்தில் கொடி மரம் உள்ளது. கொடி மரத்தை அடுத்து, பலிபீடமும், நந்தியும் உள்ளன. கோயில் வளாகத்தின் வலப்புறம் முதலில் அம்மன் சன்னதி உள்ளது. கருவறையைச் சுற்றி வரும்போது சண்டிகேஸ்வரி சன்னதியைக் காணலாம். அம்மன் சன்னதியின் முன்பாக பலிபீடமும், நந்தியும் உள்ளன. அம்மன் சன்னதி அருகே அலங்கார மண்டபமும், பள்ளியறையும் உள்ளன. கருவறைக்கு முன் உள்ள மண்டபத்தின் வழியாக கருவறையை வெளியில் சுற்றி வரும்போது வரத விநாயகர், அனுமார், சோமாஸ்கந்தர், ஐயப்பன், 63 நாயன்மார்களில் ஒருவரான நேசநாயனார், சுப்ரமணியர் ஆகியோர் சன்னதிகள் உள்ளன. திருச்சுற்றில் சூரியன், பைரவர், கீழக்குமரர் எனப்படும் சுப்ரமணியர் உள்ளனர். அருகே நவக்கிரக சன்னதி உள்ளது. அடுத்து 63 நாயன்மார்கள் உள்ளனர். கருவறை கோஷ்டத்தில் பிரம்மா, அடிமுடி காணா அண்ணல், தட்சிணாமூர்த்தி, விநாயகர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. வெளிப்பிரகாரத்தில் சனீஸ்வரன், நந்தி பலிபீடத்தை முன்னர் கொண்டு அமைந்துள்ள லிங்கத்திருமேனி, விநாயகர் சிற்பங்கள் உள்ளன. தற்போது (சூன் 2016) கோயிலில் திருப்பணி நடைபெற்றுவருகிறது.

இறைவன், இறைவி[தொகு]

இத்தலத்தில் கோயில் கொண்டுள்ள இறைவன் புனுகீசுவரர். இறைவி சாந்தநாயகி.

மயிலாடுதுறை சப்தஸ்தானம்[தொகு]

மயிலாடுதுறையில், திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான ஐயாறப்பர் கோவிலில் நடைபெறும் சப்தஸ்தான திருவிழாவில் பங்கேற்கும் ஏழு சிவன் கோயில்களுள் இக்கோயிலும் ஒன்றாகும்.

பங்கேற்கும் பிற கோயில்கள்

இவ்வேழு திருக்கோவில்களின் சுவாமிகளும் (ஏழூர் தெய்வங்கள்) மயூரநாதர் கோவிலில் சங்கமிக்கும் சப்தஸ்தான விழா ஆண்டுதோறும் மயிலாடுதுறையில் நடைபெறுகிறது[1].

மேற்கோள்[தொகு]

  1. மயிலாடுதுறையில் சப்தஸ்தான பெருவிழா 17.4.2013, தினமணி