அசோகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசோகர்
பியாதசி
தேவனாம்பிரியா
சக்கரவர்த்தி
சாஞ்சியின் அண்.பொ. ஊ. மு./பொ.ஊ. 1ஆம் நூற்றாண்டு தூபி. அசோகரை அவரது தேரில் காண்பிக்கிறது. இராமகிராமத்தில் நாகர்களைச் சந்திக்கிறார்.[1][2]
3ஆம் மௌரியப் பேரரசர்
ஆட்சிக்காலம்அண். 268 – அண். 232 பொ. ஊ. மு.[3]
முடிசூட்டுதல்பொ. ஊ. மு. 268[3]
முன்னையவர்பிந்துசாரர்
பின்னையவர்தசரத மௌரியர்
பிறப்புஅண். பொ. ஊ. மு. 304
பாடலிபுத்திரம் (இன்றைய பாட்னா)
இறப்புஅண். பொ. ஊ. மு. 232 (அகவை அண். 71 – 72)
பாடலிபுத்திரம்
வாழ்க்கைத் துணைகள்
  • மகாராணி தேவி (இலங்கை மரபு)
  • இராணி கருவகி (சொந்தக் கல்வெட்டுகள்)
  • இராணி பத்மாவதி (வட இந்திய மரபு)
  • இராணி அசந்திமித்திரை (இலங்கை மரபு)
  • இராணி திஷ்யரட்சா (இலங்கை மற்றும் வட இந்திய மரபு)
குழந்தைகளின்
பெயர்கள்
  • இளவரசர் மகிந்தன் (இலங்கை மரபு)
  • இளவரசி சங்கமித்திரை (இலங்கை மரபு)
  • இளவரசர் திவாலர் (சொந்தக் கல்வெட்டுகள்)
  • பட்டத்து இளவரசர் குணாளன் (வட இந்திய மரபு)
  • இளவரசி சாருமதி
  • இளவரசர் ஜலௌகர்
அரசமரபுமௌரிய அரசமரபு
தந்தைபிந்துசாரர்
தாய்சுபத்ரங்கி அல்லது தர்மா[note 1]
மதம்பௌத்தம்[4]
குறிப்பு

  1. வட இந்திய நூல்கள் அசோரின் தாயின் பெயரை சுபத்ரங்கி என்று குறிப்பிடுகின்றன. அதே நேரத்தில், இலங்கை நூல்கள் அவரது பெயரை தர்மா என்று குறிப்பிடுகின்றன

அசோகர் என்பவர் இந்தியத் துணைக் கண்டத்தை ஆண்ட மௌரியப் பேரரசின் மூன்றாவது பேரரசர் ஆவார். இவர் பொதுவாக பேரரசர் அசோகர் என்று அறியப்படுகிறார். இவர் அண்.பொ. ஊ. மு. 268 முதல் அண். பொ. ஊ. மு. 232 வரை ஆட்சி புரிந்தார். இவரது பேரரசானது இந்தியத் துணைக்கண்டத்தின் ஒரு பெரும் பகுதியை உள்ளடக்கியிருந்தது. அது மேற்கில் தற்போதைய ஆப்கானித்தான் முதல் கிழக்கில் தற்போதைய வங்காளதேசம் வரை பரவியிருந்தது. இவரது பேரரசின் தலைநகரம் பாடலிபுத்திரம் ஆகும். இவர் பௌத்தத்தின் புரவலராக விளங்கினார். பண்டைக் கால ஆசியா முழுவதும் பௌத்தத்தைப் பரப்பியத்தில் ஒரு முக்கியப் பங்காற்றியுள்ளார்.

அசோகர் குறித்த பெரும்பாலான தகவல்கள் இவரது பிராமி கல்வெட்டுகளிலிருந்தும், இவரது இறப்பிற்குப் பிறகு நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்ட பௌத்த புராணங்களிலிருந்தும் வருகின்றன. பண்டைக்கால இந்தியாவில் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட நீண்ட கல்வெட்டுகளில் இவையும் ஒன்றாகும். அசோகர் பிந்துசாரரின் மகனும், மௌரிய அரசமரபைத் தோற்றுவித்த சந்திரகுப்த மௌரியரின் பேரனும் ஆவார். இவரது தந்தையின் ஆட்சியின் போது நடு இந்தியாவின் உஜ்ஜைனின் ஆளுநராக இவர் சேவையாற்றினார். சில பௌத்த புராணங்களின் படி, ஓர் இளவரசராக தக்சசீலத்தில் ஒரு கிளர்ச்சியையும் இவர் அடக்கினார்.

அசோகரின் கல்வெட்டுகள் இவரது ஆட்சியின் எட்டாவது ஆண்டின் (அண். பொ. ஊ. மு. 260) போது இவர் கலிங்கத்தை ஒரு மிருகத்தனமான போருக்குப் பின் வென்றார் என்று குறிப்பிடுகின்றன. போரால் ஏற்பட்ட அழிவானது இவர் வன்முறையைக் கைவிடக் காரணமானது. கலிங்கப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இவரது கல்வெட்டுகளில் இத்தகவல் சேர்க்காது விடப்பட்டுள்ளது. கலிங்க மக்களுக்கு முன்னாள் தான் வருந்துவது அரசியல் ரீதியாகத் தேவையற்றது என்றோ அல்லது இவரது கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் முழுத் துல்லியமற்றவை என்பதாலோ மற்றும் மற்ற பகுதிகளின் மக்களின் நன் மதிப்பைப் பெறுவதற்காகவோ இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அசோகர் இறுதியாகத் தம்மம் அல்லது நன்னடத்தையை பரப்புவதை மிகுதியாக நேசித்தார். இவருடைய கல்வெட்டுகளின் முக்கியக் கருத்தாக இது உள்ளது.

அசோகரின் கல்வெட்டுகள் கலிங்கப் போருக்கு ஒரு சில ஆண்டுகள் கழித்து, பௌத்தத்தை நோக்கி இவர் படிப்படியாக இழுக்கப்பட்டார் என்பதைப் பரிந்துரைக்கின்றன. கலிங்கப் போரை பௌத்த புராணங்கள் குறிப்பிடவில்லை. மற்ற சமய நம்பிக்கைகளின் தலைவர்களிடத்தில் மன நிறைவு கொள்ளாததற்குப் பிறகு அல்லது பௌத்தத் தலைவர்களால் நடத்தப்பட்ட அதிசயங்களைக் கண்டதற்குப் பிறகு அசோகர் பௌத்தத்திற்கு மதம் மாறினார் என்று பலவாறாகக் குறிப்பிடுகின்றன. ஒரு பெரும் எண்ணிக்கையிலான தூபிக்களை நிறுவியதற்காகவும், மூன்றாம் பௌத்த சங்கத்திற்குப் புரவலராக விளங்கியதற்காகவும், பௌத்தத் தூதுவர்களுக்கு ஆதரவளித்ததற்காகவும், பௌத்த சங்கத்திற்கு ஈகைக் குணத்துடன் நன்கொடை அளித்ததற்காகவும் மற்றும் பௌத்தர் அல்லாதவர்களை இடர்ப்படுத்தியதற்காகவும் கூட அசோகரை இப்புராணங்கள் குறிப்பிடுகின்றன. நவீன வரலாற்றாளர்கள் மத்தியில் இந்தப் புராணங்களில் வரலாற்றுத் தன்மையானது விவாதிக்கப்படுகிறது. இப்புராணங்கள் கல்வெட்டுக்களுடன் ஒத்துப் போவதில்லை மற்றும் சில நேரங்களில் ஒரு புராணம் மற்றொரு புராணத்துடன் ஒத்துப் போவதில்லை. இவை ஏராளமான புராண மரபியலைக் கொண்டுள்ளன. பௌத்தத்திற்கு மாறுவதற்கு முன் அசோகரின் மோசமான தன்மையையும், பௌத்தத்திற்கு மாறியதற்குப் பின் அவரது பக்தியையும் மிகைப்படுத்திக் கூறுகின்றன. அசோகரின் சொந்தக் கல்வெட்டுகள் இவர் பௌத்ததிற்கு ஆதரவு அளித்தார் என்பதைப் பரிந்துரைக்கின்றன. ஆனால், மேலும் பிராமணியம், சமணம் மற்றும் ஆசீவகம் உள்ளிட்ட பிற முதன்மையான சமகால நம்பிக்கைகளுக்கும் புரவலராக விளங்கினார் என்பதையும் குறிப்பிடுகின்றன.

ஒரு வரலாற்று ரீதியான மன்னனாக அசோகரின் வாழ்வானது கிட்டத்தட்ட மறக்கப்பட்டுவிட்டது. ஆனால், 19ஆம் நூற்றாண்டில் பிராமி எழுத்துமுறை புரிந்தறியப்பட்டதற்குப் பிறகு இந்நிலை மாறியது. அசோகரின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள பிரியதர்சி மற்றும் தேவனாம்பிரியர் ஆகிய பட்டங்களைப் பௌத்த புராணங்களுடன் வரலாற்றாளர்கள் தொடர்புபடுத்தியுள்ளனர். இந்தியப் பேரரசர்களில் மிகச் சிறந்தவர்களில் ஒருவராக அசோகரின் மதிப்பை நிறுவினர். நவீன இந்தியாவின் சின்னமாக அசோகரின் சிங்கத் தூபி பயன்படுத்தப்படுகிறது.

அசோகரின் கல்வெட்டுகள் தவிர இவரது வாழ்வைப் பற்றி அறிந்து கொள்ள இவரது இறப்பிற்குப் பிறகு நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்ட புனைவுகளே நமக்கு உதவுகின்றன. பொ.ஊ. 2ஆம் நூற்றாண்டின் அசோகவதனம் (திவ்வியவதனத்தின் ஒரு பகுதியாகிய "அசோகரின் கதை") மற்றும் இலங்கை நூலாகிய மகாவம்சம் ஆகிய புனைவுகள் நமக்கு உதவுகின்றன. "அசோக மரத்துடன்" தனது பெயர் கொண்டிருந்த தொடர்பைப் பற்றிய இவரது நேசமும் அசோகவதனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.[5]

தகவல் ஆதாரங்கள்[தொகு]

அசோகர் குறித்த தகவலானது இவரது கல்வெட்டுக்களில் இருந்து வருகிறது. இவரைப் பற்றிக் குறிப்பிடும் மற்ற கல்வெட்டுகளும் இவரது ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தவையாகவே இருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. மேலும், பண்டைக்கால இலக்கியம் குறிப்பாக பௌத்த நூல்களிலிருந்து தகவல்கள் வருகின்றன.[6] பல்வேறு வரலாற்றாளர்கள் தமது சான்றுகளின் தொடர்பைத் தெளிவுபடுத்த முயற்சித்த போதும் இந்த ஆதாரங்கள் பெரும்பாலும் ஒன்றிலிருந்து மற்றொன்று மாறுபடுகின்றன.[7] எடுத்துக்காட்டாக, தன் ஆட்சியின் போது பல மருத்துவமனைகளை அசோகர் கட்டினார் என்று கூறப்பட்டாலும், பண்டைக்கால இந்தியாவில் பொ. ஊ. மு. 3ஆம் நூற்றாண்டின் போது ஏதேனும் மருத்துவமனை இருந்ததா என்பது பற்றித் தெளிவான ஆதாரம் இல்லை அல்லது கட்டடத்தைத் தொடங்கியதற்கு அசோகர் காரணமாக இருந்தார் என்று எந்த ஆதாரங்களும் இல்லை.[8]

ஜூனாகத்தில் அசோகரின் பெரும் பாறைக் கல்வெட்டுக்களானவை அசோகர் (14ஆம் அசோகர் கல்வெட்டு), முதலாம் உருத்திரதாமன் மற்றும் ஸ்கந்தகுப்தர் ஆகியோரின் கல்வெட்டுக்களைக் கொண்டுள்ளன.

கல்வெட்டுக்கள்

இந்தியத் துணைக் கண்டத்தில் ஏகாதிபத்திய சக்தியின் முதல் சுய பிரதிநிதித்துவங்கள் அசோகரின் கல்வெட்டுகள் தான்.[9] எனினும், இந்தக் கல்வெட்டுக்கள் தம்மம் அல்லது நன்னடத்தை குறித்தே முதன்மையாகக் கவனம் கொண்டுள்ளன. மௌரிய அரசு அல்லது சமூகத்தின் பிற அம்சங்கள் குறித்துக் குறைவான தகவல்களையே இவை தருகின்றன.[7] தம்மம் அல்லது நன்னடத்தை குறித்த தகவல்களையும் இந்தக் கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ள படி அப்படியே நாம் எடுத்துக் கொள்ள இயலாது எனக் குறிப்பிடப்படுகிறது. அமெரிக்க அறிஞர் யோவான் எஸ். ஸ்ட்ராங், அசோகரின் செய்திகள் குறித்து சில நேரங்களில், வரலாற்றுத் தகவல்களைப் பதிவு செய்வதைத் தவிர்த்து, தான் மற்றும் தனது நிர்வாகம் குறித்து ஒரு சாதகமான பார்வையைக் காட்சிப்படுத்துவதை இலக்காகக் கொண்ட ஓர் அரசியல்வாதியின் பரப்புரை என்று நாம் இவற்றை எடுத்துக் கொள்வது சரியாக இருக்கும் என்கிறார்.[10]

ஒரு சிறு எண்ணிக்கையிலான மற்ற கல்வெட்டுக்களும் அசோகர் குறித்து சில தகவல்களைக் கொடுக்கின்றன.[7] உதாரணமாக, இரண்டாம் நூற்றாண்டில் உருத்ரதாமனின் ஜுனாகத் பாறைக் கல்வெட்டில் அசோகர் குறிப்பிடப்படுகிறார்.[11] சிர்கப் என்ற இடத்தில் கண்டறியப்பட்ட அசோகரின் தட்சசீலக் கல்வெட்டானது ஒரு தொலைந்த வார்த்தையான "பிரிய்" என்பதைக் குறிப்பிடுகிறது. இது அசோகரின் பட்டமான "பிரியதர்சி" தான் என்று எடுத்துக் கொள்ளப்படுகிறது. எனினும், இதை நாம் உறுதியாகக் கூற முடியாது.[12] மற்றவர்கள் மறுப்புத் தெரிவித்தாலும், சோகௌரா தாமிரத் தகட்டுக் கல்வெட்டு போன்ற மற்ற பிற கல்வெட்டுக்கள் சில அறிஞர்களால் தோராயமாக அசோகரின் காலத்திற்குத் தேதியிடப்படுகின்றன.[13]

பௌத்த புராணங்கள்

அசோகர் குறித்த பெரும்பாலான தகவல்கள் பௌத்த புராணங்களில் இருந்து வருகின்றன. அவை இவரை ஒரு மகா, குறைபாடற்ற மன்னனாகக் காட்டுகின்றன.[14] இந்தப் புராணங்கள் அசோகரின் வாழ் நாளில் இல்லாமல், பிற்காலத்தில் உள்ள நூல்களில் காணப்படுகின்றன. இவை பௌத்த எழுத்தாளர்களால் எழுதப்பட்டுள்ளன. தங்களது நம்பிக்கை மீது அசோகரின் தாக்கத்தை விளக்குவதற்குப் பல்வேறு கதைகளை அவர்கள் பயன்படுத்துகின்றனர். வரலாற்றுத் தகவல்களுக்கு இந்நூல்களைச் சார்ந்திருக்கும் போது நாம் கவனமுடன் இருக்க வேண்டும் என்பதை இது காட்டுகிறது.[15] நவீன அறிஞர்கள் மத்தியில் இந்தப் புராணங்களை மரபு வழிக் கதைகள் என ஒட்டு மொத்தமாகத் தவிர்ப்பது முதல் நம்பத்தக்கவை எனக் கருதப்படும் அனைத்து வரலாற்றுப் பகுதிகளையும் ஏற்றுக் கொள்வது வரை கருத்துக்கள் வேறுபடுகின்றன.[16]

சமசுகிருதம், பாளி, திபெத்தியம், சீனம், பருமியம், சிங்களம், தாய், இலவோத்தியம் மற்றும் கோடனியம் உள்ளிட்ட பல மொழிகளில் அசோகர் குறித்த பௌத்த புராணங்கள் காணப்படுகின்றன. இந்த அனைத்து புராணங்களும் இரண்டு முதன்மையான மரபுகளை மூலமாகக் கொண்டுள்ளன:[17]

  • வட இந்திய மரபு: திவ்வியவதனம் (இதன் பகுதியான அசோகாவதானம் உட்பட) உள்ளிட்ட சமசுகிருத மொழி நூல்களில் பாதுகாக்கப்பட்ட வட இந்திய மரபு; அயுவாங் சுவான் மற்றும் அயுவாங் சிங் உள்ளிட்ட சீன ஆதாரங்கள்.[17]
  • இலங்கை மரபு: தீபவம்சம், மகாவம்சம், வம்சத்தபகசினி (மகாவம்சம் குறித்த ஒரு விளக்கவுரை), வினயா மீதான புத்தகோசரின் விளக்கவுரை மற்றும் சமந்த பாசதிகா உள்ளிட்ட பாளி மொழி நூல்களில் பாதுகாக்கப்பட்ட இலங்கை மரபு.[17][11]

இந்த இரண்டு மரபுகளுக்கு இடையில் ஏராளமான குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, இலங்கை மரபானது மூன்றாம் பௌத்த சங்கத்தைக் கூட்டியதில் அசோகரின் பங்கைக் குறிப்பிடுகிறது. இலங்கைக்குத் தன் மகன் மகிந்தன் உள்ளிட்ட பல தூதர்களைத் தொலைதூரப் பகுதிகளுக்கு அனுப்பியதைக் குறிப்பிடுகிறது. [17]எனினும், வட இந்திய மரபானது இந்நிகழ்வுகளைப் பற்றிக் குறிப்பிடவில்லை. அசோகருக்கு குணாளன் என்று மற்றொரு மகன் இருந்தான் உள்ளிட்ட, இலங்கை மரபில் குறிப்பிடப்படாத பிற நிகழ்வுகளை வட இந்திய மரபு விளக்குகிறது.[18]

பொதுவான கதைகளைக் கூறும் போது கூட இரு மரபுகளும் பல வழிகளில் மாறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக, போதி மரத்தை அசோகரின் அரசியான திஷ்யரக்‌ஷிதா அழித்தார் என்று அசோகவதனமும், மகாவம்சமும் குறிப்பிடுகின்றன. அசோகவதனத்தில் தனது தவறை உணர்ந்த பிறகு அரசி மரத்தை நலம் பெற வைக்கிறார் என்று குறிப்பிடப்படுகிறது. மகாவம்சத்தில் மரத்தின் ஒரு கிளை இலங்கையில் நடப்பட்டதற்குப் பிறகே அவர் மரத்தை நிரந்தரமாக அழிக்கிறார்.[19] மற்றொரு கதையில் இரு நூல்களும் இராமகிராமத்தில் இருந்து கௌதம புத்தரின் ஒரு நினைவுப் பொருளைச் சேகரிப்பதில் அசோகரின் வெற்றியடையாத முயற்சிகளைப் பற்றி விளக்குகின்றன. அசோகவதனத்தில் நினைவுப் பொருளை வைத்திருக்கும் நாகர்களின் பக்தியைத் தன்னால் ஈடு செய்ய இயலாததால் அசோகர் தோல்வியடைகிறார். எனினும், மகாவம்சத்தில் இலங்கையின் மன்னன் துட்டகைமுனால் நினைவுப் பொருளானது பாதுகாக்கப்பட வேண்டும் எனப் புத்தர் விதித்த காரணத்தால் அசோகர் தோல்வியடைகிறார்.[20] இவ்வாறான கதைகளைப் பயன்படுத்தியதன் மூலம், மகாவம்சமானது இலங்கையைப் பௌத்தத்தின் புதிய பாதுகாப்பிடமாகப் புகழ்கிறது என்பதை நாம் அறியலாம்.[21]

நாகர்களிடமிருந்து புத்தரின் நினைவுப் பொருட்களை எடுப்பதற்காக மன்னர் அசோகர் இராமகிராமத்திற்கு வருகை புரிகிறார். ஆனால் தன் முயற்சியில் தோல்வி அடைகிறார். தெற்கு வாயில், முதலாம் தூபி, சாஞ்சி.[2]

மற்ற ஆதாரங்கள்

நாணயம், சிற்பம் மற்றும் தொல்லியல் ஆதாரங்கள் அசோகர் குறித்த ஆய்வுகளுக்குத் துணையாக உள்ளன.[22] பல்வேறு புராணங்களின் மௌரிய மன்னர்கள் பட்டியலில் அசோகரின் பெயர் தோன்றுகிறது. எனினும், இந்நூல்கள் இவர் குறித்து மேற்கொண்ட தகவல்களைத் தருவதில்லை.[23] அர்த்தசாஸ்திரம் மற்றும் மெகஸ்தனிசின் இண்டிகா உள்ளிட்ட பிற நூல்கள் மௌரியர் காலம் குறித்துப் பொதுவான தகவல்களைத் தருகின்றன. அசோகரின் ஆட்சி குறித்து தகவல்களை அனுமானிக்க இவற்றைப் பயன்படுத்தலாம்.[24] எனினும், அர்த்தசாஸ்திரம் என்பது நன்னடத்தை குறித்த ஒரு நூல் ஆகும். அது தம்மம் மீது கவனத்தைக் குவிக்கிறதே தவிர, ஒரு வரலாற்று அரசு மீது கவனத்தைக் குவிக்கவில்லை. அது மௌரியர் காலத்தில் எழுதப்பட்டதா என்பது ஒரு விவாதத்திற்குரியதாக உள்ளது. இண்டிகா என்ற நூல் தற்போது தொலைந்து விட்டது. பிற்கால நூல்களின் ஒரு சில பத்திகளாகவே அந்நூலின் பகுதிகள் எஞ்சியுள்ளன.[7]

12ஆம் நூற்றாண்டு நூலான இராஜதரங்கிணி கோனாந்திய அரசமரபின் ஒரு காஷ்மீரி மன்னரான அசோகரைக் குறிப்பிடுகிறது. அவர் பல தாதுக் கோபுரங்களைக் கட்டினார். ஆரல் இசுடெயின் போன்ற சில அறிஞர்கள் இந்த மன்னரை மௌரிய மன்னர் அசோகருடன் அடையாளப்படுத்துகின்றனர். அனந்த குருகே போன்ற பிறர் இந்த அடையாளப்படுத்தலைத் துல்லியமற்றது என்று நிராகரிக்கின்றனர்.[25]

கல்வெட்டுச் சான்றுகளின் மாறுபட்ட விளக்கம்

கல்வெட்டுகளும் அவற்றின் அறிவிக்கப்பட்ட எழுதியவர்களும்
பியாதசி அல்லது தேவனாம்பிரிய பியாதசி ("மன்னர் பியாதசி") என்ற பெயரில் உள்ள கல்வெட்டுகள்:
: பெரும் பாறைக் கல்வெட்டுக்கள்
: பெரிய தூண் கல்வெட்டுக்கள்
அசோகரின் பெயர் அல்லது வெறுமனே "தேவனாம்பிரியர்" ("மன்னர்") அல்லது இரு பெயர்களும் சேர்ந்து உள்ள கல்வெட்டுகள்:
: சிறு பாறைக் கல்வெட்டுக்கள்
: சிறு தூண் கல்வெட்டுகள்
இந்த வெவ்வேறு பகுதிகள் இரு வகையான கல்வெட்டுகளால் பரவியுள்ளன. பௌத்தம் குறித்த இவற்றின் வெவ்வேறு தகவல்கள் இதை வெவ்வேறு ஆட்சியாளர்கள் அமைத்திருக்கலாம் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன.[26]

கிறித்தோபர் பெக்வித் போன்ற சில அறிஞர்களுக்கு அசோகரின் சிறு பாறைக் கல்வெட்டுக்களில் மட்டுமே தோன்றும் அசோகரின் பெயரும், மன்னர் பியாதசி அல்லது தேவனாம்பிரிய பியாதசி (அதாவது "கடவுள்களால் விரும்பப்படும் பியாதசி", "கடவுள்களால் விரும்பப்படுபவர்" ஆகியவை "மன்னருக்கான" ஒரு பட்டமாகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டவையாக இருந்தன) ஆகிய பெயர்களும் ஒன்று கிடையாது. பெரிய தூண் கல்வெட்டுக்கள் மற்றும் பெரும் பாறைக் கல்வெட்டுக்கள் ஆகியவற்றை எழுதியவராக மன்னர் பியாதசி அல்லது தேவனாம்பிரிய பியாதசி ஆகிய பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன.[26]

பியாதசி பொ. ஊ. மு. 3ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார் என்று பெக்வித் பரிந்துரைக்கிறார். அவர் பெரும்பாலும் சந்திரகுப்த மௌரியரின் மகனாக இருந்திருக்க வேண்டும். இவறையே கிரேக்கர்கள் பிந்துசாரர் என்று அறிந்திருந்தனர். அவர் இறையுணர்வை ("தருமம்") மட்டுமே தன் பெரிய தூண் கல்வெட்டுக்கள் மற்றும் பெரும் பாறைக் கல்வெட்டுகளில் ஆதரித்தார். அவர் பௌத்தம், கௌதம புத்தர், அல்லது பௌத்த சங்கம் ஆகிய எதையுமே குறிப்பிடவில்லை (இதில் குறிப்பிடத்தக்க ஒரே ஒரு விதி விலக்கு பெரிய தூண் கல்வெட்டுக்களின் 7வது கல்வெட்டு ஆகும். இது பௌத்த சங்கத்தைக் குறிப்பிடவில்லை. ஆனால் பெக்வித் இதைப் பிந்தைய காலப் போலி என்று கருதுகிறார்).[26] மேலும், இந்தக் கல்வெட்டின் புவியியல் ரீதியான பரவலானது பியாதசி ஒரு பரந்த பேரரசை ஆண்டார் என்பதை நமக்குக் காட்டுகிறது. இது மேற்கில் இருந்த செலூக்கியப் பேரரசுடன் தன் எல்லையைக் கொண்டிருந்தது.[26]

மாறாக, பெக்வித்தைப் பொறுத்த வரையில் அசோகர் பொ. ஊ. மு. 1ஆம் - 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு பிந்தைய மன்னர் ஆவார். அவரது பெயர் வெளிப்படையாகச் சிறு பாறைக் கல்வெட்டுகளிலும், மறைமுகமாகச் சிறு தூண் கல்வெட்டுகளிலும் மட்டுமே தோன்றுகிறது. அவர் புத்தரையோ, பௌத்த சங்கத்தையோ குறிப்பிடவில்லை. வெளிப்படையாகப் பௌத்தத்தை ஆதரிக்கவும் இல்லை.[26] "பிரியதர்சி" என்ற பெயரானது இரண்டு சிறு கல்வெட்டுகளில் (குசர்ரா மற்றும் பைரத்) தோன்றுகிறது. ஆனால் பெக்வித் மீண்டும் அவற்றைப் பிந்தைய போலிகள் என்று கருதுகிறார்.[26] சிறு கல்வெட்டுகள் ஒரு மிக வேறுபட்ட மற்றும் மிகச் சிறிய புவியியல் பகுதியைக் கொண்டுள்ளன. அவை பெரும்பாலும் நடு இந்தியாவிலேயே திரளாக உள்ளன.[26] பெக்வித்தின் கூற்றுப்படி, இந்த பிந்தைய அசோகரின் கல்வெட்டுகள் பண்டைய பௌத்தத்தில் இருந்து "தருவிக்கப்பட்ட பௌத்த" வடிவங்களையே பொதுவாகக் கொண்டுள்ளன. பதிநூற்றாண்டின் தொடக்கத்தின் போது தேதியிடப்பட்ட கல்வெட்டுகள் மற்றும் காந்தாரக் கையெழுத்துப் பிரதிகளில் இருந்து இது உறுதிப்படுத்தப்படுகிறது. இது குசானப் பேரரசின் காலத்தைச் சேர்ந்ததாக உள்ளது.[26] முந்தைய பியாதசியின் கல்வெட்டுக்களின் தரத்தை விட இந்த அசோகரின் கல்வெட்டுக்களின் தரமானது குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறைவாகவே உள்ளது.[26]

பெயர்களும், பட்டங்களும்[தொகு]

அசோகரின் பெயர்களும், பட்டங்களும்
மஸ்கி சிறு பாறைக் கல்வெட்டுக்களில் உள்ள "அசோகா" (𑀅𑀲𑁄𑀓 அ-சோ-கா) என்ற பெயர்.
லும்பினி சிறு தூண் கல்வெட்டுகளில் உள்ள அசோகரின் பட்டமான "தேவனாம்பியேன பியாதசி" (𑀤𑁂𑀯𑀸𑀦𑀁𑀧𑀺𑀬𑁂𑀦 𑀧𑀺𑀬𑀤𑀲𑀺).

