தமிழ்ச் சங்கம்
சங்கம் என்ற சொல் "கழகம்", "கூடல்" என்று பொருள்தரும் வடமொழிச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். பௌத்தம் இந்தியாவில் உயர்நிலையிலிருந்த காலத்தில் பௌத்த குருமாருடைய கூடல் "சங்கம்" எனப்பட்டது. தற்போதும் இச்சொல் பௌத்தசமயத்துடன் பெரிதும் தொடர்புள்ளது.
இதைவிடக் குறிப்பிட்ட நோக்கத்துடன் பலர் கூடி அமைக்கும் ஒரு குழுவும் "சங்கம்" என அழைக்கப்படுகின்றது. இதன்படி, தமிழ் அல்லது தமிழர் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்படும் சங்கங்கள் தமிழ்ச்சங்கங்கள் எனப் பெயரிடப்படுகின்றன. இவ்வாறான தமிழ்ச்சங்கங்கள் பல தமிழகத்தில் மட்டுமன்றி உலகம் முழுவதும் உள்ளன.
எனினும், தமிழ் தொடர்பில் சங்கம் என்ற சொல் பண்டைத் தமிழகத்தில் இருந்ததாகச் சொல்லப்படும், தமிழ்ச் சங்கங்களையே விசேடமாகக் குறிக்கும். தொல்பழங்காலத்தில், அக்காலத்துப் பாண்டிய அரசர்களின் ஆதரவில் ஒன்றன்பின் ஒன்றாக மூன்று தமிழாய்ந்த சங்கங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என இன்று குறிப்பிடப்படும் இச்சங்கங்களில் முதற்சங்கம், கடல்கோளினால் அழிந்துபோன பழைய மதுரையில் இருந்ததாம். இரண்டாவதான இடைச்சங்கமும், இதேபோல இன்னொரு கடல்கொண்ட பழந் தலைநகரான கபாடபுரத்திலிருந்ததாகக் கூறப்படுகிறது. கடைச் சங்கம் பாண்டிநாட்டின் பிற்காலத் தலைநகரான மதுரையில் நிறுவப்பட்டதாகக் கருதப்படுகிறது.
நக்கீரர் என்னும் புலவரே தானெழுதிய இறையனார் அகப்பொருள் உரை நூலில் இச்சங்கங்கள் பற்றி விபரித்துள்ளார். ஒவ்வொரு சங்கமும் இருந்த காலமும், அச்சங்கங்களில் இருந்த புலவர்களின் எண்ணிக்கைகளையும் இவர் கொடுத்துள்ளார். இதன்படி:
முதற்சங்கம் 4440 ஆண்டுகள் நிலைத்திருந்ததாகவும், 4449 புலவர்கள் இருந்து தமிழாய்ந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.
இடைச்சங்கம் 3700 புலவர்களுடன் 3700 ஆண்டுகள் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
கடைச்சங்கம் 1850 ஆண்டுகள் இருந்து, 449 புலவர்களுக்கு இடமளித்துள்ளதாம்.
இதன்படி மூன்று சங்கங்களினதும் மொத்தக் காலம் 9990 ஆண்டுகளாவதுடன், முதற்சங்கத்தின் தொடக்கம் அண்னளவாக 12000 வருடத்துக்கு முன் செல்கிறது. தற்போதுள்ள சான்றுகளின்படி, மேற்படி காலக்கணக்கு நிறுவப்பட முடியாத ஒன்றாகும்.
மேற்கூறிய சங்கங்கள் இருந்தது பற்றியே சில ஆய்வாளர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். எனினும், கிறீஸ்து சகாப்தத்துக்குச் சற்று முன்பின்னாகத் தமிழ்ச் சங்கம் ஒன்று இருந்திருக்கக் கூடும் என்று பலர் கருதுகிறார்கள். புறநானூறு, அகநானூறு போன்ற தொகை நூல்கள், சங்ககாலம் என்று குறிக்கப்படும் மேற்படி காலத்தில் இயற்றப்பட்டது என்பது பெரும்பான்மைத் துணிபு.
ஆனால் இவற்றுக்கெல்லாம் முரணாக முச்சங்கங்களுக்கு முந்தியும் பிந்தியும் பல தமிழ்ச் சங்கங்கள் இருந்ததாக சில ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. [1] இவ்வாய்வுகளின்படி 14 தமிழ்ச் சங்கங்கள் விபரிக்கப்படுகின்றன.
