துர்க்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(துர்கை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
துர்க்கை
துர்க்கை
அதிபதிவெற்றிக்கும் வீரத்துக்கும்
தேவநாகரிदुर्गा
சமசுகிருதம்Durgā
மந்திரம்ஓம் ஸ்ரீ துர்க்கையே நம
ஆயுதம்திரிசூலம், ஆழி, வாள், பாசம், அங்குசம் இன்னும் பல.

துர்க்கை புகழ்பெற்ற தமிழ்த் தெய்வம் ஆகும். துர்க்கை என்னும் சொல்லுக்கு வடமொழியில் "வெல்லமுடியாதவள்" என்று பொருள் தமிழில் வெற்றிக்கு உரியவள்.[1] அன்னை துர்க்கைக்கு பல்வேறுபட்ட புராணக் கதைகள் உள்ள போதும் மகிடாசுரனாம் மேதியவுணனை அழிக்கவே அவள் தோன்றியதாகச் சொல்லப்படுகின்றது. அதனால் அவள் மகிடாசுரமர்த்தினி அல்லது மேதியவுணன்கொல்பாவை என்றும் அழைக்கப்படுவதுண்டு.[2]

பெயர்க்காரணம்[தொகு]

துர்க்கை துர்+கை துர் என்றால் தீயவை என்று அர்த்தம் தீய செயல்களையும் தீயவர்களையும் தனது கையால் அழிப்பவள் அதனால் துர்கை என்று பெயர் ஆனது மேலும் இவளை துர்காதேவி, ஆர்த்தி தேவி, ஜோதி தேவி என்றும் அழைக்கபடுகிறாள்.

  • துர்காதேவி தீய செயல்களை அழிப்பவள் என்பதாகும்.
  • ஆர்த்திதேவி அல்லது ஆராத்திதேவி என்பதாகும் துர்கை தனது உக்கர நிலையில் நெருப்பு வடிவில் ஒளி தருபவளாக மற்ற கடவுக்கு ஆராத்தி தீபமாக அருள் வடிவில் ஒளி தருகிறாள் என்று வட மாநிலங்களில் துர்கையை ஆர்த்திதேவி என்று கூறுகின்றனர்.
  • ஜோதிதேவி துர்கை நாம் ஏற்றும் திரி விளக்கில் தீபமாக ஒளிர்கிறாள் எனவே ஜோதிதேவி என்றும் வட மாநிலங்களில் கூறுகின்றனர்.
  • மேலும் இந்த துர்கையின் இரண்டு வடிவமான ஆர்த்திதேவி/ஜோதிதேவி உடன் பிறந்த சகோதரிகள் என்றும் நெருப்பும் துர்கையும் ஒன்று என வட மாநிலங்களில் கருதபடுகின்றது.

தொன்மக் கதைகள்[தொகு]

வங்கத்து துர்க்கா பூசை. இலக்குமி சரஸ்வதி மற்றும் தன் இரண்டு குழந்தைகள் சூழ அருள்தரும் அன்னை,கொல்கத்தா.

படைப்பின் ஆரம்பத்தில் உலகங்களையும் ஏனைய அரி-பிரமேந்திராதி தேவர்களைப் படைத்ததாகவும் சொல்லப்படுகின்றது. அந்நூலும் தேவி மான்மியம் எனும் இன்னொரு நூலும், அத்துர்க்கையானவள், இரம்பன் எனும் அசுரனின் மகனான மேதியவுணனை அழிப்பதற்காக முத்தேவர்களின் உடலிலிருந்தும், ஏனைய தேவர்களிலிருந்தும் ஒளி வடிவில் மீண்டும் தோன்றியதாகவும் சொல்லப்படுகின்றது. துர்தரன், துன்முகன், புகைக்கணான் (தூம்ரலோசனன்) முதலான மேதியவுணனின் படைத்தளபதிகளைக் கொன்று, இறுதியில் அவனையும் அன்னை வதைத்த கதை, அவற்றில் விரிவாகப் பாடப்படுகின்றது.விந்திய மலைத்தொடர், மற்றும் இமய மலைப் பகுதிகளில் வாழ்ந்த பழங்குடிகளின் போர்த்தெய்வமொன்றே, பிற்காலத்தில் துர்க்கையாக வளர்ச்சி பெற்றிருக்கக் கூடும் என நம்பப்படுகின்றது.[3]

தமிழ் மரபு[தொகு]