"அ-சோக" என்ற பெயரின் பொருள் "சோகம் அற்ற" என்பதாகும். அசோகவதனப் பழங்கதையின் படி, இவரது தாய் இவருக்கு இப்பெயரை வைத்தார். ஏனெனில், இவரது பிறப்பானது இவரது தாயின் சோகங்களை நீக்கியது.[27]

பிரியதசி என்ற பெயரானது அசோகருடன் பொ.ஊ. 3ஆம் - 4ஆம் நூற்றாண்டின் தீபவம்ச நூலில் தொடர்புபடுத்தப்படுகிறது.[28][29] இச்சொல்லின் பொருள் "காண்போர் அனைவராலும் விரும்பப்படுகிற" (சமசுகிருதம்: பிரிய-தர்ஷி) என்று பொருள். அசோகரால் பெறப்பட்ட ஒரு பட்டமாக இது இருக்கலாம் என்று கருதப்படுகிறது.[30][31] கிரேக்க மொழிக் கல்வெட்டுகளில் அசோகருக்காக இப்பட்டம் பயன்படுத்தப்படுகிறது: βασιλεὺς Πιοδασσης ("பசிலெயசு பியோதசேசு").[31]

அசோகரின் கல்வெட்டுகள் இவரது பட்டமான தேவனாம்பியாவைக் (சமசுகிருதம்: தேவானாம்பிரியா, "கடவுள்களால் விரும்பப்படுபவர்") குறிப்பிடுகின்றன. தேவனாம்பியா மற்றும் அசோகர் ஆகிய இருவரும் ஒரே நபர் என்ற அடையாளப்படுத்துதலானது மஸ்கி மற்றும் குசர்ரா கல்வெட்டுகளால் உறுதிப்படுத்தப்படுகிறது. மன்னருக்காக இந்த இரண்டு சொற்களையும் இவை பயன்படுத்துகின்றன.[32][33] இப்பட்டமானது மற்ற மன்னர்களாலும் பயன்படுத்தப்பட்டது. அசோகரின் சம கால மன்னரான தேவனாம்பிய தீசன் மற்றும் அசோகரின் வழித்தோன்றலான தசரத மௌரியர் ஆகியோரால் இப்பட்டம் பயன்படுத்தப்பட்டது.[34]

பிறந்த ஆண்டு[தொகு]

13ஆம் பெரும் பாறைக் கல்வெட்டானது கிரேக்க மன்னர்களான தியோசின் இரண்டாம் அந்தியோசுசு, இரண்டாம் தாலமி, கோனதசின் இரண்டாம் அந்திகோனசு, சைரீனின் மகசு மற்றும், எபிருசு அல்லது கோரிந்தின் அலெக்சாந்தர் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிடுகிறது. இவர்கள் அனைவரும் அசோகரின் போதனைகளைப் பெற்றவர்களாக இருந்தனர்.

அசோகர் பிறந்த சரியான தேதி தெளிவாகத் தெரியவில்லை. தற்போது எஞ்சியுள்ள அக்கால இந்திய நூல்கள் இவரது பிறந்த தேதியைப் பற்றிய தகவல்களைப் பதிவிடவில்லை. பொ. ஊ. மு. 3ஆம் நூற்றாண்டில் இவர் வாழ்ந்தார் என்பது அறியப்பட்டுள்ளது. இவரது கல்வெட்டுகள் பல சம கால ஆட்சியாளர்களைக் குறிப்பிடுகின்றன. அவர்களின் ஆண்டுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அவர்களில் சிலர் தியோசின் இரண்டாம் அந்தியோசுசு, இரண்டாம் தாலமி, கோனதசின் இரண்டாம் அந்திகோனசு, சைரீனின் மகசு மற்றும், எபிருசு அல்லது கோரிந்தின் அலெக்சாந்தர் ஆகியோர் ஆவர்.[35] இவ்வாறாக அசோகர் பொ. ஊ. மு. 4ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது பொ. ஊ. மு. 3ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஒரு ஆண்டில் (அண். பொ. ஊ. மு. 304) கண்டிப்பாகப் பிறந்திருக்க வேண்டும்.[36]

அசோகரின் காலத்தில் பாடலிபுத்திரம்
பாடலிபுத்திரத்தின் கும்ஹரார் தளத்தில் உள்ள தூண்களைக் கொண்ட ஒரு மண்டபத்தின் சிதிலங்கள்.
பொ. ஊ. மு. 4ஆம்-3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாடலிபுத்திரத் தலைநகரம்.
அசோகர் அநேகமாகப் பாடலிபுத்திரத்தில் பிறந்திருக்க வாய்ப்புள்ளது. நவீன நகரமான பாட்னாவின் நடுப் பகுதிகளில் நடத்தப்பட்ட அகழ்வாய்வின் மூலம் அக்காலத்தை ஒட்டிய நகரத்தின் எஞ்சிய பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மூதாதையர்[தொகு]

அசோகரின் சொந்தக் கல்வெட்டுகள் விரிவான தகவல்களைக் கொண்டுள்ளன. ஆனால், இவரது மூதாதையர்கள் பற்றி அவை குறிப்பிடவில்லை.[37] புராணங்கள் மற்றும் மகாவம்சம் போன்ற பிற நூல்கள் இவரது தந்தை மௌரியப் பேரரசரான பிந்துசாரர் என்றும், இவரது பாட்டன் பேரரசைத் தோற்றுவித்த சந்திரகுப்தர் என்றும் குறிப்பிடுகின்றன.[38] அசோகவதனமும் இவரது தந்தையின் பெயரைப் பிந்துசாரர் என்று குறிப்பிடுகிறது. ஆனால், இவரது மூதாதையர்களாகப் புத்தரின் காலத்தில் வாழ்ந்த மன்னரான பிம்பிசாரரை அஜாதசத்ரு, உதயணன், முண்டா, ககவர்னன், சாகலின், துலகுச்சி, மகாமண்டலன், பசேனதி மற்றும் நந்தர் ஆகியோர் வழியாகக் குறிப்பிடுகிறது.[39]

அசோகவதனமானது அசோகரின் தாயைச் சம்பாவைச் சேர்ந்த ஒரு பிராமணரின் மகள் என்று குறிப்பிடுகிறது. அப்பெண் ஒரு மன்னனை மணந்து கொள்வார் என்று கணித்துக் கூறப்பட்டது. இவ்வாறாக, அப்பெண்ணின் தந்தை பாடலிபுத்திரத்திற்கு அவரை அழைத்துச் சென்றார். அங்கு அவர் பிந்துசாரரை மணம் முடித்தார். அவரது பட்டத்து அரசியானார்.[40] அசோகவதனமானது அவரது பெயரைக் குறிப்பிடவில்லை.[41] எனினும், மற்ற பழங்கதைகள் அவருக்கு வெவ்வேறான பெயர்களைக் கொடுக்கின்றன.[42] எடுத்துக்காட்ட, அசோகவதனமாலாவானது அவரைச் சுபத்ரங்கி என்று அழைக்கிறது.[43][44] வம்சத்தபகசினி அல்லது மகாவம்சத்தின் விளக்கவுரையான மகாவம்ச திகா ஆகிய நூல்கள் அவரைத் "தம்மா" என்று அழைக்கின்றன. அவர் ஒரு மோரிய சத்திரிய இனத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடுகின்றன.[44] ஒரு திவ்வியவதனப் பழங்கதையானது அவரை ஜனபத கல்யாணி என்று அழைக்கின்றது.[45] அறிஞர் அனந்த குருகேயின் கூற்றுப்படி, இது ஒரு பெயர் கிடையாது. மாறாக ஒரு அடைமொழியாகும்.[43]

இரண்டாம் நூற்றாண்டு வரலாற்றாளர் அப்பியனின் கூற்றுப்படி, கிரேக்க ஆட்சியாளரான செலூக்கஸ் நிக்காத்தருடன் சந்திரகுப்தர் ஒரு திருமண பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டார். சந்திரகுப்தர் அல்லது அவரது மகன் பிந்துசாரர் ஒரு கிரேக்க இளவரசியை மணந்து கொண்டனர் என்ற ஊகத்திற்கு இது வழி வகுத்தது. எனினும், அசோகரின் தாயோ அல்லது பாட்டியோ ஒரு கிரேக்கராக இருந்தனர் என்பதற்கு எந்த விதச் சான்றும் இல்லை. பெரும்பாலான வரலாற்றாளர்கள் இதை நிராகரிக்கின்றனர்.[46]

இளவரசராக[தொகு]

அசோகரின் சொந்தக் கல்வெட்டுகள் இவரது ஆரம்ப வாழ்க்கையை விளக்குவதில்லை. இவரது ஆரம்ப வாழ்க்கை குறித்த பெரும்பாலான தகவல்கள் இவர் காலத்திற்குப் பிறகு நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்ட, உண்மை என்று நம்பப்படுகிற புராணங்களில் இருந்து வருகின்றன.[47] இந்தப் புராணங்கள் பெரும்பாலும் அசோகரின் முற்பிறப்புகள் குறித்துப் புனைவுத் தகவல்களைக் கொண்டிருக்கும் அதே சமயத்தில் அசோகரின் காலம் குறித்த ஏற்றுக் கொள்ளத்தக்க சில வரலாற்றுத் தகவல்களையும் அவை கொண்டுள்ளன.[47][45]

அசோகவதனத்தின் படி, அசோகரின் கரடு முரடான தோல் காரணமாக அசோகரைப் பிந்துசாரர் வெறுத்தார். பிந்துசாரர் ஒரு நாள் பிங்கல வத்சசிவா என்கிற முனிவரிடம் தனது மகன்களில் தனக்குப் பின் ஆட்சி செய்யத் தகுதியானவர் யார் என்பதைக் கண்டுபிடிக்குமாறு கூறினார். முனிவரின் ஆலோசனைப் படி, தங்க ஓய்வுக் கூடத்தின் தோட்டத்தில் அனைத்து இளவரசர்களையும் வந்து நிற்குமாறு பிந்துசாரர் கூறினார். தன் தந்தை தன்னை வெறுத்ததால் அசோகருக்கு அங்கு செல்லத் தயக்கம் இருந்தது. ஆனால், அசோகரின் தாய் அவரைச் செல்லுமாறு கூறினார். தலை நகரத்தில் இருந்து தோட்டத்திற்கு அசோகர் செல்வதைக் கண்ட மந்திரி இராதகுப்தர் அசோகருக்குப் பயணம் செய்ய ஒரு யானையை வழங்க முன்வந்தார்.[48] தோட்டத்தில் பிங்கல வத்சசிவா அனைத்து இளவரசர்களையும் சோதித்தார். அசோகர் தான் அடுத்த மன்னனாவார் என்பதை உணர்ந்தார். பிந்துசாரர் சினம் கொள்வதைத் தவிர்ப்பதற்காக முனிவர் அடுத்த மன்னனின் பெயரைக் கூற மறுத்தார். மாறாக, சிறந்த சவாரி செய்யும் விலங்கு, இருக்கை, நீர், படகு மற்றும் உணவைக் கொண்டிருக்கும் ஒருவனே அடுத்த மன்னன் ஆவான் என்று கூறினார். ஒவ்வொரு முறையும் தான் அத்தகுதிகளைக் கொண்டிருப்பதாக அசோகர் தெரிவித்தார். பிறகு, முனிவர் அசோகரின் தாயிடம் அவரது மகன் தான் அடுத்த மன்னனாவார் என்று கூறினார். அசோகரின் தாயின் அறிவுரைப்படி, பிந்துசாரின் கோபத்தில் இருந்து தப்பிப்பதற்காக முனிவர் நாட்டை விட்டு வெளியேறினர்.[49]

அசோகரின் அழகற்ற தோற்றத்தைப் பிந்துசாரர் வெறுத்தார் என்று புராணங்கள் பரிந்துரைக்கும் அதே நேரத்தில் அசோகருக்குப் பிந்துசாரர் முக்கியமான பொறுப்புகளையும் கொடுத்தார் என்றும் அவை குறிப்பிடுகின்றன. வட இந்திய மரபுப்படி தக்சசீலத்தில் ஒரு கிளர்ச்சியை ஒடுக்க அசோகருக்குப் பிந்துசாரர் வாய்ப்பு வழங்கினார். இலங்கை மரபுப்படி, உஜ்ஜைனை ஆள்வதற்கு அசோகருக்குப் பிந்துசாரர் வாய்ப்பு வழங்கினார். அசோகரின் மற்ற திறமைகளால் பிந்துசாரர் பாராட்டுணர்வு கொண்டார் என இது பரிந்துரைக்கிறது.[50] அசோகரைத் தொலை தூரப் பகுதிகளுக்கு பிந்துசாரர் அனுப்பியதற்குத் தலை நகரத்திலிருந்து அவரை விலக்கி வைத்திருக்க வேண்டும் என்ற ஒரு காரணமும் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[51]

தக்சசீலத்தில் கிளர்ச்சி[தொகு]

தக்சசீலக் கல்வெட்டானது அசோகரைக் குறிப்பிடுகிறது என்று கருதப்படுகிறது.

அசோகவதனத்தின் படி, தக்சசீலத்தில்[52] (தற்போதைய பிர் மேடு,[53] பாக்கித்தான்) ஒரு கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக இளவரசர் அசோகரைப் பிந்துசாரர் அனுப்பினார். இந்நிகழ்வு இலங்கை மரபில் குறிப்பிடப்படவில்லை. மாறாக அம்மரபு உஜ்ஜைனை ஆள அசோகரைப் பிந்துசாரர் அனுப்பினார் என்பதைக் குறிப்பிடுகிறது. அசோக சூத்திரம் மற்றும் குணாள சூத்திரம் என்ற இரு பிற பௌத்த நூல்கள் காந்தாரத்தின் (இங்கு தான் தக்சசீலம் அமைந்துள்ளது) அரசப் பிரதிநிதியாக அசோகரை பிந்துசாரர் நியமித்தார் என்று குறிப்பிடுகின்றன. உஜ்ஜைனை அவை குறிப்பிடவில்லை.[50]

அசோகவதனத்தின் படி, அசோகருக்குப் பிந்துசார நான்கு மடங்கு (குதிரைப்படை, யானைப்படை, தேர்ப் படை மற்றும் காலாட்படை கொண்ட) பெரிய இராணுவத்தைப் பிந்துசாரர் வழங்கினார். ஆனால், இந்த இராணுவத்திற்கு எந்த வித ஆயுதங்களையும் கொடுக்க அவர் மறுத்தார். தான் ஒரு மன்னனாவதற்குத் தகுதியானவன் என்றால் ஆயுதங்கள் தோன்றும் என்று அசோகர் தெரிவித்தார். பிறகு, பூமியிலிருந்து தெய்வங்கள் தோன்றின. இராணுவத்திற்கு ஆயுதங்களைக் கொடுத்தன. தக்சசீலத்தை அசோகர் அடைந்த போது குடி மக்கள் அவரை வரவேற்றனர். கிளர்ச்சியானது தீய மந்திரிகளுக்கு எதிராக மட்டுமே என்றும் மன்னனுக்கு எதிராக அல்ல என்றும் அவர்கள் கூறினர். பிறகு, சில காலம் கழித்து அசோகர் கசர்களின் பகுதியிலும் இதே போல் வரவேற்கப்பட்டார். ஒட்டு மொத்த உலகத்தையும் அசோகர் வெல்வார் என்று கடவுள்கள் தெரிவித்தன.[52]

தக்சசீலமானது ஒரு செல்வச் செழிப்புமிக்க மற்றும் புவிசார் அரசியல் ரீதியாகச் செல்வாக்கு மிக்க நகரமாக இருந்தது. வரலாற்று ஆதாரங்கள் அசோகரின் காலத்தில் இது மௌரியத் தலைநகரமான பாடலிபுத்திரத்துடன் உத்தர பாதை வணிக வழியால் நல்ல முறையில் இணைக்கப்பட்டிருந்தது என்பதை நிரூபிக்கின்றன.[54] எனினும், எந்த ஒரு எஞ்சியிருக்கும் அசோகர் கால நூல்களும் தக்சசீலக் கிளர்ச்சியைப் பற்றிக் குறிப்பிடவில்லை. அசோகரின் எந்த ஒரு பதிவும் இவர் இந்நகரத்திற்கு வருகை புரிந்தார் என்பதைக் குறிப்பிடவில்லை.[55] இவை தவிர்த்து, தக்சசீலக் கிளர்ச்சியில் அசோகரின் பங்கு குறித்த புராணத்தின் வரலாற்றுத் தன்மையானது தக்சசீலத்திற்கு அருகில் சிர்கப் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் அரமேய மொழிக் கல்வெட்டு மூலம் தெரிவிக்கப்படுகிறது. இக்கல்வெட்டானது "பிரித்ர்" என்ற எழுத்துக்களுடன் தொடங்கும் ஒரு பெயரை உள்ளடக்கி உள்ளது. பெரும்பாலான அறிஞர்கள் இதை "பிரியதர்சி" என்று முழுமையடைய வைக்கின்றனர். இது அசோகரின் பட்டம் ஆகும்.[50] தக்சசீலத்துடன் அசோகரின் தொடர்பை உறுதி செய்யும் மற்றொரு சான்றானது தக்சசீலத்திற்கு அருகில் உள்ள தர்மராஜிக தூபியின் பெயர் ஆகும். இப்பெயரானது இது அசோகரால் ("தர்ம-இராஜன்") கட்டப்பட்டது என்று பரிந்துரைக்கிறது.[56]

அசோகருக்குத் தெய்வங்கள் அதிசயிக்கத்தக்க வகையில் ஆயுதங்களைக் கொடுத்த கதையானது அசோகரைத் தெய்வமாக்கும் ஒரு நூல் முறை வழியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது அல்லது அசோகரை வெறுத்த பிந்துசாரர் தக்சசீலத்தில் அசோகர் தோல்வி அடைய வேண்டும் என்று விரும்பினார் என்பதை இது குறிக்கிறது.[57]

உஜ்ஜைனின் ஆளுநராக[தொகு]

மகாவம்சத்தின் படி, பிந்துசாரர் அசோகரைத் தற்கால உஜ்ஜைனின் அரசப் பிரதிநிதியாக நியமித்தார்.[50] நடு இந்தியாவின் அவந்தி மாகாணத்தில் ஒரு முக்கியமான நிர்வாக மற்றும் வணிக மையமாக இந்ந்கரம் திகழ்ந்தது.[58] நடு இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட சரு மரு கல்வெட்டிலிருந்து இந்த மரபு அறிந்து கொள்ளப்படுகிறது. ஓர் இளவரசராக இந்த இடத்திற்கு இவர் வருகை புரிந்தார் என்பதை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.[59] அசோகரின் சொந்த பாறைக் கல்வெட்டுகள் இவரது ஆட்சியின் போது உஜ்ஜைனில் ஓர் இளவரசர் அரசப் பிரதிநிதியாக இருந்ததைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.[60] உஜ்ஜைனில் ஓர் அரசப் பிரதிநிதியாக அசோகரே சேவையாற்றினார் என்ற மரபுக்கு இது மேலும் வலுவூட்டுகிறது.[61]

ஓர் இளவரசராக இருந்த பொழுது, உஜ்ஜைன் பகுதியில் அசோகர் இருந்ததைச் சரு மரு நினைவுக் கல்வெட்டு குறிப்பிடுவதாகக் கருதப்படுகிறது.

அசோகரின் காலத்தில் பாடலிபுத்திரமானது உஜ்ஜைனுடன் பல்வேறு வழிகளால் இணைக்கப்பட்டிருந்தது. பயணிக்கும் வழியில் அசோகரின் பரிவாரமானது ரூப்நாத் என்ற இடத்தில் முகாமிட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அங்கு இவரது கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[62]

இலங்கை மரபின் படி, அசோகர் விதிசாவிற்கு வருகை புரிந்துள்ளார். அங்கிருந்து உஜ்ஜைனுக்குச் செல்லும் போது ஓர் அழகான பெண்ணை விரும்பினார். தீபவம்சம் மற்றும் மகாவம்சத்தின் படி, அப்பெண் தேவி ஆவார். அவர் ஒரு வணிகரின் மகள் ஆவார். மகாபோதி வம்ச நூலின் படி, அப்பெண்ணின் பெயர் விதிச மகாதேவி ஆகும். அவர் கௌதம புத்தரின் சாக்கிய இனத்தைச் சேர்ந்தவர் ஆவார். அசோகரின் குடும்பத்தைப் புத்தருடன் தொடர்புபடுத்துவதற்காகப் பௌத்த கால வரிசை நூல்கள் இந்தச் சாக்கியத் தொடர்பை உருவாக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.[63] தன் இறுதி ஆண்டுகளில் அப்பெண் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தார் என்று பௌத்த நூல்கள் மறைமுகமாகக் குறிப்பிடுகின்றன. ஆனால், பௌத்த மதத்திற்கு அவர் மாறியது பற்றி அவை விளக்கவில்லை. எனவே, அசோகரைச் சந்தித்த போதே அப்பெண் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.[64]

மகாவம்சம் உஜ்ஜைனில் அசோகரின் மகன் மகிந்தரைத் தேவி பெற்றெடுத்தார் என்று குறிப்பிடுகிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சங்கமித்தை என்ற ஒரு மகளையும் அவர் பெற்றெடுத்தார்.[65] மகாவம்சம் அசோகரின் மகன் மகிந்தர் அசோகரின் ஆட்சியின் 6ஆம் ஆண்டின் போது தன் 20ஆம் வயதில் இளவரசர் ஆனார் என்று குறிப்பிடுகிறது. இதன் பொருள் அசோகர் அரியணையில் அமர்ந்த போது மகிந்தருக்கு வயது 14ஆக வயதாக இருக்க வேண்டும் என்பதாகும். அசோகர் இளம் வயதாக 20 வயதாகியிருந்த போதே மகிந்தர் பிறந்திருந்தாலும் கூட அசோகர் தன் 34வது வயதில் அரியணையில் அமர்ந்திருக்க வேண்டும். இதன் பொருள் ஓர் அரசப் பிரதிநிதியாக அசோகர் பல ஆண்டுகளுக்குச் சேவையாற்றினார் என்பதாகும்.[66]

அரியணையில் அமர்தல்[தொகு]

புராணங்கள் அசோகர் ஒரு பட்டத்து இளவரசர் இல்லை எனப் பரிந்துரைக்கின்றன. அரியணையில் அமரும் நிலைக்கு இவர் வளர்ச்சியடைந்ததும் விவாதத்திற்குரியதாக உள்ளது.[67]

பிந்துசாரரின் மூத்த மகனான சுசிமா ஒரு முறை ஒரு வழுக்கைத் தலையுடைய மந்திரியின் தலையில் வேடிக்கை செய்வதற்காக அடித்தார் என்று அசோகவதனம் குறிப்பிடுகிறது. அரியணையில் அமர்ந்த பிறகு சுசிமா வேடிக்கையாகத் தனது தலையில் வாளையும் கொண்டு காயப்படுத்தலாம் என மந்திரிக்குக் கவலை ஏற்பட்டது. எனவே, நேரம் வந்த போது அவர் 500 மந்திரிகளை அரியணைக்கு அசோகரின் உரிமைக்கு ஆதரவு அளிக்குமாறு தூண்டினார். ஒரு சக்கரவர்த்தியாக (பிரபஞ்ச ஆட்சியாளர்) அசோகர் வருவது என்பது முன்னரே கணித்துக் கூறப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.[68] சில காலத்திற்குப் பிறகு தக்சசீலமானது மீண்டும் கிளர்ச்சியில் ஈடுபட்டது. கிளர்ச்சியை ஒடுக்கச் சுசிமாவைப் பிந்துசாரர் அனுப்பினார். இதற்குப் பிறகு சீக்கிரமே, பிந்துசாரருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் சீக்கிரமே இறக்கும் நிலை வந்தது. சுசிமா தக்சசீலாவில் இருந்த போது கிளர்ச்சியை ஒடுக்குவதில் வெற்றியடையவில்லை. சுசிமாவைத் தலைநகருக்கு வருமாறு பிந்துசாரர் திரும்ப அழைத்தார். தக்சசீலா நோக்கி அணிவகுக்குமாறு அசோகரிடம் கேட்டுக் கொண்டார்.[69] எனினும், மந்திரிகள் பிந்துசாரிடம் அசோகருக்கு உடல் நலம் குன்றியிருப்பதாகவும், தக்சசீலத்தில் இருந்து சுசிமா திரும்பி வரும் வரை அரியணையில் அசோகரைத் தற்காலிகமாக அமர வைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தனர்.[68] பிந்துசாரர் இதற்கு மறுத்த போது, அரியணையானது தனக்கு உரியதாக இருந்தால் அடுத்த மன்னனாக கடவுள்கள் தனக்கு மகுடம் சூட்டும் என்று அசோகர் தெரிவித்தார். அந்த கணத்தில் கடவுள்கள் அசோகருக்கு மகுடத்தைச் சூட்டின. பிந்துசாரர் இறந்தார். அசோகர் தனது ஆளுமையை உலகம் முழுவதும் விரிவாக்கினர். இதில் பூமிக்கு மேலே இருந்த யக்சர்களின் உலகமும், பூமிக்குக் கீழே இருந்த நாகர்களின் உலகமும் அடங்கும்.[69] சுசிமா தலைநகரத்திற்குத் திரும்பிய போது, அசோகரின் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதம மந்திரியான இராதகுப்தர் அவரை ஒரு மரக்கரிக் கொட்டிலாக மாற்றினார். சுசிமா ஒரு வலி நிறைந்த நிலையில் இறந்தார். அவரது தளபதி பத்ரயுதா ஒரு பௌத்தத் துறவியானார்.[70]

சாரநாத்தில் உள்ள அசோகரின் சிங்கத் தூபி. நான்கு ஆசியச் சிங்கங்கள் ஒன்றின் முதுகுக்குப் பின்புறம் ஒன்று இருப்பதை இது காட்டுகிறது. பௌத்தத்தின் நான்கு உயர்ந்த உண்மைகளை இது அடையாளப்படுத்துகிறது. இவை தர்மச் சக்கரத்திற்கு ஆதரவளிக்கின்றன.[71] ஒரு வட்ட மணிச் சட்டத்தின் மீது சிங்கங்கள் நிற்கின்றன. இது தர்மச் சக்கரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கீழே நான்கு வெவ்வேறு விலங்குகள் காட்டப்பட்டுள்ளன. அவை குதிரை, காளை, யானை மற்றும் சிங்கம் ஆகியவை ஆகும். வட்ட மணிச் சட்டத்திற்குக் கீழே உள்ள கட்டடக்கலை மணியானது தனித்துவ பாணியில் தலைகீழாகத் திருப்பப்பட்ட தாமரையாகும். இடம் சாரநாத் அருங்காட்சியகம்.[72]

பிந்துசாரருக்கு உடல் நலம் குன்றிய போது, உஜ்ஜைனிலிருந்து பாடலிபுத்திரத்திற்கு அசோகர் திரும்பினார். தலைநகரத்தின் கட்டுப்பாட்டைப் பெற்றார் என்று மகாவம்சம் குறிப்பிடுகிறது. தனது தந்தையின் இறப்பிற்குப் பிறகு அசோகர் தனது மூத்த சகோதரரைக் கொன்று அரியணையில் அமர்ந்தார் என்று குறிப்பிடுகிறது[64]. சுமனா உள்ளிட்ட தன்னுடைய 99 ஒன்று விட்ட சகோதரர்களையும் அசோகர் கொன்றார் என்று இந்நூல் குறிப்பிடுகிறது.[60] தீபவம்சமானது தன்னுடைய சகோதரர்வில் 100 பேரை அசோகர் கொன்றார் என்றும், 4 ஆண்டுகளுக்குப் பிறகு மகுடம் சூட்டப்பட்டார் என்றும் குறிப்பிடுகிறது.[68] வம்சத்தபகசினி நூலானது, அசீவிக முனிவர் ஒருவர் இந்த இறப்புகளை முன்னரே அசோகரின் தாயின் ஒரு கனவுக்குக் கூறிய விளக்கத்தை அடிப்படையாக் கொண்டு கணித்தார் என்று குறிப்பிடுகிறது.[73] இந்நூல்களின் படி, அசோகரின் சொந்தச் சகோதரரான திசா மட்டுமே உயிருடன் இருந்தார்.[74] மற்ற நூல்கள் இந்த எஞ்சியிருந்த சகோதரரின் பெயரை விதசோகர், விகதசோகர், சுதத்தா (அயுவாங் சுவான் நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் சோ-த-தொ) அல்லது சுகத்ரா (பென்-பை-குங்-தே-குன் நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் சியு-க-து-லு) என்று குறிப்பிடுகின்றனர்.[74]

99 மற்றும் 100 போன்ற எண்ணிக்கைகளானவை மிகைப்படுத்தப்பட்டவையாகும். அசோகர் தனது சகோதரர்களில் ஏராளமானவர்களைக் கொன்றார் என்பதைக் குறிப்பிடும் ஒரு வழி இதுவாகும்.[68] அசோகர் அரியணைக்குத் தகுதியற்றவராக இருந்திருக்கவும் வாய்ப்பிருந்துள்ளது. அரியணையைப் பெறுவதற்காகத் தனது சகோதரர் (அல்லது சகோதரர்களைக்) கொன்றிருக்கலாம். எனினும், பௌத்த நூல்கள் இக்கதையை மிகைப்படுத்தியிருக்கலாம். இந்நூல்கள் புத்த மதத்திற்கு மாறுவதற்கு முன்னர் இவரை மோசமானவராகச் சித்தரிக்க முயன்றுள்ளன. அசோகரின் 5ஆம் பாறைக் கல்வெட்டானது, "அசோகரின் சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் பிற உறவினர்களின் குடும்பங்களின்" நலத்தை மேற்பார்வையிடுவது அதிகாரிகளின் பணிகளில் அடங்கும் என்று குறிப்பிடுகிறது. அசோகர் அரியணைக்கு வந்த நேரத்தில் இவரின் ஒன்றுக்கும் மேற்பட்ட சகோதரர்கள் எஞ்சியிருந்தனர் என்பதை இது பரிந்துரைக்கிறது. எனினும், சில அறிஞர்கள் இந்தப் பரிந்துரையை எதிர்க்கின்றனர். இந்தக் கல்வெட்டு இவரது சகோதரர்களின் குடும்பங்களைப் பற்றி மட்டுமே பேசுகிறது, சகோதரர்களைப் பற்றி அல்ல என்று வாதிடுகின்றனர்.[74]

அரியணையேறிய ஆண்டு[தொகு]

