அசுரர் (பௌத்தம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அசுரர் (ஜப். அஷுரா) எனபவர்கள் பௌத்த அண்டவியலின் படி, காமதாதுவின் கீழ் நிலை வாசிகள் ஆவர். இவர்கள் தேவர்களின் எதிரிகள் ஆவர். பௌத்த அசுரர்களும், இந்து மத அசுரர்களும் குணவியலபுகளில் ஒற்றுமையிருப்பினும், பௌத்தத்தில் அசுரர்களுக்கு பௌத்த தொடர்புடைய சில பிரத்யேக குணங்களும் கதைகளும் காணப்படுகின்றது.[1][2][3]

அசுரர்களின் குணவியல்புகள்[தொகு]

காமதாதுவின் அனைத்து நிலைகளில் உள்ளவர்களும் ஆசைகளுக்கு உட்பட்டிருந்தாலும், அசுரகள் தான் ஆசைகளுக்கு முற்றிலும் அடிமையாகி கர்வமும் ஆணவமும் உடையவர்களாக உள்ளனர்.

அவர்களுடைய இந்நிலையினால் அசுரர்களாக பிறப்பெடுப்பது துர்பிறவியாக கருதப்படுகிறது. ஆற்றலும் வன்முறை குணாதிசியமும், போர்க்குணமும், கோபமும் கொண்ட மனநிலையை அசுரர்கள் குறிக்கின்றனர்.

அசுரகளின் ஆற்றல் மனிதர்களின் ஆற்றலை விட அதிகமாக இருப்பினும், மற்ற தேவர்களை விட குறைவானதாகும். இவர்கள் சுமேருவின் அடித்தளத்தில் வசிக்கின்றனர்.பவசக்கரத்தில் அசுரகள் ஆறாம் நிலையை குறிக்கின்றனர். அசுரகர்களின் தலைவர் அசுரேந்திரன் என அழைக்கப்படுகிறான். அசுரர்களின் பல பிரிவுகள் உள்ளன. வில்லை ஏந்திய தானவேகாசுரர்கள், கொடூர முகமுடைய காலகஞ்சகர்கள் இவற்றும் அடங்குவர். அசுர்களின் தலைவர்களாக வேமசித்திரின், ராகு(வேரோசனன்) மற்றும் பஹராதன் விளங்குகின்றனர்.

பௌத்த அசுரர்கள் தொடர்பான புராணக்கதைகள்[தொகு]

அசுரர்கள் ஆதிகாலத்தில் திராயஸ்திரிம்ச உலகத்தில், சுமேருவின் உச்சியில் மற்ற தேவர்களுடன் வசித்து வந்தனர். சக்ரன் இந்திர பதவியை ஏற்றவுடன், அசுரர்கள் அதை கொண்டாடினர். அந்த கொண்டாட்டத்தின் போது, அசுரர் மிகவும் திடமான கந்தபான மதுவகையை அருந்தினர், எனினும் மற்ற தேவர்களை இம்மதுவகையை அருந்துவதற்கு இந்திரன் தடை செய்தி இருந்தார். இதனால், கோபமுற்ற இந்திரன், அசுரர்களை அவர்கள் போதையில் இருக்கும் போதே, அனைவரையும் திராயஸ்திரிம்ச்த்தில் இருந்து விரட்டி, சுமேருவின் அடித்தளத்துக்கு அனுப்பினார். ஆனால் இதை சில காலத்துக்கு அசுரர்கள் இதை அறிந்திருக்கவில்லை. எனினும், தாங்கள் தற்போது வசிக்கும் இடத்தில் திராயஸ்திரிம்சத்தின் பாரிஜாத மரம் மலர்வதற்கு மாறாக சித்தபாலி மரம் மலர்ந்ததை கண்ட பிறகே தங்கள் சுய நினைவுக்கு திரும்பி, தாங்கள் விரட்டியடிக்கப்பட்டதை உணர்ந்தனர்.

தங்களுடைய உலகை மீட்டெடுக்க, தேவர்களை நோக்கி போர் புரிய, சுமேருவில் ஏறத்துவங்கினர். அவர்களுடைய பெருவாரியான எண்ணிக்கையால் இந்திரன் அவர்களை நேரடியாக எதிர்கொள்ள இயலவில்லை. திரும்பும் வேளையில், இந்திரன் கருடர்கள் வசிக்கும் காடுகளின் வழியாக செல்ல நேரிட்டது. இந்திரனின் தேர் சென்ற வழியில் கருடர்களின் கூடுகள் அழிக்கப்படுவதை அவர் கண்டார். இதனால், தன்னுடைய தேரோட்டின் மாதாலியிடம், மறுபடியும் திரும்பும் படி ஆணையிட்டார். இந்திரன் மறுபடியும் தங்களை நோக்கி வருவதை கண்ட அசுரர்கள், இந்திரன், இன்னும் மிகப்பெரிய படையுடன் திரும்பி வருவதாக தவறாக கருதி, புறமுதுகிட்டு தாங்கள் இதுவரை கைப்பற்றிய அனைத்தையும் விட்டுவிட்டு ஓடினர்.

தேவர்களுக்கு அசுரர்களுக்கும் பல போர்கள் நடைபெற்றிருப்பினும், இரு சாராருக்கு ஒரு இணக்கமான உடன்பாடு இருந்து வருகிறது. இது இந்திரன், அசுரர் தலைவனான வேமசித்திரினின் மகளை காதலித்து திருமணம் செய்த வேளையில் ஏற்பட்டது. வேமசித்திரின் தன் மகள் சுஜாவின் திருமணத்திற்காக அசுரர்கள் நிறைந்த சபையில் சுயம்வரம் நடத்தினான். அச்சபையில், இந்திரன் ஒரு அசுரனாக மாறுவேடமிட்டு கலந்திருந்தான். சுஜா, மாறுவேடமிட்ட இந்திரனை தேர்ந்தெடுக்க அவரை அவள் மணந்து கொண்டாள்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Robert Beer The Handbook of Tibetan Buddhist Symbols Serindia Publications 2003 ISBN 978-1-932-47603-3 page 246
  2. Robert Beer The Handbook of Tibetan Buddhist Symbols Serindia Publications 2003 ISBN 978-1-932-47603-3 page 246
  3. Malalasekera, G.P. (2007). "Asurā". Dictionary of Pali Proper Names. Motilal Banarsidass Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-208-3020-2. http://www.aimwell.org/DPPN/asura.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசுரர்_(பௌத்தம்)&oldid=3824031" இலிருந்து மீள்விக்கப்பட்டது