பழந்தமிழ்க்கொற்றவையே பின்னாளில் துர்க்கையாக வளர்ந்தாள். திருவண்ணாமலைத் துர்க்கை

பரிபாடல், திருமுருகாற்றுப்படை, சிலப்பதிகாரம் முதலான பழந்தமிழ் இலக்கியங்களில், கொற்றவை என்ற அன்னைத் தெய்வமாக துர்க்கை பற்றிக் குறிப்பிடுகின்றன. காலில் மேதியவுணனின் எருமைத்தலை கிடக்க, இன்றைய துர்க்கையாகவே காட்சியருளும் கொற்றவையை சிலம்பில் காணலாம்.[4]

உருவ இலக்கணம்[தொகு]

சில்ப ரத்னம் எனும் நூலின்படி, அவள் முக்கண்ணி, எண்கரத்தி, சந்திரன் அலங்கரிக்கும் சடா மகுடம் கொண்டவள், வலக்கரங்களில் திரிசூலம், வாள், சக்கரம், வில் என்பனவும், இடக்கைகளில் பாசம், கோடரி, கேடயம், அங்குசம் என்பனவும் விளங்க, குருதி வடியும் எருமைத்தலை காலடியில் கிடக்க சிங்கம் மீது ஒரு காலூன்றி, கம்பீரமாக நிற்பாள். தலை துண்டமான எருமை உடலிலிருந்து, கையில் வாளும் கேடயமும் ஏந்தி, மேதியன் வெளிவந்து, தன்னைப் பாசத்தால் கட்டும் தேவியை எதிர்ப்பான். அன்னையின் மறுகால் அவ்வெருமை உடல்மீது நிற்கும்.[5]

சிற்பங்கள்[தொகு]

துர்க்கையின் மிகப்பழைமையான வடிவங்களை கிறிஸ்து காலத்தைய வடமொழி இலக்கியங்களிலும் அதேகாலத் தமிழ் இலக்கியங்களிலும் காணமுடிகின்றது. குசாணர் காலத்திலேயே (பொ.மு. 30–பொ.பி. 375) அவளது சிற்பங்கள் முதன்முதலாக கிடைக்கப்பெற்றிருக்கின்றன.[6] மேதியவுணனை அழிக்கும் கோலத்திலேயே அவள் பெரும்பான்மையாகச் சித்தரிக்கப்படுவதுண்டு.

மாமல்லபுரத்து மேதியவுணன் - அன்னை போர்ச்சிற்பம்.

மத்திய பிரதேசத்திலுள்ள குப்தர் கால குகைச் சிற்பமொன்றில் அவள் பன்னிருகரத்தினளாக சித்தரிக்கப்படுகின்றாள்.குசாணர் சிற்பங்களில் காட்டப்படும் சிங்கம், பிற்காலத்தைய குப்தப் பேரரசுச் சிற்பங்களில் (பொ.பி. 240 முதல் 600 வரை) காட்டப்படவில்லை. எனினும் பிற்காலத்தில் சிங்கம், மீண்டும் துர்க்கையின் வாகனமாக ஏற்கப்பட்டிருக்கின்றது. சில இடங்களில் புலியும் அவள் ஊர்தியாகச் சொல்லப்படுவதுண்டு. குயராத்தில் "குரபுரை" என்றழைக்கப்படும் புலி வாகனம் கொண்ட பழங்குடித் தெய்வமும்[7], சில மத்திய பிரதேசத்து நம்பிக்கைகளும், புலியில் இவர்கின்ற துர்க்கையாக வளர்ந்திருக்கக் கூடும்.

தென்னகத்தில் மிகப்பழைய துர்க்கையின் சிற்பம், கர்நாடகாவின் சன்னடி பகுதியில் கிடைத்த பொ.பி 3ஆம் நூற்றாண்டு சுடுமண் சிற்பம் ஆகும்.[5] அதிலும் மேதியவுணனைக் கொல்பவளாகவே அவள் காட்சியளிக்கிறாள். இன்னும் மாமல்லபுரத்துப் புகழ்பெற்ற சிற்பங்களில் ஒன்றான, தேவிக்கும் - மேதியனுக்கும் இடையிலான போர்க்காட்சி, வேறெங்கும் காணற்கரிய அரிய சிற்பங்களில் ஒன்றாகும். அதே இடத்தில், சங்கு சக்கரமேந்தி நாற்கரத்தினலாகக் காட்சி தரும் கொற்றவை முன்பு, நவகண்டப் பலி நிகழும் சிற்பமும், அக்கால வழக்கங்களில் ஒன்றைத் தெளிவாகச் சுட்டிக்காட்டும் சிற்பம்.