இலங்கை நூல்களான மகாவம்சம் மற்றும் தீபவம்சம் ஆகியவை கௌதம புத்தரின் இறப்பிற்குப் பிறகு 218 ஆண்டுகள் கழித்து அசோகர் அரியணை ஏறினார் என்றும், 37 ஆண்டுகளுக்கு ஆட்சி புரிந்தார் என்றும் குறிப்பிடுகின்றன.[75] எனினும், புத்தரின் பிறந்த தேதியே விவாதத்திற்குரியதாக உள்ளது.[76] வட இந்திய மரபானது புத்தரின் இறப்பிற்குப் பிறகு 100 ஆண்டுகளுக்கு அசோகர் ஆட்சி செய்தார் என்று குறிப்பிடுகிறது. இது அரியணை ஏறிய ஆண்டு குறித்து மேற்கொண்ட விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.[18]

இலங்கை மரபைச் சரியென்று கருதுவோமேயானால் பல அறிஞர்களால் பரிந்துரைக்கப்பட்ட ஆண்டான பொ. ஊ. மு. 483இல் புத்தர் இறந்தார் என்றும், அசோகர் பொ. ஊ. மு. 265இல் அரியணையில் அமர்ந்திருக்க வேண்டும் என்றும் எடுத்துக் கொள்ள வேண்டும்.[76] புராணங்கள் அசோகரின் தந்தையான பிந்துசாரர் 25 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்தார் என்று குறிப்பிடுகின்றன. இலங்கை மரபில் குறிப்பிட்டுள்ள படி அவர் 28 ஆண்டுகள் ஆட்சி செய்யவில்லை என்று குறிப்பிடுகின்றன.[38] இது உண்மை என்றால் அசோகர் அரியணையேறிய ஆண்டானது மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக இருக்க வேண்டும். அதாவது பொ. ஊ. மு. 268 ஆகும். மாறாக, இலங்கை மரபு சரியெனில் புத்தர் பொ. ஊ. மு. 486இல் (இந்த ஆண்டு கான்டோனியப் பதிவுகளால் ஆதரவளிக்கப்படுகிறது) இறந்தார் என்று கருதுவோமேயானால் அசோகர் அரியணையேறிய ஆண்டானது பொ. ஊ. மு. 268 ஆகும்.[76] அசோகர் ஒரு இறையாண்மையுடைய ஆட்சியாளராக மாறி, அதற்குப் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து ஒரு மன்னனானார் என மகாவம்சம் குறிப்பிடுகிறது. பிந்துசாரரின் மற்ற மகன்களுடன் ஒரு வாரிசுப் போரில் இவர் இந்த நான்கு ஆண்டுகளின் போது சண்டையிட்டார் என்பது இந்த இடைப்பட்ட காலத்தை விளக்குவதாக அமைகிறது.[77]

அசோகரின் மந்திரியான எசசு தனது கைகளில் சூரியனை மறைத்து வைத்ததாக ஒரு கதை அசோகவதனத்தில் உள்ளது. பேராசிரியர் எக்கர்மோன்டு என்பவர் இது ஒரு பகுதியளவு சூரிய கிரகணத்தைக் குறிக்கிறது என்று குறிப்பிடுகிறார். இது வட இந்தியாவில் 4 மே பொ. ஊ. மு. 249இல் காணப்பட்டது என்கிறார்.[78] இந்தச் சூரிய கிரகணத்திற்குப் பிறகு அசோகர் புத்தத் தலங்களுக்கு ஒரு புனிதப் பயணம் மேற்கொண்டார் என அசோகவதனம் குறிப்பிடுகிறது. அசோகரின் உருமிந்தே தூண் கல்வெட்டானது இவரது 21ஆம் ஆண்டு ஆட்சியின் போது லும்பினிக்கு வருகை புரிந்தார் என்று குறிப்பிடுகிறது. நூலில் குறிப்பிட்டுள்ள படி, புனிதப் பயணத்தின் ஒரு பகுதியாக இந்த வருகை நடைபெற்றது என்றும், சூரிய கிரகணத்திற்கு 1 அல்லது 2 ஆண்டுகள் கழித்து லும்பினிக்கு அசோகர் வருகை புரிந்தார் என்றும் கருதுவோமேயானால் இவர் அரியணை ஏறிய ஆண்டானது பொ. ஊ. மு. 268-269 என்று கருதலாம்.[76][35] எனினும், இக்கருத்து அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. எடுத்துக்காட்டாக, யோவான் ஸ்ட்ராங் என்பவரின் கூற்றுப் படி, அசோகவதனத்தில் விளக்கப்பட்டுள்ள இந்நிகழ்வானது ஆண்டுகளுடன் தொடர்புடையது அல்ல. புராணத்தின் இலக்கிய மற்றும் சமயக் கருத்தை எக்கர்மோன்டின் தருவிப்பானது பெருமளவுக்குப் புறக்கணிப்பதாக அவர் கூறுகிறார்.[79]

பௌத்தத்தைத் தழுவுவதற்கு முந்தைய ஆட்சி[தொகு]

பௌத்தத்தைத் தழுவுவதற்கு முன்னர் அசோகர் ஒரு வன்னடத்தையுடைய மனிதனாக இருந்தார் என இலங்கை மற்றும் வட இந்திய மரபுகள் ஆகிய இரண்டுமே அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிடுகின்றன.[80] அசோகர் "சந்தசோகர்" ("மூர்க்கமான அசோகர்") என்று அழைக்கப்பட்டார். ஏனெனில், மோசமான செயல்களைச் செய்வதில் இவர் சில ஆண்டுகளைக் கழித்தார். இறுதியாக, இவர் தர்மசோகர் ("நன்னடத்தையுடைய அசோகர்") என்று பௌத்தத்திற்கு மாறியதற்குப் பிறகு அழைக்கப்பட்டார்.[81]

அசோகவதனமும் இவரைச் "சந்தசோகர்" என்று அழைக்கிறது. இவர் பல இரக்கமற்ற செயல்களைச் செய்தார் என்று விளக்குகிறது:[82]

  • இவர் அரியணைக்கு ஏறுவதற்கு உதவி புரிந்த மந்திரிகள் இவர் அரியணைக்கு ஏறிய பிறகு இவரை மதிப்பிற்குரியவர் அல்ல என்று கருதத் தொடங்கினர். அவர்களின் விசுவாசத்தைச் சோதிப்பதற்காக, மலர் மற்றும் பழங்களைக் கொடுக்கும் ஒவ்வொரு மரத்தையும் வெட்டுமாறு அவர்களுக்கு அசோகர் ஆணையிட்டார். இந்த ஆணையை அவர்கள் செயல்படுத்துவதில் தோல்வி அடைந்த போது, 500 மந்திரிகளின் தலைகளை அசோகர் தானே வெட்டினார்.[82]
  • ஒரு நாள் சிறு நடை உலாவின் போது அசோகரும், அவரது துணைவியர்களும் ஓர் அழகான அசோக மரத்தைத் தாண்டிச் சென்றனர். சில காலத்திற்குப் பிறகு, அசோகர் தூங்கிய போது, இவரது பெயருடைய அந்த மரத்தின் மலர்களையும், கிளைகளையும் வெறுப்புணர்வால் அவர்கள் வெட்டினர். அசோகர் விழித்ததற்குப் பிறகு, அந்த 500 துணைவியர்களுக்கும் தண்டனையாக எரித்துக் கொன்றார்.[83]
  • இத்தகைய படுகொலைகளில் மன்னர் ஈடுபடுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பிரதம மந்திரி இராதகுப்தர் எதிர்காலப் படுகொலைகளைச் செயல்படுத்த ஒரு தண்டனை கொடுப்பவரை பணியமர்த்தலாம் என்று பரிந்துரைத்தார். இதன் மூலம் மன்னர் தூயவராக இருப்பார் என்று கருதினர். மகதத்தின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிறுவனாகிய கிரிகன் என்பவன் ஒட்டு மொத்த நாவலந்தீவையும் தன்னால் மரண தண்டனைக்கு உட்படுத்த முடியும் என்று பெருமையாகக் கூறினான். இச்செயல்களைச் செய்வதற்காக பணியமர்த்தப்பட்டான். இவன் சந்தகிரிகன் ("மூர்க்கமான கிரிகன்") என்று அறியப்பட்டான். அவனது வேண்டுகோளின் பேரில், பாடலிபுத்திரத்தில் ஒரு சிறையை அசோகர் கட்டினார்.[83] இது அசோகரின் நரகம் என்று அழைக்கப்பட்டது. வெளிப்புறத்திலிருந்து காணும்போது சிறை அழகாக இருக்கும். ஆனால், உட்புறம் கிரிகன் கைதிகளை மிருகத்தனமாகச் சித்திரவதை செய்தான்.[84]

5ஆம் நூற்றாண்டு சீனப் பயணியான பாசியான் நரகத்தின் சித்திரவதை முறைகளை அறிவதற்காக நரகத்திற்கு அசோகர் தானே சென்றார் என்று குறிப்பிடுகிறார். பிறகு தன் சித்திரவதை முறைகளை உருவாக்கினார் என்று குறிப்பிடுகிறார். 7ஆம் நூற்றாண்டுப் பயணியான சுவான்சாங் அசோகரின் "நரகத்" தளத்தைக் குறிப்பதற்காக ஒரு தூண் இருப்பதைக் கண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.[81]

மகாவம்சம் அசோகரின் இரக்கமற்ற தன்மை குறித்து சில இடங்களில் மறைமுகமாகக் குறிப்பிடுகிறது. இவரது தீய செயல்கள் காரணமாக அசோகர் ஆரம்பத்தில் சந்தசோகர் என்று அழைக்கப்பட்டார் என்று குறிப்பிடுகிறது. ஆனால், பௌத்தத்தைத் தழுவியதற்குப் பிறகு தன் பக்தியுடைய செயல்களால் தர்மசோகர் என்று அழைக்கப்பட்டார் என்று குறிப்பிடுகிறது.[85] எனினும், வட இந்திய மரபுகளை போல் இலங்கை நூல்கள் அசோகரால் செய்யப்பட்ட எந்த ஒரு குறிப்பிட்ட தீய செயல்களையும் குறிப்பிடுவதில்லை. அவை குறிப்பிடும் தீய செயல் இவர் தன் சகோதரர்களில் 99 பேரைக் கொன்றார் என்பதாகும்.[80]

பௌத்தத்தைத் தழுவுவற்கு முன்னர் அசோகரை ஒரு தீய மனிதராகக் குறிப்பிடும் தகவல்கள் பௌத்த எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்ட தகவல்கள் என்று கருதப்படுகிறது.[81] பௌத்தத்திற்கு மாறிய செயலானது இவர் மீது ஓர் அதிசயத்தை நடத்தியது என்று காட்ட அவர்கள் முயற்சித்துள்ளனர்.[80] இந்த மாற்றத்தை நாடகப்படுத்தும் முயற்சியாக, இத்தகைய புராணங்கள் அசோகரின் முந்தைய தீய குணத்தையும், பௌத்தத்தைத் தழுவியதற்குப் பிந்தைய இவரின் நன்னடத்தையையும் மிகைப்படுத்திக் கூறுகின்றன.[86]

கலிங்கப் போரும், பௌத்தத்தைத் தழுவுதலும்[தொகு]

ககனஹள்ளி பொறிப்புத் துண்டானது அசோகரைப் பிராமி விவரிப்பான "மன்னர் அசோகர்" என்பதுடன் சித்திரிக்கிறது. ஆண்டு பொ.ஊ. 1ஆம் - 3ஆம் நூற்றாண்டு.[87]

தனது ஆட்சியின் 8வது ஆண்டின் போது கலிங்கப் பகுதியை இவர் வென்றார் என்று இவரது கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. போரின் போது ஏற்பட்ட அழிவானது இவர் வன்முறையைக் கைவிட வைத்தது. பின் வந்த ஆண்டுகளில் பௌத்தத்தை நோக்கி இவர் ஈர்க்கப்பட்டார்.[88] இவரது பாறைக் கல்வெட்டுகளில் 13வது கல்வெட்டானது கலிங்கத்தின் அழிவைக் கண்டதற்குப் பிறகு மன்னர் அடைந்த பெரும் வருத்தத்தைக் குறிப்பிடுகின்றன:

கலிங்கம் இணைக்கப்பட்டதற்குப் பிறகு, இறையுணர்வுச் சட்டத்திற்கு செயல் முனைப்பு மிக்க பாதுகாப்பு, அச்சட்டத்தை இவர் விரும்பியது மற்றும் அச்சட்டத்தை மனதில் பதிய வைத்தது ஆகியவற்றை இந்தப் புனிதமான கம்பீரமானவர் நேரடியாகத் தொடங்கினார். இவ்வாறாக இந்தப் புனிதமான கம்பீரமானவரின் வருத்தமானது கலிங்கத்தை வென்றதற்காகத் தோன்றியது. ஏனெனில், முன்னர் வெல்லப்படாத நாடு வெல்லப்பட்டதானது படு கொலை, இறப்பு, மற்றும் கைது செய்யப்பட்ட மக்கள் தூக்கிச் செல்லப்பட்டது ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது. இது இந்தப் புனிதமான கம்பீரமானவருக்கு ஆழ்ந்த மனத் துயரம் மற்றும் வருத்த உணர்வை ஏற்படுத்தியது.[89]

மற்றொரு புறம், இலங்கை மரபானது தனது ஆட்சியின் 8ஆம் ஆண்டு காலத்திலேயே ஒரு தீவிரமான பௌத்தராக அசோகர் ஏற்கனவே மாறியிருந்தார் என்பதைப் பரிந்துரைக்கின்றன. தனது ஆட்சியின் 4வது ஆண்டின் போது இவர் பௌத்தத்துக்கு மாறினார் என்று குறிப்பிடுகின்றன. இவரது ஆட்சிக் காலத்தின் 5ஆம் ஆண்டு முதல் 7ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் 84,000 புத்த விகாரங்களைக் கட்டினார் என்று குறிப்பிடுகின்றன.[88] பௌத்தத் தொன்மக் கதைகள் கலிங்கப் படையெடுப்பு பற்றி எதையும் குறிப்பிடவில்லை.[90]

எக்கர்மோன்டு போன்ற சில அறிஞர்கள் இலங்கை மரபை அடிப்படையாகக் கொண்டு கலிங்கப் போருக்கு முன்னரே அசோகர் பௌத்தத்திற்கு மாறினார் என்று நம்புகின்றனர்.[91] இக்கோட்பாட்டை விமர்சிப்பவர்கள் அசோகர் ஏற்கனவே ஒரு பௌத்த மதத்தினராக இருந்திருந்தால் அவர் வன்முறை நிறைந்த கலிங்கப் போரை நடத்தியிருக்கமாட்டார் என்று வாதிடுகின்றனர். இதற்கு எக்கர்மோன்டு அசோகர் "நடு வழி, பௌத்தம்" குறித்த தனது சொந்த அறி நிலையைக் கொண்டிருந்தார் என்ற விளக்கக் கோட்பாட்டைக் குறிப்பிடுகிறார்.[92]

சில தொடக்க கால எழுத்தாளர்கள் போரால் ஏற்பட்ட இடர்பாடுகளைக் கண்டதற்குப் பிறகு அசோகர் திடீரென பௌத்தத்திற்கு மாறினார் என்று நம்பினர். கலிங்கத்தை இணைத்ததற்குப் பிறகு இவர் தர்மத்திற்கு நெருங்கியவராக மாறினார் என்று இவரது 13வது பெரும் பாறைக் கல்வெட்டானது குறிப்பிடுவதிலிருந்து இவ்வாறு நம்பினர்.[90] எனினும், போருக்குப் பிறகு அசோகர் பௌத்தத்திற்கு மாறியிருந்தாலும் ஒரு திடீர் நிகழ்வாக இவரது மத மாற்றம் நிகழாமல் படிப்படியானவே நிகழ்ந்தது என்று கல்வெட்டு ஆதாரங்கள் பரிந்துரைக்கின்றன.[90] எடுத்துக்காட்டாக கலிங்கப் படையெடுப்பு நடந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இவரது ஆட்சிக் காலத்தின் 13வது ஆண்டின் போது பொறிக்கப்பட்ட ஒரு சிறு பாறைக் கல்வெட்டில், தான் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக உபாசகராக இருப்பதாகவும், ஆனால் குறிப்பிடும் அளவுக்கு எந்த ஒரு முன்னேற்றத்தையும் காணவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் கடந்தாண்டு தான் சங்கத்தால் ஈர்க்கப்பட்டு நெருங்கியதாகவும், ஒரு மிகத் தீவிரமான பின்பற்றாளராக மாறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.[90]

கலிங்கப் போர்[தொகு]

அசோகரின் 13ஆம் பெரும் பாறைக் கல்வெட்டின் படி, அரியணைக்கு வந்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு இவர் கலிங்கத்தை வென்றார். கலிங்கத்தை வென்ற போது 1 இலட்சம் ஆண்களும், விலங்குகளும் போரில் கொல்லப்பட்டனர்; அதைப் போலப் பல மடங்கு எண்ணிக்கையிலானவர்கள் "அழிந்து போயினர்"; கலிங்கத்திலிருந்து கைதிகளாக 1.50 இலட்சம் ஆண்களும், விலங்குகளும் கொண்டு செல்லப்பட்டனர் என்பதையும் இவரது கல்வெட்டு குறிப்பிடுகிறது. இந்த அழிவால் ஏற்பட்ட வருத்தமானது தர்மத்தைப் பின்பற்றுவதிலும், அதைப் பரப்புவதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதற்குக் காரணமாக அமைந்தது என்று இவர் குறிப்பிட்டுள்ளார்.[93] ஒரு நாட்டை வென்ற போது ஏற்பட்ட படு கொலை, இறப்பு மற்றும் இடம்பெயர்வு ஆகியவற்றை வலி நிறைந்ததாகவும், மோசமானதாகவும் தான் தற்போது கருதுவதாக அசோகர் தெரிவிக்கிறார். சமயம் சார்ந்த மக்கள் மற்றும் வீட்டு உடமையாளர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தை அதை விட இன்னும் மோசமானதாகத் தான் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.[93]

எர்ரகுடி, கிர்நார், கல்சி, மானேசரம், சகபசகர்கி மற்றும் காந்தாரம் உள்ளிட்ட பல இடங்களில் இந்தக் கல்வெட்டானது பொறிக்கப்பட்டுள்ளது.[94] எனினும், கலிங்கப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட அசோகரின் கல்வெட்டுகளில் இத்தகவல்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. கலிங்கப் பகுதியில் 13ஆம் மற்றும் 14ஆம் பாறைக் கல்வெட்டுகளுக்குப் பதிலாக இரண்டு வெவ்வேறு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவை அசோகரின் வருத்த உணர்வு பற்றி எதையும் குறிப்பிடவில்லை. கலிங்க மக்களுக்கு முன்னாள் இத்தகைய வருத்தத்தை வெளிப்படுத்துவது என்பது அரசியல் ரீதியாகத் தேவையற்ற ஒன்று என்று அசோகர் ஒரு வேளை கருதியிருக்கலாம்.[95] அசோகரின் பாறைக் கல்வெட்டுகளில் விளக்கப்பட்டுள்ள படி கலிங்கப் போரும், அதன் விளைவுகளும் "உண்மையாக இல்லாமல், கற்பனையாக இருப்பதற்கும்" மற்றொரு வாய்ப்பிருந்தது என்று குறிப்பிடப்படுகிறது. கலிங்கத்தைத் தாண்டிய பகுதிகளில் இருப்பவர்களுக்காக இந்த விளக்கம் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும், அதனால் இதன் துல்லியத்தன்மை உறுதிப்படுத்த இயலாததாக உள்ளது எனவும் குறிப்பிடப்படுகிறது.[96]

அசோகரின் மற்ற எந்த ஓர் இராணுவச் செயல்பாடுகள் குறித்தும் பண்டைக் கால நூல்கள் குறிப்பிடுவது இல்லை. எனினும், 16ஆம் நூற்றாண்டு எழுத்தாளரான தரநாதர் அசோகர் ஒட்டு மொத்த ஜம்புத்விபாவையும் வென்றார் என்று கோருகிறார்.[91]

பௌத்தத்துடன் முதல் தொடர்பு[தொகு]

அசோகர் பௌத்த மதத்திற்கு மாறியது குறித்து வேறுபட்ட நூல்கள் வேறுபட்ட தகவல்களைக் கொடுக்கின்றன.[81]

இலங்கை மரபின் படி, அசோகரின் தந்தையான பிந்துசாரர் பண்டைய வேத சமயத்தைப் பின்பற்றுபவராக இருந்தார். அசோகரின் தாய் தர்மா ஆசீவகத்தைப் பின்பற்றுபவராக இருந்தார்.[97] சமந்தபசதிகம் நூலானது அசோகர் தன் ஆட்சிக் காலத்தின் முதல் மூன்று ஆண்டுகளின் போது பௌத்தமல்லாத பிரிவுகளைப் பின்பற்றினார் என்று குறிப்பிடுகிறது. [98]இலங்கை நூல்கள் இதனுடன் சேர்த்து, தன்னிடம் தினமும் நன்கொடை பெற்ற வேத சமயத்தவர்களின் நடத்தையால் அசோகர் மகிழ்ச்சி கொள்ளவில்லை என்று குறிப்பிடுகின்றன. இவரது அரசவையைச் சேர்ந்தோர் சில ஆசீவக மற்றும் நிகந்த ஆசிரியர்களை இவருக்கு முன்னாள் கொண்டு வந்து நிறுத்தினர். ஆனால், இவையும் அசோகரின் கவனத்தை ஈர்ப்பதில் தோல்வி அடைந்தன.[99]

தீபவம்சமானது தன்னால் எழுப்பப்படும் ஒரு கேள்விக்கு அவர்கள் பதிலளிப்பார்கள் என்ற நம்பிக்கையில் பல்வேறு பௌத்தரல்லாத சமயத் தலைவர்களைத் தனது அரண்மனைக்கு வரவழைத்து, அவர்களுக்குப் பெரும் அன்பளிப்புகளை அசோகர் வழங்கினார் என்று குறிப்பிடுகிறது. இந்நூலானது அது என்ன கேள்வி என்பதைக் குறிப்பிடவில்லை. எனினும், இவரால் அழைக்கப்பட்டவர்களில் ஒருவராலும் கூட அதற்குப் பதில் அளிக்க இயலவில்லை என்று குறிப்பிடுகிறது.[100] ஒரு நாள் நியாகரோதர் என்று அழைக்கப்பட்ட ஓர் இளம் பௌத்தத் துறவியை அசோகர் கண்டார். பாடலிபுத்திரத்தின் ஒரு சாலையில் யாசகத்திற்காக அவர் காத்திருந்தார்.[100] அவர் மன்னரின் அண்ணன் மகன் ஆவார். எனினும், மன்னருக்கு இதைப் பற்றித் தெரியாது:[101] அசோகரின் அண்ணன் சுமனாவின் இறப்பிற்குப் பிறகு பிறந்த மகன் இவர் ஆவார். அரியணைக்காக ஏற்பட்ட சண்டையின் போது சுமனாவை அசோகர் கொன்றிருந்தார்.[102] நியாகரோதரின் சாந்தமான மற்றும் பயமற்ற தோற்றம் கண்டு அசோகர் மதிப்பு கொண்டார். அவரது நம்பிக்கையைத் தனக்குப் போதிக்குமாறு அசோகர் கேட்டுக் கொண்டார். பதிலுக்கு, எதைப் பின்பற்ற வேண்டும் எதைத் தவிர்க்க வேண்டும் என்பது குறித்த ஒரு விளக்கத்தை நியாகரோதர் அசோகருக்கு அளித்தார்.[100] இந்த விளக்கத்தால் மதிப்பு கொண்ட அசோகர் நியாகரோதருக்கு 4 இலட்சம் வெள்ளி நாணயங்களையும், ஒவ்வொரு நாளும் 8 நேர அளவுக்கு உண்டான அரிசியையும் கொடுத்தார்.[103] மன்னர் ஒரு பௌத்த உபாசகரானார். பாடலிபுத்திரத்தில் இருந்த குக்குதராம சன்னிதிக்குச் செல்லத் தொடங்கினார். அக்கோயிலில் இவர் பௌத்தத் துறவி மொகாலிபுத்த தீசரைச் சந்தித்தார். பௌத்த நம்பிக்கையை மிகுந்த ஈடுபாட்டுடன் பின்பற்றுவராக மாறினார். [99]இக்கதையின் துல்லியத்தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை.[103] தகுதியுள்ள ஓர் ஆசிரியரை அசோகர் தேடியது குறித்த இந்தத் தொன்மக் கதையானது அசோகர் ஏன் சைனத்தைப் பின்பற்றவில்லை என்று விளக்குவதை ஒரு வேளை நோக்கமாகக் கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. சைனமானது மற்றொரு முதன்மையான சமகால நம்பிக்கையாக இருந்தது. அது அகிம்சை மற்றும் இரக்கம் ஆகியவற்றைப் போதித்தது. அசோகர் பௌத்தம் போன்ற ஒரு நம்பிக்கையைத் தேடாமல், மாறாக ஒரு சிறந்த ஆன்மிக வழிகாட்டியைத் தேடியத்தாலேயே பௌத்தத்தினால் ஈர்க்கப்பட்டார் என்று இந்தத் தொன்மக் கதை பரிந்துரைக்கிறது.[104] இலங்கை மரமானது இதனுடன் சேர்த்து, இவரது ஆட்சிக் காலத்தின் 6ஆம் ஆண்டின் போது இவரது மகன் மகிந்தன் ஒரு பௌத்தத் துறவியானார் என்பதனையும், இவரது மகள் ஒரு பௌத்தப் பெண் துறவியானார் என்பதனையும் குறிப்பிடுகிறது.[105]

திவ்யவதனத்தில் உள்ள ஒரு கதையானது அசோகர் பௌத்தத்திற்கு மாறியதற்கான காரணமாக சமுத்திரர் என்ற பௌத்தத் துறவியைக் குறிப்பிடுகிறது. சமுத்திரர் சிராவஸ்தியைச் சேர்ந்த ஒரு முன்னாள் வணிகர் ஆவார். இக்குறிப்பின் படி அசோகரின் "நரகத்தில்" சமுத்திரர் அடைக்கப்பட்டிருந்தார். ஆனால், தனது அதிசயிக்கத்தக்க சக்திகளைப் பயன்படுத்தித் தன்னைத் தானே காப்பாற்றிக் கொண்டார். அசோகர் இதைக் கேட்ட போது, அத்துறவியைச் சந்திக்கச் சென்றார். அத்துறவியால் நடத்தப்பட்ட ஒரு தொடர்ச்சியான அதிசயங்களால் அசோகர் மேலும் மதிப்பு கொண்டார். பௌத்த மதத்திற்கு அசோகர் மாறினார்.[106] அசோகவதனத்தில் உள்ள ஒரு கதையானது சமுத்திரர் ஒரு வணிகரின் மகன் என்றும், அசோகரைச் சந்தித்த போது அவர் 12 வயதுச் சிறுவனாக இருந்தார் என்றும் குறிப்பிடுகிறது. இது நியாகரோதரின் கதையால் தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[91]

அசோகர் அரியணை ஏறிய நேரத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான பௌத்த இடங்கள் இருந்தன. பௌத்த சங்கத்தின் எந்தப் பிரிவு இவர் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது என்று தெளிவாகத் தெரியவில்லை. எனினும், இவரது தலைநகரம் பாடலிபுத்திரத்தில் இருந்த சங்கமே இவர் மீது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று பொதுவாகக் கருதப்படுகிறது.[107] அல்லது மகாபோதியில் இருந்த மற்றொரு சங்கம் இவர் மீது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவரது 8வது பெரும் பாறைக் கல்வெட்டானது மகாபோதியில் புத்தர் ஞானம் பெற்ற இடமான போதி மரத்திற்கு இவர் வருகை புரிந்தார் என்று குறிப்பிடுகிறது. இவரது ஆட்சியின் 10ஆம் ஆண்டிற்குப் பிறகு இவர் வருகை புரிந்தார். இவரது ஆட்சிக் காலத்தின் 13ஆம் ஆண்டின் போது செதுக்கப்பட்ட சிறு பாறைக் கல்வெட்டானது அந்த நேரத்தை ஒட்டி இவர் பௌத்த மதத்திற்கு மாறினார் என்று பரிந்துரைக்கிறது.[107][90]

பௌத்தத்தைத் தழுவியதற்குப் பிந்தைய ஆட்சி[தொகு]

தூபிகளும், கோயில்களும் கட்டப்படுதல்[தொகு]

சாஞ்சி தூபி. மையத் தூபியானது மௌரியர்களின் காலத்தில் கட்டப்பட்டது. சுங்கர்களின் காலத்தில் இது பெரிதாக்கப்பட்டது. ஆனால் அலங்காரமுடைய வாயில்களானவை பிந்தைய அரசமரபான சாதவாகனர் காலத்திற்குக் காலமிடப்படுகின்றன.

