குருகை காவலப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குருகை காவலப்பன் [1] நாதமுனிகளின் மாணவர்களில் முதன்மையானவரான இவர் தை மாதம் விசாகம் நட்சத்திரத்தில் ஆழ்வார்திருநகரியில் பிறந்தார். நாதமுனிகளின் மாணவர் கூட்டத்துக்குத் தலைவர்.[2]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

நாதமுனிகள் இவருக்கு அட்டாங்க யோகத்தில் பயிற்சி அளித்தார். தன் மகன் ஈசுவரமுனிக்குப் பிறக்கப்போகும் மகனுக்கு அட்டாங்க யோகப் பயிற்சி அளிக்குமாறு இவரை வேண்டிக்கொண்டு காலமானார். ஈசுவரமுனிக்குப் பிறந்த குழந்தைக்கு மணக்கால் நம்பி யமுனைத்துறைவன் எனப் பெயர் சுட்டி, எட்டெழுத்து மந்திரத்தைப் [3] புகட்டினார். அட்டாங்க யோக மறையைக் குருகை காவலப்பனிடம் கற்றுத் தெளியுமாறு அறிவுறுத்தினார்.

யமுனைத்துறைவனாகிய ஆளவந்தார் குருகை காவலப்பனை வேண்டியபோது வருகிற தை மாதம் இன்ன நாளில் தாம் பரமபதம் செல்லவிருப்பதாகவும், அதற்கு முன் வேறொரு நாளில் வரும்படியும் எழுதியிருந்த ஓலை ஒன்றைக் காப்பிட்டுக் கொடுத்து பின்னொரு நாளில் படிக்கும்படி கூறி அனுப்பிவிட்டார். ஆளவந்தார் காஞ்சிபுரத்தில் சிலநாள் தங்கிவிட்டுத் திருவரங்கம் வந்து ஓலைக் காப்பை விலக்கிவிட்டுப் பார்த்தபோது, அது குருகை காவலப்பன் பரமபதம் அடையும் காலமாக இருந்தது. இவ்வாறு குருகை காவலப்பன் ஆசிரியர் இட்ட கட்டளையை நிறைவேற்றாமலேயே காலமானார்.

பாடல்
சீராரும் மாடத் திருக்கோவ லூரதனுள்
காரார் கருமுகிலைக் காணப்புக்கு, - பாராத்
திருக்கண்டேன் என்றுரைத்த சீரான் கழலே,
உரைக்கண்டாய் நெஞ்சே. உகந்து.

கருவிநூல்[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. இவரது பெயரிலுள்ள குருகை என்பது குருகூர் என்னும் ஊரைக் குறிக்காது. குருகைப்பிரானாகிய நம்மாழ்வாரைக் குறிக்கும். எனவே குருகைக் காவலப்பன் என ஒற்று மிகாது.
  2. ஸ்ரீபாத முதலிகள் திருக்கூட்டத்துக்குத் தலைவர்.
  3. ஓம் நமோ நாராயணாய
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருகை_காவலப்பன்&oldid=2716733" இலிருந்து மீள்விக்கப்பட்டது