பிரம்ம சூத்திரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இந்து சமயத்துக்கு அடிப்படையாக விளங்குவன வேதங்கள். வேதங்களின் இறுதிப்பகுதியாகவும், அவற்றின் சாரமாகவும் கருதப்படுபவை உபநிடதங்களாகும். நூற்றுக்கு மேற்பட்டனவாக உள்ள இந்த உபநிடதங்கள் பல்வேறு காலப்பகுதிகளில் உருவானதாலும், பலரால் இயற்றப்பட்டதாலும் இவற்றிலுள்ள தகவல்கள் ஒழுங்கின்றியும், சிதறிய நிலையிலும், பல சமயங்களில் ஒன்றுக்கொன்று முரணாகவும் தோன்றுவதால், இவற்றை வாசித்து விளங்கிக் கொள்வது மிகக் கடினமானது. இதனால் உபநிடதங்களில் சொல்லப்படுபவற்றை ஒழுங்கமைத்துச் சுருக்கி விளங்கவைக்கும் முயற்சியில் உருவானதே பிரம்ம சூத்திரம் என்னும் நூலாகும். பிரம்ம சூத்திரத்தை எழுதியவர் பாதராயணர் என்பவராவார்.
இந்து தத்துவங்களின்படி பிரம்மனாகிய பரம்பொருளை விளக்குவதற்காகச் சூத்திரங்கள் எனப்படும் நூற்பாக்களால் ஆனதால் இந்நூலுக்குப் பிரம்ம சூத்திரம் என்னும் பெயர் உண்டாயிற்று. வேதத்தின் இறுதிப் பகுதியாக அதாவது வேதத்தின் அந்தமாகக் கருதப்படும் உபநிடதங்களில் சாரமாக அமைந்திருப்பதன் காரணமாக இது வேதாந்த சூத்திரம் எனவும் அழைக்கப்படுவதுண்டு.
உபநிடதங்களுக்கு விளக்கமாக எழுந்த இந்தநூலும், அதன் சுருக்கம் காரணமாக அதன் உள்ளடக்கத்தைப் பல்வேறு விதமாகப் புரிந்து கொள்வதற்கு இடமளித்ததாகக் கூறப்படுகின்றது. இந்நூலுக்கு விளக்கமாக விரிவுரைகளை எழுதிய சங்கரர், இராமானுஜர், கௌதமர், மத்வர், ஸ்ரீகண்டர், பதஞ்சலி போன்றோர் இந் நூலின் உள்ளடக்கங்களுக்குத் தாங்கள் உணர்ந்துகொண்டபடி, வெவ்வேறு விதமான விளக்கங்களை அளித்ததன் மூலம், வேதாந்த தத்துவத்துக்கு வடமொழியில் தரிசனங்கள் எனப்படும் ஆறு வேறுபாடான தத்துவ நோக்குகள் உருவாயின.