மகாவம்சமும், அசோகவதனமும் அசோகர் 84,000 தூபிகள் அல்லது பௌத்த விகாரங்களைக் கட்டினார் என்று குறிப்பிடுகின்றன. [108]மகாவம்சத்தின் படி இச்செயலானது இவரது ஆட்சியின் 5ஆம் மற்றும் 7ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நடைபெற்றது.[105]

அசோகவதனமானது கௌதம புத்தரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய 8 தொன்மையான நினைவுப் பொருட்களில் 7 பொருட்களை அசோகர் சேகரித்தார் என்று குறிப்பிடுகிறது. தங்கம், வெள்ளி, கனகம் மற்றும் மணிப்பளிங்கு ஆகியவற்றால் செய்யப்பட்ட 84,000 பெட்டிகளில் அந்த நினைவுப் பொருட்களின் பாகங்களை வைத்தார் என்று குறிப்பிடுகிறது. உலகம் முழுவதும் 1,00,000 அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் தொகையுடைய பட்டணங்களில் 84,000 தூபிகளைக் கட்ட இவர் ஆணையிட்டார். குக்குதராம மடாலயத்தில் இருந்த ஒரு துறவியான மூத்த எசசுவிடம் அசோகர் இந்தத் தூபிகள் தொடங்கப்பட்ட அதே நாளில் முடிக்கப்பட வேண்டும் எனத் தாம் விரும்புவதாகக் கூறினார். போட்டி நேரத்தைக் குறிப்பதற்காக தனது கையால் சூரியனை மறைப்பேன் என்று எசசு கூறினார். அவர் அவ்வாறு செய்த போது 84,000 தூபிகள் ஒரே நேரத்தில் முடிக்கப்பட்டன.[20]

புத்தகயையில் அசோகர் கட்டிய மகாபோதிக் கோயிலின் உண்மையான சித்தரிப்பு. நடுவில் வஜ்ராசனம் அல்லது "புத்தரின் ஞான அரியணையானது அதைத் தாங்கி நிற்கும் தூண்களுடன் போற்றுதலுக்குரிய பொருளாக உள்ளது. அசோகரின் தூண்களுக்கு மேல் வலது மூலையில் ஒரு யானை இருக்கிறது. பர்குட் புடைப்புச் சிற்பம் பொ. ஊ. மு. 1ஆம் நூற்றாண்டு.[109]
புத்தகயையின் மகாபோதிக் கோயிலில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட வஜ்ராசனம் அல்லது "புத்தரின் ஞான அரியணை". தனக்கு சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் புத்தர் ஞானம் பெற்றதைச் சிறப்பிக்கும் விதமாக அசோகர் இதைக் கட்டினார்.[110][111]

அசோகர் நினைவுப் பொருட்களை வைக்கத் தூபிகளைக் கட்டாமல் 84,000 புத்த விகாரங்களைக் (மடாலயங்கள்) கட்ட ஆணையிட்டார் என்று மகாவம்சம் குறிப்பிடுகிறது.[112] அசோகவதனத்தைப் போலவே, மகாவம்சம் அசோகர் நினைவுப் பொருட்களைச் சேகரித்ததை விளக்குகிறது. ஆனால் இந்நிகழ்வைக் கட்டமைப்புச் செயல்களுடன் சேர்த்துக் குறிப்பிடவில்லை.[112] புத்தரின் தர்மத்தில் 84,000 பிரிவுகள் உள்ளன என்று மொகாலிபுத்த தீசர் கூறிய போது 84,000 விகாரங்களைக் கட்ட அசோகர் முடிவு செய்தார் என மகாவம்சம் குறிப்பிடுகிறது.[113] அசோகராம விகாரத்தைக் கட்டும் செயலை அசோகர் தானே தொடங்கினார். மற்ற துணை மன்னர்களைப் பிற விகாரங்களைக் கட்டுமாறு ஆணையிட்டார். தேர இந்தகுத்தரின் அதிசயமான சக்தியால் அசோகராம விகாரமானது கட்டி முடிக்கப்பட்டது. 84,000 விகாரங்கள் கட்டி முடிக்கப்பட்ட செய்தியானது அதே நாளில் பல்வேறு நகரங்களில் இருந்து வந்தது.[20]

பின்வரும் தூபிகளையும், விகாரங்களையும் அசோகர் கட்டினார்:[சான்று தேவை]

தம்மத்தைப் பரப்புதல்[தொகு]

அசோகரின் பாறைக் கல்வெட்டுகள் இவரது ஆட்சிக் காலத்தின் 8ஆம் மற்றும் 9ஆம் ஆண்டுகளின் போது போதி மரத்திற்கு ஒரு புனிதப் பயணம் மேற்கொண்டார் என்று பரிந்துரைக்கின்றன. தம்மத்தைப் பரப்பத் தொடங்கினார். பொது நலப் பணிகளைச் செய்ய ஆரம்பித்தார். மனிதர்களுக்கும், விலங்குகளுக்குமான மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள், மருந்து மூலிகைகளுக்குத் தோட்டப் பண்ணைகள் அமைத்தல், சாலைகளின் இரு பக்கவாட்டிலும் கிணறுகளைத் தோண்டுதல் மற்றும் மரங்களை நடுதல் உள்ளிட்ட பொது நலப் பணிகளைச் செய்தார். சோழர், பாண்டியர், சத்தியபுத்திரர்கள் தாமிரபரணி, கிரேக்க இராச்சியமான அந்தியோகா உள்ளிட்ட அண்டை இராச்சியங்களில் இந்த நலப் பணிகளைச் செய்தார்.[114]

இவரது ஆட்சிக் காலத்தின் 10ஆம் மற்றும் 11ஆம் ஆண்டுகளின் போது பௌத்த சங்கத்திற்கு நெருங்கியவராக அசோகர் மாறினார் என்று இந்தக் கல்வெட்டுகள் மேலும் குறிப்பிடுகின்றன. பேரரசு முழுவதும் குறைந்தது 256 நாட்கள் நீடித்த ஒரு பயணத்தை மேற்கொண்டார்.[114]

இவரது ஆட்சிக் காலத்தின் 12ஆம் ஆண்டில் தம்மத்தைப் பரப்பும் கல்வெட்டுகளை அமைக்க அசோகர் ஆரம்பித்தார். ஆய்வு செய்வதற்கும், தம்மத்தைப் பரப்புவதற்கும் ஒவ்வொரு ஐந்து ஆண்டும் தனது அதிகாரிகளை அவர்களது வரம்பிற்கு உட்பட்ட பகுதிகளுக்குப் பயணம் மேற்கொள்ளுமாறு ஆணையிட்டார். அடுத்த ஆண்டு தர்ம-மகாமத்திரர் மற்றும் என்ற பதவியை உருவாக்கினார்.[114]

இவரது ஆட்சிக் காலத்தின் 14ஆம் ஆண்டின் போது புத்த கனகமுனி தூபியைப் பெரிதாக்குவதற்கான பணிகளுக்கு பொறுப்பை ஒப்படைத்தார்.[114]

மூன்றாம் பௌத்த சங்கம்[தொகு]

பௌத்த சமயத்தில் அசோகருக்கு ஒரு பெரிய பங்கு இருந்தது என இலங்கை மரபு குறிப்பிடுகிறது.[17] இந்த மரபில் துறவிகளுக்குப் பெருமளவில் உணவளிக்க அசோகர் தொடங்கினார். அரசின் திட்டங்களுக்கு தாராளமாக இவர் பெருமளவு பணம் செலவழித்தது சங்கத்தில் ஏராளமான போலித் துறவிகள் இணைவதற்கு இட்டுச் சென்றது. உண்மையான பௌத்தத் துறவிகள் இந்த போலித் துறவிகளுடன் ஒத்துழைக்க மறுத்தனர். 7 ஆண்டுகளுக்கு எந்த ஓர் உபோசத விழாவும் நடக்கவில்லை. போலித் துறவிகளை ஒழிக்க மன்னர் முடிவெடுத்தார். ஆனால் இந்த முயற்சியின் போது ஒரு மிகுதியான செயல் முனைப்புடைய மந்திரி சில உண்மையான துறவிகளைக் கொன்று விட்டார். மன்னர் பிறகு மூத்த துறவியான மொகாலிபுத்த தீசரை பாடலிபுத்திரத்தில் தான் நிறுவிய மடாலயத்திலிருந்து பௌத்தரல்லாதவர்களை வெளியேற்றுவதற்கு உதவுமாறு அழைத்தார்.[101] 60,000 துறவிகள் (பிக்குகள்) சமய முரண்பாடு உடையவர்களாகக் குற்றம் சாட்டப்பட்டனர். இறுதியாக நடந்த செயல் முறையில் அவர்களது உரிமைகள் பறிக்கப்பட்டன.[17] பிறகு உபோசத விழாவானது நடைபெற்றது. அசோகர் இறுதியாக மூன்றாம் பௌத்த சங்கத்தைக் கூட்டினார்.[115] இந்தப் பௌத்த சங்கம் அசோகரின் ஆட்சிக் காலத்தின் 17ஆம் ஆண்டின் போது நடைபெற்றது.[116] கதவத்து என்ற நூலை தீசர் தொகுத்தார். பல்வேறு விதிகளில் தேரவாத மரபு வழிப் பௌத்தத்தை இந்நூலானது மீண்டும் தெளிவுப்படுத்தியது.[115]

வட இந்திய மரபானது இந்த நிகழ்வுகளைப் பற்றிக் குறிப்பிடவில்லை. இது மூன்றாம் பௌத்த சங்கத்தின் வரலாற்றுத் தன்மை குறித்த சந்தேகங்களுக்கு இட்டுச் சென்றுள்ளது.[18]

அசோகரும், துறவி மொகாலிபுத்த தீசரும் மூன்றாம் பௌத்த சங்கத்தில். இடம் நவ செதவனா, சிராவஸ்தி.

இரிச்சர்டு கோம்பிரிச் என்பவர் கல்வெட்டு ஆதாரங்களால் இக்கதை உறுதி செய்யப்படாததைப் பயன்படுத்தி இதை முழுவதுமாக வரலாற்றில் இல்லாதது என்று ஒதுக்க முடியாது எனக் கூறுகிறார். ஏனெனில் அசோகரின் கல்வெட்டுகளில் பல தொலைந்து போயிருக்கலாம்.[115] சங்கத்தின் "கருத்தொற்றுமை மற்றும் தூய்மையைப்" பேணுவதில் அசோகர் விரும்பினார் என்று அசோகரின் கல்வெட்டுக்கள் நிரூபிப்பதாகவும் கோம்பிரிச் வாதிடுகிறார்.[117] எடுத்துக்காட்டாக இவரது சிறு பறை 3ஆம் கல்வெட்டில் சில குறிப்பிட்ட நூல்களைப் (இந்நூல்களில் பெரும்பாலானவை இன்னும் அடையாளப் படுத்தப்படவில்லை) படிக்குமாறு சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அசோகர் பரிந்துரைக்கிறார். இதே போல் சாஞ்சி, சாரநாத் மற்றும் கோசம் ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் சங்கத்துடன் தீவிர முரண்பாடு கொண்ட உறுப்பினர்களை வெளியேற்ற வேண்டும் என அசோகர் சங்கத்திற்கு அதிகாரப் பூர்வமாக உரிமை அளித்தார். சங்கம் தொடர்ந்து ஒன்று பட்டு வளர வேண்டும் என தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.[118][119]

8ஆம் நூற்றாண்டு பௌத்தப் புனிதப் பணியான இசிங் பௌத்த சங்கத்தில் அசோகரின் ஈடுபாடு குறித்து மற்றொரு கதையைப் பதிவு செய்துள்ளார். இக்கதையின் படி கௌதம புத்தரின் காலத்தில் வாழ்ந்த முந்தைய மன்னரான பிம்பிசாரன் தனது ஒரு கனவில் ஒரு துணியின் 18 துண்டுகள் மற்றும் ஒரு குச்சியை ஒரு முறை கண்டார். அவரது இறப்பிற்குப் பிறகு அவரது தத்துவமானது 18 பள்ளிகளாகப் பிரிக்கப்படும் என்று இந்தக் கனவிற்குப் புத்தர் விளக்கம் அளித்தார். 100 ஆண்டுகளுக்கும் மேல் கழிந்ததற்குப் பிறகு இந்தப் பள்ளிகளை அசோகர் என்று அழைக்கப்படும் ஒரு மன்னர் ஒன்றிணைப்பார் என்று கணித்தார்.[73]

பௌத்தத் தூதுக் குழுக்கள்[தொகு]

இலங்கை மரபில் அசோகரிடம் பொருளுதவி பெற்ற மொகாலிபுத்த தீசர் அண். பொ. ஊ. மு. 250இல் "எல்லைப் பகுதிகளில்" பௌத்தத்தைப் பரப்புவதற்கு 9 பௌத்தத் தூதுக் குழுக்களை அனுப்பினார். இந்த மரபானது இந்தத் தூதுக் குழுக்களை அனுப்பியதற்கு நேரடியான காரணமாக அசோகரைக் குறிப்பிடவில்லை. ஒவ்வொரு தூதுக் குழுவிலும் ஐந்து துறவிகள் இருந்தனர். இக்குழுக்களுக்கு ஒரு மூத்தவர் தலைமை தாங்கினார்.[120] இலங்கைக்கு அசோகர் தன் சொந்த மகன் மகிந்தனை நான்கு பிற தேரர்களான இத்தியர், உத்தியர், சம்பலர் மற்றும் பத்தசலர் ஆகியோருடன் அனுப்பி வைத்தார்.[17] அடுத்து மொகாலிபுத்த தீசரின் உதவியுடன் காஷ்மீர், காந்தாரம், இமயமலை, யவனர்களின் (கிரேக்கர்) நிலம், மகாராட்டிரம், சுவண்ணபூமி மற்றும் இலங்கை போன்ற தொலை தூரப் பகுதிகளுக்குப் பௌத்தத் தூதுக் குழுக்களை அசோகர் அனுப்பினார்.[17]

அசோகர் தனது ஆட்சிக் காலத்தின் 18வது ஆண்டில் தூதுக் குழுக்களை அனுப்பினார் என இலங்கை மரபு குறிப்பிடுகிறது. தூதுக் குழுக்களின் தலைவர்களின் பெயர்கள் பின்வருமாறு:[114]

  • மகிந்தன், இலங்கைக்கு
  • மச்சந்திகர், காசுமீர் மற்றும் காந்தாரத்திற்கு
  • மகாதேவர், மகிச மண்டலத்திற்கு (ஒரு வேளை நவீன மைசூர் பகுதியாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது)
  • இரக்கிதர், வானவாசாவிற்கு
  • கிரேக்கரான தர்மரக்கிதர், அபரந்தகத்திற்கு (மேற்கு இந்தியா)
  • மகா தர்ம இரக்கிதர், மகாராட்டிரத்திற்கு
  • மகாரக்கிதர், கிரேக்க நாட்டிற்கு
  • மச்சிமர், இமயமலைக்கு
  • சோனர் மற்றும் உத்தரர், சுவண்ணபூமிக்கு (ஒரு வேளை கீழ் பர்மா மற்றும் தாய்லாந்து எனக் கருதப்படுகிறது)

இவரது ஆட்சிக் காலத்தின் 19ஆம் ஆண்டின் போது பெண் துறவிகளின் வரிசை முறையை நிறுவுவதற்காக அசோகர் தனது மகள் சங்கமித்தையை இலங்கைக்கு அனுப்பினார் என்று மரபானது மேலும் குறிப்பிடுகிறது. சங்கமித்தை இலங்கைக்கு புனிதமான போதி மரத்தின் ஒரு கன்றையும் தன்னுடன் எடுத்துச் சென்றார்.[120][116]

வட இந்திய மரபு இந்த நிகழ்வுகளைப் பற்றி எந்த ஒரு குறிப்பையும் கொடுக்கவில்லை.[18] அசோகரின் சொந்தக் கல்வெட்டுகளும் இந்த நிகழ்வுகளைப் பற்றிய எந்தவொரு குறிப்பையும் தவிர்த்து விட்டதாகத் தோன்றுகிறது. இக்காலத்தின் போது இவரது நடவடிக்கைகளில் ஒன்றே ஒன்றை மட்டும் பதிவு செய்துள்ளன: இவரது ஆட்சி காலத்தின் 19ஆம் ஆண்டின் போது துறவிகளுக்கு மழைக் காலத்திற்கு ஒரு தங்குமிடமாக காலதிகக் குகையை அசோகர் நன்கொடையாக அளித்தார் என்று பதிவிட்டுள்ளன. அடுத்த ஆண்டு புத்தரின் பிறந்த இடம் மற்றும் புத்த கனகமணி தூபிக்கு செல்வதற்காக லும்பினிக்கு அசோகர் புனிதப் பயணம் மேற்கொண்டார் என அசோகரின் தூண் கல்வெட்டுக்கள் பரிந்துரைக்கின்றன.[116]

ஐந்து மன்னர்கள் மற்றும் ஏராளமான பிற இராச்சியங்களுக்குத் தூதுவர்களை அனுப்பியதன் மூலம் அசோகர் ஒரு தர்ம வெற்றியைப் பெற்று விட்டதாக 13வது பாறைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இந்தத் தூதுக் குழுவானது பௌத்த நூல்களில் பதிவிடப்பட்டுள்ள பௌத்தத் தூதுக் குழுக்களுடன் ஒத்துப் போகின்றதா என்பது விவாதத்திற்குரியதாக உள்ளது.[121] இந்தியவியலாளரான எட்டியேன் லமோட் அசோகரின் கல்வெட்டுகளில் "தர்ம" தூதுக் குழுக்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் பௌத்தத் துறவிகளாக ஒரு வேளை இல்லாமல் இருக்கலாம், இவரது "தம்மமானது" பௌத்தத்தைக் குறிக்கவில்லை என்று வாதிடுகிறார்.[122] கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள தூதுக் குழுக்களின் சேரும் இடங்களின் பட்டியலும், தூதுக் குழுக்களின் தேதிகளும் பௌத்தத் தொன்மவியலில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றுடன் ஒத்துப் போகவில்லை.[123]

எரிச் பிராவ்வால்னர் மற்றும் ரிச்சர்ட் கோம்பிரிச் போன்ற பிற அறிஞர்கள் இலங்கை மரபில் குறிப்பிடப்பட்டுள்ள தூதுக் குழுக்கள் வரலாற்று ரீதியாக உண்மையானவை என்று நம்புகின்றனர்.[123] இந்த அறிஞர்களின் கூற்றுப்படி இந்த கதையின் ஒரு பகுதியானது தொல்லியல் சான்றுகளின் மூலம் உறுதிபடுத்தப்படுகிறது. வினய நிதனா என்னும் நூலானது ஐந்து புத்த பிக்குகளின் பெயர்களை குறிப்பிடுகிறது. அவர்கள் இமய மலைப் பகுதிகளுக்கு சென்றனர் என்று குறிப்பிட்டுள்ளது. விதிஷாவுக்கு அருகில் பில்ஷா என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட நினைவுப் பொருள் பெட்டகங்களில் இந்த பெயர்களில் மூன்று பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த பெட்டகங்கள் பொ. ஊ. மு. 2ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்திற்கு தேதியிடப்படுகின்றன. இந்த புத்த பிக்குகள் இமயமலை பள்ளியை சார்ந்தவர்கள் என்று பொறிக்கப்பட்டுள்ளது.[120] இந்த தூதுக் குழுக்கள் நடு இந்தியாவின் விதிஷாவிலிருந்து புறப்பட்டு இருக்கலாம். ஏனெனில் இந்த பெட்டகங்கள் அங்கு தான் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அங்கு ஒரு மாதம் மகிந்தன் தங்கியிருந்தார் என்று கூறப்படுகிறது. அதற்கு பிறகு அவர் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டார்.[124]

கோம்பிரிச்சின் கூற்றுப்படி இந்த தூதுக்குழுவில் பிற சமயங்களின் பிரதிநிதிகளும் இருந்திருக்கலாம். இவ்வாறாக "தர்மா"விற்கு எதிராக லமோட் என்ற அறிஞரின் நிராகரிப்பானது இங்கு முறைமையற்றதாக மாறி விடுகிறது. பௌத்தரல்லாத மற்றவர்களை பௌத்த நூல்கள் குறிப்பிட வேண்டாம் என்று முடிவு செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. பௌத்தத்தை தூதுக்குழுவின் ஒரு பகுதியாக கூற அவர்கள் விருப்பமின்றி இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.[125] பிராவ்வால்னர் மற்றும் கோம்பிரிச் இந்த தூதுக் குழுக்களுக்கு நேரடியான காரணமாக அசோகர் இருந்திருக்கலாம் என்று நம்புகின்றனர். ஏனெனில் ஒரு வளமையான ஆட்சியாளரால் மட்டுமே இத்தகைய செயல்களுக்கு புரவலராக இருந்திருக்க முடியும். தேராவத பள்ளியை சேர்ந்த இலங்கை நூல்கள் தங்களது பிரிவை பெருமைப்படுத்துவதற்காக தேராவத புத்த பிக்குவான மொகாலி புத்த தீசரின் பங்கை மிகைப்படுத்திக் கூறுகின்றன.[125]

அசோகரின் புரவலத் தன்மை காரணமாகவே பௌத்தம் ஒரு முதன்மை சமயமாக உருவானது என சில வரலாற்றாளர்கள் வாதிடுகின்றனர்.[126] எனினும் கல்வெட்டுச் சான்றுகள் வடமேற்கு இந்தியா மற்றும் தக்காணப் பகுதியில் பௌத்தத்தின் பரவலானது அசோகரின் தூதுக் குழுக்களால் பெரும்பாலும் நடைபெறாமல் பௌத்த நிறுவனங்களை ஆதரித்த வணிகர்கள், நிலப்பிரபுக்கள் மற்றும் கைவினைஞர்களின் சங்கங்கள் ஆகியவற்றால் அதிகமாக பரவியது என்று பரிந்துரைக்கின்றன.[127]

மத மாற்றத்துக்கு பிந்தைய வன்முறை[தொகு]

அசோகவனத்தின் படி பௌத்தத்திற்கு மாறியதற்குப் பிறகும் கூட அசோகர் வன்முறையில் ஈடுபட்டார். உதாரணமாக:[128]

  • "நரக" சிறையில் சிறிது சிறிதாக சந்திரகிரிகரை சித்ரவதை செய்தார். [128]
  • ஒருவரின் தவறான செயலுக்காக முரண் சமய கோட்பாட்டாளர்கள் 18,000 பேரை மொத்தமாக படுகொலை செய்ய ஆணையிட்டார்.[128]
  • சைனர்களுக்கு எதிராக அதிகாரப்பூர்வ படுகொலையை தொடங்கினார். எந்த ஒரு முரண் சமய கோட்பாட்டாளரின் தலைக்கும் பரிசு விதித்தார். இது இவரது சொந்த சகோதரர் விதசோகர் சிரச்சேதம் செய்யப்படுவதற்கு இட்டுச் சென்றது.[128]

அசோகவதனத்தின் படி புந்தரவர்தனத்தில் இருந்த ஒரு பௌத்தரல்லாதவர் நிர்கரந்த தலைவரான ஞாதிபுத்திரரின் பாதத்தில் புத்தர் வணங்குவதாக காட்டும் ஒரு படத்தை வரைந்தார். நிர்கரந்தா என்ற சொல்லுக்கு "பந்தங்களில் இருந்து விடுபட்டவர்" என்று பொருள். இப்பெயர் உண்மையில் சைனத்திற்கு முந்தைய ஒரு துறவிகளின் குழுவுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் பிறகு சைன துறவிகளைக் குறிப்பிட பயன்படுத்தப்பட்டது.[129] ஞாதிபுத்திரர் என்பவர் சைனத்தின் 24வது தீர்த்தங்கரரான மகாவீரருடன் அடையாளப்படுத்தப்படுகிறார். இந்த கதையின் படி ஒரு பௌத்த வழிபாட்டாளரின் புகாரை தொடர்ந்து அந்த பௌத்தர் அல்லாத கலைஞரை கைது செய்யுமாறு அசோகர் ஆணையிட்டார். தொடர்ந்து புந்தரவர்தனத்தில் இருந்த அனைத்து ஆசீவகர்களையும் கொல்வதற்கு மற்றொரு ஆணையை கொடுத்தார். இந்த ஆணையின் விளைவாக ஆசீவக பிரிவின் சுமார் 18,000 பேர் கொல்லப்பட்டனர்.[130][131] இதற்கு பிறகு சிறிது காலத்தில் பாடலிபுத்திரத்தில் இருந்த மற்றொரு நிர்கரந்த பின்பற்றாளர் இதே போன்ற ஓர் ஓவியத்தை வரைந்தார். அவரது வீட்டில் அவரது ஒட்டு மொத்த குடும்பத்துடன் அவரை அசோகர் எரித்தார்.[131] முரண் சமயக் கோட்பாட்டாளரான எந்த ஒரு நிர்கரந்த பிரிவினரின் தலையை தன்னிடம் கொண்டு வரும் எவருக்கும் ஒரு தினாரா (தங்க நாணயம்) பரிசாக கொடுப்பேன் என்று விவரித்தார். அசோகவதனத்தின் படி இந்த ஆணையின் விளைவாக இவரது சொந்த சகோதரரே ஒரு முரண் சமயக் கோட்பாட்டாளர் என்று தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டு ஒரு மாடு மேய்ப்பவரால் கொல்லப்பட்டார்.[130] பிறகு தன்னுடைய தவறை உணர்ந்த அசோகர் இந்த ஆணையை திரும்ப பெற்றார்.[129]

எதிரி சமயப் பிரிவினரை அசோகர் கொடுமைப்படுத்தியதாக கூறும் இந்தக் கதைகள் எதிரி சமயப் பிரிவினரின் பரப்புரையால் உருவாக்கப்பட்ட புனைவுக் கதைகள் என தெளிவாக தெரிவதாக அறிஞர்கள் பல்வேறு காரணங்களுக்காக குறிப்பிடுகின்றனர்.[131][132][133]

குடும்பம்[தொகு]

ஒரு மன்னர், தனது இரு அரசிகள் மற்றும் மூன்று பணியாளர்களுடன் இருப்பதைக் காட்டும் சாஞ்சியில் உள்ள ஒரு புடைப்புச் சிற்பம்.[2] இந்த மன்னர் பெரும்பாலும் அசோகராக கருதப்படுகிறார். ககனஹள்ளி என்ற இடத்தில் இதே போன்ற ஒரு புடைப்புச் சிற்பத்தில் அசோகரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இம்மன்னரும் அசோகரே என்று அடையாளப்படுத்தப்படுகிறார்.[134][2]
சன்னதிக்கு அருகில் ககனஹள்ளியில் தன்னுடைய அரசியுடன் இருக்கும் அசோகர். ஆண்டு பொ.ஊ. முதலாம் - மூன்றாம் நூற்றாண்டு. இந்த புடைப்பு சிற்பமானது பிராமி எழுத்துமுறையில் "ராய அசோகா" (𑀭𑀸𑀬 𑀅𑀲𑁄𑀓𑁄, "மன்னர் அசோகர்") என்ற பொறிப்பைக் கொண்டுள்ளது. இது ஒரு மன்னர், அவரது அரசி மற்றும் பறக்கும் மத்துகளை அணிந்துள்ள இரண்டு பணியாளர்களை, குடையைப் பிடித்துள்ள ஒரு பணியாளரையும் சித்தரிக்கிறது.[134][2]
சாஞ்சியின் மான் பூங்காவில் உள்ள புடைப்பு சிற்பத்தில் இருக்கும் பேரரசர் அசோகர் மற்றும் அவரது அரசி.[2]

அரசிகள்[தொகு]

பல்வேறு நூல்கள் அசோகரின் ஐந்து மனைவிகளை குறிப்பிடுகின்றன. அவர்கள் தேவி (அல்லது வேதிஸா-மகாதேவி-சாக்கிய குமாரி), கருவகி, அசந்தமித்திரா (பாளி: அசந்தமித்தா), பத்மாவதி மற்றும் திசரக்கா (பாளி: திசரக்கா).[135]

அசோகரின் சொந்த கல்வெட்டுகளிலிருந்து அறியப்படும் அசோகரின் ஒரே அரசி கருவகி மட்டுமே. அலகாபாத்தில் ஒரு தூணில் உள்ள பொறிப்புகளில் இவர் குறிப்பிடப்பட்டுள்ளார். இளவரசர் திவாராவின் தாய் என கல்வெட்டு இவரை குறிப்பிடுகிறது. இவரது சமய மற்றும் அறக் கொடைகளை பதிவு செய்ய வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு (மகாமத்தர்கள்) இக்கல்வெட்டு ஆணையிடுகிறது.[77] ஒரு கோட்பாட்டின் படி, திஷ்யரக்ஷிதா என்பது கருவகியின் பட்டத்து பெயர் என்று குறிப்பிடப்படுகிறது.[77]

மகாவம்சத்தின் படி அசோகரின் முதன்மையான அரசி அசந்தமித்தா ஆவார். அசந்தமித்தா அசோகர் இறப்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே இறந்தார்.[77] இந்நூலின் படி முந்தைய பிறப்பில் ஒரு தேன் விற்பவராக இருந்த அசோகரிடம் பிரத்தியேக புத்தரை அசந்தமித்தா அனுப்பியதன் காரணமாக அவர் அசோகரின் அரசியாக பிறந்தார் என்று குறிப்பிடப்படுகிறது.[136] சில பிந்தைய நூல்கள் மேலும் ஒரு தகவலாக பிரத்தியேக புத்தரிடம் தான் உருவாக்கிய ஒரு துணியை அசந்தமித்தா கொடுத்தார் என்றும் குறிப்பிடுகின்றன.[137] இந்த பிந்தைய நூல்களில் தசவத்துப்பகரனா, கம்போடிய அல்லது விரிவாக்கப்பட்ட மகாவம்சம் (அநேகமாக 9ஆம் -10 ஆம் நூற்றாண்டுகள்) மற்றும் திராய் பூமி கதை (15ஆம் நூற்றாண்டு) ஆகியவை அடங்கும்.[137] இந்நூல்கள் மற்றொரு கதையையும் குறிப்பிடுகின்றன. ஒரு நாள் தன்னுடைய கர்மத்தின் மூலம் பெறாத ஒரு சுவையான கரும்பு துண்டை அசந்தமித்தா உண்ட போது அவரை அசோகர் கிண்டலடித்தார். தன்னுடைய சொந்த கர்மத்தின் காரணமாகவே தான் மகிழ்ச்சியாக இருப்பதாக அசந்தமித்தா பதிலளித்தார். துறவிகளுக்கு 60,000 அங்கிகளை அளிப்பதன் மூலம் இதனை நிரூபிக்குமாறு அசோகர் அவருக்கு சவால் விடுத்தார்.[137] இரவில் காவல் தெய்வங்கள் அசந்தமித்தாவிடம் பிரத்தியேக புத்தருக்கு முற்பிறப்பில் அவர் அளித்த பரிசை பற்றிய தகவலை அளித்தனர். அடுத்த நாள் அசந்தமித்தா அதிசயிக்கத்தக்க வகையில் 60,000 அங்கிகளை பெற்றார். இதனால் மதிப்பு கொண்ட அசோகர் அசந்தமித்தாவை தன்னுடைய விருப்பத்திற்குரிய அரசியாக்கினார். அசந்தமித்தாவுக்கு என்று சொந்த நாட்டுடன் ஆட்சியாளராக அவரை மாற்றுவதற்கு கூட வாய்ப்பளித்தார். ஆனால் அந்த வாய்ப்பை அசந்தமித்தா நிராகரித்துவிட்டார். ஆனால் இருந்தும் கூட அசோகரின் பிற 16,000 மனைவியரின் பொறாமை தூண்டப்படுவதற்கு அசந்தமித்தா காரணமாக இருந்துவிட்டார். அசந்தமித்தாவின் முதன்மை நிலையை நிரூபிப்பதற்காக ஒரே மாதிரியாக இருந்த 16,000 சுட்ட அப்பங்களில் தன்னுடைய அரச முத்திரையை ஒரே ஒரு சுட்ட அப்பத்தில் மட்டும் மறைத்து வைத்து தயாரிக்குமாறு அசோகர் செய்தார். ஒவ்வொரு மனைவியையும் ஒரு சுட்ட அப்பத்தை தேர்ந்தெடுக்க சொன்னார். ஆனால் அரச முத்திரையுடன் கூடிய சுட்ட அப்பத்தை அசந்தமித்தா மட்டுமே பெற்றார்.[138] திராய் பூமி கதையின் படி அசோகர் பௌத்தர் ஆவதற்கு ஊக்கப்படுத்தியதற்காகவும், 84,000 தூபிகள் மற்றும் 84,000 விகாரங்களை கட்டியதற்காகவும் அசந்தமித்தாவே காரணமாக இருந்தார் என்று குறிப்பிடப்படுகிறது.[139]

