இராமர்
இராமர் என்பது கி.மு 4 ஆம் நூற்றாண்டுகளளவில் வால்மீகி எனும் முனிவரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் இதிகாசத்தின் முக்கியக் கதாபாத்திரமாகும். இந்த கதாபாத்திரத்திரத்தைக் கடவுளாக இந்து சமயத்தவர்களில் ஒருசாரர் நம்பிக்கை கொண்டுள்ளனர். குறிப்பாக விஷ்ணுவின் அவதாரங்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். ஆனாலும் இராமனை கடவுளாகக் கருதாத இந்துக்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை "இராமன்" என்பவன் கடவுள் அல்ல என்றும், அவன் ஒரு வட இந்திய அரசன் மட்டுமே என்றும், அவன் ஆரிய இன மரபைக் கொண்டவன் என்றும், வட இந்திய ஆரிய அரசனான இராமன் தென்னிந்தியாவின் படைகளின் உதவியுடன் இலங்கையின் திராவிட இன மரபைச் சார்ந்த அரசனான இராவணன் உடன் போரிட்ட வரலாறே என்ற கருத்தும் நிலவுகின்றன[ஆதாரம் தேவை]. இராமாயணம் இதிகாசத்தை எழுதியவர் வட இந்தியரான வால்மீகி என்பதால், அவர் ஆரியர் மரபினரை உயர்த்தி, இராமனைக் கடவுளாகவும், திராவிட மரபினரை தாழ்த்தி, இராவணனை அசுரனாகவும் எழுதப்பட்டுள்ளதாலேயே பெரும்பான்மை இந்திய மக்களிடையே இராமன் கடவுள்களில் ஒருவன் எனும் மனநிலை ஆழ்மனங்களில் புதைந்து போயுள்ளதாக கருதப்படுகிறது[ஆதாரம் தேவை]. உண்மையிலேயே ராமன் என்ற பெயரில் மன்னன் ஒருவன் இந்திய வராற்றில் இருந்தானா என்பது பற்றி பல கருத்து வேறுபாடுகளும் உண்டு.
பொருளடக்கம் |
[தொகு] கம்ப இராமாயணம்
கம்பரால் தமிழில் இயற்றப்பட்ட இராமாயணம் கம்ப இராமாயணம் ஆகும். இது சிறந்ததோர் தமிழ் இலக்கியமாகும். கம்பரின் இராமாயணம் வால்மீகி இராமாயணத்திலிருந்து பல இடங்களில் வேறுபடுகிறது.
[தொகு] இராமாயணக் கதை
தசரதன் என்ற அரசன் அயோத்தியை அரசாண்டு வந்தான். அவனுக்கு கோசலை, கைகேயி, சுமத்திரை என்ற மூன்று மனைவியர் உண்டு. எல்லா செல்வமும் இருந்தும் குழந்தைச் செல்வம் மட்டும் இல்லை. அதனால் தசரதன் பெரிதும் வருந்தினான். யாகங்கள் பல செய்தான். அதன் பயனாக அவன் மனைவியர் மூவரும் கருவுற்றனர். தசரதனின் முதல் மனைவி கோசலை ஆவாள். அவள் வயிற்றிலிருந்து திருமால் இராமராகப் பிறந்தார். இரண்டாம் மனைவி கைகேயி வயிற்றில் பரதன் பிறந்தான். மூன்றாம் மனைவி சுமத்திரை வயிற்றில் இலக்குவன், சத்துருக்கன் என்ற இருவரும் பிறந்தனர். தசரதன் தம் மக்கள் நால்வரையும் குலகுருவாகிய வசிட்டரிடம் கல்வி கற்கச் செய்தான். அவர்கள் நால்வரும் கல்வி கேள்விகளிலும், போர்ப்பயிற்சிகளிலும் சிறந்து விளங்கினர்.