[தொகு] தமிழ்ச்சங்கங்களின் வரலாறு
| தமிழ்ச்சங்கம் | காலம் | இடம் | இரீஇய அரசர் | புலவர் | நூல்கள் |
|---|---|---|---|---|---|
| பஃறுளியாற்றுத் தென் மதுரை | கி.மு 30000 - கி.மு 16500 | பஃறுளியாற்றுத் தென் மதுரை | பாண்டியன் நெடியோன் | ஆழிவடிம்பலம்ப பாண்டியன் முதலானோர் | |
| மகேந்திர மலைத் தமிழ்ச் சங்கம் | கி.மு 16000 -கிமு 16500 | குமரிக் கண்டத்து மகேந்திரமலை | இறையனார் | இறையனார் , பொதிகை மலை அகத்தியர்-1 | மகேசசூத்திரம், ஐந்திணை அகநூல் |
| பொதிய மலைத் தமிழ்ச் சங்கம் | கி.மு 16000 - | பொதியமலை,பாவநாசம் | பொதிகை மலை அகத்தியர்-1 | பொதிகை மலை அகத்தியர்-1 | மகேசசூத்திரம் , அகத்தியம் |
| மணிமலைத் தமிழ்ச் சங்கம் | கி.மு 14550 -14490 | மணிமலை(மகேந்திர மலைக்குத் தெற்கே இருந்தது) | ஒளிச்செங்கோ | சங்கரன், பேராற்று நெடுந்துறையன், இடைகழிச் செங்கோடன், தனியூர்ச் சேந்தன் | மகேசசூத்திரம்,அகத்தியம்,பேராற்று நெடுந்துறையன் பெருநூல்,இடைகழிச் செங்கோடன் இயல்நூல் |
| குன்றம் எறிந்த குமரவேள் தமிழ்ச் சங்கம் | கி.மு 14058- கி.மு 14004 | திருச்செந்தூர் | குன்றம் எறிந்தகுமரவேள் | வாதாபி அகத்தியர், புலத்தியர்-1, சனகர்-II, சனற்குமாரர்-II | குமரம், முருகன் அகப் பொருள் விருத்தி, மகேசம்,வாதாபி அகத்தியம்,
மகேசசூத்திரம்,அகத்தியம் |
| முதற்சங்கம் | கி.மு14004 - கி.மு 9564 | குமரியாற்றங்கரைத் தென்மதுரை | காய்சினவழுதி முதல் முதலாம் கடும் கோன் வரை89 பாண்டியர்கள் | இறையனார் முதல் 4449 பேர் | குமரம், முருகன் அகப் பொருள் விருத்தி, மகேசம்,வாதாபி அகத்தியம்,
மகேசசூத்திரம்,அகத்தியம் |
| முதுகுடுமித் தமிழ்ச் சங்கம் | கி.மு 7500 - கி.மு 6900 | கொற்கை | முதுகுடுமிப் பெருவழுதி | இந்திரனார் காரிக்கிழார்,நெடும்பல்லியத்தனார்,நெடும்பல்லியத்தை(பெண்),நெட்டிமையார்,பரதமுனிவர்,புரோகித அகத்தியர் | ஐந்திணை அகநூல்,ஐந்திரம், பரதம்,குமரம், முருகன் அகப் பொருள் விருத்தி |
| இடைச்சங்கம் | கி.மு 6805 - கி.மு 3105 | பெருநை(தாமிரபரணி)க்கு அருகேயுள்ள கபாடபுரம் | வெண்டேர்ச் செழியன் முதல் முடத்திருமாறன் வரை 79 பாண்டியர்கள் | அகத்தியர், தொல்காப்பியர், பெருங்காக்கைப் பாடினியார், முதலான 38 பேர் | தொல்காப்பியம், மாபுராணம்,பூதபுராணம், இசைநுணுக்கம்,வாதாபி அகத்தியம் |
| திருப்பரங் குன்றத்துத் தென்மதுரைத் தமிழ்ச் சங்கம் | கி.மு 1915 - கி.மு 1715 | திருப்பரங்குன்றத்துப் பக்கம் இருந்த தென்மதுரை | முடத்திருமாறன்-II, பொற்கைப் பாண்டியன், குறுவழுதி, மாறன்வழுதி,முடத்திருமாறன்-III | ஈழத்துப் பூதந்தேவனார் முதலான 36 பேர் | தொல்காப்பியம், பெரகத்தியம், சிற்றகத்தியம், ஐந்திணை அகநூல் |
| கடைச்சங்கம் | கி.மு 1715 - கி.பி 235 | உத்தர மதுரை | முடத்திருமாறன்-III முதல் உக்கிரப் பெருவவழுதி வரையான 49 பேர் | அகம்பன் மாலாதனார் முதலான 449 பேர் | தொல்காப்பியம், திருமுருகாற்றுப்படை, முத்தொள்ளாயிரம், பட்டினப்பாலை முதலானவை |
| வச்சிரநந்தி தமிழ்ச் சங்கம் | கி.பி 470 - கி.பி 520 | திருப்பரங் குன்றத்துத் தென்மதுரை | வருக்கருநடர் ஆட்சியில் வச்சிரநம்பி சமணத்தலைவர் | நக்கீரர் முதல் பெருந்தேவனார் வரை | திருவிரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவந்தாதி |
| மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் | கி.பி520 -கி.பி1901 | நான்மாடக் கூடல் | பாலவனத்தம் நிலக்கிழவர் பொ. பாண்டித்துரைத்தேவர் | உ.வெ.சாமிநாத ஐயர் முதல் மு.ரா.அருணாசலக் கவிராயர் வரை 251 பேர் | பொல்காப்பியம், நன்னூல், வீரசோழியம் |
| கோவை தமிழ்ச் சங்கம் | கி.பி1915 - | கோயமுத்தூர் | சிற்றம்பலப்பிள்ளை | ||
| கரந்தைத் தமிழ்ச் சங்கம் | கி.பி1915 - | தஞ்சைக் கரந்தாட்டங்குடி | இராதாக்கிருட்டினப் பிள்ளை |
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
[தொகு] மேற்கோள்கள்
- ↑ தமிழ்ச்சங்கங்களின் வரலாறு ,(2004), துடிசைக்கிளார் அ. சிதம்பரனார்.