இராசமோகன் காந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜ்மோகன் காந்தி
Rajmohan Gandhi
ராஜ்மோகன் காந்தி (1960)
மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர்[1]
பதவியில்
1990-92
தொகுதிஉத்தரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு7 ஆகத்து 1935 (1935-08-07) (அகவை 88)[2]
புது தில்லி, இந்தியா
அரசியல் கட்சிஜனதா தளம்
பிற அரசியல்
தொடர்புகள்
ஆம் ஆத்மி கட்சி
துணைவர்உசா காந்தி
பிள்ளைகள்2
பெற்றோர்(s)தேவதாஸ் காந்தி
இலட்சுமி காந்தி
வேலைவாழ்க்கை வரலாற்று ஆசிரியர், பத்திரிக்கையாளர்
விருதுகள்பன்னாட்டு மனிதநேய விருது (மனித உரிமை)
இணையத்தளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

ராஜ்மோகன் காந்தி (பிறப்பு: 7 ஆகத்து 1935)[2] ஒரு வாழ்க்கை வரலாற்று ஆசிரியரும், தெற்காசிய மற்றும் மத்திய கிழக்கு பற்றிய படிப்புக்கான ஆய்வுப் பேராசிரியரும் ஆவார். இவர் அமெரிக்காவில் இலினொய் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். இந்திய தொழில்நுட்பக் கழகம் காந்திநகரில் உள்ளுறை அறிஞராகவும் உள்ளார். இவற் மகாத்மா காந்தியின் மகன்-வழிப் பெயரனும், சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரியின் மகள்-வழிப் பெயரனும் ஆவார்.

இளமைக்கால வாழ்க்கை[தொகு]

இவரது தந்தையும், மகாத்மா காந்தியின் மகனுமான தேவதாஸ் காந்தி, ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் மேலாண் ஆசிரியராக இருந்தார். ராஜ்மோகன் தில்லியில் புனித இசுடீவன் கல்லூரியில் பயின்றார். இவரது தாழ்வழித் தாத்தா இராசாசி, மவுண்ட்பேட்டன் பிரபுவை அடுத்து இந்தியாவின் இரண்டாவது தலைமை ஆளுநராகப் பணியாற்றியவரும், மகாத்மா காந்தியிடம் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களில் ஒருவரும் ஆவார்.

கல்வி, செயற்பாட்டாளர் பணிகள்[தொகு]

ராஜ்மோகன் காந்தி ‘மாற்றத்திற்கான முனையம்’ (Initiatives of Change) என்ற அமைப்புடன் 1956 இல் இருந்து இணைந்து, அரை நூற்றாண்டு காலமாக அவ்வமைப்பின் முயற்சிகளான நம்பிக்கை-உருவாக்குதல், நல்லிணக்கம், மக்களாட்சி மற்றும் ஊழலுக்கும் சமத்துவமின்மைக்கும் எதிரான போராட்டங்கள் ஆகியவற்றில் பணியாற்றி உள்ளார்.

1960கள் மற்றும் தொடக்க 1970களில், ‘மாற்றத்திற்கான முனையம்’ என்ற அமைப்பின் 'ஆசியப் பீடபூமி’ என்ற பெயரிலான மாநாட்டு மையத்தை மேற்குமலைத் தொடரில் உள்ள பஞ்சகனியில் அமைப்பதில் முதன்மைப் பங்கு வகித்தார்.[3] இம்மையம் இந்தியத் துணைகண்டத்தில் சூழழியல் பங்களிப்புகளுக்காக நன்கு அறியப்பட்ட அமைப்பாகும். 1975-1977 இடைப்பட்ட காலத்தில் நெருக்கடி நிலையின் போது மனித உரிமைகளுக்காக தனிப்பட்ட முறையிலும் தனது வார இதழான, ஹிம்மத் இன் மூலமும் செயல்பட்டார். ஹிம்மத் 1964 முதல் 1981 வரை மும்பையில் இருந்து பதிப்பிக்கப்பட்டு வந்தது.