விசுவாமித்திரர் என்ற முனிவர் காட்டில் வேள்வி செய்தார். தாடகை முதலான அரக்கர்கள் அவர் வேள்விக்கு இடையூறு செய்தனர். விசுவாமித்திரர் தசரதனிடம் வந்தார். தம் வேள்வியைக் காக்கும் பொருட்டு இராமனை அனுப்புமாறு கேட்டார். தசரதர் இராமனுடன் இலக்குவனையும் அனுப்பி வைத்தான். இராமரும், இலக்குவனும் தாடகை முதலாய அரக்கர்களை வதம் செய்து முனிவர் வேள்வியைக் காத்தனர். வேள்வியும் சிறந்த முறையில் முடிந்தது.
பிறகு விசுவாமித்திரர் இராமனையும் இலக்குவனையும் அழைத்துக் கொண்டு மிதிலை சென்றார். சனகன் என்ற மன்னன் மிதிலையை ஆண்டு வந்தான். அவனுக்குச் சீதை என்ற ஓர் அழகிய மகள் இருந்தாள். தம்மிடம் உள்ள வில்லை வளைப்பவருக்குச் சீதையைத் திருமணம் செய்து கொடுப்பதாக அவன் அறிவித்திருந்தான்.
மன்னர்கள் பலர் அவ்வில்லை வளைக்க முயன்றனர், முடியவில்லை. இராமர் அவ்வில்லை வளைத்து முறித்தார். சனகன் மகிழ்ந்து தன் மகள் சீதையை இராமருக்கு திருமணம் செய்து கொடுத்தான். திருமணம் முடிந்து வந்த இராமருக்கு முடிசூட்ட எண்ணினான் தசரதன். அதற்கு நாளும் குறித்து விட்டான். எல்லா ஏற்பாடுகளும் தயாராகி விட்டன. கைகேயியின் தாதி கூனி ஆவாள். அவள் கைகேயியின் மகன் பரதனுக்கு முடிசூட்ட எண்ணினாள். அதனை கைகேயியிடம் தெரிவித்தாள். முதலில் கைகேயி ஒப்புக் கொள்ளவில்லை. பிறகு பலவிதமாகச் சொல்லிக் கூனி கைகேயியின் மனத்தை மாற்றிவிட்டாள். கைகேயி, தசரதனிடம் பிடிவாதம் செய்து தம்மகன் பரதன் நாடாளும்படியாகவும், இராமர் பதினான்கு ஆண்டு காடாளும்படியாகவும் உறுதிமொழி வாங்கி விட்டாள். தந்தை சொற்படி இராமர் உடனே காட்டிற்குச் சென்றார். சீதையும், இலக்குவனும் உடன் சென்றனர். அதனை அறியாத தசரதன் உயிர் துறந்தான்.
கேகய நாட்டிற்குச் சென்ற பரதன் அப்பொழுதுதான் திரும்பி வந்தான். வந்தவுடன் நடந்ததை அறிந்தான். மிகவும் வருந்தினான். தன் தாயை வெறுத்தான். தந்தைக்குரிய இறுதிக் கடன்களைச் செய்தான். உடனே இராமரை அழைத்து வரக் காட்டிற்குச் சென்றான். காட்டிற்குச் சென்ற பரதன், இராமரைக் கண்டு வணங்கினான். திரும்பி வந்து நாடாளும்படி வேண்டினான். தந்தை சொற்படி பதினான்கு ஆண்டு கழித்து வருவதாகவும், அதுவரை பரதனை நாட்டை ஆளும்படி இராமர் கூறினார். பரதன் இராமரின் பாதுகைகளைப் பெற்று வந்து, அரசப் பிரதிநிதியாக ஆண்டு வந்தான்.
இலங்கையை ஆண்டு வந்த இராவணன் என்னும் அரக்கன் தங்கை சூர்ப்பனகை ஆவாள். அவள் காட்டில் வாழும் இராம இலக்குவனரைக் கண்டாள். தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி அவர்களைக் கட்டாயப்படுத்தினாள். இலக்குவன் கோபம் கொண்டு சூர்ப்பனகையின் மூக்கை அறுத்து எறிந்தான். சூர்ப்பனகை அழுது கொண்டு இராவணனிடம் சென்றாள். நடந்த செய்திகளைச் சொல்லாமல், `இராமன் மனைவி சீதையை உனக்காக தூக்கி வர முயன்றேன். அவன் தம்பி இலக்குவன் என் மூக்கை அறுத்து விட்டான்' என்று கூறி அழுதாள். இராவணன், சூர்ப்பனகையைச் சமாதானப்படுத்தி அவர்களைத் தண்டிப்பதாகவும் கூறினான்.
