கௌதம புத்தர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கௌதம புத்தர் பௌத்த சமயத்தை உருவாக்கியவராவார். இவர் கி.மு 563க்கும் கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர். பிறக்கும் போது இவருக்கிடப்பட்ட பெயர் சித்தார்த்த கௌதமர் என்பதாகும். பின்னர் இவர் ஞானம் பெற்று புத்தர் (ஞானம் பெற்றவர்) ஆனார். இவர் சாக்கிய முனி என்றும் அழைக்கப்பட்டார்.[1] புத்த சமயத்தின் மிகவும் முக்கியமானவரென்ற வகையில், கௌதமருடைய வாழ்க்கையையும், வழிகாட்டல்களையும், துறவிமட விதிகளையுமே, கௌதமரின் மறைவுக்குப்பின், சுருக்கி பௌத்தத் துறவிகள் மனனம் செய்துவந்தார்கள். சீட பரம்பரையூடாக வாய்மொழிமூலம் கடத்தப்பட்டுவந்த இத் தகவல்கள், 100 வருடங்களுக்குப் பின்னர் திரிபிடகம் என்று வழங்கப்படும் நூலாக எழுத்துவடிவம் பெற்றது.
பொருளடக்கம் |
[தொகு] புத்தரின் வரலாறு
சித்தார்த்த கௌதமர், இன்றைய நேபாளத்திலுள்ள, லும்பினி என்னுமிடத்தில், மே மாதத்துப் பூரணை தினத்தில் பிறந்தார். மாயா இவரது தாயார். இவரின் பிறப்புக் கொண்டாட்டத்தின் போது சமுகந்தந்த ஞானியொருவர், சித்தார்த்தர் ஒரு பெரிய அரசனாக அல்லது ஒரு ஞானியாக வருவாரென்று எதிர்வு கூறினார். இவர் பிறப்பதற்கு முன்னரே இவரது தாயாருக்கு ஒரு வெள்ளை யானை வடிவில் தோற்றம் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. கௌதமர் பிறந்த ஏழாவது நாளே அவரது அன்னை இறந்தார். எனவே இவரை இவரது தாயின் தங்கை வளர்த்தார்.[2]
சித்தார்த்தர், தனது 16வது வயதில் யசோதரையை மணந்தார். பிறகு இருவரும் ஒரு ஆண் மகனைப் பெற்றெடுத்தனர். அவனது பெயர் ராகுலன். சித்தார்த்தருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அவர் தந்தை ஏற்படுத்தித் தந்தார். வெளியுலகைப் பற்றி அறிந்து கொள்ளாமல் அரண்மனை வசதிகளை அனுபவிப்பதிலேயே தன் நேரத்தை செலவிட்டார் சித்தார்த்தர்.
அவரது 29 ஆவது வயதில் தனது வாழ்க்கையில் அதிருப்தியடைந்தார். ஒருமுறை உதவியாளரொருவருடன் வெளியே சென்றபோது, நான்கு காட்சிகளைக் காண நேர்ந்தது. ஒரு ஊனமுற்ற மனிதன், ஒரு நோயாளி, அழுகிக் கொண்டிருந்த ஒரு பிணம், நாலாவதாக ஒரு முனிவன். இக் காட்சிகளினூடாக மனிதவாழ்க்கையின் துன்பங்களை உணர்ந்துகொண்ட சித்தார்த்தர், ஒரு துறவியாகத் தீர்மானித்தார்.
துறவறம் பூண்ட சித்தார்த்தர், யோக நெறியில் கடுந்தவம் புரிந்தார். தன் தவங்களின் மூலம் உயர்ந்த யோக நிலைகளை அடைந்தாலும், உலக வாழ்க்கையின் துன்பங்களின் ஆதாரத்தை அறிய முடியாததால் அதிருப்தி அடைந்தார். எனினும் தவ வாழ்க்கையை தொடர்ந்து கடைபிடித்தார்.
