திருமுருகாற்றுப்படை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ் இலக்கியம்
சங்க இலக்கிய நூல்கள்
அகத்தியம் தொல்காப்பியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
நற்றிணை குறுந்தொகை
ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து
பரிபாடல் கலித்தொகை
அகநானூறு புறநானூறு
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை மலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு
நாலடியார் நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது இனியவை நாற்பது
களவழி நாற்பது கார் நாற்பது
ஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது
திருக்குறள் திரிகடுகம்
ஆசாரக்கோவை பழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம் முதுமொழிக்காஞ்சி
ஏலாதி கைந்நிலை
சங்கநூல் தரும் செய்திகள்
தமிழ்ச் சங்கம் சங்கம் மருவிய காலம்
சங்க காலப் புலவர்கள் சங்ககால நிலத்திணைகள்
சங்க கால ஊர்கள் சங்க கால மன்னர்கள்
சங்க கால நாட்டுமக்கள் சங்க காலக் கூட்டாளிகள்
சங்ககால விளையாட்டுகள் சங்ககால மலர்கள்

பத்துப்பாட்டு என வழங்கப்படும் நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவது திருமுருகாற்றுப்படை. இந்நூல் மதுரையைச் சேர்ந்த நக்கீரன் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. இது கடைச்சங்க நூல்களில் ஒன்று என்பது மரபுவழிச் செய்தியாகும். இது பிற்காலத்தில் எழுந்தநூல் என்று கருதுவாருமுண்டு; எனினும், ஆய்வறிஞர்களில் பெரும்பாலானோர் கருத்து, இது சங்கநூல் என்பதேயாம். முருகப் பெருமானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இந்நூல் 317 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது. 'ஆற்றுப்படுத்தல்' என்னும் சொல் 'வழிப்படுத்தல்' என்னும் பொருள்படும். "முருகாற்றுப்படை" எனும்போது, வீடு பெறுதற்குப் பக்குவமடைந்த ஒருவனை வீடு பெற்ற ஒருவன் வழிப்படுத்துவது எனப் பொருள்படும் என்பது நச்சினார்க்கினியர் கூற்று. தொடக்கக் காலத்தில் வெறியாட்டு அயரும் வேலன்,கட்டுவிச்சி ஆகியோர் தம் மீது முருகன் வந்து மேவுமாறு வேண்டுதலே முருகாற்றுப்படுத்துதல் என்று-"முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள்" (அகம்:22) பாடல்வழி அறியமுடிகிறது.இந்நூலின் வேறுபெயர் புலவராற்றுப்படை என்பதாகும். இதன் சிறப்புக் கருதி இந்நூலினை சைவத் திருமுறைகளுள் 11-ஆம் திருமுறையில் இணைத்து வைத்துள்ளனர்.பத்துப்பாட்டு நூல்கள் அனைத்திற்கும் இந்நூல் காப்புச் செய்யுள் போல் அமைந்து முதல் நூலாக வைத்து எண்ணப்படுகிறது. முருகாற்றுப்படை என்னும் மரபில் மாற்றம் செய்த நக்கீரர், ஆற்றுப்படை நூலினுக்குப் பெயரிடும் மரபிலும் புதுமையினைப் புகுத்தியுள்ளார். பொருநன், சிறுபாணான், பெரும்பாணான், கூத்தர் ஆகிய ஆற்றுப்படுத்தப்படும் இரவலர் பெயரில் ஏனைய நூல்கள் அமையப்பெற்றிருக்க, திருமுருகாற்றுப்படை நூல் மட்டும் ஆற்றுப்படுத்தும் தலைவனான முருகப்பெருமான் பெயரில் அமைந்துள்ளது.

திருமுருகாற்றுப்படை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் முருகப் பெருமானின் அறுபடைவீடுகள் ஒவ்வொன்றையும் பாராட்டுவனவாக அமைந்துள்ளது. இவற்றுள் முதற்பகுதியில் திருப்பரங்குன்றமும், இரண்டாம் பகுதியில் திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயும், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் பகுதிகளில் முறையே திரு ஆவினன்குடி (பழநி), திருவேரகம் (சுவாமிமலை), குன்றுதோறாடல் (திருத்தணி), பழமுதிர்சோலை ஆகிய படைவீடுகளும் பேசப்படுகின்றன.