இராவணன், மாரீசன் என்பவனை மாயமானாக அனுப்பி இராம இலக்குவரைத் தனியாகப் பிரித்தான். பிறகு, சீதை தனித்து இருப்பதை அறிந்து பர்ணசாலையோடு பெயர்த்துச் சீதையை தூக்கிக் கொண்டு சென்றான். வழியில் கழுகு அரசனாகிய சடாயு தடுத்தான். அவனை வெட்டி வீழ்த்தி விட்டு இராவணன் இலங்கையில் உள்ள அசோக வனத்தில் சீதையை மறைத்து வைத்தான். திரும்பி வந்த இராம, இலக்குவர் சீதையைக் காணாமல் தேடினர். வருந்தி வந்து கொண்டிருக்கும்பொழுது குற்றுயிராய்க் கிடந்த சடாயு என்ற கழுகு அரசன் உண்மையைக் கூறிவிட்டு உயிர் துறந்தான். தொடர்ந்து தேடி வரும்பொழுது சுக்ரீவனைச் சந்தித்தனர்.
சுக்ரீவன் குரங்குகளுக்கு அரசனாகிய வாலியின் தம்பி ஆவான். வாலி தன்னை துரத்தி விட்டதாகக் கூறினான் சுக்ரீவன். உடனே இராமர் வாலியைக் கொன்று சுக்ரீவனுக்குப் பட்டம் கட்டினார். பிறகு சுக்ரீவனும் அனுமாரும் குரங்குகளும், இராமருக்குத் துணையாக வந்தனர். இலங்கையில் சீதை இருக்கும் இடத்தை அறிந்து வருமாறு, இராமர் அனுமாரை அனுப்பினார். உடனே அனுமார் கடலைத் தாண்டி இலங்கையை அடைந்தார். எங்கும் தேடினார். கடைசியாக அசோக வனத்தில் சீதை இருப்பதைக் கண்டார். இராமர் கூறிய செய்திகளைக் கூறிவிட்டு திரும்பி வந்தார். இராமரிடம் வந்து சீதை இருக்கும் இடத்தைத் தெரிவித்தார்.
அனைவரும் கடலைக் கடந்து இலங்கைக்குச் செல்ல வேண்டும். எனவே குரங்குகள் கல்லையும் மரத்தையும் கொண்டு கடலில் பாலம் கட்டின. அந்த பாலத்தின் வழியாக அனைவரும் கடலைக் கடந்து இலங்கைக்குச் சென்றனர்.
இராவணனுக்குக் கும்பகருணன், வீடணன் என்ற இரண்டு தம்பியர் உண்டு. அவருள் வீடணன் நல்ல அறிஞன். அவன் இராவணனுக்குப் பல அறிவுரைகள் கூறினான். சீதையைக் கொண்டு போய்விட்டு விடும்படியும் சமாதானமாக வாழும்படியும் கூறினான். இராவணன் மறுத்து விட்டான். எனவே, வீடணன், இராவணனை விட்டுவிட்டு இராமர் பக்கம் வந்து சேர்ந்து கொண்டான்.
பிறகு, இராமரின் படைகளுக்கும், இராவணனின் படைகளுக்கும் போர் தொடங்கியது. போரில் இராவணன் தம்பி கும்பகர்ணன் மாண்டான். இராவணன் மகன் இந்திரசித்தும் மாண்டான். படைவீரர்கள் பலரும் மாண்டனர். கடைசியாக இராமருக்கும் இராவணனுக்கும் போர் கடுமையாக நடந்தது. முடிவில் இராமர், இராவணனைக் கொன்றார். அதனைக் கண்ட தேவர்கள் மகிழ்ந்து ஆரவாரித்தனர். இலங்கைக்கு அரசனாக வீடணனுக்குப் பட்டம் கட்டினார் இராமர்.