மகாவம்சத்தின் படி அசந்தமித்தாவின் இறப்பிற்கு பிறகு திசரக்கா முதன்மையான அரசியானார்.[77] அசோகவதனமானது அசந்தமித்தாவை எங்குமே குறிப்பிடவில்லை. ஆனால் திசரக்காவை திஷ்யரக்ஷிதா என்று குறிப்பிடுகிறது.[140] திவ்யவதனமானது பத்மாவதி என்று அழைக்கப்பட்ட மற்றொரு அரசி பற்றி குறிப்பிடுகிறது. இவர் பட்டத்து இளவரசரான குணாளனின் தாயாவார்.[77]

மேலே குறிப்பிட்டதன் படி, இலங்கை மரபின் படி, நடு இந்தியாவில் ஒரு இளவரசராக இருந்த போது அசோகர் தேவியை (அல்லது விதிஷா-மகாதேவி) விரும்பினார்.[63] அசோகர் அரியணை ஏறிய பிறகு நாட்டின் தலைநகரான பாடலிபுத்திரத்திற்கு குடி பெயர்வதற்கு பதிலாக தேவி விதிஷாவிலேயே தொடர்ந்து தங்குவது என முடிவெடுத்தார். மகாவம்சத்தின் படி அசோகரின் முதன்மையான அரசி அசந்தமித்தா ஆவார். தேவி கிடையாது. இந்நூலானது இந்த இரு பெண்களுக்கிடையிலான எந்த வித தொடர்பையும் பற்றி குறிப்பிடவில்லை. இவ்வாறாக தேவியின் மற்றொரு பெயராக அசந்தமித்தா இருந்திருக்க வாய்ப்பு கிடையாது.[141] அசோகர் மற்றும் தேவிக்கிடையிலான உறவு முறையை விளக்குவதற்காக இலங்கை மரமானது சம்வசா என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. இதற்கு இருவரும் திருமணமாகாத கணவன் மனைவி அல்லது திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்தவர்கள் என்பது பொருளாகும் என நவீன அறிஞர்கள் பல்வேறு வகையில் பொருள் கூறுகின்றனர்.[142] பாடலிபுத்திரத்தில் அசோகர் அரியணை ஏறியதற்குப் பிறகு தேவி அவரது முதன்மையான அரசியாக இல்லை என்ற உண்மையானது அசோகர் தேவியை மணக்கவில்லை என்று வாதிடுபவர்களின் வாதத்திற்கு மேலும் வலுவூட்டுகிறது.[61] தீபவம்சமானது அசோகர் மற்றும் தேவியின் இரண்டு குழந்தைகளை குறிப்பிடுகிறது. அவர்கள் மகிந்தன் மற்றும் சங்கமித்தை ஆகியோராவர்.[143]

மகன்கள்[தொகு]

கல்வெட்டுகளில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அசோகரின் ஒரே மகன் அசோகர் மற்றும் கருவகியின் மகனான திவாரா ஆவார்.[77]

வட இந்திய மரபின் படி, அசோகருக்கு குணாளன் என்ற பெயருடைய ஒரு மகன் இருந்தார்.[18] குணாளனுக்கு சம்பிரதி என்ற பெயருடைய ஒரு மகன் இருந்தார். [77]

இலங்கை மரபானது மகிந்தன் என்று அழைக்கப்பட்ட ஒரு மகனை பற்றி குறிப்பிடுகிறது. அவர் இலங்கைக்கு பௌத்தத்தை பரப்புவதற்கு தூதராக அனுப்பப்பட்டார். வட இந்திய மரபில் இம்மகன் எங்குமே குறிப்பிடப்படவில்லை.[17] சீன பயணியான சுவான்சாங் மகிந்தனை அசோகரின் தம்பி (விதசோகர் அல்லது விகதசோகர்) என்று குறிப்பிடுகிறார்.[144]

திவ்யவதனமானது தர்மவிவர்தனர் என்று அழைக்கப்பட்ட பட்டத்து இளவரசர் குணாளனை குறிப்பிடுகிறது. இவர் அரசி பத்மாவதியின் மகன் ஆவார். பாகியானின் கூற்றுப் படி தர்மவிவர்தனர் காந்தாரத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[77]

இராஜதரங்கிணி நூலானது அசோகரின் மகனாக ஜலௌகர் என்பவரை குறிப்பிடுகிறது.[77]

மகள்கள்[தொகு]

இலங்கை மரபின் படி, அசோகர் சங்கமித்தா என்ற பெயருடைய ஒரு மகளை பெற்றிருந்தார். அம்மகள் ஒரு பௌத்த பெண் துறவியானார்.[105] ரூமிலா தாப்பர் போன்ற வரலாற்றாளர்களின் ஒரு பிரிவினர் சங்கமித்தா வரலாற்று ரீதியான நபரா என்பதில் சந்தேகம் கொள்கின்றனர். அதற்கு அவர்கள் பின்வரும் காரணங்களைக் கூறுகின்றனர்:[145]

  • "சங்கமித்தா" என்று பெயரின் பொருளானது பௌத்த சங்கத்தின் நண்பர் என்பதாகும். இது ஒரு வழக்கத்திற்கு மாறான பெயர் ஆகும். இலங்கைக்கு இப்பெண் சென்று, அதன் மூலம் இலங்கையின் அரசி இவரை சமயத் தலைவராக பதவியில் அமர்த்துவார் என்பது மிகைப்படுத்தப்பட்டதாக தோன்றுகிறது.[141]
  • மகாவம்சத்தின் படி இப்பெண் அசோகரின் உடன் பிறந்தவரின் மகனான அக்னி பிரம்மனை மணந்து கொண்டார். அவர்களுக்கு சுமனன் என்ற மகன் பிறந்தான். அக்கால சட்டங்கள் நெருங்கிய உறவினர்களிடையே நடத்தப்படும் இத்தகைய திருமணத்தை தடுத்திருக்கும்.[144]
  • மகாவம்சத்தின் படி இப்பெண் துறவியாக பதவி உயர்த்தப்பட்ட போது அவருக்கு வயது 18 என்று குறிப்பிடுகிறது.[141] இக்கதையின் படி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவருக்கு திருமணம் நடைப்பெற்றது. இப்பெண்ணின் கணவர் மற்றும் குழந்தை ஆகியோரும் பதவியில் அமர்த்தப்பட்டனர். மிக இளம் வயதுடைய ஒரு குழந்தையுடன் இவர் துறவியாக மாற அனுமதிக்கப்பட்டிருப்பார் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை.[144]

மற்றொரு நூலானது அசோகருக்கு சாருமதி என்ற பெயருடைய ஒரு மகள் இருந்தார் என்று குறிப்பிடுகிறது. சாருமதி தேவபாலன் என்ற பெயருடைய ஒரு சத்திரியனை மணந்து கொண்டார்.[77]

சகோதரர்கள்[தொகு]

அசோகவதனத்தின் படி அசோகர் சுசிமா என்ற பெயருடைய ஓர் ஒன்று விட்ட அண்ணனை கொண்டிருந்தார்.[39]

  • இலங்கை மரபின் படி, இந்த அண்ணன் திசா ஆவான். அவன் ஆரம்பத்தில் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்தால் உலகத்தை பற்றி எந்த கவலையும் இன்றி இருந்தான். அவனுக்கு பாடம் புகட்டுவதற்காக அசோகர் சில நாட்களுக்கு அவனை அரியணையில் அமரச் செய்தார். பிறகு அரியணையை முறையற்ற வழியில் கைப்பற்றியவனாக அவன் மீது குற்றம் சுமத்தினார். ஏழு நாட்களுக்கு பிறகு அவனுக்கு மரண தண்டனை விதித்தார். இந்த ஏழு நாட்களின் போது, இன்பமானது இறுதியில் மரணத்திற்கு இட்டுச் செல்லும் என்பதை பௌத்த துறவிகள் உணர்ந்து இருந்ததாலேயே அவர்கள் இன்ப வாழ்வை கைவிட்டிருந்தனர் என்று திசா உணர்ந்தான். பிறகு அவன் அரண்மனையை விட்டு வெளியேறினான். ஓர் அர்கத் ஆனான்.[74]
  • தேரகதா நூலானது இந்த அண்ணனை விதசோகன் என்று அழைக்கிறது. இக்கதையின் படி ஒரு நாள் விதசோகன் தனது தலையில் ஒரு நரை முடியை கண்டான். தான் வயது முதிர்ந்தவனாக ஆகி விட்டதை உணர்ந்தான். பிறகு ஒரு துறவி மடாலயத்தில் சென்று வாழ ஆரம்பித்தான். ஓர் அர்கத் ஆனான்.[129]
  • பாகியான் அசோகரின் தம்பியாக மகேந்திரன் என்பவனை குறிப்பிடுகிறார். அவனது ஒழுக்கமற்ற நடத்தை காரணமாக அசோகர் அவனை வெட்கமடைய செய்தார் என்று குறிப்பிட்டுள்ளார். அவன் பிறகு இருள் நிறைந்த குகைக்குள் சென்று வாழ ஆரம்பித்தான். அங்கு தியானம் செய்தான். குடும்பத்திற்குள் மீண்டும் வர அசோகர் அனுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் ஒரு குன்றின் தனிமையாக வாழ்வதை அவன் தேர்வு செய்தான். எனவே பாடலிபுத்திரத்திற்குள் அவனுக்கான ஒரு குன்றை அசோகர் கட்டினார்.[129]
  • அசோகவதனத்தின் படி அசோகரின் சகோதரன் ஒரு நிர்கரந்தனாக தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டான். அசோகரால் ஆணையிடப்பட்ட நிர்கரந்தர்களின் மொத்தமான படுகொலையின் போது கொல்லப்பட்டான்.[129]

ஏகாதிபத்திய விரிவு[தொகு]

அசோகரின் பேரரசானது ஆப்கானித்தானில் இருந்து வங்காளம் வரையிலும், மற்றும் தென்னிந்தியா வரையிலும் விரிவடைந்திருந்தது. பல்வேறு நவீன வரைபடங்கள் இப்பேரரசை கிட்டத்தட்ட அனைத்து இந்திய துணைக் கண்டத்தையும் உள்ளடக்கியிருந்ததாக சித்தரிக்கின்றன. இதில் விதி விலக்கு தெற்கு கோடி பகுதிகளான தமிழகம் மற்றும் கேரளா ஆகியவையாகும்.[146]
எர்மன் குல்கே மற்றும் தியேத்மர் ரோதெர்முன்ட் ஆகியோர் அசோகரின் பேரரசானது இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கி இருக்கவில்லை என்று நம்புகின்றனர். இப்பகுதிகள் தன்னாட்சி மிக்க பழங்குடியினங்களால் ஆளப்பட்டன என்று நம்புகின்றனர்.[146]

அசோகருக்கு முன் ஆட்சி செய்தவர்களால் கட்டுப்படுத்தப்பட்ட நிலப்பரப்பின் விரிவானது தெளிவாக தெரியவில்லை. ஆனால் இவரது தாத்தா சந்திரகுப்தரின் பேரரசானது வட இந்தியா முழுவதும் மேற்கு கடற்கரை (அரபிக் கடல்) முதல் கிழக்கு கடற்கரை (வங்காள விரிகுடா) வரை பரவியிருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்திய துணைக்கண்டத்தில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கை இது உள்ளடக்கியிருந்தது. பிந்துசாரரும், அசோகரும் இந்த பேரரசை தெற்கு நோக்கி விரிவாக்கினர் என்று தெரிகிறது.[147] அசோகரின் கல்வெட்டுகளின் பரவலானது இவரது பேரரசானது தமிழகம் மற்றும் கேரளா தவிர்த்து கிட்டத்தட்ட அனைத்து இந்திய துணைக் கண்டத்தையும் உள்ளடக்கி இருந்தது என்று பரிந்துரைக்கின்றது. அசோகரின் பாறைக் கல்வெட்டுகளில் 2 மற்றும் 13 ஆகியவை தமிழகம் மற்றும் கேரளா ஆகிய இந்த தெற்குக் கோடிப் பகுதிகள் சோழர்கள், பாண்டியர்கள், கேரள புத்திரர்கள் மற்றும் சத்யபுத்திரர்களால் ஆளப்பட்டன என்று குறிப்பிடுகின்றன. வடமேற்கே அசோகரின் இராச்சியமானது காந்தாரம் வரை விரிவடைந்திருந்தது. காந்தாரமானது இரண்டாம் அன்டியோச்சுசுவால் ஆளப்பட்ட செலூக்கியப் பேரரசுக்கு கிழக்கே அமைந்திருந்தது.[2] அசோகரின் பேரரசின் தலைநகரமானது மகதப் பகுதியில் அமைந்திருந்த பாடலிபுத்திரம் ஆகும்.[147]

சமயமும், தத்துவமும்[தொகு]

பௌத்தத்துடனான உறவு[தொகு]

உபாசகர் (𑀉𑀧𑀸𑀲𑀓, பிராமி எழுத்துமுறையில்) என்ற சொல்லானது அசோகரின் சிறு பாறை கல்வெட்டுக்களில் முதலாவது கல்வெட்டில் அசோகரால் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பௌத்தத்துடனான இவரது தொடர்பை விளக்குவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது (ஆண்டு அண். பொ. ஊ. மு. 258).

பௌத்த புராணங்கள் அசோகர் புத்த மதத்திற்கு மாறினார் என்று குறிப்பிடுகின்றன[148]. எனினும், அறிஞர்களின் ஒரு பிரிவினரால் இது விவாதிக்கப்படுகிறது.[149] அசோகரின் சிறு பாறை கல்வெட்டில் முதலாம் கல்வெட்டானது அசோகர் பௌத்தத்தைப் பின்பற்றினார் என்பதை எந்த வித சந்தேகமுமின்றி நிரூபிக்கிறது. இந்த கல்வெட்டில் அவர் தன்னை தானே உபாசகர் என்றும் ஒரு சாக்கியர் (அதாவது பௌத்தர், கௌதம புத்தர் - சாக்கிய - முனி) என்றும் அழைத்துக் கொள்கிறார்.[150] இதுவும், ஏராளமான பிற கல்வெட்டுகளும் பௌத்தத்துடனான இவரது தொடர்புக்கு சான்றாக திகழ்கின்றன:[151]

  • இவரது முதலாம் சிறு பாறைக் கல்வெட்டில் உபாசகராக மாறியதற்கு பிறகு ஓர் ஆண்டுக்கு தான் எந்த வித முன்னேற்றத்தையும் அடையவில்லை என்று அசோகர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், பிறகு இவர் சங்கத்திற்கு "சென்றார்". சமய ரீதியில் முன்னேற்றம் அடைந்தார். சங்கத்திற்கு "சென்றார்" என்பதன் பொருள் என்ன என்பது தெளிவாக தெரியவில்லை. பௌத்த பாரம்பரியப் படி இவர் துறவிகளுடன் வாழ்ந்தார் என்பது மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம். ஆனால் பௌத்தத்தை நோக்கி அசோகர் கவர்ந்திழுக்கப்பட்டார் என்பதை இது தெளிவாக உணர்த்துகிறது.[152]
  • இவரது மூன்றாம் சிறு பாறைக் கல்வெட்டில் இவர் தன்னை தானே உபாசகர் என்று அழைத்துக் கொள்கிறார். புத்தர் மற்றும் சங்கம் மீதான தன்னுடைய நம்பிக்கையை பதிவிடுகிறார்.[153][154]
  • எட்டாம் பெரும் பாறைக் கல்வெட்டில் தான் அரியணை ஏறி 10 ஆண்டுகளுக்கு பிறகு சம்போதி (போதி கயாவிலிருக்கும் புனிதமான போதி மரம்) மரத்திற்கு தான் சென்றேன் என்று பதிவிடுகிறார்.[154]
  • லும்பினி ரும்மினிடே கல்வெட்டில் புத்தர் பிறந்த இடத்திற்கு இவர் சென்றதை பதிவிடுகிறார். புத்தர் மற்றும் சங்கம் மீது தான் கொண்டுள்ள பயபக்தியை தெரிவிக்கிறார்.[79]
  • நிகாலிசாகர் கல்வெட்டில் ஒரு முந்தைய புத்தருக்கு தான் அர்ப்பணித்த ஒரு தூபியின் அளவை இரண்டு மடங்காக்குவதை பதிவிடுகிறார். மேலும் அந்த தளத்திற்கு வழிபடுவதற்காக தான் சென்றதையும் பதிவிடுகிறார்.[118]
  • இவரது கல்வெட்டுக்களில் சில பௌத்த சங்கத்தை பேணுவதில் இவர் கொண்டிருந்த ஆர்வத்தை பிரதிபலிக்கின்றன.[118]
  • சரு மரு கல்வெட்டின் படி மனேம-தேசத்தில் உள்ள உபுனித-விகாரத்திற்கு பயணம் மேற்கொண்ட போது அசோகர் ஒரு செய்தியை அனுப்பினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த செய்தி சேரும் இடத்தின் அடையாளமானது தெளிவாக தெரியவில்லை. எனினும் இது ஒரு புத்த மடாலயமாக (புத்த விகாரம்) இருந்திருக்க வேண்டும்.[155]

மற்ற மதங்கள்[தொகு]

வம்சத்தபகசினி என்ற பௌத்த நூலில் உள்ள ஒரு புராணக் கதையானது அசோகரின் தாயின் ஒரு கனவிற்கு பொருள் கூற ஒரு ஆசீவகத் துறவியானவர் அழைக்கப்பட்டார் என்று குறிப்பிடுகிறது. பௌத்தத்திற்கு புரவலராக விளங்கி 96 முரண் சமயக் கோட்பாட்டு பிரிவுகளை அசோகர் அழிப்பார் என்று அத்துறவி கூறினார்.[73] எனினும், இத்தகைய குறிப்புகள் அசோகரின் சொந்த கல்வெட்டுகளில் இருந்தே நேரடியாக மாறுபடுகின்றன. 6, 7 மற்றும் 12ஆம் பாறைக் கல்வெட்டுகள் போன்ற அசோகரின் கல்வெட்டுகள் அனைத்து சமயப் பிரிவுகளுடனும் சமய சகிப்புத்தன்மையுடன் இருப்பதை வலியுறுத்துகின்றன.[156] இதே போல் இவரது 12ஆம் பாறைக் கல்வெட்டில் அசோகர் அனைத்து சமயத்தைச் சேர்ந்த மக்களுக்கும் மரியாதை செலுத்துகிறார். [157]இவரது கல்வெட்டுகளில் அசோகர் புத்த சமயம் சாராத துறவிகளுக்கு குகைகளை கொடுத்தது குறிப்பிடப்பட்டுள்ளது. பிராமணர்கள் மற்றும் சிரமணர்கள் ஆகிய இருவருமே மரியாதைக்குரியவர்கள் என்று இவரது கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. "பிற சமயப் பிரிவுகளை சிறுமைப்படுத்த வேண்டாம், மாறாக அவற்றைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்" என்றும் மக்களுக்கு இவர் மேலும் கூறுகிறார்.[152]

உண்மையில் புத்த சமயம் அசோகருக்கு கீழ் அரசின் மதமாக இருந்தது என்று எந்த ஒரு சான்றும் கிடையாது.[158] அசோகரின் எஞ்சியுள்ள எந்த ஓர் ஆணையும் புத்த சமயத்தவர்களுக்கு இவர் நேரடியான நன்கொடைகளை கொடுத்தார் என்று பதிவிடவில்லை. இவரது இராணி கருவகி நன்கொடைகளை அளித்ததை ஒரு கல்வெட்டு பதிவிட்டுள்ளது. அதே நேரத்தில், ஆசீவகத்தை சேர்ந்தவர்களுக்கு பராபர் குகைகளை இவர் நன்கொடை அளித்தார் என்று அறியப்படுகிறது.[159] புத்த சமயத்தவர்களுக்கு இவர் அளித்த நன்கொடைகள் குறித்து சில மறைமுக குறிப்புகள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, நிகலிசாகர் தூண் கல்வெட்டானது கொனகமன தூபியை இவர் விரிவாக்கியதை பதிவிட்டுள்ளது.[160] இதே போல் லும்பினி கல்வெட்டானது புத்தர் பிறந்த கிராமத்திற்கு இவர் நில வரியை நீக்கினார் என்றும், வருவாய் வரியை எட்டில் ஒரு பங்காக குறைத்தார் என்றும் குறிப்பிடுகிறது.[161]

தர்ம-மகாமத்த அதிகாரிகளை அசோகர் நியமித்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களது பணிகளில் பல்வேறு சமய பிரிவுகளின் நலத்தை பேணுதலும் அடங்கும். இதில் புத்த சங்கம், பிராமணர்கள், ஆசீவகர்கள் மற்றும் நிர்கிரந்தர்கள் ஆகியோரும் அடங்குவர். 8 மற்றும் 12ஆம் பாறைக் கல்வெட்டுகள் மற்றும் 7ஆம் தூண் கல்வெட்டு ஆகியவை அனைத்து அமைப்புகளுக்கும் நன்கொடைகள் அளிப்பதை அதிகாரப் பூர்வமாக குறிப்பிடுகின்றன.[162]

அசோகரின் சிறு பாறை 1ஆம் கல்வெட்டானது "அமிச தேவா" என்ற சொற்களை கொண்டுள்ளது. ஒரு பொருள் விளக்கத்தின் படி "அமிசா" என்ற சொல்லானது "அம்ரிசா" ("போலி") என்ற வார்த்தையிலிருந்து உருவாகிறது. இவ்வாறாக இச்சொற்கள் "உண்மையான" மற்றும் "போலியான" கடவுள்களில் அசோகரின் நம்பிக்கையை குறிப்பிடுகின்றன. இருந்தும் இச்சொல்லானது "அமிசரா" ("கலக்காத") என்ற சொல்லிலிருந்து வந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இச்சொல்லானது வானுலகத்தில் வாழ்பவர்கள், அதாவது மனிதர்களுடன் கலக்காதவர்கள் என்று குறிப்பிடுவதாகக் கருதப்படுகிறது. மனிதர்களுடன் கலக்காத வானுலகத்தில் வாழும் கடவுள்களையும் கூட மனிதர்களால் பின்பற்றப்படும் தர்மத்தால் உருவாக்கப்பட்ட நன்னடத்தையானது ஈர்க்கும் என்று இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.[163]

தம்மம்[தொகு]

"தம்மத்தை" (சமக்கிருதம்: தர்மம்) பரப்புவதற்கு தன்னை அசோகர் அர்ப்பணித்துக் கொண்டார் என அசோகரின் பல்வேறு கல்வெட்டுகள் பரிந்துரைக்கின்றன. பௌத்த வழக்குகளில் தம்மம் என்பது கௌதம புத்தரின் போதனைகளை குறிப்பிட பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும்.[164] எனினும், அசோகரின் சொந்த கல்வெட்டுகள் புத்தரின் கொள்கைகளான நான்கு உயர்ந்த உண்மைகள் அல்லது நிர்வாணம் ஆகியவற்றை குறிப்பிடவில்லை.[79] இந்திய சமயங்களில் "தம்மம்" என்ற சொல்லானது பல்வேறு துணை பொருள்களை கொண்டுள்ளது. இது பொதுவாக "நியதி, கடமை அல்லது நன்னடத்தை" என்று மொழி பெயர்க்கப்படுகிறது.[164] அசோகரின் காந்தார கல்வெட்டுகளில் "தம்மம்" என்ற சொல்லானது யுசேபியா (கிரேக்கம்) மற்றும் கிசைத் (அரமேயம்) என்று மொழி பெயர்க்கப்படுகிறது. இவரது தம்மமானது பௌத்தத்தை விட மேலும் பரவலான பொருளைக் கொண்டுள்ளது என இது பரிந்துரைக்கிறது.[149]

அசோகரைப் பொறுத்த வரையில் தம்மம் என்பதன் பொருளானது "ஒரு சமூக அக்கறை, சமய சகிப்புத்தன்மை, சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வு, பொதுவான அறநெறி நியதிகளை பின்பற்றுதல் மற்றும் போரை கை விடுதல்" ஆகியவை என இவரது கல்வெட்டுக்கள் பரிந்துரைக்கின்றன.[164] எடுத்துக்காட்டாக:

  • மரண தண்டனையை தடை செய்தல் (4ஆம் தூண் கல்வெட்டு)[152]
  • ஆல மரக்கன்றுகளை நடுதல், மாந்தோப்புகளை அமைத்தல், மற்றும் சாலைகளின் பக்கவாட்டில் ஒவ்வொரு 800 மீட்டர்கள் (12 மைல்) தூரத்திற்கும் சத்திரங்களையும், கிணறுகளையும் அமைத்தல். (7ஆம் தூண் கல்வெட்டு)[157]
  • அரண்மனை சமையலறையில் விலங்குகளை கொல்வதில் கட்டுப்பாடுகள் விதித்தல் (1ஆம் பாறை கல்வெட்டு);[157] ஒரு நாளைக்கு கொல்லப்படும் விலங்குகளின் எண்ணிக்கையை இரண்டு மயில்கள் மற்றும் ஒரு மான் என்று குறைப்பது, மற்றும் எதிர் காலத்தில் இந்த விலங்குகளையும் கூட கொல்லாதிருத்தல்.[152]
  • மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் (2ஆம் பாறை கல்வெட்டு).[157]
  • பெற்றோருக்கு கீழ்ப்படிந்து நடத்தல், "பூசாரிகள் மற்றும் துறவிகளிடம் ஈகை குணத்துடன் நடத்தல், செலவீனங்களை சிக்கனமாக செய்தல்" ஆகியவற்றை ஊக்குவித்தல் (3ஆம் பாறை கல்வெட்டு).[157]
  • "ஏழைகள் மற்றும் வயது முதிர்ந்தோரின் நலம் மற்றும் மகிழ்ச்சிக்கு பணியாற்றுவதற்காக இவர் அதிகாரிகளை நியமித்தார்" (5ஆம் பாறை கல்வெட்டு)[157]
  • "உயிரினங்களுக்கு தன்னுடைய கடனை செலுத்துவதற்காக அனைத்து உயிரினங்களின் நலத்தை பேணுதல் மற்றும் அவற்றின் மகிழ்ச்சிக்காக இந்த உலகம் மற்றும் அடுத்த உலகத்தில் முயற்சி செய்தல்". (6ஆம் பாறை கல்வெட்டு)[157]

நவீன அறிஞர்கள் தம்மம் என்ற சொல்லை ஒரு பௌத்த உபாசக நியதி, அரசியல்-அறநெறி யோசனைகளின் ஒரு தொகுதி, "அனைவருக்குமான ஒரு சமயத்தை ஒத்தது", அல்லது அசோகரின் ஒரு புதுமை என பலவாராக புரிந்து கொள்கின்றனர். மற்றொரு புறம், ஒரு பரந்த மற்றும் வேறுபட்ட பேரரசை ஒன்றாக இணைத்து வைத்திருப்பதற்காக பயன்படுத்தப்பட்ட தேவையான அரசியல் கொள்கை என்றும் கூட இது புரிந்து கொள்ளப்படுகிறது.[9]

அசோகர் தர்ம-மகாமத்தர்கள் என்று அழைக்கப்பட்ட அதிகாரிகளின் ஒரு புது வகையினரை நியமித்தார். வயது முதிர்ந்தவர்கள், உடல் அல்லது மனதளவில் பலவீனமானவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள், மற்றும் பல்வேறு சமய பிரிவினர் ஆகியோரின் நலத்தை பேணுதல் இந்த அதிகாரிகளின் பணியாக இருந்தது. தம்மத்தை பரப்புவதற்காக மேற்கு ஆசியாவின் எலனிய இராச்சியங்களுக்கு தூது குழுவினரின் ஒரு பகுதியாகவும் இந்த அதிகாரிகள் அனுப்பப்பட்டனர்.[162]

