ஆனந்த குமாரசுவாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆனந்த கெந்திஷ் குமாரசுவாமி
Ananda Kentish Coomaraswamy
1916 இல் ஆனந்த குமாரசுவாமி
பிறப்புஆகஸ்ட் 22, 1877
கொழும்பு, இலங்கை
இறப்புசெப்டம்பர் 9, 1947(1947-09-09) (அகவை 70)
பொஸ்டன், ஐக்கிய அமெரிக்கா
பணிஓவியர், ஆய்வாளர், நூலாசிரியர்
அறியப்படுவதுமெய்யியலாளர், வரலாற்றாளர்
சமயம்இந்து
பெற்றோர்சேர் முத்து குமாரசுவாமி, எலிசபெத் பீவி
வாழ்க்கைத்
துணை
எத்தெல் மேரி, ரத்னா தேவி, டோனா லூசா
பிள்ளைகள்நாரதா, ரோகினி, ராமா குமாரசுவாமி
வலைத்தளம்
http://www.coomaraswamy.com/

ஆனந்த கெந்திஷ் குமாரசுவாமி (ஆகஸ்ட் 22 1877 - செப்டம்பர் 9 1947), கீழைத்தேயக் கலைகளுக்கும், இந்து மதத்துக்கும் சிறந்த தூதுவராக விளங்கியவர். சிறந்த ஓவியர், சிற்பி, கட்டடக்கலைஞர், கலைத் திறனாய்வாளர் (விமரிசகர்), ஆராய்ச்சியாளர், நூலாசிரியர்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

சேர் முத்து குமாரசுவாமி, எலிசபெத் பீவி (Elizabeth Clay-Beevi) என்போரின் ஒரே மகன். கொழும்பிலே பிறந்தார். தாயார் இங்கிலாந்தின் கெண்ட் என்னும் ஊரைச் சேர்ந்தவர். தாயாருடன் 1879 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இங்கிலாந்து சென்றார். இரண்டு வயதாகுமுன் தந்தையை இழந்து தாயின் பராமரிப்பிலே இங்கிலாந்தில் வளர்ந்து லண்டன் பல்கலைக்கழகத்திலே BSc தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சியடைந்தார். பின்பு அதே பல்கலைக்கழகத்தில் 1905 இல் DSc (Geology) பட்டத்தையும் பெற்றார். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் போது அங்கு அவருடன் கல்வி பயின்ற 'எதெல் மேரி' (Ethel Mary) என்பாரைத் திருமணம் புரிந்து கொண்டார். ஆனந்த குமாரசுவாமி ஆங்கிலம், இடாய்ச்சு, பிரெஞ்சு, பாரசீகம், சிங்களம், சமக்கிருதம், பாளி, இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் சிறந்த புலமையுடையவராக விளங்கினார்.

எதெலுடன் இலங்கை திரும்பிய ஆனந்த குமாரசுவாமி 1903 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 1906 டிசம்பர் வரை இலங்கையின் கனிப்பொருள் ஆய்வுப் பகுதியின் தலைவராக விளங்கினார். எதெலுடனான மணவாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. சிறிது காலத்தின் பின்னர் எதெல் இங்கிலாந்து திரும்பினார். பின்னர் ஆனந்த குமாரசுவாமி அவர்கள் ரத்னா தேவி எனும் இலங்கைப் பெண்ணை மணம் புரிந்தார். இவருக்கு நாரதா, ரோஹினி என இரு பிள்ளைகள் பிறந்தனர். இவர்களில் நாரதா பின்னர் ஒரு விமான விபத்தில் உயிரிழந்தார். இந்தத் துக்கம் தாளாது ரத்னா தேவியும் சிறிது காலத்தில் காலமானார்.

இலங்கையில் சேவை[தொகு]

அந்தக் காலத்தில் விடுதலை (சுதேசிய) உணர்வால் உந்தப்பெற்று சமூக சீர்திருத்தச் சங்கத்தை (1905) நிறுவினார். அதன் சார்பில் Ceylon National Review என்னும் இதழைத் தொடங்கி அதன் ஆசிரியராகச் சேவையாற்றினார். 1906 ஆம் ஆண்டு சூன் நாலாம் நாள் முதன் முதலாக யாழ்ப்பாணம் சென்றார். அங்கு உரையாற்றும்போது "நமது கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றின் சிறப்பினை உலகில் வேறெங்கும் காணமுடியாது....எம்மவர் விஞ்ஞானக் கல்வியையும் கைத்தொழிற்கல்வியையும் நாடுகின்றனர். இவை அவசியமானவையே! ஆனால் இவை எல்லாம் பண்பாடு என்னும் அடிப்படையிலிருந்து வரவேண்டும்..." எனக் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தில் அவருக்கு வித்தியா விநோதன் என்னும் பட்டம் அளிக்கப்பட்டது.[1]

கலைச் சேவை[தொகு]

1907 ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்திலும் இந்தியாவிலும் கலை முயற்சிகளில் ஈடுபட்டார். 1911 ஆம் ஆண்டில் அலகாபாத்தில் நடைபெற்ற பொருட்காட்சியின் கலைப்பகுதிக்குப் பொறுப்பு வகித்தார்.