இராமர் சீதையை மீட்டுக் கொண்டு அயோத்திக்குத் திரும்பி வந்தார். பரதன் இராமரிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்தான். ராமர் அயோத்திக்கு அரசராக முடிசூட்டிக் கொண்டார். தம்பியர் துணையுடன் சிறந்த முறையில் நாடாண்டார். மக்கள் அனைவரும் எல்லா நலனும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
[தொகு] சங்க இலக்கியத்தில் இராமன்
இராமனைப்பற்றி இரண்டு சங்கப்பாடல்கள் சில செய்திகளைத் தருகின்றன.
பாண்டியன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த தொன்முதுகோடி என்னும் தனுஷ்கோடியில் கடலோரத்தில் இருந்த ஆலமரத்தடியில் அமர்ந்துகொண்டு இராமன் மறை ஓதிக்கொண்டிருந்தான். இந்த நிகழ்ச்சி இலங்கை வெற்றிக்குப் பின்னர் நிகழ்ந்தது. அவனது மறையொலியைக் கேட்டு அம்மரத்தில் இருந்த பறவைகளும், அவனது படைகளும் சிறிதும் ஒலி எழுப்பாமல் கேட்டுக்கொண்டிருந்தன.[1]
சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி தன்னைப் பாடிய புலவர் ஊன்பொதி பசுங்குடையாருக்கு பலவகையான அணிகலன்களைப் பரிசாக வழங்கினான். புலவரின் சுற்றம் அந்த அணிகலன்களை முன்பின் பார்த்ததில்லை. எனவே அவர்கள் விரலில் அணியவேண்டுவனவற்றைக் காதிலும், காதில் அணியவேண்டுவனவற்றை விரலிலும், இடுப்பில் அணியவேண்டுவனவற்றைக் கழுத்திலும், கழுத்தில் அணியவேண்டுவனவற்றை இடுப்பிலும் அணிந்துகொண்டனராம். இது எப்படி இருந்தது என்றால் இராமனுடன் காட்டுக்கு வந்திருந்த சீதையை இராவண அரக்கன் கொண்டுசென்றபோது அவள் தன் அணிகலன்களை ஒவ்வொன்றாகக் கழற்றி எறிந்துகொண்டு சென்றதைக் கண்ட குரங்குகள் எங்கு அணிந்துகொள்வது எனத் தெரியாமல் அணிந்துகொண்டதைப் போல இருந்ததாம்.[2]
[தொகு] திராவிட அரசியலும் இராமனும்
திராவிட இயக்கம் வளர்ச்சியடைந்து வந்த காலகட்டத்தில் இராமன் திராவிட இனத்தை அழித்து ஆரிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்திய மன்னனாகவே சுயமரியாதை இயக்கத்தாரால் சித்தரிக்கப்பட்டார். மேலும் ராமனை குடிகாரன் என்றும், கோழை என்றும், மாமிசம் தின்பவன் என்றும், ராமனின் மனைவி கற்பு கெட்டவள் என்றும் மேற்கோள்களுடன் பரப்பி வந்தனர்.
[தொகு] ராமன் குடிகாரன் என்பதற்கு எடுத்துரைத்த சான்றுகள்
ராமன் குடிகாரன் என்று வால்மீகி இராமாயணத்தில் கூறப்பட்டிருக்கிறது.