வரலாற்று ரீதியாக உலகளாவிய பௌத்த பகுதிகளில் அசோகர் குறித்த கருத்துருவானது அசோகாவதானம் போன்ற நூல்களில் குறிப்பிட்டுள்ளதைப் போல் புராணங்களை அடிப்படையாக கொண்டிருந்தது. இவரது பாறை கல்வெட்டுக்களை அடிப்படையாக கொண்டு இருக்கவில்லை. ஏனெனில், இந்த கல்வெட்டுகளில் பயன்படுத்தப்பட்ட பிராமி எழுத்து முறையானது எழுதப்பட்டதற்கு பிறகு சீக்கிரமே மறக்கப்பட்டு விட்டது. 19ஆம் நூற்றாண்டில் சேம்சு பிரின்செப் என்பவரால் இது குறித்து ஆய்வு நடத்தப்படும் வரை இதன் பொருளானது அறியப்படாமல் இருந்தது.[165] சீன புத்த புனித பயணிகளான பாகியான் மற்றும் சுவான்சாங் ஆகியோரின் நூல்கள் கௌதம புத்தருடன் தொடர்புடைய முக்கியமான தளங்களை அசோகரின் கல்வெட்டுகள் குறிக்கின்றன என்று பரிந்துரைக்கின்றன. இந்த எழுத்தாளர்கள் பௌத்த மதத்துடன் தொடர்புடைய தகவல்களை அசோகரின் கல்வெட்டுகளிலிருந்து பெறப்பட்டன என தொடர்புபடுத்துகின்றனர். பிராமி எழுத்து முறையை மறை பொருளுணர்ந்ததற்கு பிறகு நவீன அறிஞர்களால் புரிந்து கொள்ளப்பட்ட இக்கல்வெட்டுகளின் உண்மையான தகவலுடன் இந்த எழுத்தாளர்களின் தகவல்கள் ஒத்துப் போகவில்லை. பாகியானின் காலத்தில் இந்த எழுத்து முறையானது மறக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. உள்ளூர் வழிகாட்டிகளை பாகியான் சார்ந்திருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. புத்த மதத்துடன் தொடர்புடைய சில தகவல்களை தாமாக உருவாக்கி பாகியானுக்கு மன நிறைவு அளிப்பதற்காக இந்த வழிகாட்டிகள் கூறியிருக்கலாம் என்று கருதப்படுகிறது, அல்லது வாய் மொழி மரபுகளை அடிப்படையாகக் கொண்ட தவறான மொழி பெயர்ப்புகளை அவர்கள் சார்ந்திருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. சுவான்சாங்கும் இதே போன்ற ஒரு நிலையில் இருந்திருக்கலாம் அல்லது கல்வெட்டுகளின் தகவல் குறித்து பாகியானின் நூல்களிலிருந்து எடுத்திருந்திருக்கலாம்.[166] அசோகரின் தூண் கல்வெட்டுக்களின் ஒரு மிகைப்படுத்தப்பட்ட பொருளறிதலுடன் இதே போல் சில பிராமண அறிஞர்கள் நடந்து கொண்டது இத்தகைய கோட்பாடுகளுக்கு வலுவூட்டுகிறது. 14ஆம் நூற்றாண்டு முஸ்லிம் சுல்தானான பிரூசு ஷா துக்ளக் இந்த கல்வெட்டுகளை மறை பொருள் உணருமாறு அறிஞர்களிடம் வேண்டிய போது அந்த அறிஞர்கள் இவ்வாறு செய்தனர். சம்சி சிராஜ் என்ற வரலாற்றாளரின் தரிக்-இ பிரோசு ஷாகி நூலின் படி, தோப்ரா மற்றும் மிராத்திலிருந்து தில்லிக்கு போரில் வெல்லப்பட்ட பொருட்களாக இந்த தூண்களை பிரூசு ஷா துக்ளக் இடம் மாற்றிய போது இந்த அறிஞர்கள் பிரூசு என்ற பெயருடைய ஒரு மன்னனை தவிர யாராலும் இந்த தூண்களை இடம் மாற்ற முடியாது என்று இந்த கல்வெட்டுகளில் எதிர் காலம் கணித்து கூறப்பட்டுள்ளதாக கூறினர். மேலும், இந்த நேரத்தில் இந்த தூண்களை எழுப்பியது மகாபாரத்தின் வீமன் என்ற உள்ளூர் மரபுகளும் காணப்பட்டன.[167]

ரிச்சர்டு கோம்பிரிச் போன்ற அறிஞர்களின் கூற்றுப் படி, அசோகரின் தம்மமானது புத்த மத தாக்கத்தை காட்டுகிறது. எடுத்துக்காட்டாக, கலிங்கத்தின் தனியான 1ஆம் கட்டளையானது சிகலாவுக்கு புத்தர் கொடுத்த அறிவுரை மற்றும் புத்தரின் பிற சமய சொற்பொழிவுகளால் அகத்தூண்டுதல் பெற்றிருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.[152]

விலங்குகள் நலம்[தொகு]

அசோகரின் கல்வெட்டுக்கள் உயிர்வாழும் எந்த உயிரினத்தையும் காயப்படுத்துவது நல்ல செயல் அல்ல என்று குறிப்பிட்டுள்ளன.[168] எனினும் பொதுவாக கால்நடைகள் கொல்லப்படுவதையோ அல்லது மாட்டுக்கறி உண்பதையோ அவர் தடை செய்யவில்லை.[169]

"பயனற்ற உண்ணத் தகாத அனைத்து நான்கு-கால் உயிரினங்களையும்", மற்றும் பல்வேறு பறவைகள், சில மீன் இனங்கள் மற்றும் காளை மாடுகள் ஆகிய குறிப்பிட்ட விலங்கினங்களையும் கொல்வதற்கு இவர் தடை விதித்தார். பெண் ஆடுகள், செம்மறி ஆடுகள் மற்றும் பன்றிகள் தங்களது குட்டிகளை பேணும் பருவத்தில் இருக்கும்போது அவற்றை கொல்வதற்கு தடை விதித்தார். இளம் விலங்குகளும் ஆறுமாத வயது அடைந்த பின்னரே கொல்லப்படவேண்டும் என்று ஆணையிட்டார்.[170][171]

பொழுது போக்கிற்காக அரச குடும்பத்தினர் விலங்குகளை வேட்டையாடுவதையும் அசோகர் தடைசெய்தார். அரண்மனையில் உணவுக்காக விலங்குகள் கொல்லப்படுவதை மட்டும் அனுமதித்தார்.[172] வேட்டையாடுவதை தடை செய்த அவர் பல விலங்குகள் நல மருத்துவ மனைகளை நிறுவினார். பல்வேறு விடுமுறை நாள்களில் புலால் உண்ணுவதை நீக்கினார். இதன் காரணமாக அசோகர் தலைமையிலான மௌரிய பேரரசானது பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது: "உலக வரலாற்றிலேயே ஒரு அரசாங்கம் அதன் விலங்குகளையும் குடிமக்களாக, அரசின் பாதுகாப்புக்கு உரியவையாக மனிதர்களைப் போலவே நடத்திய தருணங்களில் ஒன்று".[173]

அயல்நாட்டு உறவுகள்[தொகு]

அசோகரின் (ஆண்டு பொ. ஊ. மு. 260 - பொ. ஊ. மு. 218) 13ஆம் பெரும் பாறை கல்வெட்டின் படி "தம்மத்தால் வெல்லப்பட்ட" நிலப்பரப்புகள்.[174][175]

பல்வேறு மக்களுக்கு செய்திகள் அல்லது மடல்களை, எழுதியோ அல்லது வாய் வழியாகவோ, அல்லது இரு முறையிலுமோ அனுப்புவதற்காக தூதுவர்களை அசோகர் அனுப்பினார் என்பது நன்றாக அறியப்பட்ட ஒன்றாகும். "வாய் வழி ஆணைகள்" குறித்த ஆறாவது பாறை கல்வெட்டானது இதை வெளிப்படுத்துகிறது. எழுதிய செய்திகளுடன், வாய் வழி செய்திகளையும் சேர்ப்பது என்பது வழக்கத்திற்கு மாறான ஒன்று கிடையாது என்று பின்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதே போல் அசோகரின் செய்திகளின் கருத்தை 13ஆம் பாறைக் கல்வெட்டிலிருந்து அனுமானிக்க முடியும்: இந்த தூதுக் குழுக்கள் இவரது தர்ம விஜயத்தை பரப்புவதற்காக அனுப்பப்பட்டன, இதையே உச்சபட்ச வெற்றி என்று அசோகர் கருதினார், மற்றும் இதை அனைத்து பகுதிகளுக்கும் பரப்புவதற்கு இவர் விரும்பினார், இதில் இந்தியாவை தாண்டி தொலைதூரத்தில் உள்ள பல பகுதிகளும் அடங்கும். கரோஷ்டி எழுத்து முறையை பின்பற்றியதன் வழியாக வெளிப்படையான மற்றும் மறக்க முடியாத கலாச்சார தொடர்பின் தடங்கள் காணப்படுகின்றன. கல்வெட்டுகளை நிறுவும் யோசனை இந்த எழுத்து முறையுடன் சேர்ந்து பயணித்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. தனது கல்வெட்டுகளில் அசோகரால் பயன்படுத்தப்பட்ட சில வழிமுறைகளில் அகாமனிசியப் பேரரசின் தாக்கமும் காணப்படுகிறது. அசோகர் உண்மையிலேயே பிற கலாச்சாரங்களுடன் தொடர்பில் இருந்தார் என்பதையும், தன்னுடைய சொந்த உடனடி நிலப்பரப்புகளை தாண்டி மற்றவருடன் இணைந்து செயலாற்றுவதிலும் இவர் முக்கிய பங்காற்றினார் என்றும், புதிய கலாச்சார யோசனைகளை பரப்பினார் என்பதை இதை காட்டுகிறது..[176]

எலனிய உலகம்[தொகு]

இவரது பாறை கல்வெட்டுகளில் மேற்கில் இருந்த எலனிய இராச்சியங்களுக்கு பௌத்தத்தை பரப்புவதை தான் ஊக்குவித்ததாகவும், தன்னுடைய நிலப்பரப்பில் உள்ள கிரேக்கர்கள் புத்த மதத்திற்கு மாறினார் என்றும், தன்னுடைய தூதர்களை ஏற்றுக்கொண்டனர் என்றும் அசோகர் குறிப்பிடுகிறார்:

தம்மத்தால் வெல்லப்படுவதையே சிறந்த வெற்றி என்று கடவுள்களால் விரும்பப்படுபவர் தற்போது கருதுகிறார். தம்மத்தின் வெற்றியானது இங்கு பெறப்பட்டது, இந்த எல்லைகளில், 600 யோசனைகள் (5,400 – 9,600 கி. மீ.) தாண்டியும் கூட, எங்கே கிரேக்க மன்னர் அந்தியோச்சுசு ஆட்சி செய்கிறாரோ அங்கும், அவரை தாண்டி நான்கு மன்னர்கள் தாலமி, அந்திகோனோசு, மகிசு மற்றும் அலெக்சாந்தர் ஆகியோர் ஆட்சி செய்கின்றனர். அங்கும் தர்மம் வெல்லப்பட்டது. தெற்கே சோழர், பாண்டியர் மற்றும் தாமிரபரணி (இலங்கை) வரையிலும் வெல்லப்பட்டது. இங்கு மன்னரின் நிலப்பரப்பில் கிரேக்கர்கள், கம்போசர்கள், நபகர்கள், நபபம்கிதிகள், போசர்கள், பிதினிகர்கள், ஆந்திரர்கள் மற்றும் பலிதர்கள், எங்கும் மக்கள் தம்மம் குறித்த கடவுள்களால் விரும்பப்படுவரின் அறிவுரைகளை பின்பற்றுகின்றனர். கடவுள்களால் விரும்பப்படுவரின் தூதர்கள் செல்லாத இடங்களில் உள்ள மக்கள் கூட, தம்ம வழி முறைகளை கேட்டறிந்து, கடவுள்களால் விரும்பப்படுவரால் அளிக்கப்பட்ட தம்ம ஆணைகளையும், அறிவுரைகளையும் பின்பற்றுகின்றனர். தொடர்ந்து பின்பற்றவும் செய்வர்.

கிரேக்க ஆட்சியாளரிடம் இருந்து மடல்களை அசோகர் பெற்றார் என்பது உறுதிப்படுத்தப்படாவிட்டாலும், ஒரு வேளை பெற்றிருக்க வாய்ப்பிருந்துள்ளது. அகாமனிசிய மன்னர்களின் கல்வெட்டுகளை தான் அறிந்த அதே வழியில் எலனிய அரசு ஆணைகளையும் இவர் அறிந்து இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தியாவில் எலனிய மன்னர்களின் தூதுவர்கள் வந்துள்ளனர். அதே போல அசோகரின் தூதுவர்களும் எலனிய மன்னர்களிடம் அனுப்பப்பட்டுள்ளனர்.[176] இரண்டாம் தாலமியால்[178] அசோகரின் அரசவைக்கு அனுப்பப்பட்ட இத்தகைய ஒரு கிரேக்க தூதுவராக தியோனைசியசு குறிப்பிடப்படுகிறார். அசோகரின் பௌத்த மதத்திற்கு மாறிய ஒரு மன்னராக இரண்டாம் தாலமி அசோகரின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளார். அசோகரிடம் இருந்து வந்த புத்த தூதுக் குழுக்களை பெற்றதாகக் கருதப்படும் மன்னர் மகசுவின் ஆட்சியின் கீழ் வாழ்ந்த சைரீனின் எகேசியசு போன்ற சில எலனிய தத்துவவாதிகள் புத்த போதனைகளால் தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கலாம் என்று ஒரு சில நேரங்களில் கருதப்படுகிறது.[179]

பௌத்தத்தை பரப்பியதில் இந்தியாவில் இருந்த கிரேக்கர்களுக்கு கூட ஒரு பங்காற்றியுள்ளனர் என்று கருதப்படுகிறது. அசோகரின் தூதர்களில் சிலரான தர்மரச்சிதா போன்றவர்கள் பாளி நூல்களில் முன்னணி கிரேக்க (யவனர்) புத்த துறவிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். பௌத்தத்தை பரப்பியதில் இவர்கள் முக்கிய பங்காற்றினார் என்று (மகாவம்சம் 12) குறிப்பிடப்படுகிறது.[180]

அசோகரால் ஆட்சி செய்யப்பட்ட நிலப்பரப்புகளில் சில கிரேக்கர்கள் (யவனர்கள்) நிர்வாக பதவியில் பங்காற்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. குசராத்தின் கிர்நார் பகுதியில் ஒரு யவன ஆளுநர் அசோகரின் ஆட்சிக் காலத்தின் போது ஆட்சி புரிந்தார் என முதலாம் ருத்திரதாமனின் கிர்நார் கல்வெட்டானது பதிவிட்டுள்ளது. ஒரு நீர்த் தேக்கத்தை அமைத்ததில் இவரது பங்கு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.[181]

பாட்னாவில் இருந்த அசோகரின் அரண்மனையானது பெர்சப்பொலிஸில் இருந்த அகாமனிசிய அரண்மனையை ஒத்து அமைக்கப்பட்டது என்று கருதப்படுகிறது.[182]

முந்தைய பிறப்புகள் குறித்த புராணங்கள்[தொகு]

பௌத்த புராணங்கள் அசோகரின் முந்தைய பிறப்புகள் குறித்த கதைகளை குறிப்பிடுகின்றன. ஒரு மகாவம்ச கதையின் படி முந்தைய பிறப்பில் அசோகர், நிக்ரோதர் மற்றும் தேவனாம்பிய திச்சா ஆகியோர் சகோதரர்களாக இருந்தனர். அந்த வாழ்க்கையில் ஒரு பிரத்தியேக புத்தர் மற்றொரு உடல் நலம் குன்றிய பிரத்தியேக புத்தரை குணமாக்குவதற்காக தேனை தேடிக் கொண்டிருந்தார். மூன்று சகோதரர்களால் நடத்தப்படும் ஒரு தேன் கடைக்கு செல்லுமாறு அவரிடம் ஒரு பெண் கூறினார். பிரத்தியேக புத்தருக்கு ஈகை குணத்துடன் தேனை அசோகர் தாராளமாக கொடுத்தார். இந்த சிறந்த செயலுக்காக ஜம்புத்வீபத்தின் இறையாண்மையுள்ள ஆட்சியாளராக தான் உருவாக வேண்டும் என வேண்டினார். [183]அப்பெண் இவரது இராணியாக வர வேண்டும் என்று விரும்பினார். அப்பெண் அசோகரின் மனைவியான அசந்தமித்தையாக மீண்டும் பிறந்தார்.[136] பிந்தைய பாளி நூல்கள் அப்பெண்ணின் மற்றொரு சிறந்த செயலையும் குறிப்பிடுகின்றன. தன்னால் செய்யப்பட்ட ஒரு துண்டு துணியை பிரத்தியேக புத்தருக்கு அன்பளிப்பாக அப்பெண் கொடுத்தார். தசவத்துப்பக்கரனம், கம்போடிய அல்லது விரிவாக்கப்பட்ட மகாவம்சம் (9-10ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தது), திராய் பூமி கதை (15ஆம் நூற்றாண்டு) உள்ளிட்ட நூல்கள் இந்த இரண்டாம் செயலை குறிப்பிடுகின்றன.[137]

ஒரு அசோகவதன கதையின் படி, இராஜகிரிகத்தில் உள்ள ஒரு முக்கியமான குடும்பத்தில் ஜெயா என்ற பெயருடைய நபராக அசோகர் பிறந்தார். தானொரு சிறுவனாக இருந்த போது உணவு என்று நினைத்து தவறுதலாக சேற்றை கௌதம புத்தரிடம் அவர் கொடுத்தார். புத்தர் இதை ஏற்றுக் கொண்டார். உணவை அளித்த இத்தகைய சிறந்த செயலுக்காக தான் ஒரு மன்னனாவேன் என்று ஜெயா அறிவித்தார். ஜெயாவின் தோழரான விஜயன் அசோகரின் பிரதம மந்திரியான இராதகுப்தராக பிறந்தார் என்றும் இந்நூல் குறிப்பிடுகின்றது.[184] பிந்தைய வாழ்வில் உபகுப்தர் என்ற ஒரு புத்த துறவி அசோகரின் கரடு முரடான தோலானது தன் முந்தைய பிறப்பில் அவர் தூய்மையற்ற சேற்றை அன்பளிப்பாக கொடுத்ததால் ஏற்பட்டது என்று கூறுகிறார்.[128] சில பிந்தைய நூல்கள் இத்தகைய கதையை மீண்டும் குறிப்பிடுகின்றன. சேற்றை கொடுத்ததன் எதிர் மறை விளைவுகளை குறிப்பிடாமல் இவை கூறுகின்றன. இந்த நூல்களில் குமாரலதாவின் கல்பன-மந்திதிகம், ஆரியசுராவின் ஜாதக-மாலை மற்றும் மகா-கர்ம-விபாகம் ஆகியவையும் அடங்கும். சீன எழுத்தாளரான பாவோ செங்கின் சி சியா சூ லை இங் குவா லு நூல் அசோகர் எதிர் காலத்தில் சிறந்தவராக உருவானதற்கு சேற்றை கொடுத்தது போன்ற ஒரு உயர்வற்ற, முக்கியமற்ற செயல் காரணமாக இருக்காது என்று குறிப்பிடுகிறார். மாறாக மற்றொரு முந்தைய பிறப்பில் ஒரு மன்னராக ஏராளமான அளவிலான புத்த சிலைகளை அசோகர் நிறுவினார் என்று இந்நூல் குறிப்பிடுகிறது. இத்தகைய சிறந்த செயலானது பிந்தைய பிறப்பில் ஒரு மகா பேரரசராக அசோகர் ஆவதற்கு காரணமானது என்று குறிப்பிடுகிறது.[185]

14ஆம் நூற்றாண்டு பாளி மொழி மாயக் கதையான தசவத்துப்பகரனமானது (ஒரு வேளை அண். 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த) வணிகர் தேனை அன்பளிப்பாக கொடுத்தது மற்றும் சிறுவன் சேற்றை அன்பளிப்பாக கொடுத்த கதைகளை ஒன்றிணைக்கிறது. மகாவம்ச கதையிலிருந்து சற்றே வேறுபட்ட மற்றொரு கதையை இது கூறுகிறது. இக்கதையானது கௌதம புத்தர் பிறப்பதற்கு முன்னர் நடைபெற்றது என்று குறிப்பிடுகிறது. வணிகர் புத்தருக்கு சேற்றை கொடுத்த ஒரு சிறுவனாக மீண்டும் பிறந்தார் என்று குறிப்பிடுகிறது. எனினும், இக்கதையில் புத்தர் தன்னுடைய உதவியாளர் ஆனந்தரை சேற்றில் இருந்து பூச்சை உருவாக்குமாறு கூறுகிறார். இப்பூச்சானது புத்த மடாலயத்தின் சுவர்களில் உள்ள விரிசல்களை சரி செய்ய பயன்படுத்தப்பட்டது.[186]

கடைசி ஆண்டுகள்[தொகு]

இராணியாக திஷ்யரட்சா[தொகு]

அசோகரின் கடைசியாக தேதியிடப்பட்ட கல்வெட்டானது 4ஆம் தூண் கல்வெட்டு ஆகும். இது இவரது ஆட்சியின் 26ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகும்.[116] அசோகரின் பிந்தைய ஆண்டுகள் குறித்த ஆதாரமாக விளங்குபவை பௌத்த புராணங்கள் மட்டுமே ஆகும். இவரது ஆட்சியில் 29ஆம் ஆண்டின் போது அசோகரின் இராணியான அசந்தமித்தை இறந்தார் என்று இலங்கை மரபானது குறிப்பிடுகிறது. இவரது ஆட்சியின் 32ஆம் ஆண்டின் போது இவரது மனைவி திஷ்யரட்சாவுக்கு இராணி என்ற பட்டம் கொடுக்கப்பட்டது.[116]

மகாவம்சம் மற்றும் அசோகவதனம் ஆகிய இரண்டுமே அசோகர் போதி மரத்திற்கு சாதகமாக நடந்து கொண்டு கவனித்துக் கொண்டதை குறிப்பிடுகின்றன. போதி என்பதை அசோகரின் மனைவியல்லாத பெண் என்று திஷ்யரட்சா எடுத்துக் கொண்டு பொறாமை கொண்டார். பில்லி சூனியத்தை பயன்படுத்தி அம்மரத்தை பட்டுப் போகச் செய்தார்.[187] அசோவதனத்தின் படி, ஒரு சூனியக்காரியை இச்செயலை செய்வதற்காக இவர் பணிக்கு அமர்த்தினார். "போதி" என்பது ஒரு மரத்தின் பெயர் என்று அசோகர் விவரித்த போது, அம்மரத்தை மீண்டும் சூனியக்காரியை கொண்டு செழிக்க வைத்ததாக குறிப்பிடப்படுகிறது.[188] மகாவம்சத்தின் படி திஷ்யரட்சா மரத்தை முழுவதுமாக அழித்து விட்டார்.[189] இது அசோகரின் ஆட்சியின் 34ஆம் ஆண்டின் போது நடைபெற்றது.[116]

அசோகவதனமானது அசோகரின் மகன் குணாளனுடன் தவறான முறையில் நடக்க திஷ்யரட்சா (திஷ்யரக்‌ஷிதா) முயற்சி செய்தார் என்று குறிப்பிடுகிறது. ஆனால், குணாளன் இதை நிராகரித்தார். இறுதியாக அசோகர் திஷ்யரட்சாவுக்கு ஆட்சி செய்யும் உரிமையை ஏழு நாட்களுக்கு அளித்தார். இக்காலத்தின் போது குணாளனை சித்திரவதை செய்து கண் பார்வையற்றவராக திஷ்யரட்சா ஆக்கினார்.[140] அசோகர் பிறகு திஷ்யரட்சாவை எச்சரித்தார். அதிசயத்தக்க வகையில் குணாளன் தனது கண் பார்வையை மீண்டும் பெற்றார். இராணிக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று வேண்டினார். ஆனால், அசோகர் திஷ்யரட்சாவை மரண தண்டனைக்கு உட்படுத்தினார்.[187] கசமேந்திரரின் அவதன-கல்ப-லதா நூலும் இக்கதையை குறிப்பிடுகிறது. ஆனால், அசோகரின் பெயரை நன்முறையில் வைத்திருப்பதற்காக குணாளன் தன்னுடைய கண் பார்வை மீண்டும் பெற்றதற்கு பிறகு இராணிக்கு மன்னிப்பு அளித்தார் என்று குறிப்பிடுகிறது.[190]

மறைவு[தொகு]

இலங்கை மரபின் படி அசோகர் தன் ஆட்சியின் 37ஆம் ஆண்டின் போது இறந்தார்.[116] இது பொ. ஊ. மு. 232ஆம் ஆண்டு வாக்கில் இவர் இறந்தார் என்பதை பரிந்துரைக்கிறது.[191]

அசோவதனத்தின் படி தன்னுடைய கடைசி நாட்களின் போது பேரரசர் கடுமையான உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். தனது அரசின் நிதியை பௌத்த சங்கத்திற்கு நன்கொடை வழங்குவதற்காக பயன்படுத்த ஆரம்பித்தார். இதன் விளைவாக அரச கருவூலத்திற்கு அசோகர் பெற்றிருந்த அனுமதியை இவரது மந்திரிகள் தடை செய்தனர். பிறகு அசோகர் தன்னுடைய சொந்த சொத்துக்களை நன்கொடையாக அளிக்க ஆரம்பித்தார். ஆனால், இதே போல் மீண்டும் தடை செய்யப்பட்டார். இவரது மரணப் படுக்கையின் போது இவருடைய சொத்தாக ஒரு பாதி நெல்லிக் காய் இருந்தது. இதை சங்கத்திற்கு தன்னுடைய இறுதி நன்கொடையாக அசோகர் அளித்தார்.[192] இத்தகைய புராணக் கதைகள் சங்கத்திற்கு ஈகை குணத்துடன் நன்கொடைகள் வழங்குவதை ஊக்குவிக்கின்றன. பௌத்த நம்பிக்கைக்கு ஆதரவளித்த மன்னரின் பங்கை அடிக் கோடிட்டுக் காட்டுகின்றன.[45]

புராணத்தின் படி இவர் எரிக்கப்பட்டபோது இவரது உடலானது ஏழு பகல்கள் மற்றும் இரவுகளுக்கு எரிந்தது.[193]

மரபு[தொகு]

தனது அவுட்லைன் ஆப் இஸ்டரி என்ற நூலில் எச். ஜி. வெல்ஸ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: "வரலாற்றின் பத்திகளில் நிரம்பி இருக்கும் தசம ஆயிரக்கணக்கான அரசர்களின் பெயர்கள், அவர்களின் கம்பீரங்கள், கருணைகள், அமைதிகள், அரச மேன்மைகள் ஆகியவற்றுக்கு நடுவில் அசோகரின் பெயரானது கிட்டத்தட்ட தன்னந்தனியாக ஒரு நட்சத்திரத்தைப் போல ஒளிர்கிறது , ஒளிர்கிறது, ஒளிர்ந்து கொண்டே இருக்கிறது."[5]

கட்டடக்கலை[தொகு]

அசோகர் அமைத்ததாக கூறப்படும் பல்வேறு தூபிக்கள் தவிர இவரால் எழுப்பப் பட்ட தூண்கள் இந்திய துணைக்கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் எஞ்சியுள்ளன.

இந்தியாவில் கற்களால் அமைக்கப்படும் கட்டடக் கலையைத் தொடங்கி வைத்ததாக அசோகர் பெரும்பாலும் குறிப்பிடப்படுகிறார். பேரரசர் அலெக்சாந்தருக்கு பிறகு கிரேக்கர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட கல் கட்டட நுட்பங்களை ஒரு வேளை தொடர்ந்து இவர் இவ்வாறு செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.[194] அசோகரின் காலத்திற்கு முன்னர் கட்டடங்கள் ஒரு வேளை நிலையற்ற பொருட்களாலான மரம், மூங்கில் அல்லது கூரைகளின் மூலம் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.[194] பாடலிபுத்திரத்தில் தன்னுடைய அரண்மனையை அசோகர் மரங்களை தவிர்த்து கற்களால் மீண்டும் அமைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.[195] அயல்நாட்டு கைவினைஞர்களின் உதவியையும் இவர் பயன்படுத்தியிருக்கலாம் என்று கூட கருதப்படுகிறது.[196] தன்னுடைய பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளுக்காக கற்களின் நிலைத்திருக்கும் நிலையை பயன்படுத்தியது மற்றும் பௌத்த குறியீடுகளை செதுக்கியதன் மூலம் புதுமைகளை புகுத்தி தன்னுடைய தூண்களை அசோகர் அமைத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

சின்னங்கள்[தொகு]

அசோகரின் சின்னங்கள்
சாரநாத்தில் உள்ள அசோகரின் தூணின் தலைப் பகுதி. இந்திய தேசிய இலச்சினையாக இச்சிற்பம் பயன்படுத்தப்படுகிறது.
தம்மச் சக்கரம் (சமசுகிருதத்தில் தர்மம் அல்லது பாளியில் தம்மம்) ("அறநெறி சக்கரம்") என்று அழைக்கப்படும் அசோகச் சக்கரமானது இந்திய தேசியக் கொடியில் பயன்படுத்தப்படுகிறது.