பதிப்பு வரலாறு[தொகு]

இந்நூலை முதன்முதலில் 1834-இல் சரவணப்பெருமாளையர் பக்திப் பாசுரமாகப் பதிப்பித்தார். 1851-இல் ஆறுமுக நாவலரும் பதிப்பாகக் கொண்டு வந்தார். ஆனால் சங்க இலக்கியம் என்னும் அடையாளத்தைக் கொண்டு பதிப்பிக்கப்படவில்லை[1]. உ. வே. சாமிநாதையர் அவர்களின் 1889-ஆம் ஆண்டு பத்துபாட்டுப் பதிப்பில் முதல் இலக்கியமாகத் திருமுருகாற்றுப்படை இடம் பெற்றது.[2] இதன் பின்னர் வேறு பலரும் வெளியிட்டுள்ளனர். உரை விவரம்:

  1. நச்சினார்க்கினியர் உரை
  2. பரிமேலழகர் உரை
  3. உரையாசிரியர் உரை
  4. கவிப்பெருமாள் உரை
  5. பரிதிக் குறிப்புரை
  6. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் உரை

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

திருமுருகாற்றுப்படை - நெடுநல்வாடை (ஒப்புநோக்கம்)

திருமுருகாற்றுப்படை

1. ஞாயிறு தோன்றுவதைக் காட்டிக்கொண்டு தொடங்குகிறது.

2. அருளைப் பெற ஆற்றுப்படுத்துகிறது. பிற ஆற்றுப்படைகள் பொருளைப் பெற ஆற்றுப்படுத்துகின்றன. பொருளைப் பெற ஆற்றுப்படுத்தும் பிற ஆற்றுப்படைகள்; பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, மலைபடுகடாம் என்பனவாகும்.

3. தொல்காப்பிய மரபு - 1037 | பாடாண் திணையின் துறைகளில் ஒன்று ஆற்றுப்படை. "கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும், ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப், பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇ, சென்று பயன் எதிரச் சொன்ன பக்கம்" திருமுருகாற்றுப்படை முதுவாய் இரவலனை ஆற்றுப்படுத்துகிறது. "அளியன் தானே முதுவாய் இரவலன்"- (முருகு. 284) இவனுக்கு அருள்புரிய வேண்டும் என்று கூளியர் முருகனுக்குப் பரிந்துரைப்பர் என்று குறிப்பிடப்படுவதால் இதனைப் 'புலவர் ஆற்றுப்படை' என்றும் கூறுவர். இது மலைபடுகடாம் நூலைக் 'கூத்தர் ஆற்றுப்படை' என்று கூறுவது போன்றது.

நெடுநல்வாடை

1. குளிர் நடுக்கத்தைக் காட்டிக்கொண்டு தொடங்குகிறது.

2. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடியதாக அதன் கொளுக்குறிப்பு கூறுகிறது. பாடலில் அவன் பெயர் இல்லை. "வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகம்" ஒன்றை வைத்துக்கொண்டு அவனது மெயக்காப்பாளன் அவனுடன் வந்தான் என்று கூறப்படுவது ஒன்றே பாண்டியன் என்று கொள்வதற்கான அடிப்படை. அரண்மனையில் அரசி பிரிவால் வாடுகிறாள். இது பாலை. பாசறையில் பாண்டியன் போரில் காயம் பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிக்கொண்டு காயம் பட்ட குதிரைகளையும் யானைகளையும் தேற்றிக்கொண்டிருக்கிறான். வாடைக்காற்று இருவரையும் வருத்துகிறது.

3. தொல்காப்பிய மரபு | "வாகை தானே பாலையது புறனே" - தொல்காப்பியம் நூ.1019. "கூதிர் வேனில் என்று இரு பாசறைக் காதலின் ஒன்றிக் கண்ணிய மரபு" மேல் வாகைத்திணைப் பாடல் வரும் - தொல்காப்பியம் நூ.1022. இந்த நெறியில் அமைந்துள்ளது நெடுநல் வாடை

திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரரும் நெடுநல்வாடை பாடிய நக்கீரரும் ஒருவரா வெவ்வேறு புலவர்களா என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன.

ஏனைய பத்துப்பாட்டு நூல்கள்

குறிப்புகள்[தொகு]

  1. சங்க இலக்கியப் பதிப்புரைகள்.பாரதி புத்தகாலயம், பக்கம் 3
  2. சங்க இலக்கியப் பதிப்புரைகள்.பாரதி புத்தகாலயம், பக்கம் 11

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமுருகாற்றுப்படை&oldid=3823390" இலிருந்து மீள்விக்கப்பட்டது