இரு கிளர்ச்சிகளின் கதை: 1857 இந்திய விடுதலைப் போர் மற்றும் அமெரிக்க உள்நாட்டுப் போர் என்ற இவரது புத்தகம், 19-ஆம் நூற்றாண்டில் உலகின் எதிரெதிர் நிலப்பகுதிகளில் சற்றேறத்தாழ ஒரே காலகட்டத்தில் நடந்த இரு போர்களை ஆராய்கிறது. இவரது முந்தைய புத்தகமான, மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகமான மோகன்தாசு: ஒரு மனிதன், அவரது மக்கள் மற்றும் ஒரு பேரரசின் உண்மைக் கதை இந்திய வரலாற்று காங்கிரசு அமைப்பிடமிருந்து 2007-ஆம் ஆண்டில் ஈராண்டுக்கொருமுறை வழங்கப்படும் மதிப்புமிக்க விருதைப் பெற்றது. இப்புத்தகம் பல நாடுகளில் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

2002 இல், ராஜ்மோகன் காந்தி சாகித்திய அகாதமி விருதை ராஜாஜியின் (1878–1972) வாழ்க்கை வரலாற்றை ராஜாஜி: ஒரு வாழ்க்கை (Rajaji: A Life) எனும் நூலுக்காகப் பெற்றார்.[4]

இவற்றை விட, கான் அப்துல் கப்பார் கான்: வன்முறையற்ற பஷ்தூன் பாதுஷா; பழிவாங்கல், நல்லிணக்கத்தை மீட்டல்: தெற்காசிய வரலாற்றைப் புரிந்துகொள்ளுதல்; வல்லபாய் பட்டேலின் வாழ்க்கை வரலாற்று நூலான பட்டேல்: ஒரு வாழ்க்கை; மற்றும் எட்டு உயிர்கள்: இந்து-முஸ்லிம் மோதல் பற்றிய ஆய்வு ஆகிய நூல்களை எழுதினார். துவக்க காலங்களில் இவர் எழுதிய புத்தகங்களுள் ஒன்றான நல்ல படகோட்டி: காந்தியின் ஒரு சித்திரம், சீன மொழியில் 2009-ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் வெளியிடப்பட்டது. இவர் எழுதிய பஞ்சாப் என்ற நூல், ஔரங்கசீப்பின் இறப்புக்குப் பின்னிருந்து இந்தியப் பிரிவினை வரையிலான காலத்திய பிரிவுபடாத பஞ்சாபின் வரலாற்றைப் பேசுகிறது.[5]

இலினொய் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் முன்னர் புது தில்லியில் இயங்கும் ஆய்வமைப்பான, “கொள்கை ஆய்வு மையத்தில்” (Centre for Policy Research) ஆய்வுப் பேராசிரியாகப் பணியாற்றினார். 1985 முதல் 1987 வரை, இந்தியன் எக்சுபிரசு பத்திரிகையின் பதிப்பாசிரியாராகச் சென்னையில் இருந்து பணியாற்றினார். 2004 இல் பன்னாட்டு மனிதநேய விருதைப் பெற்றார். 1997 இல், கனடாவின் கால்கரி பல்கலைக்கழகத்தில் இருந்து சட்டத்துறையில் மதிப்புறு முனைவர் பட்டமும், தோக்கியோ ஒபிரின் பல்கலைக்கழகத்தில் மெய்யியலில் மதிப்புறு முனைவர் பட்டமும் பெற்றார். ராஜ்மோகன் தற்போது செருமனியில் இருந்து வழங்கப்படும் நியூரம்பெர்க் சர்வதேச மனித உரிமை விருதுக்கு விருதாளர்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் ஒருவராகவும், குருகிராம் ’உரையாடல் மற்றும் நல்லிணக்கத்தை மீட்டல் மையத்தின்' இணைத் தலைவராகவும்' உள்ளார்.[4]

அரசியல்[தொகு]

1989 மக்களவைத் தேரதலில், ராஜீவ் காந்தியை எதிர்த்து அமேதி தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். 1990-92 இல் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் பங்கேற்ற இந்தியக் குழுவிற்குத் தலைமை தாங்கினார். பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுக்கான நாடாளுமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டுக்குழுவை ஒழுங்கு செய்பவராக மக்களைவை மற்றும் மாநிலங்களையில் செயலாற்றினார்.

