ஆரண்ய காண்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


எவ்வித ஆயுத்தாலும் கொல்லபட இயலாத வரம் பெற்ற விராதனின் இரு கைகளை வெட்டிய இராமன், பெரிய குழியில் தள்ளி இலக்குமணன் உயிரோடு புதைத்தல்
சூர்ப்பனகையின் காதுகளையும், மூக்கையும் அரித்து கர்வபங்கப்படுத்தும் இலக்குவன்
இராமர் எய்திய அம்பால் தங்க மான் வடிவில் வந்த மாரீசன் இறத்தல்
ஜடாயுவின் சிறகுகளை வெட்டியெறியும் இராவணன்
கபந்தனின் கைகளை வெட்டும் இராம -இலக்குவணர்கள்
சபரி இராமருக்கு இலந்தைப் பழங்களை தரும் காட்சி

ஆரண்ய காண்டம் தசரதன், கைகேயிக்கு வழங்கிய வரத்தினால், இராமர் பதினான்கு ஆண்டு காடுறை வாழ்க்கைகாக வனம் செல்லும் போது, இலக்குவன் மற்றும் சீதை இராமருடன் செல்கின்றனர். இராம - இலக்குவனர்கள், காட்டில் சித்திரகூடத்தில் தங்கியிருக்கையில், அத்திரி - அனுசுயா முனி இணையர்களின் விருப்பப்படி, அரக்கர்களிடமிருந்து ரிஷிகளையும், வேள்விகளையும் காக்க வேண்டி தண்டகாரண்யம் பகுதியை அடைகின்றனர்.

விராதனுக்கு மோட்சம் அளித்தல்[தொகு]

விராதன் முற்பிறவியில் தும்புரு எனும் கந்தர்வர் ஆவான். குபேரனின் சாபத்தால் அரக்கனாகிக் தண்டகாரண்யம் காட்டில் திரிந்தது வாழ்ந்து, இராமாவதாரத்தின் போது இராமன் கையால் இறந்து, சாபவிமோசனம் பெறும் தன்மை இவனுக்கு இருந்தது. [1][2] சீதையுடன் இராம – இலக்குமணர்கள் தண்டகாரண்யத்தில் வாழ்ந்திருந்த போது விராதன், சீதையை கவர்ந்து சென்றான். இதனை கண்ட இராம -இலக்குமணர்கள் விராதனின் இரண்டு கைகளை வெட்டி, பெரிய குழி வெட்டி உயிருடன் புதைத்தனர்.[3]

அகத்தியர் மந்திர ஆயுதங்கள் வழங்குதல்[தொகு]

தண்டகாரண்யத்தில் வாழ்ந்த முனிவர்களுக்கு, அரக்கர்களின் தீமைகளிலிருந்து காக்க இராமன் அபயம் அளித்தார். அகத்தியரைச் சந்தித்த இராமருக்கு, மந்திர ஆயுதங்கள் வழங்கினார். அகத்தியர் அறிவரைப் படி, இராம, இலக்குவனர், சீதை பஞ்சவடி சென்றனர். அங்கு ஜடாயுவைச் சந்தித்து நட்பு பாராட்டினர். பஞ்சவடியில் இலக்குவன், இராமர் - சீதை தங்குவதற்கு குடிலை அமைத்தார்..

சூர்ப்பநகை கர்வ பங்கம்[தொகு]

பஞ்சவடியில் தங்கியிருந்த இராமனைக் கண்ட சூர்ப்பனகைக்கு, இராமனை அடைய விரும்பியது. சூர்ப்பனகையின் விருப்பத்தை இராமன் மறுத்ததால், இலக்குவனிடம் தன் காதலை கூறியது. சீதையின் பொருட்டு, இருவரும் தன் காதலை ஏற்கவில்லை எனக் கருதிய சூர்ப்பநகை, சீதையை விழுங்க முயற்சிக்கையில், இராமரின் ஆணைப்படி, இலக்குவன், சூர்ப்பனகையின் காதுகளையும், மூக்கையும் வாளால் வெட்டியது. இதனால் அவமானம் அடைந்த சூர்ப்பனகை, பழி தீர்க்க, இராவணனின் தம்பியர்களான கரன் மற்றும் தூஷணன் ஆகியவர்களிடம், சீதையைக் கவர்ந்து, இராம - இலக்குவர்களை கொல்லத் தூண்டினாள்.

கர - தூஷணர்களை வதைத்தல்[தொகு]

இராம - இலக்குவனர்களை கொல்ல பெரும்படையுடன் வந்த கரன், தூஷணன் ஆகிய அரக்கர்களை இராமர் கொன்றார்.