அசோகரின் தூண்கள் அதிக அளவுக்கு மெய்மை தன்மை வாய்ந்தவையாக இருந்தன. மௌரிய மெருகூட்டல் என்று அறியப்பட்ட ஒரு தனித்துவமான மெருகூட்டலை இவை பயன்படுத்தின. கற்களின் மேல் பரப்பிற்கு ஒரு பளபளப்பான தோற்றத்தை இவை கொடுத்தன.[197]அசோகரால் எழுப்பப் பட்ட தூண்களில் ஒன்றின் தலைப் பகுதியாக இருக்கும் அசோக சிங்கத் தூபியின் தலைப்பகுதியானது ஆரைகளைக் கொண்ட ஒரு சக்கரத்தை கொண்டுள்ளது. இது அசோகச் சக்கரம் என்று அறியப்படுகிறது. கௌதம புத்தரால் தொடங்கப்பட்ட தர்ம சக்கரத்தை இச்சக்கரம் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அறியப்படுகிறது. நவீன இந்தியாவின் கொடியில் இச்சக்கரம் உள்ளது. இந்த தலைப் பகுதியானது சிங்கங்களின் சிற்பங்களையும் கொண்டுள்ளது. இச்சிங்கங்கள் இந்தியாவின் இலச்சினையில் காணப்படுகின்றன.[147]

கல்வெட்டுகள்[தொகு]

அசோகரின் கல்வெட்டுக்களின் பரவல், ஐ கனௌம் எனும் அக்காலக் கிரேக்க நகரத்தின் அமைவிடம்.[198]
அசோகரின் காந்தார இரு மொழிக் கல்வெட்டு (கிரேக்கம் மற்றும் அரமேயம்) (ஆப்கானிஸ்தானின் தேசிய அருங்காட்சியகம்).

அசோகரின் அதிகாரப்பூர்வமான அறிக்கைகள் எனப்படுபவை அசோகரின் தூண்கள், பெரும் பாறைகள் மற்றும் குகைச் சுவர்களில் இவரது ஆட்சிக்காலத்தின் போது வெளியிடப்பட்ட 33 கல்வெட்டுகளின் ஒரு தொகுப்பு ஆகும்.[197] இந்த கல்வெட்டுகள் நவீன கால பாக்கித்தான் மற்றும் இந்தியா முழுவதும் பரவியுள்ளன. பௌத்த மதம் குறித்த முதல் தெளிவான சான்றுகளை இவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இந்திய வரலாற்றின் மிக சக்தி வாய்ந்த மனிதர்களின் ஒருவரால் ஆதரவளிக்கப்பட்டதன் மூலம் புத்த மதமானது முதன் முதலாக விரிவாக பரவியதை விவரங்களுடன் இந்த அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அசோகரின் மத மாற்றம், அறநெறி நியதிகள், சமய நியதிகள், மற்றும் சமூக மற்றும் விலங்குகளின் நலம் குறித்த இவரது கருத்துக்கள் ஆகியவை குறித்து மேற்கொண்ட தகவல்களையும் அளிக்கின்றன.[199]

அசோகருக்கு முன்னர் அரசரின் செய்திகள் எளிதில் அழிந்து போகக்கூடிய பொருட்களான ஓலைச் சுவடிகள், மரப்பட்டைகள், பஞ்சு துணிகள் மற்றும் ஒரு வேளை மர பலகைகளிலும் எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது. அசோகரின் நிர்வாகமானது இத்தகைய பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தி இருந்த அதே நேரத்தில், தனது செய்திகளை பாறை கல்வெட்டுகளிலும் பொறிக்கச் செய்தார்.[200] அசோகர் இத்தகைய கல்வெட்டுகளை பொறிக்க செய்யும் யோசனையை ஒரு வேளை அண்டை நாடான அகாமனிசிய பேரரசில் இருந்து பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.[152] அசோகரின் செய்திகளானவை எளிதில் அழிந்து விடக்கூடிய பொருட்களாலான மரம் போன்றவற்றிலும் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. பேரரசின் பல்வேறு பகுதிகளுக்கு இவை அனுப்பப்பட்டன. இத்தகைய எந்த ஒரு பதிவுகளும் தற்போது எஞ்சியிருக்கவில்லை.[12]

இத்தகைய கல்வெட்டுகளில் வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டுள்ள மற்றும் மறைமுகமாக குறிப்பிடப்பட்டுள்ள அரசியல் யோசனைகளை அறிஞர்கள் இன்னும் ஆய்வு செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக அசோகரின் ஏகாதிபத்திய பார்வை குறித்த கருத்துக்களை ஆய்வு செய்ய முயற்சிக்கின்றனர். எவ்வாறு அத்தகைய பார்வையானது ஒரு "கிட்டத்தட்ட துணைக்கண்ட, மற்றும் கலாச்சார மற்றும் பொருளாதார ரீதியில் பல வண்ணங்களை உடைய பொ. ஊ. மு. 3ஆம் நூற்றாண்டு இந்திய பேரரசின் பிரச்சனைகள் மற்றும் அரசியல் மெய்மை நிலைகளால் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டது என்று அனுமானிக்க முயல்கின்றனர்.[7] எவ்வாறாயினும், இந்திய துணைக்கண்டத்தில் தொடக்க கால அரச கல்வெட்டுகளின் தரவகத்தை அசோகரின் கல்வெட்டுகள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்பது தெளிவாக தெரிகிறது. அரச பழக்க வழக்கங்களில் ஒரு மிக முக்கிய புதுமையாக இவை நிரூபணமாயின.[199]

அசோகரின் பெரும்பாலான கல்வெட்டுகள் பல்வேறு பிராகிருத வழக்கு மொழிகளின் ஒரு கலவையாக பிராமி எழுத்து முறையில் எழுதப்பட்டுள்ளன.[201]

அசோகரின் பெரும்பாலான கல்வெட்டுகள் பட்டணங்கள், முக்கியமான வழித்தடங்களில், மற்றும் சமய ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளன என்று தோன்றுகிறது. [202]கல்வெட்டுகளில் பெரும்பாலானவை குன்றுகள், பாறை குகைகள் மற்றும் உள்ளூர் அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[203] அசோகர் அல்லது இவரது அதிகாரிகள் ஏன் இத்தகைய இடங்களை தேர்ந்தெடுத்தார்கள் என்பது குறித்த பல்வேறு வகையான கோட்பாடுகளை முன் வைக்கப்படுகின்றன. இவை வரலாற்றுக்கு முந்தைய கலாச்சாரங்களின் மையங்களாகவும்,[204] அசோகரின் காலத்தில் புனிதமான இடங்களாக கருதப்பட்டவையாகவும் அல்லது இவற்றின் விழுமிய தோற்றப் பொலிவானது ஆன்மிக ஓங்கு நிலை சின்னமாக இருந்திருக்கலாம் உள்ளிட்ட பல்வேறு கோட்பாடுகள் முன்வைக்கப்படுகின்றன.[205] பாடலிபுத்திரம், விதிசா, உஜ்ஜயினி மற்றும் தக்சசீலம் போன்ற மௌரியப் பேரரசின் முக்கியமான நகரங்களில் அசோகரின் கல்வெட்டுகள் காணப்படுவதில்லை. [203]இங்கு வைக்கப்பட்ட கல்வெட்டுக்களில் பெரும்பாலானவை ஒரு வேளை தொலைந்து இருக்கவும் வாய்ப்பு இருந்துள்ளது. 7ஆம் நூற்றாண்டு சீன பயணியான சுவான்சாங் அசோகரின் தூண் கல்வெட்டுகள்ல் சிலவற்றை குறிப்பிடுகிறார். நவீன கால ஆய்வாளர்களால் இத்தகைய கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்படவில்லை.[202]

தனது மாகாண ஆளுநர்களுக்கு ஒவ்வொரு செய்தியையும் அசோகர் அனுப்பியுள்ளார் என்று தோன்றுகிறது. பதிலுக்கு ஆளுநர்கள் தங்களது நிலப்பரப்பில் இருந்த பல்வேறு அதிகாரிகளுக்கு அச்செய்தியை அனுப்பினர்.[206] எடுத்துக்காட்டாக, 1ஆம் சிறு பாறை கல்வெட்டானது பல்வேறு இடங்களில் பல்வேறு பதிப்புகளில் உள்ளது: அனைத்து பதிவுகளும் அசோகர் ஒரு பயணத்தில் இருந்த போது அறிவிப்பை வெளியிட்டார் என்பதை குறிப்பிடுகின்றன. இப்பயணத்தில் 256 நாட்களை இவர் செலவழித்தார் என்று குறிப்பிடுகின்றன. 256 என்ற எண்ணின் செய்தியானது ஒரே நேரத்தில் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டது என்பதை வெளிக்காட்டுகிறது.[207] இச்செய்தியின் மூன்று பதிப்புகள் கர்நாடகாவில் உள்ள அண்டை பகுதிகளில் (இராமகிரி, சித்தாபுரம், மற்றும் சதிங்க-இராமேஸ்வரம்) பொறிப்புகளாக காணப்படுகின்றன. இவை தெற்கு மாகாண தலைநகரான சுவர்ணகிரியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டன. அனைத்து பதிப்புகளும் ஒரே செய்தியைக் கொண்டுள்ளன. இவை ஆர்ய-புத்திரர் (இவர் அசோகரின் மகன் மற்றும் மாகாண ஆளுநர் என்று கருதப்படுகிறார்) மற்றும் மகாமாத்திரர்களின் (அதிகாரிகள்) தொடக்க வாழ்த்துடன் தொடங்குகின்றன.[206]

நாணயவியல்[தொகு]

கிரேக்க இதிகாசங்களில் எர்மிசு கடவுளின் குச்சியாக கருதப்படும் கதுசியசானது இந்தியாவில் மௌரியப் பேரரசின் முத்திரைக் காசுகளின் ஒரு சின்னமாக தோன்றுகிறது. இது பொ. ஊ. மு. 3ஆம்-2ஆம் நூற்றாண்டுகளில் காணப்படுகிறது. நாணயவியல் ஆய்வுகள் இந்த முத்திரையானது மன்னர் அசோகரின் முத்திரையாகவும், இவரது தனி நபர் "முத்திரையாகவும்" இருந்திருக்கலாம் என்று பரிந்துரைக்கின்றன.[208] மௌரியர் காலத்திற்கு முந்தைய முத்திரைக் காசுகளில் இந்த சின்னம் பயன்படுத்தப்படவில்லை. மௌரிய காலத்து நாணயங்களில் மட்டுமே இது பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனுடன் மூன்று வளைவுகளை உடைய குன்று சின்னம், "குன்றில் நிற்கும் மயில்", மூன்று சுருள் வட்டங்கள் மற்றும் தக்சசீல முத்திரை ஆகியவற்றுடன் இது காணப்படுகிறது.[209]

தற்கால ஆய்வு[தொகு]

மீண்டும் கண்டுபிடிக்கப்படுதல்[தொகு]

காலப் போக்கில் அசோகர் கிட்டத்தட்ட மறக்கப்பட்டு விட்டார். ஆனால் 19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய அறிஞரான ஜேம்ஸ் பிரின்ஸ்செப் என்பவர் அசோகர் குறித்த வரலாற்று ஆதாரங்களை வெளிக்கொணர்வதில் முக்கிய பங்காற்றினார். பிராமி எழுத்துமுறையை வெளிக்கொணர்ந்ததற்கு பிறகு அசோகரின் கல்வெட்டுகளில் "பிரியதர்சி" என்று குறிப்பிடப்படும் மன்னரை உண்மையில் இலங்கை மன்னனாகிய தேவநம்பிய தீசனுடன் அடையாளப்படுத்தினார். எனினும், 1837ஆம் ஆண்டு ஜோர்ஜ் டேனர் என்பவர் ஒரு முக்கியமான இலங்கை கையெழுத்துப் பிரதியை (தீபவம்சம், அல்லது "தீவு நூல்") கண்டுபிடித்து அசோகரை பியாதசி என்ற மன்னருடன் தொடர்புபடுத்தினார்:

"கௌதம புத்தர் பேரின்பத்தை அருளியதற்கு பிறகு 218 ஆண்டுகள் கழித்து பியாதசியின் முடிசூட்டு விழா நடைபெற்றது, .... இவர் சந்திரகுப்தரின் பேரனும், பிந்துசாரரின் மகனும் ஆவார். இவர் அந்நேரத்தில் உஜ்ஜயனியின் ஆளுநராக இருந்தார்."

மஸ்கியில் உள்ள அசோகரின் சிறு பாறைக் கல்வெட்டானது இதை நிறுவியவராக "தேவனாம்பிய அசோகரை" குறிப்பிடுகிறது. தீர்க்கமாக இரண்டு பெயர்களையும் இது தொடர்புபடுத்துகிறது. புகழ்பெற்ற கல்வெட்டுகளை நிறுவியவராக அசோகரை இது உறுதிப்படுத்துகிறது.

பல்வேறு கல்வெட்டுகளின் வழியாக "தேவனாம்பிரிய பிரியதர்சி" என்பவர் அசோகருடன் தொடர்புபடுத்தப்பட்டதிலிருந்து, குறிப்பாக மஸ்கியில் கண்டுபிடிக்கப்பட்ட அசோகரின் சிறு பாறை கல்வெட்டுக்களில் முக்கியமாக உறுதிப்படுத்தப்பட்டதற்குப் பிறகு, அசோகர் இவரது மன்னர் பட்டமான தேவனாம்பிரியன் ("கடவுள்களால் விரும்பப்படுவர்") என்ற பெயருடன் நேரடியாக தொடர்புபடுத்தப்படுகிறார்:[211][212]

தேவனாம்பிரிய அசோகனின் [ஓர் அறிவிப்பு].
நான் ஒரு புத்த-சாக்கியனாக மாறியதற்கு பிறகு இரண்டரை ஆண்டுகள் [மற்றும் மேற்கொண்ட ஆண்டுகள்] (கடந்துவிட்டன).
சங்கத்திற்குச் சென்று விருப்பத்தை வெளிக்காட்டியதில் [இருந்து] [ஓர் ஆண்டு மற்றும்] அதற்கும் மேற் கொண்ட ஆண்டுகள் (கடந்துவிட்டன).
ஜம்புத் தீவில் (மனிதர்களுடன்) முன்னர் கலந்து கொள்ளாத அந்த கடவுள்கள் தற்போது (அவர்களுடன்) கலந்து கொள்கின்றனர்.
நன்னடத்தைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு தாழ்ந்த நிலையில் உள்ள (மனிதனாலும்) கூட இந்நிலையை அடைய முடியும்.
உயர் நிலையில் உள்ள (மனிதன்) மட்டுமே இதை அடைய முடியும் என்று ஒருவர் இவ்வாறாக எண்ணக் கூடாது.
தாழ்ந்த மற்றும் உயர் நிலையில் உள்ளோர் ஆகிய இருவருக்கும் கூறப்பட வேண்டியதாவது : "நீங்கள் இவ்வாறு நடந்து கொண்டால், இந்நிலை செழிப்பாகவும் நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்கக்கூடியதாகவும் இருக்கும், மற்றும் இவ்வாறாக ஒன்றரை ஆண்டுகள் கடக்கப்படலாம்.

மற்றொரு முக்கியமான வரலாற்றாளர் இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் பொது இயக்குனராக இருந்த பிரித்தானிய தொல்லியலாளரான ஜான் மார்ஷல் ஆவார். அரப்பா மற்றும் மொகெஞ்சதாரோவுடன் இவரது முதன்மையான ஆர்வங்களாக சாஞ்சி மற்றும் சாரநாத் ஆகியவை இருந்தன. ஒரு பிரித்தானிய தொல்லியலாளர் மற்றும் ராணுவப் பொறியாளரான சர் அலெக்சாண்டர் கன்னிங்காம் பர்குட் தூபி, சாரநாத், சாஞ்சி மற்றும் மகாபோதி கோயில் ஆகிய தொல்லியல் தளங்களை வெளிக்கொணர்ந்தார். இவர் இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் தந்தை எனவும் அறியப்படுகிறார். ஒரு பிரித்தானிய தொல்லியலாளரான மோர்டிமர் வீலரும் அசோகர் குறித்த வரலாற்று ஆதாரங்களை, குறிப்பாக தக்சசீல ஆதாரங்களை வெளிக் கொணர்ந்தார்.[சான்று தேவை]

பார்வைகளும், வரலாற்றியலும்[தொகு]

அசோகர் குறித்த பார்வைகள் மீது அசோகரின் வாழ்க்கையை மீண்டும் கட்டமைப்பதில் பௌத்த நூல்களின் பயன்பாடானது ஒரு வலிமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது கல்வெட்டுகளை புரிந்துணர்வதன் மீதும் இது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பாரம்பரிய நூல்களை அடிப்படையாகக் கொண்டு தொடக்க கால அறிஞர்கள் அசோகரை ஒரு முதன்மையான பௌத்த முடியரசராக கருதினர். வேதகால சமயத்தில் இருந்து பௌத்தத்திற்கு மாறிய ஒருவராகவும், பௌத்த மடாலய அமைப்புக்கு புரவலராகவும், ஆதரவாளராகவும் முனைப்புடன் செயல்பட்டவராக கருதுகின்றன. எனினும், இத்தகைய பார்வை மீது சில அறிஞர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அசோகர் குறித்து ரூமிலா தாப்பர் எழுதியுள்ளதாவது "ஒரு குறிப்பிட்ட வரலாற்று காலத்தில் தான் பெற்ற மற்றும் பேணிய ஒரு பேரரசையுடைய ஓர் அரசியல் மேதையாகவும், சமூக நன்னெறிகளை பரப்புவது என்று ஒருவரால் அழைக்கப்படக் கூடியதன் மூலம் சமூகத்தை மாற்றுவதற்காக ஒரு வலிமையான ஈடுபாடு கொண்ட ஒரு நபராகவும் இவரை நாம் காண வேண்டும்".[214] பௌத்த நூல்கள் தவிர்த்து இவர் குறித்த தகவல்களைத் தரும் ஒரே ஆதாரங்களாக அசோகரின் கல்வெட்டுகள் திகழ்கின்றன. இக்கல்வெட்டுகள் வெளிப்படையாக அசோகர் புத்த சமயத்தைச் சேர்ந்த ஒருவர் என்று குறிப்பிடவில்லை. இவரது கல்வெட்டுகளில் இவர் காலத்தைச் சேர்ந்த அனைத்து முதன்மையான சமயங்களுக்கும் ஆதரவை அசோகர் வெளிப்படுத்துகிறார். இதில் பௌத்தம், பண்டைய வேத சமயம், சைனம் மற்றும் ஆசீவகம் ஆகியவையும் அடங்கும். இவரது கல்வெட்டுக்கள் பரந்த அளவிலான மக்களுக்காக தகவல்களை தெரிவிக்கின்றன. அனைத்து சமயங்களின் உறுப்பினர்களும் ஏற்றுக் கொள்ளும் நன்னெறி கருத்துகள் மீது பொதுவாக கவனம் கொள்கின்றன. சில கல்வெட்டுகள் புத்த சமயத்தினருக்கு என்று குறிப்பாக குறிப்பிடப்பட்டுள்ளன. மற்ற சமயங்களுக்கு என்று குறிப்பாக இவை காணப்படவில்லை. எடுத்துக்காட்டாக அமர்த்தியா சென் எழுதுவதாவது "பல்வேறு மக்கள் ஒருவருக்கொருவர் கொண்டுள்ள தொடர்பு மற்றும் அரசின் கொள்கையின் ஒரு பகுதி ஆகிய இருவாராகவும் சகிப்புத்தன்மை மற்றும் தனி நபர் சுதந்திரம் ஆகியவற்றுக்கு ஆதரவளிக்கும் பல அரசியல் கல்வெட்டுகளை பொ. ஊ. மு. 3ஆம் நூற்றாண்டின் இந்திய பேரரசரான அசோகர் குறிப்பிட்டுள்ளார்".[215]

எனினும் கல்வெட்டுக்கள் தனியாகவே புத்த சமயத்தைச் சேர்ந்த ஒருவர் இவர் என்று வலிமையாக புலப்படுத்துகின்றன. மேலும் பல கல்வெட்டுக்கள் புத்த சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கு தகவல்களை தெரிவிப்பதற்கு என்று மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒரு கல்வெட்டில் அசோகர் தன்னைத் தானே "உபாசகர்" என்று அறிவிக்கிறார். மற்றொரு கல்வெட்டில் பௌத்த நூல்கள் குறித்து தான் பரந்த அறிவைப் பெற்றிருப்பதை விவரிக்கிறார். பௌத்த புனித தளங்களில் பாறை தூண்களை இவர் எழுப்பியுள்ளார். பிற சமயங்களின் தளங்களுக்கு இவர் இதை செய்யவில்லை. நற்செயலுக்கு அடிப்படையாக இருக்கும் மனதின் தர நிலையை குறிப்பிட இவர் "தம்மம்" என்ற சொல்லை பயன்படுத்துகிறார். புத்த சமயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இச்சொல்லை பயன்படுத்துகின்றனர். எனினும் ஒரு கண்டிப்பான வழிமுறையாக இல்லாமல் செயல் முனைப்பில் தான் இவர் இந்த சொல்லை பயன்படுத்தியுள்ளார். ரூமிலா தாப்பர் எழுதியுள்ளதாவது "இவருடைய தம்மப்படி நடந்தால் சொர்க்கம் கிடைக்கும் என்று கூறினாலும், இவரது தம்மமானது கடவுளால் அகத்தூண்டுதல் பெறப்படவில்லை. குறிப்பிட்ட சூழ்நிலைகளுக்கு தர்க்க ரீதியில் ஏற்படுத்தப்படும் நன்னெறிகளை பேணுவதில் இது குறிப்பிடப்படுகிறது. ஒருவர் மற்றொருவருடன் தொடர்புடைய வகையில் பல்வேறு வகைப்பட்ட மக்களின் நடத்தை மீது தாக்கத்தை ஏற்படுத்தும் எண்ணத்தில் இவரது தம்மத்தின் தர்க்கமானது இருந்தது. குறிப்பாக சமமற்ற உறவு முறைகளை உடையவற்றில் இவ்வாறாக இருந்தது."[214] இறுதியாக, புத்தரின் போதனைகளின் முதல் மூன்று படி நிலைகளுடன் ஒத்த நன்னெறிகளை இவர் ஊக்குவித்தார்.[216]

பேரரசு முழுவதும் தூண்கள் மற்றும் பாறைகளில் பொறிக்கப்பட்ட இவரால் பொறிக்கப்பட்ட பல்வேறு கல்வெட்டுகளில் இருந்து அசோகர் குறித்த பெரும்பாலான தகவல்கள் கிடைக்கப் பெறுகின்றன. இவரது அனைத்து கல்வெட்டுகளும் இவரை இரக்கமுடைய மற்றும் அன்பு செலுத்தும் ஒருவராக காட்டுகின்றன. கலிங்க பாறை கல்வெட்டில் இவர் மக்களை தன் "குழந்தைகள்" என்று அழைக்கிறார். அவர்களுக்கு நல்லவற்றை விரும்பும் ஒரு தந்தையாக தன்னை குறிப்பிடுகிறார்.[217]

அமைதிக் கோட்பாட்டின் தாக்கம்[தொகு]

அசோகரின் இறப்பிற்கு பிறகு மௌரிய அரசமரபானது சீக்கிரமே வீழ்ச்சியடைந்தது. அசோகருக்குப் பின் வந்த ஆட்சியாளர்கள் குறித்து வேறுபட்ட தகவல்களை பல்வேறு புராணங்கள் கொடுக்கின்றன. ஆனால் இவை அனைத்துமே பின் வந்த மன்னர்கள் ஒப்பீட்டளவில் குறுகிய ஆட்சிக் காலங்களையே கொண்டிருந்தனர் என்பதில் உடன்படுகின்றன. பாக்திரிய கிரேக்கர்களால் நடத்தப்பட்ட ஒரு படையெடுப்பின் காரணமாக இவரது பேரரசானது பலவீனமடைந்து சிதறுண்டது என்ற ஒரு பார்வையும் கொடுக்கப்படுகிறது.[134]

எச். சி. ராய் சௌதுரி போன்ற சில வரலாற்றாளர்கள் அசோகரின் அமைதிக் கோட்பாடானது மௌரியப் பேரரசின் "இராணுவ முதுகெலும்பை" வலிமை குன்றியதாக்கியதாக வாதிடுகின்றனர். ரூமிலா தாப்பர் போன்ற பிறர் இவரது அமைதிக் கோட்பாட்டின் விரிவு மற்றும் தாக்கமானது "பெரிதும் மிகைப்படுத்தப்படுகிறது" என்று பரிந்துரைக்கின்றனர்.[218]

கலை, திரைப்படம் மற்றும் இலக்கியத்தில்[தொகு]

அண். 1910ஆம் ஆண்டு அபனிந்திரநாத் தாகூரால் (1871–1951) வரையப்பட்ட ஓர் ஓவியம். சாஞ்சியிலுள்ள (ராய்சேன் மாவட்டம், மத்தியப் பிரதேசம்) பௌத்த நினைவுச் சின்னத்திற்கு அருகில் அசோகரின் இராணி நின்று கொண்டிருப்பதை இது சித்தரிக்கிறது.
  • அசோகா தி கிரேட் என்பது அசோகர் குறித்த ஒரு புனைவு வாழ்க்கை வரலாறு ஆகும். இது உண்மையில் டச்சு மொழியில் மூன்று பகுதி நூலாக விட்சே கியூனிங் என்பவரால் 1937-1947இல் எழுதப்பட்டது.
  • அசோகா கி சிந்தா (அசோகரின் கவலை) என்ற பாடலை ஜெய்சங்கர் பிரசாத் இயற்றியுள்ளார். கலிங்கம் மீதான போரின் போது அசோகரின் எண்ணங்களை இப்பாடல் சித்தரித்தது.
  • அசோகா, 1922ஆம் ஆண்டு இந்திய ஊமை வரலாற்று திரைப்படம். இதை மதன் தியேட்டர்ஸ் தயாரித்தது.[219]
  • த நைன் அன்னௌன் ("ஒன்பது தெரியாத மனிதர்கள்") என்பது தல்போத் முந்தி எழுதிய 1923ஆம் ஆண்டு புதினம் ஆகும். ஒன்பது தெரியாத மனிதர்கள் என்பது அசோகரால் தொடங்கப்பட்ட ஒரு புனைவு இரகசிய சமூகம் ஆகும்.
  • சாம்ராட் அசோக், பகவதி பிரசாத் மிஸ்ரா இயக்கிய 1928ஆம் ஆண்டு இந்திய ஊமைத் திரைப்படம்.[219]
  • அசோக் குமார் என்பது இராஜா சந்திரசேகரால் இயக்கப்பட்ட 1941ஆம் ஆண்டு தமிழ் திரைப்படம் ஆகும். இதில் அசோகராக சித்தூர் வி. நாகையா நடித்திருந்தார்.
  • சாம்ராட் அசோக் என்பது 1947ஆம் ஆண்டு வெளிவந்த இந்தி மொழி திரைப்படம் ஆகும். இதை கே. பி. லால் இயக்கி இருந்தார்.[220]
  • உத்தர்-பிரியதர்ஷி (இறுதி அருளாசி) என்பது கவிஞர் அக்ஞேய இயற்றிய ஒரு நாடகமாகும். திரையரங்கு இயக்குனர் ரத்தன் தியாம் 1996இல் இதை மேடை நாடகமாக நடத்தினார். அன்று முதல் உலகின் பல பகுதிகளில் இந்நாடகம் நடத்தப்பட்டுள்ளது.[221][222]
  • 1973இல் அமர் சித்திரக் கதை அசோகரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படங்களையுடைய ஒரு புதினத்தை வெளியிட்டது.
  • பியர்ஸ் அந்தோனியின் தொடர்ச்சியான விண்வெளி புதினங்களில் முதன்மை கதாபாத்திரம் நிர்வாகிகள் ஒரு முன்னோடியாக எடுத்துக் கொண்டு கடுமையாக முயல வேண்டிய ஒரு முன்னோடி அசோகர் என்று குறிப்பிடுகிறது.
  • சாம்ராட் அசோக் என்பது 1992ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளிவந்த திரைப்படமாகும். இதில் என். டி. ராமராவ் அசோகராக நடித்திருந்தார்.[220]
  • அசோகா என்பது 2001ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய வரலாற்று காவியத் திரைப்படமாகும். இதை சந்தோஷ் சிவன் இயக்கி இருந்தார். அசோகராக சாருக் கான் நடித்திருந்தார்.
  • 2002ஆம் ஆண்டு அமெரிக்க பாப் இசைக் கலைஞர் மேசன் ஜென்னிங்க்ஸ் "பேரரசர் அசோகர்" என்ற ஒரு பாடலை வெளியிட்டுள்ளார். இது அசோகரின் வாழ்வை அடிப்படையாக கொண்டதாகும்.
  • 2013இல் கிறித்தோபர் சி. டோய்ல் தன்னுடைய முதல் புதினமான த மகாபாரதா சீக்ரட் என்ற புதினத்தை வெளியிட்டார். இந்தியாவின் நன்மைக்காக ஒரு ஆபத்தான இரகசியத்தை அசோகர் மறைத்துக் கொண்டிருப்பதாக இவர் எழுதியிருந்தார்.
  • 2014இல் த எம்பெரர்'ஸ் ரிடில்ஸ் என்ற புதினம் வெளியானது. இது ஒரு புனைவு மர்ம புதினம் ஆகும். இதை சத்யார்த் நாயக் எழுதியிருந்தார். அசோகரின் வளர்ச்சி மற்றும் ஒன்பது தெரியாத மனிதர்கள் என்ற கதையை குறித்து இதில் இவர் எழுதியிருந்தார்.
  • 2015இல் சக்ரவர்த்தி அசோகர் என்ற தொலைக்காட்சி தொடர் வெளியானது. அசோகரின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு அசோக் பாங்கர் இதை இயக்கியிருந்தார். இது கலர்ஸ் தொலைக்காட்சியில் வெளிவந்தது. சித்தார்த் நிகம் மற்றும் மோகித் ரைனா ஆகியோர் அசோகரின் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
  • பாரத்வர்ஷ் என்பது இந்திய தொலைக்காட்சி வரலாற்று ஆவணப்பட தொடர் ஆகும். இந்தி செய்தி தொலைக்காட்சியான ஏபிபி நியூஸ் தொலைக் காட்சியில் அனுபம் கெர் இதை வழங்கினார். இத்தொடரில் அகம் சர்மா அசோகராக நடித்திருந்தார்.[223]

படக்காட்சிகள்[தொகு]

திரைப்படம்[தொகு]

  • அசோக்குமார் என்ற திரைப்படத்தில், அசோகருக்கு தேவி என்ற மனைவி தவிர வேறு பல மனைவிகள் உண்டு. குணாளன், ராதா குப்தர் என்ற மகன்கள் உண்டு. இதில் குணாளன் அழகு மிகுந்தவர். எனவே அவர் மீது அசோகரின் மனைவியருள் ஒருவரான திஷ்யரக்ஷதா என்பவர் ஆசைக்கொண்டார். ஆனால் குணாளன் தனது சிற்றன்னையின் விருப்பத்திற்கு இணங்கவில்லை. எனவே, வஞ்சகமாக அவரை வெளிநாட்டுக்கு வேலை இருக்கிறது என அனுப்பி அங்கு தனது ஆட்களை வைத்து கண்களை குருடாக்கி விட்டார்; கண் இழந்த குணாளன் எப்படியோ மீண்டும் தலைநகரம் வந்து பாடலிபுத்திரத்தின் வீதிகளில் பாட்டுப்படி பிச்சை எடுத்தார். அவரது குரலை அடையாளம் கண்டு அசோகர் விசாரித்து உண்மை அறிந்து திஷ்யரக்ஷதாவின் தலையை துண்டித்தார் என்றும் சித்தரிக்கப்படுகிறது.