21 பிப்ரவரி 2014 இல் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.[6] 2014 பொதுத்தேர்தலில் கிழக்கு தில்லி தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார்.[7]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

ராஜ்மோகன் காந்தியின் மனைவியின் பெயர் உஷா. இவர்களுக்கு சுப்ரியா, தேவதத்தா ஆகிய குழந்தைகள் உள்ளனர்.[8]

நூல்கள்[தொகு]

  • ஏன் காந்தி இன்றும் முக்கியாகிறார்? : காந்தியவாததின் இன்றைய மதிப்பீடு
  • தேசத்தைக் கட்டமைத்த தலைவர்களைப் புரிந்து கொள்ளுதல்: இந்தியக்குடியரசின் ஆரம்பகாலங்களை பற்றிய தேடுதல்
  • பஞ்சாப்: ஔரங்கசீப் முதல் மவுண்ட்பேட்டன் வரை ஒரு வரலாறு
  • இரு கிளர்ச்சிகளின் கதை: 1857 இந்தியச் சுதந்திரப் போர் மற்றும் அமெரிக்க உள்நாட்டுப் போர்
  • மோகன்தாசு: ஒரு மனிதன், அவரது மக்கள் மற்றும் ஒரு பேரரசின் உண்மைக் கதை
  • கான் அப்துல் கப்பார் கான்: வன்முறையற்ற பஷ்தூன் பாதுஷா
  • முஸ்லிம் மன நிலையைப் புரிந்துகொள்ளுதல் (Understanding the Muslim Mind)
  • ராஜாஜி: ஒரு வாழ்க்கை
  • பழிவாங்கல் & நல்லிணக்கத்தை மீட்டல்: தெற்காசிய வரலாற்றைப் புரிந்துகொள்ளுதல்
  • நல்ல படகோட்டி: காந்தியின் ஒரு சித்திரம்
  • பட்டேல்: ஒரு வாழ்க்கை
  • எட்டு உயிர்கள்: இந்து-முஸ்லீம் மோதல் பற்றிய ஆய்வு (Eight Lives: A Study of the Hindu-Muslim Encounter)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rajya Sabha members biographical sketches 1952 - 2003" (PDF). மாநிலங்களவை. பார்க்கப்பட்ட நாள் 4 September 2017.
  2. 2.0 2.1 "Professor Rajmohan Gandhi". Jamnalal Bajaj Foundation. Jamnalal Bajaj Foundation. Archived from the original on 13 March 2016. பார்க்கப்பட்ட நாள் 4 January 2017.
  3. "Initiatives of Change". www.in.iofc.org. Archived from the original on 23 February 2007. பார்க்கப்பட்ட நாள் 2017-10-21.
  4. 4.0 4.1 See "Discussion of Modern South India: A History from the 17th Century to Our Times" பரணிடப்பட்டது 2020-09-25 at the வந்தவழி இயந்திரம்
  5. "Life of letters". The Hindu. 26 October 2012.
  6. "Mahatma's grandson Rajmohan Gandhi joins AAP, will contest from east Delhi". IBN Live. 21 February 2014 இம் மூலத்தில் இருந்து 26 பிப்ரவரி 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140226142618/http://ibnlive.in.com/news/mahatmas-grandson-rajmohan-gandhi-joins-aap-may-contest-from-delhi/453374-37-64.html. 
  7. "Rajmohan Gandhi to lead AAP battle in Delhi East". The Hindu. 2014-02-27. http://www.thehindubusinessline.com/news/politics/aap-to-field-rajmohan-gandhi-from-east-delhi/article5732494.ece. 
  8. "Short Biography -Rajmohan Gandhi". பார்க்கப்பட்ட நாள் 22 February 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராசமோகன்_காந்தி&oldid=3657927" இலிருந்து மீள்விக்கப்பட்டது