கிருட்டிணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிருஷ்ணர்

கிருட்டிணன் இந்து சமய கடவுளாவார். இவர் விட்டுணுவின் அவதாரங்களுள் ஒருவராக வைணவர்களால் கருதப்படுகிறார். மகாபாரத்திலும் பாகவத புராணத்திலும் இவரைப் பற்றி கூறப்பட்டுள்ளது. இந்து சமய பக்தி நெறியில் இவருடைய பக்தர்களே பெரும்பாலானவர்கள். இவரை தமிழர்கள் கண்ணன் என்ற பெயரிலும், வட இந்தியர் கண்ணையா என்ற பெயரிலும் அழைக்கின்றனர். இது தவிர, கேசவன், கோவிந்தன், கோபாலன், போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார். வருடந்தோறும் ஆவணி மாதம் அட்டமி திதி, உரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள் கிருட்ண ஜெயந்தியாக கொண்டாடப் படுகிறது.

பொருளடக்கம்

கிருஷ்ணரின் கதை

இளமை

வசுதேவர், தேவகி தம்பதியினருக்கு எட்டாவது குழந்தையாக மதுராவில் கிருஷ்ணர் பிறந்தார். கொடுமைக்கார அரசனான இவரது மாமன் கம்சனிடமிருந்து காப்பதற்காக இவர் பிறந்த நாளன்றே இவரை வசுதேவர் யமுனைக்கு அப்பால் இருந்த பிருந்தாவனத்தில் யாதவ குலத்தினரான நந்தகோபர், யசோதையிடம் ஒப்படைத்தார். குழல் ஊதி, மாடு மேய்த்து, நண்பர்களுடன் விளையாடி, வெண்ணெய் திருடி குறும்புத்தனம் செய்து காலத்தைக் கழித்த கிருஷ்ணன் பிருந்தாவனத்தின் செல்லப் பிள்ளையானார். மேலும், இவரை தாக்க கம்சனால் ஏவப்பட்டு வந்த கொடிய அசுரர்களையும் வதம் செய்தார்.

வாலிபம்

இள வயதில் பிருந்தாவனத்தில் இருந்த பெண்களின் மனதில் இடம் பிடித்தார். இவர்களுள் ஒருவரான ராதையுடன் காதல் புரிந்தார்.

வாலிப வயதை அடைந்தவுடன் மதுரா சென்று கம்சனை வென்று தன் தாத்தாவான உக்கிரசேனரிடம் ராஜ்யத்தை ஒப்படைத்தார். தனது அத்தை மகன்களான பாண்டவர்களுடன், குறிப்பாக அர்ஜூனனுடன் நட்பு கொண்டார். பின்னர் துவாரகை எனும் ஊருக்கு மதுரா மக்களுடன் குடிபெயர்ந்தார்.

கீதை

பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடந்த குருட்சேத்திரப் போரில் தனது சேனையை கௌரவரர்களிடம் கொடுத்துவிட்டு தான் அர்ஜூனனின் தேரோட்டியாக பணிபுரிந்தார். இந்தப் போர் தொடங்கும் முன் இவர் அர்ஜூனனிடம் மேற்கொண்ட உரையாடலே பகவத் கீதை ஆனது.

முடிவு

பின்னர் துவாரகையில் தன் மனைவியான ருக்மணியுடன் வாழ்ந்து யாதவர்களின் அரசராக விளங்கினார். ஒரு நாள் காட்டில் ஒரு வேடனின் அம்பு தாக்கி காலமானார். யாதவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு தங்களை அழித்துக்கொண்டனர். துவாரகை நகரமும் மூழ்கியது.

காண்க

சமீபத்திய ஆராய்ச்சி

குஜராத்திலுள்ள துவாரகையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆழ்கடல் ஆராய்ச்சியில் மூழ்கிய நகரம் ஒன்று கண்டெடுக்கப் பட்டுள்ளது.[1] அது மகாபாரத்திலும் பாகவத்திலும் கூறப்பட்டுள்ள துவாரகை நகரை ஒத்துள்ளது, மேலும் அங்கே கண்டெடுக்கப் பட்ட சங்குகள், நாணயங்கள் போன்றவை மகாபாரத்தில் கூறப்பட்டுள்ள பொருட்களை ஒத்துள்ளன. இதனால் உண்மையிலேயே கிருஷ்ணன் என்ற மன்னன் வாழ்ந்திருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.[2]

வெளியிணைப்புக்கள்

உசாத்துணை

  1. A.S. Gaur, Sundaresh and Sila Tripati (Number 21, 2005). "ANCIENT DWARKA: STUDY BASED ON RECENT UNDERWATER ARCHAEOLOGICAL INVESTIGATIONS" 77. பார்த்த நாள் செப்டம்பர் 06, 2012.
  2. "History has it. Dwarka inundated by tsunami!". Times of India (Jan 4, 2005). பார்த்த நாள் செப்டம்பர் 06, 2012.
"http://ta.wikipedia.org/w/index.php?title=கிருட்டிணன்&oldid=1404529" இருந்து மீள்விக்கப்பட்டது