இதனையும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Lahiri 2015, ப. 295–296.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 Singh 2017, ப. 162.
  3. 3.0 3.1 Singh 2008, ப. 331.
  4. Faure, Bernard, தொகுப்பாசிரியர் (2002–2003). "Aśoka's Wives and the Ambiguities of Buddhist Kingship". Cahiers d'Extrême-Asie (பாரிஸ்: École française d'Extrême-Orient) 13: 35–54. doi:10.3406/asie.2002.1176. பன்னாட்டுத் தர தொடர் எண்:0766-1177. https://www.persee.fr/doc/asie_0766-1177_2002_num_13_1_1176. பார்த்த நாள்: 8 August 2021. 
  5. 5.0 5.1 Nayanjot Lahiri (5 August 2015). Ashoka in Ancient India. Harvard University Press. பக். 20–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-674-91525-1. https://books.google.com/books?id=JaVRCgAAQBAJ&pg=PT20. பார்த்த நாள்: 3 July 2018. 
  6. Thapar 1961, ப. 5–8.
  7. 7.0 7.1 7.2 7.3 7.4 Singh 2012, ப. 132.
  8. Kenneth Zysk. Asceticism And Healing in Ancient India Medicine in the Buddhist Monastery. Oxford University Press, 1991, 44. Link to book.
  9. 9.0 9.1 Singh 2012, ப. 131.
  10. Strong 1995, ப. 141.
  11. 11.0 11.1 Thapar 1961, ப. 8.
  12. 12.0 12.1 Thapar 1961, ப. 7.
  13. Thapar 1961, ப. 7–8.
  14. Singh 2008, ப. 331–332.
  15. Thapar 1961, ப. 8–9.
  16. Strong 1989, ப. 12.
  17. 17.0 17.1 17.2 17.3 17.4 17.5 17.6 17.7 17.8 Strong 1995, ப. 143.
  18. 18.0 18.1 18.2 18.3 18.4 Strong 1995, ப. 144.
  19. Strong 1995, ப. 152–154.
  20. 20.0 20.1 20.2 Strong 1995, ப. 155.
  21. Strong 1995, ப. 154–157.
  22. Thapar 1961, ப. 11.
  23. Thapar 1995, ப. 15.
  24. Thapar 1961, ப. 9.
  25. Guruge, Review 1995, ப. 185-188.
  26. 26.0 26.1 26.2 26.3 26.4 26.5 26.6 26.7 26.8 Beckwith, Christopher I. (2017) (in en). Greek Buddha: Pyrrho's Encounter with Early Buddhism in Central Asia. Princeton University Press. பக். 226–250. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-691-17632-1. https://books.google.com/books?id=53GYDwAAQBAJ&pg=PA234. பார்த்த நாள்: 31 January 2020. 
  27. Strong 1989, ப. 205.
  28. 28.0 28.1 Allen 2012, ப. 79.
  29. (in en) The Dîpavaṃsa: An Ancient Buddhist Historical Record. Williams and Norgate. 1879. பக். 147–148. https://archive.org/details/dpavasaanancien00oldegoog. 
  30. Thapar 1961, ப. 226–227.
  31. 31.0 31.1 Sircar, D. C. (1979). Asokan studies. பக். 113. https://archive.org/stream/in.gov.ignca.67068/67068#page/n125/mode/2up. 
  32. Strong 1989, ப. 11.
  33. Lahiri 2015, ப. 129.
  34. Thapar 1961, ப. 226.
  35. 35.0 35.1 Lahiri 2015, ப. 25.
  36. Lahiri 2015, ப. 24.
  37. Lahiri 2015, ப. 26.
  38. 38.0 38.1 Thapar 1961, ப. 13.
  39. 39.0 39.1 Strong 1989, ப. 204.
  40. Strong 1989, ப. 204–205.
  41. Lahiri 2015, ப. 323:"In the Ashokavadana, Ashoka's mother is not named."
  42. Lahiri 2015, ப. 31.
  43. 43.0 43.1 Guruge 1993, ப. 19.
  44. 44.0 44.1 Mookerji 1962, ப. 2.
  45. 45.0 45.1 45.2 Singh 2008, ப. 332.
  46. Thapar 1961, ப. 20.
  47. 47.0 47.1 Lahiri 2015, ப. 27.
  48. Strong 1989, ப. 206.
  49. Strong 1989, ப. 207.
  50. 50.0 50.1 50.2 50.3 Thapar 1961, ப. 21.
  51. Lahiri 2015, ப. 65.
  52. 52.0 52.1 Strong 1989, ப. 208.
  53. Lahiri 2015, ப. 66.
  54. Lahiri 2015, ப. 70.
  55. Lahiri 2015, ப. 66-67.
  56. Lahiri 2015, ப. 68.
  57. Lahiri 2015, ப. 67.
  58. Lahiri 2015, ப. 89–90.
  59. Allen 2012, ப. 154.
  60. 60.0 60.1 Guruge 1993, ப. 28.
  61. 61.0 61.1 Lahiri 2015, ப. 98.
  62. Lahiri 2015, ப. 94–95.
  63. 63.0 63.1 Thapar 1961, ப. 22–23.
  64. 64.0 64.1 Lahiri 2015, ப. 101.
  65. Lahiri 2015, ப. 97.
  66. Thapar 1961, ப. 24–25.
  67. Thapar 1961, ப. 25.
  68. 68.0 68.1 68.2 68.3 Lahiri 2015, ப. 102.
  69. 69.0 69.1 Strong 1989, ப. 209.
  70. Strong 1989, ப. 210.
  71. Allen 2012, ப. 15: "Only fragments were found of the Wheel of the Moral Law, which the four lions had originally supported."
  72. "Lion Capital of Ashoka At Sarnath Archaeological Museum Near Varanasi India". யூடியூப் (in ஆங்கிலம்). Archived from the original on 15 July 2022. பார்க்கப்பட்ட நாள் 16 July 2022.
  73. 73.0 73.1 73.2 Thapar 1961, ப. 26.
  74. 74.0 74.1 74.2 74.3 Thapar 1961, ப. 27.
  75. Thapar 1961, ப. 13–14.
  76. 76.0 76.1 76.2 76.3 Thapar 1961, ப. 14.
  77. 77.00 77.01 77.02 77.03 77.04 77.05 77.06 77.07 77.08 77.09 77.10 Thapar 1961, ப. 30.
  78. Strong 1989, ப. 12–13.
  79. 79.0 79.1 79.2 Strong 1989, ப. 13.
  80. 80.0 80.1 80.2 Guruge, Unresolved 1995, ப. 46.
  81. 81.0 81.1 81.2 81.3 Thapar 1961, ப. 29.
  82. 82.0 82.1 Lahiri 2015, ப. 105.
  83. 83.0 83.1 Lahiri 2015, ப. 106.
  84. Lahiri 2015, ப. 106–107.
  85. Lahiri 2015, ப. 107.
  86. Charles Drekmeier (1962). Kingship and Community in Early India. Stanford University Press. பக். 173. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8047-0114-3. https://archive.org/details/kingshipcommunit0000drek. பார்த்த நாள்: 30 October 2012. 
  87. Indian Archaeology 1997–98. ASI. பக். Plate 72. http://nmma.nic.in/nmma/nmma_doc/Indian%20Archaeology%20Review/Indian%20Archaeology%201997-98%20A%20Review.pdf. பார்த்த நாள்: 22 January 2020. 
  88. 88.0 88.1 Guruge, Unresolved 1995, ப. 49–50.
  89. வார்ப்புரு:Cite Wikisource
  90. 90.0 90.1 90.2 90.3 90.4 Thapar 1995, ப. 18.
  91. 91.0 91.1 91.2 Thapar 1961, ப. 36.
  92. Thapar 1961, ப. 33.
  93. 93.0 93.1 Guruge, Unresolved 1995, ப. 38.
  94. Guruge, Unresolved 1995, ப. 37.
  95. Thapar 1995, ப. 30–31.
  96. Guruge, Unresolved 1995, ப. 56.
  97. Guruge, Unresolved 1995, ப. 42.
  98. Guruge, Unresolved 1995, ப. 43.
  99. 99.0 99.1 Guruge, Unresolved 1995, ப. 47.
  100. 100.0 100.1 100.2 Lahiri 2015, ப. 109.
  101. 101.0 101.1 Gombrich 1995, ப. 7.
  102. Thapar 1961, ப. 34.
  103. 103.0 103.1 Lahiri 2015, ப. 110.
  104. Lahiri 2015, ப. 108.
  105. 105.0 105.1 105.2 Guruge, Unresolved 1995, ப. 49.
  106. Thapar 1961, ப. 35.
  107. 107.0 107.1 Lahiri 2015, ப. 135.
  108. Strong 1995, ப. 154–155.
  109. Mahâbodhi, Cunningham p.4ff
  110. Allen 2012.
  111. "Ashoka did build the Diamond Throne at Bodh Gaya to stand in for the Buddha and to mark the place of his enlightenment" in Ching, Francis D. K.; Jarzombek, Mark M.; Prakash, Vikramaditya (23 March 2017) (in en). A Global History of Architecture. John Wiley & Sons. பக். 570. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-118-98160-3. https://books.google.com/books?id=SPqKDgAAQBAJ&pg=PT570. பார்த்த நாள்: 7 March 2021. 
  112. 112.0 112.1 Strong 1995, ப. 158.
  113. Strong 1995, ப. 159.
  114. 114.0 114.1 114.2 114.3 114.4 Guruge, Unresolved 1995, ப. 50.
  115. 115.0 115.1 115.2 Gombrich 1995, ப. 8.
  116. 116.0 116.1 116.2 116.3 116.4 116.5 116.6 Guruge, Unresolved 1995, ப. 51.
  117. Gombrich 1995, ப. 8–9.
  118. 118.0 118.1 118.2 Gombrich 1995, ப. 5.
  119. Guruge, Unresolved 1995, ப. 45.
  120. 120.0 120.1 120.2 Gombrich 1995, ப. 10.
  121. Gombrich 1995, ப. 6.
  122. Gombrich 1995, ப. 10–11.
  123. 123.0 123.1 Gombrich 1995, ப. 11.
  124. Gombrich 1995, ப. 11–12.
  125. 125.0 125.1 Gombrich 1995, ப. 12.
  126. Thapar 1995, ப. 32.
  127. Thapar 1995, ப. 36.
  128. 128.0 128.1 128.2 128.3 128.4 Strong 1995, ப. 149.
  129. 129.0 129.1 129.2 129.3 129.4 Thapar 1961, ப. 28.
  130. 130.0 130.1 Strong 1989, ப. 232.
  131. 131.0 131.1 131.2 Beni Madhab Barua (5 May 2010). The Ajivikas. General Books. பக். 68–69. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-152-74433-2. https://archive.org/details/ajivikas00barurich. பார்த்த நாள்: 30 October 2012. 
  132. Steven L. Danver (22 December 2010). Popular Controversies in World History: Investigating History's Intriguing Questions: Investigating History's Intriguing Questions. ABC-CLIO. பக். 99. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-59884-078-0. https://books.google.com/books?id=slVobUjdzGMC&pg=RA1-PA99. பார்த்த நாள்: 23 May 2013. 
  133. Le Phuoc (March 2010). Buddhist Architecture. Grafikol. பக். 32. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-9844043-0-8. https://books.google.com/books?id=9jb364g4BvoC&pg=PA32. பார்த்த நாள்: 23 May 2013. 
  134. 134.0 134.1 134.2 Singh 2008, ப. 333.
  135. Mookerji 1962, ப. 9.
  136. 136.0 136.1 Strong 1995, ப. 146–147.
  137. 137.0 137.1 137.2 137.3 Strong 1995, ப. 166.
  138. Strong 1995, ப. 167.
  139. Strong 1995, ப. 167–168.
  140. 140.0 140.1 Strong 1995, ப. 151.
  141. 141.0 141.1 141.2 Thapar 1961, ப. 23.
  142. Lahiri 2015, ப. 97-98.
  143. Thapar 1961, ப. 22.
  144. 144.0 144.1 144.2 Thapar 1961, ப. 24.
  145. Thapar 1961, ப. 23–24.
  146. 146.0 146.1 Hermann Kulke; Dietmar Rothermund (2004). A History of India. Psychology Press. பக். 69–70. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-415-32920-0. https://books.google.com/books?id=RoW9GuFJ9GIC&pg=PA69. பார்த்த நாள்: 9 September 2017. 
  147. 147.0 147.1 147.2 Gombrich 1995, ப. 1.
  148. Strong 1989, ப. 15.
  149. 149.0 149.1 Strong 1995, ப. 142.
  150. Lahiri 2015, ப. 134.
  151. Guruge, Unresolved 1995, ப. 43–44.
  152. 152.0 152.1 152.2 152.3 152.4 152.5 Gombrich 1995, ப. 3.
  153. Thapar 1995, ப. 19–20.
  154. 154.0 154.1 Guruge, Unresolved 1995, ப. 44.
  155. Lahiri 2015, ப. 157.
  156. Thapar 1995, ப. 29.
  157. 157.0 157.1 157.2 157.3 157.4 157.5 157.6 Strong 1989, ப. 4.
  158. Thapar 1961, ப. 37.
  159. Thapar 1995, ப. 19.
  160. Thapar 1995, ப. 20–21.
  161. Thapar 1995, ப. 20.
  162. 162.0 162.1 Thapar 1995, ப. 31.
  163. Thapar 1995, ப. 21–22.
  164. 164.0 164.1 164.2 Strong 1989, ப. 3–4.
  165. Strong 1989, ப. 5.
  166. Strong 1989, ப. 6–9.
  167. Strong 1989, ப. 9–10.
  168. Fitzgerald 2004, ப. 120.
  169. Simoons, Frederick J. (1994). Eat Not This Flesh: Food Avoidances from Prehistory to the Present (2nd ). Madison: University of Wisconsin Press. பக். 108. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-299-14254-4. https://books.google.com/books?id=JwGZTQunH00C&pg=PA108. 
  170. "The Edicts of King Asoka". Translated by Dhammika, Ven. S. Buddhist Publication Society. 1994. Archived from the original on 10 May 2016.
  171. D.R. Bhandarkar, R. G. Bhandarkar (2000). Asoka. Asian Educational Services. பக். 314–315. https://books.google.com/books?id=hhlfSZLDjRsC&pg=PA314. 
  172. Gerald Irving A. Dare Draper; Michael A. Meyer; H. McCoubrey (1998). Reflections on Law and Armed Conflicts: The Selected Works on the Laws of War by the Late Professor Colonel G.I.A.D. Draper, Obe. Martinus Nijhoff Publishers. பக். 44. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-411-0557-8. https://books.google.com/books?id=ETjo7FKSsVkC&pg=PA44. பார்த்த நாள்: 30 October 2012. 
  173. Norm Phelps (2007). The Longest Struggle: Animal Advocacy from Pythagoras to Peta. Lantern Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-59056-106-6. https://archive.org/details/longeststrugglea00phel. 
  174. Kosmin 2014, ப. 57.
  175. Thomas Mc Evilly "The shape of ancient thought", Allworth Press, New York, 2002, p.368
  176. 176.0 176.1 Oskar von Hinüber (2010). "Did Hellenistic Kings Send Letters to Aśoka?". Journal of the American Oriental Society (Freiburg) 130 (2): 262–265. 
  177. The Edicts of King Ashoka: an English rendering by Ven. S. Dhammika பரணிடப்பட்டது 10 மே 2016 at the வந்தவழி இயந்திரம். Access to Insight: Readings in Theravāda Buddhism. Retrieved 1 September 2011.
  178. "Pliny the Elder, "The Natural History", 6, 21". Archived from the original on 28 July 2013.
  179. Preus, Anthony (2015). Historical Dictionary of Ancient Greek Philosophy. Rowman & Littlefield Publishers. பக். 184. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4422-4639-3. https://books.google.com/books?id=wjW_BgAAQBAJ&pg=PA184. பார்த்த நாள்: 18 June 2017. 
  180. Full text of the Mahavamsa Click chapter XII பரணிடப்பட்டது 5 செப்தெம்பர் 2006 at the வந்தவழி இயந்திரம்
  181. The Idea of Ancient India: Essays on Religion, Politics, and Archaeology by Upinder Singh p.18 பரணிடப்பட்டது 29 திசம்பர் 2019 at the வந்தவழி இயந்திரம்
  182. De la Croix, Horst; Tansey, Richard G.; Kirkpatrick, Diane (1991). Gardner's Art Through the Ages (9th ). Thomson/Wadsworth. பக். 428. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-15-503769-2. https://archive.org/details/gardnersartthrou00gard/page/428. 
  183. Strong 1995, ப. 146.
  184. Strong 1995, ப. 147.
  185. Strong 1995, ப. 163.
  186. Strong 1995, ப. 163-165.
  187. 187.0 187.1 Strong 1995, ப. 152.
  188. Strong 1995, ப. 152–153.
  189. Strong 1995, ப. 153.
  190. Strong 1995, ப. 165.
  191. Kosmin 2014, ப. 36.
  192. Strong 1989, ப. 18.
  193. Strong, John (2007). Relics of the Buddha. Motilal Banarsidass Publishers. பக். 149. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-208-3139-1. https://books.google.com/books?id=xqAB6PKyP98C&pg=PA149. பார்த்த நாள்: 15 November 2015. 
  194. 194.0 194.1 Introduction to Indian Architecture Bindia Thapar, Tuttle Publishing, 2012, p.21 பரணிடப்பட்டது 29 திசம்பர் 2019 at the வந்தவழி இயந்திரம் "Ashoka used the knowledge of stone craft to begin the tradition of stone architecture in India, dedicated to Buddhism."
  195. Mookerji 1962, ப. 96.
  196. "Ashoka was known to be a great builder who may have even imported craftsmen from abroad to build royal monuments." Monuments, Power and Poverty in India: From Ashoka to the Raj, A. S. Bhalla, I.B.Tauris, 2015 p.18 [1] பரணிடப்பட்டது 26 திசம்பர் 2019 at the வந்தவழி இயந்திரம்
  197. 197.0 197.1 Irwin, John (1973). "'Aśokan' Pillars: A Reassessment of the Evidence". The Burlington Magazine 115 (848): 706–720. பன்னாட்டுத் தர தொடர் எண்:0007-6287. https://www.jstor.org/stable/877526. 
  198. Reference: "India: The Ancient Past" p.113, Burjor Avari, Routledge, ISBN 0-415-35615-6
  199. 199.0 199.1 Singh 2012.
  200. Lahiri 2015, ப. 120–121.
  201. Lahiri 2015, ப. 126.
  202. 202.0 202.1 Thapar 1961, ப. 6.
  203. 203.0 203.1 Lahiri 2015, ப. 143.
  204. Thapar 1995, ப. 23.
  205. Lahiri 2015, ப. 143–157.
  206. 206.0 206.1 Lahiri 2015, ப. 127.
  207. Lahiri 2015, ப. 133.
  208. Indian Numismatics, Damodar Dharmanand Kosambi, Orient Blackswan, 1981, p.73 [2] பரணிடப்பட்டது 15 திசம்பர் 2019 at the வந்தவழி இயந்திரம்
  209. Malwa Through the Ages, from the Earliest Times to 1305 A.D, Kailash Chand Jain, Motilal Banarsidass Publ., 1972, p.134 [3] பரணிடப்பட்டது 24 திசம்பர் 2019 at the வந்தவழி இயந்திரம்
  210. Mitchiner, Michael (1978). Oriental Coins & Their Values: The Ancient and Classical World 600 B.C. - A.D. 650. Hawkins Publications. பக். 544. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-9041731-6-1. 
  211. (in en) The Cambridge Shorter History of India. CUP Archive. பக். 42. https://books.google.com/books?id=9_48AAAAIAAJ&pg=PA42. பார்த்த நாள்: 13 July 2018. 
  212. Gupta, Subhadra Sen (2009) (in en). Ashoka. Penguin UK. பக். 13. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788184758078. https://books.google.com/books?id=L5ru08et_ZAC&pg=PT13. பார்த்த நாள்: 13 July 2018. 
  213. (in sa) Inscriptions of Asoka. New Edition by E. Hultzsch. 1925. பக். 174–175. https://archive.org/stream/InscriptionsOfAsoka.NewEditionByE.Hultzsch/HultzschCorpusAsokaSearchable#page/n353/mode/2up. 
  214. 214.0 214.1 Thappar, Romila (13 November 2009). "Ashoka – A Retrospective". Economic and Political Weekly 44 (45): 31–37. 
  215. Sen, Amartya (Summer 1998). "Universal Truths and the Westernizing Illusion". Harvard International Review 20 (3): 40–43. 
  216. Richard Robinson, Willard Johnson, and Thanissaro Bhikkhu, Buddhist Religions, fifth ed., Wadsworth 2005, page 59.
  217. The Edicts of King Ashoka பரணிடப்பட்டது 28 மார்ச்சு 2014 at the வந்தவழி இயந்திரம், English translation (1993) by Ven. S. Dhammika. ISBN 955-24-0104-6. Retrieved 21 February 2009
  218. Singh 2012, ப. 131, 143.
  219. 219.0 219.1 R. K. Verma (2000). Filmography: Silent Cinema, 1913-1934. M. Verma. பக். 150. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7525-224-0. https://books.google.com/books?id=suFkAAAAMAAJ. பார்த்த நாள்: 5 February 2021. 
  220. 220.0 220.1 Ashish Rajadhyaksha; Paul Willemen (10 July 2014). Encyclopedia of Indian Cinema. Taylor & Francis. பக். 43. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-135-94325-7. https://books.google.com/books?id=rF8ABAAAQBAJ&pg=RA43-PA1993. பார்த்த நாள்: 10 February 2021. 
  221. Jefferson, Margo (27 October 2000). "Next Wave Festival Review; In Stirring Ritual Steps, Past and Present Unfold". The New York Times இம் மூலத்தில் இருந்து 31 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220731043128/https://www.nytimes.com/section/theater?res=990ce6dc1131f934a15753c1a9669c8b63. 
  222. Renouf, Renee (December 2000). "Review: Uttarpriyadarshi". Balletco. Archived from the original on 5 February 2012.
  223. "'Bharatvarsh' – ABP News brings a captivating saga of legendary Indians with Anupam Kher". 19 August 2016 இம் மூலத்தில் இருந்து 26 August 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160826010058/http://www.abplive.in/india-news/bharatvarsh-abp-news-brings-a-captivating-saga-of-legendary-indians-with-anupam-kher-401258. 

நூற்பட்டியல்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
அசோகர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


அசோகர் கல்வெட்டுக்கள்
(ஆட்சி 269–232 பொ. ஊ. மு.)
அசோகரின் ஆட்சி ஆண்டுகள் கல்வெட்டு வகை
(மற்றும் அமைவிடம்)
புவியியல் அமைவிடம்
ஆண்டு 8 கலிங்கப் போரின் முடிவும், "தருமத்திற்கு" மாறுதலும்
அசோகர் is located in South Asia
உதேகோலம்
உதேகோலம்
நித்தூர்
நித்தூர்
பிரம்மகிரி
பிரம்மகிரி
ஜதிங்கா
ஜதிங்கா
ரஜுலா மந்தகிரி
ரஜுலா மந்தகிரி
எர்ரகுடி
எர்ரகுடி
சசாராம்
சசாராம்
பைரத்
பைரத்
லக்மன் (அரமேயம்)
லக்மன்
(அரமேயம்)
இராம்பூர்வா
இராம்பூர்வா
ஐ கனௌம் (கிரேக்க நகரம்)
ஐ கனௌம்
(கிரேக்க நகரம்)
சிறு பாறைக் கல்வெட்டுக்களின் அமைவிடம் (கல்வெட்டுக்கள் 1, 2 மற்றும் 3)
பொதுவாக சிறு பாறைக் கல்வெட்டுக்கள் என்று வகைப்படுத்தப்படும் பிற கல்வெட்டுக்கள்.
அசோகரின் பெரும் பாறைக் கல்வெட்டுக்கள்.
சிறு தூண் கல்வெட்டுகளின் அமைவிடம்.
பெரிய தூண் கல்வெட்டுக்களின் உண்மையான அமைவிடங்கள்.
தலை நகரங்கள்
ஆண்டு 10[1] சிறு பாறைக் கல்வெட்டுக்கள் தொடர்புடைய நிகழ்வுகள்:
புத்தகயையில் போதி மரத்திற்கு வருகை புரிதல்
மகாபோதிக் கோயிலைக் கட்டுதல் மற்றும் போதி கயாவில் வைர அரியணை
இந்தியா முழுவதும் நிறுவுதல்.
சங்கத்தில் பிரிவு
பௌத்த மாநாடுகள்
இந்திய மொழியில்: சோககௌரா கல்வெட்டு
அசோகரின் தூண்கள் எழுப்பப்படுதல்
காந்தார இருமொழிக் கல்வெட்டு
(கிரேக்கம் மற்றும் அரமேயத்தில், காந்தாரம்)
அரமேயத்தில் சிறு பாறைக் கல்வெட்டுக்கள்:
லக்மன் கல்வெட்டு, தட்சசீலக் கல்வெட்டு
ஆண்டு 11 மற்றும் பின்னர் சிறு பாறைக் கல்வெட்டுக்கள் (எண்°1, எண்°2 மற்றும் எண்°3)
(பங்குரரியா, மஸ்கி, பால்கிகுண்டு மற்றும் கவிமடம், பகபூர்/சீனிவாசபுரி, பைரத், அக்ரௌரா, குஜர்ரா, சசாராம், ரஜுலா மந்தகிரி, எர்ரகுடி, உதேகோலம், நித்தூர், பிரம்மகிரி, சித்தபூர், ஜதிங்க-ராமேஷ்வரம்)
ஆண்டு 12 மற்றும் பின்னர்[1] பராபர் குகை கல்வெட்டுக்கள் பெரும் பாறைக் கல்வெட்டுக்கள்
சிறு தூண் கல்வெட்டுகள் கிரேக்கத்தில் பெரும் பறைக் கல்வெட்டுக்கள்: கல்வெட்டுக்கள் எண்°12-13 (காந்தாரம்)

இந்திய மொழியில் பெரும் பறைக் கல்வெட்டுக்கள்:
கல்வெட்டுக்கள் எண்.1 ~ எண்.14
(கரோஷ்டி எழுத்துமுறையில்: சபாஷ் கார்கி, மன்செரா கல்வெட்டுக்கள்
(பிராமி எழுத்துமுறையில்: கல்சி, கிர்நார், நள சோப்ரா, சன்னதி, எர்ரகுடி, தில்லி கல்வெட்டுக்கள்)
பெரும் பறைக் கல்வெட்டுக்கள் 1–10, 14, தனித் தனி கல்வெட்டுக்கள் 1 மற்றும் 2:
(தௌலி, ஜௌகர்)
பிரிவு கல்வெட்டு, இராணியின் கல்வெட்டு
(சாரநாத் சாஞ்சி அலகாபாத்)
லும்பினி கல்வெட்டு, நிகாலி சாகர் கல்வெட்டு
ஆண்டு 26, 27
மற்றும் பின்னர்[1]
பெரிய தூண் கல்வெட்டுக்கள்
இந்திய மொழிகளில்:
பெரிய தூண் கல்வெட்டுக்கள் எண்.1 ~ எண்.7
(அலகாபாத் தூண் தில்லி-மீரட் தில்லி-தோப்ரா இராம்பூர்வா லௌரியா நந்தன்காட் லௌரியா-ஆராராஜ் அமராவதி)

அரமேயத்தில் பெறப்பட்ட கல்வெட்டுக்கள், பாறையில்:
காந்தாரம், கல்வெட்டு எண்.7[2][3] மற்றும் புல்-இ-தருந்தே, கல்வெட்டு எண்.5 அல்லது எண்.7[3]

  1. 1.0 1.1 1.2 Yailenko,Les maximes delphiques d'Aï Khanoum et la formation de la doctrine du dhamma d'Asoka, 1990, p. 243 பரணிடப்பட்டது 12 சூன் 2019 at the வந்தவழி இயந்திரம்.
  2. Inscriptions of Asoka de D.C. Sircar p. 30 பரணிடப்பட்டது 19 ஏப்பிரல் 2022 at the வந்தவழி இயந்திரம்
  3. 3.0 3.1 Handbuch der Orientalistik de Kurt A. Behrendt p. 39 பரணிடப்பட்டது 9 ஏப்பிரல் 2022 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோகர்&oldid=3891905" இலிருந்து மீள்விக்கப்பட்டது