வழிபாடு[தொகு]

பரிவார தேவதைககளின் நடுவில் துர்கை

துர்க்கையின் முக்கியமான வழிபாட்டுக் காலம், நவராத்திரிக் காலமே ஆகும். தசரா என்ற பெயரிலும் "துர்க்கா பூசை" என்ற பெயரிலும் அது சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. நவராத்திரியின் போது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தி என, துர்க்கையின் ஒன்பது வடிவங்களை வழிபடுவது வழக்கம்.[8] தமிழகத்தில் அண்மைக்காலமாக, இராகுகால துர்க்கை வழிபாடு புகழ்பெற்று வருகின்றது.[9]

நவராத்திரியின் இறுதி நான்கு நாட்களும் (விஜயதசமியும் சேர்த்து) துர்க்கா பூசை செய்வது, வங்கம், அசாம், ஒடிசா, நேபாளம் போன்ற இடங்களில் பெருவழக்கு. இந்நாட்களில் அன்னை துர்க்கையை, அவள்தம் குழந்தைகளான கார்த்திகேயன், கணேசர், இலக்குமி, சரசுவதி ஆகிய நால்வரும் புடைசூழ வழிபடுவது வங்கத்தில் வழக்கம்.[10] தெலுங்கானாப் பகுதியில், நவராத்திரி நாட்களில் "பாதுகாம்மா" என்ற பெயரில் அவளைப் போற்றுவது வழமை. மகிடாசுரமர்த்தினி தோத்திரம், துர்க்கா சப்தசதி முதலான துர்க்கையின் புகழ்பெற்ற துதிப்பாடல்கள் இந்நாட்களில் பாடப்படும்.

காஷ்மீரில் "சாரிகை" என்ற பெயரில் துர்க்கை வழிபடப்படுகின்றாள். பட்டீஸ்வரம் துர்க்கை கோயிலும், விஜயவாடாவிலுள்ள கனகதுர்க்கை ஆலயமும், மைசூர் சாமுண்டேஸ்வரி ஆலயமும் தென்னகத்ததல் பிரபலமாக விளங்குகின்ற துர்க்கை ஆலயங்கள் ஆகும்..

மேலும் காண[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  1. "Durga,". Encyclopædia Britannica Online. பார்க்கப்பட்ட நாள் 7 October 2009.
  2. "Hindu Goddesses : Durga - Hindu goddess that kills your demons". Sanatansociety.org. பார்க்கப்பட்ட நாள் 2015-10-22.
  3. McDaniel, June (2004). Offering Flowers, Feeding Skulls: Popular Goddess Worship in West Bengal. Oxford University Press. ISBN 0-19-516791-0. p. 214.
  4. நளினி, மு., கலைக்கோவன், இரா (2005). பெண்தெய்வ வழிபாடு தோற்றமும் வளர்ச்சியும். டாக்டர். மா. இராசமாணிக்கனார் வரலாற்று மையம். பக். 246. 
  5. 5.0 5.1 Chitgopekar, Nilima (2009). Book Of Durga. Penguin Books India. பக். 127. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780143067672. 
  6. Martin Lerner, ‎Steven Kossak (1991). The Lotus Transcendent: Indian and Southeast Asian Art from the Samuel Eilenberg Collection. Metropolitan Museum of Art. பக். 54. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0870996134. https://books.google.lk/books?isbn=0870996134. 
  7. Pupul Jayakar (1989). The Earth Mother. Penguin Books. பக். 76. https://books.google.lk/books?id=5_cYAAAAYAAJ. 
  8. Esposito, John L.; Darrell J. Fasching; Todd Vernon Lewis (2007). Religion & globalization: world religions in historical perspective. Oxford University Press. பக். 341. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-517695-2. 
  9. Puratan, Volume 14. Department of Archaeology and Museums, Madhya Pradesh. 2006. 
  10. Kinsley, David (1988). Hindu Goddesses: Vision of the Divine Feminine in the Hindu Religious Traditions. University of California Press. ISBN 0-520-06339-2. p. 95.

மேலதிக வாசிப்புக்கு[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துர்க்கை&oldid=3612823" இலிருந்து மீள்விக்கப்பட்டது