மாரீசன் வதைப்படல், சீதை கவரப்படல்[தொகு]

கர-தூஷணர்களின் வதையால், நிறைவேறாத தன் நோக்கத்தை சூர்ப்பனகை, இலங்கைச் சென்று, இராவணனிடம், சீதையின் பேரழகையும், மனிதப் பிறவிகளான இராம - இலக்குவனர்கள் தமக்களித்த தண்டனையையும் உரைத்தாள். இராவணனுடன் பஞ்சவடியை அடைந்த மாரீசன், தங்க மான் வடிவில் சீதை முன் உலாவினான். தங்க மானை பிடித்துத் தர இராமரிடம் கேட்ட போது, இலக்குவன், இது மாய மான் என்றார். ஆனால் சீதை வலியுறுத்தி கேட்டதால், இராமர் தங்க மானைப் பிடித்து, சீதைக்குப் பரிசளிக்க விரும்பினார். இராமர் தங்க மான் வடிவில் வந்த அரக்கன் மாரீசன் மீது அம்பெய்திய போது, இலக்குமணா என அலறியவாறே இறந்தான்.

இவ்வலறல், இராமனிடமிருந்து வந்த அபயக் குரல் எனக்கருதிய சீதை, இராமரை அபாயத்திலிருந்துக் காக்கச் செல்ல பணித்தாள். இலக்குவன், இது மாய மான் வடிவில் வந்த அரக்கனின் குரல் என்று கூறியும், சீதை, இராமரைக் காக்க உடனே விரைந்து செல்லப் பணித்தாள். இக்கூக்குரல் அரக்கனின் சதித்திட்டம் என்று உணர்ந்த இலக்குவன், காட்டில் தனிமையில் இருக்கும் சீதையை அரக்கர்களிடமிருந்து காக்க வேண்டி, குடிலைச் சுற்றிலும் இலட்சுமணன் கோடு கிழித்து, இதனை தாண்டி வெளியே வரவேண்டாம் என உரைத்தான்.

இலக்குவன், இராமனைத் தேடிச் சென்ற வேளையில், இராவணன் துறவிக் கோலத்தில், சீதையின் குடிலை அடைந்து யாசகம் கேட்ட போது, சீதை இலட்சுமணன் வரைந்த கோட்டைத் தாண்டி பிச்சையிட வந்த போது, இராவணன் சீதையை கவர்ந்து வான்வெளியில் சென்றான். இந்நிகழ்வைக் கண்ட ஜடாயு பறவை, சீதையைக் காப்பாற்ற, இராவணனுடன் போரிட்டதால், மூர்ச்சையடைந்து தரையில் வீழ்ந்தது.

இறந்தது தங்க மான் அல்ல, அரக்கன் என அறிந்த இராம - இலக்குவனர்கள், குடிலை நோக்கித் திரும்பிய போது, சீதையை காணாது வருந்தும் வேலையில், மரணத்தருவாயில் இருந்த ஜடாயு, சீதையை, இராவணன் வான் வழியாக இலங்கைக்கு கவர்ந்து சென்றதைக் கூறி மடிந்தது. இராமரின் அருளால் ஜடாயு மோட்சம் அடைந்தது.

கபந்த மோட்சம்[தொகு]

இந்திரனின் சாபத்தால், ஒரு கந்தர்வன், கால்கள், கழுத்து, தலையும் அற்ற முண்டமும், நீண்ட கைகளும், வயிற்றில் ஒற்றைக் கண்ணும், அகண்ட வாயுடன் கூடிய ஒரு இராட்சசனாக தண்டாகர்ண்யத்தில் கபந்தன் எனும் பெயரில் வாழ்ந்தான். கபந்தனின் இரண்டு நீண்ட கைகளை இராமன் மற்றும் இலக்குமணன் வெட்டி வீழ்த்தி இறந்ததால், கபந்தன் முக்தி அடைந்தான்.

சபரி மோட்சம்[தொகு]

இராமரைக் கண்டு உயிர் துறக்கும் எண்ணத்தில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் சபரி, மதங்க மலையில் இராமரின் வருகைக்காக காத்திருந்தாள். சீதையைத் தேடி இராமனும், இலக்குமணனும் தேடி அலைந்த வேளையில், மதங்க மலையில், சபரியின் ஆசிரமத்தைக் கண்டனர். அங்கு சபரி அளித்த இலந்தைப் பழங்களை இராமர் உண்டு, வயதான சபரிக்கு மோட்சம் நல்கினார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1. விராதன் வதைப் படலம்
  2. "Valmiki Ramayana - Aranya Kanda in Prose Sarga 4". Archived from the original on 2017-05-10. பார்க்கப்பட்ட நாள் 2018-02-01.
  3. https://books.google.co.in/books?id=EBfFAgAAQBAJ&pg=PT266&lpg=PT266&dq=Vir%C4%81dha&source=bl&ots=S2YPXY2E4S&sig=heYTmTr7UWL_e1yMkFKOeuSVUD0&hl=ta&sa=X&ved=0ahUKEwjsrOLdoe3TAhVEp48KHcxaBQkQ6AEISzAG#v=onepage&q=Vir%C4%81dha&f=false
  4. [1]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரண்ய_காண்டம்&oldid=3832492" இலிருந்து மீள்விக்கப்பட்டது