இந்திய விடுதலை இயக்க ஆதரவாளராக, அதன் தலைவர்களோடு தொடர்பு கொண்டிருந்தார். ரவீந்திரநாத் தாகூர், சகோதரி நிவேதிதை முதலியோரின் நண்பராக வாழ்ந்தார்.

இந்தியக்கலைகளின் இறைமையை உலகிற்கு எடுத்துக் காட்டியசிறந்த தூதுவராகக் கருதப்படுபவர். இறைவனின் ஐந்தொழிலைப் (பஞ்சகிருத்தியத்தைப்) பிரதிபலிக்கும் சிவநடனத்தை விளக்கி 1912-இல் 'சித்தாந்த தீபிகை'யில் எழுதிய ஆங்கிலக் கட்டுரை மூலம் இந்தியக் கலைகளின் சிறப்பினை உலகிற்கு அறிமுகப்படுத்திய முன்னோடியாகக் கொள்ளப்படுகிறார். ஏராளமான கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

சகோதரி நிவேதிதையுடன் இணைந்து பௌத்த புராணக்கதைகளையும் தொகுத்துத் தந்துள்ளார். 'பிரபுத்த பாரதா' என்ற இதழில் 1913, 1914, 1915 ஆம் ஆண்டுகளில் தாயுமானவர் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் சிலவற்றை எழுதினார்.[2]

பொஸ்டனில் சேவை[தொகு]

1917 முதல் ஐக்கிய அமெரிக்காவில் பொஸ்டன் (பாஸ்ட்டன்) நகரில் அமைந்திருந்த நுண்கலை அருங்காட்சியகத்தில் கீழைத்தேயப் பிரிவின் பணிப்பாளராகவும், பின்பு ஆய்வாளராகவும் பணிபுரிந்தார். இங்கு அவர் டோனா லூசா (Dona Lusa) என்னும் ஆர்ஜெண்டீனா பெண்மணியைச் சந்தித்து அவரைத் திருமணம் புரிந்து கொண்டார். இவர்களுக்கு ராமா என்னும் பெயர் கொண்ட ஆண்குழந்தை பிறந்தது. ராமா பின்னர் இந்தியாவின் ஹரித்வாரில் உள்ள குருகுல (Gurukul) பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்று அமெரிக்காவின் அல்பேர்ட் ஐன்ஸ்டீன் வைத்தியசாலையில் வைத்தியராகப் பயிற்சி பெற்று அமெரிக்காவில் வைத்தியராகத் தொழிலாற்றியவர்.[3]

ஆனந்த குமாரசுவாமி அவர்கள் தமது எழுபதாவது வயதில் செப்டம்பர் 9 1947 இல் அமெரிக்காவில் பொஸ்டன் (பாஸ்ட்டன்) நகரில் காலமானார்.

வெளிவந்த நூல்கள்[தொகு]

  • Medieval Sinhalese Art (1908)
  • Essays in National Idealism (1909)
  • Arts and Craft of India and Ceylon (1913)
  • Bronzes from Ceylon (1914)
  • Rajput Paintings (1916)
  • The History of Indian and Indonesian Art (1927)
  • The Dance of Siva (1917)
  • Hinduism and Buddhism (1943)
  • Buddha and the Gospel of Buddha
  • A new Approach to the Vedas (1932)
  • Spiritual Authority and Temporal Power

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஆனந்தக் குமாரசுவாமி - யாழ்ப்பாணம் ச. அம்பிகைபாகன்
  2. பூலோகசிங்கம், பொ., இந்துக் கலைக்களஞ்சியம் (முதற் தொகுதி, கொழும்பு, 1990)
  3. ஆனந்த குமாரசுவாமியின் புதல்வர் ராமா குமாரசுவாமி ஜூலை 19, 2006 இல் பொஸ்ரனில் காலமானார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்த_குமாரசுவாமி&oldid=3844427" இலிருந்து மீள்விக்கப்பட்டது