- வால்மீகி சருக்கம் 4 ஸ்லோகங்கள் 7,33
- வால்மீகி அயோத்தியா கண்டம் 2,21,57,99
- வால்மீகி கிஷ்கிந்தா கண்டம் 18,22,42
[தொகு] சீதை குடித்தத்தாக எடுத்துரைத்த சான்றுகள்
நாடு மீண்ட பின்னர் அசோகவதிகா என்ற அந்தப்புர உத்யானவனத்தில், ராமன் சுராகிரியா என்ற மதுவை கொடுக்கிறான். வாசனை மணக்கும் ருசியான மதுவை சீதையும் வாங்கிக் குடித்தாள்[3]அயோத்தி ராசபாட்டைகளில் எப்போதும் சுவைமிக்க கள்ளின் வாசனை வீசிக்கொண்டிருக்குமாம்? [4]
[தொகு] ராமன் கோழை என்பதற்கு எடுத்துரைத்த சான்றுகள்
ராமா! நீ வேசத்தில் ஆணே ஒழிய உன்னிடம் ஆண்மை இல்லை, வீரமில்லை, தேஜசுமில்லை. எந்தவித சந்தியும் இல்லை என்று சீதை இராமனைப் பார்த்து கூறுவதாக வால்மீகி ராமாயணம் கூறுகின்றது
[தொகு] ராமன் மாமிசம் தின்றான் என்பதற்கு எடுத்துரைத்த சான்றுகள்
ஐந்து நகம் உள்ள பிராணிகளுக்குள் முள்ளம் பன்றியும், நாயைக் கொல்லும் பன்றியும், முயலும், ஆமையும், உடும்பும், பிராமணர்கள் புசிக்க தகுந்தவை. அப்படி இருக்க என்னை ஏன் கொன்றாய் என்று வாலி ராமனைப் பார்த்து கேட்டார்[5]
காட்டு பன்றி, ரிஷ்யம், பிருஷதம், மகாகுரு என்ற பெரிய மிருகங்களையெல்லாம் கொன்று தின்றதாக[6] வால்மீகி இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது
[தொகு] மேற்கோள்கள்
- ↑
- வென்வேல் கவுரியர் தொன்முது கோடி,
- முழங்கிரும் பௌவம் இரங்கும் முன்றுறை
- வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த,
- பல்வீழ் ஆலம் போல,
- ஒலி அவிந்தின்றால் இவ் அழுங்கல் ஊரே. அகநானூறு -70
- ↑
- இலம்பாடு உழந்த என் இரும்பேர் ஒக்கல்,
- விரற்செறி மரபின செவித்தொடக்குநரும்,
- செவித்தொடர் மரபின விரற் செறிக்குநரும்,
- அரைக்கு அமை மரபின மிடற்று யாக்குநரும்,
- மிடற்கு அமை மரபின அரைக்கு யாக்குநரும்,
- கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை,
- வலித்த கை அரக்கன் வௌவிய ஞான்றை,
- நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்,
- செம்முகப் பெருங்கிளை இழை பொலிந்தாங்கு (அணிந்துகொண்டனர்) – புறநானூறு 378
- ↑ 7 வது கண்டம் சிலோகம் 18,22,42
- ↑ சருக்கம் 4-33-7
- ↑ அனந்த இராமாயணம், கிஷ்கிந்தா காண்டம் சருக்கம் 17
- ↑ வால்மீகி இராமாயணம், சருக்கம் 52,55,56
[தொகு] வெளி இணைப்புக்கள்
| இந்து மதம் | திருமாலின் பத்து அவதாரங்கள் | |
|---|---|
| மச்சம் | கூர்மம் | வராகம் | நரசிம்மர் | வாமனர் | பரசுராமர் | இராமர் | கிருஷ்ணர் | பலராமர் | கல்கி |
| வால்மீகியின் இராமாயணம் |
|---|
| கதை மாந்தர் |
| தசரதன் | கோசலை | சுமித்திரை | கைகேயி | சனகன் | மந்தரை | இராமர் | பரதன் | இலட்சுமணன் | சத்துருக்கன் | சீதை | ஊர்மிளா | குகன் | மாண்டவி | சுருதகீர்த்தி | விசுவாமித்திரர் | அகலிகை | சடாயு | சம்பாதி | அனுமன் | சுக்கிரீவன் | வாலி | விராதன் | அங்கதன் | சம்பவந்தன் | விபீடணன் | தாடகை | சூர்ப்பனகை | மாரீசன் | சுபாகு | கரன் | இராவணன் | கும்பகர்ணன் | மண்டோதரி | மாயாசுரன் | இந்திரசித்து | பிரகதத்தன் | அட்சயகுமாரன் | ஆதிக்கயன் | இலவன் | குசன் |
| மற்றையவை |
| அயோத்தி | மிதிலை | இலங்கை | சரயு | திரேத யுகம் | இரகுவம்சம் | இலட்சுமணன் கோடு | ஆதித்திய மனம் | ஓசாதிமலை | சுந்தர காண்டம் | புட்பக விமானம் | வேதவதி | வானரம்
|