அக்சோப்ய புத்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்‌ஷோப்ய புத்தர்

வஜ்ரயான பௌத்தத்தில், அக்‌ஷோப்ய புத்தர் ஐந்து தியானி புத்தர்களில் ஒருவர். மேலும் ஆதிபுத்தரின் அம்சமாக கருதப்படும் இவர் நிதர்சனத்தின் விழிப்புநிலையை குறிப்பவர். பாரம்பரியத்தின் படி இவருடைய உலகம் வஜ்ரதாதுவின் கிழக்கே உள்ள அபிரதி(अभिरति) ஆகும். ஆனால் மக்களிடத்தில் அமிதாப புத்தரின் சுகவதியே பரவலாக உள்ளது. இவருடைய உலகத்தை குறித்து யாரும் அவ்வளவாக அறியார். இவருடைய துணை லோசனா ஆவார். இவர் எப்பொழுதும் இரண்டு யானைகளுடன் சித்தரிக்கப்படுகிறார். இவருடைய நிறம் நீலம், இவருடைய சின்னம் மணி, மூன்று உடுப்புகள் மற்றும் செங்கோல். இவருக்கு பலவிதமான வெளிப்பாடுகள் உள்ளன.[1]

நம்பிக்கைகள்[தொகு]

அக்‌ஷோப்யர் "அக்‌ஷோப்யரின் புனித புத்த உலகம்" என்ற மகாயான சூத்திரத்தில் முதன் முதலில் சுட்டப்படுகிறார். அந்த சூத்திரத்தின் படி, அபிரதியில் தர்மத்தை பின்பற்ற நினைத்த ஒரு பிக்‌ஷு, தான் போதி நிலையை அடையும் வரையில் கோபத்தையும் பகைமையும் எந்த உயிரிடத்திலும் காட்டுதில்லை என உறுதி பூண்டார். அவர் இதில் வெற்றி பெற்ற நிலையில், புத்தத்தன்மை அடைந்து அக்‌ஷோப்ய புத்தர் ஆனார்.

ஜப்பானில் அக்‌ஷோப்யரையும் ஆசல வித்யாராஜாவையும் இணைத்து வழிபடுவது உண்டு. ஆனால் ஆசலநாதர் கர்பகோசதாது(गर्भखोस धातु)வில் வசிக்கும் ஒரு வித்யாராஜாவே ஒழிய புத்தர் கிடையாது

பைஷஜ்யகுரு வழிபாடு பரவுவதற்கு முன்னர், அக்‌ஷோப்ய குணப்படுத்தும் செயல்களுக்காக முற்காலத்தில் வழிப்படும் வழக்கம் இருந்தது.

நம்பிக்கைகள்[தொகு]

அக்‌ஷோப்யர் மனிதனின் பயனில்லாத கோபத்தை, பளிங்கு போன்ற தூய விவேகமாக மாற்றுபவர். இந்த விவேகத்தோடு, மனிதர்கள் அனைத்து விடயங்களையும் நடுநிலைமையை மாறாது பார்க்கும் தன்மைப்பெறுகிறார்கள். ஒரு பளிங்கு நல்லதோ கெட்டதோ, தன் மீது விழும் பிம்பத்தை அப்படியே பிரதிபிம்பமாக காண்பிப்பது போல, மனிதர்களுக்கும் அத்தகைய நடுநிலைத்தன்மையை அக்‌ஷோப்யர் அருளுகிறார்.

நீல நிற நீர் எவ்வாறு பிம்பத்தை அப்படியே பிரதிபலிக்கின்றதோ அவ்வாறே நமக்கு அக்‌ஷோப்யர் அத்தன்மையை அளிக்கிறார். எனவே தான் அவர் நிறம் நீலமாக உள்ளதாக கூறுவர்.

சித்தரிப்பு[தொகு]

அக்‌ஷோப்யர் பூமிஸ்பரிச(भूमिस्पर्श - பூமியைத்தொடும்) முத்திரையுடன் காணப்படுகிறார். இந்த முத்திரை ஆழ்ந்த நம்பிக்கையையும், அக்‌ஷோப்யர் புத்தத்தன்மை அடையக் காரணமாக இருந்த அவரது உறுதியையும் குறிக்கிறது.

அக்‌ஷோப்யருடைய சின்னம் வஜ்ரம். வஜ்ரம், ஒரு மின்னலின் ஆற்றலையும், வலிமையையும் குறிக்கிறது. மேலும் இச்சொல் வைரத்தின் பிரகாசத்தையும், தூய்மையையும் குறிக்கிறது (வஜ்ரம் என்ற வடச்சொல் மின்னலையும் வைரத்தையும் ஒன்று சேரக் குறிக்கக்கூடியது). அக்‌ஷோப்யரின் முத்திரை அவருடைய பூமியைப் போன்ற உறுதியான மனத்தை காட்டுகிறது. அவ்வுறுதியினால் தான் அவர், அனைத்து தடைகளையும் மீறி புத்தத்தன்மை எய்தினார்.

அக்‌ஷோப்யருடைய வாகணம் யானை. யானை நிலத்தின் மீது எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், அக்‌ஷோப்யருடைய உறுதியை குறிக்கிறது.

மந்திரம்[தொகு]

இவருடைய மந்திரம்

ஓம் அக்‌ஷோப்ய ஹூம் ॐ अक्षोभ्य हूँ

அக்‌ஷோப்யருடைய பீஜாக்‌ஷரம் ஹூம்(हूँ) ஆகும்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Akshobhya
  • Jordan, Michael, Encyclopedia of Gods, New York, Facts On File, Inc. 1993, pp. 9–10
  • Vessantara, Meeting the Buddhas, Windhorse Publications 2003, chapter 9
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்சோப்ய_புத்தர்&oldid=3436851" இலிருந்து மீள்விக்கப்பட்டது