தனது 35ஆம் வயதில், இந்தியாவின் தற்போதைய பீகார் மாநிலத்தில் உள்ள கயை எனும் இடத்தில் சுமேதை என்பவளிடம் மோர் வாங்கிக் குடித்துவிட்டு ஒரு போதி மரத்தினடியில் அமர்ந்த சித்தார்த்தர், ஞான நிலை அடையும் வரை அந்த இடத்தை விட்டு எழுந்திராமல் தவம் புரிவது என தீர்மானித்தார். ஒரு வாரம் கடுந்தவம் புரிந்தபின் பெருஞ்ஞான நிலையை அடைந்து புத்தரானார். இவர் தன்னை தத்தாகதர் என்று (அதாவது 'எது உண்மையில் அதுவாக உள்ளதோ அந்த நிலை எய்திவர்') என்று அறிவித்துக் கொண்டார்.[3] புத்தர் ஞானம் பெற்ற அவ்விடம் இன்று புத்த கயை என்று புத்த மதத்தினரின் யாத்திரைத் தலமாக விளங்குகிறது.
வாரணாசி அருகே உள்ள சாரநாத் எனும் இடத்தில் முதன் முறையாக ஐவரை சீடர்களாக ஏற்றுக்கொண்டு அவர்கட்கு புத்தி புகட்டினார். அவரது வாழ்க்கையின் அடுத்த 45 ஆண்டுகளில் பலர் அவரைப் பின்பற்றி அவரது சீடர்கள் ஆயினர். தனது 80ஆம் வயதில் புத்தர் குசினாரா என்ற இடத்தில் காலமானார்.
[தொகு] புத்தரின் கூற்றுக்கள்
புத்தர் என்றுமே தன்னை ஒரு தேவன் என்றோ, கடவுளின் அவதாரம் என்றோ கூறிக்கொண்டதில்லை. தான் புத்த நிலையை அடைந்த ஒரு மனிதன் என்பதையும், புவியில் பிறந்த மானிடர் அனைவருமே இந்த புத்த நிலையை அடைய முடியும் என்பதையும் தெளிவாக வலியுறுத்தினார். ஆசையே துன்பத்தின் அடிப்படை என அவர் கூறினார்.
[தொகு] புத்தரின் மற்ற பெயர்கள்
[தொகு] சமஸ்கிரதம்
ததாகதர் என்ற சமஸ்கிருதச் சொல் தத ஆகத என்ற சொற்களின் சந்தியினால் தோன்றும் சொல். "அவ்வாறு சென்றவர்" என்று பொருள் படும். இது கௌதம புத்தரை குறிக்கும் காரணப்பெயர். புத்தர் சம்சாரக்கடலை கடந்து சென்றவர் என்ற காரணத்தைக்கொண்டு இப்பெயர் அவருக்கு சூட்டப்பட்டது.
[தொகு] மற்ற மதங்களில் புத்தர்
வட இந்தியாவைச் சேர்ந்த வைணவர்கள் புத்தரை விஷ்ணுவின் அவதாரமாக போற்றுகின்றனர்.
[தொகு] துணை நூற்கள்
- பௌத்தம் மிகச் சுருக்கமான அறிமுகம் - தாமியென் கோவ்ன். தமிழில் சி.மணி, 2005, அடையாளம் பதிப்பகம், தமிழ்நாடு 621310 வார்ப்புரு:ISBN
[தொகு] வெளி இணைப்புகள்
[தொகு] மேற்கோள்
- ↑ பக்கம் 22, அத்தியாயம் 2, பௌத்தம் மிகச் சுருக்கமான அறிமுகம் - தாமியென் கோவ்ன். தமிழில் சி.மணி, 2005, அடையாளம் பதிப்பகம், தமிழ்நாடு 621310 ISBN 81 7720 0399
- ↑ பக்கம் 27, அத்தியாயம் 2, பௌத்தம் மிகச் சுருக்கமான அறிமுகம் - தாமியென் கோவ்ன். தமிழில் சி.மணி, 2005, அடையாளம் பதிப்பகம், தமிழ்நாடு 621310 ISBN 81 7720 0399
- ↑ பக்கம் 35, அத்தியாயம் 2, பௌத்தம் மிகச் சுருக்கமான அறிமுகம் - தாமியென் கோவ்ன். தமிழில் சி.மணி, 2005, அடையாளம் பதிப்பகம், தமிழ்நாடு 621310 ISBN 81 7720 0399